Author Topic: இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு!  (Read 46031 times)

Offline Yousuf

பனூ முஸ்தலக் (அ) அல்முரைஸீ போர்

இப்போர் ஒரு விரிவாகக் கூறப்படும் அளவிற்கு இல்லையென்றாலும் இதனால் பல குழப்பங்களும் பிரச்சனைகளும் இஸ்லாமியச் சமுதாயத்தில் ஏற்பட்டன. இக்குழப்பத்தின் இறுதியில் நயவஞ்சகர்களுக்குக் கேவலம் ஏற்பட்டது. இஸ்லாமியச் சமூகத்திற்குப் பல மார்க்கச் சட்டங்கள் அருளப்பட்டன. அதன் மூலம் முஸ்லிம் சமுதாயத்திற்குக் கண்ணியமும் உயர்வும் கிடைத்தது. முதலில் நாம் இப்போரைப் பற்றி கூறியதற்குப் பின்பு அப்பிரச்னைக்குரிய நிகழ்ச்சியைப் பற்றி கூறுவோம்.

இப்போர் ஹிஜ்ரி 5, ஷஅபான் மாதத்தில் நடைபெற்றதென்று பெரும்பாலான வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். இப்னு இஸ்ஹாக் (ரஹ்) ஹிஜ்ரி 6ல் நடைபெற்றது என்று கூறுகின்றார்.

இப்போருக்கான காரணமாவது: முஸ்தலக் எனும் கிளையினரின் தலைவரான ஹாரிஸ் இப்னு அபூ ழிரார் தனது கூட்டத்தினரையும் மற்றும் பல அரபிகளையும் அழைத்துக் கொண்டு நபியவர்களிடம் போர் புரிவதற்காக வருகிறார் என்ற செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. இதை உறுதியாகத் தெரிந்து வர, புரைதா இப்னு ஹுஸைப் அஸ்லமி (ரழி) என்பவரை நபியவர்கள் அனுப்பி வைத்தார்கள். அவர் ஹாரிஸ் இப்னு அபூ ழிராரை வழியில் சந்தித்து விபரமறிந்து நபியவர்களிடம் திரும்பி செய்தியைக் கூறினார்.

செய்தி உண்மைதான் என்பதை உறுதியாகத் தெரிந்து கொண்டவுடன் நபியவர்கள் தோழர்களைப் புறப்படுவதற்கு ஆயத்தமாக்கினார்கள். ஷஅபான் பிறை 2ல் மதீனாவிலிருந்து நபியவர்கள் கிளம்பினார்கள். இதுவரை எப்போதும் கலந்துகொள்ளாத நயவஞ்சகர்களின் ஒரு கூட்டம் நபியவர்களுடன் புறப்பட்டது. நபி (ஸல்) இப்போருக்குச் செல்லும் போது மதீனாவில் ஜைதுப்னு ஹாஸாவைப் பிரதிநிதியாக நியமித்தார்கள். சிலர் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டது அபூதர் என்றும் கூறுகின்றனர். மற்றும் சிலர் நுமைலா இப்னு அப்துல்லாஹ் என்றும் கூறுகின்றனர்.

ஹாரிஸ் இப்னு அபூ ழிரார் இஸ்லாமியப் படையின் செய்தியை அறிந்து வருவதற்காக ஓர் ஒற்றனை அனுப்பினான். முஸ்லிம்கள் அவனைக் கைது செய்து கொன்று விட்டனர். ஹாரிஸ் இப்னு ழிராருக்கும் அவனுடன் இருந்தவர்களுக்கும் “நபி (ஸல்) அவர்கள் தங்களின் ஒற்றர்களைக் கொன்று விட்டார்கள். மேலும், தங்களை நோக்கி விரைந்து வருகிறார்கள்” என்ற செய்தி கிடைத்தவுடன் அவர்களுக்குக் கடுமையான அச்சம் ஏற்பட்டது. இதனால் பல அரபுக் கிளையினர் அவர்களின் படையிலிருந்து விலகிச் சென்று விட்டனர்.

நபி (ஸல்) அவர்கள் ‘முரைஸீ’ என்ற இடத்தை வந்தடைந்தார்கள். இங்குதான் எதிரிகள் தங்கியிருந்தனர். இது கடற்கரைக்கு அருகில் ‘குதைத்’ என்ற ஊர் ஓரத்தில் உள்ள கிணறாகும். அங்கு நபியவர்கள் தங்களது தோழர்களை வரிசையாக நிற்கவைத்து முஹாஜிர்களுக்குரிய கொடியை அபூபக்ர் (ரழி) அவர்களிடமும், அன்சாரிகளுக்குரிய கொடியை ஸஅது இப்னு உபாதா (ரழி) அவர்களிடமும் கொடுத்தார்கள். பின்பு இரு படையினரும் சிறிது நேரம் அம்பெறிந்து சண்டை செய்து கொண்டனர். அதற்குப் பின் நபியவர்கள் கட்டளையிடவே தோழர்கள் அனைவரும் ஒரே பாய்ச்சலாக எதிரிகள் மீது பாய்ந்தனர். அல்லாஹ்வின் அருளால் முஸ்லிம்களுக்கு வெற்றியும் இணைவைப்பவர்களுக்குத் தோல்வியும் கிடைத்தது. போருக்கு வந்திருந்த எதிரிகளின் பெண்களையும், பிள்ளைகளையும், ஆடுகள் மற்றும் ஏனைய கால்நடைகளையும் முஸ்லிம்கள் கைப்பற்றினார்கள். இப்போல் எதிரிகளால் முஸ்லிம்களில் எவரும் கொலை செய்யப்படவில்லை. ஆனால், அன்சாரி ஒருவர் ஒரு முஸ்லிமை எதிரிப் படையில் உள்ளவர் என்று எண்ணி தவறாகக் கொலை செய்து விட்டார்.

இப்போரைப் பற்றி இவ்வாறுதான் பல வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால், அறிஞர் இப்னுல் கய்” (ரஹ்) இதற்கு மாற்றமாகக் கூறுகிறார். அவர் கூறுவதாவது: இப்படையெடுப்பில் சண்டை ஏதும் நடைபெறவில்லை. மாறாக, நபி (ஸல்) அவர்கள் முஸ்தலக் கிளையினர் மீது தாக்குதல் நடத்த வந்தார்கள். முஸ்தலக் கிளையினர் கொள்ளையிடுவதற்காக தங்கள் ஊரை விட்டு வெளியில் சென்றிருந்தனர். நபியவர்கள் அவர்களின் குடும்பங்களையும் பொருட்களையும் கைப்பற்றிக் கொண்டு திரும்பினார்கள். இவ்வாறுதான் ஸஹீஹுல் புகாரியிலும் வந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் இக்கூட்டத்தின் தலைவர் ஹாரிஸின் மகள் ஜுவைரியாவும் இருந்தார். இவரை ஸாபித் இப்னு கைஸ் (ரழி) தனது பங்கில் பெற்றார். இவரை உரிமை விடுவதற்காக இவரிடம் ஓர் ஈட்டுத் தொகை பேசி ஸாபித் (ரழி) ஒப்பந்தம் செய்து கொண்டார். நபி (ஸல்) அவர்கள் ஜுவைரியாவின் சார்பாக அத்தொகையைக் கொடுத்து விட்டார்கள். பின்பு ஜுவைரியாவைப் பெண் பேசி திருமணம் செய்து கொண்டார்கள். நபியவர்களின் திருமணத்தின் காரணமாக முஸ்தலக் கிளையைச் சேர்ந்த நூறு குடும்பத்தினரை முஸ்லிம்கள் உரிமையிட்டனர். ஏனெனில், இப்போது இந்த கைதிகளெல்லாம் நபியவர்களின் மாமனார் குடும்பத்தைச் சேர்ந்தவர் களாயிற்றே! அவர்களை எப்படி நாம் அடிமைகளாக வைத்திருப்பது என்று நபித்தோழர்கள் காரணம் கூறினார்கள். (ஜாதுல் மஆது, இப்னு ஹிஷாம்)

இப்போரில் ஏற்பட்ட ஏனைய சம்பவங்களின் தலையாய காரணமாக இருந்தவன் நயவஞ்ச கர்களின் தலைவன் அப்துல்லாஹ் இப்னு உபையும் அவனது கூட்டாளிகளுமே. ஆகவே, இஸ்லாமியச் சமுதாயத்தில் இந்நயவஞ்சகர்களின் செயல்பாடுகள் பற்றி முதலில் சற்று தெரிந்து கொள்வது அவசியமாகும்.
« Last Edit: December 19, 2011, 11:28:34 PM by Yousuf »

Offline Yousuf

நயவஞ்சகர்களின் நடவடிக்கைகள்

அப்துல்லாஹ் இப்னு உபை இஸ்லாமின் மீதும் முஸ்லிம்கள் மீதும், குறிப்பாக நபி (ஸல்) அவர்களின் மீதும் எல்லையற்ற எரிச்சல் கொண்டிருந்தான். அதற்குக் காரணம் அவ்ஸ், கஸ்ரஜ் ஆகிய இரு கிளையினரும் இவனைத் தலைவனாக்கி மணிமகுடம் சூட்டுவதற்குத் தயாராக இருந்த சமயத்தில் நபி (ஸல்) வருகை தர, அவர்கள் அனைவரும் இவனைப் புறக்கணித்து விட்டு நபி (ஸல்) அவர்களின் பக்கம் திரும்பிவிட்டனர். இதனால் நபியவர்கள்தான் தனது ஆட்சியை பறித்துக் கொண்டார்கள் என்று இவன் மனம் புழுங்கிக் கொண்டிருந்தான்.

நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்ததிலிருந்து இவன் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளும் முன்பும், ஏற்றுக் கொண்ட பின்பும் இந்த பகைமையையும் கசப்பையும் வெளிப்படையாகவே காட்டிக் கொண்டிருந்தான். ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் ஸஅது இப்னு உபாதா (ரழி) அவர்களை நலம் விசாரிப்பதற்காக கழுதையின் மீது சென்று கொண்டிருந்தார்கள். அப்போது வழியில் ஒரு சபையில் அப்துல்லாஹ் இப்னு உபை அமர்ந்திருந்தான். அவனைக் கடந்து செல்லும்போது “முஹம்மதே! எங்களின் மீது புழுதியைக் கிளப்பாதீர்” என்று கூறினான். நபி (ஸல்) அவர்கள் அச்சபையில் நின்று குர்ஆன் ஓதிக் காண்பித்தார்கள். அதற்கு அவன் “நீ உனது வீட்டில் உட்கார்ந்து கொள்! எங்களது சபையில் வந்து எங்களைத் தொந்தரவு செய்யாதே” என்று நபி (ஸல்) அவர்களைப் பார்த்து கூறினான். இது அவன் இஸ்லாமை ஏற்றுக் கொள்வதற்கு முன்பு நடந்த நிகழ்ச்சியாகும். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம், இப்னு ஹிஷாம்)

பத்ர் போருக்குப் பின் இவன் இஸ்லாமை ஏற்றுக் கொண்டான். ஆனால், வாயளவில் தான் ஏற்றுக்கொண்டான் மனப்பூர்மாக அல்ல. ஆகவே, இவன் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும், முஸ்லிம்களுக்கும் எதிரியாகவே இருந்து வந்தான். இஸ்லாமியச் சமுதாயத்தை பிரிப்பதற்கும், இஸ்லாமை பலவீனப்படுத்துவதற்கும் எப்போதும் சிந்தனை செய்து வந்தான். இஸ்லாமின் எதிரிகளுடன் தோழமை கொண்டிருந்தான். கைனுகா யூதர்களின் விஷயத்தில் இவன் குறுக்கிட்டது போன்றே உஹுத் போரில் இவன் செய்த மோசடி, முஸ்லிம்களைப் பிரிப்பதற்காக செய்த சூழ்ச்சி, முஸ்லிம்களின் அணிகளுக்கு மத்தியில் அவன் ஏற்படுத்திய குழப்பங்கள், சலசலப்புகள் பற்றி இதற்கு முன்பு நாம் கூறியிருக்கின்றோம்.

இவன் இஸ்லாமை வெளிப்படையாக ஏற்றுக் கொண்டபின் முஸ்லிம்களை மிக அதிகமாக ஏமாற்றி, அவர்களுக்கு வஞ்சகம் செய்து வந்தான். நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை ஜுமுஆ பேருரைக்காக மிம்பரில் ஏறி அமர்ந்தவுடன் இவன் எழுந்து “இவர்தான் அல்லாஹ்வின் தூதர்! இதோ... இவர் உங்களுக்கு மத்தியில் இருக்கிறார் இவர் மூலம் அல்லாஹ் உங்களுக்கு கண்ணியத்தையும் மதிப்பையும் வழங்கியிருக்கின்றான் இவருக்கு நீங்கள் உதவி செய்யுங்கள் இவருக்கு நீங்கள் ஆதரவு தாருங்கள் இவன் பேச்சை செவி தாழ்த்தி கேளுங்கள் இவருக்கு கீழ்ப்படியுங்கள்” என்று கூறிவிட்டு அமர்ந்து கொள்வான். அதற்குப் பின் நபி (ஸல்) எழுந்து பிரசங்கம் செய்வார்கள்.

இந்த நயவஞ்சகனின் வெட்கங்கெட்ட தன்மைக்கு இதை உதாரணமாகக் கூறலாம்: இவன் உஹுத் போரில் செய்த மோசடிகள் அனைவருக்கும் தெரிந்ததே. நபி (ஸல்) அவர்கள் உஹுத் போரிலிருந்து மதீனாவிற்குத் திரும்பியப் பின் ஒரு நாள் வெள்ளிக்கிழமையன்று பிரசங்கத்திற்காக எழுந்தார்கள். அப்போது அவன், தான் வழக்கமாக சொல்லி வந்ததைச் சொல்வதற்காக எழுந்தான். ஆனால், முஸ்லிம்கள் அவனது ஆடையைப் பிடித்திழுத்து “அல்லாஹ்வின் எதிரியே! உட்காரடா... உனக்கு இதைக் கூறுவதற்கு எந்த தகுதியுமில்லை. நீ செய்ய வேண்டிய அழிச்சாட்டியங்களை எல்லாம் செய்து விட்டாய்” என்று கூறினார்கள். அதற்கவன் “நான் என்ன கெட்டதையா கூறினேன்! அவரது காரியத்தில் அவரைப் பலப்படுத்தவே நான் எழுந்தேன்” என்று கூறியவனாக மக்களின் பிடரிகளை தாண்டிக் கொண்டு பள்ளியைவிட்டு வெளியேறினான். பள்ளியின் வாயிலில் அன்சாரி ஒருவர் அவனைப் பார்த்து “உனக்கு நாசம் உண்டாகட்டும்! நீ நபியவர்களிடம் திரும்பிச் செல். அவர்கள் உனக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடுவார்கள்” என்றார். அதற்கவன் “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர் எனக்காக பாவ மன்னிப்புத் தேட வேண்டும் என்று எனக்கு எவ்வித ஆசையுமில்லை” என்றான். (இப்னு ஹிஷாம்)

மேலும், நளீர் இன யூதர்களுடன் அவன் தொடர்பு வைத்துக் கொண்டு முஸ்லிம்களுக்கு எதிராக எப்போதும் சதித்திட்டம் தீட்டி வந்தான். இவன் நளீர் இன யூதர்களுக்கு கூறியதைப் பற்றி அல்லாஹ் இவ்வாறு விவரிக்கிறான்:

(நபியே! இந்த) நயவஞ்சகர்களை நீங்கள் கவனிக்கவில்லையா? அவர்கள், வேதத்தை உடையவர்களிலுள்ள நிராகரிக்கும் தங்கள் சகோதரர்களை நோக்கி “நீங்கள் (உங்கள் இல்லத்தை விட்டு) வெளியேற்றப்பட்டால் நாங்களும் உங்களுடன் வெளியேறி விடுவோம். உங்கள் விஷயத்தில் (உங்களுக்கு எதிராக) நாங்கள் ஒருவருக்கும், ஒரு காலத்திலும் வழிப்பட மாட்டோம். (எவரும்) உங்களை எதிர்த்து போர் புரிந்தால், நிச்சயமாக நாம் உங்களுக்கு உதவி புரிவோம்” என்றும் கூறுகின்றனர். ஆனால், நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள் என்று அல்லாஹ் சாட்சியம் கூறுகின்றான். (அல்குர்ஆன் 59:11)

மேலும், இவனும் இவனது தோழர்களும் அகழ் போரில் இறைநம்பிக்கையாளர்களின் உள்ளத்தில் பல குழப்பங்களையும், திடுக்கங்களையும், சஞ்சலங்களையும் ஏற்படுத்தினர். இதைப் பற்றி அத்தியாயம் அஹ்ஸாபில் 12லிருந்து 20 வரையிலுள்ள வசனங்களில் அல்லாஹ் தெளிவாக கூறுகின்றான்.

இஸ்லாமின் எதிரிகளான யூதர்கள், நயவஞ்சகர்கள், இணைவைப்பவர்கள் ஆகிய அனைவருக்கும் இஸ்லாமின் வெற்றிக்கு என்ன காரணமென்பது நன்கு தெரிந்திருந்தது. அதாவது, இஸ்லாமின் வெற்றி பொருளாதாரப் பெருக்கத்தினாலோ, ஆயுதங்கள், படைகள் மற்றும் போர் சாதனங்கள் ஆகியவை அதிகமாக இருந்ததினாலோ அல்ல. மாறாக, இஸ்லாமியச் சமுதாயத்திடமும் மற்றும் இஸ்லாமில் இணைந்த ஒவ்வொருவரிடமும் இருக்கும் உயர்ந்த பண்புகளும், நற்குணங்களும், முன்மாதிரியான தன்மைகளும்தான் இஸ்லாமின் வெற்றிக்குக் காரணமாக இருக்கின்றன என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். அத்துடன் இந்த அனைத்து தன்மைகளுக்கும் காரணமாகவும் ஊற்றாகவும் விளங்கக்கூடியவர் நபி (ஸல்) அவர்கள்தான் என்பதும் இவர்களுக்குத் தெரியும். அதுபோன்றே இந்த மார்க்கத்தை ஆயுதங்களாலும் ஆற்றலாலும் அழிக்க முடியாது என்பதை அவர்கள் நன்கு தெரிந்து கொண்டதால் நேரடிப் போருக்குத் துணிவின்றி மறைமுகச் சூழ்ச்சிப் போருக்கு வித்திட்டனர். இம்மார்க்கத்தின் பண்பாடு மற்றும் கலாச்சார ரீதியாக இம்மார்க்கத்திற்கு எதிராகப் பொய் பிரச்சாரங்களை பரப்ப வேண்டும் இந்த பொய் பிரச்சாரத்திற்கு முதல் இலக்காக நபி (ஸல்) அவர்களை ஆக்க வேண்டும் என்று முடிவு செய்தனர். முஸ்லிம்களின் அணியில் நயவஞ்சகர்களும் கலந்திருந்ததுடன் அந்த நயவஞ்சகர்கள் மதீனாவாசிகளாகவும் இருந்ததால் முஸ்லிம்களுடன் தொடர்பு கொண்டு அவர்களது உணர்வுகளைத் தூண்டிவிட்டு விளையாடுவது எதிரிகளுக்குச் சாத்தியமாக இருந்தது. எனவே, இந்தப் பொய் பிரச்சாரத்தைப் பரப்புவதற்குரிய பொறுப்பை நயவஞ்சகர்களே ஏற்றுக் கொண்டனர். இதில் இவர்களின் தலைவனாக இருந்த இப்னு உபை முக்கியப் பங்கு வகித்தான்.

