Author Topic: ~ பக்தி கதைகள் ~  (Read 9735 times)

Offline MysteRy

Re: ~ பக்தி கதைகள் ~
« Reply #30 on: February 25, 2013, 06:31:59 PM »
பேசும் தெய்வம்!




குருஜாம்ப ÷க்ஷத்திர கிராமத்தில் குர்யாஜி என்ற பக்தர் இருந்தார். அவரது மனைவி ராணுபாய். இந்த கிராமம் கங்கைக்கரையில் அமைந்திருந்தது. குர்யாஜி சூரிய நமஸ்காரம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒருநாள் சூரியன் நேரில் வந்து காட்சியளித்து, உனக்கு இருபிள்ளைகள் பிறப்பார்கள். ராமன் அம்சத்தோடு ஒருவனும், அனுமன் அம்சத்தோடு ஒருவனும் பிறப்பார்கள், என்று கூறி மறைந்தார்.  முதல் பிள்ளைக்கு கங்காதரன் என்று பெயரிட்டனர். இரண்டாவது குழந்தையை ராணுபாய் பெற்றெடுத்த போது, சூரியன் வாக்களித்தபடி அனுமனின் அம்சமாக சிறுவாலுடன் இருந்தான். அவன் சற்று வளர்ந்ததும் வால் மறைந்தது. அவனுக்கு நாராயணன் என பெயரிட்டனர். மனோதிடமான அவன் குறும்புமிக்கவனாகவும் இருந்தான். மரம், சுவர் எதுவானாலும் ஏறி குதிப்பான். மகனின் செயல்களை எண்ணி ராணுபாய் கவலைப்பட்டாள்.  ஒருநாள் ராணுபாய், நாராயணா! கண்டபடி இரவு நேரத்தில் தெருவில் அலையாதே! நண்பர்களுடன் சேர்ந்து குறும்பு செய்யாமல் சமர்த்தாக இரு!, என்றாள்.  சரிம்மா! என்றுதலையாட்டினான் நாராயணன். ஆனால், அதன் பிறகு அவன் அம்மாவின் கண்ணில் படவே இல்லை. குழந்தைகள் யாருக்கும் அவன்இருக்குமிடம் தெரியவில்லை. எங்கு தேடியும் காணவில்லை. பெற்றோர் மனம் பதறியது. கணவருடன் தானியம் சேமிக்கும் களஞ்சியத்திற்கு ராணுபாய் சென்றாள். அங்கே பதுங்கி யிருந்த நாராயணனைக் கண்டாள்.  நாராயணா! இங்கு என்ன செய்கிறாய்? என்று சப்தமாக கேட்டாள்.

 அவர்களிடம், நேற்று இரவு அம்மா என்னை வெளியே போகாமல் ஓரிடத்தில் இரு என்றதால், இங்கு வந்தேன். அது என்ன தப்பா?. என்று கேட்டான் அப்பாவியாக. பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆனார்கள். முதலில் கங்காதரனுக்கு பெண் பார்த்து திருமணத்தை நடத்தினர். அடுத்து நாராயணனுக்கு பெண்பார்த்து முகூர்த்த நாளையும் குறித்தனர். ஆனால், நாராயணனுக்கு திருமணத்தில் விருப்பமில்லை.  கல்யாண நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. நாராயணன் வீட்டை விட்டு ஓடி விட்டான். கல்யாண வீடு களேபரமானது. மூத்தவன் கங்காதரன் பெற்றோரிடம், அனுமனின் அம்சம் கொண்டவன் தம்பி நாராயணன் என்பதை அறிந்தும் திருமணம் செய்து வைக்க நினைத்தது தவறு. அவன் காட்டுக்குச் சென்று தவவாழ்வில் ஈடுபட்டிருப்பான் என்று எனக்குத் தோன்றுகிறது, என்றார்.  குர்யாஜியும், ராணுபாயும் அதையே உண்மை என்று நம்பி மன அமைதியானார்கள்.  அவர்கள் நினைத்தது போலவே, நாராயணன் காட்டில் தவத்தில் அமர்ந்தான். நாட்கள் பல கடந்தன. ஆனால், பயன் ஏதும் கிடைக்கவில்லை. இனி வாழ்வதில் அர்த்தமில்லை என்று முடிவெடுத்து இறப்பதற்கு ஆயத்தமானான். கொடிகளைப் பறித்து மரக்கிளையில் கட்டிக் கொண்டு,  ஜெய் ராமதாச ஆஞ்சநேயா! தாயும் தந்தையுமாக உன்னை எண்ணி தவத்தில் ஆழ்ந்தேனே! இந்த பிள்ளைக்காக அன்போடு ஓடிவர வேண்டும்! என்று அழுதான்.  கருணாமூர்த்தியான ஆஞ்சநேயர் அவர் முன் தோன்றி, நாராயணனின் கண்ணீரைத் துடைத்து, கட்டித் தழுவிக் கொண்டார். கவலை வேண்டாம். உடனே வா! நாம் இருவரும் ஸ்ரீராமச்சந்திர பிரபுவிடம் செல்லலாம், என்று பஞ்சவடிக்கு அழைத்துச் சென்றார்.  பஞ்சவடி ராமர் கோயிலில் இரவு பஜனை நடந்து கொண்டிருந்தது. அதில் ஆஞ்சநேயரும், நாராயணனும் கலந்து கொண்டனர்.

பூஜை முடிந்ததும் எல்லோரும் கோயிலை விட்டுக் கிளம்பினர். அப்போது ஆஞ்சநேயர், கருணாமூர்த்தியே! ரகுராமா! என் பக்தன் நாராயணனுக்கு குருவாக இருந்து உபதேசம் செய்யுங்கள்!, என்று வேண்டிக் கொண்டார்.  ராமரும் நேரில் தோன்றி தன் திருக்கரத்தை நாராயணனின் தலையில் வைத்து மந்திர தீட்சை அளித்தார் இனிமேல் உன்னை ராமதாஸ் என்று அனைவரும் அழைப்பார்கள். உலக மக்கள் பலரை ராமபக்தியில் செலுத்தும் பாக்கியம் பெறுவாய்! நான் காட்டிற்குச் சென்றபோது கட்டிய வஸ்திரத்தையும் உனக்கு அளிக்கிறேன், என்றார். மந்திர உபதேசம், வஸ்திர தீட்சையை வழங்கினார். ஆஞ்சநேயரும் தன் பங்கிற்கு ராமதாசருக்கு சரணாகதி மந்திரத்தை உபதேசித்தார்.  என் பக்தனான நீ எப்போது நினைத்தாலும், அப்போதெல்லாம் உன் முன் தோன்றுவேன்! என்று வாக்களித்துவிட்டு மறைந்தார். ராமதாசர் தினமும் ஜயரகுவீரா என்று ஜபித்தபடியே சாலைகளில் செல்வார். பக்தர்கள் கொடுக்கும் தானியத்தை கல்லில் வைத்து அரைத்து மாவாக்கி நெருப்பு மூட்டி இரண்டு ரொட்டி சுட்டு சாப்பிடுவார்.  ஒருநாள் மராட்டிய மாவீரர் சிவாஜி, வேட்டையாடுவதற்காக காட்டிற்கு குதிரையில் வந்தார். அப்போது அவரைக் கண்டு பயந்த மிருகங்கள் எல்லாம் ஒரே நோக்கி ஓடின. அங்கு சிவாஜி ஒரு ஆச்சர்யத்தைக் கண்டார். மரத்தடியில் அமர்ந்திருந்த ராமதாசரிடம், அவை அடைக்கலமாகி நின்றன. அவர் முன்னிலையில் புலியும், மானும் கூட அன்பு காட்டி நிற்பதைக் கண்ட சிவாஜிக்கு அவர் சக்தி வாய்ந்த மகான் என்பது புரிந்தது.

கண்ணை மூடியிருந்த ராமதாசர் தியானத்தில் இருந்தார். எனவே சிவாஜி, அவரை எழுப்பாமல் அரண்மனைக்கு வந்துவிட்டார். ஆனால், அவர் மனம் மட்டும் அந்த மகானையே சிந்தித்துக் கொண்டிருந்தது. மறுநாளும் காட்டிற்குப் புறப்பட்டார். காட்டுப் பாதையில் ராமதாசர் எதிரே வந்து கொண்டிருந்தார். சிவாஜியின் கண்களில் கண்ணீர் பெருகியது. காந்தத்தைக் கண்ட இரும்பு போல ராமதாசரால் கவரப்பட்ட சிவாஜி, கரம் கூப்பி வணங்கினார்.  ராமதாசர் சிவாஜியிடம், முதலில் நீராடி வா என்று கட்டளையிட்டார்.   சிவாஜி காட்டாற்றில் நீராடி அங்கிருந்த மலர்களைப் பறித்து மாலை தொடுத்தார். ஒரு தொன்னையில் தண்ணீர் எடுத்துக் கொண்டார்.  ராமதாசரை வலம் வந்து முன் பக்தியுடன் சமர்ப்பித்தார். நீரால் ராமதாசரின் பாதங்களை கழுவினார்.  சுவாமீ! தங்களின்  திருப்பாதங்களை என் சிரசில் வைத்து அனுகிரஹம் செய்யுங்கள்!, என்று வேண்டினர். ராமதாசரும் சிவாஜிக்கு அருள்புரிந்துவிட்டு, எல்லா உயிர்கள் மீதும் அன்பு காட்டு. சாதுக்களை போற்று. ஏகாதசி விரதத்தை தவறாமல் கடைபிடி. தினமும் ஆஞ்சநேயரை வணங்கு! என்று கட்டளையிட்டார்.  மன்னர் வீரசிவாஜி  ராமதாசரை குருவாக ஏற்றுக் கொண்ட செய்தி நாடெங்கும்  ரவியது. மக்களும் அவரைத் தரிசிக்க கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கினர்.  பக்தியை பரப்பிய ராமதாசர் தன்னுடைய அந்திமகாலம் நெருங்குவதை அறிந்து பக்தர்களுக்குத் தெரிவித்தார். நாடெங்குமிருந்து அவருடைய பக்தர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர். ராமதாசர் நீராடி துளசிமணி மாலை அணிந்து கொண்டு பத்மாசனமிட்டு ராமதியானத்தில் அமர்ந்தார். ராமர் அவர் முன் காட்சியளித்தார். ஜயரகுவீரா என்று ஜபித்த படியே அவர் உயிர் பிரிந்தது.

Offline MysteRy

Re: ~ பக்தி கதைகள் ~
« Reply #31 on: February 25, 2013, 06:34:21 PM »
பசித்தாலும் ஆசைப்படாதீர்!




