Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
தமிழ் மொழி மாற்ற பெட்டி
https://translate.google.com/#view=home&op=translate&sl=en&tl=ta
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ உயிரைப் பறிக்கும் “ரேபீஸ்” பயங்கரம்! வேண்டாம் அலட்சியம்! ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ உயிரைப் பறிக்கும் “ரேபீஸ்” பயங்கரம்! வேண்டாம் அலட்சியம்! ~ (Read 523 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 227452
Total likes: 29057
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ உயிரைப் பறிக்கும் “ரேபீஸ்” பயங்கரம்! வேண்டாம் அலட்சியம்! ~
«
on:
March 17, 2014, 01:32:15 PM »
உயிரைப் பறிக்கும் “ரேபீஸ்” பயங்கரம்! வேண்டாம் அலட்சியம்!
சமீபத்தில் தினசரி நாளிதழில் வந்த இந்தச் செய்தி, படித்தவர்கள் நெஞ்சைப் பதற வைத்தது. சென்னை கல்லூரி ஒன்றில் முதுகலை பட்டப் படிப்பு படிக்கும் மாணவர் ஆலன் ஜோயஷ் சாமுவேல். இவர், சக தோழியுடன் கல்லூரி வளாகத்தில் பேசிக்கொண்டிருந்தார். அருகில் விளையாடிக்கொண்டிருந்த இரண்டு குட்டி நாய்களில் ஒன்று, இருவரையும் கடித்துள்ளது. அதில், சாமுவேலுக்குக் கையில் லேசான காயம். இருவரும் கல்லூரி வளாகத்திலேயே இருந்த மருத்துவமனையில் காயத்துக்கு சிகிச்சை பெற்றுள்ளனர்.
அதன் பிறகு சாமுவேலின் தோழி மருத்துவமனையில் நாய்க்கடிக்கு முறையான சிகிச்சையைத் தொடர... 'சின்னக் காயம்தானே... அதுவும் குட்டி நாய்தானே கடித்தது’ என்று சாமுவேல் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார். விளைவு..?
சாமுவேலுக்கு ரேபீஸ் என்ற நோய் முற்றிவிட, சென்னை, வேலூர் என்று தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தும், அவரைக் காப்பாற்ற முடியவில்லை.
'' 'சின்னக் காயம்தானே!’ என்று நாங்களும் அலட்சியமாக இருந்துவிட்டோம். நாய் கடித்ததாக அவன் சொன்னப்பவே, நாங்க முறையான சிகிச்சை எடுத்திருந்தால், என் மகனைக் காப்பாற்றியிருக்கலாமே!'' என்று கதறுகின்றனர் சாமுவேலின் பெற்றோர்.
சிறிய அலட்சியம்கூட ஓர் உயிரையே பறித்துவிடக்கூடும் என்பதற்கு இந்தச் சம்பவமேஉதாரணம். ரேபீஸ் பற்றி மக்கள் மத்தியில் விழிப்பு உணர்வு போதுமான அளவுக்கு இல்லை. ரேபீஸ் எப்படிப் பரவுகிறது, அதற்கான சிகிச்சை முறைகள் என்ன, அதில் இருந்து தற்காத்துக்கொள்வது எப்படி என்பது பற்றி திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியின் மூளை மற்றும் நரம்பியல் துறைத் தலைவர் டாக்டர் அலீமிடம் பேசினோம்.
''எந்தப் பிராணி கடித்தாலும் ஆபத்துதான். முக்கியமாக நாய்க்கடி ரொம்பவே ஆபத்து. நூற்றுக்கும் மேற்பட்ட நோய்கள் தாக்கும் அபாயம் உண்டு. அதில் முக்கியமானது வெறிநோய் எனப்படும் ரேபீஸ். இதை ஆரம்பத்திலேயே தடுத்துவிட வேண்டும். டெவலப் ஆகிவிட்டால், உலக அளவில் இதற்கு சிகிச்சை இல்லை.''
''ரேபீஸ் எப்படி மரணத்தை விளைவிக்கிறது?''
''ரேபீஸ் நோயால் தாக்கப்பட்ட வெறிநாய், மனிதனைக் கடிக்கும்போதோ... காயம் உள்ள இடத்தில் அதன் உமிழ்நீர் படும்போதோ, ரேபீஸ் மனிதனையும் தாக்குகிறது. வெறிநாய் கடித்த ஒரு வாரம் முதல் பத்து நாட்கள் வரைகூட எந்த அறிகுறியும் தெரியாமல் இருக்க வாய்ப்பு உள்ளது. 90 நாட்களுக்குள் எப்போது வேண்டுமானாலும் அறிகுறிகள் தெரியத் தொடங்கும்.
கடிபட்ட பகுதியில் ரேபீஸ் வைரஸ் படிந்தவுடன், தசை இழைகளில் பன்மடங்கு எண்ணிக்கையில் பெருகுகிறது. சில நாட்கள் அல்லது வாரங்களுக்குள் வைரஸ் கடிபட்ட இடத்தில் இருந்து நரம்பு வழியாக மூளையை நோக்கி நகர்கிறது. நாய் எந்த இடத்தில் கடித்தது, எந்த அளவுக்குக் காயத்தின் தன்மை இருக்கிறது என்பதைப் பொறுத்து, ரேபீஸ் வைரஸ் மூளையை அடையும் காலகட்டத்தில் வித்தியாசம் இருக்கும். காலில் கடித்தால், பாதிப்புகள் தெரிய நாட்கள் அதிகம் ஆகலாம். அதுவே கையிலோ முகத்திலோ கடித்தால், பாதிப்பு வெகு விரைவிலேயே தெரிய ஆரம்பிக்கும்.