இவர்களது இந்தத் திட்டம் ஒரு விஷயத்தில் மிகத் தெளிவாக வெளிப்பட்டது. அதாவது, நபி (ஸல்) அவர்களின் வளர்ப்பு மகன் ஜைதுப்னு ஹாஸா (ரழி) தன் மனைவி ஜைனப் பின்த் ஜஹ்ஷ் (ரழி) அவர்களைத் தலாக் விட்டதற்குப் பின் அவரை நபி (ஸல்) திருமணம் செய்து கொண்டார்கள். அரபுகள் தங்களின் கலாச்சாரப்படி வளர்ப்பு மகனைப் பெற்ற மகனைப் போல் கருதினர். மகனின் மனைவியைத் தலாக்கிற்குப் பின் தந்தை மணம் முடிப்பது எவ்வாறு குற்றமான செயலாக கருதப்பட்டு வந்ததோ அதேபோல் வளர்ப்பு மகனின் மனைவியையும் வளர்ப்புத் தந்தை திருமணம் முடிப்பதை குற்றமாகவே கருதினர். ஆகவே, நபி (ஸல்) ஜைனபை திருமணம் முடித்துக் கொண்டதும் நயவஞ்சகர்கள் நபியவர்களுக்கெதிராக சர்ச்சையைக் கிளப்புவதற்கு இரண்டு வழிகளைக் கையாண்டனர்.

Offline Yousuf

குழுக்களும் படைப்பிரிவுகளும்

சற்று முன் கூறப்பட்ட முரைஸீ போருக்குப் பின் அனுப்பப்பட்ட குழுக்கள் மற்றும் படைப் பிரிவுகளைப் பற்றி இங்கு நாம் கூறயிருக்கிறோம்:

1) ‘அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்’ படைப் பிரிவு: ஹிஜ்ரி 6, ஷஅபான் மாதத்தில் ‘தவ்மதுல் ஜன்தல்’ எனும் பகுதியில் இருக்கும் கல்பு கிளையினரின் ஊர்களுக்கு அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்களுடன் ஒரு படைப்பிரிவை நபி (ஸல்) அனுப்பினார்கள். அனுப்பும் போது அவரை நபி (ஸல்) தனக்கு முன் அமர வைத்து, தனது கரத்தால் அவருக்குத் தலைப்பாகை கட்டிவிட்டார்கள். மேலும், போரில் மிக அழகிய முறைகளைக் கையாள வேண்டும் என்று உபதேசம் செய்ததுடன் “அவர்கள் உமக்கு கீழ்ப்படிந்து விட்டால் அவர்களுடைய தலைவன் மகளை நீர் திருமணம் செய்துகொள்!” என்றும் கூறினார்கள்.

அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அங்கு சென்று மூன்று நாட்கள் தங்கி அந்தக் கூட்டத்தினருக்கு இஸ்லாமிய அழைப்பு விடுத்தார்கள். அவர்களின் அழைப்பை ஏற்று அக்கூட்டத்தினர் அனைவரும் இஸ்லாமைத் தழுவினர். அதன் பின் ‘துமாழிர் பின்த் அஸ்பக்’ என்ற பெண்ணை அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) திருமணம் செய்து கொண்டார்கள். இப்பெண்மணி பிரபல்யமான நபித்தோழர் அபூஸலமாவின் தாயாராவார். இப்பெண்மணியின் தந்தைதான் கல்பு இனத்தவன் தலைவராக இருந்தார்.

2) ‘அலீ இப்னு அபூதாலிப்’ படைப் பிரிவு: ஹிஜ்ரி 6, ஷஅபான் மாதத்தில் ‘ஃபதக்’ எனும் ஊரில் உள்ள ஸஅது இப்னு பக்ரு கிளையினரிடம் அலீ இப்னு அபூதாலிப் (ரழி) அவர்களை 200 வீரர்களுடன் நபி (ஸல்) அவர்கள் அனுப்பினார்கள். இக்கிளையினரில் ஒரு பிரிவினர் கைபரிலுள்ள யூதர்களுக்கு உதவி செய்ய விரும்புகின்றனர் என்ற செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியதால் அவர்கள் இப்படையை அனுப்பினார்கள். அலீ (ரழி) இரவில் பயணம் செய்வதும், பகலில் பதுங்கிக் கொள்வதுமாக தனது பயணத்தைத் தொடர்ந்தார்கள். வழியில் ஒரு நாள் அலீ (ரழி) அக்கூட்டத்தைச் சேர்ந்த ஒற்றன் ஒருவனைப் பிடித்தார்கள். “யூதப் பகுதியான கைபரில் விளையும் பேரீத்தம் பழங்களில் ஒரு பெரும் பங்கை யூதர்கள் ஸஅது இப்னு பக்ர் கிளையினருக்கு வழங்கினால், அக்கிளையினர் யூதர்களுக்கு உதவிடுவார்கள்” என்பதைத் தெரிவிப்பதற்காகத் தன்னை அனுப்பினர் என்பதை, பிடிப்பட்ட ஒற்றன் ஒப்புக் கொண்டது மட்டுமின்றி, அக்கிளையினர் குழுமியிருந்த இடத்தையும் காட்டிக் கொடுத்தான். அவர்கள் மீது அலீ (ரழி) போர் தொடுத்து 500 ஒட்டகைகளையும், 2000 ஆடுகளையும் கைப்பற்றினார். அக்கிளையினர் அங்கிருந்து தப்பித்து ‘ளுவுன்’ என்ற இடத்திற்கு ஓடிவிட்டனர். வபர் இப்னு உலைம் என்பவன் இக்கிளையினருக்குத் தலைமை தாங்கி வந்திருந்தான்.

3) ‘அபூபக்ர் (அ) ஜைது’ படைப் பிரிவு: ஹிஜ்ரி 6, ரமழான் மாதத்தில் ‘வாதில் குரா’ என்ற இடத்திற்கு அபூபக்ர் (ரழி) அல்லது ஜைது இப்னு ஹாஸா (ரழி) அவர்களின் தலைமையின் கீழ் ஒரு படைப் பிரிவை நபி (ஸல்) அனுப்பினார்கள். அங்கு வசிக்கும் ஃபஜாரா கிளையினரின் ஒரு பிரிவினர் நபியவர்களைக் கொலை செய்ய வஞ்சகமாகத் திட்டமிடுகிறார்கள் என்ற செய்தி கிடைத்ததை முன்னிட்டு இப்படையை அனுப்பப்பட்டது.

ஸலமா இப்னு அக்வஉ (ரழி) கூறுகிறார்: நானும் இப்படையில் சென்றிருந்தேன். நாங்கள் ஸுப்ஹு தொழுகையை முடித்த பின் அவர்களைத் தாக்கினோம். பிறகு அவர்களின் கிணற்றுக்கு அருகில் நாங்கள் ஒன்று சேர்ந்தோம். இந்தத் தாக்குதலில் எதிரிகளில் பலர் கொல்லப்பட்டனர். சிலர் தங்கள் பிள்ளைகளுடன் மலையை நோக்கி ஓடுவதைப் பார்த்தேன். அவர்கள் தப்பித்து மலையில் ஏறிவிடக் கூடாது என்பதற்காக வேகமாக ஓர் அம்பை எடுத்து அவர்களுக்கும் மலைக்கும் நடுவில் எறிந்தேன் அம்பைப் பார்த்த அவர்கள் நின்று விட்டனர். அக்கூட்டத்தில் பெண் ஒருத்தி இருந்தாள் அவளது பெயர் உம்மு கிர்ஃபர் அவள் தோல் ஆடை அணிந்திருந்தாள் அவளுக்கு மிக அழகிய மகள் ஒருத்தி இருந்தாள். நான் அவர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு அபூபக்ர் (ரழி) அவர்களிடம் வந்தேன். அபூபக்ர் (ரழி) எனக்கு அவளின் மகளைப் பரிசாக அளித்தார்கள். ஆனால், நான் அவளைத் தொடவில்லை. பிறகு நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்ற பின் நபியவர்கள் அவளை என்னிடமிருந்து பெற்று மக்காவிற்கு அனுப்பினார்கள். அவளை குறைஷிகளிடம் கொடுத்து, அங்கு கைதிகளாக இருந்த முஸ்லிம்களை விடுதலை செய்தார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

உம்மு கிர்ஃபா என்ற இப்பெண் ஒரு பெரும் தீயவளாக இருந்தாள். இவள் நபி (ஸல்) அவர்களைக் கொலை செய்வதற்காக தனது குடும்பத்திலிருந்து முப்பது குதிரை வீரர்களைத் தயார் செய்திருந்தாள். அந்த முப்பது நபர்களும் கொல்லப்பட்டனர். அவளும் உரிய தண்டனையைப் பெற்றாள்.

4) ‘குர்ஸ்’ படைப் பிரிவு: உகல் மற்றும் உரைனாவைச் சேர்ந்த ஒரு கூட்டம் மதீனாவுக்கு வந்து தங்களை முஸ்லிம்கள் என்று வெளிப்படுத்திக் கொண்டனர். மதீனாவில் தங்கிய அவர்களுக்கு அங்குள்ள தட்பவெப்ப நிலை ஒத்துக் கொள்ளாததின் காரணமாக நோயுற்றார்கள். நபி (ஸல்) இக்கூட்டத்தினரை முஸ்லிம்களின் ஒட்டகங்கள் மேயும் இடங்களுக்குச் சென்று அங்கு தங்கி அதன் பாலையும், சிறுநீரையும் குடிக்கும்படி கூறினார்கள். அவ்வாறு செய்து அவர்கள் உடல் சுகமடைந்தனர். பிறகு அந்தக் கூட்டத்தினர் நபி (ஸல்) அவர்களின் இடையரைக் கொலை செய்துவிட்டு அங்குள்ள ஒட்டகங்களையும் ஓட்டிச் சென்றதுடன் இஸ்லாமிய மார்க்கத்தையும் புறக்கணித்தனர். இவர்களைத் தேடிப் பிடித்துவர நபி (ஸல்) 20 தோழர்களை குர்ஸ் இப்னு ஜாபிர் ஃபஹ் (ரழி) அவர்களின் தலைமையின் கீழ் அனுப்பினார்கள்.

இந்த நிகழ்ச்சி ஹிஜ்ரி 6, ஷவ்வால் மாதத்தில் நடந்தது. அப்போது நபி (ஸல்) அந்த உரைனாவினர் மீது சாபமிட்டார்கள். “அல்லாஹ்வே! அவர்களின் பாதையை அவர்களுக்கு மறைத்துவிடு, தண்ணீர் துருத்தியின் வாயை விட அவர்களுக்குப் பாதையை மிக நெருக்கடியாக ஆக்கிவிடு!” என்று பிரார்த்தித்தார்கள். பாதையை அல்லாஹ் அவர்களுக்கு மறைத்து விட்டான். எனவே, அவர்கள் அனைவரையும் முஸ்லிம்கள் இலகுவாகப் பிடித்தனர். அவர்களின் கைகள், கால்கள் வெட்டப்பட்டு, கண்களுக்குச் சூடு வைக்கப்பட்டது. அவர்கள் எவ்வாறு ஒட்டக இடையர்களைக் கொலை செய்தார்களோ அவ்வாறே அவர்களின் செயல்களுக்கு ஏற்றவாறு இத்தண்டனை வழங்கப்பட்டது. அதன் பின் அவர்களை மதீனாவின் வெளியில் விவசாயக் களத்தில் இதே நிலையில் விடப்பட்டது. அனைவரும் செத்து மடிந்தனர். (ஜாதுல் மஆது)

இந்நிகழ்ச்சி ஸஹீஹுல் புகாரியில் விவரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கூறப்பட்ட சம்பவங்களுடன் வரலாற்று ஆசிரியர்கள் மற்றொரு படைப் பிரிவின் நிகழ்ச்சியையும் குறிப்பிடுகின்றனர். அதாவது: அபூஸுஃப்யான் தன்னை கொலை செய்ய ஒரு கிராம அரபியை அனுப்பியிருக்கிறார் என்ற செய்தி அறிந்தவுடன் நபியவர்கள் அம்ரு இப்னு உமைய்யா ழம் மற்றும் ஸலமா இப்னு அபூஸலமா ஆகிய இருத்தோழர்களையும் அபூ ஸுஃப்யானைக் கொலை செய்ய அனுப்பினார்கள். ஆனால், இந்த நோக்கத்தில் எவரும் வெற்றியடையவில்லை. இந்நிகழ்ச்சி ஹிஜ்ரி 6, ஷவ்வால் மாதம் நடந்தது.

மேற்கூறப்பட்ட அனைத்து சிறிய பெரிய சம்பவங்கள், அகழ் மற்றும் குறைளா போர்களுக்குப் பின் நடைபெற்றவையாகும். இவற்றுள் எதிலும் கடுமையானச் சண்டை ஏதும் ஏற்படவில்லை. சில சம்பவங்களில் சிறிய மோதல்கள் மட்டும் ஏற்பட்டன. சுற்று வட்டார நிலைமைகளை அறிந்து வருவது அல்லது அடங்காமல் இருந்த கிராம அரபிகளையும் எதிரிகளையும் அச்சுறுத்தி, சட்ட ஒழுங்கை நிலைநிறுத்துவது ஆகியவையே அனுப்பப்பட்ட படைப் பிரிவுகளின் நோக்கமாக இருந்தது.

நிலைமைகளை நன்கு ஆராய்ந்து பார்க்கும் பொழுது நமக்குத் தெரியவருவது என்னவெனில், அகழ் போருக்குப் பின்பு முஸ்லிம்களின் நிலைமை முன்னேற்றம் கண்டது. இஸ்லாமுடைய எதிரிகளின் நிலைமைகளும் அவர்களின் ஆற்றல்களும் சரியத் தொடங்கின. இதனால் இஸ்லாமிய அழைப்புப் பணியை அழிக்க வேண்டும், அதன் பலத்தைக் குறைக்க வேண்டும் என்ற கொஞ்ச நஞ்ச ஆசையும் இறைமறுப்பாளர்களுக்கு எஞ்சியிருக்கவில்லை. ஆகவே, இஸ்லாமின் ஆற்றலை ஏற்று அதற்குப் பணிந்து, அரபு தீபகற்பத்தில் இஸ்லாம் நிலைபெறுவதை ஏற்றுக் கொள்வது தவிர அவர்களுக்கு வேறு வழியில்லாமல் போய்விட்டது. இஸ்லாமின் இந்த முன்னேற்றத்தை ‘ஹுதைபிய்யா உடன்படிக்கை’ மூலம் நாம் மிகத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

Offline Yousuf

ஹுதைபிய்யா (ஹஜ்ரி 6, துல்கஅதா)

உம்ரா

அரபு தீபகற்பத்தில் நிலைமைகள் பெருமளவு முஸ்லிம்களுக்குச் சாதகமாக மாறின. சிறிது சிறிதாக மாபெரும் வெற்றிக்கான முன் அறிவிப்புகளும், இஸ்லாமிய அழைப்புப் பணி முழுமையாக வெற்றியடைவதற்கான அடையாளங்களும் தோன்றின. மக்காவிலுள்ள கண்ணியமிக்க பள்ளி வாசலில் (அல் மஸ்ஜிதுல் ஹராமில்) கடந்த ஆறு ஆண்டுகளாக இறைவணக்கத்தை நிறைவேற்ற முடியாமல் இணைவைப்பவர்களால் முஸ்லிம்கள் தடுக்கப்பட்டு வந்தனர் என்பது தெரிந்ததே. இப்போது அப்பள்ளியில் வணக்க வழிபாடுகள் நிறைவேற்றுவதற்குரிய உரிமை முஸ்லிம்களுக்கு உண்டு என்பதை இணைவைப்பவர்கள ஏற்றுக் கொள்ள வைப்பதற்குரிய முன்னேற்பாடுகள் தொடங்கின.

நபி (ஸல்) அவர்கள் ஒரு கனவு கண்டார்கள். அதாவது, “நபியவர்களும் அவர்களது தோழர்களும் புனித பள்ளிக்குள் நுழைகிறார்கள். கஅபாவின் சாவியை நபி (ஸல்) பெறுகிறார்கள். அனைவரும் கஅபாவை வலம் வந்த பின் தங்களது உம்ராவை நிறைவு செய்கிறார்கள். சிலர் மொட்டை அடித்துக் கொள்கின்றனர். சிலர் முடியைக் குறைத்துக் கொள்கின்றனர்.” தான் கண்ட இந்தக் கனவை நபி (ஸல்) தங்களது தோழர்களிடம் கூறியபோது அனைவரும் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். இதே ஆண்டு அனைவரும் மக்காவிற்குச் செல்வோம் என எண்ணினர். இதற்குப் பின் நபி (ஸல்) தங்களது தோழர்களிடம் தான் உம்ராவிற்குச் செல்ல இருப்பதாகவும், நீங்களும் அதற்குத் தயாராக வேண்டுமென்றும் கூறினார்கள்.

முஸ்லிம்களே புறப்படுங்கள்

நபி (ஸல்) மதீனாவில் உள்ள முஸ்லிம்களையும், சுற்று வட்டார முஸ்லிம் கிராமவாசிகளையும் தன்னுடன் புறப்படுமாறு கூறினார்கள். ஆனால், பெரும்பாலான கிராமவாசிகள் புறப்படுவதில் தயக்கம் காட்டினார்கள். நபி (ஸல்) தங்களது ஆடைகளைக் கழுவி சுத்தம் செய்து கொண்டதுடன் பயணத்திற்காகக் ‘கஸ்வா’ என்ற தங்களது ஒட்டகத்தையும் தயார் செய்து கொண்டார்கள். மதீனாவில் இப்னு உம்மு மக்தூம் அல்லது நுமைலா லைஸி (ரழி) என்பவரைப் பிரதிநிதியாக நியமித்தார்கள். ஹிஜ்ரி 6, துல்கஅதா மாதத்தின் தொடக்கத்தில் திங்கட்கிழமை நபி (ஸல்) மதீனாவிலிருந்து புறப்பட்டார்கள். நபியவர்களுடன் அவர்களின் மனைவி உம்மு ஸலமாவும் 1400 அல்லது 1500 தோழர்களும் புறப்பட்டனர். ஒரு பயணிக்கு அவசியமான ஆயுதத்தைத் தவிர வேறு எந்த ஆயுதங்களையும் நபியவர்கள் தங்களுடன் எடுத்துக் கொள்ளவில்லை. மேலும், எடுத்துக் கொண்ட ஆயுதங்களையும் வெளியில் தெரியாமல் அவைகளின் உறைக்குள் மறைத்து வைத்திருந்தார்கள்.

Offline Yousuf

மக்காவை நோக்கி

நபி (ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் மக்காவை நோக்கிப் புறப்பட்டார்கள். வழியில் ‘துல் ஹுலைஃபா’ என்ற இடத்தில் தாங்கள் அழைத்து வந்த குர்பானி பிராணிகளுக்கு மாலையிட்டு அடையாளமிட்டார்கள். தாங்களும் உம்ராவிற்காக ஆடை அணிந்து கொண்டார்கள். எவரும் தங்களிடம் போர் செய்யக் கூடாது தானும் போருக்காகப் புறப்படவில்லை என்பதை மக்களுக்கு அறிவித்து அவர்களை அச்சமற்றவர்களாக ஆக்கினார்கள்.

