Author Topic: இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு!  (Read 47884 times)

Offline Yousuf

இறுதி வரை சண்டையிட முஸ்லிம்கள் துணிதல்

இந்தக் கடைசி நேரத்தில் இரண்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதன் மூலம் முஸ்லிம்களின் துணிவையும், அல்லாஹ்வின் பாதையில் மரணத்தை சந்திக்க வேண்டும் என்ற அவர்களுக்கு இருந்த அலாதியான ஆர்வத்தையும் நாம் தெரிந்துகொள்ளலாம்.

1) கஅப் இப்னு மாலிக் (ரழி) கூறுகிறார்கள்: “உஹுத் போரில் நானும் கலந்து கொண்டேன். அப்போது கொல்லப்பட்டுக் கிடந்த முஸ்லிம்களை எதிரிகள் சிதைப்பதைப் பார்த்து திகைத்து நின்றுவிட்டேன். அங்கே ஒருவன் உறுதியான உருக்குச் சட்டை அணிந்தவனாக கொல்லப்பட்ட முஸ்லிம்களைப் பார்த்து “அறுக்கப்பட்ட ஆடுகளைப் போன்று வீழ்ந்து கிடக்கிறார்கள்” என்று கூறியவனாக முஸ்லிம்களைக் கடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது கவச ஆடை அணிந்த முஸ்லிம் ஒருவர் அவன் தனக்கருகில் வருவதை எதிர்பார்த்தார். நான் அந்த முஸ்லிமுக்கு பின்புறமாய் நின்றவனாக எனது பார்வையால் அந்த முஸ்லிமையும் எதிரியையும் கவனித்தேன். எதிரி நல்ல ஆயுதமுள்ளவனாகவும் வலிமை மிக்கவனாகவும் தெரிந்தான். அவ்விருவரும் சந்திப்பார்களா? என்று நான் எதிர்பார்த்தேன். அதே போரில் இருவரும் சந்தித்து சண்டையிட்டனர். முஸ்லிம் அந்த எதிரியை ஒரு வெட்டுதான் வெட்டினார். அந்த வெட்டு அவனது பிரித்தட்டு வழியாக சென்று, அவனை இரண்டாக பிளந்தது. பின்பு அவர் தனது முகத் திரையை விலக்கி என்னைப் பார்த்து “கஅபே! என்ன பார்க்கிறாய். நான்தான் அபூ துஜானா!” என்று கூறினார்.(அல்பிதாயா)

2) பல முஸ்லிம் பெண்மணிகளும் போர் முடியும் தருவாயில் மைதானத்துக்கு வந்து போரில் தங்களால் முடிந்த பங்காற்றினார்கள்.

அனஸ் (ரழி) இதைப் பற்றி கூறுகிறார்கள்: நபியவர்களின் மனைவியான ஆயிஷா பின்த் அபூபக்ர் (ரழி) அவர்களையும் உம்மு சுலைம் (ரழி) அவர்களையும் பார்த்தேன். அவர்கள் தங்களது கெண்டைக் கால்கள் தெரியுமளவு ஆடையை உயர்த்தியவர்களாகத் தோல் துருத்திகளில் தண்ணீர் நிரப்பி, அதை முதுகில் சுமந்து வந்து முஸ்லிம்களுக்குப் புகட்டினார்கள். தண்ணீர் தீர்ந்துவிடவே மீண்டும் நிரப்பி வந்து புகட்டினார்கள். இவ்வாறு இறுதி வரை சிரமம் பாராது பல முறை நிரப்பி வந்து காயமடைந்த முஸ்லிம்களுக்கும் மற்ற வீரர்களுக்கும் தாகம் தீர்த்தார்கள். (ஸஹீஹுல் புகாரி)

மேலும் உமர் (ரழி) கூறுகிறார்கள்: உஹுத் போரில் உம்மு ஸலீத் என்ற அன்சாரிப் பெண்ணும் தோல் துருத்தியில் தண்ணீர் நிரப்பி வந்து எங்களது தாகம் தீர்த்தார்கள். (ஸஹீஹுல் புகாரி)

உம்மு அய்மன் (ரழி) என்ற பெண்மணியும் போர் மைதானத்திற்கு வந்தார்கள். முஸ்லிம்களில் சிலர் தோற்று மதீனாவுக்கு ஓடுவதைப் பார்த்த அவர், அவர்களின் முகத்தில் மண்ணை வாரி இறைத்தார். மேலும், அவர்களில் சிலரைப் பார்த்து “இந்தா! ஆடை நெய்யும் ராட்டையை வாங்கிக் கொள். வாளை என்னிடம் கொடு!” என்று ரோஷமூட்டினார். பின்பு, போர்க்களம் வந்து காயமடைந்தவர்களுக்குத் தண்ணீர் புகட்டினார். அது சமயம் ‘ப்பான் இப்னு அரக்கா’ எனும் அரக்கன் ஒருவன் அப்பெண்மணியை நோக்கி அம்பெறிந்தான். அவர்கள் கீழே விழுவே ஆடை விலகியது. அந்த மூடன் இதைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தான். இக்காட்சி நபி (ஸல்) அவர்களை சிரமத்திற்குள்ளாக்கியது. எனவே, கூர்மையற்ற ஓர் அம்பை ஸஅது இப்னு அபீவக்காஸிடம் கொடுத்து “ஸஅதே! இந்த அம்பை அவனை நோக்கி எறி!” என்றார்கள். ஸஅது (ரழி) அவர்கள் அந்த அம்பை அவனை நோக்கி எறிய, அது அவனது கழுத்தைத் தாக்கியது. அவன் மல்லாந்து விழ, அவனது ஆடையும் அகன்றது. அதைப் பார்த்து நபியவர்கள் கடைவாய் பல் தெரியுமளவுக்கு சித்துவிட்டு, “அப்பெண்மணிக்காக ஸஅது பழி தீர்த்து விட்டார். அல்லாஹ் ஸஅதின் பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டான்” என்று கூறினார்கள். (அஸ்ஸீரத்துல் ஹல்பிய்யா)

மலைக் கணவாயில்

நபி (ஸல்) அவர்கள் கணவாயில் நல்ல அமைப்பான இடத்தை அடைந்த போது அலீ இப்னு அபூதாலிப் (ரழி) தங்களது கேடயத்தை எடுத்துச் சென்று அதில் தண்ணீர் நிரப்பி வந்தார்கள். அத்தண்ணீர் பெரிய குழியுடைய பாறையில் நிரம்பியிருந்த தண்ணீர் என்று சிலர் கூறுகின்றனர். வேறு சிலர் “அது ஒரு கிணற்றிலிருந்து எடுத்து வந்த நீர்” என்கின்றனர். எது எப்படியோ அந்த தண்ணீலிருந்து நபியவர்களுக்கு விருப்பமற்ற வாடை வீசவே, நபியவர்கள் அதை குடிக்க வில்லை. தனது முகத்திலிருந்த இரத்தக் கரையைக் மட்டும் கழுவிக் கொண்டார்கள். “அல்லாஹ்வின் கோபம் அவனது நபியின் முகத்தை காயப்படுத்தியவன் மீது கடினமாகட்டும்” என்று கூறியவர்களாக தனது தலையின் மீதும் கொஞ்சம் தண்ணீரை ஊற்றிக் கொண்டார்கள். (இப்னு ஹிஷாம்)

இந்நிகழ்ச்சி குறித்து நபித்தோழர் ‘ஸஹ்ல்’ (ரழி) நமக்குக் கூடுதல் விவரம் அளிக்கிறார்: “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நபி (ஸல்) அவர்களின் காயத்தை யார் கழுவியது யார் தண்ணீர் ஊற்றியது எதைக் கொண்டு அவர்களுக்கு மருந்திடப்பட்டது என்பதெல்லாம் எனக்கு நன்றாகத் தெரியும். அதாவது, நபியவர்களின் மகளார் ஃபாத்திமா (ரழி) கழுவினார்கள். அலீ (ரழி) அவர்கள் கேடயத்திலிருந்து தண்ணீரை ஊற்றினார்கள். தண்ணீர் ஊற்றுவதால் இரத்தம் நிற்காமல் அதிகமாகிறது என்பதைப் பார்த்தவுடன் ஃபாத்திமா (ரழி) பாயின் ஒரு பகுதியை கிழித்து அதை எரித்து அந்த சாம்பலை அக்காயத்தில் வைத்தார்கள். உடனே, இரத்தம் நின்றுவிட்டது. (ஸஹீஹுல் புகாரி)

அதற்குள்ளாக முஹம்மது இப்னு மஸ்லமா (ரழி) மதுரமான நீர் எடுத்து வந்தார். நபி (ஸல்) அவர்கள் அதைப் பருகி, அவருக்காக நல்ல பிரார்த்தனையும் செய்தார்கள். (ஸீரத்துல் ஹல்பிய்யா)

இவ்வாறு காலை பொழுதில் தொடங்கிய போர் முதலில் வெற்றி பிறகு சேதம் என்று ஒரு வழியாக மதிய வேளையில் முடிவுக்கு வந்தது. இப்போரில் நபியவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் ஏற்பட்ட காயமும் களைப்பும் தெரிந்ததே. எனவே, நபியவர்கள் லுஹர் (மதிய) நேரத் தொழுகையை உட்கார்ந்து தொழ, தோழர்களும் அவ்வாறே தொழுதார்கள். (இப்னு ஹிஷாம்)

அபூ ஸுஃப்யானின் மகிழ்ச்சி

எதிரிகள் மக்காவிற்கு திரும்ப முழுமையாக ஆயத்தமாயினர். அதற்குள் முஸ்லிம்களின் உண்மை நிலைமையை அறிவதற்காக அபூ ஸுஃப்யான் மலையின் மீது ஏறி “உங்களில் முஹம்மது இருக்கிறாரா?” என்று கூவினார். முஸ்லிம்களில் எவரும் அவருக்கு பதிலளிக்க வில்லை. பின்பு உங்களில் “அபூ குஹாஃபாவின் மகன் (அபூபக்ர்) இருக்கிறாரா?” என்று கூவினார். அப்போதும் முஸ்லிம்கள் பதிலளிக்கவில்லை. பின்பு அவர் “உமர் இப்னு கத்தாப் இருக்கிறாரா?” என்று கூவினார். அதற்கும் முஸ்லிம்கள் பதிலளிக்கவில்லை. காரணம், நபி (ஸல்) பதிலளிக்க வேண்டாமென்று முஸ்லிம்களைத் தடுத்திருந்தார்கள். “இஸ்லாமின் வலிமை இம்மூவரால்தான்” என்று அபூ ஸுஃப்யானுக்கும் அவரது கூட்டத்தாருக்கும் தெரிந்திருந்த காரணத்தால்தான், அவர் இம்மூவரைப் பற்றியும் விசாரித்தார். முஸ்லிம்களிடமிருந்து எந்த பதிலும் வராததால் “என் மக்களே! அறிந்து கொள்ளுங்கள். இவர்களையே நீங்கள் கொன்று விட்டீர்கள் அது போதும்!” என்று அபூஸுஃப்யான் கூறினார். இதைக் கேட்ட உமர் (ரழி) தன்னை அடக்க முடியாமல் “ஏய்! அல்லாஹ்வின் எதிரியே! நீ யாரையெல்லாம் கூறினாயோ அவர்கள் உயிரோடுதான் இருக்கிறார்கள். அல்லாஹ் என்றும் உனக்குக் கவலையைத்தான் தருவான். எனவே, நீ மகிழத் தேவையில்லை” என்று பதிலளித்தார்கள். சிறிது அமைதிக்குப் பிறகு அபூ ஸுஃப்யான் மீண்டும் பேசினார். “உங்களில் கொல்லப்பட்டோன் உடல்கள் சிதைக்கப்பட்டுள்ளன. அப்படி செய்ய வேண்டுமென நான் கட்டளையிடவில்லை. ஆனாலும், அது எனக்கு எந்த வருத்தமும் அளிக்கவில்லை” என்றார். பின்பு “ஹுபுல் எனும் சிலையே! உயர்வு உனக்குத்தான்” என்று கூறினார்.

அதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் “இப்போது நீங்கள் அவருக்கு பதிலளிக்க மாட்டீர்களா?” என்று கேட்க, “நாங்கள் என்ன பதிலளிக்க வேண்டும்?” என்று முஸ்லிம்கள் கேட்டார்கள். அதற்கு “அல்லாஹ்தான் உயர்ந்தவன் அவனே கண்ணியமிக்கவன் என்று பதிலளியுங்கள்” என்று நபியவர்கள் கூறினார்கள் அவர்களும் அவ்வாறே பதிலளித்தார்கள்.

பின்பு “எங்களுக்கு உஜ்ஜா இருக்கிறது. உங்களுக்கு உஜ்ஜா இல்லையே!” என்றார் அபூ ஸுஃப்யான்.

நபி (ஸல்) அவர்கள் “அவருக்கு நீங்கள் பதிலளிக்க மாட்டீர்களா?” என்று கேட்க “நாங்கள் என்ன பதிலளிப்பது?” என்று நபித்தோழர்கள் கேட்டனர், “அல்லாஹ் எங்களுக்கு எஜமானாக இருக்கிறான். உங்களுக்கு எஜமானன் இல்லையே!” என பதிலளியுங்கள் என்றார்கள். நபித்தோழர்களும் அவ்வாறே கூறினார்கள்.

அதன் பிறகு, “எவ்வளவு மகிழ்ச்சியான செய்தி. இந்நாள் பத்ர் போருக்குப் பகரமாக ஆகிவிட்டது. போர் இப்படித்தான் கிணற்று வாளியைப் போன்றது” என்றார் அபூஸுஃப்யான். அதற்கு உமர் (ரழி) “ஒருக்காலும் சமமாக முடியாது. எங்களில் கொல்லப்பட்டவர் சுவனத்தில் இருக்கிறார். உங்களில் கொல்லப்பட்டவர் நரகத்தில் இருக்கிறார்” என்று பதிலடி தந்தார்கள். பின்பு அபூஸுஃப்யான் “உமரே! என்னிடம் வா” என்று அழைத்தார். நபி (ஸல்) அவர்கள் “உமரே! நீ அவரிடம் சென்று அவர் என்ன கூறுகிறார் என்று கேட்டு வாருங்கள்” என்றார்கள். உமர் (ரழி) அபூஸுஃப்யானிடம் வந்தவுடன் “உமரே! அல்லாஹ்வுக்காக நான் உன்னிடம் கேட்கிறேன். உண்மையில் நாங்கள் முஹம்மதைக் கொன்று விட்டோமா? இல்லையா?” என்று கேட்டார். அதற்கு உமர் (ரழி) “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர்களை நீங்கள் கொல்ல வில்லை, அவர்கள் உமது பேச்சை இப்போதும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்” என்றார்கள். அதற்கு “இப்னு கமிஆவை விடவும் நல்லவராகவும் உண்மை சொல்பவராகவும் நான் உன்னை கருதுகிறேன்” என்று அபூ ஸுஃப்யான் கூறினார். (இந்த இப்னு கமிஆ என்பவனே நபி (ஸல்) அவர்களை தான் கொன்றுவிட்டதாக ஊளையிட்டவன்.) (ஸஹீஹுல் புகாரி, இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆது)

Offline Yousuf

பத்ரில் சந்திக்க அழைத்தல்

மேற்கூறிய உரையாடலுக்குப் பிறகு உமர் (ரழி) திரும்பிவிட்டார்கள். அபூ ஸுஃப்யானும் அவரது படையும் மைதானத்தை விட்டு புறப்படும் போது “அடுத்த ஆண்டு பத்ர் மைதானத்தில் ஷஅபான் மாதம் நாம் உங்களைச் சந்திப்போம்” என்று முஸ்லிம்களுக்கு அறிக்கை விடுத்தார். நபி (ஸல்) அவர்கள் தனது தோழர்களில் ஒருவருக்கு “ஆம்! அவ்வாறே ஆகட்டும் என்று சொல்” என்றார்கள். இவ்வாறு முடிவு செய்யப்பட்டப் பிறகு அபூ ஸுஃப்யான் படையுடன் மக்கா நோக்கிப் பயணமானார். (இப்னு ஹிஷாம்)

எதிரிகளின் நிலை அறிதல்

பின்பு நபி (ஸல்) அவர்கள் அலீ இப்னு அபீதாலிப் (ரழி) அவர்களை அனுப்பி “நீ இவர்களைப் பின்தொடர்ந்து செல் அவர்கள் என்ன செய்கிறார்கள்? அவர்களது நோக்கம் என்ன? என்று பார்த்து வர அவர்கள் ஒட்டகத்தில் வாகனித்து குதிரைகளை இழுத்துச் சென்றால் அவர்கள் மக்காவிற்கு செல்கிறார்கள் என்று பொருள் அவர்கள் குதிரையில் வாகனித்து ஒட்டகத்தை இழுத்துச் சென்றால் அவர்கள் மதீனாவை நோக்கிச் செல்கிறார்கள் என்று பொருள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர்கள் மதீனா சென்றால் நான் அங்கு சென்று அவர்களுடன் போர் செய்வேன்” என்றார்கள்.

அலீ (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: “நான் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்க்க அவர்களைப் பின்தொடர்ந்து சென்றேன். அவர்கள் ஒட்டகத்தில் வாகனித்துக் குதிரைகளை இழுத்துச் சென்றார்கள். அவர்களது பயணம் மக்கா நோக்கியே இருந்தது.” (இப்னு ஹிஷாம்)

தியாகிகளை கண்டெடுத்தல்

எதிரிகள் சென்றதற்குப் பின் கொல்லப்பட்டவர்களையும் காயமடைந்தவர்களையும் தேடுவதில் முஸ்லிம்கள் ஈடுபட்டனர். இதைப் பற்றி ஜைது இப்னு ஸாபித் (ரழி) இவ்வாறு கூறுகிறார்:

போர் முடிந்த பின் ஸஅது இப்னு ரபீஆவைத் தேடுவதற்காக நபி (ஸல்) அவர்கள் என்னை அனுப்பினார்கள். “நீ அவரைப் பார்த்து விட்டால் அவருக்கு எனது ஸலாம் கூறி, உனது நிலை என்னவென்று அல்லாஹ்வின் தூதர் விசாரிக்கிறார்கள்” என்று சொல்லுமாறு என்னைப் பணித்தார்கள். கொல்லப்பட்டவர்களிடையே அவர்களைத் தேடி அலைந்தேன். நான் அவரைப் பார்த்த போது அவர் இறுதி மூச்சுகளை எண்ணிக் கொண்டிருந்தார். அவருடைய உடலில் அம்பு, ஈட்டி, வாள் ஆகிய ஆயுதங்களால் ஏற்பட்ட எழுபது காயங்கள் இருந்தன. நான் அவரிடம் “ஸஅதே! அல்லாஹ்வின் தூதர் உனக்கு ஸலாம் கூறுகிறார்கள். மேலும், உமது நிலையை விசாரித்து வர என்னை அனுப்பினார்கள்” எனக் கூறினேன். அதற்கு “அல்லாஹ்வின் தூதர் மீதும் ஸலாம் உண்டாகட்டுமாக; அல்லாஹ்வின் தூதரே! நான் சுவனத்தின் நறுமணத்தை உணர்கிறேன் என நீர் நபியவர்களிடம் சொல் மேலும், உங்களில் ஒருவர் உயிருடன் இருக்கும் நிலையில் நபியவர்களின் உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் உங்களுக்கு மன்னிப்பு என்பதே கிடையாது என்று என் நண்பர்களாகிய அன்சாரிகளிடம் நீ சொல்” என்று தனது இறுதி வார்த்தைகளை கூறிய பின் உயிர் நீத்தார். (ஜாதுல் மஆது)

காயமடைந்தவர்களில் உஸைம் என்றழைக்கப்படும் அம்ர் இப்னு ஸாபித் (ரழி) என்பவரும் ஒருவர். அவர் உயிர் பிரியும் நிலையில் இருந்தார். இதற்கு முன்பு அவருக்கு முஸ்லிம்கள் பலமுறை இஸ்லாமை எடுத்துக் கூறியும், அவர் அதை ஏற்றுக் கொள்ளாமல் மறுத்து வந்தார். இவரை இந்நிலையில் பார்த்த முஸ்லிம்கள் இந்த உஸைம் ஏன் இங்கு வந்தார்! நாம் போருக்கு வரும்போது அவருக்கு நமது மார்க்கம் பிடிக்காமல் இருந்ததே! என்று கூறியவர்களாக அவரிடம் “உமது இனத்தை பாதுகாக்க வேண்டும் என்ற ஆர்வத்தால் வந்தீரா? அல்லது இஸ்லாமை ஏற்று அதற்காக போர் புரிய வேண்டும் என்ற ஆர்வத்தில் வந்தீரா?” என விசாரித்தனர். அதற்கவர் “இல்லை! இஸ்லாம் மீதுள்ள பிரியத்தினால்தான் போரில் கலந்து கொண்டேன். நான் அல்லாஹ் வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொண்டேன். அல்லாஹ்வின் தூதரோடு சேர்ந்து எதிரிகளிடம் போர் புந்தேன். இப்போது எனது நிலை என்னவென நீங்கள் பார்க்கிறீர்கள்” என்று தனது பேச்சை முடிக்க மரணம் அவரை ஆரத் தழுவியது.

இவரது நிலையை நபி (ஸல்) அவர்களிடம் முஸ்லிம்கள் கூறியதற்கு நபியவர்கள் அவர் சுவனவாசிகளில் ஒருவர் என்றார்கள்.

அபூஹுரைரா (ரழி) கூறுகிறார்: உஸைம் அல்லாஹ்விற்காக ஒரு நேரத் தொழுகை கூட தொழவில்லை (இருந்தும் நபியவர்களின் நாவினால் சுவனவாசி என்ற நற்செய்தி பெற்றார்.) (இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆது)

காயமடைந்தவர்களில் ‘குஜ்மான்’ என்பவரும் ஒருவர். அவர் மிகப்பெரும் வீரராய் போரில் சண்டையிட்டார். இவர் மட்டும் தனியாக ஏழு அல்லது எட்டு எதிரிகளைக் கொன்றார். இவருக்கு ஆழமான காயம் ஏற்படவே, பூமியில் விழுந்து கிடந்தார். இவரை முஸ்லிம்கள் ளஃபர் கிளையினரின் வீட்டுக்குத் தூக்கிச் சென்றனர். அவருக்கு முஸ்லிம்கள் நற்செய்தி கூறினர். அதற்கு அவர் “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் இன வெறிக்காகத்தான் போரிட்டேன். இனவெறி மட்டும் இருக்கவில்லையெனில் நான் போரில் கலந்திருக்க மாட்டேன்” என்றார். பின்பு காயத்தின் வேதனை கடுமையாகவே அவர் தற்கொலை செய்து கொண்டார். இவரைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் “இவர் நரகவாசிகளில் ஒருவர்” என்றார்கள். (இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆது)

அல்லாஹுவின் ஏகத்துவக் கலிமாவை உயர்த்த வேண்டும் என்ற நோக்கமில்லாமல் இனவெறி அல்லது தேசப்பற்றுக்காக போர் புரிபவர்களின் முடிவு இதுதான். இவர்கள் இஸ்லாமியக் கொடியின் கீழ் போரிட்டாலும் அல்லது அதற்கும் மேலாக நபியவர்களின் படையிலிருந்தாலும் இவர்கள் செல்லுமிடம் நரகம்தான்.