கான்கள், தானம் கூட பெறுவதைக்கூட மறுத்து விட்டனர் என்கிறதுமகாபாரதம். கஷ்யபர், அத்திரி, பரத்வாஜர், விஸ்வாமித்திரர், ஜமதக்னி, வசிஷ்டர், கவுதமர் என்ற முனிவர்களும், வசிஷ்டரின் மனைவி அருந்ததியும், இவர்களின் வேலைக்காரனான பசுசகன், அவன் மனைவி கண்டையும் பிரம்மலோகத்தை அடைய விரும்பி யாகம் செய்ய முயன்றனர். ஆனால், அந் நேரத்தில் கடும் பஞ்சம் ஏற்படவே, சாப்பாட்டுக்கே பிரச்னையாயிற்று. அந்நேரத்தில், விருஷாதர்ப்பி என்பவன் ஆட்சி செய்து கொண்டிருந்தான். அவன், முனிவர்களுக்காக  அமைச்சர் மூலம் அத்திப்பழங்களை கொடுத்து அனுப்பினான். அதை கையில் எடுத்ததுமே அத்திரி கீழே வைத்து விட்டார். அமைச்சரே! பழத்திற்குள் உன் அரசன் தங்கக் காசுகளை வைத்து எங்களை சோதிக்க நினைக்கிறானோ மன்னன்! இதை கொண்டு செல், என்றார். வசிஷ்டர் அமைச்சரிடம், அளவுக்கு மீறி தானம் பெறுபவன் இழிந்த நிலையை அடைவான், என்றார்.

எல்லாருமே, அதைப்பெற மறுக்க அமைச்சர் திரும்பி விட்டார். தனது சன்மானத்தை ஏற்க மறுத்த முனிவர்களைக் கொல்ல ஒரு பூதத்தை ஏவினான். அது யாதுதானி என்ற அரக்கியாக கொல்ல புறப்பட்டது. இந்நேரத்தில், சுனங்சசன் என்ற முனிவரை, ஏழு ரிஷிகளும் சந்தித்தனர். அவர் பருமனாக இருந்தார். வேதம் ஓதுவது உள்ளிட்ட எந்த ஆன்மிகப் பணியும் செய்யாமல், சாப்பிட்டு  கொண்டே இருப்பதால் தான், பருமனாக இருக்கிறார். சரியான சாப்பாட்டு ராமன் என்ற முடிவுக்கு வந்தனர். அவரிடம் தங்களுக்கு உணவு கிடைக்க ஏற்பாடு செய்யும்படி கேட்டனர்.  சுனங்சசன் ஒரு குளக்கரைக்கு அனுப்பிச் சென்றார். அங்கே, அரக்கி யாதுதானி குளப் பாதுகாப்புக்காக அமர்ந்திருந்தாள். அவளிடம் முனிவர்கள், எங்களுக்கு பசிக்கிறது. இந்தக் குளத்திலுள்ள தாமரைக் கிழங்குகளை எடுக்க அனுமதி கொடு, என்றனர்.யாதுதானியும், முனிவர்களே! நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர் பெயருக்குரிய விளக்கத்தைச் சொன்னால், குளத்துக்குள் இறங்க அனுமதிப்பேன், என்றது. முதலில் அத்திரி, நான்தினமும் 3 முறை அத்தியயனம் (மந்திர பாராயணம் அல்லது பிரார்த்தனை) செய்பவன். இரவில் அத்தியயனம் செய்யாமல் தூங்க மாட்டேன். அதனால் என் பெயர் அத்திரியாயிற்று, என்றார்.

இவ்வாறு ஒவ்வொருவரும் அவரவர் பெயருக்கு விளக்கம்அளித்து குளத்தில் இறங்கினர். கடைசியாக சுனங்சசன் அரக்கியிடம் வந்தார். அரக்கியே! என் பெயர் சுனங்சசன்...பெயர் விளக்கம் தெரியாது.. என்று ஆரம்பிக்கவும், யாதுதானி குறுக்கிட்டாள். உங்கள் பெயர் வாயில் நுழையவே மறுக்கிறது. திரும்பச் சொல்லுங்கள், என்றாள். உடனே கோபமடைந்த சுனங்சசன், என் பெயரை ஒரே தடவையில் நினைவில் வைக்காத நீ அழிந்து போ, என்று தன் திரிதண்டத்தை நீட்டினார். யாதுதானி சாம்பலாகி விட்டாள். இதற்குள் மற்ற முனிவர்கள் கிழங்குகளைப் பறித்து வந்து கரையில் கொட்டினர். மீண்டும் நீராட குளத்திற்கு சென்று விட்டு, திரும்ப வந்து பார்த்தபோது கிழங்குகளைக் காணவில்லை.  எல்லா முனிவர்களும் கிழங்கை எடுத்தவருக்கு உலகிலுள்ள அத்தனை கேடு கெட்ட செயல்களின் பாவமும் பிடிக்கட்டும் என்று சாபமிட்டனர். சுனங்சசன் மட்டும், கிழங்கை எடுத்தவருக்கு புண்ணியம் சேரட்டும், என்றார். இதிலிருந்து கிழங்கைத் திருடி சாப்பிட்டது சுனங்சசன் தான் என்ற முடிவுக்கு வந்த முனிவர்கள், நீர் தானே திருடினீர், என்றனர். ஆம்.. என்ற சுனங்சசன், இந்திரனாக மாறி அவர்கள் முன் நின்றார். பசித்த காலத்திலும், ஆசைப்படாத அவர்களைப் பாராட்டி சப்தரிஷி மண்டலத்திற்கு அனுப்பி வைத்தார். இப்போது சொல்லுங்கள்! பசித்தால் திருடுவது என்பது நியாயம் தானா!

Offline MysteRy

Re: ~ பக்தி கதைகள் ~
« Reply #32 on: February 25, 2013, 06:37:05 PM »
தெய்வப் பிறவிகள்(பாம்பன் சுவாமிகள்)




ராமேஸ்வரம் அருகிலுள்ள பாம்பனில் சாத்தப்பன், செங்கமலத்தம்மை தம்பதியருக்கு பிறந்தவர் பாம்பன் சுவாமி. இவரது இளவயது பெயர் அப்பாவு. ஆசிரியர் முனியாண்டியா பிள்ளையிடம் தமிழ் கற்றார். ஒருநாள், பாய்மரப்படகில் சென்றபோது, துறவி ஒருவர்  சிவசிவ என்று ஜெபிப்பதைக் கேட்ட அப்பாவு, தானும்  அந்த மந்திரத்தை ஜெபித்தார். முக்கால் அணாவுக்கு (9 காசு)  கந்தசஷ்டி கவசம் புத்தகம்  வாங்கிப் படித்தார். அந்நூலில் கூறியிருந்தபடி, தினமும் 36முறை பாராயணம் செய்தார். படிப்பை மறந்தார். எந்நேரமும் பக்தியிலேயே மூழ்கிப்  போனார். ஒருநாள் சூரியன் உதய வேளையில் ஒரு தென்னந்தோப்பிற்கு அப்பாவு சென்றார். அங்கே கவிதை எழுதும் ஆர்வம் பிறந்தது. முருகப்பெருமானே! அருணகிரிநாதரைப் போல நானும் உன்னைப் பாடி மகிழ வேண்டும். அடியேனுக்கும் அருள்புரிவாயாக!, என்று கைகுவித்து நின்றார். அப்போது கங்கையைச் சடையிற் பரித்து என்னும் மங்கலத் தொடர்  மனதில் எழுந்தது. அதையே முதலடியாகக் கொண்டு பாடல் எழுதினார். தினமும் காலையில் ஒரு பாடல் எழுதுவார். இப்படியாக நூறு பாடல்கள் முடிந்தன.

ராமேஸ்வரத்திலிருந்து வந்த சேதுமாதவ ஐயர், அப்பாவு எழுதிய ஓலைச்சுவடியைப் படித்தார். அதை வித்வான்  குமாரசாமி பிள்ளையிடம் காட்டி அதிலிருந்த கவிதை நயம், பக்தி ரசத்தைப் பாராட்டினார். சில நாட்களுக்குப் பின் மீண்டும் பாம்பனுக்கு வந்த சேதுமாதவ ஐயர், அப்பாவு! இன்று மாலை என் வீட்டிற்கு வா!, என்று அழைத்துச் சென்றார். மறுநாள் விஜயதசமி. அன்றைய தினம், அப்பாவுவை ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடலில் நீராட்டினார். அவரது காதில் ஆறெழுத்தான முருகமந்திரமான சரவணபவ என்பதை உபதேசித்தார். சமஸ்கிருதம் கற்றுக் கொள்ளும்படி அன்புக் கட்டளையிட்டார். அன்றுமுதல் அப்பாவு, அந்த மந்திரஜெபத்தில் விருப்பம் கொண்டார்.  சேதுமாதவ ஐயரின் வேண்டுகோளின்படி, மதுரையைச் சேர்ந்த காளிமுத்தம்மையைத் திருமணம் செய்து கொண்டார்.  இரண்டு ஆண், ஒரு பெண்ணுமாக மூன்று  குழந்தைகள் பிறந்தனர்.  அப்பாவு 1891ல் துறவு பூண்டு பழநி செல்ல எண்ணம் கொண்டார். தன் நண்பர் அங்கமுத்துப் பிள்ளையிடம்,  நாளைப் பழநி செல்கிறேன், என்றார். அந்த நண்பர்,  முருகனின் கட்டளையா இது?, என்று கேட்க,ஆம் என்று பொய்யாகத் தலையசைத்தார். அப்போது, முருகப்பெருமான் அப்பாவுவைப் பார்த்து, ஏன் பொய் சொன்னாய் என்று கோபித்தார். உடல் நடுங்கிய அப்பாவு, முருகா! ஆன்மலாபம் கருதி இப்படிச் சொல்லிவிட்டேன், என்றார்.