மக்கா குறைஷிகளின் நிலையை அறிந்து, தன்னிடம் தெரிவிப்பதற்காக குஜாஆ கிளையைச் சேர்ந்த ஒற்றர் ஒருவரை நபி (ஸல்) நியமித்து, தனக்கு முன் அவரை அனுப்பி வைத்தார்கள். நபி (ஸல்) ‘உஸ்ஃபான்’ என்ற இடத்தில் இருக்கும் போது அங்கு நபியவர்களின் ஒற்றர் வந்து “கஅப் இப்னு லுவை என்பவன் உங்களை எதிர்ப்பதற்காகவும், அல்லாஹ்வின் இல்லத்தை விட்டும் உங்களைத் தடுப்பதற்காகவும் கினானா குடும்பத்தைச் சேர்ந்த வீரர்களை ஒன்று சேர்த்து வைத்திருக்கிறான்” என்ற அதிர்ச்சி தரும் தகவலைக் கூறினார். அதைக் கேட்ட நபியவர்கள் தங்களது தோழர்களிடம் ஆலோசனை செய்தார்கள்.

“ஒன்று, நம்மை எதிர்ப்பதற்கும் தடுப்பதற்கும் குறைஷிகளுக்கு உதவியாக இருக்கும் கினானாவினன் குடும்பத்தார்களை நாம் சிறை பிடிப்போம். அதனால் அவர்கள் போருக்கு வராமல் பின்வாங்கி, குடும்பத்தை இழந்த துக்கத்தில் மூழ்கலாம். அல்லது அவர்கள் தப்பித்து வேறு எங்காவது சென்றாலும் நம்மை எதிர்க்க வந்தவர்களை அல்லாஹ் முறியடித்ததாக ஆகிவிடும். இரண்டாவது, நாம் அல்லாஹ்வின் வீட்டை நோக்கிப் புறப்படுவோம். யார் நம்மை தடுக்க வருகிறார்களோ அவர்களிடத்தில் நாம் சண்டையிடுவோம்.”

“இவ்விரண்டில் உங்களது கருத்து என்ன?” என்று நபி (ஸல்) தங்களது தோழர்களிடம் கேட்டார்கள். அப்போது அபூபக்ர் (ரழி) “அல்லாஹ்வும் அவனது தூதரும் மிக அறிந்தவர்கள். நாம் உம்ரா செய்வதற்காக வந்திருக்கிறோம். எவரிடத்திலும் போர் செய்வதற்காக வரவில்லை. அல்லாஹ்வின் இல்லத்திலிருந்து எவராவது நம்மைத் தடுத்தால் நாம் அவர்களிடத்தில் சண்டையிடுவோம்” என்று கூறினார்கள். அதற்குப் பின் நபி (ஸல்) புறப்படுங்கள் என்று கட்டளையிட, முஸ்லிம்கள் மக்கா நோக்கிப் புறப்பட்டார்கள்.

தடுக்க முயற்சித்தல்


நபி (ஸல்) அவர்களின் வருகையைக் கேள்விப்பட்ட குறைஷிகள் அவசர ஆலோசனை சபையைக் கூட்டி, எப்படியாவது முஸ்லிம்களை கஅபத்துல்லாஹ்விற்கு வரவிடாமல் தடுக்க வேண்டும் என்று முடிவெடுத்தனர். கினானா கிளையினரை புறக்கணித்து விட்டு நபியவர்கள் மக்காவை நோக்கி வந்து கொண்டிருந்த போது, கஅப் கிளையைச் சேர்ந்த ஒருவர் “குறைஷிகள் ‘தூ துவா’ என்ற இடத்தில் வந்து தங்கியிருக்கின்றனர். மேலும், காலித் இப்னு வலீத் 200 குதிரை வீரர்களுடன் ‘குராவு கமீம்’ என்ற இடத்தில் மக்காவை நோக்கி செல்லும் முக்கிய வழியில் போர் புரிவதற்காகத் தயாராக இருக்கிறார்” என்று அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்கள் எதையும் பொருட்படுத்தாமல் தங்களது பயணத்தைத் தொடர்ந்தார்கள். முஸ்லிம்களைத் தடுக்க வேண்டுமென்று காலித் பெரும் முயற்சி செய்தார். தனது குதிரைப் படையை முஸ்லிம்கள் பார்க்கும் தூரத்தில் கொண்டு வந்து நிறுத்தினார். அப்போது முஸ்லிம்கள் ளுஹர் தொழுகையைத் தொழுதார்கள். இதைப் பார்த்துக் கொண்டிருந்த காலித், “தொழுகையில் ருகூவு ஸுஜூதில் இருக்கும்போது நம்மை இவர்கள் கவனிக்கவில்லை அந்த நேரத்தில் நாம் தாக்கியிருந்தால் இவர்களுக்கு பெரும் சேதத்தை விளைவித்திருக்கலாம். எனவே, இவர்கள் அஸர் தொழும் போது இவர்கள் மீது தாக்குதல் நடத்தலாம் என்றெண்ணி காத்திருந்தார். ஆனால், அஸ்ர் தொழுகைக்கு முன் ‘ஸலாத்துல் கவ்ஃப்’ அச்சமுள்ள நேரத்தில் எவ்வாறு தொழ வேண்டும் என்ற சட்டத்தை அல்லாஹ் இறக்கி விட்டான். முஸ்லிம்கள் அந்த அடிப்படையில் தொழுது கொள்ளவே காலிதின் நோக்கம் நிறைவேறாமல் போனது.

மாற்று நடவடிக்கை

தங்களுடைய வழியில் காலித் படையுடன் நிற்பதைப் பார்த்த நபி (ஸல்) அவர்கள் தன்யீம் வழியாக மக்கா செல்லும் முக்கிய நேரான பாதையை விட்டுவிட்டு வேறு வழியைத் தேர்ந்தெடுத்தார்கள். மலைகளுக்கிடையில் கற்களும், பாறைகளும் நிறைந்த கரடு முரடான பாதை வழியே, அதாவது வலப்பக்கம் ‘ஹம்ஸ்’ என்ற ஊரின் புறவழியான ‘ஸனிய்யத்துல் முரார்’ வழியாக ஹுதைபிய்யா செல்லும் வழியில் பயணத்தைத் தொடங்கினார்கள். இவ்வழி கீழ்ப்புறமாக மக்கா செல்லும் வழியாகும். தான் நின்று கொண்டிருந்த வழியை புறக்கணித்து விட்டு இஸ்லாமியப் படை வேறு வழியில் செல்கிறார்கள் என்று தெரிந்தவுடன், தூரத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்த காலித் குறைஷிகளை எச்சரிப்பதற்காக மக்காவிற்கு விரைந்தார்.

நபி (ஸல்) அவர்கள் தங்களது பயணத்தைத் தொடர்ந்து ‘ஸனிய்யத்துல் முரார்’ என்ற இடத்தை அடைந்தவுடன் அவர்களது வாகனம் அங்கு மண்டியிட்டு உட்கார்ந்து விட்டது. மக்கள் அதை மிரட்டியும் அது எழுந்திருக்காமல் பிடிவாதம் பிடித்தது. அப்போது நபி (ஸல்) “எனது ஒட்டகம் ‘கஸ்வா’ முரண்டு பிடிப்பதில்லை! அது அத்தகைய குணமுடையதுமல்ல! என்றாலும் யானைப் படைகளைத் தடுத்த அல்லாஹ் இதையும் தடுத்து விட்டான் எனது உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! அல்லாஹ் மேன்மைபடுத்தியவற்றைக் கண்ணியப்படுத்தும் வகையில் எந்த ஒரு திட்டத்தை குறைஷிகள் என்னிடம் கேட்டாலும் நான் அவர்களுக்கு அத்திட்டத்தை நிறைவேற்றிக் கொடுப்பேன்” என்று கூறிவிட்டு தனது ஒட்டகத்தை அதட்டவே அது குதித்தெழுந்தது. நபியவர்கள் தனது பாதையைத் திருப்பி ஹுதைபிய்யாவின் இறுதியிலுள்ள ‘ஸமது’ என்ற கிணற்றுக்கு அருகில் தங்கினார்கள். அங்கு மக்களின் தேவையை விட குறைவாகவே தண்ணீர் இருந்தது. ஆனால், மக்கள் அங்கு வந்து இறங்கியவுடனேயே தண்ணீரை எல்லாம் இறைத்து காலி செய்து விட்டார்கள். தங்களின் தாகத்தை நபியவர்களிடம் முறையிட்டனர். நபியவர்கள் தங்களது அம்பு கூட்டிலிருந்து ஓர் அம்பை எடுத்து அந்தக் கிணற்றில் வைக்கும்படி கூறினார்கள். அவ்வாறே வைக்கப்பட்டவுடன் மக்களின் தாகம் தீரும் அளவுக்கு அந்தக் கிணற்றில் தண்ணீர் ஊறிக் கொண்டிருந்தது.

Offline Yousuf

நடுவர் வருகிறார்

நபியவர்கள் அங்கு தங்கி சற்று ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் போது குஜாஆ கிளையைச் சேர்ந்த சிலருடன் ‘புதைல் இப்னு வர்கா அல் குஜாயீ’ என்ற முக்கியப் பிரமுகர் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்தார். திஹாமா மாநிலத்தைச் சேர்ந்த மக்களில் குஜாஆ கிளையினர்தான் நபி (ஸல்) அவர்களின் இரகசியத்திற்கு உரித்தான மக்களாகவும், நன்மையை நாடுபவர்களாகவும் இருந்தனர். “கஅப் இப்னு லுவை ஹுதைபிய்யாவின் கிணறுகள் உள்ள ஓர் இடத்தில் வாலிப ஒட்டகங்களுடன் தங்கியிருக்கிறார். அவரும் அவரைச் சார்ந்தவர்களும் உங்களுடன் போர் புரிய வேண்டும் நீங்கள் கஅபாவிற்குச் செல்வதைத் தடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வந்திருக்கின்றனர். நான் அவர்களை அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு உங்களிடம் வந்திருக்கிறேன்” என்று புதைல் கூறினார்.

நபியவர்கள் அவரிடம்: “நாங்கள் எவரிடமும் சண்டை செய்வதற்காக இங்கு வரவில்லை. நாங்கள் உம்ரா செய்வதற்காகத்தான் வந்திருக்கிறோம். நிச்சயமாகக் குறைஷிகளுக்குப் போரின் காரணமாக கடுமையான சேதமும் நஷ்டமும் ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் விரும்பினால் ஒரு குறிப்பிட்ட காலம் வரை நான் அவர்களுக்குப் போர் நிறுத்த உடன்படிக்கை செய்து தருவேன். அவர்கள் எனக்கும் மற்ற மக்களுக்குமிடையில் குறுக்கிடக் கூடாது. (அதாவது, நான் மக்களுக்கு இஸ்லாமை எடுத்துக் கூறுவதற்கு அவர்கள் தடையாக இருக்கக் கூடாது). விரும்பினால் மற்ற மக்களைப் போல அவர்களும் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளலாம். இல்லையெனில் சிறிது காலம் அவகாசம் எடுத்துக் கொள்ளலாம். இவற்றை ஏற்றுக் கொள்ளாமல், ‘போர்தான் புரிவோம்!’ என்று பிடிவாதம் பிடித்தால், எனது உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக! இம்மார்க்கத்திற்காக எனது கழுத்து துண்டாகும் வரை அல்லது அல்லாஹ் இம்மார்க்கத்தை நிலை நிறுத்தும் வரை நான் அவர்களிடம் போர் புவேன்” என்று கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்களின் இப்பதிலைக் கேட்ட புதைல் “நீங்கள் கூறியதை நான் குறைஷிகள் முன் வைக்கிறேன்” என்று கூறி குறைஷிகளை சந்தித்தார். “குறைஷிகளே! நான் அந்த மனிதரிடம் இருந்து உங்களிடம் வந்திருக்கிறேன். அவர் கூறும் விஷயத்தையும் கேட்டு வந்திருக்கிறேன். நீங்கள் விரும்பினால் நான் அதை உங்களுக்கு மத்தியில் சமர்ப்பிக்கிறேன்” என்றார். ஆனால், அவர்களில் சில அறிவீனர்கள், “அவர் சார்பாக நீ எங்களுக்கு எதையும் சொல்ல வேண்டாம். அது எங்களுக்குத் தேவையுமில்லை” என்று பேசினார்கள். ஆனால், சில அறிவாளிகள் “நீர் கேட்டு வந்ததை எங்களிடம் சொல்” என்றனர். நபியவர்களிடம் கேட்டு வந்ததை அவர் கூறவே, குறைஷிகள் ‘மிக்ரஸ் இப்னு ஹப்ஸ்’ என்பவனை நபியவர்களிடம் பேசிவர அனுப்பினர். அவன் வருவதைப் பார்த்த நபியவர்கள், “அவன் ஒரு மோசடிக்காரன்” என்று கூறினார்கள். அவன் நபியவர்களிடம் பேசிய போது புதைலுக்குக் கூறிய விஷயத்தையே அவனிடமும் கூறினார்கள். அவன் குறைஷிகளிடம் திரும்பி, தான் கேட்டு வந்த செய்தியைக் கூறினான்.

குறைஷிகளின் தூதர்கள்

கினானா கிளையைச் சேர்ந்த ஹுளைஸ் இப்னு அல்கமா என்பவர் “நான் அவரைச் சந்தித்து வருகிறேன். அதற்கு அனுமதி தாருங்கள்” என்று குறைஷிகளிடம் கூறினார். அவர்கள் அனுமதி தரவே அவர் புறப்பட்டு நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். அவரைப் பார்த்து நபியவர்கள் “இவர் இன்னவர், இவர் அல்லாஹ்வுக்காக நேர்ச்சை செய்யப்பட்ட மற்றும் ஹஜ், உம்ராவுக்காக அழைத்து வரப்பட்ட கால்நடைகளைக் கண்ணியப்படுத்தும் கூட்டத்தைச் சேர்ந்தவர். அவருக்கு முன் குர்பானி பிராணிகளை நிறுத்துங்கள்” என்று நபி (ஸல்) கூறினார்கள். உடனே முஸ்லிம்கள் குர்பானி பிராணிகளை வரிசையாக நிறுத்தி தல்பியா” கூறியவர்களாக அவரை வரவேற்றனர். இதைப் பார்த்த அவர் “சுப்ஹானல்லாஹ்! இவர்களை அல்லாஹ்வின் வீட்டிலிருந்து தடுப்பது முறையல்ல” என்று கூறிவிட்டு தனது தோழர்களிடம் திரும்பி “நான் மாலையிடப்பட்டு அடையாள மிடப்பட்ட குர்பானிக்கான ஒட்டகங்களைப் பார்த்தேன். அவர்களைத் தடுப்பது எனக்கு சரியான தாகத் தெரியவில்லை” என்று கூறினார். இதற்குப் பின் அவருக்கும் குறைஷிகளுக்குமிடையில் சில வாக்குவாதங்கள் ஏற்பட்டன.

அங்கு வீற்றிருக்த உர்வா இப்னு மஸ்வூத் ஸகஃபி என்பவர், “இவர் உங்களுக்கு நல்ல கருத்தைக் கூறினார். அதை ஏற்றுக் கொள்ளுங்கள். எனக்கு அனுமதி தாருங்கள். நானும் அவரிடம் சென்று பேசி வருகிறேன்” என்று கூறி, அங்கிருந்து புறப்பட்டு நபி (ஸல்) அவர்களிடம் சென்று பேசினார். அப்போது நபி (ஸல்) புதைலுக்கு கூறியதையே அவருக்கும் கூறினார்கள். அப்போது “முஹம்மதே! போர்தொடுத்து உனது இனத்தாரை வேரோடு அழிக்க வேண்டுமென்று நீ விரும்புகின்றாயா? உனது குடும்பத்தாருடன் போர் புரிவது நல்ல பழக்கமாகுமா? அரபிகளில் எவராவது தனது இனத்தாரை உனக்கு முன்பு வேரோடு வெட்டிச் சாய்த்தார் என்று நீ கேள்விப்பட்டதுண்டா? நீ விரும்பியபடி உனக்கு போரில் வெற்றி கிடைக்காமல் அதற்கு மாற்றமாக நீ தோல்வியடைந்தால், உன்னுடன் இருக்கும் இந்த வீணர்களான அற்பர்கள் உன்னை விட்டுவிட்டு ஓடி விடுவார்கள் என்றுதான் நான் எண்ணுகிறேன்” என்று உர்வா கூறினார்.

உர்வாவின் பேச்சு அபூபக்ர் (ரழி) அவர்களுக்குச் சினமூட்டியது. “நீ லாத்தின் மர்மஸ்தானத்தைச் சப்பு! நாங்களா இவரை விட்டுவிட்டு ஓடி விடுவோம்?” என்று கர்ஜித்தார்கள். அதற்கு உர்வா “இவர் யார்?” என்றார். “அபூபக்ர்” என கூடியிருந்தோர் கூறினர். அதற்கு உர்வா “எனது உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! நீ எனக்கு ஓர் உதவி செய்திருக்கிறாய். நான் அதற்கு எந்தப் பகரமும் செய்யவில்லை. அப்படி மட்டும் இல்லையென்றால் நான் உனக்கு நல்ல பதில் கூறியிருப்பேன்” என்றார். மேலும், நபியவர்களிடம் உர்வா பேசும் போது ஒவ்வொரு பேச்சுக்கும் நபியவர்களின் தாடியைப் பிடித்துப் பிடித்து பேசினார். நபி (ஸல்) அவர்களின் அருகில் முகீரா இப்னு ஷுஃபா (ரழி) நின்றிருந்தார்கள். அவரது கையில் உறையிடப்பட்ட வாள் ஒன்று இருந்தது. நபியவர்களின் தாடியை உர்வா பிடிக்கும் போதெல்லாம் அந்த உறையிடப்பட்ட வாளைக் கொண்டு உர்வாவின் கையில் அடித்து “நபியவர்களின் தாடியை விட்டு உனது கையை அகற்றிக் கொள்” என்று கூறினார்.

உர்வா தனது தலையை உயர்த்தி “இவர் யார்” என்றார். மக்கள் “முகீரா இப்னு ஷுஃபா” என்றனர். “ஓ வாக்குத் தவறியவனே! நீ செய்த மோசடிக் குற்றத்திற்கு நான்தானே பரிகாரம் செய்தேன்” என்று முகீராவை உர்வா பழித்தார். இவ்வாறு உர்வா கூறக் காரணம்: முகீரா இஸ்லாமை ஏற்பதற்கு முன் ஒரு கூட்டத்தினருடன் நட்பு வைத்திருந்தார். சமயம் பார்த்து அவர்களைக் கொன்று பொருட்களைக் கொள்ளையடித்து விட்டார். அதற்கு சிறிது காலத்திற்குப் பின்பு நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து இஸ்லாமை ஏற்றுக் கொண்டார். நபியவர்கள் “நீர் முஸ்லிமாவதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், நீ கொள்ளை அடித்த பொருட்களுக்கு நான் பொறுப்பல்ல” என்று கூறிவிட்டார்கள். இக்குற்றத்திற்குரிய பரிகாரத்தை உர்வாதான் நிறைவேற்றினார் ஏனெனில் முகீராவுடைய தந்தை, உர்வாவின் சகோதரராவார்.

