Author Topic: ~ புறநானூறு ~  (Read 99160 times)

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #30 on: February 09, 2013, 04:52:02 PM »


புறநானூறு, 31.(வடநாட்டார் தூங்கார்!)
பாடியவர் : கோவூர் கிழார்.
பாடப்பட்டோன் : சோழன் நலங்கிள்ளி.
திணை :வாகை.
துறை: அரசவாகை: மழபுல வஞ்சியும் ஆம்.
=========================================

சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும்
அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல
இரு குடை பின்பட ஓங்கி ஒருகுடை
உருகெழு மதியின் நிவந்துசேண் விளங்க,
நல்லிசை வேட்டம் வேண்டி வெல்போர்ப்

பாசறை யல்லது நீயல் லாயே;
நுதிமுகம் மழுங்க மண்டி ஒன்னார்
கடிமதில் பாயும்நின் களிறுஅடங் கலவே;
போர்எனில் புகலும் புனைகழல் மறவர்
காடிடைக் கிடந்த நாடுநனி சேய;

செல்வேம் அல்லேம் என்னார்; கல்லென்
விழவுடை ஆங்கண் வேற்றுப்புலத்து இறுத்துக்
குணகடல் பின்ன தாகக் குடகடல்
வெண்தலைப் புணரிநின் மான்குளம்பு அலைப்ப
வலமுறை வருதலும் உண்டுஎன்று அலமந்து

நெஞ்சுநடுங்கு அவலம் பாயத்
துஞ்சாக் கண்ண வடபுலத்து அரசே

அருஞ்சொற்பொருள்:-

உரு = வடிவழகு, நிறம்
கெழு = பொருந்திய
நிவத்தல் = உயர்தல்
நிவந்து = ஓங்கி
சேண் = சேய்மை
வேட்டம் = விருப்பம், விரும்பிய பொருள்
ஒல்லுதல் = உடன்படுதல், இணங்குதல்
நுதி = நுனி
மண்டுதல் = நெருங்குதல் (குத்துதல்)
பாய்தல் = குத்துதல்
புகலுதல் = விரும்புதல்
புனைதல் = அணிதல்
நனி = மிகவும்
சேய = தொலைவாக
கல் - ஒலிக்குறிப்பு
விழவு = விழா
குண = கிழக்கு
குட = மேற்கு
புணரி = அலை
மான் = குதிரை
அலைப்ப = அடித்தல் (அலை அடித்தல்)
அலமந்து = சுழன்று
அவலம்= துன்பம், வருத்தம்
பாய்தல் = பரவுதல்
துஞ்சுதல் = உறங்குதல்.

இதன் பொருள்:-

சிறப்புடை=====> வெல்போர்ப்

அறத்தின் சிறப்பினால், பொருளும் இன்பமும் அறத்தின் பின்னதாகக் கருதப்படுவதுபோல், சேர பாண்டியருடைய கொற்றக்குடைகள் பின் வர உன் கொற்றக்குடை அழகிய திங்களைப்போல் வெகு தொலைவில் உயர்ந்து விளங்குகிறது. நல்ல புகழை விரும்பி, உன் தலைநகராகிய பூம்புகாரில் இல்லாமல், நீ வெற்றிதரும்

பாசறை=====> வடபுலத்து அரசே

போர்ப்பாசறையிலேயே உள்ளாய். உன் யானைகள், அவற்றின் தந்தங்களின் நுனிகள் மழுங்குமாறு பகைவர்களின் காவலுடைய மதில்களைக் குத்தித் தாக்கியும் அடங்காமல் உள்ளன. போர் என்று கேள்விப்பட்டவுடன் உன் படை வீரர்கள், வீரக்கழல்கள் அணிந்து, போருக்குப் புறப்படுகிறார்கள். பகைவர்களின் நாடு காட்டுக்கு நடுவே, மிகவும் தொலைவில் இருந்தாலும் அங்கே செல்லமாட்டோம் என்று அவர்கள் சொல்லமாட்டார்கள். பகைவர்களின் நாட்டில் ஆரவாரமாக வெற்றிவிழா கொண்டாடிக், கிழக்குக் கடற்கரையிலிருந்து கிளம்பிய உன் குதிரைகளின் குளம்புகளை மேற்குக் கடலின் வெண்ணிற அலைகள் அலம்ப, நீ நாடுகளை வலம் வருவாயோ என்று வடநாட்டு மன்னர்கள் வருந்தி, நெஞ்சம் நடுங்கி உறக்கமின்றி உள்ளனர்.