ஆனால், முருகன் அவரிடம், பழநிக்கு, நான் அழைக்கும் வரை நீ வரக்கூடாது, என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டார். அப்பாவுவும் ஒப்புக் கொண்டார். வாழ்வின் இறுதிவரை, முருகன் அங்கு அழைக்கவும் இல்லை. பாம்பன் சுவாமி பழநிக்குச் செல்லவும் இல்லை. ஆன்மிகத்தில் பொய் கூடாது என்பதற்கு இந்த நிகழ்ச்சியை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். தந்தை காலமானதும், பாம்பன் சுவாமிக்கு வீட்டுப் பொறுப்பை ஏற்கும் நிலை வந்தது. ஒருநாள் தென்னந்தோப்பிற்குச் செல்லும்போது, காலில் முள் தைத்து ரத்தம் வழிந்தது. வேதனையுடன் முருகனை எண்ணி கண்ணீர் வடித்தார். அன்றிரவு ஒரு தச்சரின் கனவில் முருகன் தோன்றி, பாம்பன் சுவாமிக்கு பாதக்குறடு (காலணி) செய்து கொடுக்க உத்தரவிட்டார். பாம்பன் சுவாமி, உப்பு, புளி,காரம் சேர்க்காமல்  உண்ணத் தொடங்கினார். ஆறுமாதத்தில் உடல் மிகவும் மெலிந்து போனது. இதைக் கண்ட ஒருவன், வாழ்வில் தகாத விஷயங்களைச் செய்தால் உடம்பு இப்படித்தான் இளைத்து போகும், என்று ஏளனம் செய்தான். வைத்தியரின்  ஆலோசனைப்படி உப்பு  சேர்க்க எண்ணினார். ஆனாலும், உப்பு சேர்க்கலாமா? கூடாதா? திருவுளச்சீட்டு போட்டுப்  பார்த்தார். அதில் கூடாது என்று பதில் கிடைக்கவே  எண்ணத்தைக் கைவிட்டார். இதன்பின், ஒரு மாதத்திற்குள் முருகனருளால் மெலிந்த உடல் சீரானது.

இதன்பின், பச்சைப் பயறும், பச்சரிசியும் கலந்த உணவே அவரின்  சாப்பாடானது.  ராமேஸ்வரத்தில் முருகனை வழிபட்டு கவசநூல் ஒன்றை எழுதினார். உயிரெழுத்து 12, மெய்யெழுத்து 18 ஆக  முப்பதையும் முதல் எழுத்தாகக் கொண்டு சண்முக கவசம்  பாடினார். எழுத்துக்கு ஒரு  பாடலாக இந்நூலில் முப்பது பாடல்கள் அமைந்தன.  பல திருத்தலங்களுக்கு  யாத்திரை சென்றார். காஞ்சிபுரம் சென்ற போது, பணம்  தீர்ந்து விட்டது. அங்கிருந்து ஊர் திரும்ப ஆயத்தமானார்.  அப்போது, இளைஞன் ஒருவன்,  குமரகோட்டத்தைப் பார்க்கவேண்டாமா? என்று சொல்லி அவரைக் கையோடு அழைத்துச் சென்றான். கோயிலில்  கொடிமரம் அருகில் செல்லும்போது, அந்த  இளைஞனைக் காணவில்லை. தன்னுடன்  வந்தது முருகனே என்று அறிந்து ஆனந்தக் கண்ணீர் விட்டார். பாம்பன் அருகிலுள்ள  பிரப்பன்வலசை மயானத்தில் ஒரு குழிக்குள் அமர்ந்து தவம் செய்யத் தொடங்கினார். முருகன் அருள் கிடைக்காமல் அங்கிருந்து எழுவதில்லை என  முடிவெடுத்தார். இடைவிடாமல் ஆறெழுத்து மந்திரம் ஜெபித்தார். 35வது நாள் நள்ளிரவில்  முருகன் தோன்றி  சுவாமிக்குதகராலய  ரகசியம்  என்னும் மந்திர  உபதேசம் செய்தார்.

திருவாதவூர், மதுரை, சிதம்பரம், காசி தலங்களுக்கு யாத்திரை செய்து விட்டு, சென்னையில் தங்கியிருந்தார். அவரது தாயார் இறந்த போன செய்தியறிந்தும் சொந்த ஊருக்குச் செல்லவில்லை. பற்றற்றே வாழ்ந்தார். அன்னை நற்கதி பெற முருகனிடம் வேண்டிக் கொண்டார்.  ஒருநாள் சென்னை தம்புச்செட்டி தெருவில் நடந்து சென்றபோது, குதிரை வண்டி மோதி காலில் முறிவு ஏற்பட்டது.  அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். வயதாகி விட்டதால் குணமாக வாய்ப்பில்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர். சண்முக கவசத்தை பாராயணம் செ#து வந்தார். விபத்து நடந்த 11ம் நாளில் வானில் வண்ணமயில்கள் இரண்டு நடனமாடுவதைக் கண்டு அதிசயித்தார். முருகனருளால்  கால்முறிவும் குணமானது.  வாழ்வின் இறுதியை அடைந்த பாம்பன் சுவாமி  சீடர்களை அழைத்து  சென்னை திருவான்மியூரில் சமாதி அமைக்க கேட்டுக் கொண்டார். அதன்படியே சமாதிஅமைக்கப்பட்டு கோயில் கட்டப்பட்டது.  இவர் பாடிய 6666 பாடல்களும் முருகன் அருளை நமக்கு வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றன.

Offline MysteRy

Re: ~ பக்தி கதைகள் ~
« Reply #33 on: February 25, 2013, 06:38:47 PM »
பெண்களே.. ஜாக்கிரதை!




காவிரிபூம்பட்டினத்தை தலைநகராகக் கொண்டு கரிகாற்சோழன் ஆண்டு  வந்தான். வணிகமணி என்பவர் அவ்வூரில் இருந்தார். அவரது மகள் குண்டலகேசி.. அழகுப்பதுமை... அரண்மனை அருகில்  இருந்த பெரிய வீட்டில் குடியிருந்தாள்.  அப்பகுதியில் வணிகம் செய்து வந்த காளன், நஷ்டப்பட்டதால் திருடத் துவங்கினான். கையும், களவுமாக பிடிபட்டான்.  அவனைக் காவலர்கள் கைது செய்து அழைத்து வந்த போது, தனது மாளிகையின் உச்சியில் தோழியருடன் பூப்பந்து ஆடிக்கொண்டிருந்த குண்டலகேசி வேடிக்கை பார்க்க வந்தாள். அவன் ஒரு குற்றவாளியாக இருக்கிறானே என்பது பற்றி கவலைப்படாமல், விதிவசத்தால் காளனிடம் காதல் வசப்பட்டாள். அந்தளவுக்கு அவன் அழகாக இருந்தான். கரிகாற்சோழன் முன் கொண்டு செல்லப்பட்ட காளனுக்கு மரணதண்டனை  விதிக்கப்பட்டு, மறுநாளே தூக்கில் போட உத்தரவிடப்பட்டது.

இதற்குள் தன் தந்தையிடம் தனது காதலை விவரித்தாள் குண்டலகேசி.   ஒரு குற்றவாளியைப் போயா காதலிக்கிறாய்? என தந்தை கடிந்தும், காதல் கண்ணை மறைக்க பிடிவாதம் செய்தாள். வேறு வழியின்றி மன்னனைக் காணச் சென்றார் வணிகமணி.  அவருக்கும் சோழனுக்கும் நல்ல பழக்கமுண்டு. அவரை வரவேற்ற மன்னன், இரவோடு இரவாக வந்துள்ளீர்களே! ஏதேனும் உதவி வேண்டுமா? என்றான். தாங்கள் நான் கேட்பதைத்  தருவீர்களா? என்றதும், என்ன கேட்டாலும் தருகிறேன் என வாக்களித்து விட்டான். தன் நிலையை எடுத்துச் சொல்லி, காளனை விடுவிக்கும்படி வணிகமணி வேண்டினார்.  மன்னனும் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற காளனை விடுதலை செய்தான். ஒரு நல்லநாளில் குண்டலகேசிக்கும், காளனுக்கும் திருமணம் நடந்தது. ஏராளமான செல்வம் சீதனமாகக் கொடுக்கப்பட்டது. ஆனாலும், ஆசை விடவில்லை. மேலும் சம்பாதித்தால் என்ன என்ற எண்ணம் தோன்றியது. மீண்டும் அவன் திருட்டில் இறங்கினான்.

கணவனைக் குண்டலகேசி கண்டித்தாள். மனைவி தன்னைக் கண்டிப்பது காளனுக்கு பிடிக்கவில்லை.  ஒருநாள் மலை உச்சிக்குப் போய் வரலாம் எனக் கூறி, அவளை அழைத்துச்  சென்றான். அங்கு சென்றதும் அவளைத் தள்ள முயற்சித்தான். அவள் சுதாரித்துக் கொண்டு, இனியவரே! தங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளுங்கள். ஆனால், சாகும் முன் கணவனை வலம் வந்து வணங்கும் பெண்கள் பாக்கியசாலிகள். அதற்கு அனுமதியுங்கள், என்றாள். காளனும் வேண்டாவெறுப்பாய் சம்மதித்தான். இரண்டு முறை வலம் வந்த குண்டலகேசி, மூன்றாம் முறை வலம் வரும்போது மிகவும் விரைவாக தன் கணவனை பாதாளத்தில் தள்ளி விட்டாள். அவன் உயிரிழந்தான். பின்னர் அந்த துரதிர்ஷ்ட சாலிப் பெண், ஆசையே அத்தனை துன்பங்களுக்கும் காரணம், என்ற புத்தரின் போதனையை உலகெங்கும் பரப்பி, அவரது திருவடியை எய்தினாள். பெண்கள் காதல் வலையில் விழுவது ஆபத்து. பெற்றோர் சொல் கேட்டு திருமணம்  செய்து கொள்வதே பல வகையிலும் பாதுகாப்பானது.

Offline MysteRy

Re: ~ பக்தி கதைகள் ~
« Reply #34 on: February 25, 2013, 06:40:28 PM »
அத்திரிபாச்சா ...அத்திரிபாச்சா ...




அந்த ஞாபகமறதி இருக்கே...அது  மனுஷனை பாடாய் படுத்திடும்! ஆனால், கீழே விழுந்தாலும் மீசையில் மண்  ஒட்டாது என்று சொல்வதைப் போல.  உலகத்திலேயே, தங்களை ஜாம்பவான்கள் போல் காட்டிக்கொள்ளும் மனிதர்கள் ஞாபக மறதிக்காரர்கள் தான். ஒரு மனுஷன் மாமியார் வீட்டுக்கு தலை  தீபாவளிக்குப் போவதாக இருந்தான். கிளம்புகிற வேளையில், மனைவிக்கு தலைசுற்றல்,  வாந்தி, மயக்கம்... மருத்துவச்சியிடம் கூட்டிப் போனான். அவள் நாடி புடிச்சு பார்த்துட்டு, இது அது சாமியோவ்!  புள்ளைய பத்திரமா பாத்துக்கோ! இப்போ பஸ்சுலே போகக் கூடாது! என்று எச்சரித்து  அனுப்பினாள். மனைவி கர்ப்பமா இருக்கிறது ஒருபுறம்  சந்தோஷம் தான் என்றாலும், தலை தீபாவளி சீர் வாங்குறதை விட முடியுமா என்ன! நான் மட்டும் போயிட்டு வரேன்னு அவன் கிளம்பிட்டான். மகள் கர்ப்பமாக இருக்கிற விபரத்தைக் கேட்டதும், அம்மாகாரிக்கு ஏக மகிழ்ச்சி. மருமகனுக்கு மோதிரம் போட்டா!! பலகாரங்களை அடுக்கித்  தள்ளிட்டா! மாமியார் செஞ்ச ஸ்பெஷல்  கொழுக்கட்டை ஒன்று இவன் மனதில் நின்று விட்டது. அவ்ளோ ருசி!  என் மகள் என்னை விட, இதை நல்லா செய்வா, என்று சர்டிபிகேட் வேறு கொடுத்தாள். மறுநாள் நம்ம ஆள் ஊருக்கு கிளம்பிட்டான்.

