Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
Copy rights issue contents will be removed without any notifications/warnings!!.
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
கதைகள்
»
~ பக்தி கதைகள் ~
« previous
next »
Print
Pages:
1
[
2
]
3
4
Go Down
Author
Topic: ~ பக்தி கதைகள் ~ (Read 9727 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 221948
Total likes: 27453
Total likes: 27453
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ பக்தி கதைகள் ~
«
Reply #15 on:
February 20, 2013, 09:10:02 AM »
நீங்களும் மருது.. இதுவும் மருது!
காளையார்கோவிலிலுள்ள சிவாலயத்துக்கு புதிதாக தேர் செய்யும்படி மருதுபாண்டிய மன்னர் உத்தரவிட்டார். தச்சர்கள் மரம் தேடி அலைந்தனர். சிவகங்கை சமஸ்தானத்திற்குரிய திருத்தலமான பூவனநாதசுவாமி கோயிலில் ஒரு மரம் இருந்தது. அது நன்கு பருத்து அடர்ந்து வளர்ந்திருந்தது. அதனை வெட்டி தேர்ப்பணியைத் தொடங்குவது என முடிவெடுத்தனர். அதற்காக ஆட்களும் வந்துவிட்டனர். பலருக்கும் நிழல் தரும் மரத்தை வெட்ட கோயில் அர்ச்சகருக்கு மனமில்லை. ஓடிவந்து, மன்னரின் மீது ஆணை! இந்த மரத்தை யாரும் வெட்டக்கூடாது என்று வேகமாக கத்தினார். பணியாட்கள் செய்வதறியாது திகைத்தனர். விஷயமறிந்த மன்னருக்கு கோபம் தலைக்கேறியது. என் கட்டளையை மீறும் தைரியம் அர்ச்சகருக்கு எப்படி வந்தது? என்றவர் கோயிலுக்கு விரைந்தார்.
அர்ச்சகர் சிவனை வணங்கி விட்டு மன்னரிடம் வந்தார். மன்னரைப் பார்த்து, மாமன்னரே! வணக்கம். உங்களைப் போலவே இந்த மருதமரமும் அனைவருக்கும் குளிர்ச்சியான நிழலைக் கொடுக்கிறது. நீங்களோ மருதுபாண்டியர். இது மருத மரம். இதைப் பார்க்கும் போதெல்லாம் உங்களின் நல்லாட்சியே என் நினைவிற்கு வருகிறது. அதனால் தான் மரத்தை வெட்டுவதற்கு எனக்கு சிறிதும் மனமில்லை, என்று சொல்லி வணங்கினார். அர்ச்சகரின் பேச்சைக் கேட்ட மன்னர் என்ன செய்வதென தெரியாமல் நின்றார். அவரைப் பாராட்டிய மன்னர் பரிசளித்து விட்டு அரண்மனை திரும்பினார். சுபமான ஒரு விஷயத்துக்கு கூட மரங்களை வெட்டுவதில் மக்கள் கட்டுப்பாட்டைக் கடைபிடித்ததை இதன்மூலம் தெரிந்து கொள்கிறோம்.
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 221948
Total likes: 27453
Total likes: 27453
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ பக்தி கதைகள் ~
«
Reply #16 on:
February 20, 2013, 09:11:40 AM »
உனக்கு நிகர்நீயே!
ஆணுரிமை, பெண்ணுரிமை என்ற போர்வையில், உலகத்தில் ஒழுக்கம் சரிந்து கொண்டிருக்கிறது. காதலில் சிக்கி தன்னையே இழக்கும் பெண்கள் பலர். காதலிகளால் பணம், அழகுக்காக கைவிடப்படும் ஆண்களும் இல்லாமல் இல்லை. இப்படி ஒருவருக்கொருவர் நம்பிக்கைத் துரோகம் செய்தால் நிலைமை என்னாகும் என்பதற்கு தர்மரின் இறுதிக்காலத்தில் நடந்த சம்பவம் உதாரணம்.பாரதப்போருக்குப் பின் சிலகாலம் ஆட்சி செய்த தர்மர், தன் தம்பிகளிடம், தம்பியரே! காலத்தை வென்றவர் எவருமில்லை. கலியுகம் வந்துவிட்டது. ஒருவரை ஒருவர் ஏமாற்றி பிழைப்பவர்கள் அதிகரிப்பார்கள். இனியும், இந்த உலகில் இருக்க வேண்டாம். அரசாங்கத்தை அபிமன்யுவின் பேரன் பரீட்சித்திடம் ஒப்படைத்து விட்டு, நாம் திரவுபதியுடன் காடு செல்வோம். அங்கு சென்று தவவாழ்வு வாழ்ந்து இறைவனுடன் ஐக்கியமாவோம், என்றார். எல்லாரும் சம்மதித்தனர்.
மக்களிடம் பிரியாவிடை பெற்று அவர்கள் காட்டுக்குப் புறப்பட்டனர். அவர்கள் பின்னால் ஒரு நாய் மட்டும் சென்றது. செல்லும் வழியில் திரவுபதி மயங்கி விழுந்தாள். இதைக்கண்ட பீமன் தர்மரிடம், அண்ணா! யோக வாழ்வைத் தேடி செல்கிறோமே! இந்த சமயத்தில் திரவுபதி விழுந்துவிட்டாளே! என்ன காரணம்? என்றான். அவள் அர்ஜுனன் மேல் அளவற்ற பாசம் வைத்திருந்தாள். அவனைப் பிரியப்போகிறோமே என நினைத்தாள், மயங்கிவிட்டாள், என்றார். சற்றுநேரத்தில் சகாதேவன் விழுந்தான். அண்ணா! இதென்ன ஆச்சரியம்! இவனுக்கென்ன ஆயிற்று? என்ற பீமனிடம், இவன் தன்னை விட உயர்ந்த கல்விமான் இல்லை என்ற ஆணவம் கொண்டிருந்தான். அதனால் சரிந்தான், என்றார். அடுத்து, நகுலன் விழுந்தான். இவன் தன்னை விட அழகன் இல்லை என்ற இறுமாப்பு கொண்டிருந்தான். அதனால் மயங்கினான், என்றார் தர்மர். பின்பு, வில்லாதி வீரனான அர்ஜுனனே விழுந்தான். பாரதப்போரில், தான் ஒருவனே தனித்து நின்று எதிரிகள் அனைவரையும் கொல்வேன் என உறுதிகூறினான். சொன்னபடி செய்யவில்லை. முடியாத ஒன்றை செய்து தருவதாகக் கூறுவது பாவம், அதனால் இறந்தான், என்றார் தர்மர். அடுத்து பீமன் மயங்கி விழ தர்மர் அங்கு நின்றபடியே, பீமா! உன்னைப் போல் பலசாலிகள் யாருமில்லை என்ற இறுமாப்பு கொண்டிருந்தாயல்லவா! அதனால் தான் இந்தக்கதி, என்றார்.
மயங்கி விழுந்த எல்லாரும் சில நிமிடங்களில் இறந்து விட்டனர். தர்மர் பயணத்தைத் தொடர நாய் மட்டும் பின்னால் சென்றது. அப்போது, இந்திரன் ஒரு விமானத்தில் வந்தான். தர்மரை சொர்க்கத்துக்கு அழைத்தான். என் தம்பிகள், மனைவி இறந்துவிட்டனர். அவர்களின்றி என்னால் வர முடியாது, என தர்மர் மறுத்தார். அவர்கள் ஏற்கனவே சொர்க்கம் சென்று விட்டனர். எனவே, அங்கு வருவதில் தடையில்லை, என்றான் இந்திரன். சரி...வருகிறேன், ஆனால், நான் நாட்டை விட்டுக் கிளம்பியது என்னையே பின்தொடரும் இந்த நன்றியுள்ள ஜீவனையும் அழைத்து வருவேன். சம்மதமா? என்றார். நாய்கள் இழிபிறவிகள். சொர்க்கம் வர தகுதியற்றவை, என்ற இந்திரனிடம், ஐயனே! அடைக்கலமாக வந்தவனைக் காப்பாற்றாமல் இருப்பது, பெண்களைக் கொல்வது, நல்லவர்களின் பொருளை அபகரிப்பது, நண்பனுக்கு தீங்கு செய்வது ஆகிய நான்கும் மிகக்கொடிய பாவங்கள். இதற்கு நிகரானது தான் நம்பி வந்தவனைக் கைவிடுவது. எனவே, நாயை விட்டு வரமாட்டேன். இதனால் சொர்க்கவாழ்வை இழக்கிறேன் என்றால், அதுபற்றி எனக்கும் கவலையும் இல்லை, என்றார் ஆணித்தரமாக. அப்போது, அந்த நாய் தர்மதேவதையாக உருமாறி நின்றது. தர்மரே! உம் பெருமையை உலகுக்கு உணர்த்தவே உம் பின்னால் நான் வந்தேன். இழிந்த பிறவியான நாய்க்கும் நல்லது நடக்க வேண்டும் என நீர் நினைத்ததால், உனக்கு உமரான நிகரான ஒருவன் இனி விண்ணிலோ, மண்ணிலோ பிறக்கமாட்டான். எல்லாரும் இறந்தபிறகு ஆன்மா மட்டுமே சொர்க்கம் செல்லும். நீர் உடம்புடன் சுவர்க்கம் செல்லலாம், என்றது. தர்மதேவதையை வணங்கிய தர்மர் உடலுடன் சொர்க்கம் கிளம்பினார்.
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 221948
Total likes: 27453
Total likes: 27453
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ பக்தி கதைகள் ~
«
Reply #17 on:
February 20, 2013, 09:13:21 AM »
வற்றாத கிணறு!
பத்ரிகாசிரமம் என்னும் திருத்தலத்தில் அந்தணர் ஒருவர் வசித்தார். தினமும் மக்களிடம் பிட்சை ஏற்று உண்டு வந்தார். எல்லா உயிர்களையும் நேசிக்கும் குணம் கொண்டவர். நாளைக்குப் பாடு நாராயணன் பாடு என்ற அளவில் வாழ்க்கை சென்று கொண்டிருந்தது. தனது குடிசை வாசலில் இருபுறமும் பெரிய தொட்டி வைத்து அதில் தண்ணீர் நிரப்பி வைப்பது அவரது வழக்கம். பறவை, விலங்குகள் தாகம் தணிய நீர் அருந்திச் செல்லும். வழிப்போக்கர்களும் அவர் வீட்டில் தண்ணீர் அருந்தி இளைப்பாறிச் செல்வர். தண்ணீர் தானத்தால், அந்தணரின் புண்ணியக்கணக்கு அதிகரித்தது. இவ்வாறு புண்ணியம் அதிகரித்தால், இந்திர பதவியே கிடைக்கும் என்பது ஐதீகம். இதை அறிந்த இந்திரன், தன் பதவிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று அஞ்சினான். அக்னிதேவனை அழைத்தான். இருவரும் வயதானவர்கள் போல உருமாறி அவரது வீட்டுக்கு வந்தனர். அந்தணரே! வெயிலில் நடந்து வந்ததால் களைப்பாக இருக்கிறது.
தண்ணீர் கொடுங்கள்!, என்றான் இந்திரன். இதோ! குடியுங்கள்!, என்று சொல்லி செம்பு நிறைய தண்ணீர் கொடுத்தார் அந்தணர். அதைக் குடித்துவிட்டு, எங்களுக்கு இன்னும் தாகம் அடங்கவில்லையே! என்றனர். தண்ணீர் எடுக்கச் சென்ற அந்தணருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அக்னிதேவன் தண்ணீரை எல்லாம் வற்றச் செய்து விட்டான். இதை அறியாத அந்தணர், இதென்ன மாயஜாலம்! துளி அளவு தண்ணீர் கூட இல்லாமல் எங்கே மறைந்தது?, என்று ஆச்சரியப்பட்டார். வந்தவர்களுக்கு தண்ணீர் கூட கொடுக்க முடியாத பாவம் தன்னைப் பற்றுமோ என பயப்படவும் செய்தார். திரவுபதியின் மானம் காக்க வந்த கிருஷ்ணா! எனக்கும் உதவி செய்ய ஓடி வா! இந்த முதியவர்களின் தாகம் தணிக்க ஏதாவது வழிகாட்டு!, என்று வேண்டியபடி அந்தணர் கைகளை குவித்து நின்றார். காலி பாத்திரத்தில் தண்ணீர் நிரம்பி வழிந்தது.
அக்னி தேவனால் அந்த நீரை உறிஞ்ச முடியவில்லை. தனக்கு தோல்வி ஏற்பட்டதை உணர்ந்த இந்திரன் அக்னிதேவனுடன் தேவலோகத்திற்கு சென்று விட்டான். பின், அந்தணர் திருமாலை வேண்டிக் கொண்டு, வீட்டிலேயே ஒரு கிணற்றைத் தோண்டினார். அதில் சுவையான தண்ணீர் கிடைத்தது. பலரும் வந்து கிணற்றில் நீர் இறைத்து குடித்தனர். இதைக் கண்ட இந்திரனுக்குப் பொறாமை அதிகமானது. தொடர்ந்து மழையே இல்லாமல் பத்ரிகாசிரமத்தில் வறட்சியை உண்டாக்கினான். குடிநீரின்றி மக்கள் திண்டாடினர். ஆனால், அந்தணர் வீட்டு கிணறு மட்டும் வற்றவில்லை. மக்கள் அங்கு தண்ணீர் எடுத்து ஆனந்தமாகக் குடித்தனர். இந்திரன் இப்போதும் தான் தோற்றுவிட்டதை உணர்ந்தான். பூலோகம் வந்த இந்திரன், அந்தணரின் தர்மசிந்தனையைப் பாராட்டினான். அந்தணர் வீட்டுக் கிணற்றில் எப்போதும் நீர் வற்றாமல் இருக்கவும், அந்த நீரைக் குடிப்பவர்கள் சொர்க்கத்தில் வாழும் பாக்கியம் பெறவும் வரம் கொடுத்தான். அந்தணரையும் தன்னோடு அழைத்துக் கொண்டு தேவலோகம் புறப்பட்டான்.
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 221948
Total likes: 27453
Total likes: 27453
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ பக்தி கதைகள் ~
«
Reply #18 on:
February 20, 2013, 09:14:59 AM »
உடலா .. மனமா!
ஒரு தாசியின் வீடும், சந்நியாசியின் குடிலும் அருகருகே இருந்தன. தாசியின் வீட்டுக்கு பல ஆண்கள் வந்து போவதை சந்நியாசி கவனித்தார். ஒருநாள் அவளை அழைத்து, கொடிய தொழில் செய்யும் நீ, பெரும் பாவத்தைச் சேர்த்துக் கொண்டிருக்கிறாய். இறைவழிபாட்டுக்காக என் குடிலுக்கு வந்து போகும் பக்தர்களுக்கு உன் தொழில் இடையூறாக இருக்கிறது. நீ இதை விட்டுவிடு! வேறு ஏதேனும் தொழில் செய், என்று அறிவுரை சொன்னார். அவள் அதைக்கேட்டு நடுங்கினாள். சுவாமி! எனக்கு மட்டும் வேறு தொழில் செய்யும் ஆசை இல்லையா? பாவப்புதையலுக்குள் அமிழ்ந்து கொண்டிருக்கும் எனக்கு வேறு வேலை தர எல்லாரும் மறுக்கிறார்களே! ஒழுக்கம் கெட்டவளை வீட்டு வேலைக்கு சேர்த்தால் என் கணவனுக்கும், வாழ்க்கைக்கும் அல்லவா ஆபத்து என்று குடும்பப்பெண்கள் என்னைக் கடிகிறார்களே! நான் என்ன செய்வேன், இருப்பினும், இதை விட்டுவிட முயற்சிக்கிறேன், என்றாள். பட்டினி கிடந்தேனும் செத்து விட முடிவெடுத்தாள்.