சிறப்புக் குறிப்பு:-

பகைவரை வென்று ஆரவாரிப்பதைப் பற்றி இப்பாடலில் கூறப்பட்டிருப்பதால், இப்பாடல் வாகைத் திணையில் அடங்கும். சோழன் நலங்கிள்ளி, போரை விரும்பிப் பாசறையில் இருப்பதாகக் கூறியது அவனது இயல்பைக் கூறியதாகும். ஆகவே, இப்பாடல் அரசவாகைத் துறையைச் சார்ந்தது என்று கருதப்படுகிறது. மற்றும், பகைவர்களின் மதில்களை நலங்கிள்ளியின் யானைகள் குத்தித் தாக்கியதையும், அவன் படை வீரர்கள் எப்பொழுதும் போரை விரும்புவதையும், வட நாட்டு மன்னர்கள் நலங்கிள்ளியின் வருகையை நினைத்து நடுங்கி உறக்கமின்றி இருப்பதையும் கூறியிருப்பது பகைவரின் நாட்டை அழிப்பதைக் குறிப்பதால், இப்பாடல் மழபுல வஞ்சித் துறையைச் சார்ந்ததாகவும் கருதப்படுகிறது.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #31 on: February 09, 2013, 04:55:10 PM »


புறநானூறு, 32.(பூவிலையும் மாடமதுரையும்!)
பாடியவர் : கோவூர் கிழார்.
பாடப்பட்டோன் : சோழன் நலங்கிள்ளி.
திணை :பாடாண்.
துறை: இயன் மொழி.
=========================================

கடும்பின் அடுகலம் நிறையாக நெடுங்கொடிப்
பூவா வஞ்சியும் தருகுவன் ஒன்றோ;
வண்ணம் நீவிய வணங்குஇறைப் பணைத்தோள்
ஒண்ணுதல் விறலியர் பூவிலை பெறுகஎன
மாட மதுரையும் தருகுவன்; எல்லாம்

பாடுகம் வம்மினோ பரிசில் மாக்கள்!
தொன்னிலக் கிழமை சுட்டின் நன்மதி
வேட்கோச் சிறாஅர் தேர்க்கால் வைத்த
பசுமண் குரூஉத்திரள் போலவவன்
கொண்ட குடுமித்து இத்தண்பணை நாடே

அருஞ்சொற்பொருள்:-

கடும்பு = சுற்றம்
அடுகலம் = சமையல் பாத்திரம்
வணக்கல் = வளைதல்
இறை = முன்கை
பணை = மூங்கில்
சுட்டுதல் = நினைத்தல்
வேட்கோ = குயவன்
தேர்க்கால் = தேர்ச்சக்கரம் (இங்கு குயவன் பயன்படுத்தும் சக்கரத்தைக் குறிக்கிறது)
குரு = கனம்
திரள் = உருண்டை
குடுமி = முடிவு
பணைநிலம் = மருதநிலம்

இதன் பொருள்:-

கடும்பின்=====> தருகுவன்; எல்லாம்

நம் சுற்றத்தாரின் சமையல் பாத்திரங்கள் நிறையுமாறு, நெடிய கொடியில் பூவாத வஞ்சி ஆகிய வஞ்சி மாநகரத்தையும் சோழன் நலங்கிள்ளி தருவான். வண்ணக் கலவை பூசிய வளைந்த முன்கையும், மூங்கில் போன்ற தோளும், ஒளிபொருந்திய நெற்றியுமுடைய விறலியர் விற்கும் பூவிற்கு விலையாக மாடங்கள் நிறைந்த மதுரையையும் தருவான்.

