Author Topic: ~ ஆடாதொடை செடியின் மருத்துவ குணங்கள்:- ~  (Read 502 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227473
  • Total likes: 29061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
ஆடாதொடை செடியின் மருத்துவ குணங்கள்:-




நீண்ட முழுமையான ஈட்டிவடிவ இலைகளையும் வெள்ளை நிறப் பூக்களையும் உடைய குறுஞ்செடி. சிற்றூர்களில் வேலியில் வைத்து வளர்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் வளர்கிறது. இலை, பூ, வேர் ஆகியவை மருத்துவப் பயனுடையவை.

சளி நீக்கி இருமல் தணிப்பானாகவும், வயிற்றுப் பூச்சிக் கொல்லியாகவும், இசிவு நோய் நீக்கியாகவும் செயற்படும்.

1. இலைச் சாறும் தேனும் சமஅளவு கலந்து சர்க்கரை சேர்த்து தினம் 4 வேளை கொடுக்க நுரையீரல் இரத்த வாந்தி, கோழை மிகுந்து மூச்சுத் திணறல், இருமல், இரத்தம் கலந்த கோழை வருதல் ஆகியவை குணமாகும்.

குழந்தைகளுக்கு 5 + 5 துளி
சிறுவர் 10 + 10 துளி
பெரியவர் 15 + 15 துளி

2. இலைச் சாறு 2 தேக்கரண்டி எருமைப்பாலில் காலை, மாலை கொடுத்து வரச் சீதபேதி, இரத்தப்பேதி குணமாகும்.

3. 10 இலைகளை அரை லிட்டர் நீரில் போட்டுக் கால் லிட்டராகக் காய்ச்சித் தேன் கலந்து காலை, மாலை 40 நாள்கள் பருகி வர என்புருக்கிக் காசம், இரத்தக் காசம், சளிச்சுரம், சீதளவலி, விலாவலி ஆகியவைத் தீரும்.

4. ஆடாதொடை வேருடன் கண்டங்கத்திரி வேர் சமனளவு சேர்த்து இடித்துச் சலித்து அரை முதல் 1 கிராம் வரை தேனில் சாப்பிட்டு வர நரம்பு இழுப்பு, சுவாச காசம், சன்னி, ஈளை, இருமல், சளிச்சுரம், என்புருக்கி, குடைச்சல் வலி ஆகியவை குணப்படும்.

5. ஆடாதொடை இலையையும், சங்கன் இலையையும் வகைக்கு ஒரு பிடி அரை லிட்டர் நீரில் போட்டுப் பாதியாகக் காய்ச்சிக் காலை, மாலை பருகி வரக் குட்டம், கரப்பான், கிரந்தி, மேகப்படை, ஊறல், விக்கல், வாந்தி, வயிற்றவலி தீரும்.

6. உலர்ந்த ஆடாதொடை இலைத் தூளை ஊமத்தை இலையில் சுருட்டிப் புகைப்பிடிக்க மூச்சுத் திணறல் உடனே தீரும்.

7. 700 கிராம் தூய இலைகளை நறுக்கி நெய்யில் வதக்கியதில் அக்கரகாரம், சித்தரத்தை வகைக்கு 10 கிராம், ஏலம் 4 ஆகியவற்றைத் தூள் செய்து போட்டுப் பொன் வறுவலாய் வறுத்து 2 லிட்டர் நீர்விட்டு 1 லிட்டராகக் காய்ச்சி வடிகட்டியதில் 1 கிலோ சர்க்கரை சேர்த்துத் தேன் பதமாகக் காய்ச்சி(ஆடாதொடை மணப்பாகு) வெந்நீரில் ஒரு தேக்கரண்டி கலந்து சாப்பிட்டு வர நீர்க்கோவை தீரும். ஒரு நாளைக்கு 3 வேளையாக நீண்ட நாள்கள் கொடுத்து வரக் காசம், என்புருக்கி, மார்புச்சளி, கப இருமல், புளூரசி, நீடித்த ஆஸ்துமா, நிமோனியா ஆகியவை குணமாகும். குரல் இனிமை உண்டாகும்.

8. ஆடாதொடை, கோரைக்கிழங்கு, பற்பாடகம், விஷ்ணுகாந்தி, துளசி, பேய்ப்புடல், கஞ்சாங்கோரை, சீந்தில் வகைக்கு ஒரு பிடி 1 லிட்டர் நீரில் போட்டு அரை விட்டராகக் காய்ச்சி வேளைக்கு 50 மி.லி. அளவாகப் பருகி வர (அஷ்ட மூலக் கஷாயம்) எவ்விதச் சுரமும் நீங்கும்.

9. வேர்க்கஷாயத்தைக் கடைசி மாதத்தில் காலை, மாலை கொடுத்து வரச் சுகப்பிரசவம் ஆகும்.