Author Topic: ~ நம் பிரச்சனைகளுக்கு யார் காரணம்? ~  (Read 640 times)

Offline MysteRy



விலைவாசி உயர்வு, நமது அதிகரிக்கும் தேவைகளால் ஆகும் செலவுகளைப் பார்த்து நம்முடைய தேவைகளை உற்று நோக்கும் போது நம் சிரமத்திற்குக் காரணம் நாம் தான் என்பது உறுதியாகிறது. இதை நான் ஏன் கூறுகிறேன் என்றால் நன்றாக சம்பாதிப்பவரும் இதையே கூறுகிறார் குறைவாக சம்பாதிப்பவரும் இதையே கூறுகிறார். அடிப்படைப் பிரச்சனை என்னவென்று பார்த்தால், புத்தர் கூறிய “ஆசை” தான்! ஆசைப் படுவதில் தவறில்லை ஆனால், ஆசை பேராசையாகி முற்றும் இல்லாமல் தொடர்ந்தால் அதற்குண்டான “விலையையும்” கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும். Image Credit - izquotes.com

கடந்த சில வருடங்களாக பல விசயங்களை நண்பர்களிடையே, என் குடும்பத்திடையே, மற்றவர்களின் அனுபவங்களைக் கவனித்ததில், தினமும் செய்திகளைப் படிப்பதில் நான் உணர்ந்து கொண்டது, பிரச்சனை வேறு எங்கும் இல்லை நம்மிடையே தான் என்பது.

ஆசை என்று எதற்குக் கூறுகிறேன் என்றால், மனிதன் மனம் எப்போதுமே எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் திருப்தியடையாது. தேவைகளை அதிகரித்துக்கொண்டு அதற்காக சம்பாதிக்க வேண்டும் என்ற போராட்டத்தில், நமது நிகழ்கால வாழ்க்கையை வீணடித்து விடுகிறோம். நமது தேவையை அதிகரிக்க அதிகரிக்க அதற்காக நாம் போராடுவதும் அதிகரிக்கிறது. இது இயல்பாகவே நமது நிம்மதியை குறைக்கிறது. எப்போதும் ஒரு பற்றாக்குறை / கடன் நிலையிலேயே நம்மை வைத்து இருந்து “எப்போது இதெல்லாம் சரியாகும்!” என்று ஏங்க வைத்து விடுகிறது. இதற்குக் காரணமே நாம் தான் என்பதை உணராமலே நாம் வாழ்க்கை முழுவதும் புலம்புகிறோம்.

நம்மவர்கள் முடிவே இல்லாமல் தங்களது தேவைக்கு மேல் “பாதுகாப்பு” என்ற பெயரில் சொத்துக்களை (நிலம் / வீடு) வாங்கிக் குவித்துக்கொண்டே செல்வதால், அவசியமாகத் தேவைப்படுகிறவர்களுக்கு அது கிடைக்காமல் சென்று ஒரு பற்றாக்குறையை போலியாக ஏற்படுத்தி விடுகிறது. விளை நிலங்கள் குறைய இது போன்ற மக்களின் பேராசையே காரணம். எத்தனை இடங்கள் வாங்கினாலும் மனம் முழுமையடையாது. இதெல்லாம் என்றுமே சரியாகாத நடைமுறைப் பிரச்சனை.

முதலில் அடிப்படைப் பிரச்சனைகளை சரி செய்ய முயற்சி, சரி செய்த பின் வீடு வாங்குவது. இது வரையான நிகழ்வுகள் நியாயமானதாகத் தோன்றுகிறது. இந்தத் தேவைகளை முடித்த பிறகு, இடம் வாங்குவது, இன்னொரு வீடு வாங்குவது, கார், அடுத்து இன்னொரு வீடு, இடம் என்று தொடர்கிறது. இத்தனையையும் யாரும் நமக்கு இலவசமாக கொடுத்து விடப்போவதில்லை. இதற்காக நாம் தான் சம்பாதிக்க வேண்டும்.  கூடுதல் பணம் சம்பாதிக்க வேண்டும் என்றால், பல இழப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டியது இருக்கிறது.

சுருக்கமாக, எதிர்கால பாதுகாப்பு / சொகுசு என்பதை மனதில் வைத்து மனம் மேலும் மேலும் தேவைகளை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இது லாஜிக்காக நமக்கான நெருக்கடிகளையும் அதிகரிக்கிறது. நல்லா சம்பாதிப்பவரும் இதே போல புலம்புகிறார், நடுத்தரத்தில் உள்ளவர்களும் இதே புலம்புகிறார்கள்.  இழுத்துப் பிடித்து செய்யப்படும் செலவுகள் என்றுமே நிம்மதியைத் தராது.