மேற்க்கூறப்பட்ட நிகழ்ச்சிக்கு மாற்றமாக மற்றொரு நிகழ்ச்சியும் நடந்தது. அதாவது ஸஅலபா கிளையைச் சேர்ந்த யூதர்களில் ஒருவரும் போரில் கொல்லப்பட்டார். அவரது பெயர் முகைரீக். அவர் தனது இனத்தவரிடம் “யூதர்களே! அல்லாஹிவின் மீது ஆணையாக! முஹம்மதுக்கு உதவி செய்வது உங்களுக்கு மீது கட்டாயக் கடமை என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்தானே?” எனக் கூறினார். அதற்கவர்கள் “இன்றைய தினம் சனிக்கிழமை அல்லவா நாம் எப்படி போருக்கு செல்ல முடியும்?” என்று எதிர்கேள்வி கேட்டனர். “உங்களுக்கு சனிக்கிழமை என்பதே இல்லாமலாகட்டும்!” என்று கோபமாக கூறி தனது வாளையும் ஆயுதத்தையும் எடுத்துக்கொண்டு “நான் போரில் கொல்லப்பட்டு விட்டால் எனது செல்வங்கள் அனைத்தும் முஹம்மது அவர்களைச் சாரும் அதை அவர்கள் விரும்பியபடி செய்து கொள்ளலாம்” என்று கூறி, போரில் கலந்து வீரமரணமடைந்தார். இவரை பற்றிய செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு தெரியவர “முகைரீக் யூதர்களில் மிகச் சிறந்தவர்” என்று அவரை பற்றி கூறினார்கள். (இப்னு ஹிஷாம்)

Offline Yousuf

தியாகிகளின் உடல்களை நல்லடக்கம் செய்தல்

போரில் உயிர்நீத்த தியாகிகளை முன்னோக்கி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நான் உங்களுக்கு சாட்சியாக இருப்பேன். அல்லாஹ்வின் பாதையில் காயமடைந்தவரை மறுமையில் அல்லாஹ் எழுப்பும் போது அவரது காயத்திலிருந்து இரத்தம் வடியும்; அதன் நிறம் இரத்தத்தின் நிறமாகத்தான் இருக்கும்; ஆனால் அதன் மணமோ கஸ்தூரி போன்று இருக்கும்.” (இப்னு ஹிஷாம்)

நபித்தோழர்களில் சிலர் தங்கள் குடும்பத்தில் கொல்லப்பட்டவர்களை மதீனாவிற்கு எடுத்து சென்றிருந்தனர். நபியவர்கள், அவர்களை மீண்டும் உஹுதுக்கு தூக்கி வரும்படி கூறி “அவர்களை குளிப்பாட்டக் கூடாது; அவர்கள் உடலிலுள்ள போருக்குரிய ஆயுதங்களைக் கழற்றிய பின், அவர்கள் கொல்லப்பட்ட இடங்களிலேயே அவர்களை அடக்க வேண்டும்” என்று கட்டளையிட்டார்கள். ஒரு கப்ரில் இரண்டு அல்லது மூன்று உடல்களை நபியவர்கள் அடக்கம் செய்தார்கள். மேலும், ஓரே ஆடையில் இருவரைப் போர்த்தினார்கள். யார் அதிகமாகக் குர்ஆனை மனனம் செய்தவர் என்று விசாரித்து அவரைப் கப்ரில் பக்கவாட்டுக் குழியில் முதலாவதாக வைத்தார்கள். அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஹராம், அம்ர் இப்னு ஜமூஹ் (ரழி) ஆகிய இருவரும் ஒருவரை ஒருவர் நேசித்து வந்ததால் இருவரையும் ஓரே கப்ரில் அடக்கம் செய்தார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஜாதுல் மஆது)

முஸ்லிம்கள் ஹன்ளலாவைத் தேடிய போது அவரது உடல் ஒரு மூலையில் தண்ணீர் சொட்டிய நிலையில் இருந்தது. அதை அறிந்த நபி(ஸல்) அவர்கள் “வானவர்கள் அவரை குளிப்பாட்டுகிறார்கள்” என்று தங்களது தோழர்களிடம் கூறினார்கள். பின்பு “அவரது குடும்பத்தாரிடம் சென்று விவரம் அறிந்து வாருங்கள்” என்று கூறி அனுப்பினார்கள். தோழர்கள் அவரது மனைவியிடம் விசாரிக்க “ஹன்ளலா (ரழி) முழுக்குடைய நிலையில் (குளிக்க வேண்டிய நிலையில்) போரில் கலந்து கொண்டதாக” மனைவி கூறினார். இதன் காரணமாகத்தான் ஹன்ளலாவிற்கு ‘கஸீலுல் மலாயிக்கா‘ (மலக்குகள் குளிப்பாட்டியவர்) என்ற பெயர் வந்தது. (ஜாதூல் மஆது)

தனது சிறய தந்தையும், பால்குடி சகோதரருமாகிய ஹம்ஜாவின் நிலையைப் பார்த்தவுடன் நபி(ஸல்) அவர்கள் மிகுந்த கவலை அடைந்தார்கள். நபியவர்கள் மாமி ஸஃபிய்யாவின் மகன் ஜுபைரிடம் “அவரைத் தடுத்து திரும்ப செல்லுமாறு கூறுங்கள்” என்றார்கள். சகோதரருக்கு ஏற்பட்ட நிலைமையை அவர் பார்க்க வேண்டாம் என்பதற்காக நபியவர்கள் இவ்வாறு செய்தார்கள். ஆனால், அவர் “நான் ஏன் பார்க்கக் கூடாது? எனது சகோதரர் சிதைக்கப் பட்டுள்ளார் என்ற செய்தி எனக்கு தெரியும். இன்ஷா அல்லாஹ்! இதற்கான நன்மையை நான் அல்லாஹவிடம் எதிர்பார்த்திருக்கிறேன்” என்று கூறவே, அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. பிறகு ஸஃபிய்யா (ரழி) தனது சகோதரரை பார்த்து “இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்” (நாங்கள் அல்லாஹ்விற்காக உள்ளவர்கள். அவனிடமே மீளுபவர்கள்) என்று கூறி, அவரின் நன்மைக்காகவும் பாவமன்னிப்புக்காகவும் அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள். இதற்குப் பின் ஹம்ஜா (ரழி) அவர்களை அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷு (ரழி) அவர்களுடன் நல்லடக்கம் செய்ய நபியவர்கள் ஏற்பாடு செய்தார்கள்.

இப்னு மஸ்வூத் (ரழி) கூறுகிறார்: “ஹம்ஜா (ரழி) அவர்களுக்காக நபி (ஸல்) அழுததைப் போன்று வேறு யாருக்கும் அவர்கள் அழுது நாங்கள் பார்க்கவில்லை. ஹம்ஜா (ரழி) அவர்களைக் கிப்லாவின் திசையில் வைத்து அவரது ஜனஸாவுக்கு முன் நபியவர்கள் நின்றார்கள். அப்போது தனது சிறிய தந்தைக்கு ஏற்பட்டதை எண்ணி நபியவர்கள் அதிகமாக அழுதார்கள்” (முக்தஸர் ஸீரத்துர்ரஸூல்)

போரில் உயிர்நீத்த தியாகிகளின் காட்சி முஸ்லிம்களது உள்ளங்களை கசக்கி பிழிந்தது; கண்களை குளமாக்கியது; தியாகிகளின் உடல்களை மறைப்பதற்குப் போதுமான துணிகள் கிடைக்கவில்லை. ஹம்ஜா (ரழி) அவர்களைப் போர்துவதற்கு கருப்பு, வெள்ளை நிறக் கோடுகள் உள்ள ஒரு போர்வையைத் தவிர வேறெதுவும் இருக்கவில்லை. அப்போர்வையில் அவரது தலையை மறைத்தால் பாதங்கள் தெரிந்தன; பாதங்களை மறைத்தால் தலை தெரிந்தது. பிறகு தலை மறைக்கப்பட்டு, கால்கள் “இத்கிர்” என்ற செடியால் மூடப்பட்டன. (முஸ்னது அஹ்மது, மிஷ்காத்)

அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) கூறுகிறார்கள்: “முஸ்அப் (ரழி) கொல்லப்பட்டார். அவர் என்னை விட மிகக் சிறந்தவர். அவர் உடலை ஒரு சிறிய போர்வையால்தான் போர்த்தப்பட்டது. அவரது தலைப் பக்கம் துணியை இழுத்தால் கால்கள் தெரிந்தன. கால்களின் பக்கம் துணியை இழுத்தால் தலை தெரிந்தது. இந்நிலையைப் பார்த்த நபி (ஸல்) அவர்கள் “அப்போர்வையால் அவரது தலையை மறைத்து, அவரது காலுக்கு “இத்கிர்” என்ற செடியைப் போர்த்தி விடுங்கள்” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

நபியவர்களின் பிரார்த்தனை

உஹுத் மைதானத்திலிருந்து எதிரிகள் சென்றுவிட்ட போது எங்களிடம் நபி (ஸல்) அவர்கள் “நீங்கள் வரிசையாக நில்லுங்கள்; கண்ணியத்திற்கும் மகிமைக்கும் உரித்தான எனது இறைவனை நான் புகழ வேண்டும்” என்று கூறினார்கள். நாங்கள் நபியவர்களுக்குப் பின் பல அணிகளாக நின்று கொண்டோம்.

அதற்குப் பின் நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள்:

“அல்லாஹ்வே! புகழெல்லாம் உனக்கே உரித்தானது. நீ விரித்ததை மடக்குபவர் யாரும் இல்லை. நீ மடக்கியதை விரிப்பவர் யாரும் இல்லை. நீ வழிகேட்டில் விட்டவருக்கு நேர்வழி காட்டுபவர் யாரும் இல்லை. நீ நேர்வழி காட்டியவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. நீ தடுத்ததைக் கொடுப்பவர் யாரும் இல்லை. நீ கொடுத்ததைக் தடுப்பவர் யாரும் இல்லை. நீ நெருக்கமாக்கி வைத்ததை தூரமாக்கி வைப்பவர் யாருமில்லை. அல்லாஹ்வே! உனது வளங்கள், உனது கருணை, உனது கிருபை, உனது இரணம் ஆகியவற்றை நீ எங்களுக்கு விசாலமாக வழங்குவாயாக!

அல்லாஹ்வே! நீங்காத, அகன்று போகாத, நிரந்தரமான அருட்கொடையை உன்னிடம் கேட்கிறேன். அல்லாஹவே! சிரமமான நேரத்தில் உதவியையும், பயத்தின் நேரத்தில் பாதுகாப்பையும் உன்னிடம் கேட்கிறேன். அல்லாஹ்வே! நீ எங்களுக்கு கொடுத்தவற்றின் தீங்கிலிருந்தும், நீ எங்களுக்கு கொடுக்காதவற்றின் தீங்கிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன். அல்லாஹ்வே! எங்களுக்கு ஈமானை (இறைநம்பிக்கையை) பிரியமாக்கி வை. அதை எங்களது உள்ளங்களில் அலங்கரித்து வை. இறை நிராகரிப்பு, உனது கட்டளைக்கு மாறுசெய்வது, எனக்குக் கட்டுப்படாமல் விலகிப்போவது ஆகியவற்றை எங்களுக்கு வெறுப்பாக்கி விடு. எங்களைப் பகுத்தறிவாளர்களில் ஆக்கிவிடு. அல்லாஹ்வே! எங்களை முஸ்லிம்களாக மரணிக்க வை! முஸ்லிமகளாக எங்களை வாழச் செய்! நஷ்டமடையாதவர்களாக, சோதனைக்குள்ளாகாதவர்களாக எங்களை நல்லோர்களுடன் சேர்த்து வை! அல்லாஹ்வே! உனது தூதர்களைப் பொய்யாக்கி, உனது வழியிலிருந்து தடுக்கும் நிராகரிப்பாளர்களை நீ அழித்துவிடு! அவர்கள் மீது உனது தண்டனையையும் வேதனையையும் இறக்குவாயாக! அல்லாஹ்வே! வேதம் கொடுக்கப்பட்டவர்களில் இருக்கும் நிராகரிப்பாளர்களை நீ அழித்துவிடு! உண்மையான இறைவனே!” (அல்அதபுல் முஃப்ரத், முஸ்னத் அஹ்மது)

Offline Yousuf

மதீனா திரும்புதல் அன்பு மற்றும் தியாகத்தின் அற்புதங்கள்

தியாகிகளை அடக்கம் செய்து, அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனிடம் பிரார்த்தனை புரிந்த பின், நபி (ஸல்) அவர்கள் மதீனா திரும்பினார்கள். போர் நடந்து கொண்டிருந்த போது இறைநம்பிக்கை கொண்ட ஆண்கள் புறத்தில் நிகழ்ந்ததைப் போன்று, திரும்பும் வழியில் இறைநம்பிக்கை கொண்ட பெண்கள் புறத்திலும் பல அற்புத நிகழ்ச்சிகள் நடந்தன.

ஹம்னா பின்த் ஜஹ்ஷ் எனும் பெண்மணி நபி(ஸல்) அவாக்ளை வழியில் சந்தித்தார். அவரிடம் அவருடைய சகோதரர் அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் மரணமான செய்தி கூறப்பட்டது. அவர் “இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்” என்று கூறி, அவருக்காக பாவ மன்னிப்புத் தேடினார். பின்பு அன்னாரின் தாய்மாமன் ஹம்ஜா (ரழி) இறந்த செய்தியும் கூறப்பட்டது. அதற்கும் அவர் “இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்” என்று கூறி பாவ மன்னிப்புத் தேடினார். பின்பு அவரது கணவர் முஸ்அப் இப்னு உமைர் (ரழி) இறந்த செய்தி கூறப்படவே, அவர் தேம்பி அழலானார். அப்போது நபி (ஸல்) அவர்கள் “ஒரு பெண்ணின் கணவன் அவளிடம் நீங்காத இடத்தைப் பெற்றிருக்கிறான்” என்று கூறினார்கள். (இப்னு ஹிஷாம்)

தீனார் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை முஸ்லிம்கள் வழியில் சந்தித்தார்கள். அந்தப் பெண்ணின் கணவரும், சகோதரரும், தந்தையும் போரில் கொல்லப்பட்டிருந்தார்கள். இவர்களின் மரணச் செய்தியை முஸ்லிம்கள் அவருக்குக் கூறினார்கள். ஆனால், அப்பெண்மணி “அல்லாஹ்வின் தூதர் எப்படி இருக்கிறார்கள்?” என்று கேட்டார். முஸ்லிம்கள் “இன்னாரின் தாயே! நீர் விரும்பியதைப் போன்று நபியவர்கள் நல்ல முறையில் இருக்கிறார்கள். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!” என்று கூறினார்கள். அதற்கு அந்தப் பெண் “எனக்கு அவர்களைக் காட்டுங்கள். நான் அவர்களைப் பார்க்கவேண்டும்” என்றார். நபியவர்களைக் கண்குளிர பார்த்தப் பிறகு “உங்களைப் பார்த்தப் பின்னால் எல்லா துன்பங்களும் எங்களுக்கு இலகுவானதே!” என்று அப்பெண்மணி கூறினார்.

வழியில் நடந்த மற்றொரு நிகழ்ச்சி: நபி (ஸல்) அவர்களை ஸஅது இப்னு முஆதின் தாயார் சந்தித்தார்கள். ஷஅது நபியவர்களுடைய குதிரையின் கடிவாளத்தைப் பிடித்தவாராக நடந்து வந்து கொண்டிருந்தார். “அல்லாஹ்வின் தூதரே! இதோ... எனது தாய் வருகிறார்” என்றார். நபியவர்கள் “நல்லபடியாக வரட்டும்” கூறி அவருக்காக நின்றார்கள. அவர் அருகே வந்தவுடன் அவரது மகன் அம்ர் இப்னு முஆத் (ரழி) இறந்ததற்கு ஆறுதல் கூறினார்கள். அதற்கு அப்பெண்மணி “நபியே! உங்களை நல்ல நிலையில் பார்த்தவுடன் மற்ற அனைத்து சோதனைகளையும் நான் சிறியதாகவே கருதுகிறேன்” என்று கூறினார். பின்பு நபியவர்கள் உஹுத் போரில் கொல்லப்பட்டவர்களுக்காக பிரார்த்னை செய்துவிட்டு “ஸஅதின் தாயே! நீர் நற்செய்தி பெற்றுக்கொள்! உஹுதில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தார்களுக்கு நற்செய்தி சொல்! அவர்கள் அனைவரும் சொர்க்கத்தில் தோழர்களாக உலவுகின்றனர். அவர்கள் குடும்பத்தார்களுக்காகவும் அவர்களின் பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்படும்” என்றார்கள். இதை கேட்ட ஸஅதின் தாயார் “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் பொருந்திக்கொண்டோம். மகிழ்ச்சி அடைந்தோம். இதற்க்குப் பின் யார் அவர்களுக்காக அழுவார்கள்! என்று கூறி, மேலும் “அல்லாஹ்வின் தூதரே! எஞ்சியிருக்கும் அவர்களது உறவினர்களுக்காக நீங்கள் பிரார்த்னை புரியுங்கள்” என்றார். நபியவர்கள் “அல்லாஹ்வே! இவர்களின் மனக் கவலையைப் போக்குவாயாக! இவர்களது சோதனைகளை நிவர்த்தி செய்வாயாக! எஞ்சி உள்ளவர்களுக்கு அழகிய பகரத்தைத் தருவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள். (அஸ்ஸீரத்துல் ஹல்பிய்யா)

ஹிஜ்ரி 3 ஷவ்வால் மாதம், பிறை 7 சனிக்கிழமை மாலை நபி(ஸல்) அவர்கள் மதீனா வந்தடைந்தார்கள்.

பிறகு குடும்பத்தாரைச் சந்தித்து தனது வாளை மகள் பாத்திமாவிடம் கொடுத்து “இதிலிருந்து இரத்தத்தைக் கழுவி வை! அல்லாஹ்வின் மீது ஆணையாக! இது எனக்கு இன்று உண்மையாக உழைத்தது” என்றார்கள். பின்பு அலியும் தனது வாளை பாத்திமாவிடம் கொடுத்து “இதனை கழுவி இதிலிருந்து இரத்தத்தை அகற்றிவிடு. அல்லாஹ்வின் மீது ஆனையாக! இன்றைய தினம் இது எனக்கு உண்மையாக தொண்டாற்றி விட்டது” என்றார்கள். “நீ போரில் உண்மையாக தொண்டாற்றியதைப் போலவே உன்னுடன் ஸஹ்ல் இப்னு ஹுனைஃப் மற்றும் அபூ துஜானாவும் உண்மையாக தொண்டாற்றினார்கள்” என்றார்கள். (இப்னு ஹிஷாம்)

முஸ்லிம்களில் எழுபது நபர்கள் கொல்லப்பட்டார்கள் என்று பெரும்பாலான அறிவிப்புகள் கூறுகின்றன. அதன் விவரமாவது:

முஹாஜிர்களில் 4 நபர்கள்; யூதர்களில் 1 நபர்; கஸ்ரஜ் இனத்தவர்களில் 41 நபர்கள்; அவ்ஸ் இனத்தவர்களில் 24 நபர்கள். (மொத்தம் 70 நபர்கள்)

இணைவைப்பவர்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை இப்னு இஸ்ஹாக் (ரஹ்) இருபத்து இரண்டு என்று கூறுகிறார். ஆனால், போர் சம்பந்தபட்ட அறிவிப்புகள் அனைத்தையும் நன்கு ஆராய்ந்து பார்க்கும்போது முப்பத்து ஏழு பேர்கள் கொல்லப்பட்டார்கள் என்று தெரிகிறது, உண்மையை அல்லாஹ்வே அறிவான் (இப்னு ஹிஷாம், ஃபத்ஹுல் பாரி)

மதீனாவில் அவசர நிலை

ஹிஜ்ரி 3 ஷவ்வால் 8, ஞாயிறு இரவு உஹுதிலிருந்து திரும்பிய பின் களைப்பும் அசதியும் எவ்வளவுதான் அதிகமாக இருந்தும் முஸ்லிம்கள் பாதூகாப்புடனே அன்றிரவை கழித்தனர். அதாவது, மதீனாவின் தெருக்களிலும், அதன் வாயில்களிலும் வீரர்கள் பாதுகாப்புக்காக நின்றிருந்தனர். நபி(ஸல்) அவர்களின் பாதுகாப்பிலும் ஒரு பிரிவினர் ஈடுபட்டிருந்தனர். எத்திசையிலிருந்தும் எதிரிகள் மூலம் ஆபத்து நிகழலாம் என்று அவர்கள் சந்தேகப்பட்டதால் இவ்வாறு விழிப்புணர்வுடன் இருந்தனர்.

Offline Yousuf

“ஹம்ராவுல்” அஸத் போர்

நபி(ஸல்) அவர்கள் நிலைமையை யோசித்தவாறே அன்றிரவைக் கழித்தார்கள். போரில் தங்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை என குறைஷிகள் சிந்திக்கத் தொடங்கினால், அதற்காக கைசேதம் அடைந்து மதீனாவின் மீது இரண்டாவது முறை போர் தொடுக்க திரும்பி வரலாம் என்று நபியவர்கள் யோசித்தார்கள். எனவே, எதிரிகளைப் பின்தொடர்ந்து சென்று மதீனாவின் எல்லைகளை விட்டே விரட்டியடிக்க வேண்டுமென்று முடிவு செய்தார்கள்.

இது குறித்து வரலாற்று ஆசிரியர்கள் கூறுவதின் சுருக்கமாவது:


உஹுத் போர் முடிந்து அடுத்த நாள் காலை, அதாவது ஹிஜ்ரி 3, ஷவ்வால் 8 ஞாயிற்றுக் கிழமை காலை, நபி(ஸல்) அவர்கள் எதிரிகளைச் சந்திப்பதற்கு முஸ்லிம்கள் ஆயத்தமாக இருக்க வேண்டுமெனக் கூறினார்கள். மேலும், உஹுத் போரில் கலந்தவர்கள்தான் தங்களுடன் வர வேண்டும் என்ற நிபந்தனையும் விதித்தார்கள். அப்துல்லாஹ் இப்னு உபை நானும் வருகிறேன் என்றான். நபியவர்கள் வேண்டாம் என்று மறுத்து விட்டார்கள். முஸ்லிம்கள் அனைவரும் தங்களுக்கு ஏற்பட்டிருந்த காயம், களைப்பு எதையும் பொருட்படுத்தாமல் நபியவர்களின் அழைப்புக்கு “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டோம். உங்களது கட்டளையை ஏற்றுக் கொண்டோம்” என்று பதிலளித்தார்கள்.

அப்போது ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) எனும் தோழர் “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் கலந்து கொள்ளும் அனைத்து போரிலும் நானும் கலந்து கொள்ள வேண்டும் என்று நிச்சயமாக விரும்புகிறேன். ஆனால், எனது தந்தை உஹுத் போருக்கு செல்லும் போது எனது சகோதரிகளின் பாதுகாப்புக்காக என்னை விட்டுச் சென்றார்கள். அதனால்தான் நான் தங்கினேன். எனவே, எனக்கு இப்போது உங்களுடன் போரில் கலந்து கொள்ள அனுமதி அளியுங்கள்” என்று கூறவே நபியவர்கள் அனுமதி வழங்கினார்கள்.

நபி(ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் மதீனாவிலிருந்து 8 மைல்கள் தூரமுள்ள “ஹம்ராவுல் அஸத்” என்ற இடத்திற்கு வந்து முகாமிட்டார்கள். அங்கு குஜாஆ வமிசத்தைச் சேர்ந்த “மஅபத் இப்னு அபூமஅபத்” என்பவர் நபியவர்களிடம் வந்து இஸ்லாமைத் தழுவினார். (சிலர் அவர் இணைவைப்பவராகத்தான் இருந்தார். இருப்பினும் குஜாஆ மற்றும் ஹாஷிம் ஆகிய இரு கிளையினருக்கும் இருந்த நட்பின் காரணமாக நபியவர்களிடம் வந்தார் என்று கூறுகின்றனர். ஆக) அவர் நபியவர்களிடம் “அல்லாஹ்வின் மீது ஆனையாக! உமது தோழர்களுக்கு ஏற்பட்ட நிலை எங்களுக்கு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியது. அல்லாஹ் உங்களுக்க சுகம் அளிக்க வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம். நான் ஏதாவது உங்களுக்கு செய்ய வேண்டுமா? என்று கேட்டார். அதற்கு நபியவர்கள் “நீ அபூ ஸுஃப்யானிடம் சென்று அவரை எங்களை விட்டும் திருப்பிவிடு” என்றார்கள்.