ஒவ்வொரு நாளும் தான் செய்த பாவத்தொழிலுக்கான மன்னிப்பு வேண்டி இறைவனிடம் ஆத்மார்த்தமாகப் பிரார்த்தித்தாள். ஆனால், பாழும் சமுதாயம் அவளை விடவில்லை. உன் பரம்பரையே இந்தத்தொழில் செய்து தானே பிழைத்தது. நீயும் கெட்டுப்போனவள் தானே! இப்போது பத்தினி போல் நடிக்கிறாயா? என்று கேவலமாகப் பேசியதுடன், அவளை வலுக்கட்டாயமாகவும் இழுத்துச் சென்றனர் சில மாபாதகர்கள். வேறு வழியின்றி அதையே அவள் தொடர்ந்தாள். இறைவனிடம் தன் நிலையைச் சொல்லி அழுதாள். அவளது மன மாற்றத்தை அறியாத சந்நியாசி, தான் சொல்லியும் அந்தப்பெண் கேட்கவில்லையே என கோபமடைந்தார். ஒவ்வொரு நாளும் அவளது வீட்டுக்கு வந்து போகும் ஆண்களின் எண்ணிக்கை அளவுக்கு கூழாங்கற்களை எடுத்து ஓரிடத்தில் போட்டார். அந்தக்குவியல் தினமும் உயர்ந்து கொண்டே வந்தது. ஒருநாள் அவளிடம் அந்தக்குவியலைக் காட்டி, நீ செய்த பாவத்தின் அளவைப் பார்த்தாயா! சொல்லச்சொல்ல கேட்க மறுக்கிறாயே! என்று கடிந்து கொண்டார். அந்தக்குவியலைக் கண்டு மலைத்த அந்த அப்பாவி பெண் இறைவனிடம்,கடவுளே! இனியும் இந்தத்தொழில் எனக்கு வேண்டாம். தற்கொலை செய்வது பாவம் என்கிறார்கள். இல்லாவிட்டால், அதை செய்திருப்பேன். நீயாக என் உயிரை எடுத்துக்கொள்,என்று கதறியழுது பிரார்த்தித்தாள்.
அவளது கோரிக்கையை இறைவன் ஏற்றான். அன்றிரவே அவளது உயிர் போனது. சந்நியாசியும் அதே நாளில் இறந்தார். தாசியின் உடலை ஊர் எல்லையில் இருந்த காட்டுக்குள் வீசி விட்டனர் அருகில் இருந்தவர்கள். நரிகளுக்கும், நாய்களுக்கும் அவளது உடல் விருந்தானது. சந்நியாசியை மலர்களால் அலங்கரித்து, மலர் பல்லக்கில் ஏற்றி முறைப்படி அடக்கம் செய்தனர். அந்த ஆத்மாக்கள் விண்ணுலகம் சென்றன. அங்கிருந்தவர்கள் எமதூதர்களை அழைத்து, தாசியை சொர்க்கத்துக்கும், சந்நியாசியை நரகத்துக்கும் அனுப்பக்கூறினர். சந்நியாசி கதறினார். பாவிக்கு சொர்க்கம், எனக்கு நரகமா? என்றார். துறவியே! அவள் உடலால் தவறு செய்தாள். மனதால் இறைவனைப் பிரார்த்தித்தாள். அதனால் அவளது உடல் பூலோகத்தில் மிருகங்களுக்கு இரையானது. நீர் பூலோகத்தில் உடலால் தவறு செய்யாததால், உம் உடலுக்கு அங்கே மரியாதை கிடைத்தது. ஆனால், மனதால் தாசியின் பாவச் செயலை மட்டுமே சிந்தித்தீர். அதனால், இறைவழிபாட்டில் முழுமையாகக் கவனம் செலுத்தவில்லை. எனவே உமக்கு நரகம், என்றனர். இறைவனுக்கு உடலை விட மனமே முக்கியம் என்பது தெளிவாகிறதல்லவா!
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 221948
Total likes: 27453
Total likes: 27453
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ பக்தி கதைகள் ~
«
Reply #19 on:
February 20, 2013, 09:16:38 AM »
பெரியவங்க சொன்னா பெருமாளே சொன்ன மாதிரி!
ஒரு ஆட்டுக்குட்டிக்கு கீரை என்றால் ரொம்ப உயிர். விதவிதமான கீரைகளை தோட்டங்களுக்குள் புகுந்து சாப்பிடும். அந்த ஊரில் உள்ளவர்களில் பெரும்பாலோனோர் தர்மவான்கள் என்பதால் ஆடு தானே! தின்று விட்டுப் போகிறது என்று விட்டு விடுவார்கள். ஒருநாள், அது மேயப்போன போது எல்லா தோட்டங்களிலும் இருந்த கீரையைப் பறித்து விட்டனர். அது தாய் ஆடுடன் அலைந்து திரிந்தது. ஒரே ஒரு தோட்டத்தில் உயர்ரக கீரை ஒன்றை பயிரிட்டு, வேலியிட்டு மறைத்திருந்தனர். அதன் உரிமையாளர் மகாகஞ்சப்பிரபு, கொடூரனும் கூட. ஆடுகள் தன் தோட்டத்துக்குள் புகுந்து விட்டால், அவற்றை கறியாக்கி சமைத்து விடுவான். குட்டி ஆடு அந்த தோட்டத்துக்குள் புக முயன்றது. தாய் ஆடு அதைத் தடுத்தது. மகளே! உள்ளே செல்ல முயற்சிக்காதே! இந்தத் தோட்டக்காரன் மற்றவர்களைப் போல் அல்ல! நம் மூத்தோர் பலர், இவனிடம் சிக்கி கறியாகி விட்டார்கள்.
நல்லவர்கள் இருக்கும் இடத்திற்கு நாம் செல்லலாம். அவர்களுக்கும் அந்தப் பொருள் அவசியம் என்றாலும், இயற்கையாகவே ஊறும் இரக்க குணத்தின் காரணமாக நம்மை விட்டு விடுவார்கள். சிலர் குச்சியால் நம்மை இரண்டு தட்டு தட்டி விரட்டி விடுவார்கள். இவனோ, கொடூரன். கொன்று விடுவான், என்றது. குட்டி ஆடு தாய் சொல் கேளாமல், வேலி தாண்டி உள்ளே புகுந்தது. ஆசை ஆசையாய் கீரையை உண்டது. தோட்டக்காரன் பார்த்து விட்டான். அரிவாளுடன் விரட்டினான். நான்கு பக்கமும் அவனது பணியாட்கள் சூழ்ந் தனர். தப்ப முடியாத ஆடு, அன்றிரவு அவர்களின் உணவானது. ஆசைக்கு எல்லை வேண்டும். நல்லவர்கள் துணையை மட்டுமே நாட வேண்டும். பெரியவர்கள் சொல் பெருமாள் சொல் என்ற அனுபவ சுலவடையை இனியாவது ஏற்று நடந்து கொள்ளுங்கள். இல்லாவிட்டால் ஆபத்தில் சிக்க வேண்டியிருக்கும். புரிகிறதா!
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 221948
Total likes: 27453
Total likes: 27453
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ பக்தி கதைகள் ~
«
Reply #20 on:
February 20, 2013, 09:18:26 AM »
யார் இந்த முருகன்!
பிரம்மாவின் புத்திரரான சனத்குமாரர் எவ்வித ஆசையும் இல்லாதவர். மகாஞானி. அவர் ஆசையே இல்லாதாவரா என்பதை சோதித்தறிய பார்வதிஆசைப்பட்டாள். சிவனும் ஒப்புக்கொண்டார். அவர்கள் சனத்குமாரர் முன் தோன்றினர். சனத்குமாரர் அவர்களைக் கண்டுகொள்ளவே இல்லை. நான் ஒன்றும் இவர்களை நினைத்து தவமிருக்கவில்லையே! எதற்காக இங்கே வந்தார்கள் என்று எண்ணியவர், அவர்களிடம் பேசக்கூட இல்லை. அவரிடம் கோபத்துடன் பேச்சைத் தொடங்குவது போல் நடித்தார் சிவன். ஏ சனத்குமாரா! நீ மகாஞானியாக இருக்கலாம். அதற்காக, லோகமாதா பிதாக்களான எங்களையே அவமதிக்கும் அளவு உனக்கு கர்வமா? வந்தவர்களை வாருங்கள் என்று அழைத்து உபசரிக்கும் பண்பு கூட உன்னிடம் இல்லையே! சனத்குமாரர் எதற்கும் அஞ்சாதவர். அருமையாகப் பதிலளித்தார். உலகில் எல்லாரையுமே கடவுளாகப் பார்ப்பவன் நான். நீங்களும் அதில் ஒருவர்.
உம்மைக்கண்டு என் உடல் வேண்டுமானால் அச்சப்படலாம். ஆனால், ஆத்மா நடுங்காது, என்றார். சரி...போகட்டும், ஏதாவது வரம் கேள், தந்து விட்டு போகிறேன், என்றார் சிவன். இதற்கும் சனத்குமாரர் அஞ்சாமல் பதிலளித்தார். எனக்கு எந்த வரமும் தேவையில்லை. வேண்டுமானால், என்னிடம் நீர் ஒரு வரம் கேளும். உமக்கு வேண்டுமானால், நான் தருகிறேன்,. அப்படியா! நீ என் பிள்ளையாகப் பிறக்க வேண்டும்,. அவ்வளவுதானே! ஆனால், வரம் கேட்ட நீர் மட்டுமே என்னைப் பெற வேண்டும். இதோ! உன் அருகில் நிற்கும் இந்தத்தாய் என்னிடம் ஏதும் கேட்கவில்லை. ஒருவர் கேட்காமல் ஒன்றைக் கொடுக்கக்கூடாது என்கிறது சாஸ்திரம். எனவே, தாயின் சம்பந்தமில்லாமல் நான் பிறக்க வேண்டும்,. இதுகேட்ட பார்வதி பதறினாள். சனத்குமாரா! இது நியாயமல்ல. என் கணவர் ஒன்றைக் கேட்கிறார் என்றால், அது என்னையும் உத்தேசித்து தான். கணவருக்குள் மனைவி அடக்கம் என்பதை அறிவாய் அல்லவா? ஒப்புக்கொள்கிறேன்... அதற்காக நான் நேரடியாக உன் வயிற்றில் பிறக்கமாட்டேன்.
ஒரு காலத்தில் பஸ்மாசுரனுக்கு சிவன் ஒரு வரம் கொடுத்தார். அதன்படி, அவன் யார் தலையில் கை வைக்கிறானோ, அவன் பஸ்பமாகி விடுவான். அவன் சிவனையே சோதிக்க வந்தான். அவர் மறைந்து விட்டார். அந்தக்கவலையில், நீ தண்ணீராய் உருகிப்போனாய். அதுவே சரவணப்பொய்கை. அதற்குள் உன் கணவர் என்னைக் கிடத்தட்டும். அப்படியானால், உன் ஸ்பரிசமும் எனக்கு கிடைத்தது போல் ஆகிவிடும். சரிதானே! என்றார். பார்வதி சம்மதித்தாள். இருவரும் மறைந்தனர். இதுபற்றி தந்தை பிரம்மாவிடம் கேட்டார் சனத்குமாரர். குமாரா! நீ முற்பிறப்பில், தேவர்களை அசுரர்கள் கொடுமைப்படுத்துவது குறித்து வேதங்களில் இருந்து தெரிந்து கொண்டாய். அப்போதெல்லாம், அந்த அசுரர்களை அழித்து விடமாட்டோமா என மனம் கொதிப்பாய். அதன்படி, இப்போது பத்மாசுரனையும் அவனைச் சார்ந்தவர்களையும் அழிக்க சிவன் உன்னைப் பயன்படுத்தப் போகிறார். எதை நினைக்கிறோமோ அதுவாகவே நாம் மாறுகிறோம் என்ற தத்துவத்தைப் புரிந்து கொள், என்றார். இந்த சனத்குமாரரே சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து, தாயின் சம்பந்தமில்லாமல் பிறந்தார். கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டார். சூரபத்மனைக் கொன்றார். உடை மீது கூட ஆசை இல்லாமல், பழநியில் கோவணத்துடன் அருள்செய்கிறார். இந்தக்கதை திரிபுரா ரகஸ்யம் என்ற கிரந்த நூலில் உள்ளது.
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 221948
Total likes: 27453
Total likes: 27453
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ பக்தி கதைகள் ~
«
Reply #21 on:
February 20, 2013, 09:20:21 AM »
பெண்கள் நமது கண்கள்!
பெண்கள் நாட்டின் கண்கள். பெண்களை இம்சை செய்யும் எந்த வீடும், நாடும் உருப்படாது. புராணகாலத்திலேயே இப்படி ஒரு சம்பவம் நடந்தது. திதி என்பவள், சிவபார்வதியை வணங்கி வந்தாள். அவள் ஒரு பேரழகி. பூலோகம் வந்த இந்திரன் அவளைக்கண்டான். அழகிகளைக் கண்டால் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவது அவன் இயல்பு. திதி பேரழகுப் பெட்டகம் அல்லவா! இந்திரன் கண்ணில் அவள் பட்டுவிட்டாள். அவளை தன்னுடன் தேவலோகம் வரும்படி அழைத்தான். அங்கே பல வசதிகள் இருப்பதாகச் சொல்லி ஆசை காட்டினான். திதிக்கு அவனுடன் செல்ல விருப்பமில்லை. இந்திரா! ஒரு பெண்ணுக்கு வசதிவாய்ப்பை விட, அவள் மனதுக்குப் பிடித்த கணவனே வேண்டும். நீ என் அழகுக்காக ஆசைப்படுகிறாய். இந்த அழகு உனக்கு சலித்துவிட்டால், நீ இன்னொரு பெண்ணைத் தேடிப் போய்விடுவாய். கடைசிவரை மனைவியை கண்கலங்காமல் பார்த்துக் கொள்ளும் நல்லவர்கள் எத்தனையோ பேர் இந்த பூமியில் உள்ளனர்.
அவர்களில் ஒருவரை என் கணவனாக அடைவதையே நான் விரும்புகிறேன். நீ போய் விடு, என்றாள். இந்திரன் மீண்டும் வற்புறுத்த அவர்களுக்குள் வாதம் வலுத்தது. கோபத்தில், அவளை தனது வஜ்ராயுதத்தால் ஏழு துண்டுகளாக வெட்டினான். ஆத்திரம் அடங்காததால், அந்த துண்டுகள் ஒவ்வொன்றையும் ஏழாக வெட்டினான். ஆக, 49 துண்டுகள் பூமியில் கிடந்தன. தன் பக்தை வெட்டப்பட்டது கண்டு பார்வதிதேவி துடித்துப் போனாள். சிவனிடம், அன்பரே! இது என்ன கொடுமை! ஒரு பெண், ஒருவனுடைய ஆசையை நிறைவேற்றாமல் போனால், இப்படியா செய்வது! அதிலும், இந்திரனுக்கு மேகங்களின் தலைவன் என்ற பதவியைக் கொடுத்துள்ளீர்கள். இவன் பெய்விக்கும் மழைத்தண்ணீரைக் குடிப்பவர்களுக்கும் இதே குணம் தானே வரும்! நீங்கள் அவனுக்குப் பாடம் கற்பிக்கும் வகையில், அந்தப் பெண் ணுக்கு மீண்டும் உயிரூட்டுங்கள், என்றார். சிவன் பார்வதியிடம்,அவள் விதி முடிந்து விட்டது. எனவே, உயிர் கொடுப்பது இயலாது. ஆனால், ஒன்று மட்டும் உறுதி.