பேச்சுவார்த்தைகளுக்கு இடையில் நபித்தோழர்களையும் அவர்கள் நபியவர்களுக்குச் செய்யும் கண்ணியத்தையும் நன்கு கவனித்து உர்வா பிரமிப்படைந்தார். அங்கிருந்து தனது நண்பர்களிடம் வந்த பின் இது குறித்து அவர் தனது இனத்தவர்களிடம் விமர்சித்தார். “எனது கூட்டத்தினரே! நான் பல அரசர்களிடம் சென்றிருக்கின்றேன். கைஸர், கிஸ்ரா, நஜ்ஜாஷி என பல மன்னர்களை பார்த்திருக்கின்றேன். ஆனால், முஹம்மதின் தோழர்கள் முஹம்மதைக் கண்ணியப்படுத்துவது போன்று எந்த ஓர் அரசனின் தோழர்களும் தங்கள் அரசரைக் கண்ணியப் படுத்துவதை நான் பார்த்ததில்லை. அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர் ஏதாவது ஒரு கட்டளையிட்டால் அதை உடனடியாக அவர்கள் செய்கிறார்கள். அவர் ‘உழு’ செய்யும் தண்ணீரைப் பிடிப்பதற்குக் கூட போட்டியிட்டுக் கொள்கின்றனர். அவர் பேசினால் அனைவரும் அமைதியாகி விடுகின்றனர். அவர் மீதுள்ள கண்ணியத்தால் அவரை அவர்கள் நேருக்கு நேர் கூர்ந்து பார்ப்பதில்லை. ஆக, நான் உங்களுக்கு முன் நேரான ஒரு திட்டத்தை சமர்ப்பித்து விட்டேன். அதை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று கூறி உர்வா தனது பேச்சை முடித்தார்.

Offline Yousuf

அல்லாஹ்வின் ஏற்பாடு

போர் வெறிபிடித்த குறைஷி வாலிபர்கள் தங்களின் தலைவர்கள் சமாதான உடன்படிக்கையில் ஆர்வமாக இருப்பதை விரும்பவில்லை. உடனே, அதைத் தடுக்க வேண்டுமென ஆலோசித்தனர். அதன்படி இரவில் முஸ்லிம்களின் கூடாரத்திற்குள் புகுந்து போரைத் தூண்டும் சதி செயல்களைச் செய்ய முடிவெடுத்தனர். இம்முடிவை நிறைவேற்றுவதற்கு எழுபது அல்லது எண்பது நபர்கள் புறப்பட்டு ‘தன்யீம்’ மலை வழியாக முஸ்லிம்களின் கூடாரத்தை நோக்கி முன்னேறினர். ஆனால், நபியவர்கள் நியமித்த பாதுகாப்புப் படையின் தளபதியான முஹம்மது இப்னு மஸ்லமா, வந்த எதிரிகள் அனைவரையும் சுற்றி வளைத்து கைது செய்தார். எனினும், நபி (ஸல்) அவர்கள் சமாதானத்தில் ஆர்வம் கொண்டு அனைவரையும் மன்னித்து விடுதலை செய்து விட்டார்கள். இது குறித்து பின்வரும் வசனத்தை அல்லாஹ் இறக்கினான்:

மக்காவின் சமீபமாக அவர்கள் மீது உங்களுக்கு வெற்றியைக் கொடுத்ததன் பின்னர், அவர்களுடைய கைகளை உங்களை விட்டும், உங்களுடைய கைகளையும் அவர்களை விட்டும் அவனே தடுத்தான். அல்லாஹ் நீங்கள் செய்பவைகளை உற்று நோக்கியவனாகவே இருக்கின்றான். (அல்குர்ஆன் 48:24)

குறைஷிகளை சந்திக்க முஸ்லிம் தூதர்...

இந்நேரத்தில் நபி (ஸல்) தனது நிலையையும், தனது நோக்கத்தையும் உறுதியாகத் தெளிவுபடுத்திக் கூறவும், குறைஷிகளிடம் ஒரு தூதரை அனுப்ப விரும்பியும் உமரை அழைத்தார்கள். ஆனால், “அல்லாஹ்வின் தூதரே! எனக்கு துன்பம் ஏற்பட்டால் எனக்காக கோபப்படும் அதீ இப்னு கஅப் கிளையைச் சேர்ந்த எவரும் அங்கில்லை. எனவே, உஸ்மான் இப்னு அஃப்ஃபானை அனுப்புங்கள். நீங்கள் விரும்பும் விஷயத்தை அவர் சரியான முறையில் குறைஷிகளிடம் எடுத்து வைப்பார்” என்றார் உமர் (ரழி). நபியவர்கள் உஸ்மானை அழைத்து “நீர் குறைஷிகளிடம் சென்று, நாம் போருக்காக வரவில்லை உம்ராவிற்காகத்தான் வந்திருக்கிறோம் என்று எடுத்துச் சொல்லுங்கள்! பிறகு அவர்களை இஸ்லாமின் பக்கம் அழையுங்கள். மேலும், மக்காவிலிருக்கும் முஸ்லிம்களை சந்தித்து வெற்றி நமக்குத்தான் என்ற நற்செய்தியைக் கூறுங்கள்! அல்லாஹ் அவனது மார்க்கத்தை மக்காவில் ஓங்கச் செய்வான். ஆகவே, யாரும் இறை நம்பிக்கையை மறைத்து வாழ வேண்டிய அவசியமேற்படாது என்றும் அவர்களுக்கு சொல்லுங்கள்!” என்றார்கள்.

உஸ்மான் (ரழி) அங்கிருந்து புறப்பட்டு ‘பல்தஹ்’ என்ற இடத்தை அடைந்த போது, அங்கிருந்த குறைஷிகள் “உஸ்மானே! நீர் எங்கு செல்கின்றீர்!” என்றனர். அதற்கு உஸ்மான் (ரழி) சில விஷயங்களைக் கூறி அதை சொல்வதற்காகத்தான் நபியவர்கள் என்னை அனுப்பினார்கள் என்றார். அதற்கு குறைஷிகள், “நீர் கூறியதை நாங்கள் கேட்டு விட்டோம். நீர் உமது நோக்கத்தை நிறைவேற்ற செல்லலாம்” என்றனர். அவையில் இருந்த அபான் இப்னு ஸயீத் இப்னு அல்ஆஸ் என்பவர் எழுந்து உஸ்மான் (ரழி) அவர்களை வரவேற்றார். மேலும், தனது குதிரைக்குக் கடிவாளமிட்டு, அதில் தனக்குப் பின்னால் உஸ்மானை அமரச் செய்து, அவருக்கு அடைக்கலமும் கொடுத்து மக்காவிற்குள் அழைத்து வந்தார். மக்கா வந்தவுடன் நபி (ஸல்) கூறி அனுப்பிய செய்தியைக் குறைஷித் தலைவர்களிடம் உஸ்மான் (ரழி) விவரித்தார். உஸ்மான் பேசி முடித்தவுடன் குறைஷிகள் “நீங்கள் கஅபாவை வலம் வந்து கொள்ளுங்கள்” என்றனர். ஆனால், “நபி (ஸல்) கஅபாவை வலம் வரும் வரை நான் வரமாட்டேன்” என்று உஸ்மான் மறுத்துவிட்டார்.

கொலை செய்தி பரவுதல், உடன்படிக்கை வாங்குதல்

உஸ்மானைக் குறைஷிகள் மக்காவில் தடுத்து வைத்துக் கொண்டனர். இச்சூழ்நிலையில் என்ன செய்யலாம் என்று ஆலோசித்து ஒரு தீர்க்கமான முடிவெடுத்த பின் உஸ்மானை அனுப்பலாம் என்ற எண்ணத்தில் குறைஷிகள் தடுத்து வைத்திருக்கலாம். ஆனால், உஸ்மான் (ரழி) கொலை செய்யப்பட்டு விட்டார் என்று மக்காவிற்கு வெளியில் செய்தி பரவியது. அவ்வாறே முஸ்லிம்களுக்கு மத்தியிலும் பரவியது. இந்தச் செய்தி கிடைத்தவுடன் “குறைஷிகளிடம் போர் புரியாமல் நாம் இவ்விடத்தை விட்டு நகரமாட்டோம்” என்று நபியவர்கள் கூறினார்கள். மேலும், தங்களது தோழர்களைப் போருக்காக உடன்படிக்கை செய்து தர அழைத்தார்கள். உத்தமத் தோழர்கள் உயிர் கொடுக்கவும் காத்திருந்தனர். “போரிலிருந்து பின்வாங்க மாட்டோம்” என்று மிக உற்சாகத்துடன் உடன்படிக்கை செய்யலானார்கள். தோழர்களின் ஒரு கூட்டம் “மரணம் வரை போர் புரிவோம்” என்று நபியவர்களிடம் ஒப்பந்தம் செய்தனர்.

அஸத் குடும்பத்தைச் சேர்ந்த அபூஸினான் என்பவர்தான் நபி (ஸல்) அவர்களிடம் முதன் முதலில் உடன்படிக்கை செய்தார். “மரணிக்கும் வரை போர் புவேன்” என்று மூன்று முறை ஸலமா இப்னு அக்வா ஒப்பந்தம் செய்தார். அதாவது, மக்கள் ஒப்பந்தம் செய்ய ஆரம்பித்த போதும், பின்பு நடுவிலும், பின்பு இறுதியிலும் ஒப்பந்தம் செய்தார். அந்த அளவு அறப்போர் புரியவும், அதில் உயிர் நீக்கவும் பேராவல் கொண்டிருந்தார்.

நபி (ஸல்) அவர்கள் தங்களின் ஒரு கையால் மற்றொரு கையைப் பிடித்துக் காட்டி “இந்த கை உஸ்மான் சார்பாக” என்றார்கள். அதாவது, உஸ்மான் உயிருடன் இருந்தால் அவரும் இதில் கலந்து கொள்வார் என்பதை அறிவிக்கும் விதமாக நபியவர்கள் இவ்வாறு செய்தார்கள்.

நிலைமை இவ்வாறிருக்க, முஸ்லிம்கள் தங்கள் மீது பயங்கரமான முறையில் போர் தொடுக்க ஆயத்தமாகி விட்டனர் என்ற செய்தி குறைஷிகளுக்குத் தெரிய வரவே, இனியும் உஸ்மானை தடுத்து வைத்திருப்பது உசிதமல்ல தாமதப்படுத்தாமல் உடனடியாக அவரை முஸ்லிம்களிடம் அனுப்பிட வேண்டும் நமது முடிவைப் பிறகு தூதுவர் மூலம் சொல்லி அனுப்பிக் கொள்ளலாம் என்று ஆலோசனை செய்து உஸ்மானை அனுப்பி விட்டனர். உடன்படிக்கை செய்யும் நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிந்தது. உஸ்மானும் எவ்வித ஆபத்துமின்றி அங்கு வந்து சேர்ந்தார். உஸ்மான் அவர்களும் நபி (ஸல்) அவர்களிடம் ஒப்பந்தம் செய்து கொடுத்தார்கள். ஜத்துப்னு கைஸ் என்ற நயவஞ்சகனைத் தவிர வேறு எவரும் இவ்வுடன்படிக்கையிலிருந்து பின்வாங்கவில்லை.

நபியவர்கள் ஒரு மரத்திற்குக் கீழ் இவ்வுடன்படிக்கையை வாங்கினார்கள். அப்போது உமர் (ரழி) நபியின் கையைத் தாங்கிப் பிடித்திருந்தார்கள். மஅகில் இப்னு யஸார் மரத்தின் ஒரு கிளையைச் சாய்த்து நபியவர்களுக்கு நிழல் தருமாறு பிடித்திருந்தார்கள். இவ்வுடன்படிக்கையைத் தான் ‘பைஅத்துர் ழ்வான்’ (அங்கீகரிக்கப்பட்ட இறை பொருத்தத்திற்குரிய உடன்படிக்கை) என்று இஸ்லாமிய வரலாற்றில் கூறப்படுகிறது. இது குறித்தே அல்லாஹ் இந்த வசனத்தை இறக்கினான்.


அந்த மரத்தினடியில் உங்களிடம் கைகொடுத்து உடன்படிக்கை செய்த நம்பிக்கை யாளர்களைப் பற்றி நிச்சயமாக அல்லாஹ் திருப்தியடைந்தான். அவர்களின் உள்ளங்களிலிருந்த (உண்மையான தியாகத்)தை நன்கறிந்து, சாந்தியையும், ஆறுதலையும் அவர்கள் மீது சொரிந்தான். உடனடியான ஒரு வெற்றியையும் (கைபர் என்னும் இடத்தில்) அவர்களுக்கு வெகுமதியாகக் கொடுத்தான். (அல்குர்ஆன் 48:18)

Offline Yousuf

சமாதான ஒப்பந்தம்

நிலைமை மோசமாவதை அறிந்து கொண்ட குறைஷிகள், சமாதான ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்வதற்காக சுஹைல் இப்னு அம்ர் என்பவரை நபி (ஸல்) அவர்களிடம் அனுப்பி வைத்தனர். மேலும், அந்த ஒப்பந்தத்தில் கீழ்காணும் முக்கிய அம்சத்தை இடம்பெறச் செய்தனர். அதாவது, உம்ரா செய்ய மக்காவிற்குள் வராhமல் முஸ்லிம்கள் கண்டிப்பாக திரும்பிவிட வேண்டும். காரணம், முஹம்மது மக்காவுக்குள் எங்களை பலவந்தப்படுத்தி நுழைந்து விட்டார் என்று அரபிகள் நாளை ஏளனமாகப் பேசிவிடக் கூடாது.

குறைஷிகளின் இறுதி தூதராக சுஹைல், நபி (ஸல்) அவர்களைச் சந்தித்தார். சுஹைலைப் பார்த்ததும் நபியவர்கள் (சுஹைல் என்பதின் பொருள் இலகுவானது. ஆகவே) “உங்களது காரியம் உங்களுக்கு இலகுவாகி விட்டது. குறைஷிகள் இவரை அனுப்பியதிலிருந்து அவர்கள் சமாதானத்தை நாடிவிட்டனர் என தெரிந்து கொள்ளலாம்” என்று முஸ்லிம்களிடம் கூறினார்கள். நபி (ஸல்) அவர்களிடம் சுஹைல் நீண்ட நேரம் பேசினார். பின்பு இருவரும் சமாதானத்திற்கான அம்சங்களை முடிவு செய்தனர்.

அந்த அம்சங்களாவன:

1) நபியவர்கள் இந்த ஆண்டு திரும்பிச் செல்ல வேண்டும். மக்காவிற்குள் நுழையக் கூடாது. அடுத்த வருடம் முஸ்லிம்கள் உம்ராவிற்கு வந்து மக்காவில் மூன்று நாட்கள் தங்கிக் கொள்ளலாம். சாதாரணமாக ஒரு பயணி தன்னுடன் வைத்திருக்கும் ஆயுதங்களை எடுத்து வரலாம். ஆனால், அவற்றை உறைக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். முஸ்லிம்களுக்கு எவ்வகையிலும் எந்தவித தொந்தரவும் கொடுக்கப்பட மாட்டாது.

2) பத்து ஆண்டுகளுக்கு இரு தரப்பிலும் போர் நடவடிக்கை எதுவும் எடுக்கக் கூடாது. அக்காலங்களில் அனைவரும் அச்சமற்று இருப்பார்கள். யாரும் எவருக்கும் எவ்வித தீங்கும் செய்யக் கூடாது.

3) யாரொருவர் முஹம்மதுடைய ஒப்பந்தத்திலும் உடன்படிக்கையிலும் சேர்ந்து கொள்ள விரும்புகிறாரோ அவர் அதில் சேர்ந்து கொள்ளலாம். குறைஷிகளின் ஒப்பந்தத்திலும் உடன் படிக்கையிலும் சேர்ந்து கொள்ள விரும்புகிறவர் அதில் சேர்ந்து கொள்ளலாம். எந்த ஒரு கிளையினரும் இந்த இரு வகுப்பால் ஒருவருடன் சேர்ந்து கொள்கிறாரோ அவர் அந்த வகுப்பாரையே சேர்ந்தவராவார். அதற்குப் பின் அந்தக் கிளையினருடன் யாராவது அத்துமீறி நடந்து கொண்டால் அது அந்த வகுப்பினர் அனைவர் மீதும் அத்துமீறியதாகும்.

4) குறைஷிகளில் யாராவது தனது பாதுகாவலரான நெருங்கிய உறவினன் அனுமதியின்றி, தப்பித்து முஹம்மதிடம் வந்து சேர்ந்தால் முஹம்மது அவரை குறைஷிகளிடம் திருப்பி அனுப்பி விடவேண்டும். ஆனால், முஹம்மதிடம் உள்ளவர்களில் யாராவது தப்பித்து குறைஷிகளிடம் வந்துவிட்டால் அவரை முஹம்மதிடம் திருப்பி அனுப்பப்பட மாட்டாது.

இவற்றை எழுதுவதற்காக நபியவர்கள் அலீயை அழைத்து வாசகங்களைக் கூற அலீ (ரழி) எழுத ஆரம்பித்தார்கள். முதலாவதாக “பிஸ்மில்லார்ரஹ்மானிர்ரஹீம் -அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்-” என்று கூறினார்கள். அதைக் கேட்ட சுஹைல் “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! ரஹ்மான் என்றால் யார்? என்று எங்களுக்குத் தெரியாது. எனவே, பிஸ்மிக்கல்லாஹும்ம -அல்லாஹ்வே உனது பெயரால்-” என்று எழுதும்படி கூறினார். அதை ஏற்று நபியவர்கள் அலீயிடம் அவ்வாறே எழுதச் சொன்னார்கள். பின்பு “இது அல்லாஹ்வின் தூதர் முஹம்மது செய்யும் சமாதான உடன்படிக்கையாகும்” என்று எழுதும்படி அலீயிடம் கூற அவர்களும் அவ்வாறே எழுதினார்கள். ஆனால், சுஹைல் அந்த வாசகத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. “நீர் அல்லாஹ்வின் தூதர் என்று எங்களுக்குத் தெரிந்திருந்தால் நாம் உம்மை அவனது வீட்டிலிருந்து தடுத்திருக்க மாட்டோம். உம்மிடம் போர் செய்திருக்க மாட்டோம். எனவே, முஹம்மதிப்னு அப்துல்லாஹ் என்று எழுதுங்கள்” என்று கூறினார்.

அதற்கு நபியவர்கள், “நீங்கள் என்னை பொய்யன் என்று கூறினாலும் சரியே! நான் உண்மையில் அல்லாஹ்வின் தூதர்தான் என்று கூறிவிட்டு அலீயிடம் ‘ரஸூலுல்லாஹ்’ என்ற சொல்லை அழித்துவிட்டு முஹம்மது இப்னு அப்துல்லாஹ் என்று எழுதும்படி கூறினார்கள். ஆனால், அலீ (ரழி) அவர்கள் இந்தச் சொல்லை அழிப்பதற்கு மறுத்துவிடவே நபி (ஸல்) அவர்களே தங்களது கையால் அதை அழித்தார்கள். பின்பு ஒப்பந்தப் பத்திரம் முழுமையாக எழுதி முடிக்கப்பட்டது. சமாதான உடன்படிக்கை முடிந்தவுடன் குஜாஆ கிளையினர் நபி (ஸல்) அவர்களின் ஒப்பந்தத்தில் சேர்ந்து கொண்டனர். அவர்கள் அப்துல் முத்தலிபின் காலத்திலிருந்தே ஹாஷிம் கிளையினரின் ஒப்பந்தத் தோழர்களாகவே விளங்கினர். இதை நாம் இந்நூலின் ஆரம்பத்திலும் கூறியிருக்கிறோம். பக்ர் கிளையினர் குறைஷிகளின் உடன்படிக்கையில் சேர்ந்து கொண்டனர்.