எதிரிகள் மதீனாவிற்குக் திரும்ப வரவேண்டுமென யோசிப்பார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் பயந்தது உண்மையாகவே நடந்தது. எதிரிகள் மதீனாவிற்கு 36 மைல்கள் தொலைவிலுள்ள “ரவ்ஹா” என்ற இடத்தை அடைந்த போது தங்களுக்குள் ஒருவர் மற்றவரை பழித்துக் கொண்டனர். சிலர் சிலரைப் பார்த்து “நீங்கள் என்ன செய்தீர்கள்; ஒன்றுமே செய்யவில்லை; அவர்களில் சில வீரர்களைத்தான் கொன்றுள்ளீர்கள்; அவர்களின் தலைவர்கள் மீதமிருக்கிறார்கள்; அவர்கள் உங்களுடன் போர் செய்ய மக்களை அழைத்து வரலாம்; திரும்புங்கள்; நாம் அவர்களிடம் சென்று அவர்களது ஆற்றல் அனைத்தையும் அடியோடு அழித்து வருவோம்” என்றனர்.

இணைவைப்பவர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஆகிய இரு தரப்பாரின் வலிமையையும் ஆற்றலையும் சரியாக ஒப்பிட்டு பார்க்காதவர்கள்தான் அவ்வாறு ஆலோசனை சொல்லி இருப்பார்கள். ஆகவேதான், உண்மை நிலையை புரிந்த அவர்களின் மிக முக்கிய தலைவர்களில் ஒருவனான ஸஃப்வான் இப்னு உமைய்யா இந்த கருத்தை ஏற்றுக் கொள்ள மறுத்த “எனது கூட்டத்தினரே! அவ்வாறு நீங்கள் செய்யாதீர்கள். உஹுத் போரில் கலந்து கொள்ளாமல் தங்கிவிட்ட முஸ்லிம்களெல்லாம் ஒன்று சேர்ந்து உங்களைத் தாக்கக்கூடும் என நான் பயப்படுகிறேன்; நீங்கள் திரும்பிச் சென்று விடுங்கள். வெற்றி உங்களுக்குத்தான் கிடைத்துள்ளது. நீங்கள் மீண்டும் மதீனா சென்றால் அவர்கள் வெற்றி பெற்று நீங்கள் தோற்றுவிடுவீர்களோ என் நான் அஞ்சுகிறேன்” என்றான். இவனது ஆலோசனையை பெரும்பாலானோர் ஏற்றுக் கொள்ளவில்லை.

மதீனாவிற்கு மீண்டும் செல்ல வேண்டும் என முடிவெடுத்து அபூ ஸுஃப்யான் தனது படையோடு கிளம்புவதற்கு ஆயத்தமாகும் போது அபூ ஸுஃப்யானிடம் மஅபத் இப்னு மஅபத் வந்தார். அபூ ஸுஃப்யானுக்கு அவர் முஸ்லிமானது தெரியாது. அவர் “மஅபதே! ஏதாவது செய்தி இருக்கிறதா?” என்றார். அதற்கு மஅபத் ஒரு பெரிய கற்பனையான போரை அபூ ஸுஃப்யானின் கண்முன் கொண்டு வந்து நிறுத்தினார். அதாவது “அபூ ஸுஃப்யானே! முஹம்மது தனது தோழர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு மதீனாவை விட்டு புறப்பட்டு விட்டார். நான் இதுவரை பார்திராத ஒரு ராணுவத்துடன் அவர் உன்னைத் தேடி வருகிறார். அவர்கள் உன் மீது நெருப்பாய் பற்றி எரிகிறார்கள். அன்றைய உஹுத் போரில் கலந்து கொள்ளாதவர்கௌல்லாம் அவருடன் சேர்ந்து இப்போது புறப்பட்டுள்ளனர். தாங்கள் நழுவவிட்ட ஒரு சந்தர்ப்பத்தை எண்ணி மிகுந்த வருத்தத்துடன் வருகின்றனர். உங்களுக்கு எதிராக அவர்களிடம் இருக்கும் கோபத்தைப் போன்று நான் பார்த்ததே இல்லை” என்று கூறினார்.

இதைக் கேட்ட அபூ ஸுஃப்யான் “உனக்கு நாசம் உண்டாகட்டும். நீ என்ன சொல்கிறாய்?” என்று அதிர்ந்தார். அதற்க்கு அவர் “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீ இங்கிருந்து அவர்களை நோக்கி பயணித்தால் வெகு விரைவில் அவர்களுடைய குதிரைகளைக் காண்பாய்” என்றார். (அல்லது இந்தக் காட்டுக்குப் பின்புறத்திலிருந்து முஸ்லிம்களுடைய படையின் முதல் படை வருவதை நீ பார்க்கப் போகிறாய் என்றார்). அதற்கு அபூ ஸுஃப்யான் “அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர்களை வேரோடு அழிக்க வேண்டுமென்று நாங்கள் எங்களின் முழு ஆற்றலையும் ஒன்று சேர்த்திருக்கிறோம்” என்றார். அதற்க “அவ்வாறு நீ செய்யாதே! நான் உனக்கு உனது நன்மையை நாடி இதைக் கூறுகிறேன். நீ திரும்புவதுதான் உனக்கு நல்லது” என்றார் மஅபத்.

மஅபத் தந்த தகவலால் எதிரிகளின் நம்பிக்கையும் வீரமும் தளர்ந்து, பயமும் திடுக்கமும் அவர்களை ஆட்கொண்டது. மக்காவிற்குத் திரும்புவதுதான் தங்களுக்கு ஏற்றமானது என்று கருதினர். இருப்பினும் முஸ்லிம் படைகள் தங்களை விரட்டி வருவதை நிருத்திக் கொள்ள வேண்டுமென்பதற்காக இஸ்லாமிய படைக்கு எதிராக ஒரு பொய் பிரச்சாரப் போரை அபூ ஸுஃப்யான் தூண்டிவிட்டார். அதாவது, மதீனா சென்று கொண்டிருந்த அப்துல் கைஸ் கிளையினர் இவர்களை வழியில் பார்த்த போது அவர்களிடம் “நான் கூறும் செய்தியை என் சார்பாக முஹம்மதுக்கு எட்ட வைப்பீர்களானால் நீங்கள் மக்கா வரும் போது “உக்காள்” கடைத் தெருவில் உங்களின் ஒட்டகம் சுமை தாங்கமளவிற்கு நான் காய்ந்த திராட்சையை தருவேன்” என்று அபூ ஸுஃப்யான் கூற அவர்கள் “சரி” என்றனர். “முஹம்மதையும் அவரது தோழர்களையும் வேரோடு அழிக்க நாங்கள் முழு ஆற்றலையும் ஒன்று திரட்டி வருகிறோம் என்ற செய்தியை முஹம்மதுக்கு சொல்லிவிடுங்கள்” என்று அபூ ஸுஃப்யான் கூறினார்.

அந்த வியாபாரக் கூட்டம் நபி(ஸல்) அவர்களிடமும் நபித்தோழர்களிடமும் வந்து அபூ ஸுஃப்யான் தாங்களிடம் கூறி அனுப்பிய செய்தியைக் கூறினர். அப்போது நபியவர்களும் நபித்தோழர்களும் ஹம்ராவுல் அஸத் என்ற இடத்தில் தங்கியிருந்தனர். இதைப் பற்றித்தான் அல்லாஹ் பின்வரும் வசனத்தில் கூறுகிறான்.

மக்களில் சிலர் அவர்களிடம்; “திடமாக மக்களில் (பலர் உங்களுடன் போரிடுவதற்காகத்) திரண்டு விட்டார்கள், எனவே அப்படையைப்பற்றி அஞ்சிக் கொள்ளுங்கள்” என்று கூறி (அச்சுறுத்தி)னர்; ஆனால் (இது) அவர்களின் ஈமானைப் பெருக்கி வலுப்படச் செய்தது: “அல்லாஹ்வே எங்களுக்குப் போதுமானவன். அவனே எங்களுக்குச் சிறந்த பாதுகாவலன்” என்று அவர்கள் கூறினார்கள். இதனால் அவர்கள் அல்லாஹ்விடமிருந்து நிஃமத்தையும் (அருட்கொடையையும்,) மேன்மையையும் பெற்றுத் திரும்பினார்கள்; எத்தகைய தீங்கும் அவர்களைத் தீண்டவில்லை; (ஏனெனில்) அவர்கள் அல்லாஹ்வின் விருப்பத்தைப் பின்பற்றினார்கள் - அல்லாஹ் மகத்தான கொடையுடையவனாக இருக்கிறான். அல்குர்அன் 3:173-174

ஆனால், இவர்களுடைய பேச்சை நபியவர்களும் முஸ்லிம்களும் பொருட்படுத்தவில்லை. எதிரிகளை எதிர்பார்த்து (ஹிஜ்ரி 3) ஷவ்வால் பிறை 9, 10, 11 திங்கள், செவ்வாய், புதன் ஆகிய மூன்று நாட்கள் நபி (ஸல்) அவர்கள் தங்களது தோழர்களுடன் ஹம்ராவுல் அஸதில் தங்கியிருந்தார்கள். ஞாயிற்றுக்கிழமை பிறை 8ல் ஹம்ராவுல் அஸதிற்கு வந்து சேர்ந்தார்கள் என்பதை நாம் முன்பே கூறியிருக்கின்றோம். அப்போது அபூ இஜ்ஜா அல் ஜுமஹி என்பவனை நபியவர்கள் கைது செய்தார்கள். ஏற்கனவே பத்ர் போரில் கைது செய்யப்பட்டிருந்த இவனை நபியவர்கள் அவன் ஏழை, அவனுக்க பெண் பிள்ளைகள் அதிகம் இருக்கின்றனர் என்ற காரணத்தால் அவன் மீது கருணை காட்டி அவனை உரிமையிட்டு தனக்கு எதிராக செயல்படக்கூடாது என்று அவனிடம் ஒப்பந்தம் வாங்கினார்கள். ஆனால், அவன் அந்த ஒப்பந்தத்தை மீறி உஹுத் போரிலும் கலந்து கொண்டதால் நபியவர்கள் அவனை கைது செய்தார்கள். அவன் நபியவர்களிடம் “முஹம்மதே! என்னை மன்னித்துவிடும். என்மீது உபகாரம் செய். எனது பெண் பிள்ளைகளுக்காக என்னை நீ விட்டுவிடு. நான் இப்போது செய்ததைப் போன்று இனி எப்போதும் செய்ய மாட்டேன் என்று உங்களுக்க வாக்குறுதி தருகிறேன்” என்றான். ஆனால், நபியவர்கள் “இதற்குப் பின் நீ மக்காவிற்கு சென்று முஹம்மதை இருமுறை நான் ஏமாற்றிவிட்டேன் என்று கூறும் நிலைமை (எனக்கு) ஏற்படக்கூடாது. ஏனெனில் இறைநம்பிக்கையாளன் ஒரு புற்றில் இருமுறை தீண்டப்பட மாட்டான். (அதாவது ஒரு தவறை மறுமுறை செய்யமாட்டார்) என்று கூறிவிட்டு ஜுபைர் அல்லது ஆஸிம் இப்னு ஸாபித்திடம் அவனது தலையை துண்டிக்கக் கூறினார்கள்.

இவ்வாறே எதிரிகளின் ஒற்றர்களில் ஒருவனான முஆவியா இப்னு முகீரா இப்னு அபுல் ஆஸையும் கொன்றுவிட நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். (இவன் பிற்காலத்தில் வந்த முஸ்லிம் மன்னர் அப்துல் மலிக் இப்னு மர்வானின் தாய்வழி பாட்டனாவான்.)

இதன் விவரமாவது: இணைவைப்பவர்கள் உஹுத் போர் முடிந்து மக்காவிற்கு திரும்புகையில் இவன் தனது ஒன்றுவிட்ட சகோதரர் உஸ்மான் இப்னு அஃப்பான் (ரழி) அவர்களைப் பார்க்க மதீனாவிற்கு வந்தான். உஸ்மான் (ரழி) நபியவர்களிடம் இவனுக்கு பாதுகாப்புக் கொடுக்கும்படி கேட்டார்கள். நபியவர்கள் அவனுக்கு பாதுகாப்புக் கொடுத்துவிட்டு மூன்று நாட்கள் மட்டும் தங்கவேண்டும், அதற்கு மேல் இங்கு தங்கியிருந்தால் கொன்றுவிடுவோம் என்று எச்சரிக்கை விடுத்தார்கள். இஸ்லாமியப் படை மீண்டும் (அல்லது இரண்டாம் முறை) மதினாவில் இருந்து வெளியேறியதற்குப் பின் இவன் மூன்று நாட்களுக்கு மேலாகவும் மதீனாவில் தங்கியிருந்து குறைஷிகளுக்காக உளவு வேலை பார்த்துக் கொண்டிருந்தான். இஸ்லாமியப் படை மதீனாவிற்குத் திரும்ப வருகிறது என்று தெரிந்தவுடன் அவன் மதீனாவிலிருந்து தப்பித்து ஓடினான். அவனைக் கொலை செய்து வரும்படி நபி(ஸல்) ஜைது இப்னு ஹாரிஸா, அம்மார் இப்னு யாசிர் (ரழி) ஆகிய இருவரையும் அனுப்பினார்கள். அவ்விருவரும் அவனைக் கொன்று வந்தார்கள். (இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆது)

ஹம்ராவுல் அஸத் என்ற இந்த போர் ஒரு தனி போரல்ல. மாறாக, உஹுத் போரின் ஒரு தொடர்ந்தான். உஹுத் போரின் ஒரு முடிவுரை என்றும் இதை நாம் சொல்லலாம்.

இதுவரை உஹுத்ப் போரின் அனைத்து விவரங்களையும் நிலைமைகளையம் நிகழ்வுகளையும் தேவையான அளவு அலசினோம். இந்த போரின் முடிவு முஸ்லிம்களுக்கு வெற்றியா தோல்வியா என்பதைப் பற்றி ஆராய்ச்சியாளர்கள் பலர் மிக நீண்ட ஆராய்ச்சி செய்திருக்கின்றார்கள். போரின் இரண்டாவது கட்டத்தில் எதிரிகளின் தாக்குதலே ஓங்கியிருந்தது. முஸ்லிம்களுக்கு உயிர் சேதம் அதிகம். முஸ்லிம்களில் ஒரு பிரிவினர் முற்றிலும் தோற்றுவிட்டனர். போரின் அனைத்து நிலைகளும் மக்காவினருக்கே சாதகமாக அமைந்தன. இருப்பினும் இதை எல்லாம் வைத்து போரில் வெற்றி அவர்களுக்கு கிடைத்து விட்டது என்று நாம் கூறமுடியாது.

அதற்கான காரணங்கள்: எதிரிகள் முஸ்லிம்களின் ராணுவ முகாம்களை இறுதிவரை கைப்பற்ற முடியவில்லை. முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் போரிலிருந்து பின்வாங்கவில்லை. கடினாமான சோதனையும் எதிரிகளின் ஆதிக்கமும் ஏற்பட்டிருந்தும் கூட புறமுதுகுக் காட்டாமல் தங்களது தலைமையின் கீழ் ஒன்று சேர்ந்து வீரத்துடன் எதிர்த்தனர். முஸ்லிம்களை எதிரிகள் விரட்டியடிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாவில்லை. முஸ்லிம்களிலிருந்து எவரும் எதிரிகளிடம் கைதியாகவில்லை. எதிரிகள் முஸ்லிம்களின் உடைமைகளில் எவற்றையும் கைப்பற்ற இயலவில்லை. போர்க் களத்திலிருந்து எதிரிகளே முதலில் வெளியேறினர். முஸ்லிம்கள் அங்கேயே இருந்தனர். போரில் வெற்றி பெற்றவர்கள் ஒன்றிரண்டு நாட்கள் அந்த மைதானத்திலேயே அக்கால வழக்கப்படி தங்கியிருப்பது போன்று எதிரிகள் மைதானத்தில் தங்கியிருக்கவில்லை. மதீனாவில் நுழைந்து அங்குள்ள செல்வங்களையும் பிள்ளை குட்டிகளையும் சூறையாட அவர்களுக்குத் துணிவு பிறக்கவில்லை. போர்களத்திலிருந்து மதீனா மிக அருகாமையில் எவ்வித பாதுகாப்புமில்லாமல் காலியாக இருந்தும் கூட அவர்களுக்கு அங்கு செல்ல துணிவு பிறக்கவில்லை.

இதன் மூலம் நமக்கு உறுதியாக தெரிய வருவது என்னவெனில், முஸ்லிம்களுக்குப் பெரிய நஷ்டம் ஏற்படுத்தும் அளவுக்குண்டான ஒரு சந்தர்ப்பம்தான் அவர்களுக்குக் கிடைத்தது. எனினும், முஸ்லிம்களைச் சுற்றி வளைத்து, முற்றிலும் அழித்து, ஒழிக்க வேண்டும் என்ற தங்களது நேர்க்கத்தில் தோல்வியைத்தான் கண்டார்கள். முஸ்லிம்களுக்க ஏற்பட்ட இதுபோன்ற நஷ்டங்கள் பெரும்பாலான சமயங்களில் போரில் வெற்றி பெறும் படையினருக்கும் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட இந்த நஷ்டத்தைக் கவனித்து எதிரிகளுக்கு இப்போரில் வெற்றி கிடைத்தது என்று சொல்ல முடியாது.

மேலும், அபூ ஸுஃப்யான் போர்க்களத்தை விட்டு விரைவாக திரும்பி செல்வதிலேயே குறியாக இருப்பது, போர் தொடர்ந்தால் தங்களுக்கு தோல்வியும் இழிவும் ஏற்படும் என்று அவர் பயந்து விட்டார் என்பதையே நமக்க உறுதி செய்கிறது. அடுத்ததாக ஹம்ராவுல் அஸத் போர் விஷயத்தில் அபூ ஸுஃப்யானின் நிலைமையைப் பாhக்கும் போது இது மேலும் உறுதியாகிறது.

ஆகவே, இந்த போரைப் பொறுத்த வரை இருசாராரில் ஒவ்வொருவருக்கும் ஒரளவு வெற்றியும் தோல்வியும் ஏற்பட்டது; இவ்வாறே இரு படையினரும் மைதானத்திலிருந்து புறமுது காட்டி ஓடவில்லை; தங்களது முகாம்களை எதிரிகள் ஆக்கிரமித்துக் கொள்வதற்குச் சந்தர்ப்பம் அளிக்காமல் போரிலிருந்து தாங்களாகவே ஒதுங்கிக் கொண்டனர்.

இதைத்தான் அல்லாஹ் பின்வருமாறு சுட்டிக் காட்டுகிறான்.

மேலும், (பகைக்) கூட்டத்தைத் தேடிச் செல்வதில் ஊக்கம் குன்றாதீர்கள்; நீங்கள் (போரில்) துன்பப்படுவீர்களானால், நிச்சயமாக அவர்களும் உங்களைப் போன்றே துன்பப்படுகிறார்கள் - அல்லாஹ்விடமிருந்து அவர்கள் எதிர்பார்க்காத (நற்கூலியும் வெற்றியும்) நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள். அல்லாஹ் மிக அறிந்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். அல்குர்ஆன் 4:104

இந்த வசனத்தில் இரு படையினரில் ஒவ்வொருவரையும் மற்றவருக்கு ஒப்பாகவே கூறுகிறான். அதாவது, அவர்களால் உங்களுக்கு எப்படி வேதனை ஏற்பட்டதோ அவ்வாறே உங்களால் அவர்களுக்கும் வேதனை ஏற்பட்டது. இதிலிருந்து இருவரின் நிலைமைகளும் ஒன்றுக்கொன்று ஒப்பாகவே இருந்தன. வெற்றியின்றியே இரு சாராரும் மைதானத்திலிருந்து திரும்பினர் என்று நாம் விளங்கிக் கொள்ளலாம்.

Offline Yousuf

இப்போர் குறித்து குர்ஆன் பேசுகிறது

இப்போர் தொடர்பான முக்கியக் கட்டங்கள் ஒவ்வொன்றையும் குர்ஆன் மிகத் தெளிவாக விவரிக்கிறது. முஸ்லிம்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டதற்கான காரணங்களையும் குர்ஆன் மிகத் தெளிவாக கூறுகிறது. முஸ்லிம்களின் ஒரு சாராரிடம் இருந்த பலவீனங்களையும் குர்ஆன் வெளிப்படுத்தியது. இதுபோன்ற இக்கட்டான நிலைமைகளில் முஸ்லிம்களின் கடமைகள், இந்த சமுதாயம் உருவாக்கப்பட்டதன் உயர்ந்த அடிப்படை நோக்கங்கள், படைக்கப்பட்ட சமுதாயங்களில் இதுவே மிகச் சிறந்த சமுதாயம் என்பதால் மற்ற சமுதாயத்தை விட இந்த சமுதாயத்திடம் இருக்க வேண்டிய உயர்ந்த பண்புகள், சில முஸ்லிம்களிடம் இருந்த பலவீனங்கள் மற்றும் குறைபாடுகளையும் குர்ஆன் கோடிட்டது.

(1) இதுபோன்ற கடுஞ்சோதனையின் போது முஸ்லிம்கள் மேற்கொண்டிருக்க வேண்டிய கடமைகள், (2) இச்சமுதாயம் உருவான உயர்ந்த அடிப்படை நோக்கங்கள், (3) மற்ற சமுதாயத்தை விட மிகச் சிறந்த சமுதாயமாக விளங்குபவர்களிடம் இருக்க வேண்டிய சீரிய பண்புகள் ஆகிய இம்மூன்றையும் முன்வைத்து பார்க்கும்போது முஸ்லிம்களிடம் அந்த குறைபாடுகளும் பலவீனங்களும் இருந்திக்கக் கூடாது என்று குர்ஆன் உணர்த்துகிறது.

இவ்வாறே நயவஞ்சகர்களின் நிலைமையைப் பற்றி குர்ஆன் விவரிக்கிறது. அல்லாஹ்வின் மீதும், அவனது தூதரின் மீதும், நயவஞ்சகர்கள் உள்ளத்தில் கொண்டிருந்த வஞ்சகத்தை வெளிப்படுத்தி அவர்களை இழிவடையச் செய்தது. யூதர்களும், நயவஞ்சகர்களும் பரப்பி வந்த சந்தேகங்களையும், உறுதி குறைந்த முஸ்லிம்களின் உள்ளத்திலிருந்த சந்தேகங்களையும் குர்ஆன் அகற்றியது. மேலும், இந்த போரினால் ஏற்படவிருக்கும் நல்ல முடிவுகளையும் அதிலுள்ள நுட்பங்களையும் குர்ஆன் சுட்டிக் காட்டுகிறது. இப்போரைப் பற்றி அத்தியாயம் ஆல இம்ரானில் அறுபது வசனங்கள் அருளப்பட்டன. அதில் போரின் தொடக்கதிலிருந்து இறுதி வரை நடந்த அனைத்தும் விவரிக்கப்பட்டது. அதன் தொடக்கம் இவ்வாறு ஆரம்பிக்கிறது.

(நபியே!) நினைவு கூர்வீராக:) நீர் விடியற்காலையில் உம் குடும்பத்தாரை விட்டுச் சென்று முஃமின்களைப் போருக்காக (உஹது களத்தில் அவரவர்) இடத்தில் நிறுத்தினீர்; அல்லாஹ் எல்லாவற்றையும் செவியுறுவோனாகவும் நன்கறிபவனாகவும் இருக்கின்றான். அல்குர்ஆன் 3:121

அதன் இறுதி இப்போரின் விளைவுகள் பற்றியும் அதன் நுட்பங்கள் பற்றியும் மிகச் சரியான விமர்சனங்களுடன் முடிகிறது.