பெண்களை இம்சை செய்பவர்கள் அதற்கான பலனை அனுபவித்தே தீருவார்கள். இந்திரனால் வெட்டப்பட்ட 49 துண்டுகளும் 49 இளைஞர்களாக எழும். அவர்களுக்கு ஒருவன் தலைவனாக இருப்பான். அவர்களுக்கு தனித்தனி பெயர் இருக்காது. அவர்களை மாருதர் என்று உலகத்தார் அழைப்பார்கள். பதவி இருப்பதால் தானே இந்திரன் அட்டகாசம் செய்கிறான்! அவனது பதவியை அவர்கள் பறித்து விடுவார்கள், என்றார். அதன்படியே மாருதர் எனப்பட்ட அந்த இளைஞர்கள் பிறந்தார்கள். அனைவரும் பலசாலிகளாக இருந்தனர். மேகக்கூட்டத்தை எங்கே கண்டாலும் அவர்கள் பூமியிலிருந்தே ஊதி, சின்னாபின்னபடுத்தினார்கள். இந்திரன் ஆத்திரம் கொண்டு அவர்களுடன் போருக்கு வந்தான். அவனைத் தோற்கடித்து, மழை பெய்யும் அதிகாரத்தை தங்கள் கையில் வைத்துக் கொண்டார்கள். பதவி இழந்த இந்திரன் கண்டுகொள்வார் யாருமின்றி போனான்.
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 221948
Total likes: 27453
Total likes: 27453
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ பக்தி கதைகள் ~
«
Reply #22 on:
February 20, 2013, 09:22:08 AM »
குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்க!
அன்று வெள்ளிக் கிழமை. சாலம்மாள் கை கால் முகங்களை அலம்பி வெண்ணீறும், குங்குமமும் தரித்துக் கொண்டாள். சிறு பிரம்புக்கூடையில் பழம், தேங்காய், வெற்றிலைப்பாக்கு, சூடம், ஊதுவத்தி, நெய் இவற்றை எடுத்துக் கொண்டாள். தன் மகள் மணிமொழியை அழைத்துக் கொண்டு முருகன்கோயிலுக்குப் புறப்பட்டாள். அவ்வாறு செல்லும் போது கந்தரநுபூதி என்ற மந்திரநூலைப் பாராயணம் செய்து கொண்டே இடப்புறம் ஓரமாக நடந்தாள். மணிமொழி வேடிக்கை பார்த்துக் கொண்டே நடந்தாள். சாலம்மா கோயிலில் விளக்கில் நெய்விட்டு ஆலயத்தை வலம் வந்தாள். முருகனின் கருணையை எண்ணி உள்ளம் உருகினாள். பிரகாரத்தில் உள்ள ஏழைகளுக்குச் சில்லறைக் காசுகளை கொடுத்தாள். தெய்வமே! இவர்களின் துயரம் போக அருள்செய், என்று வேண்டிக் கொண்டாள்.
சந்நிதியில் முருகனுக்கு அபிஷேகமாகி அலங்காரம் செய்து கொண்டிருந்தார்கள். சாலம்மா மகளுடன் அமர்ந்து முருகனின் சடாக்ஷர மந்திரத்தை ஓதினாள். மணிமொழி,அம்மா! நேரமாகிறது. சுவாமி கும்பிட்டு விட்டு வீட்டுக்குப் போகலாம். வா, என்றாள். சாலம்மா, மகளே! ஒரு பெரிய மனிதரையே காலமல்லாத காலத்தில் பார்ப்பது நல்லதல்ல; உரிய காலத்தில்தான் பார்க்க வேண்டும். வீட்டில் தான் இருபத்து நான்கு மணிநேரமும் அடைபட்டுக் கிடக்கிறோம். கோயிலில் சிறிது நேரம் இருந்தால் நல்லது தானே! சமயம் பார்த்துத் தான் கடவுளை வணங்க வேண்டும். இப்போது சுவாமிக்கு அலங்கார சமயம். இது தரிசனத்திற்கு ஏற்ற நேரம் அன்று; அலங்காரம் முடிந்தவுடன் ஆராதனை நிகழும், என்றாள். தொடர்ந்து அவளிடம், ஒவ்வொரு ஆராதனைக்கும் ஒவ்வொரு காரணம் உண்டு.
இறைவன் அகரம் முதலாக க்ஷகரம் முடிவாக 51 அட்சரங்களின் வடிவமாக விளங்குகிறான். அதனால் அடுக்காலத்தி என்ற அக்ஷர தீபத்தைக் காட்டுகிறார்கள். 27 நட்சத்திர வடிவமாக இறைவன் விளங்குகிறான் என்பதை உணர்த்தும் பொருட்டு நட்சத்திர தீபம்காட்டுவர். ஐந்து மந்திர வடிவமாக விளங்குகிறான் என்பதை அறிவிக்க ஐந்து தட்டு தீபத்தைக் காட்டுவர். கட்டை துணி இவற்றைக் கொளுத்தினால் முடிவில் கரி சாம்பல் நிற்கும். கற்பூரத்தைக் கொளுத்தினால் சாம்பல் நிற்பதில்லை. சூடம் தீயில் கரைந்து மறைந்து விடுகிறது. ஜீவன் சிவத்தில் ஒன்றுபட வேண்டும் என்ற உண்மையை நாம் உணரும் பொருட்டுக் கற்பூர தீபம் காட்டுவார்கள். கோயிலில் தரிசனம் செய்பவர்கள் இந்த உண்மைகளை அறிந்து வழிபாடு செய்தல் வேண்டும், என்று மணிமொழிக்கு எடுத்துச் சொன்னாள். அதற்குள் கோயில் கண்டாமணி முழங்கியது. சாலம்மாளும், மணிமொழியும் முருகனைத் தரிசித்து மகிழ்ந்தனர். மணிமொழி தாயார் கூறிய அறிவுரைகளை கேட்டு அகம் மகிழ்ந்தாள். குழந்தைகளை அடிக்கடி கோயிலுக்கு அழைத்துச் செல்லவேண்டும். விதிமுறைப்படி, இறைவனை வணங்குவது குறித்து அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 221948
Total likes: 27453
Total likes: 27453
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ பக்தி கதைகள் ~
«
Reply #23 on:
February 20, 2013, 09:24:26 AM »
நன்மை செய்தால் நன்மை மட்டுமே கிடைக்கும்!
மகாபாரத்தில் கூறப்பட்ட ஓர் அழகான கதை இது. கவுதமன் என்பவன் நற்குலத்தில் தோன்றியவன். ஆனால் அவனுக்கு நண்பர்கள் சேர்க்கை சரியில்லை. எனவே அவனிடம் நல்ல குணம் என்பதே கிடையாது. ஆனால் அவனது காலத்தில் ராஜதர்மன் என்ற ஒரு கொக்கு வாழ்ந்து வந்தது. தேவர்களும் போற்றும் நற்குணங்கள் நிறைந்து, பறவைக் குலத்தையே பெருமைப்படுத்திய கொக்கு அது. அதே சமகாலத்தில் விரூபாட்சன் என்ற ஓர் அரக்கனும் வாழ்ந்து வந்தான். அவன் பிறந்ததோ அரக்கர் குலம், ஆனால் அவனை அவனது உயர்ந்த நற்குணங்களுக்காக வானவர்களும் கொண்டாடினார்கள்.
கவுதமன் வடிகட்டின சோம்பேறி, பிறரது உழைப்பில் வாழ்வதைத் தனது தர்மம் போல் கொண்டிருந்தான். தந்தை பெரிய பண்டிதர். அவர் கடின உழைப்பின் பேரில் சம்பாதித்த பணத்தில் உலகின் எல்லா சுகங்களையும் சந்தோஷமாக அனுபவித்தான். கணவனை இழந்த ஒரு பெண்ணின் மேல் அவனுக்கு மையல் வந்தது. அவளுடன் வாழ்க்கை நடத்தலானான். தந்தையான அந்தப் பண்டிதர். இவனது அட்டகாசங்கள் தாங்காமல், துயரவசப்பட்டு அந்தத் துயரக் கடலிலேயே மூழ்கி ஒருநாள் இறந்துவிட்டார். தந்தை உழைப்பில் சொகுசாக வாழ்ந்துவந்த கவுதமனுக்கு, இப்போது சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. வேட்டையாடிப் பிழைக்கலானான். உயர்ந்த குலத்தில் பிறந்த அவன் உயிர்க் கொலை பாவம் என்பதைப் பொருட்படுத்தவில்லை. உயிர்களைக் கொல்வது அவனுக்கு ஒரு விளையாட்டுப் போல் இருந்தது.
வெளியூரில் இருந்து அவன் தந்தையின் நண்பர் ஒருநாள் அந்த ஊருக்கு வந்தார். கவுதமனின் செயல்களைக் கண்டார். அவர் அடைந்த வருத்தத்திற்கு அளவே இல்லை. எப்பேர்பட்ட தந்தையின் மகன் அப்பா நீ? உயிர்க்கொலை செய்யலாமா? ஏதாவது வியாபாரம் செய்து பிழைக்கப் பார்! என்று அவர் அன்போடு அறிவுறுத்தி விட்டுச் சென்றார். பூர்வ ஜன்ம நல்வினை காரணமாகவோ என்னவோ கவுதமன் மனம் அந்த அறிவுரை பற்றிச் சிந்தித்தது. சரி, உயிர்க்கொலையை விட்டுவிடுவோம் என்று முடிவு செய்தான் வியாபாரம் பழக வேண்டுமானால் முதலில் ஏதாவது வியாபாரிகளின் கூட்டத்தோடு இணைந்து தொழில் கற்றுக் கொள்ள வேண்டுமே? அந்த ஊருக்குத் தற்செயலாக வியாபாரிகளின் குழு ஒன்று வந்தது. அவர்கள் காட்டு வழியாக வேறெங்கோ சென்று கொண்டிருந்தார்கள். அவன் அவர்களிடம் அனுமதி பெற்று அவர்களுடனேயே நடக்கலானான்.
என்ன துரதிர்ஷ்டம்! கானகத்தில் மதம் பிடித்த யானைக் கூட்டம் அவர்களைத் துரத்தித் தாக்கியது. உயிர் பிழைத்தால் போதும் என்று எல்லோரும் ஓடினார்கள். கவுதமன் ஒரு மரத்தின் மேல் ஏறி நடுநடுங்கியவாறு இரவைக் கழித்தான். பொழுது விடிந்ததும் பார்த்தான், யானைக் கூட்டம் எங்கோ சென்றுவிட்டிருந்தது. வணிகர்கள் பலரும் காட்டு யானைகள் தாக்கியதால் உயிர் விட்டிருந்தார்கள். கவுதமனுக்கு உயிர் என்பது என்ன, வாழ்க்கை என்பது என்ன என்பன போன்ற கேள்விகள் மனத்தில் எழத்தொடங்கின. அவன் மெல்ல நடந்து பக்கத்தில் அதிக அபாயம் இல்லாத நந்தவனம் போன்ற ஒரு காட்டுக்கு வந்து சேர்ந்தான். மரங்களில் பழுத்திருந்த கனிகளைப் பறித்து உண்டான். எங்காவது இளைப்பாற வேண்டும் எனத் தேடியபோது பிராமாண்டமான ஓர் ஆலமரம் தென்பட்டது. பறவைகளுக்கெல்லாம் அடைக்கலம் தரும் அந்த ஆலமர நிழல் தனக்கும் அடைக்கலம் தரட்டும் என்று எண்ணியவனாய் அதன் நிழலில் காலோய்ந்து படுத்து மெல்லக் கண்ணயர்ந்தான்.
சற்று நேரம் கழித்துக் கண்விழித்துப் பார்த்தபோது ஒரு பெரிய கொக்கு அவன் அருகில் அமைதியாக உட்கார்ந்திருந்தது. அது தன் மாபெரும் சிறகுகளால் அவனுக்குக் காற்று வரும்படி விசிறிக் கொண்டிருந்தது! பறவையின் செயலைப் பார்த்து ஆச்சரியம் அடைந்த கவுதமன், யார் நீ? என்று அந்தக் கொக்கிடம் விசாரித்தான். அவனைப் பரிவோடு பார்த்தது கொக்கு. ஐயா! என் பெயர் ராஜசிம்மா, இது நான் வசிக்கும் ஆலமரம், இந்த மரம் தான் என் வீடு. இதில் நான் கூடு கட்டிக் கொண்டு பல ஆண்டுகளாக வாழ்கிறேன். இந்த மர நிழலை நீங்கள் இளைப்பாறத் தேர்ந்தெடுத்தது என் பாக்கியம். இப்போது நீங்கள் என் வீட்டுக்கு வந்த விருந்தாளி ஆகிறீர்கள். விருந்தினரை மனம் கோணாமல் உபசரிக்க வேண்டியது தர்மமல்லவா? காற்றில்லாமல் உங்கள் நெற்றி முத்து முத்தாய் வியர்ப்பதை மேலிருந்து பார்த்தேன். அதுதான் கீழே இறங்கி வந்து சிறகுகளைக் கொண்டு உங்களுக்கு விசிறிக் கொண்டிருக்கிறேன். தங்கள் பெயர் என்னவோ? தாங்கள் எதன் பொருட்டாக இங்கு வந்திருக்கிறீர்கள்? என்று அன்புடன் கேட்டது.
ஒரு கொக்கு மிகுந்த பண்போடு மதுரமாகப் பேசுவது கவுதமனை ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியது பறவைக் குலத்தைச் சேர்ந்த ராஜசிம்மா! என் பெயர் கவுதமன், நான் வறுமையால் வாடுகிறேன். பணமில்லாத கஷ்டம் என்னை வதைக்கிறது.எப்படியாவது கொஞ்சம் பணம் கிடைக்காதா என்று தான் எல்லா இடங்களிலும் அலைந்து கொண்டிருக்கிறேன். நான் இந்தக் கானகத்திற்கு வந்ததும் பணத்øத் தேடித்தான்! என்று பரிதாபமாக பதிலுரைத்தான். கொக்கு சற்று நேரம் யோசனையில் ஆழ்ந்தது. பிறகு எதையோ கண்டுபிடித்தது போல் மலர்ச்சியுடன் சிரித்தது. பின் கவுதமனிடம், கவுதமரே! நீங்கள் என் விருந்தினர் மட்டுமல்ல. இப்போது என் நண்பரும் ஆகிவிட்டீர். உங்களுக்கு எல்லா வகையிலும் உதவ வேண்டியது என் கடமை. உங்கள் வறுமையை என்னால் போக்க முடியும். எனது மிக நெருங்கிய நண்பர் ஒருவர் இருக்கிறார். விரூபாட்சன் என்பது அவர் பெயர். அரக்கர் குலத்தைச் சேர்ந்தவர். நற்பண்புகளின் மொத்த வடிவம் அவர். நாளை காலை புறப்பட்டு அவரிடம் செல்லுங்கள். என் நண்பர் நீங்கள் என்று சொல்லுங்கள். உங்களுக்குத் தேவையான செல்வத்தை அவர் தந்து உங்களை வழியனுப்புவார் என்றது.
