நீ ஒருவனா
நன்றாக கூர்ந்து பார்
நீ ஒருவனல்ல இருவர்
ஒருவருக்கொருவர் முரணான
இருவர்
ஒளியும் இருளுமான
இருவர்
கோபமும் சாந்தமுமான
இருவர்
உண்மையும் பொய்யுமான
இருவர்
இரவு இல்லையென்றால்
ஒரு நாள்
எப்படி பரிபூரணமாகும்
ஒளியும் இருளும் சேர்ந்தது தானே
ஒரு முழு நாள்
நீயும் அப்படித்தான்
ஒளிக்கும் இருளுக்கும்
ஓயாத போர்
உனக்குள்ளும் நடக்கிறது
அந்தப் போராட்டம்
போராட்டமே
பரிணாமத்தின் பாதை
போராட்டமே
சக்தியின் ஊற்று
போராட்டத்துக்குத் தேவை
இரு முரண்கள்
படைப்புக்குத் தேவை
இரு முரண்கள்
ஆண்மை பெண்மை என
இரண்டு முரண்கள்
எதிலும் உண்டு
அர்த்தநாரிஸ்வரம்
எதிலும் உண்டு
ஆண் பெண் போர்
கூர்ந்து பார்
காதல் என்பதும்
முரண்களின் மோதலே
நேர்முக எதிர்முக
சக்திகளின் மோதலில்
மின்னொளி பிறப்பது போலவே
முரண்களின் மோதலில்
பிறக்கிறது புதிய படைப்புகள்
முரண்களே
உன் பெற்றோர்கள்
அந்த முரண்களின் மோதலில்
நீ வெளிவந்தாய்
வீணையை மீட்டும்
விரல்களைப் போல
போராட்டமே
உன்னை மீட்டுகிறது
போராட்டத்தால் தான்
நீ துருப்பிடிக்காமல் இருக்கிறாய்
போராட்டமே
உன்னை கூர் தீட்டும்
சாணைகல்லாக இருக்கிறது
ஒவ்வொரு போராட்டத்தின் போதும்
நீ புதிதாக பிறக்கிறாய்