Offline Yousuf

அபூஜந்தல் மீது கொடுமை

இவ்வாறு ஒப்பந்தம் எழுதிக் கொண்டிருக்கும் போது சுஹைல் இப்னு அயின் மகன் அபூ ஜந்தல் (ரழி) மக்காவின் கீழ்புறமாக வெளியேறி கையில் விலங்குகளுடன் முஸ்லிம்களுக்கு மத்தியில் வந்து விழுந்தார். அவரைப் பார்த்த சுஹைல் “இது நான் உம்மிடம் நிறைவேற்றக் கோரும் முதல் விஷயமாகும். இவனை நீ திருப்பி அனுப்பிவிட வேண்டும்” என்று கூறினார். நபியவர்கள் “நாம் இன்னும் இப்பத்திரத்தை எழுதி முடிக்கவில்லையே” என்று கூறினார்கள். அதற்கு சுஹைல், “நீர் அப்படி செய்யவில்லை என்றால் அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் எவ்விஷயத்திலும் உம்மிடம் உடன்படிக்கை செய்து கொள்ள மாட்டேன்” என்று பிடிவாதம் பிடித்தான். அதற்கு நபியவர்கள், “இக்கோரிக்கையை நீ எனக்கு நிறைவேற்றிக் கொடு” என்று கூறினார்கள். ஆனால், அவன் “நான் ஒருக்காலும் நிறைவேற்றித் தரமாட்டேன்” என்று முரண்டு பிடித்தான். நபியவர்கள் “இல்லை நீ எனக்கு நிறைவேற்றியே ஆகவேண்டும்” என்று கூறினார்கள். ஆனால், அவன் “அது என்னால் முடியாது” என்று முற்றிலுமாக மறுத்து விட்டான். பிறகு அபூ ஜந்தலின் முகத்தில் அறைந்து அவரது கழுத்தைப் பிடித்து இணைவைப்பவர்களிடம் திரும்ப ஒப்படைக்க சுஹைல் இழுத்துச் சென்றான்.

முஸ்லிம்களை விட்டு பிரியும் போது அபூஜந்தல் மிக உரத்தக் குரலில் “முஸ்லிம்களே! நான் இணைவைப்பவர்களிடமா திரும்ப கொண்டு போகப்படுகிறேன்? எனது மார்க்கத்தில் என்னை அவர்கள் சோதிக்கின்றனரே!” என்று கதறினார். “அபூ ஜந்தலே! சகித்துக் கொள். நன்மையை நாடிக்கொள். உனக்கும் உன்னுடன் இருக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் விடுதலையையும் மகிழ்ச்சியையும் நிச்சயமாக அல்லாஹ் தருவான். நாங்கள் இக்கூட்டத்தினருடன் சமாதான உடன்படிக்கை செய்திருக்கிறோம். அதை நிறைவேற்றுவது எங்கள் மீது கடமை. அவர்களும் அல்லாஹ்வின் பெயர் கூறி இந்த உடன்படிக்கையைச் செய்திருக்கிறார்கள். எனவே, நாங்கள் மோசடி செய்ய முடியாது” என்று நபியவர்கள் கூறினார்கள்.

உமர் (ரழி) அபூ ஜந்தலுக்கு அருகில் சென்று “அபூ ஜந்தலே! இவர்கள் இணைவைப்பவர்கள்! இவர்களின் உயிர் நாயின் உயிருக்கு சமமானது” என்று கூறியவராக தனது வாளின் கைப்பிடியை அபூ ஜந்தலுக்கு அருகில் கொண்டு சென்றார்கள்.

உமர் (ரழி) கூறுகிறார்கள்: அவர் எனது வாளை எடுத்து தனது தந்தையைக் கொன்று விடுவார் என நான் ஆதரவு வைத்தேன். ஆனால், அவர் தந்தையின் மீதுள்ள பாசத்தால் கொல்லாமல் விட்டுவிட்டார். இதே நிலையில் ஒப்பந்தப் பத்திரமும் எழுதி முடிக்கப்பட்டது.

உம்ராவை முடித்துக் கொள்வது

நபி (ஸல்) அவர்கள் ஒப்பந்தப் பத்திரத்தை முடித்தவுடன் தங்களது தோழர்களிடம் எழுந்து சென்று “குர்பானி பிராணியை அறுத்து பலியிடுங்கள்” என்றார்கள். ஆனால், அவர்களில் ஒருவர் கூட அதற்கு முன் வரவில்லை. நபி (ஸல்) மூன்று முறை கூறியும் எவரும் எழுந்து செல்லவில்லை. ஆகவே, நபி (ஸல்) தனது மனைவி உம்மு ஸலமாவிடம் சென்று மக்கள் நடந்து கொண்டதைக் கூறினார்கள். உம்மு ஸலமா (ரழி) “அல்லாஹ்வின் தூதரே! மக்கள் குர்பானியை நிறைவேற்ற வேண்டும் என்று நீங்கள் ஆசைப்படுகிறீர்களா? நீங்கள் சென்று யாரிடமும் பேசாமல் உங்களது ஒட்டகத்தை அறுத்து விட்டு, தலைமுடி இறக்குபவரை அழைத்து உங்களது தலைக்கு மொட்டை அடித்துக் கொள்ளுங்கள்” என்றார்கள். நபியவர்கள் தனது மனைவி கூறியவாறே எழுந்து சென்று யாரிடமும் பேசாமல் தனது ஒட்டகத்தை அறுத்து விட்டு, தலைமுடி இறக்குபவரை அழைத்து மொட்டை அடித்துக் கொண்டார்கள்.

இதைப் பார்த்த மக்கள் எழுந்து தங்களது குர்பானி பிராணிகளை அறுத்துவிட்டு ஒருவர் மற்றவருக்கு மொட்டையிட ஆரம்பித்தார்கள். ஏழு பேர்களுக்கு ஓர் ஒட்டகம், ஏழு பேர்களுக்கு ஒரு மாடு என்பதாக அறுத்தார்கள். நபியவர்கள் அபூ ஜஹ்லுக்கு சொந்தமாக இருந்த ஓர் ஆண் ஒட்டகத்தை அறுத்தார்கள். அதன் மூக்கில் வெள்ளியினாலான ஒரு வளையம் இருந்தது. இணைவைப்பவர்களுக்குக் கோபமூட்டுவதற்காக நபி (ஸல்) இவ்வாறு செய்தார்கள். பின்பு நபி (ஸல்) அவர்கள் மொட்டையடித்துக் கொண்டவர்களுக்கு மூன்று முறை பாவமன்னிப்புடைய பிரார்த்தனை செய்தார்கள். தலை முடியை குறைத்துக் கொண்டவர்களுக்கு ஒருமுறை பிரார்த்தித்தார்கள். நோயின் காரணமாக தலைமுடியை முன்கூட்டியே சிரைத்துக் கொண்டவர்கள் அதற்குப் பரிகாரமாக நோன்பு வைத்துக் கொள்ளலாம் அல்லது தர்மம் அல்லது குர்பானி கொடுத்துக் கொள்ளலாம் என்ற சட்டம் கூறப்பட்ட இறைவசனம் இந்த பிரயாணத்தின் போது கஅப் இப்னு உஜ்ரா (ரழி) என்ற நபித்தோழன் விஷயத்தில் இறக்கப்பட்டது.

பெண்களைத் திரும்ப அனுப்ப மறுத்தல்

முஸ்லிமான சில பெண்கள் ஹிஜ்ரா செய்து முஸ்லிம்களுடன் சேர்ந்து கொண்டனர். அவர்களின் உறவினர்கள் ஹுதைபிய்யா உடன்படிக்கையின்படி அவர்களைத் தங்களிடம் திரும்ப அனுப்புமாறு கேட்டுக் கொண்டனர். “ஒப்பந்தத்தில் ஆண் என்ற சொல்லையே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. எனவே, பெண்கள் இதில் கட்டுப்படமாட்டார்கள்” என்று காரணம் காட்டி நபியவர்கள் இக்கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டார்கள். (ஸஹீஹுல் புகாரி)

இது விஷயமாகத்தான் அல்லாஹ் இந்த வசனத்தை இறக்கினான்:

நம்பிக்கையாளர்களே! (நிராகரிப்பவர்களில் உள்ள) பெண்கள் நம்பிக்கை கொண்டு (தம் கணவர்களை வெறுத்து) வெளியேறி உங்களிடம் வந்தால், அவர்களைச் சோதித்துப் பாருங்கள். அவர்களுடைய உண்மை நம்பிக்கையை அல்லாஹ்தான் நன்கறிவான். எனினும், (நீங்கள் சோதித்ததில்) அவர்கள் நம்பிக்கையாளர்கள்தாம் என்று உங்களுக்குத் தெரிந்தால், அந்தப் பெண்களை (அவர்களின் கணவர்களாகிய) நிராகரிப்பவர்களிடம் திரும்ப அனுப்பி விடாதீர்கள். (ஏனென்றால் முஸ்லிமான) இப்பெண்கள் அவர்களுக்கு (மனைவிகளாக இருப்பதும்) ஆகுமானதல்ல அவர்கள் இவர்களுக்கு (கணவர் களாக இருப்பதும்) ஆகுமானதல்ல. (எனினும், இப்பெண்களுக்காக அவர்கள்) செலவு செய்திருந்த பொருளை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள். நீங்கள் அந்தப் பெண்களுக்கு மஹரைக் கொடுத்து, அவர்களைத் திருமணம் செய்து கொள்வது உங்கள் மீது குற்றமாகாது. தவிர, (உங்களுடைய பெண்களில் எவரும் நம்பிக்கை கொள்ளாதிருந்தால்) நம்பிக்கை கொள்ளாத அந்தப் பெண்களின் திருமண உறவை (நீக்காமல்) நீங்கள் பிடித்துக் கொண்டிருக்க வேண்டாம். (அவர்களை நீக்கி, அவர்களுக்காக) நீங்கள் செலவு செய்ததை (அப்பெண்கள் சென்றிருக்கும் நிராகரிப்பவர்களிடம்) கேளுங்கள். (அவ்வாறே நம்பிக்கை கொண்டு உங்களிடம் வந்துவிட்ட அவர்களுடைய மனைவிகளுக்குத்) தாங்கள் செலவு செய்ததை அவர்கள் (உங்களிடம் கேட்கலாம்.) இது அல்லாஹ் வினுடைய கட்டளை. உங்களுக்கிடையில் (நீதமாகவே) தீர்ப்பளிக்கின்றான். அல்லாஹ் (அனைத்தையும்) நன்கறிந்தவனும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 60:10)

மேலும்,

நபியே! நம்பிக்கை கொண்ட பெண்கள் உம்மிடம் வந்து, “அல்லாஹ்வுக்கு எதனையும் இணைவைப்பதில்லை என்றும், திருடுவதில்லை என்றும், விபசாரம் செய்வதில்லை என்றும், தங்கள் (பெண்) சந்ததிகளைக் கொலை செய்வதில்லை என்றும், தங்களுடைய கை கால்கள் அறிய (அதாவது: பொய்யெனத் தெரிந்தே) கற்பனையாக அவதூறு கூறுவதில்லை” என்றும், உம்மிடம் (பைஅத்து கொடுத்து) வாக்குறுதி செய்தால், அவர்களுடைய வாக்குறுதியைப் பெற்றுக் கொண்டு, நீங்கள் அவர்களுக்காக (முன்னர் அவர்கள் செய்துவிட்ட குற்றங்களுக்காக) அல்லாஹ்விடத்தில் மன்னிப்பைக் கோருங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவனும் கிருபையுடையவனுமாயிருக்கின்றான். (அல்குர்ஆன் 60:12)

என்ற வசனத்தின் மூலம் ஹிஜ்ரா செய்து வந்த பெண்களை நபி (ஸல்) அவர்கள் சோதித்தார்கள். “யார் திருமறையில் கூறப்பட்ட நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டார்களோ அவர்களிடம் நான் உங்களது ஹிஜ்ராவை ஏற்றுக் கொண்டேன்” என்று கூறுவார்கள். அவர்களைத் திரும்ப அனுப்ப மாட்டார்கள்.

இந்த வசனத்தில் இறக்கப்பட்ட சட்டத்தின்படி முஸ்லிம்கள் மக்காவிலிருந்த தங்களது இணைவைக்கும் மனைவிகளை விவாகரத்து செய்தனர். அன்றைய தினத்தில் உமர் (ரழி) இணைவைக்கும் தனது இரு மனைவிகளை விவாகரத்து செய்தார்கள். அவ்விருவல் ஒருவரை முஆவியாவும் இன்னொருவரை ஸஃப்வானும் மணம் முடித்துக் கொண்டனர். (அதுவரை முஆவியாவும் ஸஃப்வானும் இஸ்லாமைத் தழுவவில்லை.)

Offline Yousuf

ஒப்பந்த அம்சங்களின் விளைவுகள்

இதுவரை ஹுதைபிய்யா சமாதான உடன்படிக்கையை நாம் பார்த்தோம். எவர் ஒருவர் இந்த அம்சங்களையும் அதன் பின்விளைவுகளையும் நன்கு ஆழமாக சிந்தித்துப் பார்ப்பாரோ அவர் இந்த உடன்படிக்கை முஸ்லிம்களுக்கு மகத்தான வெற்றிதான் என்பதை தெளிவாகப் புரிந்து கொள்வார். அதாவது, குறைஷிகள் முஸ்லிம்களின் எந்த கோரிக்கையையும் ஏற்றுக் கொள்ளாமல் அவர்களை எப்படியாவது வேரோடு அழித்து விட வேண்டுமென்பதிலேயே குறிக்கோளாக இருந்தனர். என்றாவது ஒரு நாள் அந்நோக்கம் நிறைவேறும் என்று எதிர் பார்த்திருந்தனர். முடிந்தளவு தங்களது முழு ஆற்றலையும் பயன்படுத்தி இஸ்லாமிய அழைப்புப் பணி மக்களை சென்றடையாமல் தடுத்தனர். அரபு தீபகற்பத்தில் அனைத்து அரபுகளின் உலக விஷயங்களுக்கும், மதக் காரியங்களுக்கும் தலைமைபீடமாக இருந்தனர்.

இறுதியாக, இவர்கள் சமாதான ஒப்பந்தத்திற்குப் பணிந்து வந்ததே முஸ்லிம்களின் ஆற்றலை அவர்கள் ஏற்றுக் கொண்டதற்கும், இனி முஸ்லிம்களை எதிர்க்க குறைஷிகளிடம் ஆற்றல் இல்லை என்பதற்கும் தெளிவான ஆதாரமாகிவிட்டது. ஒப்பந்தத்தின் மூன்றாவது அம்சத்தின் மூலம் குறைஷிகள் தங்களது உலக ரீதியான மற்றும் மத ரீதியான தலைமைத்துவத்தை மறந்து விட்டனர். இனி தங்களைப் பாதுகாத்துக் கொள்வதே அவர்களுக்கு பெரும் சுமையாகி விட்டது என்பதையும் நன்றாக விளங்கிக் கொள்ளலாம். ஏனைய மக்கள் மற்றும் அரபு தீபகற்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் இஸ்லாமை ஏற்றுக் கொண்டாலும் அதைப் பற்றி குறைஷிகள் இனி கவலைப்பட மாட்டார்கள். அதற்கு ஒரு முக்கியத்துவமும் கொடுக்க மாட்டார்கள். அது விஷயத்தில் எத்தகைய தலையீடும் செய்யமாட்டார்கள் என்ற அளவுக்கு நிலைமை மாறிவிட்டது. இது குறைஷிகளைக் கவனித்துப் பார்க்கும் போது மிகப்பெரிய தோல்வியும், முஸ்லிம்களைக் கவனித்துப் பார்க்கும்போது மிகப் பெரும் வெற்றியாகவும் அமைந்தது என்பதில் என்ன சந்தேகம் இருக்க முடியும்!

முஸ்லிம்களுக்கும் அவர்களின் எதிரிகளுக்குமிடையே நடந்த போர்களின் நோக்கங்களும் குறிக்கோள்களும் முஸ்லிம்களைப் பொறுத்தவரை பொருட்களைச் சூறையாடுவதோ, உயிர்களை அழிப்பதோ, மக்களைக் கொன்று குவிப்பதோ அல்லது இஸ்லாமை ஏற்றுக் கொள்ளும்படி எதிரியை நிர்ப்பந்திப்பதோ அல்ல. மாறாக, இப்போர்களின் மூலம் முஸ்லிம்களின் ஒரே குறிக்கோள் என்னவெனில், மார்க்கம் மற்றும் கொள்கை விஷயத்தில் மக்களுக்கு முழு சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்பதுதான்.

(நபியே!) உங்கள் இறைவனால் அருளப்பட்ட இ(ந்த வேதமான)து முற்றிலும் உண்மையானது. விரும்பியவர் (இதை) நம்பிக்கை கொள்ளலாம் விரும்பியவர் நிராகரித்து விடலாம். (அதனால் நமக்கொன்றும் நஷ்டமில்லை.) (அல்குர்ஆன் 18:29)

தாங்கள் நாடும் நோக்கத்திற்கும் மக்களுக்கும் மத்தியில் எந்த சக்தியும் குறுக்கிடக் கூடாது என்பதுவே ஆகும். ஆம்! முழுமையாக அந்நோக்கம் இந்த எளிமையான சமாதான ஒப்பந்தத்தின் மூலம் கிடைத்தது. ஒருவேளை மாபெரும் போர் நடந்து அதில் முஸ்லிம்களுக்கு மகத்தான வெற்றி கிடைத்தாலும் கூட இந்த நோக்கம் இந்தளவு நிறைவேறுமா என்பது சந்தேகமே. அல்லாஹ்வின் அருளால் இச்சுதந்திரத்தால் முஸ்லிம்களுக்கு அழைப்புப் பணியில் பெரும் முன்னேற்றமும் வெற்றியும் கிடைத்தது. இந்த ஒப்பந்தத்திற்கு முன் முஸ்லிம்களின் எண்ணிக்கை சுமார் மூவாயிரமாக இருந்தது. ஆனால், இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து மக்கா வெற்றி கொள்ளப்பட்ட போது, முஸ்லிம்களின் எண்ணிக்கை சுமார் பத்தாயிரமாக ஆகியது.

இந்த ஒப்பந்தத்தின் இரண்டாவது அம்சம் (பத்து ஆண்டுகளுக்குப் போரை நிறுத்திக் கொள்வது) முஸ்லிம்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியின் இரண்டாவது பகுதியாகும். அதாவது, முஸ்லிம்கள் குறைஷிகளுடன் ஒருபோதும் தாங்களாக போரைத் தொடங்கியதில்லை. மாறாக, எப்போதும் குறைஷிகள்தான் முதலில் போரைத் தொடங்கினர். அல்லாஹ் தனது திருமறையில்:

தங்களுடைய சத்திய உடன்படிக்கைகளை முறித்து (நம்முடைய) தூதரை (ஊரை விட்டு) வெளியேற்றவும் விரும்பி முயற்சித்த மக்களுடன் நீங்கள் போர் புரிய வேண்டாமா? அவர்கள்தான் (இத்தகைய விஷமத்தை) உங்களிடம் முதலில் ஆரம்பித்தனர். (அல்குர்ஆன் 9:13)

என்று குறிப்பிடுகின்றான்.

முஸ்லிம்கள் எடுத்த இராணுவ நடவடிக்கைகளின் நோக்கம் என்னவெனில், குறைஷிகள் தங்களது வம்புத்தனத்தை விட்டும், அல்லாஹ்வின் பாதையிலிருந்து மக்களைத் தடுப்பதை விட்டும் விலகிக் கொள்ள வேண்டும் அனைவருடனும் சமாதானமாக நடந்து கொள்ள வேண்டும் ஒவ்வொருவரும் தங்களது வழியில் செயல்பட அனுமதிக்க வேண்டும் ஒருவர் மற்றவர் விஷயத்தில் குறுக்கிடக் கூடாது என்பதுதான்.