கவுதமன் மிக்க மகிழ்ச்சி அடைந்தான். அரக்கன் விரூபாட்சனின் இருப்பிடம் எங்கே இருக்கிறது எனக் கேட்டறிந்து அப்போதே புறப்பட்டுச் சென்று அரக்கனைச் சந்தித்தான். தன் நண்பனும் பறவையுமான கொக்கினால் அனுப்பப்பட்டவன் கவுதமன் என்றறிந்ததும் விரூபாட்சன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை, பொன்னும் மணியும் வாரிவாரிக் கொடுத்தான். அத்தனை செல்வத்தையும் தூக்க முடியாமல் தூக்கிச் சுமந்துகொண்டு திரும்பி வரும் வழியில் மீண்டும் ராஜசிம்மக் கொக்கைச் சந்தித்தான். கவுதமன் அவன் கொக்கு இருந்த இடத்திற்கு வருவதற்குள் இரவு தொடங்கிவிட்டது. கொக்கு அவனை அன்போடு வரவேற்றது. அவனுக்குச் செல்வம் கிடைத்தது பற்றி மகிழ்ச்சி தெரிவித்தது. அன்றிரவு அவன் படுக்க மரத்திலிருந்து இலை தழைகளைப் பறித்து வந்து சுகமான படுக்கை தயாரித்தது. இன்றிரவு இங்கேயே உறங்கிவிட்டு நாளை புறப்படுங்கள்! என்று வேண்டிக்கொண்டது. கவுதமனை விலங்குகள் தாக்காமல் இருக்கச் சற்று தூரத்தில் நெருப்பு மூட்டியது. பின்னர் உறங்கும் கவுதமனின் அருகேயே தானும் படுத்து உறங்கத் தொடங்கியது. சிறிது நேரத்தில் உறக்கம் கலைந்து எழுந்தான் கவுதமன். அருகே வெள்ளை வெளேர் என்று மாமிசக் கொழுப்புடன் சலனமற்று உறங்கும் அந்தப் பெரிய கொக்கைச் சற்று உற்று பார்த்தான். நாம் நம் ஊரை அடைய இன்னும் வெகுதூரம் நடந்து செல்ல வேண்டும். நாளைய சாப்பாட்டுக்கு என்ன செய்வது? அவனுடைய பழைய கிராதக மனம் விழித்துக் கொண்டது. உம்.. வேட்டையாடு, வேட்டையாடி வாழ்ந்தவன்தானே நீ? என்று அது அவனை உசுப்பிவிட்டது. தீயசக்திகளின் கட்டளைக்குப் பணிந்தவன்போல் அவன் திடீரென்று எழுந்தான். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த கொக்கை அள்ளி எடுத்தான். சடாரென அதை நெருப்பில் போட்டு அதன் மாமிசத்தை உரித்து எடுத்து மறுநாள் சாப்பாட்டுக்கு வைத்துக் கொண்டு, அதிகாலையில் அந்த இடத்தை விட்டுப் புறப்பட்டு வேகவேகமாக நடக்கலானான். இதை தேவலோகத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த தேவேந்திரன் திகைப்பில் ஆழ்ந்தார். இப்படிக் கூட மனிதர்கள் நடந்துகொள்ள முடியுமா என்றெண்ணி அவர் விழிகள் கண்ணீர் உகுத்தன.
நாள்தோறும் ராஜசிம்மக் கொக்கு ஒருமுறையேனும் பறந்து சென்று தன் அரக்க நண்பனான விரூபாட்சனோடு உரையாடி விட்டு வருவது வழக்கம். என்ன இது? ஓரிரு நாட்களாக கொக்கைக் காணோமே? அதுவும் கொக்கு என்னிடம் அனுப்பிய மனிதனான கவுதமன் அவ்வளவு நல்லவனாகத் தெரியவில்லை. கொக்கின் மனம் அதன் உடல்போல் வெளுத்தது. அது எல்லோரையுமே நல்லவர்களாக நினைக்கிறது. இந்த கவுதமன் அதைக் கொல்லாமல் இருக்க வேண்டுமே? என்று வேதனைப்பட்ட விரூபாட்சன் தன் படைவீரர்களை அனுப்பி கொக்கு குறித்து அறிந்துவரச் சொன்னான். கொக்கின் பிய்ந்த இறக்கைகளைத்தான் அவர்கள் கொண்டு வந்தார்கள். தன் நண்பன் கொக்கின் இறக்கைகளைக் கண்ட அரக்கனின் கண்களில் கண்ணீர் வழிந்தது. எங்கே அந்த கவுதமன்? பிடித்து வாருங்கள் அவனை! என்று கர்ஜித்தான். கவுதமன் உடனடியாகக் கண்டு பிடிக்கப்பட்டு இழுத்து வரப்பட்டான். இவனை வெட்டி அந்த மாமிசத்தøச் சமைத்துச் சாப்பிடுங்கள்! என்று உறுமினான் அரக்கன். அரசே! அவன் உடலை வெட்டுகிறோம். ஆனால் நன்றி கொன்றவனின் மாமிசத்தைச் சாப்பிடும் அளவு நாங்கள் கேவலமானவர்கள் அல்ல! என்ற அரக்கர்கள் அவன் உடலை வெட்டினார்கள். காட்டு விலங்குகளிடம் அந்த உடல் எறியப்பட்டது.
இந்த நன்றி கொன்றவனின் மாமிசத்தை நாங்கள் தொடக் கூட மாட்டோம்! என்று விலங்குகள் அனைத்தும் விலகிச் சென்றன. தன் கொக்கு நண்பனான ராஜசிம்மனின் எஞ்சிய உடலை சந்தனச் சிதையில் வைத்துக் கண்ணீர் மல்க எரிக்க முற்பட்டான் விரூபாட்சன். அப்போது அங்கே தேவேந்திரன் தோன்றினார். விருந்தோம்பலில் சிறந்த இந்த அற்புதமான பறவையை நான் மீண்டும் உயிர்ப்பிக்கிறேன்! என்று கூறி, அதற்கு உயிர் கொடுத்தார். என்ன ஆச்சரியம்! மறுகணம் எரியூட்டப்படவிருந்த சந்தனச் சிதையிலிருந்து ராஜசிம்மக் கொக்கு சிறகுகளைச் சிலிர்த்துக் கொண்டு எழுந்து நின்றது! விரூபாட்சன் ஓடோடிச் சென்று அதைக் கட்டி அணைத்துக் கொண்டு அதன் சிறகுகளைக் கோதி விட்டான். நடந்தது அனைத்தையும் கேட்டறிந்தது, கொக்கு. தேவேந்திரன், நட்பைப் போற்றும் என் அன்புப் பறவையே! உனக்கு ஒரே ஒரு வரம் தர விரும்புகிறேன்! நீ வேண்டியதைக் கேட்டுப் பெற்றுக் கொள். செல்வமா? நீண்ட ஆயுளா? இன்னும் அழகிய உடலா? இனிமையான குரலா? சொல். உனக்கு வேண்டிய ஏதாவது ஒரே ஒரு வரத்தை மட்டும் கேள்! என்று பரிவோடு சொன்னார்.
தேவேந்திரனைக் கம்பீரமாகப் பார்த்த ராஜசிம்மக் கொக்கு, தேவேந்திரரே! என் விருந்தாளியும் நண்பனுமான மனிதன் கவுதமன் மீண்டும் உயிர் பிழைக்குமாறு தாங்கள் வரம் தரவேண்டும். நான் மறுபடி பிழைத்தது மாதிரி என்னைக் கொன்ற என் விருந்தினனும் பிழைக்க வேண்டும் என்பதே நான் கேட்கும் ஒரே வரம்! என்றது. தேவேந்திரன் கொக்கின் அற்புதமான பண்பைப் பார்த்து ஆச்சரியத்தில் ஆழ்ந்தான். வானுலகத்திலிருந்து எல்லாத் தேவர்களும் கொக்கின் மேல் பூமாரி பொழிந்தார்கள். மீண்டும் உயிர் பெற்று எழுந்த கவுதமன் கொக்கிடம் மன்னிப்பு வேண்டிக் கண்ணீர் உகுத்தபோது, கொக்கு அதன் சிறகுகளால் அவன் கண்ணீரைத் துடைத்து அவனை அணைத்துக் கொண்டது. விரூபாட்சனின் கண்களிலிருந்தும் கண்ணீர் பெருகியது. குணம் பல நேரங்களில் குலத்தால் அமைவதில்லை. குலம் எதுவானால் என்ன? குணத்தால் உயர்ந்தவர்களே உண்மையில் உயர்ந்தவர்கள் என்ற உண்மையை மனித குலம் இந்த நிகழ்ச்சி மூலம் புரிந்துகொண்டது. மனசாந்தி தரும் இந்தக் கதை மகாபாரதம் சாந்தி பருவத்தில் வருகிறது.
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 221948
Total likes: 27453
Total likes: 27453
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ பக்தி கதைகள் ~
«
Reply #24 on:
February 20, 2013, 09:26:14 AM »
பாஞ்சாலியின் பதில்!
நாடு! நகரம், வளம் மிக்க பூமி அனைத்தையும் தனதாக்கிக் கொண்டு, பாண்டவர்களுக்கு ராஜாங்கப் பகுதியாக காண்டவ வனம் எனும் காட்டையே தரச்செய்தான் துரியோதனன் என்பது நமக்குத் தெரியும். ஆனால் பாண்டவர்களோ கிருஷ்ணனின் துணையுடன் காண்டவ வனத்தைத் திருத்தி, தேவலோக சிற்பி விஸ்வகர்மா மற்றும் மயனின் கைவண்ணத்தால் இந்திரப்பிரஸ்தம் எனும் அழகிய நகரை நிர்மாணித்தனர். அதைத் தலைநகராகக் கொண்டு தனது ஆட்சியைத் துவங்கினான் தருமன். மாடமாளிகை, கூடகோபுரங்களோடு, நீரென்றும் நிலமென்றும், நிழலென்றும் நிஜமென்றும் பிரித்தறிய முடியாத காட்சிகள் நிறைந்த மாயாலோகம் அங்கே உருவாகியிருந்தது. பளிங்குத் தரைகள், கண்கவர் சிற்பங்கள், நவரத்தினங்கள் இழைத்த தூண்கள், சுவரெல்லாம் சித்திர வேலைப்பாடுகள், விருந்தினர் மாளிகை, கடை வீதிகள், யாக சாலைகள்.... இப்படி அற்புதங்களைப் படைத்து, இந்திரப்பிரஸ்தத்தை தேவ லோகமாக மாற்றியிருந்தனர் பாண்டவர்கள். தொடர்ந்து, கிருஷ்ணனின் அருளாசியுடன் பிரமாண்டமான ராஜசூய யாகத்துக்கும் ஏற்பாடுகள் செய்த பாண்டவர்கள் மன்னர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்தனர். சகோதரர்களான துரியோதனாதிகளுக்கும் சிறப்பு அழைப்பு விடுத்திருந்தான் தருமன்.
இத்தனைச் செல்வமும் பாண்டவர்களுக்கு எப்படி வந்தது? அதனை எப்படி அழிப்பது? என சிந்தித்தபடியே, பரிவாரத்துடன் அங்கு வந்தான் துரியோதனன். அங்கே, அவனுக்காக ஒதுக்கப்பட்டிருந்த சிறப்பு மாளிகையில் தங்கினான். ஒருநாள் காலையில், மயன் உருவாக்கியிருந்த மாளிகையைக் காணப் புறப்பட்டான் துரியோதனன், அதன் சிறப்பு துரியோதனனை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மாளிகையின் ஓரிடத்தில் தண்ணீர் எனக் கருதி மெதுவாகக் காலை வைத்தான். ஆனால், அது வெறும் தரையாக இருந்தது. மற்றோர் இடத்திலோ, தரையெனக் கருதி அலட்சியமாகக் காலை வைக்க, அது தண்ணீர் நிறைந்த தடாகமாக இருந்தது. இதைச் சற்றும் எதிர்பாராததால், தவறி விழுந்தான் துரியோதனன். எனினும் ஒருவழியாகச் சமாளித்து எழுந்தான். அப்போது உப்பரிகையில் இருந்து சிரிப்பொலி கேட்டது, உயரே நோக்கினான், அங்கே பாண்டவர்களின் மனைவி திரவுபதி நின்றுகொண்டிருந்தாள். அவன் விழுந்ததைப் பார்த்துத்தான் அவள் சிரித்தாள். ஆனாலும் அது தவறென உணர்ந்து சட்டென சிரிப்பை அடக்கிக் கொண்டாள். துரியோதனனோ அதை பெரும் அவமானமாக எடுத்துக் கொண்டான். பாஞ்சாலியை பதிலுக்குப் பதில் அன்றே அவமானப்படுத்த நினைத்தான்.
மறுநாள் யாகம் ஆரம்பமாக இருந்ததால், முந்தைய நாள் விழாவுக்கு வந்த உறவினர்களுக்குச் சிறப்பு விருந்து ஏற்பாடாகி இருந்தது. பாண்டவர்களும் திரவுபதியும் எல்லோரையும் பந்தியில் உபசரித்து உணவு பரிமாறினார்கள். துரியோதனன், துச்சாதனன், கர்ணன், சகுனி முதலானோர் வரிசையாக அமர்ந்திருந்தனர். திரவுபதி பரிமாறிக் கொண்டே துரியோதனன் இலைக்கு அருகில் வந்தாள். அவளை அவமானப்படுத்த எண்ணிய துரியோதனன், ஐவரின் பத்தினியே,,, இன்று யாருடைய முறை? என்று கேட்டான். திரவுபதிக்குத் தூக்கி வாரிப்போட்டது. நாடி நரம்புகளெல்லாம் தளர்ந்தன. அவளால் அந்தக் கேள்வியை ஏற்க முடியவில்லை. செய்வதறியாது, பரிமாறுவதை நிறுத்திவிட்டு உள்ளே ஓடினாள். கண் கலங்கினாள். அதேநேரம் அங்கு தோன்றினார் கிருஷ்ணர். கலங்காதே திரவுபதி! நடந்ததை நானும் கவனித்தேன். எல்லோர் முன்னிலையிலும் உன்னை அவமானப்படுத்தி அழவைக்க நினைத்திருக்கிறான் துரியோதனன். அவனுக்கு பாடம் கற்பிக்கலாம். நான் சொல்வது போல் செய். நீ மீண்டும் உணவு பரிமாறப் போ! துரியோதனன் மீண்டும் உன்னிடம் அதே கேள்வியைக் கேட்டு, ஏன் பதில் கூறவில்லை? என்பான். உடனே நீ தக்ஷகன் முறை என்று சொல். அதன் பிறகு துரியோதனன் அந்த இடத்திலேயே இருக்கமாட்டான் என்றார் பகவான்.
