அரிசி மாவு - ஒரு கப்
சர்க்கரை - ஒன்றரை கப்
தேங்காய் பால் - 2 1/2 கப்
பந்தன் / ரம்பை இலை நீர் - ஒரு கப்
ரோஸ் எஸன்ஸ் - ஒரு தேக்கரண்டி
நெய் - அரை கப்
கானாமது / பாதாம் - ஒரு கைப்பிடி அளவு
வெங்காயம் - ஒன்று
பட்டை - ஒரு துண்டு
ஏலக்காய் - 4
ரம்பை இலையை 2 கப் நீரில் போட்டு ஒரு கப் நீராகும் வரை கொதிக்க விடவும். கொதித்ததும் இலையைத் தனியாக எடுத்துவிட்டு நீரை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.
பட்டை, ஏலக்காய் இரண்டையும் சிறிது சர்க்கரை சேர்த்து பொடி செய்து, அரிசி மாவு, சர்க்கரையுடன் சேர்த்து கலந்து கொள்ளவும்.
பாத்திரத்தில் சிறிது நெய் விட்டு வெங்காயத்தை வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
பின் அதே பாத்திரத்தில் பாதாமையும் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அரிசி மாவு கலவையில் தேங்காய் பால் விட்டு கலந்து, அடுப்பில் வைத்து கிளறிக் கொண்டே இருக்கவும்.
மாவு கரண்டியில் ஒட்டும் பதத்திற்கு வந்ததும் வதக்கிய வெங்காயம், வறுத்த பாதாமில் பாதியை கலந்து விடவும். பின் எஸன்ஸ், பந்தன் இலை நீர் சேர்த்து கலந்து கொள்ளவும்.
நீர்க்க இருப்பது கரண்டியில் ஒட்டும் பதத்திற்கு வரும்போது நெய் முழுவதையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
நெய் தடவிய பேக்கிங் ட்ரேயில் இந்த கலவையை ஊற்றி மேலே மீதம் உள்ள வெங்காயம், பாதாம் தூவி 160 C’ல் முற்சூடு செய்த அவனில் பேக் செய்யவும்.
ஒரு மணி நேரம் வரை ஆகும். மேலே கேக் ப்ரவுன் நிறமாக வந்ததும் உள்ளே ஒரு கத்தியை விட்டு பார்த்து ஒட்டாமல் வரும் போது எடுக்கவும். சுவையான கித்தியோ போகிபா தயார்.
திவேகியில் கித்தியோ என்றால் நெய். இது பஞ்சு போல் மென்மையாக வராது, அழுத்தமாக தான் இருக்கும். ஆனால், மிகுந்த சுவையான போகிபா இது. மேலே வெடித்து போயிருக்கும். நன்றாக ஆறும் வரை பாத்திரத்தை விட்டு எடுக்கவராது. எடுத்தால் துண்டுகளாக்க முடியாமல் போய்விடும். தேங்காய் பால், பந்தன் இலை வாசம், நெய் என இந்த கேக் சாப்பிட சாப்பிட திகட்டாத ஒன்று. நல்ல சுவை தர ஃப்ரெஷ் தேங்காயில் கெட்டி பால் எடுத்து சேர்ப்பது அவசியம். அரிசி மாவு கட்டியாகாமல் கை விடாமல் கிளறுதல் வேண்டும். லேசாக ஒட்ட ஆரம்பிக்கும் பதம் போதும்.