சென்னை : ஐ.டி நிறுவனங்கள், சிறப்பு பொருளாதார மண்டலங்கள், பி.பி.ஓக்களில் பணியாற்றும் இளைஞர்களில் சிலர் தற்போது நூதன போதைக்கு அடிமையாகி வருகின்றனர். இ,சிகரெட்டில் போதை வரவழைக்கும் நறுமணத்தை கலந்து புகைத்து உச்சகட்ட போதையில் திளைக்கின்றனர். எவ்வித பரிசோதனையிலும் இந்த போதை கண்டறியப்படுவதில்லை என்பதால் இளைஞர்களிடையே இது அதிவேகமாக பரவி வருகிறது.
தரமணி, திருவான்மியூர், அடையாறு, சோழிங்கநல்லூர், பெருங்குடி, துரைப்பாக்கம், பெரும்பாக்கம், பள்ளிக்கரணை, வேளச்சேரி, கேளம்பாக்கம், காரப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஐ.டி நிறுவனங்கள், பி.பி.ஓக்கள் அதிகளவில் உள்ளன. கேளம்பாக்கம் மகேந்திரா சிட்டி, தாம்பரம், சானடோரியம் மெப்ஸ், ஒரகடம் போன்ற பகுதிகளில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உள்ளன. இவை தவிர ஸ்ரீபெரும்புதூர், அம்பத்தூர், கிண்டி தொழிற்பேட்டைகளில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன.
இதில் ஐ.டி மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலங்களில் பணியாற்றுவோர் மாதம் ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.3 லட்சம் வரை சம்பளம் வாங்குவதால் செலவுகளை பற்றி அவர்கள் கவலையே படுவதில்லை. இதுபோன்ற நிலையில் சிலரிடம் மது, போதை விருந்துகளுக்கும் பஞ்சமில்லாமல் உள்ளது. இந்நிலையில் அதிக வருமானம் பெறும் இளைஞர்களிடையே தற்போது புதுவித போதை பழக்கம் மிக வேகமாக பரவி வருகிறது. புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் புகையிலை, சிகரெட்டுக்கு மாற்றாக இ, சிகரெட் என்ற சிகரெட் வெளிநாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வேப்பரைஸ்டு சிகரெட் எனப்படும் இந்த இ,சிகரெட் ரீபிள் பேனா போல நீண்ட வடிவத்தில் காணப்படும்.
இதில் நறுமணத்தை அளிக்கும் கேட்ரிஜ் இருக்கும். அந்த சிகரெட் பேட்டரியால் இயங்கும். அதை வாயில் வைத்து இழுக்கும்போது கேட்ரிஜ்ஜில் உள்ள நறுமணத்தோடு கூடிய புகை போன்ற மெல்லிய இழை மூச்சுக்குழலுக்குள் சென்று திரும்பும். ஆனால் புகை ஏதும் வராது. இந்த சிகரெட்டை வெளிநாட்டை சேர்ந்த நிறுவனங்கள் இந்தியாவுக்குள் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளன. சென்னையை பொறுத்தவரை 21 இடங்களில் இந்த ஏஜென்சிகள் உள்ளன. இவற்றில் இ,சிகரெட்டை வழக்கமாக பெட்டிக்கடைகளில் வாங்குவது போல வாங்க முடியாது. ஆன்லைன் முறையில் பதிவு செய்தால் டோர் டெலிவரி செய்யப்படும். இந்த சிகரெட் தரத்துக்கு ஏற்ப ஒரு சிகரெட் ரூ.3500 வரை விற்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த சிகரெட் தற்போது போதை பொருளாக பயன்படுத்துவது அதிகரித்து விட்டது. புகையிலை இல்லாத, நிகோடின் இல்லாத சிகரெட் என்ற நிலை மாறி, அதிகளவு நிகோடின் கலந்த நறுமண கலவையை சில நிறுவனங்கள் விற்பனை செய்கின்றன. அதிகளவு நிகோடின் கலக்கப்பட்ட இ,சிகரெட்டை பயன்படுத்துவோர் கஞ்சா அடித்த போதைக்குள்ளாகின்றனர். சிலர், போதை தரும் நறுமணங்களையும் வாங்கி இ,சிகரெட் கேட்ரிஜ்ஜில் பயன்படுத்தி சிகரெட்டை உபயோகப்படுத்துகின்றனர். இதனால் அவர்கள் 3 மணி நேரத்தில் தொடங்கி 7 மணி நேரம் வரை நிறை போதையில் காணப்படுகின்றனர்.