வீட்டிற்கு வந்து, மனைவி கையால் அந்த  பலகாரத்தை செஞ்சு சாப்பிடணுங்கிறதுக்காக, மறக்காமல் இருக்க அதன் பெயரைச் சொல்லிக் கொண்டே பஸ்சில் வந்தான். ஒரு இடத்தில் பெரிய பள்ளம்! பஸ் பள்ளத்தில் ஏறி இறங்கவே, ஒரு குலுக்கு குலுக்கியது. அந்த ஆட்டத்தில், பதறிப்போன நம்ம ஆள், அதிர்ச்சியிலே பண்டத்தின் பெயரை மறந்துட்டான்.  அத்தை ஏதோ சொன்னாளே! அத்திரிபாச்சாவோ, கித்திரிபாச்சாவோன்னு! கரெக்ட்...அத்திரிபாச்சா தான்! என அவனாகவே, முடிவு செய்து கொண்டு, வீட்டில் வந்து மனைவியிடம் அத்திரிபாச்சா செய்யுடி என்றான். அவள் விழித்தாள்.  என்னையா உளர்றே! என்றாள். அவனுக்கு கோபம் வந்துட்டு!  ஏய்! புருஷன் ஒரு பலகாரம் கேட்டா அதைச் செய்ய வலிக்கவா செய்யுது!  சோம்பேறிக் கழுதை! ஒழுங்கா சொன்னதை செய்யுடி, என்று கத்தினான். அவள் ஒன்றும் புரியமால் அழுதேவிட்டாள். அடியே! அழவா செய்யுறே! வேலை பார்க்கிறதுக்கு உனக்கு வலிக்குதோ! என்றவன் நையப்புடைத்து விட்டான். அவள் தன் அம்மாக்காரிக்கு தகவல் சொல்லி அனுப்பிவிட்டாள். அம்மாக் காரி பதறிப்போய் ஓடிவந்தாள். மருமகனைப் பார்த்து, அடப்பாவி! ஒரு பிள்ளைத்தாச்சி பொண்ணை இப்படியா அடிப்பே! பாருடா! கொழக்கட்டை கொழக்கட்டையா வீங்கியிருக்கு!.... இப்போது, நம்ம ஆள் துள்ளிக்  குதித்தான். அடியே! அதுதாண்டி! அதைத்தான் அத்திரிபாச்சான்னு மாத்திச் சொல்லிட்டேன். சரி! நான் அடிச்சலே மனசிலே வச்சுக்காதே! போய் கொழுக்கட்டை செய், என்றானே பார்க்கலாம்!

Offline MysteRy

Re: ~ பக்தி கதைகள் ~
« Reply #35 on: February 25, 2013, 06:42:13 PM »
கொக்கர கொக்கரக்கோ சேவலே!




கஷ்யப முனிவரின் புத்திரனான சூரபத்மன்  என்னும் அசுரன், விண்ணுலக தேவர்களைக்  கொடுமைப்படுத்தினான். அவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். இறைவன், தன் நெற்றிக்  கண்ணில் இருந்து ஆறு நெருப்புப்பொறிகளை உருவாக்கினார். அவை கங்கையில் தவழ்ந்து குழந்தைகளாக மாறின. ஆறுகுழந்தைகளும் இணைந்து கந்தன் என்னும் மாபெரும் சக்தியாக வடிவெடுத்தது.  அன்னை பராசக்தி, தன் சக்தியை ஒன்று திரட்டி அடக்கிய வேல் ஒன்றை மகன் கந்தனிடம் வழங்கினாள். சக்திவேலை ஏந்திய கந்தன் அழகில் மன் மதனையும் மிஞ்சியதால் முருகன் எனப்பட்டான். முருகன் என்றால் அழகன். அவன் சூரனுடன் போருக்குப் புறப்பட்டான். சிறுவா! பால் மணம் மாறாத பாலகனான நீயா என்னுடன் போருக்கு வந்தாய்! போய் விடப்பா! என்று ஆணவத்துடன் கருணையை குழைத்துப் பேசுவது போல சூரபத்மன் சிரித்தான்.

ஆனால், முருகனின் தாக்குதலில் நிலைகுலைந்து போனான். முருகன் வேலாயுதத்தை ஏவிவிட்டார். அக்னிமழையைப் பொழிந்தபடி வேல், சூரனை அழிக்கப் பாய்ந்தது. பயந்து போன சூரபத்மன், ஒரு கடலின் நடுவே பெரிய மாமரமாக உருவெடுத்து நின்றான். அம்மரத்தை முருகனின் வேல் இரண்டு கூறாக பிளந்தது. அதன் ஒருபாதியை சேவலாகவும், மறுபாதியை மயிலாகவும்மாற்றி அருள் புரிந்தார். முருகன். நீலமயிலை வாகனமாக்கிக் கொண்டார். சேவலை கொடியாக ஆக்கிக் கொண்டார். அதிகாலை விடியல் வேளையில் சேவல் கொக்கரக்கோ என்று சொல்லி முருகப்பெருமானுக்கு நன்றி தெரிவிக்கும். கொக்கு அறு கோ என்பதைத் தான் சேவல் கொக்கரக்கோ என்று கூவி அழைக்கிறது. கொக்கு என்றால் மாமரம், கொக்கரக்கோ என்பதற்கு மாமரத்தை இருகூறாக்கிய மன்னவனே என்பது பொருளாகும். சேவலைக் காலையில் தரிசித்தால் முருகனின் அருள் கிடைக்கும்.

Offline MysteRy

Re: ~ பக்தி கதைகள் ~
« Reply #36 on: February 25, 2013, 06:44:33 PM »
மாயவன் வந்தான்!




அம்மா! தீபாவளி நெருங்குது! இப்போதே பலகாரம் செய்ய ஆரம்பிச்சுடு!   என்றான் மகன்  கண்ணன். கண்ணா! கண்ணா! என அவனை வாய்நிறைய கூப்பிடுவாள் அம்மா. கண்ணன்  என்றால் அவளுக்கு கொள்ளைப் பிரியம்.. ஒரே பிள்ளை...கேட்கவா வேண்டும் செல்லத்துக்கு! அதேநேரம், அம்மா தனக்கு கொடுக்கும் செல்லத்தை கண்ணன் ஒருநாள் கூட தவறாகப் பயன்படுத்தியதே இல்லை. சமர்த்துப்பிள்ளை... பள்ளியில் அவன் தான் பர்ஸ்ட்! அவன் வீடு இருந்த  தெருவிலேயே கிருஷ்ணன் கோயில் ஒன்றும்  இருந்தது. கண்ணனும், அம்மாவும் வசதிப்படும் நாட்களில் எல்லாம் அங்கு செல்வார்கள். அம்மா நெய்யிலேயே பலகாரம் செய்தாள். முறுக்கு, அதிரசம், லட்டு...இத்யாதிகளெல்லாம்  தயாராயின. தீபாவளியன்று காலையில், பலகாரங்களை நைவேத்யம் செய்து, காக்கைச் சிறகினிலே நந்தலாலா, என்ற பாடலை இனிய குரலில் பாடினாள். அன்று விளையாட்டு விழாவிற்குஊர் மக்கள் ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர். அம்மா! பூஜை ஆரம்பிக்கறச்சே  என்னைக் கூப்பிடு, இங்கே விளயாட்டு விழாவை வேடிக்கை பார்த்துண்டிருப்பேன், என சொல்லிவிட்டு, கண்ணன் வெளியே ஓடிவிட்டான்.

பூஜைக்கான எல்லா பணிகளையும் அம்மா முடித்து விட்டு,  கண்ணா! கண்ணா! என அழைத்தாள். விளையாட்டை ரசித்துக் கொண்டிருந்தவர்கள் போட்ட கூச்சலில், கண்ணனின் காதில் அம்மாவின் சப்தம் விழவில்லை. கூட்டம் அதிகமாக இருந்ததால், எங்கே நிற்கிறான் என்றும் தெரியவில்லை. ஆனால், கண்ணா...கண்ணா! என்று அவள் சப்தமாக அழைத்தது, கோயிலுக்குள் இருக்கிற கிருஷ்ணரின் காதில் விழுந்துவிட்டது. ஐயோ! எனக்கு துவாபரயுகத்தில் தேவகி, யசோதை என்று இரண்டு தாய்கள் இருந்தனர்.  இந்த யுகத்தில் யாருமில்லையே என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்தேன். இதோ! ஒருதாய் என் பெயர் சொல்லி அழைக்கிறாள்.  இதோ வந்துவிட்டேன் அம்மா!  அவளது மகன் கண்ணனின் வடிவிலேயே உள்ளே வந்து விட்டான் கண்ணன். அம்மா அவனை அப்படியே அணைத்துக் கொண்டாள். எங்கே பூஜை நேரத்தில் வராமல் போய்விடுவாயோ என பயந்தேன். வா வணங்கலாம்! என்றாள். நிஜக்கண்ணன் அவள் அருகே நிற்க, சிலைக் கண்ணனுக்கு பூஜை நடந்தது. நைவேத்யம் முடித்து, கண்ணனுக்கு தட்டு நிறைய பலகாரம் அள்ளி வைத்து, ஊட்டினாள் அந்தத்தாய்.  குழந்தை அதை மென்று சாப்பிட்டான்.  இன்னும் வேண்டுமென்றான்! அவள் மேலும்  ஊட்டினாள்.