பத்து ஆண்டுகள் போர் நிறுத்தம் என சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டதால் குறைஷிகளின் வம்புத்தனம், அகம்பாவம், அல்லாஹ்வின் பாதையிலிருந்து மக்களைத் தடுத்தல் ஆகிய அனைத்திற்கும் ஒரு முடிவு கட்டப்பட்டது. மேலும், போரை இதுநாள் வரை முதலாவதாக ஆரம்பித்து வந்தவர்கள் இப்போது தோற்று விட்டனர் கோழையாகி விட்டனர் வலுவிழந்து விட்டனர் பின்வாங்கி விட்டனர் என்பதற்கு ஒப்பந்தத்தின் இவ்வம்சம் தெளிவான ஆதாரமாகி விட்டது.

ஒப்பந்தத்தின் முதல் அம்சம் (வரும் ஆண்டு மக்காவிற்கு வந்து மூன்று நாட்கள் தங்கலாம், இந்த ஆண்டு திரும்பி செல்ல வேண்டும்) இந்த அம்சம் இதுநாள் வரை முஸ்லிம்களைக் குறைஷிகள் சங்கைமிக்க அல்லாஹ்வின் பள்ளியிலிருந்து தடுத்து வந்ததற்கு ஒரு முடிவாக அமைந்தது. ஆகவே, இதுவும் குறைஷிகளுக்கு ஏற்பட்ட தோல்வியே ஆகும். இந்த அம்சத்தில் குறைஷிகளுக்கு சாதகமான, ஆறுதலான எதுவும் இருக்கவில்லை. ஆம்! அந்த ஆண்டு மட்டும் முஸ்லிம்களை மக்காவிற்கு வரவிடாமல் தடுக்க முடிந்ததைத் தவிர வேறெந்த சாதகமும் அவர்களுக்கு இருக்கவில்லை.

இவ்வாறு மூன்று அம்சங்களைக் குறைஷிகள் முஸ்லிம்களுக்குச் சாதகமாகக் கொடுத்தனர். இதற்கு மாற்றமாக நான்காவது அம்சத்தில் இடம்பெற்ற, அதாவது மக்காவிலிருந்து யாராவது தப்பித்து மதீனா வந்தால் அவர்களைத் திரும்ப மக்காவிற்கு அனுப்பி விடவேண்டும். ஆனால், மதீனாவிலிருந்து யாராவது தப்பித்து மக்கா வந்தால் அவர்களைத் திருப்பி அனுப்ப மாட்டோம் என்ற ஒரே ஒரு அம்சத்தைத்தான் அவர்கள் தங்களுக்கு சாதகமாக பெற்றுக் கொண்டனர். ஆனால், இதுவும் அவர்களுக்கு உண்மையில் சாதகமானதோ, பயன் தருவதோ கிடையாது. இது ஒரு அற்பமான விஷயம். ஏனெனில், எந்த ஓர் உண்மை முஸ்லிமும் அல்லாஹ்வை விட்டோ, அவனது தூதரை விட்டோ, மதீனாவை விட்டோ விலகிச் செல்ல மாட்டார். அப்படி சென்றாலும் அதில் முஸ்லிம்களுக்கு எந்த ஒரு நஷ்டமும் இடையூறும் இல்லை.

இஸ்லாமை விட்டு உள்ளரங்கமாகவோ, வெளிரங்கமாகவோ வெளியேறியவன் மட்டுமே முஸ்லிம்களை விட்டும் விலகிச் சென்று நிராகரிப்பாளர்களுடன் சேர்ந்து கொள்வான். அப்படி ஒருவன் மார்க்கத்திலிருந்து வெளியேறி விட்டால் முஸ்லிம்களுக்கு அவனிடம் எந்தத் தேவையும் இல்லை. அவன் இஸ்லாமிய சமூகத்தை விட்டு பிரிந்து சென்று விடுவது, அதிலிருப்பதை விட மிகச் சிறந்ததே. இதைத்தான் நபியவர்கள் “யாரொருவர் நம்மிடமிருந்து விலகி அவர்களிடம் சென்று விடுவாரோ அல்லாஹ் அவரைத் தூரமாக்கி விடுவானாக” என்ற சொல்லின் மூலம் சுட்டிக் காட்டியுள்ளார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

மக்காவில் இஸ்லாமை ஏற்றுக் கொண்ட ஒருவரால் மதீனாவிற்கு வர இயலாது என்றாலும் அல்லாஹ்வின் பூமி விசாலமானது என்பதால் அவர் வேறு எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். மதீனாவாசிகள் இஸ்லாமைப் பற்றி தெரியாமல் இருந்த போதே முஸ்லிம்கள் ஹபஷா சென்று தங்கவில்லையா? இதைத்தான் நபியவர்கள் “யார் அவர்களிலிருந்து நம்மிடம் வருகிறாரோ, அதாவது இஸ்லாமை ஏற்றுக் கொள்கிறாரோ அவருக்கு அல்லாஹ் வெகு விரைவில் நல்ல சூழ்நிலையையும் கஷ்டத்திலிருந்து விடுதலையும் தருவான்” என்ற சொல்லின் மூலம் சுட்டிக் காட்டியுள்ளார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

இதுபோன்ற தற்காப்பு உடன்படிக்கையைக் குறைஷிகள் ஏற்படுத்திக் கொண்டது (மக்காவில் இருந்து மதீனாவிற்கு வந்தவரை திருப்பி அனுப்பிவிட வேண்டும். மதீனாவிலிருந்து மக்காவிற்கு வந்தவர் திரும்பி அனுப்பப்பட மாட்டார் என்பது) வெளிப்படையாக பார்க்கும் போது குறைஷிகளுக்கு இது கண்ணியமானதாகத் தெரிந்தாலும், உண்மையில் குறைஷிகள் எவ்வளவு நடுக்கத்திலும், சோர்விலும் தங்களது சிலை வணக்கத்திற்கு ஏற்பட்ட கதியைப் பார்த்து அச்சத்திலும் இருக்கின்றனர் என்பதற்கு இது தெளிவான ஆதாரமாகும்.

தங்களின் மதக் கட்டமைப்பு அழியும் அபாயத்தில் இருக்கிறது என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டனர். ஆகவேதான், இதுபோன்ற ஒரு தற்காப்பு அம்சத்தை தங்கள் உடன்படிக்கையில் இடம்பெறச் செய்தனர். முஸ்லிம்களிடமிருந்து குறைஷிகளிடம் சேர்ந்து கொண்டவரை திருப்பி கேட்க மாட்டோம் என்று நபி (ஸல்) அவர்கள் பெருந்தன்மையாக கூறியது தனது மார்க்கத்தின் மீதும், அதை பின்பற்றியவர்கள் மீதும் தான் வைத்திருந்த முழுமையான நம்பிக்கைக்கு ஆதாரமாகும். எனவே, இதுபோன்ற நிபந்தனைகளைக் கண்டு நபி (ஸல்) அவர்கள் சிறிதளவும் அஞ்சவில்லை.

Offline Yousuf

முஸ்லிம்களின் துக்கமும், உமரின் தர்க்கமும்

மேற்கூறப்பட்ட இவைதான் இந்த சமாதான ஒப்பந்தத்தின் அம்சங்களாகும். எனினும், வெளிப்படையான இரு காரணங்களால் அனைத்து முஸ்லிம்களையும் துக்கமும், கவலையும் கடுமையாக ஆட்கொண்டது. நபியவர்கள் “அல்லாஹ்வின் இல்லத்திற்குச் செல்வோம். அங்கு சென்று தவாஃப் செய்வோம்” என்று கூறினார்கள். ஆனால், அங்கு சென்று தவாஃப் செய்யாமலேயே எப்படி நம்மைத் திருப்பி அழைத்துச் செல்லலாம் என்பது முதல் காரணம்.

இரண்டாவது காரணம்: இவர்கள் (முஹம்மது) அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள். மேலும் சத்தியத்தில் இருக்கிறார்கள். அல்லாஹ் தனது மார்க்கத்தை உயர்வாக்குவான் என்று வாக்கும் அளித்துள்ளான். அப்படியிருக்க ஏன் குறைஷிகளின் நிர்ப்பந்தத்திற்குப் பணிய வேண்டும்? ஏன் சமாதானத்தில் தாழ்மையான நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும்?

இந்த இரண்டு வெளிப்படையான காரணங்கள் பல சந்தேகங்களையும், பல எண்ணங்களையும், பல குழப்பங்களையும் கிளப்பின. இதனால் முஸ்லிம்களின் உணர்வுகள் காயமடைந்தன. சமாதான ஒப்பந்தத்தின் அம்சங்களைச் சிந்திக்க விடாமல் கவலையும் துக்கமும்தான் முஸ்லிம்களை ஆட்கொண்டிருந்தது. ஏனைய மக்களைக் காட்டிலும் உமர் இப்னுல் கத்தாப் (ரழி) அவர்கள்தான் அதிகக் கவலை கொண்டவராக இருந்திருக்க வேண்டும். ஏனெனில், ஒப்பந்தம் முடிந்தவுடன் அவர் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து பேசினார்கள். இதோ... அவர்களது உரையாடல்:

உமர் (ரழி): அல்லாஹ்வின் தூதரே! நாம் சத்தியத்திலும் அவர்கள் அசத்தியத்திலும் இருப்பது உண்மைதானே?

நபி (ஸல்): ஆம்! (நாம் சத்தியத்தில் இருக்கிறோம். அவர்கள் அசத்தியத்தில் இருக்கின்றார்கள்.)

உமர் (ரழி): நம்மில் கொல்லப்பட்டவர்கள் சுவனத்திலும், அவர்களில் கொல்லப்பட்டவர்கள் நரகத்திலும் இருப்பார்கள். சரிதானே?

நபி (ஸல்): ஆம்! (நம்மில் கொல்லப்பட்டவர்கள் சுவனத்தில் இருக்கின்றனர், அவர்களில் கொல்லப்பட்டவர்கள் நரகத்தில் இருக்கின்றனர்).

உமர் (ரழி): அப்படியிருக்க நாம் ஏன் நமது மார்க்க விஷயத்தில் விட்டுக்கொடுத்து தாழ்வை ஏற்றுக் கொள்ள வேண்டும். அல்லாஹ் நமக்கும் அவர்களுக்கும் நடுவில் தீர்ப்பளிக்காமல் இருக்கும் இந்நிலையில் நாம் திரும்பிச் செல்வது எவ்வாறு நியாயமாகும்?

நபி (ஸல்): கத்தாபின் மகனே! நான் அல்லாஹ்வின் தூதர். என்னால் அவனுக்கு மாறு செய்ய முடியாது. அவன் எனக்கு உதவி செய்வான், ஒருக்காலும் அவன் என்னைக் கைவிட மாட்டான்.

உமர் (ரழி): அல்லாஹ்வின் இல்லத்திற்கு வருவோம் அதைத் தவாஃப் செய்வோம் என்று நீங்கள் எங்களுக்குக் கூறவில்லையா?

நபி (ஸல்): ஆம்! நான் கூறினேன். ஆனால் இந்த ஆண்டே வருவோம் என்று கூறினேனா?

உமர் (ரழி): இல்லை! அவ்வாறு கூறவில்லை.

நபி (ஸல்): நிச்சயமாக நீ கஅபாவிற்குச் சென்று அதை தவாஃப் செய்வாய்.


பின்பு உமர் (ரழி) கோபத்துடன் அபூபக்ர் (ரழி) அவர்களிடம் வந்து நபி (ஸல்) அவர்களிடம் கேட்ட கேள்விகளைக் கேட்க, அபூபக்ர் (ரழி) அவர்களும் நபியவர்கள் கூறியவாறே உமருக்குப் பதில் கூறினார்கள். மேலும் “உமரே! நீ மரணிக்கும் வரை நபி (ஸல்) அவர்களைப் பற்றிப் பிடித்துக்கொள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர்கள் உண்மையில்தான் இருக்கிறார்கள்” என்று கூறினார்கள்.

இந்நிகழ்ச்சிக்குப் பிறகு,

(நபியே! ஹுதைபிய்யாவின் சமாதான உடன்படிக்கையின் மூலம்) நிச்சயமாக நாம் உங்களுக்கு (மிகப்பெரிய) தெளிவானதொரு வெற்றியைத் தந்தோம். (அதற்காக நீங்கள் உங்களது இறைவனுக்கு நன்றி செலுத்துவீராக!) (அல்குர்ஆன் 48: 1,2)

என்ற வசனம் அருளப்பட்டது. உடன் நபியவர்கள் ஒருவரை அனுப்பி அவ்வசனத்தை உமர் (ரழி) அவர்களிடம் ஓதிக்காட்டும்படி கூறினார்கள். அதைக் கேட்டு நபி (ஸல்) அவர்களிடம் வந்த உமர் (ரழி) “அல்லாஹ்வின் தூதரே! இது வெற்றியான விஷயமா?” என்று கேட்டார்கள். நபியவர்கள் “ஆம்!” என்றவுடன் உமர் (ரழி) மனமகிழ்ச்சியுடன் திரும்பிச் சென்றார்.

பின்பு, தான் செய்த காரியத்தை எண்ணி உமர் (ரழி) மிகவும் கவலையடைந்தார்கள். இதைப் பற்றி உமரே இவ்வாறு கூறினார்கள்: “நான் எனது செயலை எண்ணி வருந்தி அதற்கு பரிகாரமாக பல நற்செயல்களைச் செய்தேன் அன்றைய தினம் நான் நபி (ஸல்) அவர்களிடம் நடந்து கொண்ட விதத்திற்காக எப்போதும் தர்மம் செய்து வந்தேன் நோன்பு வைத்து வந்தேன் தொழுது வந்தேன் அடிமைகளை உரிமையிட்டு வந்தேன் நான் நபி (ஸல்) அவர்களிடம் பேசிய பேச்சை எண்ணி பயந்து பல நன்மைகளைச் செய்தேன், நான் பேசிய பேச்சு நன்மையாக மாற வேண்டும் என்பதே என் ஆதரவாக இருந்தது.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம், இப்னு ஹிஷாம்)

ஒடுக்கப்பட்டோர் துயர் தீர்ந்தது

நபி (ஸல்) அவர்கள் மதீனா திரும்பிச் சென்று விட்டார்கள். சில நாட்களுக்குப் பின் மக்காவில் வேதனை அனுபவித்துக் கொண்டிருந்த முஸ்லிம்களில் ஒருவரான அபூ பஸீர் (ரழி) என்பவர் காஃபிர்களிடமிருந்து தப்பித்து மதீனா வந்து சேர்ந்தார். இவர் குறைஷிகளின் தோழர்களான ஸகீப் கிளையைச் சேர்ந்தவர். இவரைப் பிடித்து வர குறைஷிகள் இருவரை மதீனாவிற்கு அனுப்பி வைத்தனர். அவ்விருவரும் நபி (ஸல்) அவர்களிடம் வந்து “நீங்கள் எங்களுக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றுங்கள்” என்றனர். நபியவர்கள் அபூபசீரை அவ்விருவரிடமும் ஒப்படைத்து விட்டார்கள். அவ்விருவரும் அபூபசீரை அழைத்துக் கொண்டு துல்ஹுலைஃபா வந்து சேர்ந்தனர். தங்களது வாகனத்தை விட்டு இறங்கி தங்களுடன் கொண்டு வந்திருந்த பேரீத்தம் பழங்களைச் சாப்பிட ஆரம்பித்தனர். அப்போது அபூபஸீர் (ரழி) அவ்விருவல் ஒருவரிடம் “உனது வாள் மிக நன்றாக உள்ளதே!” என்றார். அதைக் கேட்ட அவன் அவ்வாளை உருவி “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இது மிகச் சிறந்த வாள். இதை நான் பலமுறை சோதித்துப் பார்த்திருக்கின்றேன்” என்றான். அதற்கு அபூ பஸீர் (ரழி) “நான் அதைப் பார்க்க வேண்டும். காண்பி!” என்றார். அவன் அவரிடம் அந்த வாளைக் கொடுக்கவே அதை வாங்கி ஒரே வெட்டில் அவனது கதையை அவர் முடித்துவிட்டார்.

இதைப் பார்த்த மற்றவன் வெருண்டோடி மதீனா வந்து சேர்ந்தான். பயந்த நிலையில் பள்ளிக்குள் நுழைந்தான். அவனைப் பார்த்து நபியவர்கள் இவன் ஏதோ ஒரு திடுக்கமான காட்சியைப் பார்த்து விட்டான் என்று கூறினார்கள். நபியவர்களுக்கருகில் வந்த அவன் “எனது நண்பன் கொலை செய்யப்பட்டு விட்டான். நானும் கொலை செய்யப்பட்டு விடுவேன்” என்று பதறினான். அந்நேரத்தில் அபூபசீரும் அங்கு வந்து சேர்ந்தார். அவர் நபி (ஸல்) அவர்களைப் பார்த்து “அல்லாஹ்வின் தூதரே! நிச்சயமாக அல்லாஹ் உங்களது பொறுப்பை நிறைவேற்றி விட்டான். நீங்கள் என்னை அவர்களிடம் அனுப்பி விட்டீர்கள். பின்பு அல்லாஹ்தான் அவர்களிடமிருந்து என்னைப் பாதுகாத்தான்” என்று கூறினார். அதைக் கேட்ட நபியவர்கள், “இவரது தாய்க்கு ஏற்பட்ட நாசமே! இவர் போரை மூட்டி விடுவார் போலிருக்கிறதே! இவரை யாராவது பிடிக்க வேண்டுமே” என்றார்கள். நபியவர்களின் இப்பேச்சை கேட்டு அவர்கள் தன்னை மீண்டும் காஃபிர்களிடம் கொடுத்து விடுவார்கள் என்று அறிந்து கொண்ட அபூபஸீர் அங்கிருந்து வெளியேறி கடற்கரை ஓரமாக வந்து தங்கிக் கொண்டார்.

சில நாட்களுக்குப் பின் மக்காவில் இவரைப் போல் துன்பம் அனுபவித்து வந்த அபூஜந்தல் இப்னு சுஹைல் (ரழி) மக்காவிலிருந்து தப்பித்து இவருடன் வந்து சேர்ந்து கொண்டார். இவ்வாறே மக்காவில் முஸ்லிமானவர் ஒவ்வொருவராக பலர் அபூபஸீர் (ரழி) அவர்களுடன் வந்து சேர்ந்து கொண்டனர். இவர்கள் ஷாம் நாட்டை நோக்கிச் செல்லும் குறைஷிகளின் வியாபாரக் கூட்டம் அவ்வழியாக வருவதைத் தெரிந்து கொண்டால் உடனடியாக அதைத் தாக்கி, பொருட்களைக் கொள்ளையிட்டு அதில் உள்ளவர்களைக் கொலை செய்து விடுவார்கள். இதனால் பெரும் துன்பத்திற்குள்ளான குறைஷிகள் நபி (ஸல்) அவர்களிடம் தூதனுப்பி அல்லாஹ்விற்காகவும் இரத்த உறவுக்காகவும் நாங்கள் உங்களிடம் கேட்கிறோம். யார் இஸ்லாமை ஏற்று உங்களிடம் வந்து விட்டார்களோ அவர் அபயம் பெற்றவராவார். (அவரைத் திரும்ப கேட்க மாட்டோம்) என்று கூறினர். அவர்களின் இக்கோரிக்கைக்கிணங்க நபியவர்கள் அந்த முஸ்லிம்களை மதீனாவிற்கு வரவழைத்தார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஜாதுல் மஆது, இப்னு ஹிஷாம்)

குறைஷி மாவீரர்கள் இஸ்லாமைத் தழுவுதல்

இந்த ஒப்பந்தத்திற்குப் பின் ஹிஜ்ரி 7ஆம் ஆண்டு குறைஷிகளின் முக்கிய வீரர்களும் பிரமுகர்களுமான அம்ர் இப்னு ஆஸ், காலித் இப்னு வலீத், உஸ்மான் இப்னு தல்ஹா போன்றவர்கள் இஸ்லாமைத் தழுவினர். இவர்கள் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்தபோது “மக்கா தனது ஈரக் குலைகளை நம்மிடம் ஒப்படைத்து விட்டது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

Offline Yousuf

புதிய சகாப்தம்

ஹுதைபிய்யாவின் சமாதான ஒப்பந்தம் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் வாழ்க்கையில் ஒரு புதிய சகாப்தம் உருவாவதற்குக் காரணமாக அமைந்தது.

