ஐந்து பெரிது, ஆறு சிறிது - வைரமுத்து
(படித்ததில் பிடித்தது)
"சீ மிருகமே!"
என்று மனிதனை திட்டாதே
மனிதனே..
*
ஏந்த விலங்கும்
இரைப்பைக்கு மேலே
இன்னொரு வயிறு வளர்ப்பதில்லை
எங்கேனும்
தொப்பைக் கிளியோ
தொப்பை முயலோ
பார்த்ததுண்டா?
*
எந்த விலங்குக்கும்
சர்க்கரை வியாதியில்லை தெரியுமோ?
*
எந்த பறவையும்
கூடுகட்டி
வாடகைக்கு விடுவதில்லை
*
எந்த விலங்கும்
தேவையற்ற நிலம்
திருடுவதில்லை
*
கவனி மனிதனே
கூட்டு வாழ்க்கை இன்னும்
குலையாதிருப்பது
காட்டுக்குள்தான்
*
அறிந்தால்
ஆச்சரியம் கொள்வாய்
உடம்பை உடம்புக்குள் புதைக்கும்
தொழுநோய்
விலங்குகளுக்கில்லை
*
மனிதா
இதை
மனங்கொள்
கர்ப்பவாசனை
கண்டு கொண்டால்
காளை பசுவைச்
சேர்வதில்லை
*
ஒருவனுக்கொருத்தி
உனக்கு வார்த்தை
புறாவுக்கு வாழ்க்கை
எந்த புறாவும்
தன் ஜோடியன்றி
பிறஜோடி தொடுவதில்லை
*
இப்பொது சொல்
அறிவில்
ஆறு பெரிதா?
ஐந்து பெரிதா?
*
மரணம் நிஜம்
மரணம் வாழ்வின் பரிசு
மாண்டால் -
மானின் தோல் ஆசனம்
மயிலின் தோகை விசிறி
யானையின் பல் அலங்காரம்
ஒட்டகத்தின் எலும்பு ஆபரணம்
*
நீ மாண்டால்...
சிலரை
நெருப்பே நிராகரிக்கும்
என்பதால்தானே
புதைக்கவே பழகினோம்
*
ஒன்று கேட்கிறேன்
எல்லா விலங்கும்
மனிதனுக்கு பாலூட்டும்
எவளேனும் ஒருதாய்
விலங்குக்குப் பாலூட்டியதுண்டா?
*
"சீ மிருகமே!"
என்று
மனிதனைத் திட்டாதே
மனிதனே
*
கொஞ்சம்பொறு
காட்டுக்குள் என்ன சத்தம்...
ஏதோ ஒரு மிருகம்
இன்னொரு மிருகத்தை
ஏசுகிறது
"சீ மனிதனே!"