நீர்முள்ளி செடியின் மருத்துவ குணங்கள்:-
இந்தியா முழுவதும் நீர் தேங்கியுள்ள வயல் வரப்புகளிலும், சிறு குளங்கள், குட்டைகள், ஆற்றோரங்களில் அதிகம் வளர்ந்து வரும் தாவரம்.
இதில் முட்கள் இருக்கும். ஊதா நிறத்தில் அழகான பூக்களைக் கொண்டிருக்கும். இதன் இலை விதை, வேர் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை.
சித்தா, ஆயுர்வேதா மருத்துவத்தில் நீர்முள்ளியின் பயன்பாடு அதிகம்.
இன்று பெரும்பாலானோருக்கு சிறுநீரகக் கல்லடைப்பு நோய் அதிகம் தாக்குகிறது. சிறுநீரகத்தில் உப்பு படிவம் சிறு கல்லாக மாறி அடைப்பை ஏற்படுத்துகிறது. இதனால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் உள்ளனர்.
இப்படி சிறுநீரகக் கல் அடைப்பு உள்ளவர்களுக்கு நீர்முள்ளி சிறந்த மருந்து.
நீர்முள்ளி காய்ந்த சமூலம் - 35 கிராம்
நெருஞ்சி சமூலம் - 35 கிராம்
சுரைக்கொடி சமூலம் - 35 கிராம்
வெள்ளரி விதை - 35 கிராம்
பரங்கி சக்கை - 35 கிராம்
மணத்தக்காளி வற்றல் - 35 கிராம்
சோம்பு - 35 கிராம்
கடுக்காய் விதை நீக்கியது - 35 கிராம்
தான்றிக்காய் - 35 கிராம்
நெல்லிக்காய் - 35 கிராம்
சரக்கொன்றைப் புளி - 35 கிராம்
இவற்றை எடுத்து 2 லிட்டர் நீரில் கொதிக்கவைத்து எட்டில் ஒரு பங்காக நன்கு வற்றக் காய்ச்சி வடிகட்டி காலை மாலை என இருவேளையும் அருந்தி வந்தால் சிறுநீரகக் கல் கரைந்து சிறுநீருடன் வெளியேறும். மேலும் மலச்சிக்கலையும் போக்கும்.
உடல் சோர்வு நீங்க
மனச் சோர்வு ஏற்பட்டாலே உடல் சோர்வும் உண்டாகும். உடல் சோர்வுற்றால் எந்த ஒரு வேலையும் திறம்பட செய்ய இயலாமல் போகும். இத்தகைய உடற்சோர்வை புத்துணர்வு பெறச் செய்ய நீர்முள்ளி சமூலத்தை தினமும் கஷாயம் செய்து அருந்தி வரவேண்டும்.
மலச்சிக்கல் நீங்க
மலக்கட்டை உடைத்து மலச்சிக்கலை போக்கும் குணம் நீர்முள்ளிக்கு உண்டு. நீர்முள்ளியுடன் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சேர்த்து இடித்து பொடித்து கஷாயம் செய்து அருந்தி வந்தால் மலச்சிக்கல் நீங்கும்.
பெண்களுக்கு
மாதவிலக்கு சீராக இல்லாத பெண்களும், வெள்ளைப்படுதல் போன்ற தொல்லைகள் உள்ள பெண்களும் நீர்முள்ளி கஷாயம் செய்து அருந்தி வந்தால் இத்தகைய தொல்லையிலிருந்து விடுபடலாம்.
தாது விருத்தியடைய
மன உளைச்சலாலும், உடல் சீர்கேட்டாலும் சிலருக்கு தாது நஷ்டம் ஏற்பட்டு விந்து சிறுநீருடன் வெளியேறும். இவர்கள் நீர்முள்ளி கஷாயத்தை அருந்தி வந்தால் தாது விருத்தியடையும்.
வயிற்றுப்புண் நீங்க
வாயுக்களின் சீற்றத்தினாலும் அஜீரணக் கோளாறினாலும் ஏற்படும் வயிற்றுப்புண் ஆற நீர்முள்ளி இலைகளை கஷாயம் செய்து அருந்தி வருவது நல்லது.