“குஃப்ரில் அவர்கள் வேகமாகச் சென்று கொண்டிருப்பது உம்மைக்கவலை கொள்ளச் செய்ய வேண்டாம்; நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கு ஒரு சிறு தீங்கும் செய்துவிட முடியாது; அல்லாஹ் அவர்களுக்கு மறுமையில் நற்பாக்கியம் எதுவும் ஆக்காமல் இருக்கவே நாடுகிறான்; அவர்களுக்குப் பெரும் வேதனையும் உண்டு. அல்குர்ஆன் 3:176

இப்போரின் அழகிய முடிவுகளும் நுட்பங்களும்

அறிஞர் இப்னு ஹஜர் (ரஹ்) இது குறித்து பின்வருமாறு கூறுகிறார்: உஹுத் போரிலும் அதில் முஸ்லிம்களுக்கு நிகழ்ந்தவற்றிலும் பல படிப்பினைகளும் இறை நுட்பங்களும் உள்ளன். அவற்றில் சிலவற்றைக் கீழே பார்ப்போம்:

1) பாவத்தினால் உண்டாகும் கெட்ட முடிவுகள் மற்றும் தடுக்கப்பட்டதை செய்வதனால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்து முஸ்லிம்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை, அம்பெறியும் வீரர்கள் அவ்விடத்திலிருந்து விலகக் கூடாது என்று நபி(ஸல்) கூறியதற்கு மாற்றம் செய்ததால் ஏற்பட்ட விளைவுகளைப் பார்த்து விளங்கிக் கொள்ளலாம்.

2) தூதர்கள் சோதிக்கப்படுவார்கள். ஆனால், இறுதியில் வெற்றி அவர்களுக்குத்தான் கிடைக்கும். இதில் அடங்கியிருக்கும் நுட்பமாவது: இறைதூதர்களுக்கு எப்போதும் வெற்றியே கிடைத்துக் கொண்டிருந்தால் அல்லாஹ்வை நம்பிக்கை கொள்ளாதவர்களும் தங்களை அல்லாஹ்வை நம்பிககை கொண்டவர்கள் என்று பெயரளவில் சொல்லிக் கொள்வர். அதனால் உண்மையானவர் யார்? பொய்யர் யார்? என பிரித்து அறிய முடியாது. எப்போதும் இறைத் தூதர்களுக்கு தோல்வியே ஏற்பட்டு வந்தால் அவர்களைத் தூதர்களாக அனுப்பிய நோக்கமும் நிறைவேறாது. எனவே, பொய்யர்களிலிருந்து உண்மையானவர்களைப் பிரித்து விடுவதற்காக வெற்றி தோல்வி இரண்டையும் சேர்த்து வழங்குவதே சரியானது. அதாவது, நயவங்சகர்களின் நயவஞ்சகத்தனம் முஸ்லிம்களுக்கத் தெரியாமல் இருந்தது. இப்போரில் சொல்லிலும் செயலிலும் தங்களின் நயவஞ்சகத் தன்மையை அந்நயவஞ்சகர்கள் வெளிப்படுத்திய போது அவர்கள் முகத்திரை அகன்று, அவர்கள் யார்? எனத் தெளிவாகிவிட்டது. மேலும், முஸ்லிம்கள் தங்களின் இல்லங்களுக்குள் இருக்கும் எதிரிகளைத் தெரிந்துகொண்டு, அவர்களிடமிருந்து விலகி, அவர்களின் தீமையை எதிர்கொள்ள ஆயத்தமானார்கள்.

3) சில சமயங்களில் அல்லாஹ் உதவியைத் தாமதப்படுத்தி வழங்குவதால் உள்ளத்தின் பெருமை அகற்றப்பட்டு அதில் பணிவு ஏற்படுத்தப்படுகிறது. ஆகவேதான் சோதனையின்போது முஸ்லிம்கள் சகித்துக் கொண்டு உறுதியாக இருந்தனர். நயவஞ்சகர்களோ பயந்து, அஞ்சி, நடுநடுங்கி நிலைகுலைந்து விட்டனர்.

4) அல்லாஹ் சொர்க்கத்தில் இறைநம்பிக்கையாளர்களுக்காக பல உயர் நிலைகளையும் அந்தஸ்துகளையும் ஏற்படுத்தியிருக்கின்றான். அதை அவர்கள் வணக்க வழிபாடுகளால் அடைய முடியாதபோது பல சோதனைகளையும் சிரமங்களையும் அவர்களுக்கு கொடுப்பதன் மூலம் அவர்கள் அந்த உயர் பதவிகளை அடைந்து கொள்கிறார்கள்.

5) இஸ்லாமிய போரில் உயிர் தியாகம் செய்வது என்பது இறைநேசர்களின் மிக உயர்ந்த பதவியாகும் அதை அல்லாஹ் தனது நபி(ஸல்) அவர்களின் தோழர்களுக்கு வழங்கினான்.

6) அல்லாஹ் தனது எதிரிகளை அழிக்க நாடினால் அதற்காக அவர்களிடம் காரணங்களை ஏற்படுத்துகிறான். அதாவது, அவர்களின் ஓரிறை நிராகரிப்பு, அல்லாஹ்வின் நேசர்களை நோவினை செய்வது போன்றவற்றைக் காரணமாக்கி அவர்களை அழித்து விடுகிறான். மேலும், இறைநம்பிக்கையாளர்களின் பாவங்களை அவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்குப் பகரமாக ஆக்கி மன்னித்து விடுகிறான். (ஃபதஹுல் பாரி)

அறிஞர் இப்னுல் கய்யிமும் தனது ஜாதுல் மஆது என்ற நூலில் இத்தலைப்பின் கீழ் போதுமான விவரங்களைத் தந்துள்ளார். ஆர்வமுள்ளவர்கள் அங்கு பார்க்கலாம்.

Offline Yousuf

உஹுத் போருக்கு பின் அனுப்பட்ட படை பிரிவுகளும் குழுக்களும்

உஹுத் போரில் ஏற்பட்ட துக்ககரமான நிகழ்ச்சி இறைநம்பிக்கையாளர்களைப் பற்றி பிற மக்களிடம் இருந்த நற்பெயருக்கு பெரும் பங்கமாக அமைந்தது. முஸ்லிம்களைப் பற்றி பிறர் உள்ளத்தில் இருந்த அச்சம் அகன்று விட்டது. உள்நாட்டு வெளிநாட்டு பிரச்சனைகள் முஸ்லிம்களுக்கு அதிகரித்தன. அனைத்து திசைகளிலிருந்தும் ஆபத்துகள் மதீனாவைச் சூழ்ந்தன. யூதர்களும், நயவஞ்சகர்களும் கிராமத்து அரபிகளும் தங்களின் பகைமையை வெளிப்படையாகக் காட்டினர். இவர்களில் ஒவ்வொரு வகுப்பினரும் முஸ்லிம்களுக்குத் தீங்கிழைக்க நாடினர். மேலும், முஸ்லிம்களை முழுவதுமாக அழித்து விட வேண்டும் என்றும் ஆசைப்பட்டனர்.

உஹுத் போர் முடிந்து இரண்டு மாதங்கள்தான் ஆகியிருக்கும். அதற்குள் அஸத் கோத்திரத்தினர் மதீனாவின் மீது கொள்ளையிட திட்டம் தீட்டினர். இதற்குப் பின் அழல், காரா என்ற இரு வமிசத்தினர் ஹிஜ்ரி 4, ஸஃபர் மாதம் ஒரு சதித்திட்டம் தீட்டி 10 நபித்தோழர்களைக் கொன்றனர். மேலும், இம்மாதத்தில் ஆமிர் இப்னு துபைல் என்பவன் சில கிளையினரை தூண்டிவிட்டு 70 முஸ்லிம்களைக் கொல்ல வைத்தான். இச்சம்பவம் வரலாற்றில் பிஃரு மஊனா என்ற அறியப்படுகிறது. மேலும், இக்கால கட்டத்தில் நழிர் வமிச யூதர்கள் வெளிப்படையாக தங்களின் எதிர்ப்பைக் காட்டினர். இறுதியாக, ஹிஜ்ரி 4, ரபீஉல் அவ்வல் மாதம் நபி (ஸல்) அவர்களை கொன்று விடுவதற்கு சூழ்ச்சி செய்தனர். இதே ஆண்டு ஜமாத்துல் அவ்வல் மாதத்தில் கத்ஃபான் கோத்திரத்தார் மதீனாவின் மீது தாக்குதல் நடத்தத் துணிவு கொண்டனர். முஸ்லிம்கள் மீது பிறருக்கு முன்பிருந்த பயம் உஹுத் போரினால் அகன்றுவிட்டதால் ஒரு காலம் வரை முஸ்லிம்கள் மாற்றார்கள் மூலம் பல ஆபத்துகளுக்கும் அச்சுறத்தல்களுக்கும் இலக்காயினர்.

இருப்பினும் நபி முஹம்மது (ஸல்) அவர்களின் ஞானமிக்க நுட்பமான நடவடிக்கை இந்நிலைமையை மாற்றியது. முஸ்லிம்களுக்கு அவர்கள் இழந்த மதிப்பை மீட்டு தந்தது. உயர்வையும் கண்ணியத்தையும் அவர்களுக்கு புதிதாக அளித்தது. இந்த அடிப்படையில் நபியவர்கள் எடுத்த முதல் முயற்சி அபூஸுஃப்யானின் படையை விரட்டியடிக்க அவர்கள் எடுத்த நடவடிக்கையாகும். இதன் காரணமாக முஸ்லிம்கள் மதிப்பு சற்று பாதுகாக்கப்பட்டது. அவர்களுக்கு இருந்த உயர்வில் ஓரளவு தக்கவைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மேலும் பல தாக்குதல்களை நபி (ஸல்) அவர்கள் மேற்கொண்டார்கள். இத்தாக்குதல்கள் முஸ்லிம்களுக்கு இழந்த கண்ணியத்தையும் மதிப்பையும் மீட்டு கொடுத்தது மட்டுமல்லாமல் அதைவிட அதிகமாகவே இப்போது மதிப்பையும் மரியாதையையும் ஏற்படுத்தியது. அடுத்து வரும் பக்கங்களில் முஸ்லிம்களுக்கும், முஸ்லிமல்லாதவர்களுக்கும் இடையில் நடந்த சில சம்பவங்களை நாம் பார்போம்.

அபூ ஸலமா படைப் பிரிவு (ஹிஜ்ரி 4, முஹர்ரம்)

உஹுதில் ஏற்பட்ட பின்னடைவுக்குப் பின் முஸ்லிம்களுக்கு எதிராக கிளம்பிய முதல் கூட்டம் அஸத் இப்னு குஜைமா வமிசமாகும். தல்ஹா இப்னு குவைலித், ஸலமா இப்னு குவைலித் ஆகிய இருவரும் தங்கள் கூட்டத்தினரையும் தங்களுக்குக் கட்டுப்பட்டவர்களையும் அழைத்துக் கொண்டு அஸத் இப்னு குஜைமாவினரிடம் வந்தனர். அவர்களை முஸ்லிம்களின் மீது போர் புரிய தூண்டினர். இந்தச் செய்தி நபி(ஸல்0 அவர்களுக்குக் கிடைத்தவுடன் 150 வீரர்கள் கொண்ட படைப் பிரிவை ஏற்பாடு செய்து அஸது கிளையினரை எதிர்க்க அனுப்பினார்கள். இப்படையில் முஹாஜிர்களும் அன்சாரிகளும் பங்கேற்றனர். அப்படைப் பிரிவிற்கு அபூ ஸலமாவைத் தளபதியாக்கி அவரிடம் கொடியைக் கொடுத்தார்கள். அஸத் கிளையினர் தாக்குதல் நடத்த தயாராகும் முன் அவர்கள் தங்களுடைய வீடுகளில் இருக்கும் போதே அவர்கள் மீது அபூஸலமா (ரழி) தனது படையினரை அழைத்துக் கொண்டு திடீரெனத் தாக்கினார்கள். இதைச் சற்றும் எதிர்பாராத அவர்கள் திக்குமுக்காடி தப்பித்துக் கொள்ள பல பக்கங்களிலும் சிதறி ஓடி ஒளிந்தனர். முஸ்லிம்கள் அஸதினரின் ஒட்டகங்களையும் ஆடுகளையும் பிடித்துக் கொண்டு மதீனா வந்தனர். அஸதினர் எதிர்க்காததால் சண்டை ஏதும் நடைபெறவில்லை.

ஏற்கனவே அபூ ஸலமாவிற்கு உஹுத் போரில் ஏற்பட்ட காயம் பெரிதாகி விடவே போரிலிருந்து மதீனா வந்தடைந்த சில நாட்களிலேயே அவர்கள் உயிர் பிரிந்தது. (ஜாதுல் மஆது)

Offline Yousuf

அப்துல்லாஹ் இப்னு உனைஸை அனுப்புதல்

ஹிஜ்ரி 4, முஹர்ரம் மாதம் பிறை 5ல் காலித் இப்னு சுஃப்யான் என்பவன் முஸ்லிம்களிடம் போர் செய்ய கூட்டம் சேர்ப்பதாக நபியவர்களுக்குச் செய்தி எட்டியது. இதனை அறிந்த நபியவர்கள், அவனைக் கொன்று வர அப்துல்லாஹ் இப்னு உனைஸ் (ரழி) அவர்களை அனுப்பினார்கள்.

அப்துல்லாஹ் இப்னு உனைஸ் (ரழி) அவனைக் கொன்றுவர 18 இரவுகள் எடுத்துக் கொண்டார்கள். அவர்கள் முஹர்ரம் மாதம் முடிய 7 நாட்கள் இருக்கும் போது சனிக்கிழமை மதீனாவிற்குத் திரும்பினார்கள். அவர்கள் காலித் இப்னு சுஃப்யானைக் கொன்று அவனது தலையைக் கொய்து வந்தார்கள். அத்தலையை நபி(ஸல்) அவர்களுக்க முன் வைக்க, நபியவர்கள் மகிழ்ச்சியடைந்து ஒரு கைத்தடியை அவருக்கு வழங்கி “இது மறுமையில் எனக்கும் உனக்கும் மத்தியிலுள்ள அடையாளம்” என்றார்கள். நபியவர்களின் கைத்தடியைத் தனது வாழ்நாள் முழுவதும் பாதுகாத்து வைத்திருந்த அப்துல்லாஹ் (ரழி) அதை தனது கஃபனுடன் (மரணித்தவரை போர்த்தும் உடை) சேர்த்து தனது அடக்கஸ்தலத்தில் வைக்கப்பட வேண்டுமென வஸிய்யா (மரண சாஸனம்) செய்தார்கள். (இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆது)

ரஜீஃ குழு

ஹிஜ்ரி 4, ஸஃபர் மாதம் அழல் மற்றும் காரா வமிசத்தை சேர்ந்த ஒரு கூட்டம் நபி (ஸல்) அவர்களை சந்தித்து தங்களில் பலர் இஸ்லாத்தைத் தழுவ விரும்புகின்றனர். அவர்களுக்கு இஸ்லாமையும் குர்ஆனையும் கற்றுத் தர தங்களுடன் சிலரை அனுப்புமாறு கோரினர். அவர்களின் கோரிக்கையை ஏற்று 6 நபர்களை நபியவர்கள் அனுப்பினார்கள். அவர்களுக்கு மர்ஸத் இப்னு அபூமர்ஸத் கனவி (ரழி) அவர்களைத் தலைவராக்கினார்கள். இது இப்னு இஸ்ஹாக்கின் கூற்றாகும்.

“அனுப்பப்பட்டவர்கள் 10 நபர்கள்; அவர்களுக்குத் தலைவாரக ஆஸிம் இப்னு ஸாபித் (ரழி) இருந்தார்கள்” என்பது இமாம் புகாரியின் கூற்றாகும்.

இவர்களை அழைத்துக் கொண்டு ரஜீஃவு என்ற இடத்தை அம்மக்கள் அடைந்தனர். இவ்விடம் ராபிக் மற்றும் ஜித்தாவிற்கு மத்தியில் ஹிஜாஸு பகுதிக்கு அருகில் ஹுதைல் வமிசத்தை சொந்தமான நீர் நிலையாகும். இங்கு வந்தவுடன் லஹ்யான் கிளையினரை இவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராகத் தூண்டினர். லஹ்யான் கிளையைச் சோந்த 100 அம்பெறியும் வீரர்கள் காலடி காவடி அடையாளங்களை வைத்து இவர்கள் இருக்குமிடம் வந்தடைந்தனர். தங்களுக்கு மோசடி நடந்துவிட்டது என்று தெரிந்து கொண்ட நபித்தோழர்கள் ஃபத்ஃபத் என்ற மலைக்குன்றின் மீது ஏறிக்கொண்டனர். அங்கு வந்த எதிரிகள் “நாங்கள் உங்களைக் கொலை செய்யோம் என்ற உறுதிமொழி தருகிறோம், இறங்கி வாருங்கள்” எனக் கூறினர். ஆனால், ஆஸிம் இறங்கி வர மறுத்துவிட்டு, தங்களது தோழர்களுடன் சேர்ந்து எதிரிகளை எதிர்த்தனர். ஆனால், எதிரிகள் நபித்தோழர்களில் 7 நபர்களைக் கொன்றுவிட்டனர். மீதம் குபைப், ஜைது இப்னு தஸின்னா (ரழி) இன்னும் ஒருவர் ஆகிய மூவர் மட்டும் இருந்தனர். அவர்களிடம் இந்த எதிரிகள் கொல்ல மாட்டோம் என் மீண்டும் வாக்களித்தனர். அம்மூவரும் அவர்களிடம் இறங்கிவரவே தங்களின் வாக்குக்கு மாறுசெய்து வில்லின் நரம்புகளால் அவர்களைக் கட்டினர்.

அந்த மூன்றாவது நபித்தோழர் “இது இவர்களின் முதல் மோசடி” எனக் கூறி அவர்களுடன் செல்வதற்கு மறுத்தார். அவர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் அவர் வர மறுக்கவே அவரைக் கொன்றுவிட்டனர். அதற்கு பின் குபைப், ஜைது (ரழி) இருவரையும் மக்காவிற்கு அழைத்து வந்து அங்கு அவர்களை விற்றனர். இவ்விருவரும் பத்ர் போரில் மக்காவின் தலைவர்களில் சிலரை கொன்றிருந்தனர். குபைபை வாங்கியவர்கள் சில காலம் வரை அவர்களைச் சிறை வைத்திருந்தனர். பின்பு அவரை கொன்றுவிட முடிவு செய்து மக்காவின் புனித எல்லைக்கு வெளியில் அழைத்து சென்றனர். அங்கு அவரைக் கழு மரத்தில் ஏற்றி கொன்றுவிடலாம் என முடிவு செய்தனர். அப்போது குபைப் (ரழி) “நான் இரண்டு ரக்அத் தொழுதுகொள்ள என்னை விடுங்கள்” என்று கேட்க அவர்களும் அனுமதித்தனர். தொழுது முடித்தபின் “அல்லாஹ்வின் மீது ஆணையாக! எனக்கு நடுக்கம், பயம் ஏற்பட்டுவிட்டது என்று நீங்கள் கூறமாட்டீர்கள் என்றிருப்பின் நான் மேலும் தொழுதிருப்பேன் என்று கூறிய பிறகு, அல்லாஹ்வே! இவர்களை எண்ணிக்கொள்! இவர்களை தனித்தனியாக பிரித்து கொன்றுவிடு! இவர்களில் எவரையும் மீதம் விடாதே!” என்று கூறி பின்வரும் கவிதையை படித்தார்.

“எதிரி ரானுவத்தினர் என்னை சூழ்ந்தனர்;
தங்கள் இனத்தவரை எனக்கெதிராக ஒன்றிணைத்தனர்;
ஒவ்வொரு சாதியையும் வருமாறு அழைத்தனர்;
தங்களின் பெண்கள், பிள்ளைகள் என அனைவரையும் இணைத்தனர்;
ஒரு நீண்ட உறுதிமிக்க கழுமரத்திற்கருகில் நான் நிறுத்தப்பட்டேன்;
எனது கஷ்டம், தனிமை, அந்நியம்
மேலும் நான் இறக்குமிடத்தில் சூழ்ந்துள்ள ராணுவம்
இவையனைத்தையும் அல்லாஹ்விடமே முறையிடுகிறேன்;
இறைவனை நான் நிராகரிக்கவேண்டுமென பெரிதும் விரும்பினர்;
(எங்ஙனம் அதனைச் செய்வேன்)
மரணம் எனக்க அதைவிட மிக எளிது;
என் கண்கள் அழுகின்றன; நீர் ஒட இடமில்லை;
எனக்கிழைத்த துன்பத்தைத் தாங்க
அர்ஷின் அதிபதி எனக்கு பொறுமையளித்தான்;
அணு அணுவாக அவர்கள் என்னை கொல்கின்றனர்;
எனக்கு மோசமான உணவு வழங்கப்பட்டது;
நான் முஸ்லிமாகக் கொலையுறுவதால்
மரணம் ஒரு பொருட்டல்லவே!
எந்த பகுதியில் கொலையுண்டாலும்
அல்லாஹ்வின் பாதையில் என் மரணம் துயில் கொள்ளுமே!
அது, அல்லாஹ் நாடினால், துண்டு துண்டான
சதைகளின் நாள, நரம்புகளிலெல்லாம் அருள்வளம் பொழிவான்”


இந்த கவிதைகளைச் செவிமடுத்தப் பின் அபூஸுஃப்யான் குபைபிடம் “உன்னை உனது குடும்பத்தாரிடம் விட்டுவிடுகிறோம். ஆனால், முஹம்மதை நாங்கள் கொன்று விடுகிறோம். இது உனக்கு விருப்பமா? என்று கேட்டார். அதற்கு “நான் எனது குடும்பத்தில் இருக்க, முஹம்மது (ஸல்) அவர்களுக்கு நோவினை அளிக்கும் விதமாக அவருக்கு முள் குத்துவதை கூட நான் விரும்பமாட்டேன்” என குபைப் பதிலளித்தார். இதற்குப் பின் அவரை கழு மரத்தில் ஏற்றிக் கொன்றனர். அவர்களின் உடலை காவல் காக்க அங்கு சிலரை நியமித்தனர். ஒரு நாள் இரவில் அம்ர் இப்னு உமையா ழம்ரி என்பவர் அவரை கழு மரத்திலிருந்து இறக்கி நல்லடக்கம் செய்தார். பத்ர் போரில் குபைப் ஹாரிஸை கொன்றதால் அதற்குப் பதிலாக அவனின் மகன் உக்பா என்பவன் குபைப் அவர்களை கொன்றான்.

கொல்லப்படும் தருணத்தில் இரண்டு ரக்அத் தொழும் பழக்கத்தை முதலில் குபைப் தான் ஏற்படுத்தினார். மக்காவில் பழங்களே இல்லாமல் இருந்த காலத்தில் கைதியாக இருந்த குபைப் திராட்சைக் குலைகளைச் சாப்பிடுவதையும் மக்கள் பார்த்திருக்கின்றனர். (ஸஹீஹுல் புகாரி)

ஜைது இப்னு தஸின்னாவை ஸஃப்வான் இப்னு உமைய்யா விலைக்க வாங்கி தனது தந்தை உமைய்யா பத்ரில் கொல்லப்பட்டதற்கு பதிலாக அவரைக் கொன்றான்.