இஸ்லாமிற்குக் குறைஷிகள்தான் முதல் எதிரி மட்டுமின்றி. அதற்குப் பெரும் தொல்லை தந்து வந்த வம்பர்களாகவும் இருந்தனர். இவர்கள் முஸ்லிம்களுடன் போர் புரிவதிலிருந்து விலகி சமாதானம் மற்றும் அமைதியின் பக்கம் திரும்பி விட்டதால் இஸ்லாமின் மாபெரும் மூன்று எதிரிக் கூட்டங்களின் வலிமை வாய்ந்த ஒரு பகுதி ஒடிந்து விட்டது.

அதாவது குறைஷிகள், கத்ஃபான் கிளையினர், யூதர்கள் ஆகிய இம்மூன்று கூட்டத்தினர் அரேபிய தீபகற்பத்தில் சிலை வழிபாட்டுக்கும், அதில் ஈடுபடுபவர்களுக்கும் தலைவர்களாகவும் அவர்களை வழிநடத்துபவர்களாகவும் இருந்தனர். எனவே, குறைஷிகள் பணிந்து விட்டதால் அரேபிய தீபகற்பத்திலுள்ள சிலை வணங்குபவர்களின் உணர்ச்சிகளும் எதிர்ப்புகளும் பெருமளவு மழுங்கி விட்டன. ஆகவேதான், இந்த ஒப்பந்தத்திற்குப் பின் கத்ஃபான் கிளையினர் பெரிய அளவிற்கு சண்டையில் ஈடுபடவில்லை. யூதர்களின் தூண்டதலினால்தான் அவர்கள் சில சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டார்களே தவிர தாங்களாகவே அதில் ஈடுபட்டதில்லை.

மதீனாவிலிருந்து வெளியேற்றப்பட்ட பின் யூத விஷமிகள் தங்களின் சதித்திட்டங்களைத் தீட்டுவதற்கும், அதை செயல்படுத்துவதற்கும் கைபரைக் கேந்திரமாக ஆக்கிக் கொண்டு தங்களின் நாசவேலைகளைத் தொடர்ந்து கொண்டிருந்தனர். மதீனாவைச் சுற்றி பல இடங்களில் பரவியிருந்த கிராம அரபிகளை முஸ்லிம்களுக்கு எதிராக தூண்டிவிட்டுக் கொண்டிருந்தனர். நபி (ஸல்) அவர்களையும் முஸ்லிம்களையும் அழிப்பதற்காக அல்லது அவர்களுக்குச் சேதம் உண்டாக்கு வதற்காக பல இரகசிய சதித்திட்டங்களைத் தீட்டினர். இதனால் இந்த ஒப்பந்தத்திற்குப் பின் நபி (ஸல்) அவர்கள் எடுத்த முதல் கட்ட நடவடிக்கை, இந்த யூதக் கேந்திரங்களின் மீது தீர்க்கமான போரைத் தொடுப்பதாகும்.

இந்தச் சமாதான ஒப்பந்தத்திற்குப் பின் தொடங்கிய இக்காலகட்டத்தின் ஆரம்பத்தில் இஸ்லாமிய அழைப்புப் பணியை பரப்புவதற்கும், அதை மக்கள் முன் வைப்பதற்கும் முஸ்லிம்களுக்கு பெருமளவில் வாய்ப்பு ஏற்பட்டது. பெரும் முயற்சி செய்து போருக்குக் காட்டிய ஆர்வத்தை விட பல மடங்கு ஆர்வத்தை இப்பணியில் ஆர்வம் காட்டினர். ஆகவே, இக்காலக் கட்டத்தை நாம் இரண்டு வகையாக பிரிக்கின்றோம்.

1) அழைப்புப் பணியில் ஆர்வம் காட்டுதல் - அரசர்கள், கவர்னர்களுக்கு கடிதங்கள் எழுதுதல்.

2) போர் நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல்.


அரசர்கள், கவர்னர்களுடன் நபியவர்கள் கொண்ட கடிதத் தொடர்பைப் பற்றி முதலில் கூற விரும்புகிறோம். ஏனெனில், இஸ்லாமிய அழைப்புப் பணிதான் அனைத்திலும் முக்கியமான அடிப்படை நோக்கமாகும். முஸ்லிம்கள் இதுநாள் வரை அனுபவித்தத் துன்பங்கள், சோதனைகள், சந்தித்த போர்கள், கொடுமைகள் ஆகிய அனைத்திலும் இஸ்லாமிய அழைப்புப் பணி ஒன்று மட்டுமே அடிப்படை நோக்கமாக இருந்தது.

அரசர்களுக்கும் ஆளுநர்களுக்கும் கடிதம் எழுதுதல்

நபி (ஸல்) அவர்கள் உடன்படிக்கையை முடித்து ஹுதைபிய்யாவிலிருந்து திரும்பிய பின் ஹிஜ்ரி 6ஆம் ஆண்டின் இறுதியில் பல அரசர்களுக்குக் கடிதம் எழுதி இஸ்லாமின் பக்கம் அவர்களை அழைத்தார்கள்.

நபியவர்கள் அரசர்களுக்குக் கடிதம் எழுத முற்பட்டபோது “முத்திரை இல்லாத கடிதங்களை அரசர்கள் படிக்க மாட்டார்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டது. ஆகவே, நபியவர்கள் வெள்ளியினாலான மோதிரம் ஒன்றைத் தயார் செய்தார்கள். அதில் ‘முஹம்மது ரஸூலுல்லாஹ்’ என்று பதித்தார்கள். அது மூன்று வரிகளாக இருந்தது. முஹம்மது என்று முதல் வரியிலும், ரஸூல் என்று ஒரு வரியிலும், அல்லாஹ் என்று ஒரு வரியிலும் இந்த அமைப்பில் எழுதப்பட்டிருந்தது. (ஸஹீஹுல் புகாரி)

நபியவர்கள் இப்பணிக்காக தங்களது தோழர்களில் நன்கு அனுபவம் வாய்ந்தவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களைத் தூதுவர்களாக அரசர்களிடம் அனுப்பினார்கள். ஹிஜ்ரி 7ஆம் ஆண்டு, முஹர்ரம் மாதம் தொடக்கத்தில், அதாவது கைபர் தாக்குதலுக்குச் சற்று முன்பு இந்தத் தூதுர்களை நபி (ஸல்) அனுப்பினார்கள் என பேராசிரியர் மன்சூர்பூ (ரஹ்) திட்டவட்டமாக தெரிவிக்கிறார்.

Offline Yousuf

நபியவர்கள் எழுதிய கடிதங்களின் விவரங்கள் பின்வருமாறு:

1) ஹபஷா மன்னர் நஜ்ஜாஷிக்குக் கடிதம்

இந்த நஜ்ஜாஷியின் பெயர் ‘அஸ்ஹமா இப்னு அல்அப்ஜர்’ ஆகும். ஹிஜ்ரி 6ன் கடைசியில் அல்லது ஹிஜ்ரி 7. முஹர்ரம் மாதத்தில் அம்ர் இப்னு உமய்யா ழம் (ரழி) மூலம் இவருக்காக கடிதமொன்றை எழுதி அனுப்பினார்கள். இமாம் தப் அக்கடிதத்தில் எழுதப்பட்ட வாசகங்கள் பற்றி கூறியிருக்கிறார்கள். அந்த வாசகங்களை ஆழமாக நாம் ஆராய்ந்து பார்க்கும் போது அக்கடிதம் ஹுதைபிய்யா ஒப்பந்தத்திற்குப் பின் நபி (ஸல்) எழுதிய கடிதமாக இருக்காது. மாறாக, மக்காவிலிருக்கும் போது, ஜஅஃபரும் மற்ற தோழர்களும் ஹபஷாவிற்கு ஹிஜ்ரா செய்தபோது அவர்களுடன் கொடுத்தனுப்பிய கடிதமாக இருக்கும் என்பது தெரிய வருகிறது. ஏனெனில், அக்கடிதத்தின் இறுதியில் வரும் வாசகத்தில் “நான் உங்களிடம் எனது தந்தையின் சகோதரன் மகன் ஜஅஃபரை அனுப்பி இருக்கிறேன். அவருடன் முஸ்லிம்களில் ஒரு குழுவும் வருகிறது. அவர் உங்களிடம் வந்தால் அவரையும் அக்குழுவையும் விருந்தாளியாக கவனித்துக் கொள்ளுங்கள். அநியாயம் செய்வதை விட்டுவிடுங்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதிலிருந்து இக்கடிதம் மக்காவில் இருக்கும் போது எழுதப்பட்டது என்று விளங்க முடிகிறது.

இப்னு இஸ்ஹாக் (ரஹ்) வாயிலாக இமாம் பைஹகி (ரஹ்) அறிவிக்கிறார்கள்: நபியவர்கள் நஜ்ஜாஷிக்கு எழுதிய கடிதத்தின் வாசகமாவது:

“அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பம் செய்கின்றேன். அல்லாஹ்வின் தூதர் முஹம்மதிடமிருந்து ஹபஷாவின் மன்னர் ‘அஸ்ஹம்’ என்ற நஜ்ஜாஷிக்கு எழுதப்படும் கடிதமாகும் இது. நேர்வழியைப் பின்பற்றி அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொண்டு, வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன் அவனுக்கு இணை துணை யாருமில்லை அவன் தனக்கென எவரையும் மனைவியாகவோ அல்லது பிள்ளையாகவோ எடுத்துக் கொள்ளவில்லை நிச்சயமாக முஹம்மது அவனது அடிமையாகவும் தூதராகவும் இருக்கிறார்கள் என்று சாட்சி கூறுவோருக்கு ஈடேற்றம் உண்டாகுக!

நான் உமக்கு இஸ்லாமிய அழைப்பை விடுக்கிறேன். நிச்சயமாக நான் இஸ்லாமியத் தூதராவேன். நீ இஸ்லாமை ஏற்றுக்கொள், ஈடேற்றம் பெறுவாய்.

“வேதமுடையவர்களே! அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் வணங்க மாட்டோம். அவனுக்கு யாதொன்றையும் இணைவைக்க மாட்டோம். அல்லாஹ்வை விடுத்து நம்மில் சிலர் சிலரைக் கடவுளாக ஆக்கிக் கொள்ளக் கூடாது என்ற நீங்களும் நாமும் ஒத்துக் கொண்ட விஷயத்திற்கு நீங்கள் வந்துவிடுங்கள். நீங்கள் இதைப் புறக்கணித்தால் நாங்கள் ‘முஸ்லிம்கள்’ என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருந்துவிடுங்கள்.” (அல்குர்ஆன் 3:64)

நீ (இஸ்லாமிய அழைப்பை ஏற்றுக் கொள்ள) மறுத்துவிட்டால் உனது சமுதாயத்தில் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளாத கிறிஸ்துவர்களின் குற்றமும் உம்மையே சாரும். (தலாயிலுந்நுபுவ்வா, முஸ்தத்ரகுல் ஹாகிம்)

மாபெரும் ஆராய்ச்சியாளர் டாக்டர் ஹமீதுல்லாஹ்விற்கு சில காலத்திற்கு முன் ஒரு கடிதம் கிடைத்தது. அக்கடிதம் இமாம் இப்னு கய்” (ரஹ்) குறிப்பிட்டிருக்கும் கடிதத்திற்கு முற்றிலும் ஒப்பாக இருக்கிறது. ஆனால். ஒரே ஒரு வார்த்தைதான் வித்தியாசமாக இருந்தது. மேலும், டாக்டர் ஹமீதுல்லாஹ் அவர்கள் அக்கடித்தை ஆராய்ச்சி செய்வதில் தனது பெரும் முயற்சியை செலவழித்ததுடன், அதிலுள்ள விஷயங்களைக் கண்டுபிடிப்பதற்கு பல அதிநவீன கருவிகளையும் பயன்படுத்தினார். அக்கடிதத்தைப் பற்றி தனது புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார். அதாவது:

“அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் எழுதுகிறேன். அல்லாஹ்வின் தூதர் முஹம்மதிடமிருந்து ஹபஷாவின் மன்னர் நஜ்ஜாஷிக்கு எழுதும் கடிதம். நேர்வழியை பின்பற்றுவோருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும். நிச்சயமாக நான் உமக்கு முன்பாக அல்லாஹ்வைப் புகழ்கிறேன். அவனைத் தவிர வணக்கத்திற் குரியவன் வேறு யாருமில்லை. அவன்தான் அரசன் அவன் மிகத் தூய்மையானவன் ஈடேற்றம் வழங்குபவன் பாதுகாவலன் கண்காணிப்பவன். நிச்சயமாக மர்யமின் மகன் ஈஸா (அலை) அல்லாஹ்வினால் படைக்கப்பட்ட உயிரும், அவனது வார்த்தையுமாக இருக்கிறார். அவன்தான் அவ்வார்த்தையைப் பரிசுத்தமான பத்தினி மர்யமுக்கு அனுப்பினான். அவர் அல்லாஹ்வினால் படைக்கப்பட்ட உயிரிலிருந்தும், அவனுடைய ஊதுதலில் இருந்தும் உண்டான ஈஸாவை தனது கர்ப்பத்தில் சுமந்தார். எவ்வாறு அல்லாஹ் ஆதமை தனது கையினால் விஷேசமாக படைத்தானோ அவ்வாறே ஈஸாவையும் படைத்தான்.

தனித்தவனான துணையற்ற அல்லாஹ்வின் பக்கம் உன்னை அழைக்கிறேன். அவனுக்கு வழிப்படுவதிலும் வணங்குவதிலும் நீ எனக்கு இசைந்து என்னை நீ பின்பற்ற வேண்டும் என்று நான் உன்னை அழைக்கிறேன். நிச்சயமாக நான் அல்லாஹ்வின் தூதராவேன். மேலும், உம்மையும் உமது படையினரையும் அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறேன். நான் நிச்சயமாக எடுத்துரைத்து விட்டேன். உனக்கு உபதேசம் செய்து விட்டேன். எனது அறிவுரையை ஏற்றுக் கொள். நேர்வழியைப் பின்பற்றியவர்களுக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்.”

(ஜாதுல் மஆது, “ரஸூலே அக்ரம் கீ ஸியாஸி ஜிந்தகி - டாக்டர் ஹமீதுல்லாஹ்”)

இக்கடிதத்தை டாக்டர் அவர்கள் குறிப்பிட்டதற்குப் பின் இதுதான் ஹுதைபிய்யா உடன்படிக்கைக்குப் பின் நஜ்ஜாஷி மன்னருக்கு நபி (ஸல்) எழுதியனுப்பிய வாசகம் என்று உறுதியுடன் கூறுகிறார்கள். ஆனால், நாம் கூறுவது என்னவெனில், ஆதாரங்களை ஆராய்ந்த பின் இது நபி (ஸல்) அவர்களின் கடிதம்தான் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், இது ஹுதைபிய்யா உடன்படிக்கைக்குப் பின்புதான் எழுதப்பட்டது என்பதற்கு எவ்வித ஆதாரமுமில்லை. மாறாக, இப்னு இஸ்ஹாக் (ரஹ்) மூலமாக இமாம் பைஹகி அறிவிக்கும் கடிதமே ஹுதைபிய்யா உடன்படிக்கைக்குப் பின் நபி (ஸல்) கிறிஸ்தவ அரசர்களுக்கும், கவர்னர்களுக்கும் எழுதியனுப்பிய கடிதங்களுக்கு ஒப்பாக இருக்கிறது. ஏனெனில், பொதுவாக கிறிஸ்தவர்களுக்கு நபி (ஸல்) எழுதும் கடிதத்தில் “வேதத்தை உடையவர்களே! நமக்கும் உங்களுக்கும் ஒரு சமத்துவமான விஷயத்தின் பக்கம் வருவீர்களாக!... (அல்குர்ஆன் 3:64)

என்ற வசனத்தை குறிப்பிடுவார்கள். அந்த வசனம் இமாம் பைஹகி (ரஹ்) அறிவிக்கும் கடிதத்தில்தான் இடம்பெற்றுள்ளது. மேலும், அக்கடிதத்தில் நஜ்ஜாஷி மன்னன் பெயர் ‘அஸ்ஹமா’ என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. டாக்டர் ஹமீதுல்லாஹ் குறிப்பிட்ட கடிதத்தைப் பற்றி ஆராயும் போது, அஸ்ஹமாவின் மரணத்திற்குப் பின் அவருடைய பிரதிநிதியாக பதவியேற்றவருக்கு நபி (ஸல்) எழுதியனுப்பிய கடிதமாக இருக்கலாம் என்பது எனது கருத்து. எனவேதான், நபியவர்கள் இக்கடிதத்தில் பெயரைக் குறிப்பிடவில்லை.

இவ்வாறு நான் விமர்சிப்பதற்கு வெளிப்படையான, உறுதியான ஆதாரம் ஏதும் என்னிடம் இல்லை. என்றாலும் இக்கடிதங்களையும் அதன் கருத்துகளையும் ஆராயும் போது நான் கூறும் இவ்விஷயத்தைத் தெரிந்து கொள்ளலாம். இதில் ஓர் ஆச்சரியம் என்னவெனில், டாக்டர் ஹமீதுல்லாஹ் “இப்னு இஸ்ஹாக் (ரஹ்) மூலமாக இமாம் பைஹகி (ரஹ்) அறிவிக்கும் அறிவிப்பில் இடம்பெற்றுள்ள கடிதத்தை நபியவர்கள் நஜ்ஜாஷி மன்னர் அஸ்ஹமா மரணித்த பின் அவரது பிரதிநிதிக்கு எழுதினார்கள்” என்று கூறுகிறார். ஆனால், இக்கடிதத்தில் அஸ்ஹமாவின் பெயர் தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. இவரிடமுள்ள கடிதத்திலோ அப்பெயர் கூறப்படவில்லை. அல்லாஹ்தான் உண்மையாக நன்கறிந்தவன்.

நபி (ஸல்) அவர்களின் கடிதத்தை அம்ரு இப்னு உமைய்யா, நஜ்ஜாஷியிடம் ஒப்படைத்தார். அதை நஜ்ஜாஷி பெற்று, தனது கண்ணில் ஒத்திக் கொண்டார். தனது சிம்மாசனத்தை விட்டும் கீழே இறங்கி, பூமியில் உட்கார்ந்து, ஜஅஃபர் இப்னு அபூதாலிபின் கையில் இஸ்லாமைத் தழுவினார். பின்பு நபியவர்களுக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பினார். அதன் வாசகமாவது:

“அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பிக்கிறேன். அல்லாஹ்வின் தூதர் முஹம்மதுக்கு அஸ்ஹமா நஜ்ஜாஷி எழுதுவது. அல்லாஹ்வின் நபியே! அல்லாஹ்வின் புறத்திலிருந்து உங்களுக்கு ஈடேற்றமும், அவனது கருணையும், அருள்களும் உண்டாகட்டும். அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாருமில்லை.