என்னுடைய ஒரு சில முடிவுகளில் என்னுடைய அனுபவமின்மையால் தவறுகள் நேர்ந்து இருக்கிறது ஆனால், தெரிந்தே சென்று மாட்டியதில்லை. சமீபமாக விலைவாசி உயர்ந்து வருகிறது. இருந்தும் மக்களின் வாங்கும் திறன் கொஞ்சம் கூட குறையவில்லை மாறாக அதிகரித்துக்கொண்டே செல்கிறது. விலை உயர்ந்ததால், அடிப்படைச் செலவுகளை தவிர்க்க முடியாது ஆனால், ஆடம்பரச் செலவுகளை தவிர்க்க முடியும் ஆனால், அப்படி நடப்பது போல எனக்குத் தோன்றவில்லை.

மக்கள் செய்யும் செலவுகளைப் பார்த்தால், எப்படி இவ்வளவு பணம் அனைவரிடமும் புழங்குகிறது? எப்படி செலவுகளைச் சமாளிக்கிறார்கள்? என்று எனக்குப் புரியாத புதிராக இருக்கிறது. நாளுக்கு நாள் விலைவாசி கண்டபடி உயர்ந்து செல்கிறது ஆனாலும், மக்கள் செய்யும் செலவுகள் குறைவது போலத் தெரியவில்லை. என்னால் இவற்றை எல்லாம் நினைத்தே பார்க்க முடியவில்லை. குழந்தைகளுக்கும் இதைப் பெற்றோர் உணர்த்துவது போலத் தெரியவில்லை.

உதாரணத்திற்கு நான் முன்பு கோபி / கோவையில் ஹோட்டல் சென்றால் உணவுடன், பழச்சாறு, ஐஸ்கிரீம், காஃபி, வடை போன்றவற்றை சாப்பிடுவதுண்டு. அனைத்தையும் ஒரே சமயத்தில் அல்ல அந்தந்த நேரத்தைப் பொறுத்து ஆனால், என்னால் தற்போது உணவைத் தவிர வேறு எதையும் வாங்கவே பீதியாக இருக்கிறது. இவற்றை எல்லாம் வாங்குவதையே நிறுத்தி விட்டேன். விலை அதிகம் என்பதை விட அந்தப் பொருளுக்கான மதிப்பை விட மிக மிக அதிகமான விலையாக இருக்கிறது. சாப்பாடு 80 ருபாய் என்றால் பழச்சாறு 50 ருபாய் என்று இருக்கிறது. ஐஸ்க்ரீம் 50 ருபாய் என்று அலற வைக்கிறார்கள். என்னால் அடிப்படைச் செலவான சாப்பாட்டிற்கு 80 ருபாய் கொடுக்க முடியும் ஆனால், கொஞ்சமும் நியாயமே இல்லாத விலையில் இருக்கும் இவற்றிக்கு எப்படித் தருவது? இது ஒரு சிறு உதாரணம் மட்டுமே!

கூடுதல் வீடு, கார், நிலம் என்று மேலும் நமது தேவைகளை / சொத்துகளை அதிகரிக்க முயற்சிக்கும் போது வாழ்க்கை முழுவதும் அதற்கான போராட்டத்திலேயே முடிந்து விடுகிறது. வாழ்ந்த வாழ்க்கை என்னவென்று பார்த்தால், வாழ்க்கை முழுவதும் கடனைக் கட்டப் போராடிக்கொண்டு இருந்தோம் என்பதைத் தவிர இறுதியில் ஒன்றுமே இருக்காது. கொஞ்ச நாள் முன்னாடி “கோபிநாத்” பேசிய விசயம் தான் நான் கூற வரும் கருத்தின் மொத்த உருவம். இவர் கூறுவது முக்கியமாகப் படிப்பை மனதில் வைத்து என்றாலும், நம் அனைவரது வாழ்க்கைக்கும் பொருந்தும். இதில் கோபி கூறிய சில விசயங்கள் என் வாழ்க்கையிலும் நடந்துள்ளது.



சிறந்த உதாரணம் யார் என்றால் கடனை அடைக்க வேண்டும் என்று வெளிநாடு சென்றவர்கள்  தான். கடனை அடைத்து இருப்பார்கள் ஆனால், குடும்பத்தினர்  நண்பர்கள் சும்மா இருக்க மாட்டார்கள். அதை வாங்கு இதை வாங்கு இடத்தை வாங்கு என்று உசுப்பேத்தி விடுவார்கள். இங்குள்ளவர்களும் அதை வாங்கிய பிறகு அதற்கான கடனை அடைக்க மேலும் முக்கிக்கொண்டு இருக்க வேண்டும். வெளிநாடுகளில் உள்ளவர்கள் பலர் ஊருக்கு வர நினைத்தும் வர முடியாமல் தாமதமாகிக்கொண்டே இருப்பதற்கு காரணங்களே இவை (ஆசை) தான். எதிர்காலப் பாதுகாப்பு என்ற புலி வாலைப் பிடித்தக் கதையாக, எவ்வளவு சம்பாதித்தாலும் அதற்குச் செலவு ஊரில் தயாராக இருக்கும்.  எத்தனை வருடம் இருந்தாலும் தேவைகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். முடிவில்லாத்  தேவை. நாமாக நிறுத்தினால் ஒழிய இந்தப் பிரச்னைக்குத் தீர்வில்லை.

