தெரிந்து கொள்
உன்னை பிரசவிப்பது
உன் பெற்றோர்கள் அல்ல
உன்னை நீயே தான்
பிரசவித்துக்கொள்ள வேண்டும்
வாழ்க்கை என்பதே
மனிதன் தன்னைத் தானே
பிரசவிக்க முயலும் முயற்சிதான்
ஆனால் இதில்
பெரும்பாலும்
கருச்சிதைவே நடக்கிறது
சிலர் செத்தே பிறக்கிறார்கள்
சிலர் பிறக்காமலேயே
செத்துவிடுகின்றனர்
இந்த உலகத்திற்கு நீ
வெறும் வெள்ளைதாளாகவே
வருகிறாய்
அதில் நீ தான்
உன்னை எழுதிக்கொள்ள வேண்டும்
சிலர் இந்த தாளில்
கிறுக்குகிறார்கள்
சிலரோ படித்தபின்
குப்பைக்கூடையில் எறியப்படும்
காகிதம் ஆகிறார்கள்
சிலரோ வெறும் வெற்றுத்தாளாகவே
இருந்து விடுகின்றனர்
சிலர் மட்டுமே
காலத்தால் அழியாத
கவிதை ஆகிறார்கள்
எச்சரிக்கை
உன்னை நீயே எழுதிக்கொள்
இல்லையென்றால்
நீ பிறரால் எழுதப்படுவாய்