கிருஷ்ணனின் வார்த்தையைத் தட்டமுடியாமல் விருந்து மண்டபத்துக்குச் சென்றாள் திரவுபதி. துரியோதனன் இலை அருகில் அவள் வந்ததும், விஷமத்துடன் அதே கேள்வியை மீண்டும் கேட்டான். எனக்குப் பதில் கூறவில்லையே..... இன்று யாருடைய முறை? கிருஷ்ணன் சொல்லியனுப்பியது போலவே இன்று தக்ஷகன் முறை என்று பளிச்சென பதில் தந்தாள் திரவுபதி. அதைக் கேட்டு விஷ நாகம் தீண்டியது போன்று அதிர்ந்தான் துரியோதனன். சட்டென எழுந்து அங்கிருந்து வெளியேறினான். திரவுபதிக்கு ஆச்சரியம். கண்ணனிடம் ஓடோடி வந்தாள். கண்ணா! இதென்ன மாயம்? யாரந்த தக்ஷகன்? அவன் பெயரைக் கேட்டதும் துரியோதனன் ஏன் இப்படிப் பேயறைந்தாற்போல் பதறி, பயந்து ஓடுகிறான்? என்று கேட்டாள். கண்ணன் அதற்கான காரணத்தையும் கதையையும் சொன்னான். துரியோதனனின் மனைவி பானுமதி மகா பதிவிரதை. கணவனையே தெய்வமாகக் கருதும் உத்தமி. ஆனால் துரியோதனனோ பாண்டவர்களின் ராஜ்ஜியத்தை அடைவதில் குறியாக இருந்தான். மனைவியிடம் அன்புடன் பேசக்கூட அவனுக்கு நேரம் இல்லை. திருமணமாகி மாதங்கள் பல கடந்தும், மணவாழ்க்கையின் பயனை அடையும் பாக்கியம் பானுமதிக்குக் கிட்டவில்லை. அவனது அன்புக்காக ஏங்கினாள். தெய்வங்களை வேண்டினாள். அவள் தவம் பலிக்கும் வேளை வந்தது. ஒருமுறை முனிவர் ஒருவர் பானுமதியின் துயர் நீங்கும் வழி ஒன்றைக் கூறினார். மகிமை மிக்க மூலிகை வேர் ஒன்றை மந்திரித்து அவளிடம் கொடுத்து, அதைப் பாலில் இட்டு கணவனுக்குக் கொடுக்கும்படி கூறினார் முனிவர். பானுமதியும் அதன்படியே பால் காய்ச்சி, அதில் இனிப்பும் இன்சுவையும் சேர்த்து, முனிவர் தந்த வேரையும் அதில் இட்டு, கணவனின் வருகைக்காகக் காத்திருந்தாள். அன்று பவுர்ணமி. இரவின் இரண்டாம் யாமத்தில் அந்தப்புரம் வந்தான் துரியோதனன். அப்போது அவன் மது அருந்தியிருந்தான். பால் அருந்தும் மனோநிலையில் அவன் இல்லை. ஆசையுடன் மனைவி நீட்டிய பால் கிண்ணத்தைப் புறங்கையால் ஒதுக்கினான். கை தவறிய கிண்ணத்தில் இருந்த பால் தரையில் சிந்தியது. அப்போது அங்கே சென்றுகொண்டிருந்த தக்ஷகன் எனும் நாகம் அந்தப் பாலைச் சுவைத்தது.
தக்ஷகன் சர்ப்பங்களின் ராஜன். பாலைப் பருகியதும் அதிலிருந்த வேரின் வசிய சக்தியால், அவனுக்குப் பானுமதி மீது ஆசையும் நேசமும் பிறந்தது. உடனே அவன் அவள் முன் தோன்றித் தன் ஆவலை வெளியிட்டான். தன்னை வருந்தி அழைத்தது அவள்தான் என்றும் வாதாடினான். பதிவிரதையான பானுமதி பதறினாள்; துடிதுடித்தாள். துரியோதனனுக்குத் தன் மனைவியின் உயர்ந்த கற்பு நெறி பற்றி நன்கு தெரியும். தான் அவளது அன்பையும் பிரேமையையும் புரிந்து நடக்காததால் விளைந்த விபரீதத்தை எண்ணித் தவித்தான். தக்ஷகன் கால்களில் விழுந்து தன் மனைவியின் கற்பைக் காக்க வேண்டினான். தக்ஷகன் பாம்பு எனினும் பண்பு மிக்கவன். பாலில் கலந்திருந்த வேரின் சக்தியால் உந்தப் பெற்றதால்தான், அவன் உள்ளம் பானுமதியை விரும்பியது. எனினும், அவளுக்குக் களங்கம் விளைவிக்க அவன் விரும்பவில்லை. அதே நேரம். அவளின் அன்பை இழக்கவும் தயாராக இல்லை. எனவே ஒரு நிபந்தனை விதித்தான். அந்தப்புரத்தில் அமைந்துள்ள அரச விருட்சத்தின் அடியில் உள்ள புற்றுக்கு பவுர்ணமிதோறும் பானுமதியைக் காண வருவேன். பானுமதி புற்றில் பால் ஊற்றி என்னை உபசரித்து, வணங்கி அனுப்ப வேண்டும். அப்போது அவள் கற்புக்குக் களங்கம் இல்லை என்பதற்குச் சாட்சியாக அவளின் கணவனான துரியோதனனும் என்னை வணங்க வேண்டும் என்று கூறிவிட்டு மறைந்தான் தக்ஷகன்.
அன்று முதல் இன்றுவரை பவுர்ணமி தோறும் பாம்புக்குப் பாலூற்றி வருகிறாள் பானுமதி. துரியோதனனும் பயபக்தியோடு பங்குகொள்கிறான். இந்தச் சம்பவம் துரியோதனனுக்கும் பானுமதிக்கும் தக்ஷகனுக்கும் மட்டுமே தெரியும். இதனை வெளியே யாரிடமும் சொல்வதில்லை என்பது அவர்களுக்குள் செய்து கொண்ட ஒப்பந்தம். இதை நீ கூறியதுதான் துரியோதனனின் அதிர்ச்சிக்குக் காரணம் என்றார் கிருஷ்ணர். துரியோதனனால் தனக்கு நேர்ந்த அவமானத்தைத் துடைத்து ஆறுதல் கூறிய கண்ணனுக்கு நன்றி கூறினாள் திரவுபதி.
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 221948
Total likes: 27453
Total likes: 27453
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ பக்தி கதைகள் ~
«
Reply #25 on:
February 20, 2013, 09:28:39 AM »
கிருஷ்ணனுடன் போரிட்ட அர்ஜுனன்!
கிருஷ்ணனும் அர்ஜுனனும் சேர்ந்து கவுரவர்களை எதிர்த்து, குரு÷க்ஷத்திரத்தில் நடத்திய யுத்தம், மகாபாரதம் படித்தவர்களுக்குத் தெரிந்த சம்பவம், ஆனால், அர்ஜுனனை எதிர்த்து கிருஷ்ணன் நடத்திய யுத்தம் பலருக்குத் தெரியாத சம்பவம்! காரணமில்லாமல் கண்ணன் எந்தச் சம்பவத்தையும் நிகழ்த்தத் திருவுள்ளம் கொள்வது இல்லை. இந்தச் சம்பவத்துக்கும் அப்படியொரு வலுவான காரணம் உண்டு.
மகாபாரதத்தின் முற்பகுதியில் நிகழ்ந்த சம்பவம் அது. கவுரவர்களும் பாண்டவர்களும் பாகப்பிரிவினை செய்து கொண்டனர். செழிப்பான பூமியையும், மக்கள் வாழும் பகுதியையும் துரியோதனனுக்குக் கொடுத்துவிட்டு, காட்டுப் பகுதியான காண்டவ வனத்தைப் பாண்டவர்களுக்குப் பிரித்துத் தந்தான் திருதராஷ்டிரன். கிருஷ்ணனின் அனுக்கிரகத்தால், காண்டவ வனத்தை அழகிய இந்திரபிரஸ்தமாக மாற்றினார்கள் பாண்டவர்கள். மேலும் யாகங்களில் தலைசிறந்த ராஜசூய யாகத்தைச் செய்து முடித்து, பாண்டவர்களில் மூத்தவனான தர்மன் நீதி தவறாமல் ஆண்ட காலம் அது. தம்பி பீமனின் தோள் வலிமையும், அர்ஜுனனின் வில் திறனும் அவனுக்கு அரணாக விளங்கியது. அர்ஜுனனையும், அவனது உற்ற நண்பனான கிருஷ்ணனையும், நர நாராயணர் என்றே அனைவரும் அழைத்தனர். அர்ஜுனனின் நண்பனாய், மந்திரியாய், நல்லாசிரியனாய்த் திகழ்ந்தார் கிருஷ்ணன். அதே கிருஷ்ணன்தான் ஒருமுறை அர்ஜுனனையே எதிர்த்துப் போர் புரியும்படி நேர்ந்தது.
ஒருநாள் அதிகாலை நேரம். காலவ முனிவர் என்ற தவ சிரேஷ்டர், ஒரு நதிக் கரையில் நின்று கொண்டு காலை சந்தியாவந்தனமும், நித்திய பூஜையும் செய்து கொண்டிருந்தார். அர்க்கியம் கொடுக்க, கையில் நீரை எடுத்தபோது, ஆகாயத்தில் இருந்து யாரோ உமிழ்ந்த தாம்பூலம், முனிவர் கையில் இருந்த அர்க்கிய நீரில் விழுந்தது. அவர் திடுக்கிட்டு மேலே பார்த்தார். அப்போது, கந்தர்வன் ஒருவன் விண்ணிலே உல்லாசமாகச் சென்று கொண்டிருந்தான். அவன் பெயர் சித்திரசேனன். அவன் சுவைத்து உமிழ்ந்த தாம்பூலம்தான், முனிவர் கரத்தில் இருந்த புனித நீரில் விழுந்தது. நடந்த செயல் அவன் அறியாமல் செய்த பிழையாக இருக்கும் என, ஒரு கணம் பொறுமையுடன் நின்றார் முனிவர். ஆகாயத்தில் சென்றுகொண்டிருந்த சித்திரசேனனோ, தான் உமிழ்ந்த தாம்பூலம் முனிவரின் கரத்தில் விழுந்து களங்கப்படுத்திவிட்டது என்பதை அதே கண நேரத்தில் தெரிந்து கொண்டான். ஆனாலும் அவன் அதைப் பொருட்படுத்தாமல் தெரியாமல் நடந்த தவறுக்கு மன்னிப்புக் கேட்காமல், வேகமாகச் சென்றுவிட்டான். கோபமடைந்த காலவ முனிவர் நேராக கிருஷ்ணனிடம் சென்று தனக்கு கந்தர்வன் இழைத்த தீங்கையும், அதனால் ஏற்பட்ட அபசாரத்தையும் எடுத்துக் கூறினார். முனிவரால் அவனைச் சபித்திருக்க முடியும், இருப்பினும் பகவான் கிருஷ்ணனிடம் முறையிடுவதுதான் சரி எனக் கருதி முறையிட்டார். தவறு நேர்வது இயற்கை ஆனால், தவறு என்று தெரிந்தபின்னும் திருந்தாமல் இருப்பவரைத் தெய்வம் தண்டிக்காமல் விடுவதில்லை. கருணை வடிவானவன்தான் கண்ணன். என்றாலும் தவறுகளைத் திருத்தவேண்டியது தர்ம ஸ்தாபனம் செய்பவனின் கடமையாகி விடுகிறது. அல்லவா?
சித்திரசேனனின் சிரஸை தங்கள் பாதங்களில் சேர்த்து, அவனுக்குத் தண்டனை வழங்குகிறேன் என்று சூளுரைத்தார் கிருஷ்ணன். சித்திர சேனனைப் போரில் சந்திப்பதாக அவனுக்குச் செய்தி அனுப்பியதோடு, போருக்கும் ஆயத்தமானார். தன் இருப்பிடம் வந்த சித்திரசேனன் கண்ணன் தன் மீது போர்த்தொடுத்து வருகிறார் என்பதை அறிந்தான். சிசுபாலனையே அழித்த கிருஷ்ணனின் முன் தான் எம்மாத்திரம்? என்ற பயம் ஒருபுறமும், ஜெயித்துவிட்டால், அழியாப் புகழ் பெற்றுவிடலாமே என்கிற பேராசை மறுபுறமும் அவன் உள்ளத்தின் அடித்தளத்தில் வேரூன்றி நின்றது. அவனுக்கு நேரடியாகக் கண்ணனுடன் போரிடத் துணியவில்லை. செய்தது தவறு என்று ஒப்புக் கொண்டு, முனிவரின் கால்களிலும், கண்ணனின் காலடியிலும் சரணாகதி என்று விழுந்துவிட்டால், அவர்கள் நிச்சயம் மன்னித்துவிடுவார்கள் என்று தெரிந்திருந்தும், ஆணவம் பிடித்த சந்திரசேனன் அதைச் செய்யவில்லை. மாறாக அவனது சூன்யமான மனதில் சூழ்ச்சியே பிறந்தது.
சித்திரசேனன், சிசுபாலனின் நண்பன். அதனால் நண்பன் சிசுபாலனின் மரணத்துக்குக் காரணமான பாண்டவர்களையும் பழிவாங்க வேண்டும். கண்ணனையும் அவமானப்படுத்த வேண்டும் தானும் பிழைக்க வேண்டும் என்று புதிதாக ஒரு சதித் திட்டம் தீட்டினான். அதனை நிறைவேற்ற ஒரு நாடகம் ஆடினான். கண்ணனின் விரல்களாலேயே அவரது கண்ணைக் குத்துவதாக இருந்தது அந்தத் திட்டம். அதாவது, தன் ஆட்சியில் எல்லோரும் இன்புற்று வாழ வேண்டும் என்கிற நல்லெண்ணம் கொண்ட அர்ஜுனனை, தன் எண்ணம் நிறைவேற ஒரு கருவியாகப் பயன்படுத்த நினைத்தான். இதையடுத்து அர்ஜுனனைக் கண்டு, அவன் பாதத்தில் விழுந்து நமஸ்கரித்தான். யாருக்குத் தீங்கிழைத்தானோ அவர் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்காமல், மற்றொருவனையும் தீவினையில் ஆழ்த்த எண்ணி, இவ்வாறு செய்தான் சித்திரசேனன். அர்ஜுனா... பல்குணா... பார்த்திபா..... அபயம்... அபயம்! உயிர்ப் பிச்சை அளியுங்கள் என்று கூறி சரணடைந்தான். எழுந்திருங்கள். சரணாகதி என என் காலில் விழுந்துவிட்டீர்கள். அபயம் அளித்தேன். அதுதான் க்ஷத்திரிய தர்மம். தங்கள் குறை எதுவானாலும் தீர்த்து வைக்கிறேன் என்று உறுதிமொழி கூறினான் அர்ஜுனன்.