கொஞ்சம் மட்டுமே மிச்சம்! அத்தனையையும் சாப்பிட்டு விட்டு, அம்மாவுக்கு முத்தமும் கொடுத்து,அம்மா! ரொம்ப ருசி! பாவம் உனக்குத்தான் கொஞ்சமா இருக்கு! என்று பரிதாபப் பட்டுவிட்டு அவன் வெளியேறவும், அவளது மகன் கண்ணன் உள்ளே வரவும் சரியாக இருந்தது. அம்மா! பூஜை முடித்து விட்டாயா! விளையாட்டைப் பார்த்தவர்கள் போட்ட  கூச்சலில் நீ கூப்பிட்டது கேட்கவில்லை போலும்! சரி சரி... பலகாரங்களைக் கொடு, என்றான். ஏனடா! அவ்வளவையும் நீ தானே சாப்பிட்டாய், என்றாள் தாய் ஆச்சரியத்துடன்! நானா! நான் இப்போது தானே வீட்டுக்குள்ளேயே வருகிறேன், என்றான் மகன்.  அப்படியானால்  வந்தது....அந்த நிமிடம் அவள் கண்முன் நிஜக்கண்ணன் தோன்றினான். என் தெய்வமே! உன் உலகளந்த திருவடி  என் இல்லத்தில் பட்டதா! நரகாசுரனைக் கொன்று, உலகையே ரட்சித்த உன் கைகளா, என் வீட்டு பலகாரத்தை அள்ளி சாப்பிட்டன! அவள்  புளகாங்கிதமடைந்து போனாள். பாத்திரத்தில் இருக்கும் மிச்ச பலகாரங்களை எடுத்து மகனுக்கு கொடுக்க உள்ளே போனாள். ஆச்சரியம்! பாத்திரங்கள் நிறைந் திருந்தது. அவள் வீட்டுக் கண்ணனும் ஆசை தீர சாப்பிட்டு விட்டு, பட்டாசு வெடிக்க கிளம்பினான்.

Offline MysteRy

Re: ~ பக்தி கதைகள் ~
« Reply #37 on: February 25, 2013, 06:45:59 PM »
மாடி வீட்டு ஏழை!




இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும் இலக்கணம் படைத்தவர்கள் நாட்டில் மிகக்குறைவு. ஒரு அரசன் இன்னொரு நாட்டின் மீது படை எடுத்துச் சென்று கொண்டிருந்தான். வழியில் ஒரு காட்டைக் கடக்க வேண்டியிருந்தது. அங்கே ஒரு முனிவர் இருந்தார். அவரிடம் தனது வெற்றிக்காக ஆசி பெறச்சென்றான். காட்டில் கடும் குளிர் அடித்தது. முனிவரோ, இடையில் மட்டுமே ஆடை உடுத்தியிருந்தார். தியானத்தில் ஆழ்ந்திருந்த அவருக்கு, தனது மேலாடையை எடுத்துப் போர்த்தினான் அரசன்.  கண்விழித்த முனிவர் அரசனைப் பார்த்தார். யாரப்பா நீ! எதற்காக இங்கே நிற்கிறாய்! முனிவரே! நான் பண்ணைபுரத்தின் அரசன். பக்கத்து நாட்டின் மீது படையெடுத்துச் செல்கிறேன்.

நான் வெற்றி பெற. தங்களிடம் ஆசி பெறவே காத்திருக்கிறேன்,.  சரி...எனக்கு அணிவித்த இந்த மேலாடையை எடுத்துச் செல்,. உங்களுக்கு குளிரும் என்று தானே அணிவித்தேன்!. தேவையில்லை! நான் ஏற்கனவே பணக்காரன். இந்தச் சொத்தையும் சேர்த்து சுமக்க தயாராக  இல்லை. என்னிடம் இதுபோல் பல சால்வைகள் உள்ளன. அதில் ஒன்றைத் தான் கொடுத்தேன். இதை ஏற்பதில் என்ன தயக்கம்! மகனே! உன்னிடம் ஏற்கனவே ஒரு நாடு இருக்கிறது. அது போதாதென்று இன்னொரு நாட்டையும் பிடிக்கச் செல்கிறாய். அப்படியானால், உனக்கு தேவை இருக்கிறது. தேவை உடையவனே ஏழை. அவனுக்கே பொருட்கள் தேவை,. அரசனுக்கு துறவியின் வார்த்தைகள் சம்மட்டியால் அடித்தது போல் இருந்தது. போர் எண்ணத்தைக் கைவிட்டு, நாடு திரும்பினான்.

Offline MysteRy

Re: ~ பக்தி கதைகள் ~
« Reply #38 on: February 25, 2013, 06:47:21 PM »
இறைவனிடம் தப்ப முடியுமா!




புலி ஒன்றுக்கு கடும் பசி. காட்டாறுஒன்றின் கரையில் நின்ற அது, ஆற்றில் தண்ணீர் குறைவாக வந்ததால், நடுப்பகுதியில் ஒரு மணல்திட்டில் மேய்ந்து கொண்டிருந்த எருமை ஒன்றைப் பிடிக்கச் சென்றது. புலி வருவதை பார்த்த எருமை வேகமாகச் சென்று ஒரு புதர் பகுதியில் மறைந்து கொண்டது. எருமையைக் காணாத புலி, அது வெளியே வரட்டுமே என காத்திருந்தது. எருமை வருவதாகக் காணோம். ஒரு பாறையில் படுத்திருந்தது. அப்போது, ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. புலியால் எங்கும் செல்ல முடியவில்லை. திடீரெனக் கண்ணைப் பொத் தியது. இன்று எப்படியும் பட்டினி தான்! இதையே இறைவனை நினைக்கும் விரதமாகக் கருதிக்கொண்டால் என்ன! அது கண்மூடி தியானத்தில் ஆழ்ந்தது.

புலியின் சந்தர்ப்பவாதத்தை தோலுரிக்க இறைவன் வந்து விட்டார். காணாமல் போன எருமையின் வடிவில்! வெள்ளத்தில் அந்த எருமை மா...மா.. என கதறியபடியே தத்தளித்து வந்தது. சப்தம் கேட்டு புலி கண்களைத் திறந்தது. ஆகா! தேடி வந்தது கிடைத்து விட்டது என்று. பாறையில் இருந்த படியே எருமையின் கழுத்தைக் கவ்வி இழுத்தது. அங்கே இறைவன் பிரசன்னமானார். புலியே! நீ ஒரு சந்தர்ப்பவாதி. உணவு கிடைக்காவிட்டால் விரதம் இருப்பது போல் நடிக்கிறாய். உணவைக் கண்டதும் விரதத்தை கைவிட்டு விடுகிறாய். நீ சரியான சந்தர்ப்பவாதி. அடுத்த பிறவியில், புலியையும் விட கேவலமான ஜந்தாகப் பிறப்பாய், என சாபமிட்டு மறைந்தார். சந்தர்ப்பத்துக்கு தகுந்தாற்போல் மாறுபவன் இறைவனின் தண்டனைக்கு ஆளாவான். அவனது பிறவியின் நிலை தாழ்ந்து கொண்டே போகும்.

Offline MysteRy

Re: ~ பக்தி கதைகள் ~
« Reply #39 on: February 25, 2013, 06:48:51 PM »
கோயில் பக்கம் போங்க!




கிராமத்தில் முருகையா, தண்டபாணி என்ற நண்பர்கள் வசித்தனர். அவர்கள் அங்குள்ள முருகன் கோயில் முன்பு மாடு மேய்ப்பது வழக்கம். தண்டபாணி மட்டும் கோயிலுக்கு பிரசாதம் வாங்குவதற்காகப் போவான். முருகையாவோ அதைக் கூட செய்வதில்லை. ஒரு புதன்கிழமை. கோயிலில் கூட்டமில்லை. முருகையா மேய்த்துக் கொண்டிருந்த ஒரு பசுக்கன்று திடீரென ஓடி விளையாட ஆரம்பித்தது. சாலையில் போகிற வண்டிகளில் போய் விழுந்து விட்டால், ஆபத்தாகி விடுமே என பயந்த முருகையா, அதைப் பிடித்துக் கட்ட எழுந்தான். அவனது நோக்கத்தைப் புரிந்து கொண்ட கன்று ஓட ஆரம்பித்தது. நேராக கோயிலுக்குள் போய் விட்டது. பிரசாதத்துக்காக கூட கோயிலுக்கு போகாத  முருகையா, அன்று தான் முதன் முதலாக நுழைந்தான். கன்றைப் பிடிக்கப் பாய்ந்தான். அது பிரகாரத்தைச் சுற்றி நாலுகால் பாய்ச்சலில் ஓடியது. முருகையாவும் தன் பலத்தையெல்லாம் திரட்டிப் பாய்ந்தான்.

ஆனால், அது சிக்க வேண்டுமே! உஹும்...11 தடவை பிரகாரத்தைச் சுற்றி முடித்த கன்றைப் பிடிக்க முருகையா அருகில் நெருங்கவும், அது பாய்ந்தோடி கருவறைக்குள் ஓடி முருகனின் பின்னால் நின்று கொண்டது. முருகையா முருகன் முன்னால் நின்றான். உள்ளே போக அவனால் முடியாதே! ஒரு வழியாக ஒளிந்து நின்று, கன்று வெளியே வரவும் அதைப் பிடித்து, நான்கு போடு போட்டு, மந்தைவெளிக்கு வந்து கட்டிப்போட்டான்.
 இதற்குள் சர்க்கரைப் பொங்கலை ஒரு பிடி பிடித்த தண்டபாணி, கோயில் எதிரே உள்ள தீர்த்தக்குளத்தில் கையைக் கழுவினான். கையை உதறிய போது, அதிலுள்ள தீர்த்தம் அவன் தலையில் சிறிதளவு பட்டது. இப்படியே காலமும் போய்விட்டது. அவர்கள் மரணமடைந்தனர். தூதர்கள் எமன் முன்னால் அவர்களை நிறுத்தினர்.  சித்ரகுப்தன் அவர்களின் பாவ புண்ணியக்கணக்கைப் படித்தான். ""தர்மராஜா! இந்த தண்டபாணி  பிரசாதத்துக்காக மட்டுமே முருகன் கோயிலுக்குப் போனவன். அதோ, அந்த தடியன் முருகையா இருக்கிறானே! அவன் அதற்காகக் கூட அந்தப் பக்கம் போனதில்லை. இவர்கள் இருவரையும் நரகத்திற்கு அனுப்பி விடட்டுமா! என்றான்.

