Author Topic: ~ தால்சா! ~  (Read 412 times)

Offline MysteRy

~ தால்சா! ~
« on: April 24, 2014, 11:53:06 AM »
தால்சா!



தேவையானவை:
ஆட்டுக்கறி - கால் கிலோ, துவரம்பருப்பு - கால் கிலோ,  மிளகாய்த்தூள் - 4 டீஸ்பூன்,  மல்லி தூள் - 2 டீஸ்பூன்,  கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்,  மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன், புளி - எலுமிச்சம் பழ அளவு, பூண்டு - பாதி அளவு, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், தேங்காய் - அரை மூடி, வாழைக்காய், கெட்டியான மாங்காய், கத்திரிக்காய், தக்காளி - தலா ஒன்று, பெரிய முருங்கைக்காய் - 2, சின்ன வெங்காயம் - 4, பட்டை - 2 கிராம்பு - 3, பச்சை மிளகாய் - 4, கறிவேப்பிலை, கொத்தமல்லிமல்லி - சிறிதளவு,  நெய் - 50 கிராம், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
ஆட்டுக்கறியைக் கழுவி குக்கர் அல்லது பாத்திரத்தில் போட்டு, 2 கப் தண்ணீர் ஊற்றி, சிறிது  மஞ்சள்தூள் சேர்த்து வேகவைக்கவும். துவரம்பருப்பைக் கழுவி, 2 கப் தண்ணீர், சிறிது  மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக வேகவிட்டு எடுத்து வைக்கவும். காய்கறிகளைக் கழுவி, துண்டு துண்டாக நறுக்கவும் (வாழைக்காயையும், மாங்காயையும் தோல் சீவி, துண்டுகள் செய்யவும்). அதை 2 கப் தண்ணீர், சிறிது  மஞ்சள்தூள், தேவையான உப்பு போட்டு வேகவிடவும். இஞ்சி, பூண்டு இரண்டையும் தோல் உரித்து, மிளகு, சீரகம் சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும். தேங்காயைத் துருவி, தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். புளியைத் தண்ணீரில் ஊற வைத்து கரைத்து வடிகட்டி எடுக்கவும். கொத்தமல்லி, கறிவேப்பிலையை கிள்ளி வைக்கவும். பச்சை மிளகாயைக் கீறி வைக்கவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கவும்.
ஒரு பெரிய பாத்திரத்தை அடுப்பில் வைத்து  நெய் ஊற்றி... காய்ந்ததும் பட்டை, கிராம்பு போட்டு வெடித்ததும் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து... கறிவேப்பிலை கொத்தமல்லி, தக்காளி துண்டுகள் ஆகியவற்றைப் போட்டு வதக்கவும். வெந்த துவரம்பருப்பு, ஆட்டுக் கறி, காய்கறியை ஒவ்வொன்றாக எடுத்து இதில் சேர்த்து, தேவையான உப்பு போட்டு கலக்கிவிடவும். அத்துடன்,  மிளகாய்த்தூள்,  மல்லி தூள்,  கரம் மசாலாத்தூள்,மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும். பாத்திரத்தை தட்டு போட்டு மூடி வைக்கவும். நன்றாக கலந்து கொதித்ததும், புளிக்கரைசலை ஊற்றவும். மீண்டும் கொதி வந்ததும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து, தேங்காய் விழுதை அரை கப் தண்ணீரில் கரைத்து ஊற்றி கலக்கிவிட்டு, எல்லாம் சேர்த்து கொதித்ததும் அடிபிடிக்காமல் கிளறி, இறக்கவும்.