மன்னர் மன்னா சத்தியமாக என்னைக் காப்பாற்றுவீர்களா? என்று கேட்டான் கந்தர்வனான சித்திரசேனன். நான் வணங்கும் கண்ணன் மீது ஆணையாகக் கூறுகிறேன் . தங்களுக்கு எந்த ஆபத்து இருப்பினும், என் உயிரைக் கொடுத்தாவது காப்பாற்றுகிறேன் என்றான் பார்த்திபன். அர்ஜுன ராஜனே, என் பெயர் சித்திரசேனன் நான் கந்தர்வராஜன். அறியாமல் நான் செய்த பிழை ஒன்றுக்காக, என் மீது போர் தொடுத்து, என்னை அழிக்க வருகிறான் ஒருவன். தாங்கள் என் பக்கம் நின்று அவனோடு போரிட்டு, அவனை வென்று எனக்கு உயிர்ப்பிச்சை தர வேண்டும் என்று கெஞ்சினான். உன் உயிரைப் போக்க வந்தவன் யார் என்று சொல்? என்றான் அர்ஜுனன். அவன் ஒரு சாதாரண குறுநில மன்னன்தான். தங்களுக்கும் உறவினன்தான். ஆனால் தன்னை யாராலும் வெல்ல முடியாது என்றும், அர்ஜுனன் கூடத் தன்னை எதிர்த்து நிற்க முடியாது என்றும் மார்தட்டுகிறான் என விஷமமாகவும் சூசகமாகவும் கூறினான் சித்திரசேனன். தன்னை எதிர்க்கத் துணிந்திருக்கிறான், தன் வீரத்துக்கு சவால் விட்டிருக்கிறான், தனக்கு பந்துவும்கூட என்று மனதுக்குள் எண்ணிய அர்ஜுனன், அது கவுரவர்களில் ஒருவராகத்தான் இருக்க வேண்டும் என்று தவறாக ஊகித்தான். ஆகவே, விவேகத்துடன் சிந்திக்காமல் உணர்ச்சிவசப்பட்டு, அப்படியா? கவலைப்படாதே! அவனை வென்று, உன் உயிரைக் காப்பாற்றுகிறேன் என உறுதிமொழி கூறினான்.
சித்திரசேனன் சாதுர்யமாகப் பேச்சைத் தொடர்ந்தான். அர்ஜுன ராஜரே.... தங்களை நான் பரிபூரணமாக நம்பலாமா? ஒருவேளை அவனை நீங்கள் சந்தித்ததும் மனம் மாறி.... கந்தர்வன் முடிக்கவில்லை அர்ஜுனன் குமுறினான். என் வீரத்தை மட்டுமல்ல, என் சத்தியத்தையும் நீ சந்தேகிக்கிறாய். அடைக்கலம் என்று வந்தவரை ஆதரிக்காமல் போகமாட்டான் இந்த அர்ஜுனன். உன் எதிரி எவனானாலும் சரி, என் இறுதி மூச்சுவரை போராடி, உன்னை நான் காப்பேன். இப்போதாவது உனக்கு நம்பிக்கையும் தைரியமும் வந்ததா? எங்கிருக்கிறான் உன் பகைவன் என்று சொல்? எனக் கோபாவேசத்துடன் கேட்டான் அர்ஜுனன். மன்னர் மன்னா! என் உயிரைக் கவர என் மீது போர் தொடுத்துப் புறப்பட்டு வருகிறவன் வேறு யாருமல்ல; தங்கள் ஆத்ம பந்து, உற்ற நண்பன் துவாரகா அதிபதி கிருஷ்ணன்தான் என்றான் சித்திரசேனன். அவ்வளவு தான்! அர்ஜுனன் திகிலாலும் பயத்தாலும் ஸ்தம்பித்துவிட்டான். அவன் நாவினின்றும் பேச்சு வரவில்லை. அர்ஜுனரே ... ஏன் அதிர்ச்சி அடைந்தவிட்டீர்கள்? உங்கள் ஆத்ம நண்பனும் வழிகாட்டியும் குருவுமான கிருஷ்ணன் மீது போர் தொடுக்க வேண்டுமே என்ற தயக்கமா? அல்லது கண்ணனை ஜெயிக்கும் அளவுக்கு வீரம் தங்களுக்கு இல்லையே என்ற பயமா? கவலைப்படாதீர்கள்... தங்களால் முடியவில்லை என்றால், இந்த விஷயத்தை அப்படியே விட்டுவிடுங்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியவில்லையே என்று நீங்கள் வருத்தப்பட வேண்டாம். எனக்கு அற்ப ஆயுள் என்று நான் சமாதானப்பட்டுக் கொள்கிறேன் என அங்கலாய்த்தான் சித்திரசேனன்.
கவலை வேண்டாம். நான் சத்தியம் தவறமாட்டேன். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற உயிர் துறக்கவும் தயங்கமாட்டேன். இந்த யுத்தத்தில் நான் மடிந்தாலும். நீ உயிர் பிழைப்பது நிச்சயம். சத்தியம் தவறிய குற்றத்தைச் செய்வதைவிட, நண்பன் மீதே போர் தொடுத்து, உன்னைக் காப்பாற்ற நான் தயார். இதோ புறப்படுகிறேன் என்று சூளுரைத்து, போர்க்கோலம் பூண்டு, யுத்த பூமியில் கிருஷ்ணனைச் சந்திக்கப் புறப்பட்டான் அர்ஜுனன். குழலூதி ஆவினங்களை மேய்க்கும் கண்ணன் கவசம் அணிந்து வாள், வில் ஏந்தி நின்ற போர்கோலம் கண்டு ஆச்சரியத்தால் உறைந்து போனான் அர்ஜுனன். உற்ற நண்பனை, ஆத்மபந்துவை வழிகாட்டியாக விளங்கிய குருவை, தெய்வத்தை எப்படி எதிர்த்துப் போர் புரிவது? அர்ஜுனன் உள்ளத்தில் கலக்கம், குழப்பம், பயம், பீதி! ஆனால், கடமையைச் செய்யும் போதும், சத்தியத்தைக் காக்கும்போதும் பயத்தால் கலங்கக்கூடாது என்று கண்ணனிடம் ஏற்கனவே கேட்டுத் தெரிந்துகொண்டிருந்த அர்ஜுனன் பயத்தையும் தயக்கத்தையும் உதறிவிட்டுப் போருக்குத் தயாரானான். கிருஷ்ணார்ஜுன யுத்தம் ஆரம்பமானது. யுத்தத்தைத் தொடங்கியது கண்ணன்தான். துரோணரிடம் தான் கற்ற வித்தை எல்லாம் தீர்ந்ததுபோல் தவித்தான் அர்ஜுனன். விண்ணிலே அஸ்திரங்கள் மழையாகப் பொழிந்துகொண்டிருந்தன. அவை மோதுகின்ற சப்தங்கள் இடி முழக்கம் செய்தன. பிரளயகாலம் போலவும், ஊழித்தீ பரவுவது போலவும் உலகம் நடுங்கியது.
தருமனும், பீமனும் மற்றவர்களும் கிருஷ்ணனும், அர்ஜுனனும் மோதிக் கொள்வதை அறிந்து கலங்கி, யுத்தக் களத்தை வந்தடைந்தனர். இத்தனைக்கும் காரணமான கந்தர்வன் சித்திரசேனனை ஒரு பூச்சியைப் பிடிப்பது போலப் பிடித்து, களத்திலே கொண்டு வந்து நிறுத்தினான். பீமன். நாரதரும் தேவர்களும் அங்கே வந்து, சித்திரசேனனுக்கு அறிவு புகட்டினர். அவன் ஆணவம் அழிந்தது. அறிவு தெளிந்தது. பரந்தாமன் பாதங்களில் சரணாகதி என விழுந்தான் அவன். சரணாகதி அடைகின்றவர்களைக் காக்கின்றவன் அல்லவா கண்ணன்? அர்ஜுனனால் காப்பாற்றப்பட வேண்டியவன், கண்ணனால் காப்பாற்றப்பட்டான். கண்ணன் சூளுரைத்தது பொய்யாகவில்லை. அவன் சித்திரசேனனின் உடலை அழிக்கவில்லை, உயிரைப் போக்கவில்லை. ஆனால், அவனுள் இருந்த ஆணவத்தையும் அகந்தையையும் அறியாமையையும் அழித்தார். அவன் செய்த தவறுக்கு மன்னிப்புக்கோரி, அவனை காலவ முனிவர் கால்களில் விழுந்து நமஸ்கரிக்கச் செய்தார். சித்திரசேனன் முனிவர் கால்களில் விழுந்து சரணடைந்தான். அவனை மன்னித்தார் முனிவர், முனிவருக்குக் கண்ணன் கொடுத்த வாக்கும் நிறைவேறியது. அதே நேரம், தாயினும் மேலான தன் ஆத்ம நண்பன் கண்ணனையே போரில் எதிர்க்கும் நிலை ஏற்பட்டதற்காக வருந்தி நின்றான் அர்ஜுனன். அவனும் கண்ணனின் கால்களில் விழுந்து, மன்னிப்புக் கோரினான். பாண்டவ சகோதரர்களும் இந்தச் சம்பவத்துக்காக மனம் வருந்தி, கண்ணனிடம் மன்னிப்புக் கோரினர். அப்போது...
இதில் உங்கள் தவறு ஏதுமில்லை இப்படியும் ஒரு யுத்தமா, இது ஏன் நிகழ்ந்தது என்று நீங்கள் கலங்கி இருக்கிறீர்கள். இந்த நிகழ்ச்சியை அதர்மத்தை அழித்து, தர்மத்தை நிலைநாட்டி, பரந்த பாரத சாம்ராஜ்யத்தை ஸ்தாபிக்க எத்தனையோ தர்மயுத்தம் இன்னமும் நடக்கப் போகிறது. அதற்கெல்லாம் போதிய பலமும், திறமையும், வீரமும், துணிவும், சாதுர்யமும் அர்ஜுனனுக்கு இருக்கிறதா என்பதைப் பரீட்சித்துப் பார்க்க நினைத்தேன். அதற்காக இந்த யுத்தம் ஒரு பயிற்சிக் களமாக அமைந்தது! எனப் புன்முறுவலோடு கூறினார் பரந்தாமன். கற்றது கை மண்ணளவு, கல்லாதது உலகளவு என்பதை அர்ஜுனனுக்கு எடுத்துக்காட்டவே இந்த யுத்தம் நிகழ்ந்தது. குருஷேத்திரப் போர் எனும் நாடகத்தின் ஒத்திகையை நடத்தி முடித்த பெருமை கண்ணனுக்கு! பெறற்கரிய பெரும் பேற்றைப் பெற்ற பெருமை. அர்ஜுனனுக்கு!
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 221948
Total likes: 27453
Total likes: 27453
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ பக்தி கதைகள் ~
«
Reply #26 on:
February 20, 2013, 09:30:37 AM »
எப்போது திறக்கும் சொர்க்கவாசல்!
மகரிஷி மந்தபாலர் கடும் பிரம்மச்சாரி எப்போதும் இறைச் சிந்தனையில் தோய்ந்திருப்பவர். அவருக்கு சொர்க்கம் புகும் ஆசை தவிர வேறு எந்த ஆசையும் கிடையாது. ஜொலிக்கும் விழிகளும் வெண்ணிறத் தாடியும் ஜடாமுடியுமாய் நாளுக்குநாள் அவரது வசீகரம் கூடியது. மந்தபாலர் தம் தவ வாழ்வில் நிறைவுகண்டு தாமே விரும்பி சொர்க்கம் புக முடிவு செய்தார். அக்கினியை வளர்த்த மந்தபாலர், தன் இறுதி வேண்டுகோளைச் சமர்ப்பித்தார்; ஏ அக்கனியே! எத்தனையோ முறை வேள்வித் தீ வளர்த்து சமித்துக்களை ஆகுதியாகப் பெய்து உன்னை ஆராதித்திருக்கிறேன். இன்று நான் உன்னை வளர்ப்பது என்னையே ஆகுதியாக நீ ஏற்பதன் பொருட்டே. மனத்தாலும் முழு பிரம்மசாரியாக வாழ்ந்த என்னை ஏற்று என் ஆன்மாவை சொர்க்கத்திற்கு அனுப்புவாயாக! இவ்விதம் முழங்கிய அவர் நெருப்பில் சடாரெனக் குதித்தார், சக முனிவர்கள் சடசடவென அவர் உடல் எரிவதைப் பார்த்துக் கைகூப்பி அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். அவரது ஆன்மா நட்சத்திரம் போல் ஒளி வீசியவாறு விண்ணில் பறந்தது. சொர்க்கத்திற்குச் சென்ற மந்தபாலர், சொர்க்க வாசல்முன் நின்றார். ஆனால் சொர்க்கத்தின் கதவுகள் அவருக்குத் திறக்கவில்லை. தடதடவென அதன் தங்கக் கதவுகளைத் தட்டினார், கதவைத் திறந்து தேவன் யார் நீங்கள்? என்ன வேண்டும்? என்று அதட்டினான். நான் மகரிஷி மந்தபாலன். சொர்க்கம் புக வந்திருக்கிறேன், கதவைத் திறவுங்கள் என்றார் முனிவர். தேவன் கடகடவென்று சிரித்தான். மந்தபாலரே! சொர்க்கத்தின் கதவுகள் தட்டித் திறக்கப்படுவதல்ல; தானாய்த் திறந்தால்தான் உண்டு. நீங்கள் சொர்க்கம் புகத் தகுதியானவர் என்றால் இந்தக் கதவுகள் உங்களுக்காகத் திறந்து உங்களின் வருகைக்காகத் காத்துக் கொண்டிருக்கும். அப்படித் திறவாததால் உங்களுக்கு சொர்க்கம் புகத் தகுதி இல்லை என்றே பொருள்!
மந்தபாலர் வியப்படைந்தார். தவசிரேஷ்டரான தனக்கு சொர்க்கம் புக அனுமதி கிடையாதா? தம் தவ வலிமையின் அர்த்தம்தான் என்ன? தேவனே தவத்தை அன்றி வேறெதையும் நான் செய்ததில்லை. ஏன் எனக்கு சொர்க்கம் மறுக்கப்படுகிறது? தேவன் நகைத்தபடிச் சொல்லானான். மந்தபாலரே! ஒவ்வோர் உயிரும் பூமிக்கு அனுப்பப்படும்போது படைப்பாற்றலுடன் தான் அனுப்பப்படுகிறது. பூமி தொடர்ந்து இயங்க வேண்டும் இல்லையா? படைப்பாற்றலைப் பயன்படுத்த வேண்டியது ஒவ்வோர் உயிரின் அடிப்படைக் கடமை. இயற்கையிலேயே ஒருவருக்கு மக்கட் செல்வம் கிட்டவில்லை என்றால் அது ஒப்புக் கொள்ளக் கூடியதே. ஏதேனும் ஒரு நோக்கத்திற்காக ஒருவர் பிரம்மச்சரிய விரதம் பூண்டால் அதுவும் கூட ஏற்கக் கூடியதே. ஆனால் எந்தக் குறிப்பிட்ட நோக்கமும் இல்லாமல் சொர்க்கம் புகத் தவம் செய்கிறேன் என்று சொல்லிக் கொண்டு பிரம்மச்சரிய விரதம் பூணுவர்களை சொர்க்கம் விரும்புவதில்லை. படைப்பாற்றல் சக்தி அளிக்கப்பட்டும் தர்மநெறிப்படி வாழ்ந்து ஆனால் ஓர் உயிரைக் கூடப் படைக்காமல் சொர்க்கம் புக எண்ணுவது சரியல்ல. உங்களுக்கு இயற்கை வழங்கிய படைப்பாற்றலுக்கு நீங்கள் நியாயம் செய்யவில்லையே! உங்கள் வாரிசு என பூமியில் யாரையாவது காட்டுங்கள். உங்களுக்காக சொர்க்கத்தின் கதவுகள் இப்போதே திறக்கும்.