முன்னால் கொல்லப்பட்ட ஆஸிமுடைய உடலின் ஒரு சில பகுதியையாவது எடுத்து வர குறைஷிகள் சிலரை அனுப்பினர். ஆஸிம் குறைஷிகளின் மிக மதிக்கத்தக்க ஒருவரை பத்ரில் கொன்றிந்தார். ஆஸிமை பாதுகாப்பதற்கு அல்லாஹ் தேனியைப் போன்ற சில வண்டுகளை அனுப்பி, வந்தவர்களை விரண்டோடச் செய்தான். “தான் எந்த இணைவைப்பவனையும் தொடமாட்டேன்; எந்த இணைவைப்பவனும் என்னை தொட்டுவிடக் கூடாது” என்று ஆஸிம் அல்லாஹ்விடம் வேண்டி இருந்தார். அவரின் இந்த வேண்டுதலையும் உறுதியையும் அல்லாஹ் நிறைவேற்றினான். இச்செய்தியைக் கேள்விப்பட்ட உமர் (ரழி) “அல்லாஹ் முஃமினான (அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட) அடியானை உயிருடன் இருக்கும் போது பாதுகாத்தது போன்று அவரின் மரணத்திற்குப் பின்னும் பாதுகாக்கிறான்” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆது)

Offline Yousuf

பிஃரு மஊனா

ரஜீஃ என்ற இடத்தில் நடைபெற்ற மேற்கூறப்பட்ட துக்கமான நிகழ்ச்சிக்குப் பின் அதைவிட படுபயங்கரமான, ஒரு துக்கமான சம்பவம் நடந்தது. இதையே வரலாற்றில் பிஃர் மஊனா அசம்பாவிதம் என் குறிப்பிடப்படுகிறது. அதன் சுருக்கமாவது:

ஈட்டிகளுடன் விளையாடுபவன் என்றழைக்கப்படும் அபூபரா என்ற ஆமிர் இப்னு மாலிக் என்பவன் மதீனாவில் நபி(ஸல்) அவர்களைச் சந்நித்தான். நபியவர்கள் அவனுக்கு இஸ்லாமிய அழைப்பு கொடுத்தார்கள். அவன் அதை ஏற்கவுமில்லை, அதை மறுக்கவுமில்லை. அவன் நபியவர்களிடம் “அல்லாஹ்வின் தூதரே! நஜ்து மக்களை இஸ்லாமின் பக்கம் அழைக்க என்னுடன் உங்களது தோழர்களை அனுப்புங்கள், அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என நான் எண்ணுகிறேன்” என்றான். அதற்கு நபியவர்கள் “நஜ்துவாசிகள் எனது தோழர்களுக்கு ஆபத்து ஏதும் விளைவிக்கலாம் என நான் அஞ்சுகிறேன்” என்றார்கள். அதற்க அபூபரா “நான் அவர்களை பாதுகாப்பேன்” என்றான். எனவே, நபியவர்கள் நாற்பது தோழர்களை அனுப்பினார்கள். இது இப்னு இஸ்ஹாக் (ரஹ்) உடைய கூற்று. ஆனால் எழுபது நபர்கள் என ஸஹீஹுல் புகாரியில் வந்துள்ள எண்ணிக்கையே சரியானதாகும். இவர்களுக்கு ஸாயிதா குடும்பத்தைச் சேர்ந்த முன்திர் இப்னு அம்ர் என்பவரை நபியவர்கள் தலைவராக்கினார்கள். பிற்காலத்தில் இவர் “முஃனிக் லியமூத்” மரணமாக விரைந்தவர் என்று இவர் அழைக்கப்பட்டார். அதற்குக் காரணம், அவர் இந்நிகழ்ச்சியில் வீரமரணம் அடைய முதலாவதாக விரைந்தார். அனுப்பப்பட்ட தோழர்கள் அனைவரும் முஸ்லிம்களில் மிகச் சிறந்தவர்களாகவும், குர்ஆனைக் கற்றுத் தேர்ந்தவர்களாவும் இருந்தனர். இவர்கள் பகலில் விறகு பொறுக்கி அதை விற்று திண்ணைத் தோழர்களுக்கு உணவு வாங்கி வருவர். இரவில் குர்ஆன் ஓதுவதும், தொழுவதுமாக தங்களது வாழ்வைக் கழித்து வந்தனர்.

இவர்கள் அவனுடன் புறப்பட்டு பிஃரு மஊனா என்ற இடத்தை அடைந்தனர். இந்த இடம் ஆமிர் கிளையினருக்குச் சொந்தமான நிலத்திற்கும் ஸுலைம் கிளையினருக்கு சொந்தமான விவசாயக் களத்திற்கம் மத்தியலுள்ள நீர் நிலையாகும். அங்கு அனைவரும் தங்கிக்கொண்டு ஹிராம் இப்னு மில்ஹான் என்ற தோழரை நபி (ஸல்) அவர்களின் கடிதத்தைக் கொடுத்து ஆமிர் இப்னு துiஃபல் என்பவனிடம் அனுப்பினர். இந்த அல்லாஹ்வின் எதிரி அக்கடிதத்தை படிக்கவில்லை. அவன் சாடைக்காட்ட, ஒருவன் சிறு ஈட்டியால் ஹிராமைப் பின்புறத்திலிருந்து குத்தினான். தான் குத்தப்பட்டதையும், தனது உடம்பில் இரத்தம் வருவதையும் பார்த்த ஹிராம் “அல்லாஹு அக்பர். அல்லாஹ் மிகப் பெரியவன், கஅபாவின் இறைவின் மீது சத்தியம்! நான் வெற்றி பெற்றுவிட்டேன்” என்று கூறினார்.

அல்லாஹ்வின் எதிரியான அவன் எஞ்சிய மற்ற நபித்தோழர்களைக் கொல்வதற்கு ஆமிர் கிளையினரை அழைத்தான். ஆனால், அபூபரா இவர்களுக்கப் பாதுகாப்பு அளித்திருப்பதால் ஆமிர் கிளையினர் அதற்கு மறுத்து விட்டனர். பின்பு ஸுலைம் கிளையினரை அழைத்தான். ஸுலைமினரில் உஸைய்யா, ரிஃல், தக்வான் என்ற மூன்று வகுப்பினர் அவனது அழைப்பை ஏற்று அவனுடன் கிளம்பினர். இவர்கள் அனைநிகழ்நவரும் நபித்தோழர்களைச் சுற்றி வளைத்து நபித்தோழர்களுடன் சண்டையிட்டனர். இதில் தோழர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர். ஆனால், கஅபு இப்னு ஜைது இப்னு நஜ்ஜார் என்ற தோழர் மட்டும் படுகாயங்களுடன் பூமியில் சாய்ந்தார். இவர் இறந்துவிட்டதாக எதிரிகள் எண்ணினர். எதிரிகள் சென்ற பிறகு அவ்விடத்தில் இருந்து தப்பித்து மதீனா வந்தார். இவர் பின்னால் நடந்த அகழ் போரிலும் கலந்தார். அதில் எதிரிகளால் கொல்லப்பட்டார்.

தோழர்களில் அம்ர் இப்னு உமைய்யா ளம்ரி, முன்திர் இப்னு உக்பா இப்னு ஆமிர் ஆகிய இருவரும் முஸ்லிம்களின் வாகனங்களை மேய்த்து வருவதற்க்காகச் சென்றிருந்தனர். அங்கிருந்து முஸ்லிம்கள் தங்கியிருந்த இடத்திற்கு மேல் பிணந்தின்னி பறவைகள் வட்டமிடுவதை பார்த்து முஸ்லிம்களுக்கு ஏதோ ஆபத்து நிகழ்ந்து விட்டதை உணர்ந்தனர். உடனே அவ்விருவரும் அங்கு விரைந்தனர். எதிரிகள் தங்கள் தோழர்களை வஞ்சித்ததைப் பார்த்து பொங்கி எழுந்தனர். தாங்கள் இருவர் மட்டுமே இருக்கிறோம் என்பதையும் பொருட்படுத்தாமல் துணிச்சலுடன் எதிரிகளை எதிர்த்தனர். நீண்ட நேர சண்டைக்குப் பின் முன்திர் எதிரிகளால் கொல்லப்பட்டார். அம்ர் இப்னு உமையா கைதியாக்கப்பட்டார். அம்ர் முழர் குடும்பத்தைச் சார்ந்தவர் என்று தெரியவந்ததும் அவரின் முன்னந்தலையை சிரைத்துவிட்டு எதிரிகளின் தலைவனான ஆமிர் தனது தாய் செய்திருந்த நேர்ச்சைக்காக அவரை உரிமையிட்டு விட்டான். அம்ர் இப்னு உமைய்யா ழம்ரி (ரழி) முஸ்லிம்களில் மிகச் சிறந்தவர்களான இந்த எழுபது தோழர்கள் கொல்லப்பட்ட, மிகக் கவலையூட்டும் செய்தியை நபி (ஸல்) அவர்களிடம் கூறவதற்காக மதீனா நோக்கி விரைந்தார். இந்நிகழ்ச்சி உஹுத் போரில் ஏற்பட்ட வேதனையை மீண்டும் முஸ்லிம்களுக்கு நினைவூட்டியது. ஆனால் போரில் சண்டையிட்டு இறந்தனர். இவர்கள் வஞ்சகமாகத் தாக்கப்பட்டு மரணமடைந்தனர்.

அம்ர் இப்னு உமையா (ரழி) மதீனா திரும்பும் வழியில் கனாத் என்ற பள்ளத்தாக்கில் உள்ள கர்கரா என்ற இடத்தில் ஒரு மர நிழலில் தங்கினார். அப்போது கிலாப் கோத்திரத்தை சேர்ந்த இருவரும் அதே இடத்தில் வந்து தங்கினர். அம்ர் அவ்விருவரையும் எதிரிகளைச் சேர்ந்தவர்கள் என்றெண்ணி அவ்விருவரும் நன்கு கண் அயர்ந்துவிட்ட பின் தனது தோழர்களுக்காக பழிவாங்கும் நோக்கத்தில் அவ்விருவரையும் கொன்று விட்டார். ஆனால், கொன்று முடித்தபின் அவ்விருவரிடமும் நபி(ஸல்) அவர்களின் ஒப்பந்தக் கடிதம் இருப்பதை பார்த்தார். அது அவருக்கு முன்னதாக தெரியாது. மதீனா வந்தடைந்ததும் தனது செயலை நபியவர்களிடம் கூறி வருந்தினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் “நீ கொலை செய்த இருவருக்காக நான் நிச்சயம் தியத் (கொலைக் குற்றத்திற்குரிய பரிகாரத் தொகை) கொடுக்க வேண்டியது கடமையாகிவிட்டது எனக் கூறி, முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம்களின் ஒப்பந்தகாரர்களான யூதர்களிடம் இந்த தியத்தை வசூல் செய்து கொடுத்தார்கள். (ஸஹீஹுல் புகாரி, இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆது)

சில நாட்களுக்கள் நடந்த ரஜீஃ, பிஃரு மஊன் ஆகிய இவ்விரு நிகழ்ச்சிகள் நபி(ஸல்) அவர்களுக்குப் பெரும் கவலை அளித்தன. நபியர்வகள் மிகுந்த சஞ்சலத்திலும் துக்கத்திலும் ஆழ்ந்தார்கள். தங்களின் தோழர்களுக்கு மோசடி செய்த கூட்டத்தினருக்கு எதிராக நபியவர்கள் பிரார்தித்தார்கள். (இப்னு ஸஆது)

அனஸ் (ரழி) கூறுகிறார்கள்: தங்களின் தோழர்களை பிஃரு மஊனா வில் கொன்றவர்களை நபி(ஸல்) அவர்கள் முப்பது நாட்கள் சபித்தார்கள். ஃபஜ்ரு தொழுகையில் ரிஃலு, தக்வான், லஹ்யான், உஸய்யா ஆகிய கோத்திரத்தினருக்கு எதிராக நபியவர்கள் பிரார்த்தனை (குனூத் நாஜிலா) செய்தார்கள். மோசடி செய்த ஒவ்வொரு வகுப்பாரின் பெயரை கூறி வரும்போது “உஸய்யா வமிசத்தினர் அல்லாஹ்வுக்கும் அவது தூதருக்கும் மாறு செய்தனர்” என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு குர்ஆன் வசனம் ஒன்றை இறக்கினான். ஆனால், அதை அல்லாஹ் பிற்காலத்தில் குர்ஆனிலிருந்து எடுத்துவிட்டான். “நாங்கள் எங்களது இறைவனை சந்தித்தோம், அவன் எங்களை பொருந்திக் கொண்டான். நாங்களும் அவனை பொருந்திக் கொண்டோம் என்ற செய்தியை எங்களது கூட்டத்தினருக்கு எடுத்து சொல்லிவிடுங்கள்” என்பதே அவ்வசனம். அதற்குப் பின் நபி(ஸல்) அவர்கள் தங்களது இந்த பிரார்த்தனையை நிறுத்திக் கொண்டார்கள். (ஸஹீஹுல் புகாரி)

Offline Yousuf

நழீர் இனத்தவருடன் போர் (ஹிஜ்ரி 4 ரபீஉல் அவ்வல், கி.பி. 625 ஆகஸ்டு)

இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் வளர்ச்சியைப் பார்த்து யூதர்கள் உள்ளுக்குள் எரிந்தனர். முஸ்லிம்களை எதிர்க்க ஆற்றலும் துணிவும் இல்லாததால் சூழ்ச்சி செய்வதிலும், சதித்திட்டம் தீட்டுவதிலும் ஈடுபட்டு வந்தனர். தங்களின் பகைமை மற்றும் குரோதத்தையும் அவ்வப்போது வெளிப்படுத்தினர். போர் புரியாமல் வேறு பலவகை தந்திரங்களைக் கொண்டு முஸ்லிம்களுக்கு தொந்தரவு கொடுத்தனர். தங்களுக்கும் முஸ்லிம்களுக்கும் மத்தியில் உடன்படிக்கை மற்றும் ஒப்பந்தங்கள் இருந்தும் அதையெல்லாம் சிறிதும் மதிக்காமல் நடந்தனர். கைனுகா குடும்பத்தைச் சேர்ந்த யூதர்களுக்கு நேர்ந்த கதியையும், கஅபு இப்னு அஷ்ரஃபுக்கு நேர்ந்த கதியையும் பார்த்ததும் இவர்கள் தங்களின் அட்டூழியங்களை அடக்கிக்கொண்டு விஷமத்தனங்களை நிறுத்திக் கொண்டனர்.

ஆனால், உஹுத் போருக்குப்பின் இவர்களுக்கத் துணிவு பிறந்தது. பகைமை மற்றும் மோசடியையும் வெளிப்படையாக செய்யத் துவங்கினர். மக்காவிலுள்ள இணைவைப்பவர்களுடனும், மதீனாவிலுள்ள நயவஞ்சகர்களுடனும் தங்களின் தொடர்பை வலுப்படுத்திக் கொண்டு முஸ்லிம்களுக்கு எதிரான செயல்களில் குதித்தனர். (ஸுனன் அபூதாவூது)

நபி (ஸல்) இந்த யூதர்கள் குறித்து மிகுந்த பொறுமையைக் கடைப்பிடித்தார்கள். ஆயினும், ரஜீஃ, பிஃரு மஊன் ஆகிய நிகழ்ச்சிகளுக்குப் பின் இவர்களுக்கு புது துணிவு பிறந்தது. அதனால் நபியவர்களைக் கொன்றுவிட திட்டம் தீட்டினர்.

நபி (ஸல்) அவர்கள் தங்களின் தோழர்கள் சிலரை அழைத்துக் கொண்டு இவர்களிடம் வந்தார்கள். “அம்ர் இப்னு உமையா ழம்ரி என்ற தனது தோழரால் தவறுதலாக கொல்லப்பட்ட கிலாப் குலத்தவர்களின் குடும்பத்தவர்களுக்கக் கொடுக்க வேண்டும். அதற்காக தங்களால் ஆன உதவிகளைச் செய்யும்படி” நபியவர்கள் கோரினார்கள். யூதர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் மத்தியில் இதற்குமுன் செய்யப்பட்ட உடன்படிக்கையின்படி நஷ்டஈடு கொடுக்கும் விஷயத்தில் முஸ்லிம்களுக்கு யூதர்கள் உதவி செய்ய வேண்டும் என்பதும் ஒன்று. காலங்காலமாக சூழ்ச்சிக்கு பெயர் போன வஞ்சக யூதர்கள் நபியவர்களிடம் “இங்கு அமருங்கள்! நீங்கள் வந்த தேவையை நாங்கள் நிறைவேற்றித் தருகிறோம்” என்றனர். இவர்கள், கொடுத்த வாக்கை காப்பாற்றுவார்கள் என்று எதிர்பார்த்து நபியவர்கள் அவர்களின் வீட்டுச் சுவரில் சாய்ந்து உட்கார்ந்தார்கள். நபி (ஸல்) அவர்களுடன் அபூபக்ர், உமர், அலீ (ரழி) மற்றும் சில தோழர்களும் இருந்தனர்.

யூதர்கள் தங்களுக்குள் தனிமையில் சந்தித்தனர். அவர்கள் மீது விதிக்கப்பட்ட கேட்டை ஷைத்தான் அவர்களுக்க அலங்கரித்து அதை செய்யத் தூண்டினான். எனவே, அவர்கள் நபியவர்களை கொன்றுவிட சதித்திட்டம் தீட்டினர். திருகைக் கல்லை எடுத்து வீட்டுக் கூரைக்கு மேல் ஏறி முஹம்மதின் தலை மீது போட்டு தலையை நசுக்கி கொன்றுவிடலாம் என் ஒருவன் ஆலோசனைக் கூறினான். அதை அனைவரும் ஆமோதித்தனர். இதைச் செய்ய வழிகேடன் அம்ர் இப்னு ஜஹாஷ் என்ற விஷமி ஆயத்தமானான். ஆனால் ஸலாம் இப்னு மிஷ்கம் என்பவர் “அவ்வாறு செய்ய வேண்டாம்” என்று அவர்களைத் தடுத்தார். மேலும் “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் தீட்டும் திட்டம் அவருக்கு அறிவிக்கப்பட்டு விடும். அது நமக்கும் அவருக்குமிடையில் உள்ள உடன்படிக்கையை முறிப்பதாகி விடும்” என்று எச்சரித்தார். எனினும், தங்களது சதிதிட்டத்தை நிறைவேற்றுவதில் அவர்கள் உறுதியாக இருந்தனர்.

அவர்களின் இந்தச் சதித்திட்டத்தை அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வின் புறத்திலிருந்து நபி (ஸல்) அவர்களுக்கு ஜிப்ரீல்(அலை) அறிவித்தார். உடனடியாக அங்கிருந்து எழுந்து நபியவர்களும் அவர்களது தோழர்களும் மதீனா வந்தடைந்தனர். “நபியே! நீங்கள் எழுந்தது எதற்காக என்பதை நாங்கள் அறிந்து கொள்ளவில்லையே” என வினவினார்கள். நபியவர்கள் யூதர்கள் செய்த சதியைத் தோழர்களுக்கு அறிவித்தார்கள்.

இச்சம்பவத்திற்குப் பின் நபி(ஸல்) அவர்கள் தனது தோழர் முஹம்மது இப்னு மஸ்லமாவை நழீர் இனத்தவரிடம் அனுப்பி, “மதீனாவிலிருந்து வெளியேறிவிடுங்கள்; எங்களுடன் மதீனாவில் நீங்கள் தங்கக் கூடாது; இனி மதீனாவில் வசிக்கக் கூடாது; பத்து நாட்கள் மட்டும் நான் உங்களுக்கு அவகாசம் தருகிறேன்; அதற்கு மேலும் யாராவது மதீனாவில் தங்கியிருந்தால் அவரது கழுத்தை வெட்டி விடுவேன்” என்று கூறும்படி சொன்னார்கள்.

நபி (ஸல்) அவர்களின் இக்கட்டளையை யூதர்கள் ஏற்றே ஆகவேண்டி இருந்தது. மதீனாவை விட்டுச் செல்ல தேவையான தயாரிப்புகளைச் செய்து கொண்டிருந்தனர். இந்நிலையில் நயவஞ்சகர்ளின் தலைவன் இப்னு உபை யூதர்களிடம் தூது அனுப்பி, “நீங்கள் உங்களது இல்லங்களில் இருந்து கொண்டு உங்களைப் பாதுகாத்து கொள்ளுங்கள். உங்களது இல்லங்களிலிருந்து வெளியேறவேண்டாம். என்னுடன் இரண்டாயிரம் வீரர்கள் தயாராக உள்ளனர். முஹம்மது உங்கள் மீது போர் தொடுத்தால் அந்த வீரர்கள் உங்களுடன் சேர்ந்து கொண்டு உங்கள் உயிரைக் காக்க தங்களின் உயிரையும் தியாகம் செய்யத் தயாராக உள்ளனர். மேலும், குரைளா மற்றும், கத்ஃபான் கோத்திரத்தில் உள்ள உங்களது நண்பர்களும் உங்கள் உதவிக்கு வருவார்கள்” என்று கூறினான்.

இப்னு உபைபின் மேற்கூறப்பட்ட கூற்றை விவதித்து, இந்த குர்ஆன் வசனம் இறங்கியது.

(நபியே!) நயவஞ்சகம் செய்வோரை நீர் கவனிக்கவில்லையா? அவர்கள், வேதத்தை உடையோரிலுள்ள நிராகரித்துக் கொண்டிருப்போரான தம் சகோதரர்களிடம் “நீங்கள் வெளியேற்றப்பட்டால், உங்களுடன் நாங்களும் நிச்சயமாக வெளியேறுவோம்; அன்றியும், (உங்களுக்கெதிராக) நாங்கள் எவருக்கும், எப்பொழுதும் நாம் வழிப்பட மாட்டோம்; மேலும், உங்களுக்கெதிராக போர் செய்யப்பெற்றால், நிச்சயமாக நாங்கள் உங்களுக்கு உதவி செய்வோம்” என்று கூறுகின்றனர்; ஆனால் நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள் என்று அல்லாஹ் சாட்சியங் கூறுகிறான். அல்குர்ஆன் 59:11

மதீனாவை விட்டு வெளியேறிவிடலாம் என்றிருந்த யூதர்களுக்கு இதனால் துணிவு பிறந்தது. எதிர்த்து போரிடுவோம் என்று முடிவு செய்தனர். நயவஞ்சகர்களின் தலைவன் கூறியதைக் கேட்டு நப்பாசை கொண்ட யூதர்களின் தலைவன் ஹை இப்னு அக்தப் நபி (ஸல்) அவர்களிடம் ஆளனுப்பி “நாங்கள் எங்களின் இல்லங்களிலிருந்து வெளியேற மாட்டோம். உனக்கு என்ன தோன்றுகிறதோ அதைச் செய்துகொள்!” என்று கூறினான்.

உண்மையில் இந்நிலைமை முஸ்லிம்களைப் பொறுத்தவரை மிகச் சிக்கலானதாகவே இருந்தது. முஸ்லிம்களின் மிகச் சிரமமான இக்காலகட்டத்தில் எதிரிகளிடம் மோதுவதும், சண்டை செய்வதும் ஆபத்தான முடிவை உண்டாக்கலாம்; மற்ற அரபுகள் ஒருபக்கம் தங்களைத் தாக்குகிறார்கள். மேலும், தங்களின் அழைப்புப் பணிக்காக அனுப்பப்படும் குழுக்களையும் சதி செய்து கொன்று விடுகிறார்கள் என்பதை முஸ்லிம்கள் உணர்ந்திருந்தனர். இதுமட்டுமின்றி நழீர் கோத்திரத்தைச் சேர்ந்த யூதர்கள் ஓரளவுக்கு தேவையான வலிமையுடன் விளங்கியதால் அவர்கள் சரணடைவது அடிபணிவது சற்று கடினமான விஷயம்தான். அவர்களுடன் போரிடுவது பல இன்னல்களை சந்திக்கக் காரணமாகலாம். ஆயினும், இதற்கெல்லாம் முஸ்லிம்கள் தளர்ந்து விடவில்லை. பிஃரு மஊனாவின் நிகழ்ச்சியும் அதற்கு முன் நடந்த நிகழ்ச்சியும் முஸ்லிம்களின் உணர்ச்சிகளை அதிகம் தூண்டின. தங்களின் தனி நபர்களுக்கும் குழுக்களுக்கும் ஏற்படும் மோசடி மற்றும் வஞ்சகச் செயல்களை முடிவுக்குக் கொணடு வந்து அதை செய்பவர்களுக்கும், செய்யத் தூண்டுபவர்களுக்கும் நல்ல பாடம் புகட்ட வேண்டும்; நபி (ஸல்) அவர்களையே கொல்லத் துணிந்த நழீர் இனத்தவரிடம் போர் செய்தே தீர வேண்டும் என்று முடிவு செய்தனர். அதனால் எத்தகைய விளைவுகள் ஏற்பட்டாலும் அதைச் சமாளிக்கத் துணிந்தனர்.