மக்கள் கேள்வியே இல்லாமல் அனைத்தையும் ஏற்றுக்கொள்ளப் பழகி விட்டார்கள். நிறுவனங்களும் “இவங்க எவ்வளோ அடித்தாலும் தாங்கும் நல்லவர்கள்” என்று கட்டுப்பாடே இல்லாமல் விலைகளை உயர்த்திக்கொண்டு இருக்கிறார்கள். விலை அதிகம் என்றால், புறக்கணிக்க பெரும்பாலனவர்கள் நினைப்பதில்லை. எனவே, தயாரிப்பாளர்களும் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் அவர்கள் கொடுக்கும் விலைக்கு எந்தத் தகுதியுமில்லாத பொருட்களை விற்பனை செய்து வருகிறார்கள். விலை உயர்கிறது என்று மக்கள் அதைப் புறக்கணித்தால், தானாக விலை குறையும் ஆனால், நடப்பது என்னவென்று உங்களுக்குத் தெரியும். இது சரியாகக் கூடிய பிரச்சனை இல்லை. ஏனென்றால் இதெல்லாம் ஓரிருவர் சம்பந்தப்பட்ட பிரச்சனையில்லை.

அந்நிய முதலீடு என்று ஏகப்பட்டதை இறக்கி விட்டார்கள். மக்களும் அவர்கள் கொடுக்கும் கவர்ச்சி விளம்பரத்தில் மயங்கி தங்களால் முடியவில்லை என்றாலும் EMI அப்படி இப்படி என்று அந்தப் பொருளால் பயனுள்ளதோ இல்லையோ வாங்கிக் குவித்துக்கொண்டு இருக்கிறார்கள். எந்த மாலுக்குச் சென்றாலும், மக்கள் கூட்டம் கூட்டமாக பணத்தை தண்ணீராக (இதுவே தற்போது விலையுயர்ந்ததாகி விட்டது, இனி இந்த உதாரணம் பயன்படாது) செலவழித்துக் கொண்டு இருக்கிறார்கள். பார்க்கவே திகிலாக இருக்கிறது!

லட்சங்களில் சம்பாதிப்பவரும் கடனில் இருக்கிறார், ஆயிரங்களில் சம்பாதிப்பவரும் கடனில் இருக்கிறார். நான் சம்பளக்காரர்களை மனதில் வைத்தே இதை எழுதி இருக்கிறேன், வியாபாரிகளை அல்ல. நம்முடைய அடிப்படைத் தேவைகள் நிறைவாகி, ஆசைகள் ஒரு கட்டத்தில் குறையவில்லை என்றால், “பாதுகாப்பு” என்ற ஒரு காரணத்தைக் காட்டி வாழ்க்கை முழுவதும் கடனைக் கட்டி நெருக்கடியிலேயே இருக்க வேண்டியது தான் என்பது நான் உணர்ந்து கொண்டது. எனக்கு இந்த எண்ணம் ஒருவருடத்திற்கு முன்பு வந்தது. கொஞ்சம் முன்னாடியே வந்து இருந்தால், நன்றாக இருந்து இருக்கும். இப்பவும் ரொம்பத் தாமதமில்லை.

இதில் என்ன முக்கியச் சிக்கல் என்றால், இந்த எண்ணத்திற்கு குடும்பத்தில் உள்ளவர்கள் ஒத்துழைக்க வேண்டும். குடும்பத்தினரின் ஆதரவு இல்லாமல் ஒன்றுமே செய்ய முடியாது. எனக்குப் பல்வேறு பிரச்சனைகள் இருந்தாலும், குடும்பத்தினரின் ஆதரவும் அவர்களின் புரிந்துணர்வும் இருப்பதால், வேறு எதுவுமே எனக்குப் பிரச்சனையாகத் தோன்றுவதில்லை / தோன்றியதில்லை. உண்மையான பணக்காரர் யார் என்றால், கடனில்லாத வாழ்க்கை வாழ்பவரும் அன்பான குடும்பத்தினரை பெற்றவருமே! மற்ற எந்த வசதியும் சொகுசும் இதற்கு ஈடாகாது.