அல்லாஹ்வின் தூதரே! ஈஸாவைக் குறித்து தாங்கள் வரைந்த தங்களின் மடல் எனக்குக் கிடைத்தது. வானம், பூமியின் இறைவன் மீது சத்தியமாக! ஈஸாவும் நீங்கள் கூறியதைவிட பேரீத்தம் பழத்தின் நார் அளவுகூட அதிகமாகத் தன்னைப் பற்றிக் கூறியதில்லை. நிச்சயமாக ஈஸா நீங்கள் கூறியவாறுதான் (அல்லாஹ்வின் வார்த்தையால் படைக்கப்பட்டவர்). நீங்கள் எங்களுக்கு அனுப்பிய விஷயங்களை நாங்கள் அறிந்து கொண்டோம். உங்கள் தந்தையின் சகோதரன் மகனுக்கும், உங்களது தோழர்களுக்கும் விருந்தோம்பல் செய்தோம். நிச்சயமாக நீங்கள் உண்மையானவர் உண்மைப்படுத்தப்பட்டவர் நீங்கள் அல்லாஹ்வின் தூதர் என்று சாட்சி கூறுகிறேன் நான் உங்களிடமும் உங்களது தந்தையின் சகோதரன் மகனிடமும் சத்திய வாக்குறுதி செய்து கொள்கிறேன் அகிலத்தார்களின் இறைவனுக்கு அடிபணிந்து இஸ்லாமை ஏற்றுக் கொள்கிறேன் என்று அவரிடம் வாக்குப் பிரமாணம் செய்து கொடுக்கிறேன்.”

ஜஅஃபர் (ரழி) அவர்களையும் அவர்களுடன் இருக்கும் முஹாஜிர்களையும் தன்னிடம் திரும்ப அனுப்புமாறு நபி (ஸல்) நஜ்ஜாஷியிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அவர் அம்ர் இப்னு உமய்யா ழம்யுடன் அவர்கள் அனைவரையும் இரு கப்பல்களில் அனுப்பி வைத்தார். அம்ர், அவர்களை அழைத்துக் கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் வந்து சேர்ந்தார்கள். அப்போது நபி (ஸல்) கைபரில் இருந்தார்கள். (இப்னு ஹிஷாம்)

Offline Yousuf

2) மிஸ்ரு நாட்டு மன்னருக்குக் கடிதம்

மிஸ்ரு (எகிப்து) மற்றும் இஸ்கந்தய்யா (அலெக்ஸாண்டியா)வின் மன்னரான ‘முகவ்கிஸ்’ என்றழைக்கப்படும் ஜுரைஜ் இப்னு மத்தாவிற்கு நபி (ஸல்) கடிதம் அனுப்பினார்கள்.

(ரஹ்மத்துல் லில் ஆலமீன்)

அக்கடிதத்தில்:

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் எழுதுகிறேன். அல்லாஹ்வின் அடிமையும், அவனது தூதருமான முஹம்மது, கிப்திகளின் மன்னருக்கு எழுதுவது. நேர்வழியைப் பின்பற்றுவோருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்.

நான் உங்களுக்கு இஸ்லாமிய அழைப்பை விடுக்கிறேன். இஸ்லாமை ஏற்றுக்கொள்க. ஈடேற்றம் அடைவீர். இஸ்லாமை ஏற்றுக்கொள்க. அல்லாஹ் உங்களுக்கு இருமுறை நற்கூலி வழங்குவான். நீங்கள் புறக்கணித்து விட்டால் கிப்தி இனத்தவர்களின் குற்றமும் உங்களையே சாரும்.

(“வேதத்தை உடையவர்களே! நமக்கும் உங்களுக்கும் ஒரு சமத்துவமான விஷயத்தின் பக்கம் வருவீர்களாக! (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறொன்றையும் வணங்க மாட்டோம். நாம் அவனுக்கு யாதொன்றையும் இணையாக்க மாட்டோம். நம்மில் ஒருவரும் அல்லாஹ்வையன்றி எவரையும் இறைவனாக எடுத்துக் கொள்ள மாட்டோம்” (என்று கூறுங்கள். நம்பிக்கை யாளர்களே! இதனையும்) அவர்கள் புறக்கணித்தால் (அவர்களை நோக்கி) “நிச்சயமாக நாங்கள் (அவன் ஒருவனுக்கே) வழிப்பட்டவர்கள் என்று நீங்கள் சாட்சி கூறுங்கள்!” என்று நீங்கள் கூறிவிடுங்கள்.) (அல்குர்ஆன் 3:64) (ஜாதுல் மஆது)

இந்தக் கடிதத்தை எடுத்துச் செல்வதற்கு நபியவர்கள் ஹாதிப் இப்னு அபூ பல்தஆவை தேர்வு செய்தார்கள். ஹாதிப் (ரழி) அங்கு சென்றவுடன் அம்மன்னரைப் பார்த்து இவ்வாறு கூறினார்: “நிச்சயமாக உமக்கு முன் தன்னை மிக உயர்ந்த இறைவன் என்று சொல்லி வந்த ஒருவன் இங்கு இருந்தான். அல்லாஹ் அவனை நிரந்தரத் தண்டனையைக் கொண்டு தண்டித்தான். அல்லாஹ் அவனைக் கொண்டு பிறரையும், பின்பு அவனையும் தண்டித்தான். எனவே, நீ பிறரைக் கொண்டு படிப்பினை பெற்றுக் கொள். பிறர் உன்னைக் கொண்டு படிப்பினை பெறும்படி நடந்து கொள்ளாதே!”

இதைக் கேட்ட முகவ்கிஸ் “நிச்சயமாக எங்களுக்கென்று ஒரு மார்க்கம் இருக்கிறது. நாங்கள் அம்மார்க்கத்தை விடமாட்டோம். ஆனால், அதைவிட சிறந்த ஒரு மார்க்கம் கிடைத்தால் விட்டு விடுவோம்” என்று கூறினார். அப்போது ஹாதிப் (ரழி) அதற்கு பின்வரும் பதிலை கூறினார்:

நாங்கள் உம்மை இஸ்லாமிய மார்க்கத்தின் பக்கம் அழைக்கிறோம். இதைத் தவிர மற்ற மார்க்கங்களின் தேவை இனி அறவே இருக்காது. இதுவே அனைத்திற்கும் போதுமான, பரிபூரணமான மார்க்கமாகும். நிச்சயமாக இந்த நபி மக்களுக்கு அழைப்பு கொடுத்தார்கள். அம்மக்களில் குறைஷிகள் அவருடன் மிகக் கடுமையாக நடந்து கொண்டனர். யூதர்கள் அவரைப் பகைத்தனர். கிறிஸ்துவர்கள் அவருடன் நட்பு கொண்டனர்.

சத்தியமிட்டுக் கூறுகிறேன்! நபி ஈஸா (அலை) அவர்களைப் பற்றி நபி மூஸா (அலை) அவர்கள் நற்செய்தி அறிவித்தார்கள். அவ்வாறே நபி முஹம்மது (ஸல்) அவர்களைப் பற்றி நபி ஈஸா (அலை) அவர்கள் நற்செய்தி அறிவித்தார்கள். உம்மை நாங்கள் குர்ஆனின் பக்கம் அழைப்பது நீங்கள் தவ்றாத் வேதமுடையவர்களை இன்ஜீலின் பக்கம் அழைப்பதைப் போன்றுதான். ஒவ்வொரு நபி அனுப்பப்படும் போதும் அவரது காலத்திலுள்ள மக்களெல்லாம் அந்த நபியின் சமுதாயமாகக் கருதப்படுவார்கள். எனவே, அம்மக்கள் அந்த நபிக்கு கீழ்ப்படிந்து நடப்பது கடமையாகும். நீங்கள் இந்த நபி அனுப்பப்பட்ட காலத்தைச் சேர்ந்தவர்கள். (எனவே நீர் அவரை பின்பற்றியாக வேண்டும்) ஈஸாவின் மார்க்கத்தைப் பின்பற்றுவதிலிருந்து நாங்கள் உம்மைத் தடுக்கவில்லை. மாறாக, நாங்களும் உமக்கு அதைத்தான் ஏவுகிறோம்.”

இந்தப் பதிலைக் கேட்ட முகவ்கிஸ், “இந்த நபியின் விஷயத்தில் நான் சிந்தித்து விட்டேன். அவர் வெறுப்பானவற்றை ஏவவில்லை, அல்லது விருப்பமான ஒன்றை தடுக்கவுமில்லை. வழிகெட்ட சூனியக்காரராகவோ, பொய் சொல்லும் குறிகாரராகவோ நான் அவரைக் கருதவில்லை. மறைவாக பேசப்படும் இரகசியங்களை வெளிப்படுத்தும் நபித்துவத்தின் அடையாளம் அவரிடம் இருக்கக் கண்டேன். இருந்தாலும் நான் மேலும் யோசித்துக் கொள்கிறேன்” என்று ஹாத்திபுக்கு பதில் கூறினார். பின்பு, நபி (ஸல்) அவர்களின் கடிதத்தை யானை தந்தத்தில் வைத்து மூடி முத்திரையிட்டு தனது அடிமை பெண்களிடம் கொடுத்து பாதுகாத்து வைக்கச் சொன்னார். பின்பு அரபியில் எழுதும் தனது எழுத்தாளரை அழைத்து நபியவர்களுக்கு கடிதம் ஒன்று எழுதுமாறு கூறினார்.

“அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் எழுதுகிறேன். அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மதுக்கு கிப்திகளின் அரசர் முகவ்கிஸ் எழுதுவது. உங்களுக்கு ஈடேற்றம் உண்டாகட்டுமாக! நான் உங்களது கடிதத்தைப் படித்தேன். அதில் நீங்கள் கூறியிருப்பதையும், நீங்கள் எதன் பக்கம் அழைக்கிறீரோ அதையும் நான் புரிந்து கொண்டேன். ஒரு நபி மீதமிருக்கிறார் என்பது எனக்கு நன்கு தெரியும். அவர் ஷாம் தேசத்திலிருந்து வருவார் என்றுதான் எண்ணியிருந்தேன். நான் உங்களது தூதரைக் கண்ணியப்படுத்தினேன். மதிப்பும் மரியாதையுமிக்க இரண்டு அடிமைப் பெண்களையும் சில ஆடைகளையும் நான் உங்களுக்கு அனுப்பியுள்ளேன். நீங்கள் வாகனிப்பதற்காக ஒரு கோவேறு கழுதையையும் அன்பளிப்பாக அளிக்கிறேன். உங்களுக்கு ஈடேற்றம் உண்டாகுக.”

இக்கடிதத்தில் இவர் வேறு எதையும் குறிப்பிடவில்லை. இஸ்லாமை ஏற்றுக் கொள்ளவும் இல்லை. இரண்டு அடிமைப் பெண்களில் ஒருவர் ‘மாயா“, மற்றொருவர் ‘சீரீன்“. கோவேறு கழுதையின் பெயர் ‘துல்துல்’ ஆகும். பிற்காலத்தில் வந்த மன்னர் முஆவியா (ரழி) அவர்களின் காலம் வரை துல்துல் உயிருடனிருந்தது. (ஜாதுல் மஆது)

மாயாவை நபி (ஸல்) தனக்காக வைத்துக் கொண்டார்கள். இவர் மூலம் நபியவர்களுக்கு ‘இப்றாஹீம்’ என்ற குழந்தை பிறந்தது. சீரீனை நபி (ஸல்) ஹஸ்ஸான் இப்னு ஸாபித் (ரழி) என்ற அன்சாரி தோழருக்கு வழங்கினார்கள்.

Offline Yousuf

3) பாரசீக மன்னருக்குக் கடிதம்

நபி (ஸல்) அவர்கள் பாரசீக மன்னர் ‘கிஸ்ரா“விற்கும் கடிதம் எழுதினார்கள். அந்த கடிதமாவது:

“அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்... அல்லாஹ்வின் தூதர் முஹம்மது, பாரசீகர்களின் மன்னர் கிஸ்ராவிற்கு எழுதும் கடிதம். நேர்வழியைப் பின்பற்றி, அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொண்டு, வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை அவன் தனித்தவன் அவனுக்கு இணை துணை யாருமில்லை அவன் தனக்கென எவரையும் மனைவியாகவோ பிள்ளையாகவோ எடுத்துக் கொள்ளவில்லை நிச்சயமாக முஹம்மது அவனது அடிமையாகவும் தூதராகவும் இருக்கிறார்கள் என்று சாட்சி கூறுவோருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்!

நான் அல்லாஹ்வின் புறத்திலிருந்து அனைத்து மக்களுக்கும் அனுப்பப்பட்ட தூதராவேன். உயிருள்ளவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக, இறைநிராகரிப் பாளர்களுக்கு அவனது தண்டனையின் வாக்கு உறுதி ஆவதற்காக என்னை அவன் தூதராக அனுப்பியிருக்கிறான். நீங்கள் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளுங்கள் ஈடேற்றம் பெறுவீர்கள் நீங்கள் மறுத்துவிட்டால் மஜூஸிகளின் (நெருப்பை வணங்குபவர்களின்) குற்றமெல்லாம் உங்களையே சாரும்.”

இக்கடிதத்தை எடுத்துச் செல்வதற்கு ‘அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபா அஸ்ஸஹ்மி’ என்ற தோழரைத் தேர்வு செய்தார்கள். இவர் பஹ்ரைன் நாட்டு மன்னரிடம் இந்தக் கடிதத்தைக் கொடுத்து, அவர் அக்கடிதத்தை தனது ஆள் மூலமாக கிஸ்ராவிடம் அனுப்பினாரா அல்லது அப்துல்லாஹ்வே நேரடியாக கிஸ்ராவிடம் கொடுத்தாரா என்ற விபரம் அறியப்படவில்லை. எதுவாக இருப்பினும், முடிவில் அக்கடிதம் கிஸ்ராவிடம் சென்று அதை அவன் படித்து விட்டு கிழித்தெறிந்தான். பின்பு பெருமையுடன் “எனது குடிமக்களில் ஒரு கேவலமான அடிமை எனது பெயருக்கு முன் அவரது பெயரை எழுதுவதா?” என்று கூறினான்.

இந்தச் செய்தி நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிந்த போது “அல்லாஹ் அவனது ஆட்சியை கிழித்தெறியட்டும்” என்று கூறினார்கள். அவ்வாறே நடக்கவும் செய்தது. இதற்குப் பின் கிஸ்ரா யமன் தேசத்திலுள்ள தனது கவர்னருக்குக் கடிதம் எழுதினான். அதில் “ஜாஸில் உள்ள இவரிடம் நல்ல துணிச்சலான இரு வீரர்களை அனுப்பி வை. அவர்கள் அவரை என்னிடம் கொண்டு வரட்டும்” என்று குறிப்பிட்டான். இக்கடிதம் கிடைத்தவுடன் கவர்னர் பாதான் தன்னிடமுள்ள வீரர்களிலிருந்து இருவரைத் தேர்ந்தெடுத்து நபி (ஸல்) அவர்களிடம் அனுப்பி வைத்தான். மேலும் அவ்விருவரிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்தான். அதில் “இக்கடிதம் கிடைத்தவுடன் நபியவர்கள் இந்த இருவருடன் உடனே புறப்பட்டு கிஸ்ராவிடம் செல்ல வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தான்.

வந்த இருவரில் ஒருவன் பெயர் கஹ்ர்மானா பானவய். இவன் கணக்கு மற்றும் ஃபார்சி மொழியை அறிந்தவன். இரண்டாமவன் பெயர் குர்குஸ்ரு.

இவ்விருவரும் மதீனா வந்து நபியவர்களைச் சந்தித்தார்கள். அவ்விருவல் ஒருவன் நபியவர்களிடம் “அரசர்களுக்கெல்லாம் அரசரான கிஸ்ரா தனது கவர்னர் பாதானுக்கு கடிதம் எழுதினார். அதில் உம்மை அழைத்து வருவதற்காக ஆட்களை உம்மிடம் அனுப்பும்படி ஆணையிட, பாதான் என்னை உம்மிடம் அனுப்பியுள்ளார். நீர் என்னுடன் புறப்பட வேண்டும்” என்று கூறியதுடன் நபியவர்களை எச்சரிக்கும்படி பல வார்த்தைகளையும் கூறினான். நபி (ஸல்) அவற்றைப் பொறுமையாக கேட்டு விட்டு, தன்னை நாளை சந்திக்குமாறு அவ்விருவரிடமும் கூறினார்கள்.

இக்காலக் கட்டத்தில் மன்னர் கைசன் படையுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்த கிஸ்ராவின் படையினர் கடும் தோல்வியடைந்தனர். இதற்குப் பின் கிஸ்ராவுக்கு எதிராக அவனது குடும்பத்திலிருந்தே பெரும் கிளர்ச்சி ஏற்பட்டது. கிஸ்ராவின் மகன் ஷீர்வை தகப்பனைக் கொன்று ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டான். இச்சம்பவம் ஹிஜ்ரி 7, ஜுமாதா அல் ஊலா பிறை 10, செவ்வாய் இரவு நடந்தது. அச்சம்பவம் நடந்த அதே நேரத்தில் அதை வஹியின் வாயிலாக நபி (ஸல்) அறிந்து கொண்டார்கள். (ஃபத்ஹுல் பாரி, தாக் இப்னு கல்தூன்)

மறுநாள் இரு தூதர்களும் வந்தபோது நபி (ஸல்) அச்செய்தியை அவர்களுக்குக் கூறினார்கள். அதற்கு அவ்விருவரும் “நீர் என்ன பேசுகிறாய் என்று தெரிந்துதான் பேசுகிறாயா? இதற்கு முன் மிக இலகுவான தண்டனையைத்தான் நாம் உம்மிடம் கூறியுள்ளோம். நீர் சொன்ன இச்செய்தியை நாங்கள் எழுதி கவர்னருக்கு அனுப்பலாமா?” என்று கூறினர். அதற்கு நபியவர்கள் “ஆம்! அவருக்கு இச்செய்தியை என் சார்பாக அனுப்பி வையுங்கள்.” என்றும் “எனது மார்க்கமும், ஆட்சியும் கிஸ்ராவின் ஆட்சி எதுவரை இருக்கிறதோ அதுவரை வந்தடையும். எதுவரை குதிரையும் ஒட்டகமும் செல்ல முடியுமோ அதுவரை சென்றடையும். அவர் இஸ்லாமை ஏற்றுக் கொண்டால் அவரது கட்டுப்பாட்டில் உள்ளதை அவருக்கே சொந்தமாக்கி விடுவேன், அவரது இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு அவரையே அரசனாக்கி விடுவேன்” என்றும் சொல்லுங்கள் என்றார்கள்.

அந்த இருவரும் நபி (ஸல்) அவர்களிடமிருந்து புறப்பட்டு தங்களது கவர்னர் பாதானிடம் வந்தனர். பிறகு நபி (ஸல்) கூறி அனுப்பிய செய்தியைக் கூறினார்கள். சிறிது நேரத்திற்குள் ஷீர்வையின் கடிதம் ஒன்று அவரிடம் வந்தது. அதில்: “நான் எனது தந்தையைக் கொன்று விட்டேன். எனது தந்தை தனது கடிதத்தில் குறிப்பிட்ட மனிதர் விஷயத்தில் சற்று பொறு. எனது அடுத்த கட்டளை வரும் வரை அவரை பழித்துப் பேசிவிடாதே” என்று எழுதப்பட்டிருந்தது. (தாரீகுல் உமமில் இஸ்லாமிய்யா, ஃபத்ஹுல் பாரி)