நபி (ஸல்) அவர்களுக்கு ஹை இப்னு அக்தப் கூறிய பதில் கிடைத்தவுடன் தக்பீர் (அல்லாஹ் அக்பர் என்று) முழங்கினார்கள். தோழர்களும் தக்பீர் முழங்கினர். பின்பு நழீர் இனத்தவரிடம் சண்டையிட ஆயத்தமானார்கள். மதீனாவில் இப்னு உம்மு மக்தூம் (ரழி) அவர்களைப் பிரதிநிதியாக நியமித்தார்கள். அலீ (ரழி) படையின் கொடியை ஏந்தியிருக்க நபியவர்கள் படையுடன் புறப்பட்டுச் சென்று யூதர்களை முற்றுகையிட்டார்கள். நழீர் இனத்தவர் தங்களின் கோட்டைகளுக்குள் புகுந்து கொண்டனர். முஸ்லிம்களை நோக்கி அம்புகளையும், கற்களையும் வீசி எறிந்து தாக்கினர். இதற்கு, அவர்களது தோட்டங்களும் பேரீத்த மரங்களும் அவர்களுக்கு சாதகமாக இருந்தன. எனவே, அவர்களின் தோட்டங்களையும் பேரீத்த மரங்களையும் வெட்டி எரித்து விடும்படி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதைப் பற்றியே ஹஸ்ஸான் கூறுகிறார்.

புவைராவில் தீ பரவி கொழுந்துவிட்டு எரிவது
பனூ லுஅய் கூட்டத் தலைவர்களுக்கு மிக எளிதாகிவிட்டது.

இவர்களின் பேரீத்த தோட்டத்தின் பெயர்தான் புவைரா என்பது. அல்லாஹ் இதுகுறித்தே இந்த வசனத்தை இறக்கினான்.


நீங்கள் (அவர்களுடைய) பேரீத்த மரங்களை வெட்டியதோ, அல்லது அவற்றின் வேர்களின் மீது அவை நிற்கும்படியாக விட்டு விட்டதோ அல்லாஹ்வின் அனுமதியாலும், அந்த ஃபாஸிக்குகளை(ப் பாவிகளை) அவன் இழிவு படுத்துவதற்காகவுமே தான். அல்குர்ஆன் 59:5

Offline Yousuf

குரைளா யூதர்கள் உதவிக்கு முன் வரவில்லை. அவ்வாறே இவர்களின் நண்பர்கள் கத்ஃபான் கிளையைச் சேர்ந்தவர்களும் மற்றும் அப்துல்லாஹ் இப்ன உபைய்யும் உதவிக்கு வராமல் விலகிக் கொண்டனர். எனவேதான் இவர்களின் இந்த நடத்தையை அல்லாஹ் உவமானத்துடன் கூறுகிறான்.

(இன்னும் இவர்கள் நிலை) ஷைத்தானுடைய உதாரணத்தைப் போன்றிருக்கிறது; (அவன்) மனிதனை நோக்கி: “நீ (இறைவனை) நிராகரித்து விடு” என்று கூறுகிறான். அவ்வாறு மனிதன் நிராகரித்ததும் “நான் உன்னை விட்டும் ஒதுங்கிக் கொண்டேன்; (ஏனெனில்) நான் அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சுகிறேன்” என்றான். அல்குர்ஆன் 59:16

முற்றுகை 6 அல்லது 15 இரவுகள் நீடித்தது. அல்லாஹ் யூதர்களின் உள்ளத்தில் பயத்தையும் நடுக்கத்தையும் போட்டான். “ஆயுதங்களைக் கீழே போட்டு நாங்கள் பணிந்து விடுகிறோம்; நாங்கள் மதீனாவை விட்டு வெளியேறி விடுகிறோம்” என்று நபியவர்களிடம் தூதனுப்பினார்கள்.

அதற்க நபி(ஸல்) அவர்கள் “உங்களையும் உங்கள் பிள்ளை குட்டிகளையும் அழைத்துக் கொண்டு இங்கிருந்து சென்று விடுங்கள்; ஒட்டகங்கள் சுமக்கும் அளவுள்ள சாமான்களையும் உங்களுடன் நீங்கள் எடுத்துச் செல்லலாம்; ஆயுதங்களை எடுத்துச் செல்லக் கூடாது” என்று கூறினார்கள்.

இந்த நிபந்தனைக்கு அவர்கள் அடிபணிந்தனர். தங்களுக்குப் பிறகு தங்கள் வீடுகளை எவரும் பயன்படுத்தக் கூடாது என்பதற்காக அவற்றை அழித்தனர். வீட்டு கதவுகளையும் ஜன்னல்களையும் பெயர்த்து தங்களுடன் எடுத்து கொண்டனர். அவர்களில் சிலரோ ஆணிகளையும், முகட்டில் இருந்த பலகைகளையும், முளைக் கம்புகளையும் கூட தங்களுடன் எடுத்துக் கொண்டனர். பின்பு பெண்கள், சிறுவர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு 600 ஒட்டகைகளில் புறப்பட்டனர். ஹை இப்னு அக்தப், ஸல்லாம் இப்னு அபூஹுகைக் போன்ற தலைவர்களும் மற்றும் பெரும்பாலான யூதர்களும் கைபர் சென்று தங்கினர். மற்றவர்கள் ஷாம் நாட்டிற்குச் சென்றனர். அவர்களில் இருவர் மட்டும் இஸ்லாமை ஏற்றுக் கொண்டதால் தங்களது சொத்து செல்வங்களுடன் மதீனாவில் தங்க அனுமதிக்கப்பட்டனர்.

நபி (ஸல்) அவர்கள் இம்மக்களின் ஆயுதங்கள், அவர்கள வீடுகள், நிலங்கள், செல்வங்கள் என அனைத்தையும் கைப்பற்றினார்கள். மொத்தம் 50 கவச ஆடைகளும், 50 தலைக் கவசங்களும், 340 வாட்களும் இருந்தன.

இந்த யூதர்களின் செல்வங்கள், சொத்துகள், வீடுகள், நிலங்கள் அனைத்தையும் அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் அருளினான். அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அதை செய்து கொள்ள முழு அனுமதியளித்தான். அதை ஐந்து பங்காக ஆக்க வேண்டும் என்று நபியவர்களுக்கு கட்டளையிடவில்லை. ஏனெனில், இது சண்டையின்றி கிடைத்த பொருளாகும். இப்பொருட்களை முந்திய முஹாஜிர்களுக்கு (மக்காவிலிருந்து மதீனாவில் குடியேறியவர்களுக்கு) மட்டும் நபியவர்கள் பங்கு வைத்தார்கள். ஆனால், அன்சாரிகளில் ஏழையாக இருந்த அபூ துஜான, ஸஹ்ல் இப்னு ஹுனைஃப் (ரழி) இருவருக்கும் அதில் பங்கு கொடுத்தார்கள். அதிலிருந்துதான் நபி (ஸல்) அவர்கள் தமது குடும்பத்தினருக்கு ஓராண்டுக்குத் தேவையானவற்றைக் கொடுத்து வந்தார்கள். மீதமிருந்ததை அல்லாஹ்வின் பாதையில் போருக்குப் பயன்படுத்தினார்கள்.

இப்போர் குறித்த விவரங்களை முழுவதுமாக ஹஷ்ர் என்ற அத்தியாயத்தில் அல்லாஹ் இறக்கினான். இந்த அத்தியாயத்தில் “யூதர்கள் எவ்வாறு விரட்டியடிக்கப்பட்டனர்; நயவஞ்சகர்களின் கொள்கையும் பழக்கமும் எவ்வாறனது? போரின்றி கிடைக்கும் செல்வத்தின் சட்டம் என்ன?” போன்ற விவரங்கள் கூறப்பட்டன. மேலும் முஹாஜிர்கள், அன்சாரிகள் குறித்து இந்த அத்தியாயத்தில் புகழ்ந்து கூறியிருக்கிறான். போர் நலன்களை கருத்தில் கொண்டு எதிரிகளுக்குச் சொந்தமான மரங்களை வெட்டுவதும், கொளுத்துவதும் சரியானதே; இது விஷமத்தனமாக ஆகாது என்ற அல்லாஹ் இந்த அத்தியாயத்தில் கூறியுள்ளான். அத்துடன் முஸ்லிம்கள் எப்போதும் இறையச்சத்தைக் கடைப்பிடித்து, மறுமைக்கான நல்ல காரியங்களைச் செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டு இறுதியாக தனது புகழ்ச்சியைக் கூறி உயர்வுமிக்க தனது பெயர்களை விவரித்து அத்தியாயத்தை நிறைவு செய்கிறான்.

இந்த அத்தியாயத்தில் நழீர் இன யூதர்களை குறித்து முழுவதுமாக கூறப்பட்டிருப்பதால் இந்த அத்தியாயத்தை நழீர் என்றும் கூறலாம் என இப்னு அப்பாஸ் (ரழி) கூறுகிறார்கள். (ஸஹீஹுல் புகாரி, இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆது)

இப்னு இஸ்ஹாக் (ரஹ்) மற்றும் பெரும்பான்மையான வரலாற்று ஆசிரியர்கள் இப்போர் குறித்து கூறியதை நாம் இதுவரை பார்த்தோம்.

அபூதாவது, அப்துர் ரஜாக் (ரஹ்) மற்றும் பல அறிஞர்கள் இச்சம்பவத்திற்க வேறு பல காரணங்களைக் கூறுகின்றனர். அஃதாவது: பத்ர் போருக்குப் பின் குறைஷிகள் நழீர் இன யூதர்களுக்க கடிதம் எழுதினர். அதில் “நீங்கள் மதீனாவில் நல்ல பாதுகாப்புடன் வாழ்கிறீர்கள். உங்களிடம் கோட்டைகளும் அரண்களும் உள்ளன. எனவே, அங்கு இருக்கும் எங்களுடைய ஊர்வாசிகளிடம் நீங்கள் போர் செய்யுங்கள். அவ்வாறு செய்யாவிட்டால் நாங்கள் உங்களுக்க பல வகையில் தொல்லைகள் தருவோம். உங்களின் பெண்களை எங்களை விட்டும் நீங்கள் காப்பாற்றிக் கொள்ள முடியாது.” இவ்வாறு அக்கடிதத்தில் குறைஷிகள் குறிப்பிட்டனா.

இக்கடிதத்தைப் பார்த்தவுடன் நழீர் கிளையினர் நபி (ஸல்) அவர்களுடன் செய்த உடன்படிக்கைக்குத் துரோகம் செய்ய முடிவெடுத்தனர். அவர்கள் நபியவர்களிடம் தூது அனுப்பி, “நீங்கள் உங்களுடைய 30 தோழர்களுடன் எங்களிடம் வாருங்கள். நாங்கள் எங்களுடைய 30 அறிஞர்களை அழைத்துக் கொண்டு வருகிறோம். குறிப்பிட்ட ஓர் இடத்தில் நாம் சந்திப்போம். நீங்கள் கூறுவதை எங்களது பாதிரிகள் கேட்பார்கள். அவர்கள் நீங்கள் கூறுவதை உண்மை என்று ஆமோதித்து உங்களை நம்பிக்கை கொண்டால் நாங்கள் அனைவரும் உங்களை நம்பிக்கை கொள்வோம்” என்று கூறினர்.

நபி (ஸல்) அவர்கள் 30 தோழர்களை அழைத்துக் கொண்டு புறப்பட்டார்கள். யூதர்களும் தங்களது 30 பாதிரிகளுடன் வந்தனர். இரு குழுக்களும் ஒரு திறந்த வெளி மைதானத்திற்கு வந்தவுடன் யூதர்கள் தங்களுக்குள், “இப்போது எப்படி இவரை (முஹம்மதை) நாம் கொல்ல முடியும். இவரைச் சுற்றி 30 தோழர்கள் உள்ளனர். அந்த தோழர்கள் இவருக்காக தங்களது உயிரையும் அர்ப்பணிக்கத் துணிந்தவர்களாயிற்றே! எனவே, நாம் இப்போது நமது திட்டத்தை நிறைவேற்றுவது சரியன்று” என்று யோசித்தனர். ஒரு வழியாக வேறு முடிவெடுத்து திரும்ப நபி (ஸல்) அவர்களிடம் வந்து “நாம் இப்போது 60 நபர்களாக இருக்கும் போது நீங்கள் கூறுவதை எங்களால் சரியாக புரிந்து கொள்ள முடியாது. நாங்கள் கூறுவதையும் உங்களால் சரியாக புரிந்து கொள்ள முடியாது. எனவே, மூன்று தோழர்களை மட்டும் அழைத்துக் கொண்டு வாருங்கள். நாங்களும் மூன்று அறிஞர்களை மட்டும் அழைத்து வருகிறோம். அந்த அறிஞர்கள் நீங்கள் கூறுபவற்றை கேட்பார்கள். அவர்கள் உங்கள் மீது நம்பிக்கை கொண்டால் நாங்களும் உங்கள் மீது நம்பிக்கை கொள்வோம். உங்களை உண்மையாளர் என்று ஏற்றுக் கொள்வோம்” என்றனர்.

இதற்கும் நபி (ஸல்) அவர்கள் இணங்கி மூன்று தோழர்களை மட்டும் அழைத்துக் கொண்டு சந்திக்கப் புறப்பட்டார்கள். யூதர்கள் தங்களுடன் வீச்சரிவாளை எடுத்துக் கொண்டு நபியவர்களைத் திடீரென பாய்ந்து கொன்றுவிட வேண்டும் என்ற முடிவில் வந்தனர். ஆனால், நழீர் கோத்திரத்தில் உள்ள ஒரு பெண் முஸ்லிமான தன் உறவினர் ஒருவருக்கு சதித்திட்டத்தைப் பற்றி அறிவித்தார். அவர் நபியவர்கள் அங்கு செல்வதற்கு முன் அவர்களைச் சந்தித்து செய்தியைக் கூறினார். இதைக் கேட்டவுடன் நபியவர்கள் போகாமல் பாதி வழியிலேயே திரும்பிவிட்டார்கள்.

அதற்கடுத்த நாள் நபி (ஸல்) அவர்கள் படையுடன் யூதர்களை முற்றுகையிட்டார்கள். அப்போது அவர்களிடம் “நீங்கள் எனக்கு ஒப்பந்தம் செய்து கொடுக்காத வரை உங்களுக்கு என்னிடம் எவ்வித பாதுகாப்பும் நிச்சயம் இல்லை” என்று கூறினார்கள். ஆனால், நழீர் யூதர்கள் அதற்கு ஒத்துவரவில்லை. ஆகவே, நபியவர்களும் முஸ்லிம்களும் அன்றைய தினம் அவர்களுடன் போர் புரிந்தனர். பின்பு இரண்டாம் நாள் அவர்களுடன் போர் செய்யாமல் அவர்களை அவர்களின் நிலைமையிலேயே விட்டு அவர்களுக்கருகில் உள்ள குரைளா யூதர்களிடம் நபி (ஸல்) படையுடன் சென்று அவர்களிடம் “நீஙகள் எனக்கு ஓர் ஒப்பந்தத்தைச் செய்து கொடுத்தால் நான் உங்களுடன் போர் செய்ய மாட்டேன்” என்றார்கள். குரைளா யூதர்களும் அதற்கு இணங்கி நபியவர்களிடம் ஒப்பந்தம் செய்தனர்.

பின்பு நபி (ஸல்) மீண்டும் நழீர் இனத்தவரிடம் சென்று அவர்களுடன் சண்டையிட்டார்கள். அவர்கள் தாக்குப்பிடிக்க முடியாமல் இறுதியாக நபியவர்களிடம் சரணடைந்ததனர். அதாவது “மதீனாவைவிட்டு வெளியேற வேண்டும் ஆயுதங்களைத் தவிர மற்ற பொருட்களை ஒட்டகம் சுமக்கும் அளவிற்கு எடுத்துச் செல்லலாம்” என்ற நிபந்தனைக்கும் கட்டுப்பட்டு போரை முடித்துக் கொண்டனர். பின்பு தங்களின் வீடுகளை நாசப்படுத்தினர். அதை இடித்துத் தள்ளி அதிலிருந்த மரப்பலகைகளையும் எடுத்துக் கொண்டனர். இதுதான் முதன்முறையாக யூதர்களை நாடுகடத்திய சம்பவமாகும். இவர்களை மதீனாவிலிருந்து ஷாம் தேசத்திற்கு நாடு கடத்தப்பட்டது. (முஸன்னஃப் அப்துர் ரஜ்ஜாக், ஸுனன் அபூதாவது)

Offline Yousuf

அல்அஹ்ஜாப் போர்

அஹ்ஜாப் என்று அறியப்படும் இப்போர் ஹிஜ்ரி 5, ஷவ்வால் மாதத்தில் நடைபெற்றது.

ஓராண்டு காலமாக நபியவர்கள் எடுத்த ராணுவ நடவடிக்கைகளால் மதீனாவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அமைதி, பாதுகாப்பு மற்றும் நிம்மதியான சூழ்நிலை முழுமையாக நிலவியது. இந்த நடவடிக்கைகளில் பெரிதும் இழிவையும் கேவலத்தையும் அடைந்தவர்கள் யூதர்களே! அதற்குக் காரணம், அவர்கள் செய்த மோசடி, துரோகம், சதித்திட்டம் மற்றும் சூழ்ச்சிகள்தான். இவ்வாறு கேவலப்பட்டும் அவர்கள் படிப்பினை பெறவில்லை. தங்களது விஷமத்தனங்களை விட்டும் முற்றிலும் விலகிக் கொள்ளவுமில்லை. கைபருக்குக் கடத்தப்பட்ட அந்த நழீர் இன யூதர்கள் முஸ்லிம்களுக்கும் இணைவைப்பவர்களுக்கும் நடைபெரும் போர்களில் முஸ்லிம்களின் நிலை என்னவாகும் என்று எதிர்பார்த்திருந்தனர். ஆனால், வெற்றி முஸ்லிம்களுக்குக் கிட்டி முஸ்லிம்களின் ஆதிக்கம் நிலை பெற்றிடவே, அதைத் தாங்க இயலாமல் அந்த யூதர்கள் எரிச்சலைடைந்தனர் நெருப்பாய் எரிந்தனர்.

அப்போது, முஸ்லிம்களுக்கு எதிராகப் புதிய திட்டம் ஒன்று தீட்டினர். முஸ்லிம்களை முற்றிலும் அழிக்கும் ஒரு போரைத் தூண்டிவிட ஏற்பாடு செய்தனர். தங்களால் முஸ்லிம்களை நேரடியாக தாக்க ஆற்றல் இல்லை என்பதை உணர்ந்த அவர்கள் இதற்காக ஒரு சூழ்ச்சி செய்தனர்.

அதாவது, நழீர் கோத்திரத்தின் தலைவர்கள் மற்றும் சிறப்புமிக்கவர்களில் 20 யூதர்கள் மக்கா குறைஷிகளிடம் வந்தனர். அவர்களை நபியவர்களுக்கு எதிராக போர் புரிய தூண்டி, அதற்கு உதவியும் செய்வதாக வாக்களித்தனர். பத்ர் மைதானத்திற்கு அடுத்த ஆண்டு வருகிறோம் என்று உஹுத் போர்க்களத்தில் சொல்லிச் சென்று, அதை நிறைவேற்றாமல் வாக்கை மீறிவிட்ட அந்த குறைஷிகள் தற்போது தங்களது பெருமையைத் தக்கவைத்துக் கொள்ள விரும்பி யூதர்களின் தூண்டுகோலுக்கு இரையானார்கள்.

பின்பு இக்குழுவினர் அங்கிருந்து கத்ஃபான் கிளையினரிடம் சென்றனர். அவர்களிடமும் குறைஷிகளிடம் கூறியதுபோல் கூறியதும், உடனே அவர்களும் போருக்கு ஆயத்தமாயினர். மேலும், இக்குழு பல அரபு கோத்திரத்தினரை நபி (ஸல்) அவர்களுக்கு எதிராக போர் புரிய தூண்டிவிட்டனர். பல சமுதாயத்தவர் இதை ஏற்று போருக்கு ஆயத்தமானார்கள். இறுதியாக இந்த யூத அரசியல் தலைவர்கள், நபியவர்களுக்கு எதிராக அனைத்து அரபுகளையும் ஒன்று திரட்டுவதில் வெற்றி கண்டனர்.

இந்த முயற்சிக்குப் பின், மேற்கிலிருந்து குறைஷிகளும், திஹாமாவைச் சேர்ந்த கினானா மற்றும் அவர்களின் நட்புக் கிளையினர் என மொத்தம் 4000 நபர்கள் அபூஸுஃப்யானின் தலைமையில் புறப்பட்டனர். ‘மர்ருள் ளஹ்ரான்’ என்ற இடத்திற்கு இப்படை வந்தடைந்த போது அங்குள்ள ஸுலைம் கோத்திரத்தினர் இவர்களுடன் சேர்ந்து கொண்டனர். பின்பு மதீனாவிற்குக் கிழக்கில் கத்ஃபான், ஃபஜாரா கிளையினர் உயைனா இப்னு ஸ்னு தலைமையில் புறப்பட்டனர். மேலும், ஹாரிஸ் இப்னு அவ்ஃப் என்பவனின் தலைமையின் கீழ் முர்ரா கிளையினரும் மிஸ்அர் இப்னு ருஹைலாவின் தலைமையின் கீழ் அஷ்ஜஃ கிளையினரும், இதைத் தவிர அஸத் மற்றும் பல கோத்திரத்தினரும் ஒன்றுசேர்ந்து புறப்பட்டனர்.

இந்தப் படையினர் அனைவரும் தங்களுக்குள் செய்து கொண்ட ஒப்பந்தத்திற்கிணங்க குறிப்பிட்ட தவணையில் அனைவரும் மதீனா சென்று ஒன்றுகூடினர். இவர்கள் 10,000 வீரர்கள் இருந்தனர். இந்த எண்ணிக்கை மதீனாவிலுள்ள பெண்கள், சிறுவர்கள், வாலிபர்கள், வயோதிகர்கள் என அனைவரின் எண்ணிக்கையை விட அதிகமாக இருந்தது.

எதிரிகளின் இந்த ராணுவங்கள் அனைத்தும் திடீரென மதீனாவைத் தாக்கினால் நிச்சயம் முஸ்லிம்களில் ஒருவர்கூட மிஞ்சாமல் அழிந்துவிடுவார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால், மதீனா நகரத்தின் தலைமைத்துவமோ முற்றிலும் விழித்த நிலையிலேயே இருந்தது. மதீனாவின் செய்தி சேகரிப்பாளர்கள் பல இடங்களில் தங்கி மிகுந்த கண்காணிப்புடன் செயல்பட்டு, அங்குள்ள செய்திகளை மதீனாவுக்கு அனுப்பியபடி இருந்தார்கள். எனவே, எதிரிகளின் இவ்வளவு பெரிய படை புறப்பட்டதும் முஸ்லிம் ஒற்றர்கள் இப்படையைப் பற்றிய விவரங்களைத் தங்களின் தலைமைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்செய்திகள் கிடைத்தவுடன் நபி (ஸல்) அவர்கள் உடனடியாக ஓர் உயர்மட்ட ஆலோசனைக் குழுவைக் கூட்டினார்கள். மதீனாவையும் முஸ்லிம்களையும் எப்படி தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி ஆலோசனை நடத்தினார்கள். ஆலோசனைக் குழு உறுப்பினர்களுக்கு மத்தியிலும் தளபதிகளுக்கு மத்தியிலும் ஏற்பட்ட பல கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பின் சங்கைக்குரிய நபித்தோழராகிய ஸல்மான் ஃபார்ஸி (ரழி) முன் வைத்த கருத்து முடிவாக ஏற்கப்பட்டது.

“அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் பாரசீக நாட்டில் இருந்த போது எங்களை எதிரிகள் தாக்க வருவதாக இருந்தால் எங்களைச் சுற்றி அகழ் தோண்டிக் கொள்வோம். அவ்வாறே இங்கும் செய்யலாம்” என ஸல்மான் ஃபார்ஸி (ரழி) கூறினார்கள். இதற்கு முன் இது அரபியர்களுக்குத் தெரியாத ஒரு புதிய திட்டமாக இருந்தது.

இத்திட்டத்தை கேட்டவுடன் இதை அங்கீகரித்து, அதை நிறைவேற்ற நபி (ஸல்) அவர்கள் ஆர்வம் காட்டினார்கள். “ஒவ்வொரு 10 நபர்கள் கொண்ட குழு 40 முழம் அகழ் தோண்ட வேண்டும்” என்று நபியவர்கள் பணித்தார்கள். முஸ்லிம்கள் மிகுந்த உற்சாகத்துடன் அகழ் தோண்டுவதில் ஈடுபட்டார்கள். நபியவர்கள் முஸ்லிம்களுக்கு ஆர்வமூட்டி வந்தார்கள்.

ஸஹ்லு இப்னு ஸஅது (ரழி) கூறுகிறார்: நாங்கள் நபியவர்களுடன் அகழியில் இருந்தோம். பலர் குழி தோண்டுவதில் ஈடுபட்டிருந்தார்கள். நாங்கள் மண்ணைத் தோளில் சுமந்து சென்று வெளியில் போட்டுக் கொண்டிருந்தோம். அப்போது நபியவர்கள் கூறினார்கள்:

“அல்லாஹ்வே! மறுமை வாழ்வைத் தவிர வேறு வாழ்வு இல்லை!

முஹாஜிர்கள் அன்சாரிகளை மன்னித்து அருள்வாயாக!” (ஸஹீஹுல் புகாரி)

Offline Yousuf

அனஸ் (ரழி) கூறுகிறார்கள்: ஒரு நாள் காலை நபி (ஸல்) அவர்கள் அகழ் தோன்றும் இடத்திற்கு வந்தார்கள். அப்போது முஹாஜிர்களும் அன்சாரிகளும் கடினமான குளிரில் அகழ் தோண்டிக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் இக்காரியத்தைச் செய்வதற்கு அவர்களுக்குச் சொந்தமான அடிமைகள் இருக்கவில்லை. தங்களின் தோழர்களுக்கு ஏற்பட்ட சிரமத்தையும் பசியையும் பார்த்து நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“அல்லாஹ்வே! நிச்சயமாக வாழ்க்கை என்பது மறு உலக வாழ்க்கையே!
அன்சாரிகளையும் முஹாஜிர்களையும் நீ மன்னித்தருள்வாயாக!”
இதற்கு நபித்தோழர்கள் பதில் கூறும் விதமாக கூறினார்கள்:
“நாங்கள் வாழும் காலமெல்லாம் அறப்போர்
புரிவோமென்று முஹம்மது (ஸல்) அவர்களிடம்
வாக்குப் பிரமாணம் செய்து கொடுத்தவர்கள்.” (ஸஹீஹுல் புகாரி)


பரா இப்னு ஆஜிப் (ரழி) அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் அகழியிலிருந்து மண்ணை சுமந்து சென்று வெளியில் போட்டுக் கொண்டிருந்தார்கள். புழுதி அவர்களது வயிற்றை மறைத்திருந்தது. அவர்கள் அப்துல்லாஹ் இப்னு ரவாஹாவின் கவி ஒன்றை அதிகம் சொல்லிக் கொண்டே மண்ணை அள்ளி போட்டுக் கொண்டிருந்தார்கள்.

அல்லாஹ்வே! நீ இல்லையென்றால்
நாங்கள் நேர்வழி பெற்றிருக்கமாட்டோம்,
தர்மம் செய்திருக்க மாட்டோம்,
தொழுதும் இருக்க மாட்டோம்.
எங்கள் மீது நீ அருள் பொழிவாயாக!
எதிரிகளை நாங்கள் சந்திக்கும்போது
பாதங்களை நிலைபெறச் செய்வாயாக!
இவர்கள் (குறைஷிகள்) எங்கள் மீது
அக்கிரமம் புரிந்துள்ளார்கள். இவர்கள்
எங்களைச் சோதனையில் ஆழ்த்த விரும்பினால்
அதற்கு நாங்கள் இடம்தர மாட்டோம். (ஸஹீஹுல் புகாரி)


இக்கவிதைகளைக் கூறிவிட்டு கடைசி வரியை மட்டும் சப்தத்துடன் மீண்டும் ஒரு முறை கூறுவார்கள்.

கடுமையான பசி பட்டினிக்கு ஆளாகி இருந்தும் முஸ்லிம்கள் சுறுசுறுப்பாக அகழ் தோண்டுவதில் ஈடுபட்டிருந்தனர்.

இதைப் பற்றி அனஸ் (ரழி) கூறுகிறார்கள்: அகழ் தோண்டிக் கொண்டிருந்தவர்கள் தங்கள் இரு கை நிரம்ப தொலி கோதுமையை எடுத்து வருவார்கள். அது பழைய எண்ணெயைக் கொண்டு சமைக்கப்பட்டு, தோழர்களுக்கு முன் வைக்கப்படும். அதனை எளிதில் உண்ண முடியாமல் தொண்டையில் சிக்கிக் கொள்ளும். அதிலிருந்து மனதிற்கு ஒவ்வாத வாடையும் வீசும். (ஸஹீஹுல் புகாரி)

அபூ தல்ஹா (ரழி) கூறுகிறார்கள்: எங்களின் பசியைப் பற்றி நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டோம். எங்களது வயிற்றில் ஒரு கல்லைக் கட்டி இருந்ததைக் காட்டினோம். நபி (ஸல்) அவர்களோ தங்களது வயிற்றில் இரண்டு கற்கள் கட்டி இருந்ததைக் காட்டினார்கள். (ஸுனனுத் திர்மிதி, மிஷ்காத்)

மேலும், நபித்துவத்தின் பல அத்தாட்சிகளும் அகழ் தோண்டிக் கொண்டிருக்கும் போது ஏற்பட்டன. நபி (ஸல்) அவர்கள் கடுமையான பசியில் இருப்பதைப் பார்த்த ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் ஒரு சிறிய ஆட்டை அறுத்தார்கள். அவன் மனைவி ஒரு படி தொலி கோதுமையை அரைத்து ரொட்டி சுட்டார்கள். பின்பு ஜாபிர் நபியவர்களைச் சுந்தித்து தங்களின் சில தோழர்களுடன் உணவருந்த வருமாறு கூறினார்கள். ஆனால், நபியவர்கள் ஆயிரத்திற்கு மேற்பட்ட தோழர்களுடன் ஜாபின் வீட்டுக்கு வருகை தந்தார்கள். அனைவரும் உணவருந்திச் சென்றனர். ஆனால், சமைக்கப்பட்ட சட்டியில் இருந்த ஆணமும் குறையவில்லை, சுட்ட ரொட்டியும் குறையவில்லை. (ஸஹீஹுல் புகாரி)

நுஃமான் இப்னு பஷீன் சகோதரி சிறிதளவு பேரீத்தம் பழத்தைத் தனது தந்தைக்காகவும் தாய்மாமாவுக்காகவும் எடுத்து வந்தார். அவர் நபி (ஸல்) அவர்களைக் கடந்து சென்றபோது, நபியவர்கள் அவரைத் தன்னருகில் அழைத்து அவரிடம் இருந்த பேரீத்தம் பழத்தை வாங்கி ஒரு துணிக்குமேல் பரத்தினார்கள். பின்பு அகழ் தோண்டிக் கொண்டிருந்தவர்களை அழைத்து சாப்பிடுங்கள் என்றார்கள். அவர்கள் சாப்பிட்டுக் கொண்டேயிருந்தார்கள். பேரீத்தம் பழம் குறையாமல் அதிகரித்துக் கொண்டே இருந்தது. அனைவரும் சாப்பிட்டு சென்று விட்ட பின்பும் அது குறைவின்றி இருந்தது. (இப்னு ஹிஷாம்)

மேற்கூறப்பட்ட இரண்டு சம்பவங்களைவிட ஜாபிர் (ரழி) அறிவிக்கும் மகத்தான ஒரு சம்பவத்தை இமாம் புகாரி (ரஹ்) பதிவு செய்துள்ளார்கள். “நாங்கள் அகழ் தோண்டிக் கொண்டிருந்த போது கடுமையான, இறுக்கமான ஒரு பாறை குறுக்கிட்டது. அப்போது மக்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து “நபியே! ஒரு பாறை அகழில் குறுக்கிட்டுள்ளது” என்றார்கள். நபியவர்கள் “நான் இறங்குகிறேன்” என்று கூறி பாறை இருக்கும் இடத்திற்கு வந்தார்கள். பசியின் காரணமாக அவர்களுடைய வயிற்றில் கல்லைக் கட்டியிருந்தார்கள். நாங்கள் மூன்று நாட்களாக எதுவும் சாப்பிடாமல் இருந்தோம். நபியவர்கள் கடப்பாறையால் வேகமாக அதை அடிக்கவே அது தூள் தூளாகியது. (ஸஹீஹுல் புகாரி)

பரா இப்னு ஆஜிப் (ரழி) கூறுகிறார்கள்: அகழ் தோண்டும்போது ஒரு பகுதியில் எந்த கடப்பாறையாலும் உடைக்க முடியாத ஒரு பாறை குறுக்கிட்டது. அதைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் நாங்கள் முறையிட்டோம். நபியவர்கள் கடப்பாறையால் ‘பிஸ்மில்லாஹ்’ என்று கூறி ஓர் அடி அடித்துவிட்டு “அல்லாஹ் மிகப்பெரியவன்! ஷாம் தேசப் பொக்கிஷங்கள் எனக்கு அருளப்பட்டன. நான் இப்போது அங்குள்ள செந்நிறக் கோட்டைகளைப் பார்க்கிறேன்” என்றார்கள். பின்பு இரண்டாவது முறையாக அப்பாறையை அடித்தார்கள். “அல்லாஹ் மிகப் பெரியவன்! பாரசீகத்தின் பொக்கிஷங்கள் எனக்குக் கொடுக்கப்பட்டன. அல்லாஹ்வின் மீது ஆணையாக! அங்குள்ள மதாயின் நகரத்தின் வெள்ளை மாளிகையை இப்போது பார்க்கின்றேன்” என்றார்கள். பின்பு மூன்றாவது முறையாக ‘பிஸ்மில்லாஹ்’ என்று கூறி அடித்தார்கள். மீதமுண்டான கல்லும் உடைக்கப்பட்டது. அப்போது நபியவர்கள் “அல்லாஹ் மிகப் பெரியவன்! எனக்கு யமன் தேசத்து பொக்கிஷங்கள் கொடுக்கப்பட்டன. அல்லாஹ்வின் மீது சத்தியமாக! எனது இந்த இடத்திலிருந்து ஸன்ஆ நகரத்தின் தலைவாயில்களைப் பார்க்கின்றேன்” என்றார்கள். (ஸுனன் நஸாம், முஸ்னது அஹ்மது)

இதுபோன்ற சம்பவம் ஸல்மான் ஃபார்ஸி (ரழி) அவர்கள் மூலமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. (இப்னு ஹிஷாம்)

மதீனாவைச் சுற்றி மலைகளும், பேரீத்த மரத்தோட்டங்களும், விவசாய அறுவடைகளை உலர வைக்கத் தேவையான களங்களும் சூழ்ந்திருந்தன. ஆனால், மதீனாவின் வடக்குப் பகுதி மட்டும் போக்குவரத்திற்குரிய வழியாக இருந்தது. எனவே, இதுபோன்ற பெரும் படை வருவதற்கு வடக்குப் பகுதி மட்டும் வழியாக அமைய முடியும் என்பதால் அகழை வடக்குப் பகுதியில் தோண்டுமாறு கூறியிருந்தார்கள். (இப்னு ஹிஷாம்)

முஸ்லிம்கள் தொடர்ந்து அகழ் தோண்டுவதில் மும்முரமாக ஈடுபட்டனர். பகலெல்லாம் அகழ் தோண்டி மாலையில் வீடு திரும்புவார்கள். முடிவு செய்யப்பட்ட திட்டத்திற்கேற்ப அகழ் தோண்டும் பணி எதிரிகளின் படை வருவதற்கு முன்பதாகவே முடிவடைந்தது. குறைஷிகள் 4000 நபர்களுடன் ‘ஜுர்ஃப்’ மற்றும் ‘ஜகாபா“விற்கு மத்தியிலுள்ள ‘ரூமா’ என்ற இடத்தில் ஓடைகள் ஒன்று சேரும் பகுதியில் தங்கினர். கத்ஃபான் மற்றும் நஜ்து பகுதியைச் சேர்ந்தவர்கள் மொத்தம் 6000 நபர்கள் உஹுதிற்கு அருகிலுள்ள ‘தனப் நக்மா’ என்ற இடத்தில் தங்கினர்.

நம்பிக்கையாளர்கள் (எதிரியின்) ராணுவத்தைக் கண்டபோது “(இதுதான்) அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நமக்கு வாக்களித்தது. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உண்மையையே கூறினார்கள்” என்று சொன்னார்கள். தவிர (இவை அனைத்தும்) அவர்களுடைய நம்பிக்கையையும் வழிபாட்டையும் அன்றி வேறொன்றையும் அவர்களுக்கு அதிகப்படுத்தி விடவில்லை. (அல்குர்ஆன் 33:22)

நயவஞ்சகர்களும் பலவீனமான உள்ளம் உள்ளவர்களும் இந்த படையைப் பார்த்து அஞ்சி நடுங்கினர். இவர்களைப் பற்றி அல்லாஹ் கூறுகின்றான்:


“அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நமக்குச் சதி செய்வதற்காகவே (வெற்றி நமக்கே கிடைக்குமென்று) வாக்களித்தார்கள்” என்று எவர்களுடைய உள்ளங்களில் நோயிருந்ததோ அவர்களும் மற்ற நயவஞ்சகர்களும் கூற முற்பட்டதையும் நினைத்துப் பாருங்கள். (அல்குர்ஆன் 33:12)

Offline Yousuf

அடுத்தகட்ட ராணுவ நடவடிக்கை

ஸல்லாம் இப்னு அபுல்ஹுகைக்... (ஹிஜ் 5, துல்கஅதா)

இவனது புனைப் பெயர் ‘அபூராஃபி’ எனப்படும். யூத இனத்தைச் சேர்ந்த இவன் மிகப் பெரிய கொடியவனாக இருந்தான். முஸ்லிம்களுக்கு எதிராக அகழ் போரில் படைகளை ஒன்று திரட்டியவர்களில் இவனும் ஒருவன். இவன் போரின் போது முஸ்லிம்களின் எதிரிகளுக்குப் பெருமளவில் பொருளுதவி செய்தான். (ஃபத்ஹுல் பாரி)

இவன் நபி (ஸல்) அவர்களுக்குக் கடும் நோவினை தந்து வந்தான். குரைளா யூதர்களின் பிரச்சனையை முடித்த பின் அவனைக் கொலை செய்துவிட கஸ்ரஜ் கிளையினர் நபி (ஸல்) அவர்களிடம் அனுமதி கோரினர். இதற்கு முன் இவனைப் போன்ற கொடியவன் கஅபு இப்னு அஷ்ரஃபை அவ்ஸ் கிளையினர் கொன்றதால் அதுபோன்ற ஒரு சிறப்பைத் தாங்களும் அடைய வேண்டும் என கஸ்ரஜ் கிளையினர் விரும்பினர். எனவே, நபியவர்களிடம் அதற்கு அனுமதி கோருவதில் தீவிரம் காட்டினர்.

நபி (ஸல்) அவர்கள் அவனைக் கொல்வதற்கு அனுமதி வழங்கினார்கள். ஆனால், அவனைத் தவிர அங்குள்ள சிறுவர்களை அல்லது பெண்களை கொல்லக் கூடாது என தடை விதித்தார்கள். நபியவர்களிடம் அனுமதி பெற்று ஐந்து நபர்கள் கொண்ட ஒரு குழு இதற்காக புறப்பட்டுச் சென்றது. இவர்கள் அனைவரும் கஸ்ரஜ் கிளையினரில் ஸலமா குடும்பத்தைச் சேர்ந்தவர்களாவர். இவர்களின் தளபதியாக அப்துல்லாஹ் இப்னு அதீக் (ரழி) இருந்தார். இக்குழு அபூராஃபியின் கோட்டை இருந்த கைபர் நகரத்தை நோக்கி புறப்பட்டது. இவர்கள் கோட்டையை அடையும் போது சூரியன் மறைந்து இருட்டிவிட்டது. மக்கள் தங்களின் கால்நடைகளை அழைத்துக் கொண்டு வீடு திரும்பி விட்டனர்.

அப்போது அப்துல்லாஹ் இப்னு அதீக் தனது தோழர்களிடம் “நீங்கள் இங்கு இருங்கள். நான் சென்று வாயில் காவலரிடம் நளினமாகப் பேசிப் பார்க்கிறேன். முடிந்தால் நான் கோட்டைக்குள் நுழைந்து விடுகிறேன் என்று கூறி புறப்பட்டார். கோட்டை கதவுக்கருகில் சென்ற போது தன்னை ஆடையால் மறைத்துக் கொண்டு சிறுநீர் கழிப்பது போல் அமர்ந்து கொண்டார். கோட்டைக்குள் செல்ல வேண்டிய மக்கள் சென்று விட்டனர். அப்போது வாயில் காவலரிடம் “அல்லாஹ்வின் அடியானே! உள்ளே செல்வதாக இருந்தால் இப்போதே சென்றுவிடு. நான் கதவை மூடப் போகிறேன்” என்றான்.

அப்துல்லாஹ் இப்னு அதீக் (ரழி) கூறுகிறார்கள்: நான் கோட்டைக்குள் சென்று ஒரு மறைவிடத்தில் மறைந்து கொண்டேன். அனைவரும் கோட்டைக்குள் நுழைந்து விட்டனர் என்று தெரிந்தவுடன் வாயில் காவலாளி கதவை மூடினான். பின்பு சாவிகளை ஓர் ஆணியில் தொங்க விட்டான். நான் அந்த சாவிகளை எடுத்து வைத்துக் கொண்டேன். அபூ ராஃபி, சில நண்பர்களுடன் அவனது அறையில் இராக்கதைகள் பேசிக் கொண்டிருந்தான். பேசிக் கொண்டிருந்தவர்கள் சென்றபின் நான் அவனது அறையை நோக்கி மேலே ஏறினேன். ஒவ்வொரு கதவாக திறந்து உள்ளே சென்றவுடன் அக்கதவை உள் பக்கமாக தாழிட்டுக் கொண்டேன். அதாவது இங்கு உள்ளவர்களுக்கு நான் இருப்பது தெரிந்து, என்னை நோக்கி பிடிப்பதற்கு வந்தாலும் அவர்கள் என்னை பிடிப்பதற்குள் நான் அவனைக் கொன்று விடலாம் என்பதற்காக இவ்வாறு செய்தேன். இறுதியாக அவன் இருந்த இடம் வரை சென்று விட்டேன். ஒரு இருட்டறையில் தனது குடும்பத்தார்களுடன் இருந்தான். ஆயினும், அறையில் எப்பகுதியில் இருக்கிறான் என்று எனக்கு உறுதியாகத் தெரிந்து கொள்ள முடியவில்லை.

நான் “அபூ ராஃபி! என்று சப்தமிட்டு அழைத்தேன். அவன் “யாரது?” என்று வியந்து கேட்டான். உடனே நான் சப்தம் வந்த திசையை நோக்கிப் பயந்தவனாகவே எனது வாளை வீசினேன். ஆனால், எனது முயற்சி பலனளிக்கவில்லை. அவன் கூச்சலிடவே நான் உடனடியாக அறையிலிருந்து வெளியேறி ஒளிந்து கொண்டேன். சிறிது நேரம் கழித்து திரும்ப அறைக்குள் சென்று “அபூ ராஃபியே! சற்று நேரத்திற்கு முன் இங்கு என்ன சப்தம்?” என்றேன். அதற்கவன் “உனது தாய்க்கு நாசம் உண்டாகட்டும். சற்று நேரத்திற்கு முன் ஒருவன் என்னைக் கொல்ல வந்தான்” என்றான். உடனே நான் மற்றொரு முறை அவனை வாளால் வெட்டிக் காயப்படுத்தினேன். ஆனால், அவனைக் கொல்ல முடியவில்லை. பின்பு வாளால் அவனது வயிற்றில் குத்தினேன். அதன் நுனி முதுகுப்புறமாக வெளிவந்தது. அதனால் நான் அவனை இம்முறை நிச்சயமாக கொன்றுவிட்டேன் என்று தெரிந்து கொண்டேன். பின்பு ஒவ்வொரு கதவாக திறந்து கொண்டு ஓர் ஏணியின் வழியாக கீழே இறங்கும் போது ஏணிப்படிகள் முடிந்துவிட்டன என்று எண்ணிக் காலை வைக்கும்போது தவறி கீழே விழுந்துவிட்டேன். அதில் எனது கெண்டைக் கால் உடைந்து விட்டது. தலைப்பாகையால் என் காலைக் கட்டிக் கொண்டு நடந்து வந்து வாசலருகில் உட்கார்ந்து கொண்டேன்.

