என்னென்ன தேவை?
புழுங்கல் அரிசி - ஒன்றரை கப், பச்சரிசி, உளுந்து - தலா அரை கப், துவரம் பருப்பு, கடலை பருப்பு - தலா 2 டீஸ்பூன், வெந்தயம் - அரை டீஸ்பூன், சர்க்கரை - 2 டீஸ்பூன், எண்ணெய், வெண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.
மசாலாவுக்கு...
பனீர் - 200 துருவியது, வெங்காயம் - 1, பச்சை மிளகாய் - 2 (அ) 3, பொடியாக நறுக்கிய இஞ்சி, கொத்தமல்லி - சிறியது, சீரகம் - 1 டீஸ்பூன், உப்பு, எண்ணெய், வெண்ணெய் - சிறிது.
எப்படிச் செய்வது?
அரிசிகள், பருப்புகள், வெந்தயம் சுத்தம் செய்து 2 (அ) 3 மணி நேரம் ஊறவைத்து அரைத்து, உப்புச் சேர்த்து புளிக்க வைக்கவும். சிறிது எண்ணெயை கடாயில் விட்டு சீரகம் தாளித்து, மசாலாவுக்குக் கொடுத்துள்ள மற்ற பொருட்களையும் சேர்த்து நன்கு வதக்கி வைத்துக் கொள்ளவும்.
தோசை வார்க்கும் விதம்...
மாவை தோசை மாவு பதத்துக்கு கரைத்து, சர்க்கரை, உப்புச் சேர்த்து தோசைக்கல்லில் மாவுவிட்டு மெல்லிய தோசையாகத் தேய்த்து நடுவில் சிறிது பனீர் மசாலாவை வைத்து சுற்றிலும் வெண்ணெய், எண்ணெய் விட்டு ஒரு தட்டு போட்டு மூடி தோசை வெந்ததும் எடுத்து மடித்து சூடாக கொடுக்கவும்.
குறிப்பு:
மேலும் ருசியாக இருக்க மசாலாவுடன் வேகவைத்த பச்சை பட்டாணி, உடைத்த முந்திரி சேர்க்கலாம். குட்டீஸ்களுக்கு மிகவும் பிடிக்கும் இந்த தோசை.