மந்தபாலர் திகைத்தார் இப்படியொரு கோணத்தில் தாம் எண்ணிப் பார்க்கவே இல்லையே என வருந்தினார். தம் தவ ஆற்றலால் தாம் மறுபிறவி எடுத்து தம் படைப்பாற்றலுக்கு நியாயம் செய்தால் அதன் பின் சொர்க்கக் கதவுகள் தமக்குத் திறக்குமல்லவா என்று யோசித்தார். தேவன், ஒரு பிறவியின் தவ ஆற்றல் மறுபிறவிக்கும் தொடரும். மறுபிறவியில் அவர் தவம் ஏதும் நிகழ்த்த வேண்டாம். தம் படைப்பாற்றலுக்கு நியாயம் செய்து தம் இனத்தைப் பெருக்க உதவினால் அது போதும் என்று விளக்கம் தந்தான்.
மந்தபாலர் தன்னை விரைவில் இனப்பெருக்கம் செய்யும் ஒரு சாரங்கப் பறவையாக உருமாறும்படி மனத்தில் சங்கல்பம் செய்து கொண்டார். அப்போதுதானே சீக்கிரத்தில் சொர்க்கம் வர முடியும்? மறுகணம் மாபெரும் காண்டவ வனத்தில் ஒரு மரக்கிளையில் அந்த அழகிய சாரங்கப் பறவை போய் ஒய்யாரமாக அமர்ந்து கொண்டது. இயற்கையின் நியதிப்படி அது மறுபிறவி எடுத்த கணத்திலேயே அதன் முற்பிறவி நினைவுகள் மறைந்தன. அதே மரத்தின் கிளையில் சிறகுகளைத் தன் கூரிய அலகால் கோதிக் கொண்டு ஜரிதா என்ற ஒரு சாரங்கி அமர்ந்திருந்தது. அது தான் அமர்ந்த மரத்தின் இன்னொரு கிளையில் உட்கார்ந்த சாரங்கத்தை வியப்போடு பார்த்தது. ஜரிதாவின் எழிலும் கனிவான பார்வையும் மந்தபால சாரங்கத்தைக் கிறக்கம் கொள்ள வைத்தன. அந்தப் பெண் பறவையிடம் மந்தபால சாரங்கத்திற்குக் காதல் தோன்றியது. மெல்ல மெல்ல அவற்றினிடையே காதல் வளர்ந்தது ஒரே கூட்டில் இணைபிரியாமல் வசிக்கலாயின. ஜரிதா நான்கு முட்டைகளை இட்டது. அவற்றை அடைகாத்துக் குஞ்சு பொரிப்பதற்குள் அந்த இனிய இல்லற வாழ்வில் ஒரு விபரீதம்! லபிதா என்ற இன்னொரு சாரங்கி மந்தபால சாரங்கனை வட்டமிட்டது. அதனுடைய ஆண்மை நிறைந்த பேரழகு லபிதாவை மயக்கிக் கொள்ளை கொண்டது. லபிதா பறந்து சென்று அதன் அருகே அமர்ந்து எதையோ தேடுவதுபோல் பாவனை செய்தது. யார் நீ? என்ன தேடுகிறாய்? விசாரித்தது மந்தபாலம்.
உங்கள் அலகின் வளைவிலும் சிறகுகளின் அடர்த்தியிலும் என்னையறியாமல் என் உள்ளத்தைத் தொலைத்துவிட்டேன். அது இங்கே எங்கேயாவது விழுந்து கிடக்கிறதா என்று தேடுகிறேன்..! லபிதாவின் மயக்கும் கவிதை மொழி மந்தபாலத்தைக் காந்தம் போல் இழுத்தது. தன்னை வட்டமிட்ட லபிதாவின் அழகில் லயித்த மந்தபாலம் தேடிவந்த வாய்ப்பை நழுவவிட விரும்பவில்லை. ஏற்கெனவே மணமாகி ஒரு மனைவியும் தனக்கு உண்டு என்பதையோ மனைவி இப்போது நான்கு முட்டைகள் இட்டு அடைகாத்து வருகிறது என்பதையோ நான்கு ஆண் குஞ்சுகள் வெளிப்படத் தொடங்கியுள்ளன என்பதையோ மந்தபாலம் எண்ணிப் பார்க்கவில்லை. காமம் அதன் கண்ணை மறைத்தது. மனைவி ஜரிதாவிடம் ஏதொன்றும் கூறாமல் ஒருநாள் லபிதாவோடு இணைந்து விண்ணில் பறந்து, தனியே இல்வாழ்வைத் தொடங்கின.
அப்பா எங்கே? என்று கேட்டன அப்போது தான் உருப்பெறத் தொடங்கியிருந்த நான்கு ஆண் குஞ்சுகள். உங்கள் அப்பா மனிதர்களைப் பார்த்துக் கெட்ட பழக்கத்தைக் கற்றுக் கொண்டிருக்கிறார். இரண்டாம் கல்யாணம் செய்துகொண்டு விட்டார். போகட்டும், நம்மை மறந்தவர்களை நாம் நினைப்பது நம் சுயமரியாதைக்கு அழகல்ல. உங்கள் நால்வருக்கும் நானே இனித் தாயாகவும் தந்தையாகவும் இருப்பேன். வெளியே சென்று உங்களுக்குத் தேவையான உணவை நானே சம்பாதித்து வருவேன். நான் உணவு பெறுவதற்காகக் கூட்டை விட்டு வெளியே செல்லும்போது மட்டும் நீங்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்! என்றது, ஜரிதா. ஆண் குஞ்சுகள் மனம் தேறி தாய்ப்பறவை சொன்னதை ஏற்றுக் கொண்டன.
ஒருநாள் திடீரென காண்டவ வனத்தில் தீப்பிடித்துக் கொண்டது. இரண்டாம் மனைவி லபிதாவுடன் சுற்றிக் கொண்டிருந்த மந்தபாலம். நெருப்பைப் பார்த்துத் திகைத்தது. சரிவரச் சிறகு கூட முளைக்காத தன் நான்கு ஆண் குஞ்சுகளும் என்ன பாடுபடுமோ என்று அதன் தந்தை மனத்தில் கவலை எழுந்தது. ஏ அக்கினியே! என் நான்கு மகன்களையும் நீ எரிக்காமல் காப்பாற்றுவாயாக! என்று அது மனமாரப் பிரார்த்தனை செய்தது. அதன்முன் அக்கினி பகவான் தோன்றி. மந்தபாலமே! உன் முற்பிறப்பில் உன் உடலையே எனக்கு ஆகுதியாக்கினாய். அந்த உன் தியாகத்தை மெச்சி உன் இப்பிறப்பில் உனது ஆண் குஞ்சுகளை நான் ஒன்றும் செய்யமாட்டேன் என வாக்குக் கொடுத்து மறைந்தார். இதைக் கண்ட இரண்டாம் மனைவி லபிதா, இன்னும் உனக்கு ஜரிதாவிடம் காதல் இருக்கிறது என்று ஊடல் கொண்டு இன்னொரு மரக்கிளையில் தனியே போய் உட்கார்ந்து கொண்டது. அக்கினியின் வாக்குறுதி பற்றி ஏதும் அறியாத தாய்ப்பறவை ஜரிதாவைக் கலக்கம் கவ்வியது. அக்கினியிடமிருந்து இறகு சரிவர முளைக்காத பிள்ளைகளை எப்படிக் காப்பாற்றுவது? குஞ்சுகள் பயத்தில் நடுநடுங்கின. அம்மா! நீங்கள் தப்பித்துப் போங்கள். எங்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். நீங்கள் இருந்தால் வம்சம் விருத்தியாக வாய்ப்புண்டு. நாங்கள் நெருப்பிலேயே மடிந்தாலும் பரவாயில்லை. என்றன.
தாய்ப்பறவை ஜரிதா வேறு வழி தெரியாமல் அழுதுகொண்டே விண்ணில் சுற்றிக் கொண்டிருந்தது. மூத்த ஆண் குஞ்சான ஜரிதாரி வரப்போகும் கஷ்டத்தை முன்கூட்டியே உணர்ந்து கடவுளைப் பிரார்த்திப்பவனே புத்திசாலி. அவன் கடவுள் அருளால் கஷ்டத்தைக் கடந்துவிடுவான்! என்றது. சாரி, ஸதம்பமித்திரன், துரோணன் ஆகிய பிற மூன்று குஞ்சுகளும் அதை ஆமோதித்தன. அண்ணனுடன் சேர்ந்து பிரார்த்திக்கத் தொடங்கின. அக்கினி பகவானே! நீயே சூரியன் நீயே மழை தருபவன். உன்னாலேயே உயிர்கள் உண்ட உணவு ஜீரணமாகிறது. நாங்கள் இளம் குழந்தைகள். எங்களிடம் இரக்கம் காட்டு. எங்களை அழிக்காதே! இளம் குழந்தைகளின் மழலைப் பிரார்த்தனை அக்கினி பகவானைக் குளிரச் செய்தது. உங்கள் தந்தைக்கு வரம் கொடுத்திருக்கிறேன். உங்களை அழிக்கமாட்டேன் உங்களுக்கென்று என்ன வரம் வேண்டும்? என்று வெகு பிரியமாகக் கேட்டார்.
எங்கள் தந்தையை எங்களிடமிருந்து பிரித்த லபிதாவை நாங்கள் வெறுக்கிறோம். எங்கள் தந்தை எங்களுக்கு வேண்டும்! என்றன அவை. அக்கினி பகவான் சிரித்துக் கொண்டே அப்படியே நடக்கும் என்று சொல்லி படபடத்துப் பாய்ந்தார். அதோடு தனியே மரக்கிளையில் அமர்ந்திருந்த லபிதாவைப் போகிற போக்கில் அள்ளி விழுங்கிச் சென்றுவிட்டார்! தாய்ப்பறவை ஜரிதா அக்கினி அடங்கியதும் பாய்ந்தோடி வந்தது. சேதமில்லாமல் தன் குஞ்சுகள் இருப்பதைப் பார்த்ததும் அவற்றை அரவணைத்துக் கொண்டு மகிழ்ச்சியில் அரற்றியது. அப்போது மந்தபாலமும் அங்கே வந்து சேர்ந்தது. மனைவி, பிள்ளைகளைக் கண்டு அழுதது. ஜரிதா கணவனை வெறுப்புடன் நோக்க, பிள்ளைகளோ பாசத்தோடு தங்கள் தந்தையிடம் சென்று அமர்ந்தன. இந்தப் பிள்ளைகளைக் காப்பாற்ற வேண்டும் என்று நான் தான் அக்கினி பகவானிடம் வரம் கேட்டேன். அத்தோடு அந்த சாகசக்காரி லபிதாவை இப்போது முற்றிலுமாகத் தலைமுழுகி விட்டேன்! என்னை மன்னிக்கக் கூடாதா? என்று உருகியது மந்தபாலம்.
சற்று நேரம் யோசனையில் ஆழ்ந்தது ஜரிதா. குழந்தைகளுக்குத் தந்தை முக்கியமல்லவா; திருந்தி மன்னிப்புக் கேட்பவரை ஏற்பதுதான் தர்மமல்லவா என்று சிந்தித்தது. மெல்லப் பறந்துபோய்த் தன் கணவன் அருகில் அது அமர்ந்தபோது குழந்தைகள் அப்போதுதான் முளைக்கத் தொடங்கிய தங்கள் சின்னசிறு சிறகுகளை அசைத்து ஆர்ப்பரித்தன. ஜரிதாவின் முகத்தில் வெட்கம் படர்ந்த அழகை ரசித்தது மந்தபாலம். மேலிருந்து இந்தக் காட்சியைப் பார்த்த அக்கினி பகவான் சிரித்துக் கொண்டார் முதல் மனைவியின் வாழ்வைக் கெடுக்கும் இரண்டாம் மனைவியை வாழ்க்கை நெருப்பு எரிக்கக் கடவது என்று அவர் விதி வகுத்தார். காலப்போக்கில் மந்தபாலம் மூப்படைந்து தளர்ந்து உயிர் விட்டபோது அதன் ஆன்மா சொர்க்கம் நோக்கிச் சென்றது. என்ன ஆச்சரியம்! மந்தபால ஆன்மாவை வரவேற்க சொர்க்கத்தின் கதவுகள் தயாராய்த் திறந்திருந்தன. இரு தேவிகள் அந்த ஆன்மாவை வரவேற்கப் பூரண கும்பத்தோடு காத்திருந்தார்கள். இயல்பிலேயே வழங்கப்பட்ட படைப்பாற்றலுக்கு நியாயம் செய்த மந்தபால ஆன்மா அப்படித்தான் சொர்க்கத்தைச் சென்றடைந்தது.
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 221948
Total likes: 27453
Total likes: 27453
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ பக்தி கதைகள் ~
«
Reply #27 on:
February 20, 2013, 09:32:29 AM »
விலை மதிப்பில்லா பூணூல்!
முன்னொரு காலத்தில் மகான் ஒருவர் பூணூல் திரிப்பதையே தன் தொழிலாகக் கொண்டிருந்தார். அவருக்குத் தெரிந்த ஒரே தொழிலும் அதுதான். அவரது குடும்பம் மிகவும் வறுமையில் வாடியது. மகான் பூணூல் திரிப்பதற்குரிய மந்திரத்தை சொல்லித் திரித்துத் தினமும் அதை பகவான் திருவடியில் வைத்து வணங்கி பரம பவித்ரமாக அதை ஓலைப் பெட்டியில் எடுத்து வைப்பார். யாராவது வந்து கேட்டால் அவர்களுக்குக் கொடுப்பார். இப்படியே வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது. ஒரு நாள் மகானின் மனைவி அவரிடம், நீங்கள் எப்பொழுதும் பூணூலைத் திரித்துக் கொண்டிருக்கிறீர்களே! நம் பெண்ணிற்கு வயதாகிவிட்டது. கல்யாணம் செய்து கொடுக்க வேண்டும். அதற்குப் பணம் வேண்டுமே, பக்கத்து தேசத்து ராஜா மிகவும் உபகாரியாம். அவரைப் போய் யார் உதவி கேட்டாலும் வாரி, வாரி கொடுப்பாராம். நீங்கள் ஒரு தடவை போய் பார்த்து வாருங்களேன் என்றாள். மனைவி சொல்லை மறுக்க முடியாமல், ராஜாவைப் பார்க்கப் போனார். மகானின் முக தேஜஸ் ராஜாவையும் ஆசனத்திலிருந்து எழவைத்தது. பிறகு மகானிடம், தாங்கள் வந்த விஷயம் என்ன என்று வினவ, என்ன கேட்பது என்று புரியாமல் மகான் தடுமாற, மகானே, நீங்கள் எது வேண்டுமானாலும் கேளுங்கள் தருகிறேன் என்றார் ராஜா.