தர்மராஜா சிரித்தார். ""சித்ரகுப்தா அவசரப்படாதே! இவர்களை சொர்க்கத்திற்கு அனுப்பும்படி முருகப்பெருமான் எனக்கு உத்தரவிட்டுள்ளார். ""ஆச்சரியமாக இருக்கிறதே! இவர்களுக்கா சொர்க்கம்! ""ஆம் சித்ரகுப்தனே! இந்த முருகையா கோயிலுக்கு வழிபாட்டுக்கென வராவிட்டாலும், கன்றுக்குட்டியைப் பிடிக்கிற சாக்கில், 11 தடவை கோயில் பிரகாரத்தைச் சுற்றி வந்தான். கருவறை முன்னாலும் நின்று முருகனையே பார்த்துக் கொண்டிருந்தான். அதோ! அந்த தண்டபாணி இருக்கிறானே! அவன் தினமும் கோயில் குளத்தில் கைகழுவி விட்டு, கையை உதறும்போது தீர்த்தம் தலையில் பட்டதே! அறியாமல் செய்தாலும், அதுவும் புண்ணியச் செயல்களே! அதற்காக கருணாமூர்த்தியான கந்தன், அவர்களை சொர்க்கம் அனுப்பச்சொல்லியுள்ளார், என்றார். பார்த்தீர்களா! விளையாட்டாக கோயிலுக்குப் போனால்  கூட அவர்களுக்கு கடவுள் கருணை காட்டுகிறார். கிராமத்து கோயில்கள் நலிந்து விடக்கூடாது. கிராமமக்கள் தங்கள் ஊர் கோயிலுக்கு அடிக்கடி சென்று இரண்டு கால பூஜையாவது நடக்கும் வகையில் ஏற்பாடு செய்யுங்கள்.

Offline MysteRy

Re: ~ பக்தி கதைகள் ~
« Reply #40 on: February 25, 2013, 06:50:26 PM »
பார்த்தனை காத்த சாரதி!




பாரதப் போர் முடிந்த 19-ஆம் நாள்! அந்தக் கால வழக்கப்படி, போரில் வென்ற மஹாரதர்களுக்கும், மன்னர்களுக்கும் மாலை-மரியாதை செய்யும் விழா ஒன்று நடக்கும். போரில் பங்கேற்ற தேர்கள் வரிசையாக நிறுத்தப்படும். தேரோட்டிகள் கீழே இறங்கி, மண்டியிட்டு நிற்பார்கள். மன்னன் அல்லது மஹாரதர்கள் கீழே இறங்கியதும், தேர்ப்பாகன் மன்னனை வணங்கி, மாலையிட்டு, வெற்றி கோஷம் முழங்குவான். அதன்பிறகு, போரில் வெற்றி தேடித்தந்த தேர்ப்பாகனுக்கு மன்னன் அல்லது மஹாரதர்கள் பொன்னும் பொருளும் சன்மானமும் தந்து கவுரவிப்பார்கள்.

குரு÷க்ஷத்திரப் போர் வெற்றிகரமாக முடிந்தபின், வெற்றி கண்ட பாண்டவ சகோதரர்களுக்காக இந்த விழா ஏற்பாடாகி இருந்தது. தர்மன், பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் ஆகிய ஐவரது ரதங்களும் வரிசையாக நின்றன. மரியாதை விழாச் சடங்குகள் ஆரம்பமாயின. தர்மனுடைய தேரின் முறை முடிந்தபின், பீமனது சாரதி அவனை வணங்கி வாழ்த்தினான். பரிசாக விலை உயர்ந்த ரத்தினமாலையை பாகனுக்கு அணிவித்து கவுரவித்தான் பீமன், மேலும் பூமியும் பொன்னும் பொருளும் வழங்கினான். வெற்றி கோஷங்கள் வானைப் பிளந்தன.

அடுத்தடுத்து, அர்ஜுனன் ரதம். சாரதியோ பகவான் ஸ்ரீகிருஷ்ணன் யாருக்கும் கிட்டாத மாபெரும் பேறு தனக்குக் கிடைக்கப்போகிறது. பகவான் கிருஷ்ணனே தன்னை வணங்கிப் பாரட்டப் போகிறான் என்று எண்ணி, ஒரு கணம் தன்னை மறந்த நிலையில் இறுமாப்போடு, அந்த அற்புத தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தான் அர்ஜுனன். ஆனால் கண்ணன் தேரைவிட்டு இறங்கவில்லை. அர்ஜுனன் திகைத்தான். பெருமையோ சிறுமையோ பாராது, கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று கீதையில் தனக்கு உபதேசித்த கண்ணன், தேர்ப் பாகனுக்குரிய கடமையைச் செய்ய ஏன் தயங்க வேண்டும் என்று நினைத்தான் அர்ஜுனன்.

அப்போது பகவான் கிருஷ்ணன், அர்ஜுனனின் அறியாமையை எண்ணி நகைத்தார், அர்ஜுனா! இந்தத் தேர் மட்டும் இந்தச் சடங்குக்கு விதிவிலக்கு. முதலில் நீ இறங்கு! என்று கட்டளையிட்டார். கண்ணனின் வார்தையை மீறி அறியாத அர்ஜுனன். அக்கணமே தேரில் இருந்து கீழே இறங்கினன். அதேநேரம், தன் சகோதரர்களுக்குக் கிடைத்த கவுரவம் தனக்கு கிடைக்கவில்லையே என ஒரு கணம் ஏங்கினான். கர்மயோகம் என்ற பகுதியாகக் கடமையைப் பற்றி அத்தனை தத்துவங்களைச் சொன்ன கண்ணன், ஒரு தேர்ப்பாகனாக பணியாற்றுவதற்குரிய கடமையைச் செய்ய ஏன் தயங்குகிறான்? இதனால் மஹாரதனான எனக்கு ஏற்படும் அவமானத்தை ஏன் அவன் எண்ணிப் பார்க்கவில்லை? நான் கண்ணனை என்னுடைய தேர்ப்பாகனாக ஏற்றுக்கொண்டதால்தானே, எல்லோர் முன்னிலையிலும் எனக்கு இந்தச் சிறுமை ஏற்பட்டுள்ளது? என்று எண்ணி, மனம் குமுறினான் அர்ஜுனன்.

அர்ஜுனனின் மனோநிலையைத் தன் ஞானத்தால் அறிந்தார் ஸ்ரீகண்ணன். அடுத்த விநாடியே தேரிலிருந்து கீழே இறங்கினார். அதே விநாடியில், தேர்க் கொடியில் இருந்த ஆஞ்சநேயரும் விலகி மறைந்தார். கண்ணன் தேரைவிட்டு இறங்கிய மறுவிநாடியே அர்ஜுனனின் தேர் குபீரென்று தீப்பிடித்து, அக்னி ஜுவாலையுடன் எரிய ஆரம்பித்தது. எல்லோரும் திகிலோடும் ஆச்சரியத்தோடும் பார்த்தனர். யாருக்கும் எதுவும் புரியவில்லை.

அர்ஜுனா! இந்த பாரத யுத்தத்தில் உன் எதிரிகள் அனைவரின் தாக்குதல்களும் உன் ரதத்தின் மீதுதான் குறிவைத்து நிகழ்த்தப்பட்டன. அவர்கள் போரில் எய்த அஸ்திரங்கள், ஏவிவிட்ட தீய மந்திரங்கள், அனுப்பிய தீய சக்திகள் அத்தனையையும் தடுத்து நிறுத்தி, யுத்தம் முடியும்வரை இந்தத் தேருக்கு உயிர் கொடுத்துக் காப்பாற்றிக் கொண்டிருந்தேன். நான் சாரதியாக அமர்ந்து கொண்டிருந்தால் தான், இந்தத் தீய சக்திகள் இதுவரை செயலற்றிருந்தன. படைக்கப்பட்ட பொருள்கள் அனைத்துக்கும் ஆரம்பமும் முடிவும் உண்டு. இந்தத் தேரின் முடிவு ஏற்படும் தருணம் வந்ததை உணர்ந்தேன். நான் முதலில் இறங்கினால் இந்தத் தீய சக்திகள் செயல்படத் தொடங்கிவிடும். அந்த விநாடியே தேர் தீப்பிடித்து எரிந்து சாம்பலாகும். என்பதையும் அறிந்தேன். இப்போது புரிகிறதா, நான் முதலில் இறங்கியிருந்தால், நீ இந்தத் தீயில் சிக்கியிருப்பாய். இப்போதும் உன்னைக் காப்பாற்றவே இந்தத் தேரை விதிவிலக்காக்கில உன்னை முதலில் இறங்கச் சொன்னேன்!

தேர்ப்பாகனாகப் பணிபுரிந்த நான் உன்னை வணங்கி, வாழ்த்தி, நீ தரும் சன்மானத்தைப் பெறத்தயங்குவதாக நீ நினைத்தாய். என் எல்லாச் செயல்களுக்கும் ஒரு காரணம்-காரியம் உண்டு என்பதைப் பல சந்தர்ப்பங்களில் நீ அறிய வாய்ப்பளித்து இருக்கிறேன். இருந்தாலும் உன்னுடைய சுயகவுரவத்தால் உன் சிந்தனை சற்று நேரம் கலங்கி இருந்தது. அது தவறு. இதோ... உன்னை வணங்க நான் சித்தமாயிருக்கிறேன் என்று நீண்ட விளக்கம் தந்தார் ஸ்ரீகண்ணன்.

அவர் கூறிய கடைசி வார்த்தைகள் அர்ஜுனன் காதில் விழவில்லை. காரணம் அவர் கால்களில் அர்ஜுனன் வேரற்ற மரம் போல் விழுந்து கிடந்தான். அக்கணமே கிருஷ்ண பகவான் வாழ்க என்ற கோஷம் வானைப் பிளந்தது. பார்த்தசாரதியை எல்லோரும் பார்த்தனைக் காத்த சாரதி என்று வாயார வாழ்த்தினார்கள்.

பகவான் ஸ்ரீகிருஷ்ணனிடம் இருந்து பகவத்கீதையை நேரடியாகவே உபதேசம் பெற்ற அர்ஜுனனுக்குப் பத்தொன்பதாம் நாளில் இத்தனை அஞ்ஞானம் இருந்தது என்றால்... கீதையை அரைகுறையாகக் கேட்டுவிட்டு அல்லது கீதையின் ஒரு சில வரிகளைப் படித்துவிட்டு, நான் கீதையைப் புரிந்துகொண்ட பரம ஞானி என்று ஒருவன் எண்ணினால், அது எத்தகைய அறியாமை?

Offline MysteRy

Re: ~ பக்தி கதைகள் ~
« Reply #41 on: February 25, 2013, 06:52:44 PM »
பேசும் தெய்வம்!