அவனைக் கொன்று விட்டேன் என்று உறுதியாகத் தெரியும்வரை வெளியில் செல்லாமல் இன்றிரவை இங்கேயே கழிப்பது என்று முடிவு செய்தேன். காலையில் மரணச் செய்தி அறிவிப்பவன் “ஜாஸ் மாநிலத்தின் மாபெரும் வியாபாரப் பிரமுகர் அபூ ராஃபி கொல்லப்பட்டு விட்டார்” என்று அறிவித்தான். இதை நான் எனது தோழர்களிடம் வந்து கூறினேன். “வெற்றி கிடைத்து விட்டது, அல்லாஹ் அபூ ராஃபியைக் கொன்று விட்டான்” என்று கூறினேன். இதற்குப் பின் நான் நபியவர்களிடம் சென்று முழு விவரத்தையும் கூறினேன். அப்போது நபியவர்கள் உனது காலை நீட்டுவாயாக! என்று கூறினார்கள். நான் எனது காலை நீட்டியவுடன் நபியவர்கள் அதன் மீது தடவினார்கள். அது முற்றிலும் குணமடைந்து விட்டது. (ஸஹீஹுல் புகாரி)

இதுவரை நாம் கூறிய இந்நிகழ்ச்சி இமாம் புகாரி (ரஹ்) அறிவித்ததாகும். இப்னு இஸ்ஹாக் (ரஹ்) இதற்கு சற்று மாற்றமாக அறிவிக்கிறார்: அதாவது, அனைத்து நபித்தோழர்களும் கோட்டைக்குள் சென்று அபூ ராஃபியைக் கொல்வதில் பங்கெடுத்தனர். அப்துல்லாஹ் இப்னு உனைஸ் (ரழி) என்ற தோழர்தான் அவனை வாளால் வெட்டினார். அப்துல்லாஹ் இப்னு அதீக்கின் கெண்டைக்கால் உடைந்து விட்டதால் மற்ற தோழர்கள் அவரைச் சுமந்து கொண்டு கோட்டைக்குள் தண்ணீர் வருவதற்காக இருந்த வழியின் உள் பகுதிக்குள் நுழைந்து கொண்டனர். கோட்டையில் இருந்த யூதர்கள் நெருப்பை மூட்டி விரைந்து சென்று பல இடங்களில் தேடியும் அவர்களால் நபித்தோழர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. பின்பு யூதர்கள் அனைவரும் தங்கள் தலைவன் நிலையை அறிய திரும்பினர். அதற்குப் பின் நபித்தோழர் அப்துல்லாஹ் இப்னு அதீக்கை சுமந்து கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் வந்து சேர்ந்தனர். (இப்னு ஹிஷாம்)

இச்சம்பவம் ஹிஜ்ரி 5 துல்கஅதா அல்லது துல்ஹஜ் மாதத்தில் நடைபெற்றது. (ரஹ்மதுல் லில் ஆலமீன்)

மேற்கூறப்பட்ட அகழ் மற்றும் குரைளா போர்களிலிருந்து ஓய்வு பெற்றபோது அமைதிக்கும், சமாதானத்திற்கும் பணியாமல் இருந்த கிராம அரபிகளையும் மற்ற அரபுக் குலத்தவர்களையும் கண்டித்து பாடம் கற்பிக்கும் விதமாக பல தாக்குதல்களை நபி (ஸல்) அவர்கள் கையாண்டார்கள். அவற்றின் விவரம் வருமாறு:

முஹம்மது இப்னு மஸ்லமா படைப் பிரிவு (ஹிஜ் 6, முஹர்ரம் 10)

இது அகழ் மற்றும் குரைளா போர்களுக்குப் பின் அனுப்பப்பட்ட முதல் படை. இப்படையில் முப்பது வீரர்கள் இருந்தனர்.

நஜ்து மாநிலத்திலுள்ள ‘பகராத்’ என்ற பகுதியில் ‘ழய்யா’ என்ற ஊர் வழியாக ‘கர்தா’ என்ற இடத்தை நோக்கி இப்படை புறப்பட்டது. ழய்யாவுக்கும் மதீனாவுக்கும் இடையில் உள்ள பயண தூரம் ஏழு இரவுகளாகும். இப்படையின் நோக்கம் அங்கு வசித்து வந்த பக்ர் இப்னு கிளாப் கிளையினரைத் தாக்குவதாகும். முஸ்லிம்களின் தாக்குதலுக்கு ஈடு கொடுக்க முடியாமல் எதிரிகள் அனைவரும் அங்கிருந்து ஓடிவிட்டனர். முஸ்லிம்கள் அங்குள்ள கால்நடைகளை ஓட்டிக் கொண்டு முஹர்ரம் பிறை இறுதியில் மதீனா வந்து சேர்ந்தனர்.

தன்னை இறைத்தூதர் என்று வாதிட்ட பொய்யன் முஸைலமா, சுமாமா இப்னு உஸால் என்பவரை நபியவர்களைக் கொல்வதற்காக யமன் நாட்டிலிருந்து அனுப்பினான். இவர் ஹனீஃபா என்ற கிளையினரின் தலைவர் ஆவார். இவரை இப்படையினர் வழியில் கைது செய்து தங்களுடன் அழைத்து வந்தனர். (ஸீரத்துல் ஹல்பியா)

இவரை மதீனாவின் பள்ளியிலுள்ள ஒரு தூணில் முஸ்லிம்கள் கட்டிவிட்டனர். அவரை நபி (ஸல்) அவர்கள் சந்தித்து “சுமாமா நீ என்ன நினைக்கிறாய்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர் “முஹம்மதே! என்னிடத்தில் நன்மை இருக்கிறது. நீர் என்னைக் கொலை செய்ய நாடினால் அத்தண்டனைக்குத் தகுதியான ஒருவரைத்தான் கொலை செய்தவராவீர்! நீர் எனக்கு உதவி செய்து என்னை விட்டுவிட்டால் உங்களுக்கு நான் நன்றி உள்ளவனாக இருப்பேன். உங்களுக்கு பொருள் வேண்டும் என்றால் என்னிடம் கேள். நீர் விரும்பிய அளவு நான் உங்களுக்குத் தருகிறேன்” என்று கூறினார். நபியவர்கள் அவரை ஒன்றும் செய்யாமல் சென்று விட்டார்கள்.

மற்றொரு முறை நபி (ஸல்) அவர்கள் அவருக்கருகில் சென்ற போது அவரிடம் முன்னர் கேட்டது போல் கேட்கவே அவரும் முன்பு சொன்ன பதிலையே கூறினார். நபியவர்கள் அவரை அப்படியே விட்டுச் சென்று விட்டார்கள். மூன்றாவது முறை நபியவர்கள் அவர் அருகில் சென்று அதேபோன்று கேட்க அவரும் தனது பழைய பதிலையே திரும்பக் கூறினார். அப்போது நபியவர்கள் சுமாமாவை அவிழ்த்து விடுங்கள் என்று தனது தோழர்களுக்குக் கூறவே, தோழர்கள் அவரை அவிழ்த்து விட்டார்கள். அவர் பள்ளிக்கு அருகிலிருந்த பேரீச்சம் பழ தோட்டத்திற்குச் சென்று குளித்துவிட்டு நபியவர்கள் முன்னிலையில் இஸ்லாமை ஏற்றார்.

பின்பு “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! முன்போ இப்பூமியில் உங்களது முகத்தைவிட வெறுப்பான ஒரு முகம் எனக்கு இருந்ததில்லை. ஆனால், இன்று உங்களது முகமே முகங்களில் எல்லாம் எனக்கு மிக விருப்பமானதாகி விட்டது. அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இப்பூமியில் உங்களது மார்க்கத்தை விட வெறுப்பான மார்க்கம் எனக்கு வேறு ஒன்றும் இருக்கவில்லை. ஆனால், இப்போது உங்களது மார்க்கம் மார்க்கங்களில் எல்லாம் எனக்கு மிக விருப்பமானதாக மாறிவிட்டது. உங்களின் படை என்னை கைது செய்த போது நான் உம்ராவிற்காக சென்று கொண்டிருந்தேன். நான் இப்போது என்ன செய்ய? என்று அவர் கேட்க, நபியவர்கள் அவருக்கு நற்செய்தி கூறி, அவர் நாடி வந்த உம்ராவை முடித்து வருமாறு கூறினார்கள்.

அவர் அங்கிருந்து புறப்பட்டு மக்கா வந்தவுடன் அவரைப் பார்த்த குறைஷிகள் “சுமாமா நீர் என்ன மதம் மாறிவிட்டீரா?” என்று கேட்டனர். அதற்கவர் “இல்லை, அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் முஹம்மதுடன் இஸ்லாமை ஏற்றுக் கொண்டேன். அல்லாஹ்வின் மீது சத்தியமாக!” கூறுகிறேன். நபி (ஸல்) அவர்கள் அனுமதியளிக்காத வரை யமாமாவிலிருந்து உங்களுக்கு எந்த கோதுமை தானியங்களும் வராது. (யமாமாவிலிருந்துதான் மக்காவிற்கு கோதுமை வந்து கொண்டிருக்கிறது.) உம்ராவை முடித்துக் கொண்டு சுமாமா தனது ஊருக்குச் சென்றவுடன் அங்கிருந்து மக்காவிற்கு தானியங்கள் வருவதைத் தடுத்துவிட்டார். இதனால் குறைஷிகள் பெரும் கஷ்டத்திற்குள்ளாகி நபியவர்களுக்குக் கடிதம் எழுதினர். அதில் தங்களின் இரத்த பந்தத்தைக் கூறி, சுமாமா தங்களுக்கு வரும் தானியங்களைத் தடுக்காமல் இருக்க நபியவர்கள் அவருக்கு கடிதம் எழுதுமாறு கேட்டுக் கொண்டனர். அவர்களின் கோரிக்கையை நபியவர்கள் நிறைவேற்றினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஜாதுல் மஆது)
« Last Edit: December 19, 2011, 11:12:03 PM by Yousuf »

Offline Yousuf

லஹ்யான் போர் (ஹிஜ் 6, ரபீவுல் அவ்வல்)

லஹ்யான் கிளையினர்தான் ‘ரஜிஃ’ என்ற இடத்தில் பத்து நபித்தோழர்களை வஞ்சகமாகக் கொலை செய்தனர். இவர்களது இல்லங்களும் இருப்பிடங்களும் மக்காவிற்கு மிக அருகில்தான் இருந்தன. மக்காவிலோ இஸ்லாமிற்கு எதிரியாக இருக்கும் குறைஷி மற்றும் அரபு குலத்தவர்கள் இருந்ததால் நபி (ஸல்) அவர்கள் மக்கா எல்லை வரை சென்று லஹ்யான் இனத்தவர் மீது தாக்குதல் நடத்துவதை ஏற்றமாகக் கருதவில்லை.

அகழ்போல் குறைஷி மற்றும் அரபு இனத்தவன் இராணுவங்கள் வலுவிழந்து சிதறி சென்று விட்டதால் நிலைமை ஓரளவு முஸ்லிம்களுக்குச் சாதகமாக இருந்தது. எனவே, ரஜீஃயில் கொல்லப்பட்ட தங்களது தோழர்களுக்காக லஹ்யானியரிடம் பழிதீர்க்க நாடி ஹிஜ்ரி 6, ரபீஉல் அவ்வல் அல்லது ஜமாதுல் அவ்வல் மாதத்தில் இருநூறு தோழர்களை அழைத்துக் கொண்டு மதீனாவிலிருந்து புறப்பட்டார்கள். மதீனாவில் அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தூம் (ரழி) அவர்களைப் பிரதிநிதியாக நியமித்தார்கள். ஷாம் நாட்டை நோக்கிப் பயணிப்பதாகக் கூறி வெகு விரைவாகப் பயணத்தை மேற்கொண்டு அமஜ், உஸ்ஃபான் என்ற இடங்களுக்கு மத்தியிலுள்ள ‘குரான்’ என்ற பள்ளத்தாக்கைச் சென்றடைந்தார்கள். அங்குதான் நபித்தோழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அவ்விடத்தில் நபி (ஸல்) அவர்கள் தங்களது தோழர்களுக்காக அல்லாஹ்வின் கருணை வேண்டி பிரார்த்தித்தார்கள்.

நபி (ஸல்) அவர்களின் வருகையைக் கேள்விப்பட்ட லஹ்யானியர் அங்கிருந்து தப்பித்துச் சென்று மலை உச்சியில் ஏறி பதுங்கிக் கொண்டனர். எவரும் முஸ்லிம்களின் கையில் அகப்படவில்லை. நபியவர்கள் அங்கு இரண்டு நாட்கள் தங்கியிருந்து சிறு சிறு குழுக்களை அனுப்பி தேடும்படி பணித்தார்கள். ஆனால், எவரையும் பிடிக்க முடியவில்லை. நபியவர்கள் அங்கிருந்து ‘உஸ்ஃபான்’ என்ற இடம் வரை சென்றார்கள். அங்கிருந்து ‘குராவுல் கமீம்’ என்ற இடத்திற்கு பத்து குதிரை வீரர்களை அனுப்பினார்கள். தான் வந்திருக்கும் செய்தி குறைஷிகளுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக நபியவர்கள் இவ்வாறு செய்தார்கள். பின்பு அங்கிருந்து தனது தோழர்களை அழைத்துக் கொண்டு மதீனாவிற்குத் திரும்பினார்கள். இவ்வாறு நபியவர்கள் பதினான்கு நாட்கள் தங்களது படையுடன் சுற்றிவிட்டு திரும்பினார்கள்.

குழுக்களையும் படைப்பிரிவுகளையும் தொடர்ந்து அனுப்புதல்

மேற்கூறப்பட்ட நிகழ்ச்சிக்குப் பின் நபி (ஸல்) அவர்கள் ஒன்றன்பின் ஒன்றாக பல குழுக்களையும் படைப்பிரிவுகளையும் அனுப்பினார்கள். அதன் சுருக்கம் வருமாறு:

1) உக்காஷா இப்னு மிஹ்ஸன் (ரழி) அவர்களின் தலைமையின் கீழ் நாற்பது தோழர்களை ‘கம்ர்’ என்ற இடத்துக்கு ஹிஜ்ரி 6, ரபீஉல் அவ்வல் அல்லது ரபீஉல் ஆகில் நபியவர்கள் அனுப்பினார்கள். ‘கம்ர்’ என்பது அஸத் கிளையினருக்கு சொந்தமான கிணற்றுக்குரிய பெயராகும். அங்குதான் அவர்கள் வசித்து வந்தனர். முஸ்லிம்களின் வருகையை அறிந்த அக்கூட்டத்தினர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அவர்களின் இருநூறு ஒட்டகங்களை ஓட்டிக் கொண்டு முஸ்லிம்கள் மதீனா திரும்பினர்.

2) முஹம்மதிப்னு மஸ்லமா (ரழி) அவர்களைப் பத்து தோழர்களுடன் ஸஅலபா கிளையினர் வசிக்கும் ‘துல்கஸ்ஸா’ என்ற இடத்திற்கு ஹிஜ்ரி 6, ரபிஉல் அவ்வல் அல்லது ரபிஉல் ஆகில் நபி (ஸல்) அவர்கள் அனுப்பினார்கள். முஸ்லிம்களின் வருகையை அறிந்த ஸஅலபாவினர் இரகசியமாக மறைந்து கொண்டனர். நபித்தோழர்கள் ஓர் இரவில் தூங்கிக் கொண்டிருக்கும் போது திடீரெனத் தாக்குதல் நடத்தி முஹம்மதிப்னு மஸ்லமாவைத் தவிர மற்ற அனைவரையும் கொன்று விட்டனர். இவர் மட்டும் காயத்துடன் தப்பித்து மதீனா வந்து சேர்ந்தார்.

3) இந்நிகழ்ச்சிக்குப் பின் அபூ உபைதா இப்னுல் ஜர்ராஹ் (ரழி) அவர்களை நாற்பது தோழர்களுடன் நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரி 6, ரபிஉல் ஆகில் துல்கஸ்ஸாவிற்கு அனுப்பி வைத்தார்கள். இவர்கள் இரவெல்லாம் நடந்து சென்று காலையில் ஸஅலபாவினர் மீது படையெடுத்தனர். ஆனால், அவர்கள் அனைவரும் தப்பித்து மலைகளுக்கு ஓடிவிட்டனர். அவர்களிலிருந்து ஒருவரை மட்டும் முஸ்லிம்களால் பிடிக்க முடிந்தது. பிறகு அவர் இஸ்லாமை ஏற்றுக் கொண்டார். முஸ்லிம்கள் எதிரிகளின் கால்நடைகளை ஓட்டிக் கொண்டு மதீனா திரும்பினர்.

4) ஹிஜ்ரி 6, ரபிஉல் ஆகிர் மாதத்தில் ஜைதுப்னு ஹாஸா (ரழி) அவர்களை ‘ஜமூம்’ என்ற இடத்திற்கு நபி (ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். ஜமூம் என்பது ‘மர்ருல் ளஹ்ரான்’ என்ற இடத்திலுள்ள சுலைம் கிளையினருக்கு சொந்தமான கிணறாகும். ஜைத் அவர்கள் பனூ சுலைம் கிளையினரை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது முஸைனா கிளையைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் கைது செய்தார்கள். அவரது பெயர் ஹலீமாவாகும். அப்பெண் சுலைமினருக்கு சொந்தமான இடங்களைக் காண்பித்துக் கொடுத்தார். அங்கு சென்று முஸ்லிம்கள் அதிகமான கால்நடைகளையும், கைதிகளையும் பிடித்து வந்தனர். மதீனா திரும்பியவுடன் விஷயம் அறிந்து நபி (ஸல்) அவர்கள் அப்பெண்ணை உரிமையிட்டு திருமணமும் முடித்து வைத்தார்கள்.

5) ஹிஜ்ரி 6, ஜுமாதா அல்ஊலா மாதத்தில் ‘ஈஸ்’ என்ற இடத்திற்கு ஜைத் அவர்களை 170 வீரர்களுடன் அனுப்பி வைத்தார்கள். அங்கு குறைஷிகளின் வியாபாரக் கூட்டம் நபி (ஸல்) அவர்களின் மருமகனார் அபுல் ஆஸின் தலைமையின் கீழ் தங்கியிருந்தது. அங்கு சென்று முஸ்லிம்கள் அனைத்தையும் கைப்பற்றினர். ஆனால், அபுல் ஆஸ் தப்பிச் சென்று மதீனாவில் நபியவர்களின் மகளார் ஜைனபிடம் அடைக்கலம் தேடினார். மேலும், தனது பொருட்களைத் திருப்பித் தருமாறு நபியவர்களிடம் கோரும்படி ஜைனபிடம் கேட்டுக் கொண்டார். அவரும் தனது கணவன் கோரிக்கையை நபியவர்களிடம் சொல்லவே, நபியவர்கள் பொருள்களை திரும்பத் தருமாறு மக்களிடம் கேட்டார்கள். ஆனால், எவரையும் அதற்காக நிர்பந்தப் படுத்தவில்லை.

நபியவர்களின் விருப்பத்திற்கிணங்க சிறிய பெரிய அனைத்து பொருட்களையும் நபித் தோழர்கள் திரும்பக் கொடுத்து விட்டனர். அபுல் ஆஸ் அவற்றை எடுத்துக் கொண்டு மக்கா சென்று உரியவர்களிடம் அப்பொருட்களை ஒப்படைத்துவிட்டு இஸ்லாமை ஏற்று மதீனா திரும்பினார். நபி (ஸல்) அவர்கள் மூன்று வருடம் கழித்துத் திரும்பிய தமது மருமகன் அபுல் ஆஸிற்குத் தனது மகள் ஜைனபை முதல் திருமண ஒப்பந்தத்தைக் கொண்டே சேர்த்து வைத்தார்கள். இவ்வாறுதான் ஆதாரப்பூர்வமான அறிவிப்புகளில் வந்துள்ளது. (ஸுனன் அபூதாவூது)

ஏனெனில், முஸ்லிமான பெண்களை இறைநிராகரிப்பாளர்களுக்குத் திருமணம் முடித்துக் கொடுக்கக் கூடாது என்ற அல்லாஹ்வுடைய கட்டளை அப்போது வரைக்கும் இறங்கவில்லை. ஆனால், சிலர் “மறுபடியும் புதிய திருமணம் செய்துதான் நபியவர்கள் சேர்த்து வைத்தார்கள்” என்று கூறுகின்றனர். இது தவறாகும். அவ்வாறே ஆறு வருடங்கள் கழித்து இருவரையும் சேர்த்து வைத்தார்கள் என்று கூறுவதும் சரியாகாது. ஏனெனில், அதற்குரிய ஆதாரம் வலுவில்லாதது. (துஹ்ஃபத்துல் அஹ்வதி)

6) மீண்டும் ஜைத் அவர்களைப் பதினைந்து தோழர்களுடன் நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரி 6, ஜுமாதா அல்ஆகிர் மாதத்தில் ஸஃலபாவினர் வசிக்கும் ‘தஃப்’ அல்லது ‘தக்’ என்ற இடத்திற்கு அனுப்பி வைத்தார்கள். நபியவர்கள்தான் தங்களின் படையைத் திரட்டிக் கொண்டு வந்திருக்கின்றார்கள் என்று நினைத்து அனைவரும் அங்கிருந்து ஓடிவிட்டனர். ஜைத் அவர்கள் இருபது ஒட்டங்களை பிடித்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டு மதீனா வந்தார்கள்.

7) பன்னிரெண்டு நபர்களுடன் ‘வாதில் குரா’ என்ற இடத்திற்கு ஹிஜ்ரி 6, ரஜப் மாதத்தில் அங்கு எதிரிகளின் நிலைமை எவ்வாறு இருக்கின்றது என்பதை அறிந்து வருவதற்காக நபியவர்கள் ஜைதை அனுப்பி வைத்தார்கள். ஆனால், அங்கிருந்தோர் நபித்தோழர்களைத் தாக்கி ஒன்பது தோழர்களைக் கொன்று விட்டனர். மூவர் மட்டும் தப்பித்து மதீனா திரும்பினர். அதில் ஜைது இப்னு ஹாஸாவும் ஒருவர். (ரஹ்மதுல் லில் ஆலமீன், ஜாதுல் மஆது)

8 ) ‘ஸயத்துல் கபத்’ எனப்படும் இப்படை ஹிஜ்ரி 8, ரஜப் மாதத்தில் அனுப்பப்பட்டது என்று கூறப்படுகிறது. இச்சம்பவத்தின் தொடரை நாம் பார்க்கும் போது இது ஹுதைபிய்யா உடன்படிக்கைக்கு சற்று முன் நடைபெற்றது என்று தெரிய வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக இதில் கலந்து கொண்ட ஜாபிர் (ரழி) அறிவிப்பதாவது: “300 வாகன வீரர்களை அபூ உபைதாவின் தலைமையில் நபி (ஸல்) அவர்கள் அனுப்பினார்கள். நாங்கள் குறைஷிகளுடைய வியாபாரக் கூட்டத்தை எதிர்பார்த்து பதுங்கி இருந்தோம். எங்களுக்குக் கடுமையான பசி ஏற்பட்டதால் காய்ந்த இலைகளைத் தின்றோம். எனவே, இப்படைக்கு ‘ஜய்ஷுல் கபத்’ -இலை படை- என்று பெயர் வந்தது. எங்களில் ஒருவர் மூன்று ஒட்டகங்களை ஒரே நாளில் அறுப்பார். மற்றொரு நாள் மீண்டும் மூன்று ஒட்டகங்களை அறுப்பார். பின்பு தளபதி அபூ உபைதா (ரழி) அதனைத் தடை செய்துவிட்டார். அதற்குப் பின் கடலிலிருந்து ‘அம்பர்’ என்ற மிகப்பெரிய மீன் ஒன்று எங்களுக்குக் கிடைத்தது. அதை நாங்கள் பதினைந்து நாட்கள் சாப்பிட்டோம். அதனுடைய கொழுப்பை எண்ணையாக பயன்படுத்தி தடவிக் கொண்டோம். அதன் மூலம் எங்களுடைய உடல்கள் நல்ல ஆரோக்கியமடைந்தன.

அபூ உபைதா (ரழி) அதனுடைய விலா எலும்பில் ஓர் எலும்பை எடுத்தார். பின்பு அதை நிறுத்தி, படையில் மிக உயரமாக உள்ள ஒருவரை மிக உயரமான ஒட்டகத்தில் உட்கார வைத்து அதற்குக் கீழ் செல்லும்படி கூறினார்கள். அந்த எலும்பு அவ்வளவு பெரியதாக இருந்தது. அதனுடைய இறைச்சியிலிருந்து பெருமளவு நாங்கள் சேகரித்து வைத்துக் கொண்டோம். மதீனா திரும்பியவுடன் நபி (ஸல்) அவர்களிடம் இச்செய்தியைக் கூறிய போது இது அல்லாஹ் உங்களுக்கு அளித்த உணவாகும். உங்களிடம் ஏதாவது அதில் மீதமிருந்தால் எனக்கும் உண்ணக் கொடுங்கள் என்றார்கள். நாங்கள் அதிலிருந்து நபி (ஸல்) அவர்களுக்குக் கொடுத்தோம். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

இது ஹுதைபிய்யா உடன்படிக்கைக்கு முன் நடந்திருக்க வேண்டும் என்று நாம் கூறியதற்குக் காரணம், முஸ்லிம்கள் ஹுதைபிய்யா உடன்படிக்கைக்குப் பின் எந்தவொரு வியாபாரக் கூட்டத்தையும் கைப்பற்றுவதற்காக செல்லவில்லை.
« Last Edit: December 19, 2011, 11:14:33 PM by Yousuf »