இதுவரை யாரிடமும் எதுவும் கேட்டுப் பழக்கமில்லாத மகான், நான் ஓர் யக்ஞோபவீதம் (பூணூல்) கொண்டு வந்திருக்கிறேன். அதன் எடைக்கு நிகராகத் தங்கம் கொடுத்தால் போதும்.. அதைக் கொண்டு என் பெண்ணுக்குக் கல்யாணம் பண்ணிவிடுவேன் என்றார். தராசைக் கொண்டு வரச் சொல்கிறார் ராஜா. ஓலைப் பெட்டியிருந்து பூணூலை (ஒன்றே ஒன்று) எடுத்து மந்திரத்தைச் சொல்லி தராசுத் தட்டில் வைத்தார் ஏழை பிராமணர். இந்தப் பூணூல் அப்படி என்ன எடை இருக்கப் போகிறது? பாவம் இது கூட தெரியாமல் கேட்கிறாரே என்று ராஜா பரிதாபப்பட்டான். ஒரு தங்கக் காசைப் போட்டான். தட்டு தாழவில்லை. இரண்டு, மூன்று என்று எவ்வளவு தங்கக் காசுகள் போட்டாலும் தராசு அசையாமல் நின்றது. தன்னுடைய ஆபரணங்கள் ஒவ்வொன்றாக வைத்தும் பூணூலுக்கு இணை இல்லை. தன்னுடைய ரத்தின கிரீடத்தை எடுத்து வைத்தான். உடனே பக்கத்தில் இருந்த நாட்டின் மந்திரி ராஜாவின் காதில் அவசரப்படவேண்டாம்! இந்த நூல் நம் இராஜ்ஜியத்தையே சூறையாடிவிடும். இந்த பிராமணரை நாளை வரச் சொல்லுங்கள். அப்பொழுது எடைக்கு எடை தரலாம் என்றார்.
அரசனும் பிராமணரிடம், நாளை வாருங்கள். நீங்கள் கேட்டபடி எடைக்கு எடை தருகிறேன் என்றான். பிராம்மணருக்கு ஒரே பயம். நாம் கேட்டது தவறோ, இப்படி பூணூல் எடைக்கு மேல் வேண்டாம் எனக்கூறி விபரீதத்தில் மாட்டிக் கொண்டோமே. மறுநாள் வரச் சொல்லி சிரச்சேதம் செய்து விடுவாரோ என்றெல்லாம் யோசித்தபடி வீடு திரும்பினார். இரவு முழுவதும் தூங்கவில்லை. பயத்துடனேயே எழுந்து ராஜாவைப் பார்க்க மறுநாள் கிளம்பினார். மறுநாள் அரண்மனையில் ராஜா முன்னிலையில் தராசு கொண்டுவரப்பட்டது. பூணூலை வைத்தார் அந்தணர். ராஜாவும் ஒரு காசை எடுத்துப் போட்டார். என்ன ஆச்சர்யம். உடனேயே பூணூல் தட்டு மேலே போய்விட்டது! அதே பூணூல் அதே தராசுதான். பிறகெப்படி இந்த அதிசயம் நிகழ்ந்தது? நேற்று வேறு மாதிரி அல்லவா நடந்தது? ராஜா மந்திரியை அழைத்துத் தன் சந்தேகத்தைக் கேட்டார். மந்திரி அதற்கு விளக்கம் சொன்னார்:
நேற்று அந்த முதியவர் கொண்டு வந்த பூணூல் மிகவும் பவித்ரமானது. மிகவும் புனிதமானது. அதற்கு நிறை காண யாராலும் முடியாது. எடை போடுவதே தப்பு. நாமெல்லாம் ஆத்மாக்கள். பகவான் மட்டுமே பரமாத்மா - பரம என்றால் உத்தமமான என்று பொருள். அதே அடைமொழி பூணூலுக்கும் உண்டு. அது இருந்ததினால் நேற்று அந்தப் பூணூல் இந்த ராஜ்யத்தையே எடை கொண்டது. ஆனால் இன்றைக்கு அதனுடைய பவித்ரம் போய் விட்டது. ஏனெனில், பூணூலைத் திரிப்பவர்கள் தங்களுடைய நியமங்களில் இருந்து தவறவே கூடாது. ஆனால் பாவம் இந்தப் பெரியவர். பயம் காரணமாக தன்னுடைய தினமும் செய்யும் நியமங்களைச் செய்யத் தவறி விட்டார். ஆதலால் இன்றைய பூணூல் பவித்ரம் போய்விட்டது. நம்மால் சுலபமாக எடை போட முடிந்தது என்று கூறினார். பிறகு அரசர் கருணையோடு ஏழை பிராமணருக்கு அவர் பெண்ணின் திருமணத்திற்குத் தேவையான தங்கத்தை அளித்து அனுப்பினார்.
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 221948
Total likes: 27453
Total likes: 27453
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ பக்தி கதைகள் ~
«
Reply #28 on:
February 20, 2013, 09:34:19 AM »
நல்லதை செய்வோருக்கு எமபயம் இல்லை!
வட இந்தியாவிலுள்ள நாடுகளில் ஒன்றான ஹேஹயம் என்ற நாட்டை ஆண்ட ஹைஹயர்கள் தங்கள் நாட்டைத் தனித் தனிப் பகுதியாகப் பகிர்ந்து கொண்டு ஒற்றுமையுடன் அரசு புரிந்தனர். அவர்களுள் ஒருவரது புதல்வன் ஒரு நாள் வேட்டையாடக் காட்டிற்குச் சென்றான். காட்டில் ஓர் அடர்ந்த புதரிடையே ஒரு முனிவர் தம் உடலை மான் தோலால் மூடித் தவம் செய்து கொண்டிருந்தார். வேட்டைக்கு வந்த அரசகுமாரன் அவரை மான் என்று எண்ணி அம்பால் அடித்தான். அவர் உடனே இறந்துவிட்டார். அரசகுமாரன் இறந்திருப்பதைக் கண்டு பதறினான். ஊர் திரும்பிப் பெரியவர்களிடம் நடந்ததைக் கூறினான். ஹேஹய மன்னர்கள் முனிவர் கொல்லப்பட்டதை நேரில் சென்று பார்த்தனர். வருந்தி அவர் யார் என்றறிய அங்குமிங்கும் தேடினர். அண்மையில் ஓர் ஆசிரமம் காணப்பட்டது. அது காஸ்யப முனிவரின் புதல்வரான அரிஷ்ட நேமியின் ஆசிரமம். அவரைக் கண்டு வணங்கினர்.
முனிவர் அரசர்களை உபசரிக்க முற்பட்டபோது, முனிவரே, நாங்கள் பெரிய குற்றத்திற்கு இலக்காகிவிட்டோம். ஓர் அந்தணர் எங்களால் கொல்லப்பட்டுவிட்டார். நாங்கள் தங்கள் உபசாரத்திற்குக் தகுதியற்றவர்கள் என்று அரசர்கள் கூறினர். உடனே சென்று அந்தச் சவத்தை இங்கு கொண்டு வாருங்கள். நான் என் தவத்தால் அதை உயிர்ப்பிக்கிறேன் என்றார் அரிஷ்டநேரி அவர்களிடம் . ஹைஹயர்கள் அந்தச் சவத்தைக் கொண்டு வரச் சென்றபோது அது அங்கு காணப்படவில்லை. நாய் நரிகள் இழுத்துப் போயிருக்குமோ என்று தேடியதில் அத்தகைய அடையாளம் ஏதும் இல்லை. கொன்ற பாவத்தோடு முனிவரிடம் அபசாரப்பட வேண்டிய பயமும் சேர்ந்துவிட்டதே என்று கவலையுடன் முனிவர் முன் தலைகுனிந்து நின்றனர்.
இவர்தானா உங்களால் கொல்லப்பட்ட அந்தணன்? நன்றாகப் பாருங்கள் என்று கூறி அரிஷ்டநேமி ஒரு பிராமண குமாரனைக் காட்டினார். அனைவரும் ஆச்சரியம் காட்டினர். தாங்கள் கண்ட சவத்தில் இருந்த அடையாளங்கள் எல்லாம் இந்தக் குமாரனின் உடலில் காணப்பட்டன. அவர்களால் தங்கள் கண்களை நம்ப முடியவில்லை. இவன் என் மகன், நன்கு தவமியற்றிப் பெருமை எய்தியவன். அரசர்களே, நான் சபித்துவிடுவேன் என அஞ்ச வேண்டாம். தெரியாமல் நடந்துவிட்டது. உங்கள் இரக்கமும் உண்மையும் முயற்சியும் உங்களைக் காப்பாற்றிவிட்டன என்றார் முனிவர். முனிவரின் தவப்பெருமையையும் மன்னிக்கும் மாண்பையும் கண்டு வியந்த மன்னர்கள். முனிசிரேஷ்டரே! இந்த முனிகுமாரன் இறந்ததை நாங்களே கண்டோம். இப்போது உயிருடன் உள்ளான். மரண பயமின்றி நீங்கள் எல்லோரும் இருப்பதன் ரகசியம் என்ன? என்று வேண்டினர்.
முனிவர் கூறினார். அரசர்களே! உண்மை ஒன்றையே பேசுவோம், பொய் பேச வேண்டிய விருப்பம் எங்களுக்கு இல்லை. எங்கள் கடமையைச் செய்கிறோம். ஆகவே எமன் பற்றிய அச்சம் எங்களுக்கில்லை. நன்மை தரும் நற்செய்தியையே எல்லோர்க்கும் கூறுகிறோம். தீமை பயக்கும் தீய செயலைச் செய்வதே இல்லை. ஆதலின் எமனைப் பற்றிய அச்சம் எங்களுக்கில்லை. உணவும் நீரும் அளித்து விருந்தினரை உபசரிக்கிறோம். வேலையாட்களுக்கு வயிறார உணவு தருகிறோம். மிகுந்ததை நாங்கள் உண்கிறோம். ஆகவே எமபயம் எமக்கில்லை. பொறுமை, புலனடக்கம், புண்ணியத் துறையாடல், தானம் ஆகியவற்றில் மிகுந்த கவனம் செலுத்துகிறோம். நல்வினை பயக்கும் நல்ல இடங்களில் உறைகிறோம். ஆதலால் மரண பயம் எங்களுக்கு இல்லை.
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 221948
Total likes: 27453
Total likes: 27453
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ பக்தி கதைகள் ~
«
Reply #29 on:
February 20, 2013, 09:35:42 AM »
திருந்துங்க ஆட்சியாளர்களே!
நான் என்ன தவறு செய்தேன் என்று இவ்வளவு கடுமையாகப் பேசுகிறீர்கள்? பிரச்னை தான் என்ன? என்று பிசிராந்தையாரிடம் கேட்டான் பாண்டிய மன்னன். ஆம்...பாண்டியநாட்டிலுள்ள சிறிய கிராமம் பிசிர். இவ்வூரில் ஆந்தையார் என்னும் பெயர் கொண்ட புலவர் வசித்தார். ஊரின் பெயரை அவரது பெயரில் இணைத்து பிசிராந்தையார் என மக்கள் அழைத்தனர். யாரையும், எதையும் தன் எழுத்தாலும் பேச்சாலும் தட்டிக்கேட்கும் குணமுயைடவர் அவர். அவரது விமர்சனங்கள் நியாயமாக இருக்கும் என்பதால் அரசர்களும், அறிஞர்களும் அவர் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தனர். அப்போது, பாண்டிய மன்னன் மக்கள் மீது பல வரிகளை விதித்தான். அந்த கடும் வரியைக் கட்ட முடியாமல் ஏழை, நடுத்தர மக்கள் அவதிப்பட்டனர். எல்லாரும் பிசிராந்தையாரிடம் சென்றனர். அய்யனே! தாங்கள் மன்னரிடம் சென்று, இந்த பிரச்னை பற்றி பேசக்கூடாதா! எங்கள் வருமானமெல்லாம் வரியாய் போனால், நாங்கள் குழந்தை குட்டிகளுடன் எப்படி பிழைப்போம்? தயவுசெய்து மன்னரிடம் இதுபற்றி பேசுங்கள்.
எங்களுக்கு விமோசனத்தை ஏற்படுத்துங்கள், என்றனர் கண்ணீருடன். பிசிராந்தையார் ஆவேசமாகக் கிளம்பி விட்டார். கையில் ஓலைச்சுவடி. அதில் மன்னனுக்கு சொல்ல வேண்டிய விஷயத்தை பாடலாக எழுதி யிருந்தார். புலவரைக் கண்ட மன்னன் வியப்படைந்தான். முன்னறிவிப்பின்றி திடீரென வருகை தந்துள்ளீர்களே! முதலில் அமருங்கள். தாகசாந்திக்கு என்ன சாப்பிடுகிறீர்கள்? என்று உபசரித்த மன்னன், அழகிய சிம்மாசனம் ஒன்றில் அமர வைத்தான். மன்னா! நான் தாகசாந்தி செய்துகொள்வது இருக்கட்டும். பாண்டியநாட்டு மக்கள் மிகுந்த தாகத்துடன் இருக்கிறார்களே! அதுபற்றி உனக்கு ஏதாவது தெரியுமா? என்று கேட்டார். புலவரே! தாங்கள் சொல்வது எனக்கு புரியவில்லை. வைகையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடத்தானே செய்கிறது... அவன் புரியாமல் பேசினான். மன்னா! வைகை பொய்க்கவில்லை. அது பெருகியோடுவதால் தானேகழனிகள் செழித்துக் கிடக்கின்றன. ஆனால், குடிமக்களின் வீடுகளில் தான் உணவு இல்லை. அத்தனையும் உன் கஜானாவை நிரப்பிவிட்டது,. சற்று விளக்கமாக சொல்லுங்கள்... பிசிராந்தையாரே! பிசிராந்தையார் மீண்டும் புதிர் போட்டார்.
மன்னா! யானையைப் பார்த்திருக்கிறாயா? பாண்டியன் கலகலவென சிரித்தான். என்ன புலவரே கேள்வி இது! நம் அரண்மனையில் நூற்றுக்கணக்கான யானைகள் உள்ளனவே! போர்க்காலத்தில், அவை எதிரிகளின் தலைகளை பந்தாடுவதை பலமுறை பார்த்திருக்கிறேனே! இதற்கு பதிலளித்த பிசிராந்தையார்அதெல்லாம் சரி! வயலில் விளைந்திருக்கும் நெல்லை சோறாக்கி, யானைக்கு கவளம் கவளமாகக் கொடுத்தால், அது பலநாளுக்கு போதுமானதாக இருக்கும். மொத்த யானைகளையும் வயலுக்குள் இறக்கி விட்டால், யானையின் வயிற்றுக்குப் போவது குறைவாகவும், காலில் சிக்கி வீணாவது அதிகமாகவும் இருக்கும். ஒரேநாளில் வயலில் உள்ள நெல் காலியாகி விடும். அதுபோல் தான் மக்கள் நிலையும்! நியாயமான வரி போட்டால், உன் கஜானாவும் நிரம்பும், மக்களும் செழிப்படைவார்கள். அதிகவரி விதித்தால், மக்கள் வாழ்வு சின்னாபின்னமாகி விடும். உனக்கு அதிகாரம் இருக்கிறதே என்பதற்காக, மக்களுக்கு தாறுமாறாக வரி விதித்தால், யானையின் காலில் சிக்கிய வயல் போல, நாடும் பாழாகி விடும், என்றார். மன்னன் மனம் மாறினான். ஆட்சியாளர்களும் ஏழைகள் மீது கருணை வைத்து நியாயமான வரி வசூலிக்கலாமே!
Logged
Print
Pages:
1
[
2
]
3
4
Go Up
« previous
next »
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
கதைகள்
»
~ பக்தி கதைகள் ~