ஸ்ரீதர ஐயாவாள் வாழ்ந்த திருவிசநல்லூர் பக்திப்பயிர் செழித்த புண்ணிய பூமி. அங்கு வாழ்ந்த வேங்கட சுப்பிரமணிய ஐயர் தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குலதெய்வமானவெங்கடேசரோடு,ராமனையும் சேர்த்து வேங்கடராமன் என பெயரிட்டனர். மூன்று வயது வரை குழந்தை பேசவில்லை. பெற்றோர் மனம் வருந்திய நேரத்தில், வீட்டுக்கு வந்த பெரியவர் ஒருவர், இந்தக் குழந்தையிடம் தெய்வீகசக்தி இருக்கிறது. இவன் நிச்சயம்பேசுவான். அதோடு ஒரு மகானாகவும் விளங்குவான், என்றார். திருவிசநல்லூர்அருகிலுள்ளமணஞ்சேரியில் கோபாலசுவாமி என்ற ராம பக்தர் இருந்தார். அவரிடம் குழந்தையை அழைத்துக் கொண்டு சுப்பிரமணியஐயர் சென்றார்.இவனது குறை தீர்க்கும் மருந்து ஒன்று இருக்கிறது என்று சொல்லிய பக்தர், குழந்தையின் வலக்காதில் ராம என்ற மந்திரத்தை ஜெபித்தார். அதைக் கேட்ட வேங்கடராமன் எழுந்தான். பரசவம் அடைந்தவனாய் பேசும் திறன் பெற்றான்.ஏழுவயதில் உபநயனம் செய்து வைக்க ஏற்பாடானது. தந்தைபிரம்மோபதேசம் செய்த போது,மனதிற்குள் ராமதரிசனம் பெற்றான். அந்தக்காட்சி மறைந்ததும்,வேங்கடராமனால் தாங்கிக் கொள்ள முடியாமல் கண்ணீர் சிந்தினான். அன்று முதல்எப்போதும்ராமநாமமே ஜெபித்தான்.

தந்தையைக் குருவாக ஏற்று வேதம், சாஸ்திரம் கற்றான். சங்கீதவித்வானிடம் இசைப்பயிற்சியும் பெற்றான். இசையோடு சேர்ந்த நாம சங்கீர்த்தனமே சிறந்தது என்ற எண்ணம் வேங்கடராமனின் மனதில் வேரூன்றியது. ஜானகி என்ற பெண்மணியை மகனுக்கு பெற்றோர் மணம் செய்து வைத்தனர். ஒருநாள் ராமாயண உபன்யாசத்தில், ராமனைக் காட்டுக்கு அனுப்பாதே! அயோத்தியிலேயே உஞ்சவிருத்தி செய்தாவது இருக்கச் சொல் என்று தசரதரின் வேண்டுகோளைக் கேட்டதும், வேங்கடராமனின் உள்ளம் உருகியது. அன்று முதல் தானும் உஞ்சவிருத்தி செய்து கிடைத்த பொருளைக் கொண்டு வாழ்வு நடத்த எண்ணினார். மக்கள் அவரை சத்குரு சுவாமிகள் என்று அன்போடுஅழைத்தனர். தினமும் லட்சத்து எட்டாயிரம்ராமநாமம் ஜெபித்து வந்தார்.மனைவி ஜானகியுடன் சுவாமி அயோத்திக்கு நடந்தே யாத்திரை புறப்பட்டார். ஆந்திராவில், தாளபாக்கம் கிராமத்தை வந்தடைந்தார்.அங்கிருந்த பாகவதர்களிடம் அன்னமாச்சாரியார் வகுத்த பாகவத சம்பிரதாயங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றார். அங்குஇரவில் தூங்கியபோது கனவில் போதேந்திர சுவாமிகள் என்பவர் தோன்றினார். இவர் நாமசங்கீர்த்தனம் மூலம்பக்தியைப் பரப்பியவர். அவர் சத்குரு சுவாமியிடம், உடனே தமிழகத்திற்கு போ! உன்னால் ஒரு மகத்தான செயல் ஆகவேண்டியிருக்கிறது, என்றார். அந்த சமயத்தில் காவிரியின் நடுவில் அமைந்திருந்த போதேந்திரசுவாமிகளின் அதிஷ்டானம் (சமாதி) மண் மூடி மறைந்து கிடந்தது. அதைக் கண்டுபிடித்து மீண்டும் சீரமைப்பதே தன் கடமை என்பதை உணர்ந்த சுவாமி, அயோத்தி பயணத்தை நிறுத்தி விட்டு தமிழகம் திரும்பினார். பக்தர்களுடன் அதிஷ்டானத்தைத் தேடும் பணியில் ஈடுபட்டார்.அப்பகுதி மக்களுக்கு இதுபற்றி ஏதும் தெரியவில்லை. அப்போது, கோடைகாலம் என்பதால் காவிரிநதி வறண்டு கிடந்தது. ஒவ்வொரு இடத்திலும் தன் காதை மணலில் வைத்து. எங்காவது நாம சங்கீர்த்தனம் கேட்கிறதா என்று கவனித்தபடி தேடினார்.

ஒரு இடத்தில் பூமியிலிருந்து ராம ராம ராம ராம என்ற திருநாமம் துல்லியமாகக் கேட்பதை உணர்ந்தார். ஆனந்தக்கண்ணீருடன் அங்கே விழுந்து வணங்கினார். தஞ்சை மன்னரின் உதவியுடன் மீண்டும் அங்கொரு அதிஷ்டானம் கட்டினார். அந்த இடமே கோவிந்தபுரம் போதேந்திர சுவாமிகள் அதிஷ்டானமாகத் தற்போது விளங்குகிறது. தஞ்சை மன்னர் கோவிந்தபுரத்தைச் சுற்றியுள்ள பகுதிக்குபாகவதபுரம் என பெயரிட்டு மானியம் வழங்க உத்தரவிட்டார். ஒருசமயம், சத்குரு சுவாமிகள், சீடர்களுடன் நாம சங்கீர்த்தனம் செய்து கொண்டு தெருவில் வந்து கொண்டிருந்தார். அழுதபடி வந்த ஒருவர் ஓடிவந்து சுவாமியிடம் மனைவி ஜானகிஅம்மையாரின் மறைவு செய்தியைத்தெரிவித்தார். இதைக் கேட்டு, அவர் அதிர்ச்சிஅடையாமல், தன் மனைவி ஸ்ரீராமன்திருவடியை அடைந்திருப்பாள் என்பதால்,பரவசத்துடன் ராமநாமம் ஜெபித்தபடிநர்த்தனமாடினார். பின், ஒரு துறவியைப் போல தன் வாழ்வை பக்திப்பணிக்கேஅர்ப்பணித்தார்.ஒருநாள் சுவாமி, பாகவதர்களுடன்நாமசங்கீர்த்தனம் செய்தபடி வந்தபோது, திண்ணையில் ஒருவன் கால்நீட்டிப்படுத்திருந்தான். இப்படி மரியாதைக் குறைவாகஇருக்கிறாயே! பாகவதர்களை அவமதிப்பது பாவம். காலை மடக்கிக் கொள்! என்று பக்தர்கள் சொல்ல, நீங்களும் என்னைப் போல மனிதர்கள் தானே! என்று சொல்லிஅலட்சியமாகப் பார்த்தான். அன்று முதல்கடுமையான வயிற்றுவலி அவனுக்குஉண்டானது. பின் மருதாநல்லூர் சுவாமியைத் தேடிச் சென்று தன்னை மன்னிக்கும்படி வேண்டினான். அவரோ,நீ எனக்கு அபச்சாரம் செய்திருந்தால் மன்னிக்கலாம். ஆனால், நீயோ பாகவத அபச்சாரம் செய்து விட்டாய். உன்னை மன்னிக்கும் சக்தி எனக்கில்லை! என்று மறுத்துவிட்டார். ஆனாலும், அவரின் வழிகாட்டுதல்படி,பாகவதர்களின் பாத தீர்த்தத்தை அருந்தி நோயிலிருந்து மீண்டான். மருதாநல்லூர் மடத்தில்ஒருநாள் சுவாமி தியானத்தில் இருந்தார். அந்த சமயத்தில் சீடர் ஒருவர் அங்கு வந்தார். சுவாமிக்கு அருகில், ராமனும், சீதாபிராட்டியும் அமர்ந்திருந்ததைக் கண்டார். கணப்பொழுதில் ராமனும், சீதையும் அவருள் ஐக்கியமாயினர். இதை கேள்விப்பட்ட ஒருவனுக்கு தானும் இக்காட்சியைக் காண ஆசைஉண்டாயிற்று. அன்றிரவு,மருதாநல்லூர் சுவாமி உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில், ஜன்னல்வழியாக எட்டிப் பார்த்தான். கட்டில் மீது ராமனும் சீதையும் ஏகாந்தமாக அமர்ந்திருப்பதைக் கண்டான். அப்போது ஏற்பட்ட பேரொளியால் அவன் பார்வை பறி போனது.சுவாமியின் அருளால் மீண்டும் பார்வை பெற்றான். மண்ணில் பிறவி எடுத்த நோக்கத்தைநிறைவேற்றிய சுவாமி, அந்திம காலம்வந்ததை அறிந்தார். சீடர்களை அழைத்து,எனக்கு கடவுளிடமிருந்து அழைப்பு வந்துவிட்டது. நீங்கள் அனைவரும்தாரகமந்திரமான ராமநாமத்தை ஜெபியுங்கள்! என்று கூறி ராமனோடு ஐக்கியமானார்.அந்த நாள் சித்திரை வளர்பிறை அஷ்டமி.அப்போது அவருக்கு வயது 41.மருதாநல்லூர் சத்குரு சுவாமிகாட்டிய நல்வழியில்,நாமும் தினமும் ராமநாமம்ஜெபிப்போம்.

Offline MysteRy

Re: ~ பக்தி கதைகள் ~
« Reply #42 on: February 25, 2013, 06:54:16 PM »
பெண்களை மதியுங்கள்!




பெண்கள் நாட்டின் கண்கள். பெண்களை இம்சை செய்யும் எந்த வீடும், நாடும் உருப்படாது. புராணகாலத்திலேயே இப்படி ஒரு சம்பவம் நடந்தது.திதி என்பவள் இறைசிந்தனை மிக்கவள். சிவபார்வதியை வணங்கி வந்தாள். அவள் ஒரு பேரழகி. ஒருநாள்மேகங்களின் தலைவனான இந்திரன் பூலோகம் வந்தான். அவன் அழகிகளைக் கண்டால் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவான். திதி பேரழகுப் பெட்டகம் அல்லவா! இந்திரன் கண்ணில் அவள் பட்டுவிட்டாள்.  அவளை தன்னுடன் தேவலோகம் வரும்படி அழைத்தான். அங்கே பல வசதிகள்இருப்பதாகச் சொல்லி ஆசை காட்டினான். திதிக்கு அவனுடன் செல்ல விருப்பமில்லை.இந்திரா! ஒரு பெண்ணுக்கு வசதிவாய்ப்பை விட, அவள் மனதுக்குப் பிடித்த கணவனே வேண்டும். நீ என் அழகுக்காக ஆசைப்படுகிறாய்.