ரேபீஸ் வைரஸ் மூளைக்குள் பரவியதும், நரம்பு மண்டலத்தைத் தாக்குகிறது. அதனால் உடலில் உள்ள பல தசைகளும் முறுக்கேறி இறுகுகின்றன. குரல் எழுப்பும் தசைகள் இறுகுவதால், நோயால் பாதிக்கப்பட்டவர்களின் குரல் நாய் குரைப்பதைப் போலவே இருக்கும். விழுங்கு தசைகள் இறுகுவதால், தண்ணீர் குடிக்க முடியாமல் போகும். உமிழ்நீர்கூட விழுங்க முடியாமல் சிரமத்தை ஏற்படுத்தும். தண்ணீரைக் கண்டால் பயம் ஏற்படும். இதனை, 'ஹைட்ரோஃபோபியா’ என்பார்கள். தண்டுவடச் செயலிழப்பு, மூச்சு செயலிழப்பு போன்ற பாதிப்பை ஏற்படுத்தி, முடிவில் மரணத்தில் கொண்டுபோய் விடும்.''
''சிகிச்சை முறை என்ன?''
''முதலில் நாய் கடித்ததும் அந்த இடத்தை கிருமி நாசினிகளைக்கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். ஒட்டும் தன்மை இல்லாத கட்டுப்போடும் துணியைக் கொண்டு காயத்தை மூட வேண்டும். கண்டிப்பாக தையல் போடக் கூடாது. பிறகு மருத்துவமனைக்கு அழைத்துவந்து மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சிகிச்சை பெற வேண்டும். நாய் கடித்த அன்றே சிகிச்சையைத் தொடங்கிவிட வேண்டும்.
தொப்புளைச் சுற்றி 14 ஊசி போடுவார்கள் என்று பயந்தே பலரும் சிகிச்சைக்கு வருவது இல்லை. அதெல்லாம் அந்தக் காலம். இப்போது நவீன சிகிச்சை முறைகள் வந்துவிட்டது. சாதாரணமாக புஜத்தில் ஊசி போட்டாலே போதும். 'ஹுயூமன் ரேபீஸ் இம்யூன் குளோபலின்’ (Human Rabies Immune Globulin) என்ற ஊசி மருந்தை ஒரு டோஸும், ரேபீஸ் வேக்ஸின் என்ற தடுப்பூசி மருந்தை நான்கு டோஸ்களும் போட வேண்டும். நாய் கடித்த முதல் நாள், ஏழாம் நாள், 14-ம் நாள், 28-ம் நாள் என்று நான்கு முறை தொடர்ச்சியாக ஊசி போட்டாலே போதும். காயத்தின் தன்மையைப் பொறுத்து சிலருக்கு மட்டும் 3-ம் நாளோ அல்லது 28-ம் நாளுக்குப் பிறகோ ஊசி போட வேண்டியிருக்கும். சிகிச்சைக்கு அதிக செலவாகும் என்று பயப்படத் தேவை இல்லை. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இதற்கென இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. கிராமப்புற மக்களிடையே வெறி நாய்க்கடி குறித்து நல்ல விழிப்பு உணர்வு உள்ளது. நகரப்புற மக்கள்தான் இந்த விஷயத்தில் சற்று அலட்சியமாக இருக்கிறார்கள்.
வெறிநாயை அடையாளம் காண முடியுமா?
கடித்தது வெறிநாயா... சாதாரண நாயா என்பதை அதன் அன்றாடச் செயல்பாடுகளை வைத்து தெரிந்துகொள்ளலாம்.
வெறிநாய் என்றால் அதிக கோபத்தன்மையுடன் இருக்கும். ஓர் இடத்தில் நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கும். ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 50 கிலோ மீட்டர் வரை ஓடும். நாக்கு அளவுக்கு அதிகமாக வெளியே தள்ளியிருக்கும். மூச்சு வேகமாக வரும். எச்சில் ஒழுகும். கல், மண், சகதி எல்லாம் சாப்பிடும். அதன் குரலில் ஒரு மாற்றம் இருக்கும். குரைப்பது ஊளையிடுவதுபோல இருக்கும். அருகில் போனாலே மிரண்டு கடிக்க வரும். இதர நாய்கள் அந்த வெறிநாயைக் கடிக்காது. அந்த நாய்தான் எதிரில் தென்படும் மனிதன் மற்றும் விலங்குகளைப் பாரபட்சம் பார்க்காமல் கடிக்கும். இதே நிலைதான் வெறி நாய் கடித்து நோய் பரவிய மற்ற உயிர்களுக்கும் ஏற்படும். வெறிநாய் போலவே அலைந்து திரிந்து மற்றவர்களைக் கடிக்கும். இதற்கு நேர்மாறாகவும் வெறிநாய் இருக்க வாய்ப்பு உண்டு. அதாவது மிகவும் அமைதித் தன்மையுடன் இருக்கும். எப்போதும் தனிமையில் இருக்கும். சாப்பிடாமல் இருந்து, இறந்துபோகும்
இனிமேல், ரேபீஸ் பாதிப்பால் எந்த உயிரும் பலியாகாமல் இருப்பது நம் கையில்தான் இருக்கிறது.''
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ உயிரைப் பறிக்கும் “ரேபீஸ்” பயங்கரம்! வேண்டாம் அலட்சியம்! ~