என்னென்ன தேவை?
கடுகு - 2 டீஸ்பூன்,
பூண்டு - 20 பல்,
வெந்தயம் - 2 டீஸ்பூன்,
உளுத்தம் பருப்பு - கால் டீஸ்பூன்,
புளி - எலுமிச்சை அளவு,
வெங்காயம் - 2,
தக்காளி - 1,
மிளகாய் தூள் - தேவைக்கேற்ப,
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப, கறி
வேப்பிலை - சிறிது, எண்ணெய் - சிறிது.
எப்படிச் செய்வது?
ஒரு டீஸ்பூன் கடுகு, ஒரு டீஸ்பூன் வெந்தயம் இரண்டையும் எண்ணெய் இல்லாமல் வெறும் கடாயில் வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். மறுபடி கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, மீதி கடுகு, வெந்தயம், உளுத்தம் பருப்பு தாளிக்கவும். பூண்டு சேர்த்து வதக்கவும். நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். புளியைக் கரைத்து, அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்துக் கரைத்து, வெங்காயம், தக்காளி கலவையில் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். குழம்பு கொதித்து கெட்டியானதும், கடுகு, வெந்தயப் பொடி சேர்த்து, கறிவேப்பிலை தூவி இறக்கவும்.