கேட்ரிஜ்ஜில் கலக்கப்படும் ‘ஜிகால்’ என்ற ஒரு வகை பிளேவரில் ஆல்கஹாலில் உள்ளது போல 2 மடங்கு போதை உள்ளது. இந்த பிளேவரை இளைஞர்கள் பலர் தற்போது துணிச்சலாக பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இந்த போதையில் இருப்பவர்களை எவ்வித மருத்துவ பரிசோதனையிலும் கண்டறிய இயலாது என்பதால் பணியாற்றும் இடங்களுக்கும் பலர் போதையில் செல்ல தொடங்கியுள்ளனர்.
என்னென்ன பாதிப்பு வரும்: மற்ற சிகரெட்டுகளை போல இ,சிகரெட்டுகளை சில நொடிகளில் புகைத்து விட முடியாது. ஒரு சிகரெட் பிடிக்க முழுமையாக 10 நிமிடம் தேவைப்படும். இவ்வாறு தொடர்ந்து 10 நிமிடங்களுக்கு புகையே இல்லாத புகை போன்ற உணர்வை அனுபவிக்கும்போது வாய் வலி, மூச்சுகுழாயில் வலி, இரைப்பு போன்றவை ஏற்படும். தொடர்ந்து இந்த சிகரெட்டை பிடித்து வருவோருக்கு நுரையீரல் புற்றுநோய், மாரடைப்பு, வலிப்பு போன்றவை ஏற்படும். தற்போது கலக்கப்படும் போதை பிளேவரால் போதையிலேயே மரணம் ஏற்படும்.
பல நாடுகளில் தடை
இ,சிகரெட்டை அமெரிக்காவில் மட்டும் 2.5 மில்லியன் மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்த சிகரெட்டால் நன்மையை விட தீமை அதிகம் என்ற நிலையில் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பல நாடுகளில் இ, சிகரெட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் இ, சிகரெட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.
கலப்பால் ஆபத்து
இ,சிகரெட் குறித்து அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவன டாக்டர் ஹசன் கூறியதாவது: சாதாரண சிகரெட்டில் நிகோடின், தார் போன்ற கலவைகள் உள்ளன. சிகரெட் பிடித்து பழக்கப்பட்டவர்கள் அதை விடமுடியாமல் தவிக்கும்பட்சத்தில் எதையாவது வைத்து ஊதிக் கொண்டிருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். அதுபோன்ற நிலையில் நிகோடின், தார் கலப்பில்லாத இ,சிகரெட் அறிமுகப்படுத்தப்பட்டது. கலப்பில்லாத இ,சிகரெட்டால் பாதிப்பு இல்லை. அதே நேரம் அதில் வேறு பொருளை கலந்தால் நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும்.
எக்ஸ்ட்ரா தகவல்
இ, சிகரெட்டில் கார்சினோஜெனிக் என்ற மூலக்கூறு முக்கிய இடத்தை வகிக்கிறது. ஆக்ரோலின், அசிட்டால்டிலைடு போன்ற மூலக்கூறுகள் இதில் கலக்கின்றன. இவை உடல் நலத்துக்கு கேடானவை. நிகோடின் பாதிப்பு இல்லை என்று கூறப்பட்டாலும் தற்போது கிடைக்கும் சிகரெட்டில் 2 மடங்கு நிகோடின் பிளேவர் உள்ளது.