இந்த அழகு உனக்கு சலித்துவிட்டால், நீ இன்னொரு பெண்ணைத் தேடிப் போய்விடுவாய். கடைசிவரை மனைவியை கண்கலங்காமல் பார்த்துக் கொள்ளும் நல்லவர்கள் எத்தனையோ பேர் இந்தபூமியில் உள்ளனர். அவர்களில் ஒருவரை என் கணவனாக அடைவதையே நான்விரும்புகிறேன். நீ போய் விடு, என்றாள்.இந்திரன் மீண்டும் வற்புறுத்த அவர்களுக்குள் வாதம் வலுத்தது. கோபத்தில், அவளை தனது வஜ்ராயுதத்தால் ஏழு துண்டுகளாக வெட்டினான். ஆத்திரம் அடங்காததால், அந்த துண்டுகள் ஒவ்வொன்றையும் ஏழாக வெட்டினான். ஆக, 49 துண்டுகள் பூமியில் கிடந்தன.தன் பக்தை வெட்டப்பட்டது கண்டு பார்வதிதேவி துடித்துப் போனாள்.சிவனிடம், அன்பரே! இது என்ன கொடுமை! ஒரு பெண், ஒருவனுடைய ஆசையை நிறைவேற்றாமல் போனால், இப்படியா செய்வது! அதிலும், இந்திரனுக்கு மேகங்களின் தலைவன் என்ற பதவியைக் கொடுத்துள்ளீர்கள். இவன் பெய்விக்கும் மழைத்தண்ணீரை  குடிப்பவர்களுக்கும் இதே குணம் தானே வரும்! நீங்கள் அவனுக்குப் பாடம் கற்பிக்கும் வகையில், அந்தப் பெண்ணுக்கு மீண்டும் உயிரூட்டுங்கள், என்றார்.

சிவன் பார்வதியிடம், அவள் விதி அவ்வாறே முடிய வேண்டும் என உள்ளது. எனவே, அப்படி அவள் வாழ்வு முடிந்தது. ஆனால், ஒன்று மட்டும் உறுதி. பெண்களை இம்சைசெய்பவர்களும் அதற்கான பலனை அனுபவித்தேதீருவார்கள். இந்திரனால் வெட்டப்பட்ட 49 துண்டுகளும் 49 இளைஞர்களாக எழும். அவர்களுக்கு ஒருவன்தலைவனாக இருப்பான். அவர்களுக்கு தனித்தனி பெயர் இருக்காது. அவர்களைமாருதர் என்று உலகத்தார் அழைப்பார்கள். இந்திரனின் பதவியை அவர்கள் பறித்து விடுவார்கள், என்றார்.அதன்படியே மாருதர் எனப்பட்ட அந்தஇளைஞர்கள் பிறந்தார்கள். தாய், தந்தை யாரென்றே தெரியாமல் வளர்ந்தார்கள். ஆனால், அனைவரும்பலசாலிகளாக இருந்தனர். மேகக்கூட்டத்தை எங்கே கண்டாலும் அவர்கள்பூமியிலிருந்தே ஊதிசின்னாபின்னபடுத்தினார்கள். இந்திரன் ஆத்திரம் கொண்டு அவர்களுடன் போருக்கு வந்தான். அவனைத்தோற்கடித்து, மழைபெய்யும் அதிகாரத்தை அவர்கள் கையில்வைத்துக்கொண்டார்கள்.பதவி இழந்த இந்திரன் கண்டுகொள்வார் யாருமின்றிபோனான்.

Offline MysteRy

Re: ~ பக்தி கதைகள் ~
« Reply #43 on: February 25, 2013, 06:56:10 PM »
திருவாசகம் தந்த திருவருளார்!




பக்திநிலையில் அரும்பு, பூ, காய், கனி என்னும் நான்கு நிலைகள் உண்டு. இதில் மாணிக்கவாசகரை கனிந்த க்திக்கு எடுத்துக் காட்டாகச் சொல்வர். இவர் பாடிய திருவாசகத்தின் பெருமையை திருவாசகத்திற்கு உருகார் ஒருவாசகத்துக்கும் உருகார் என்று குறிப்பிடுவர். திருவாசகத்தையும் சிவனையும் வேறுவேறாக பிரித்துப் பார்ப்பதில்லை. திருவாசகத்தின் ஒவ்வொருபாடலிலும் சிவனருள் நிறைந்திருக்கிறது. ஆங்கிலத்தில் திருவாசகத்தை மொழி பெயர்த்தவர் ஜி.யு.போப் என்ற வெளிநாட்டவர். இதை மொழிபெயர்த்த போது, பக்தியால் அவருக்கு கண்ணீர் பெருகியது. அவர் குறிப்பெடுத்த காகிதகங்கள் அதனால் நனைத்து ஈரமானது.  அம்மையப்பனாக விளங்கும் சிவனைத் தனது தாயாக பல இடங்களில் மாணிக்கவாசகர் போற்றுகிறார். நாயிற் கடையாய் கிடந்த அடியேனுக்கு தாயிற் சிறந்த தயாவான தத்துவனே என்றும் தாயினும் சாலப் பரிந்து பாவியேனுடைய ஊனினை உருக்கியவனே என்றும் போற்றுகிறார்.

மாணிக்கவாசகருக்காக சிவன் நிகழ்த்திய திருவிளையாடல்கள் பல. இவரது இயற்பெயர் வாதவூரார். அரிமர்த்தன பாண்டியனின் அவையில் அமைச்சராக இருந்தார். திருப்பெருந்துறை என்னும் ஆவுடையார்கோயிலுக்கு மாணிக்கவாசகர் சென்றபோது, சிவன் குரு வடிவில் தோன்றினார். மாணிக்கவாசகரை ஆட்கொண்டு மறைந்தார். இதன்பின், சிவசிந்தனையில் மூழ்கிய மாணிக்கவாசகர், சிவப்பணிக்கே தன்னை அர்ப்பணித்தார். அவருக்காக சிவன் நரியைப் பரியாக்கியும், வைகையில் வெள்ளம் பெருகச் செய்தும், பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படிபட்டும் பல அற்புதங்களை நிகழ்த்தினார்.  சிதம்பரம் வந்த மாணிக்கவாசகர் முன்புநடராஜப் பெருமான், அந்தணர் வடிவில் தோன்றினார், மாணிக்கவாசகர் சொல்லச்சொல்ல,  ஏடும் எழுத்தாணியும் கொண்டு திருவாசகத்தைஎழுதினார். திருவெம்பாவை பாடலைப் பாடிய போது பாவை பாடிய வாயால் கோவை பாடுக என்று சிவன் வேண்டினார். அதன்படியே திருச்சிற்றம்பலக்கோவை என்னும்நூலையும் பாடினார்.

சுவடியின் முடிவில், மாணிக்கவாசகன் சொல்ல அழகிய சிற்றம்பலம் உடையான் எழுதியது என்று கையெழுத்திட்டு சிதம்பரம் கோயில் பஞ்சாட்சரப்படியில் வைத்து விட்டு மறைந்தார். காலை பூஜைக்குவந்த தில்லைவாழ் அந்தணர்கள், அந்த ஓலைச்சுவடியைக் கண்டு அதிசயித்தனர். மாணிக்க வாசகரிடம் அப்பாடல்களின் பொருளை விளக்கும் படி வேண்டினர். அம்பலக்கூத்தனே அதன் பொருள் என்ற மாணிக்க வாசகர், நடராஜரின் திருவடியில் கலந்தார்.  ஆண்டுக்கு ஆறுமுறை நடக்கும் நடராஜ அபிஷேகங்களில் மார்கழி திருவாதிரையே சிறப்பானது. அன்று அதிகாலை  சூரியோதய வேளையில் ஆருத்ரா அபிஷேகம் நடக்கும். பழந்தமிழ் நூல்களில் ஆதிரை முதல்வன் என்று சிவன் குறிப்பிடுகின்றனர். திருவாதிரை விழாவின் தினமும் மாலையில் மாணிக்கவாசகர். சுவாமி சந்நிதிக்கு எழுந்தருள்வார். அப்போது திருவெம்பாவை பாடி தீபாராதனை செய்வது வேறெங்கும் இல்லாத தனிச்சிறப்பு. பரம்பொருளும் பக்தனும் சமம் என்பதை உணர்த்தும் விழாவாக, மார்கழி திருவாதிரை அமைந்துள்ளது.

Offline MysteRy

Re: ~ பக்தி கதைகள் ~
« Reply #44 on: February 25, 2013, 06:58:10 PM »
அவரால் எல்லாம் முடியும்!




மகானிடம் சீடன் ஒருவன், சுவாமி! மனிதனுடைய விருப்பத்தை எல்லாம் கடவுளால் நிறைவேற்ற முடியாது போல் தெரிகிறதே  என்றான். ஏன் அப்படி சொல்கிறாய் . காட்டில் மரம் வெட்டும் விறகுவெட்டி,  எப்போதும் குளிரடிக்க வேண்டும் என்று  கடவுளிடம் வேண்டுகிறான், என்றான் சீடன். நியாயம் தானேப்பா! குளிரடித்தால் தானே வெட்டிய விறகெல்லாம் சீக்கிரம் விற்கும்,.  எப்படி நியாயமாகும் சுவாமி! பழ வியாபாரியோ எப்போதும் வெயில் கொளுத்த வேண்டும் என்றல்லவா நினைக்கிறான் என்றான். அதுவும் நியாயமே! பழங்கள் கெடாமல் இருக்கவேண்டுமானால் வெயில் அடிக்கத் தானே வேண்டும், என்றார்.

சுவாமி! நான் சொல்வதைக் கேளுங்கள்.  விவசாயியோ மழையை வேண்டுகிறான். செங்கல் சூளைக்காரனோ சாரல் கூட விழக்கூடாது. எப்போதும் வெயில் வேண்டும் என்று  நினைக்கிறான். கடவுளே நினைத்தாலும் கூட  எப்படி இவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற  முடியும்?, என்றான். மகான் அவனிடம்,இப்போது வானிலை  எப்படி இருக்கிறது?, என்று கேட்டார்.  வெயில் காய்கிறது சுவாமி,. போனவாரம் எப்படி இருந்தது?,. சுவாமி! செவ்வாய், புதன் கிழமைகளில் மழை பெய்ததால் குளிராக இருந்தது,.  பார்த்தாயா கடவுளின் லீலையை! போன வாரத்தில் மழை,குளிர். இந்த வாரத்தில் வெயில்.  எல்லோரின் விருப்பத்தையும் அவர் நிறைவேற்றி  வைத்ததை நீயே ஒப்புக் கொண்டு விட்டாய்  அல்லவா, என்றார்.