Author Topic: ~ கடவுளின் பார்வையில்...குட்டிக்கதை ~  (Read 1297 times)

Offline MysteRy

கடவுளின் பார்வையில்...குட்டிக்கதை




பகவான் கிருஷ்ணரும் அர்ஜுனனும் ஒரு கடற்கரை நகரத்தின் வழியே சென்று கொண்டிருந்தார்கள்.

ஒரு பெரிய மாளிகை முன்பு அதன் சொந்தக்காரனான மீனவக் கிழவன் தன் முன்னால் பெரும் பணக்குவியலுடன் அமர்ந்திருந்தான்.

அர்ஜுனன் அதைக் கண்டு அதிர்ச்சியடைந்தான்.

“கிருஷ்ணா! இதென்ன நாள்தோறும் ஆயிரக்கணக்கான மீன்களைக் கொன்று குவிக்கும் இந்த மீனவனுக்கு இத்தனை வசதியான வாழ்வா?” என்று அர்ஜுனன் கிருஷ்ணரைக் கேட்டான்.

கிருஷ்ணர் பதில் கூறவில்லை.

சில ஆண்டுகள் கடந்தன.

இருவரும் ஒரு காட்டு வழியே நடந்து சென்று கொண்டிருந்த போது யானை ஒன்று மரண வேதனையில் இருந்தது.

நோயால் படுத்துக் கிடந்த அந்த யானையைப் பல்லாயிரம் எறும்புகள் கடித்துக் கொண்டிருந்தன.

“பகவானே! இதென்ன கொடுமை? நோயுற்றிருக்கும் ஒரு யானையை இத்தனை ஆயிரம் எறும்புகள் கடித்துத் துன்புறுத்திக் கொண்டிருக்கின்றனதே...?” என்றான் அர்ஜூனன்.

உடனே கிருஷ்ணர், “அர்ஜூனா, சில ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு செல்வந்தனான மீனவக் கிழவனைப் பற்றி என்னிடம் கேட்டது ஞாபகமிருக்கிறதா? அன்று பல ஆயிரம் மீன்களைக் கொன்று செல்வந்தனாக இருந்த அவன் இறந்து, இன்று யானையாக மீண்டும் பிறந்திருக்கிறான். அன்று அவன் கொன்ற மீன்கள் அனைத்தும் இன்று எறும்புகளாகப் பிறந்து கடித்துக் கொண்டிருக்கின்றன.”

“கடவுளின் பார்வையில் இருந்து எதுவும் தப்பி விட முடியாது. கால தாமதமானாலும், அவரவர் செய்த தவறுக்குத் தகுந்த தண்டனையைப் பெற்றே ஆக வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டேன்.” என்றான் அர்ஜூனன்.

“இது போல் நல்லது செய்தால் அடுத்த பிறவியிலும் நற்பலன்களும் கிடைக்கும்” என்றார் கிருஷ்ணர்.