பாடுகம்=====> இத்தண்பணை நாடே

பரிசிலரே வாருங்கள்; நாம் அனைவரும் அவனைப் பாடுவோம். இந்த பழமையான நிலத்திற்கு உரிமையுடையவன் யார் என்று நினைத்துப் பார்த்தால், நல்ல தொழில் நுட்ப அறிவுள்ள குயக்குலச் சிறுவர் மண்பாண்டங்கள் செய்யும் சக்கரத்தில் வைத்த கனமான பசுமண் உருண்டை, குயவனின் கருத்துக்கேற்ப உருவெடுப்பதுபோல் சோழன் நலங்கிள்ளி எடுத்த முடிவுக்கேற்ப இந்தக் குளிர்ந்த மருத நிலத்தையுடைய நாடு அமைவது விளங்கும்.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #32 on: February 09, 2013, 04:59:27 PM »


புறநானூறு, 33.(புதுப்பூம் பள்ளி!)
பாடியவர் : கோவூர் கிழார்.
பாடப்பட்டோன் : சோழன் நலங்கிள்ளி.
திணை :வாகை.
துறை: அரசவாகை.
========================================

கானுறை வாழ்க்கைக் கதநாய் வேட்டுவன்
மான்தசை சொரிந்த வட்டியும், ஆய்மகள்
தயிர்கொடு வந்த தசும்பும் நிறைய
ஏரின் வாழ்நர் பேரில் அரிவையர்
குளக்கீழ் விளைந்த களக்கொள் வெண்ணெல்

முகந்தனர் கொடுப்ப உகந்தனர் பெயரும்
தென்னம் பொருப்பன் நன்னாட்டு உள்ளும்
ஏழெயில் கதவம் எறிந்துகைக் கொண்டுநின்
பேழ்வாய் உழுவை பொறிக்கும் ஆற்றலை;
பாடுநர் வஞ்சி பாடப் படையோர்

தாதுஎரு மறுகின் பாசறை பொலியப்
புலராப் பச்சிலை இடையிடுபு தொடுத்த
மலரா மாலைப் பந்துகண் டன்ன
ஊன்சோற் றமலை பாண்கடும்பு அருத்தும்
செம்மற்று அம்மநின் வெம்முனை இருக்கை;

வல்லோன் தைஇய வரிவனப்பு உற்ற
அல்லிப் பாவை ஆடுவனப்பு ஏய்ப்பக்
காம இருவர் அல்லது யாமத்துத்
தனிமகன் வழங்காப் பனிமலர்க் காவின்
ஒதுக்குஇன் திணிமணல் புதுப்பூம் பள்ளி

வாயின் மாடந்தொறும் மைவிடை வீழ்ப்ப
நீஆங்குக் கொண்ட விழவினும் பலவே.

அருஞ்சொற்பொருள்:-

கான் = காடு
கதம் = சினம்
சொரிதல் = பொழிதல் = நிறைதல்
வட்டி = கூடை
ஆய் = இடையர்
தசும்பு = குடம்
அரிவை = பெண் (மகளிர்)
முகத்தல் = அளத்தல், மொள்ளல்
உகத்தல் = மகிழ்தல்
பொருப்பு = மலை
எயில் = கோட்டை
எறிதல் = முறித்தல்
பேழ் = பெருமை
பேழ்வாய் = பெரியவாய்
உழுவை = புலி
வஞ்சி பாடுதல் = பகைவருடைய நாட்டின் மீது படையெடுப்பதைப் பாடுதல்
தாதெரு = தாது+எரு; தாது = பூந்தாது
மறுகு = தெரு
இடையிடுபு = இடையிட்டு
அமலை = திரள்
கடும்பு = சுற்றம்
அருத்தல் = உண்பித்தல்
செம் = செம்மை
அற்று = அத்தன்மைத்து
செம்மற்று = செம்மையுடைத்து
இருக்கை = இருப்பிடம்
தைஇய = இழைத்த
வரி = எழுத்து
வனப்பு = அழகு
அல்லிப்பாவை = அல்லியக் கூத்தில் ஆடும் (பயன்படுத்தப்படும்) உருவம் (பொம்மை)
ஏய்தல் = ஒத்தல்
யாமம் = நள்ளிரவு
வழங்குதல் = நடத்தல்
கா = பூந்தோட்டம்
ஒதுக்குதல் = இயங்குதல்
திணிதல் = செறிதல்
பள்ளி = இடம் (சாலை)
மாடம் = மண்டபம்
மை = செம்மறியாடு

இதன் பொருள்:-

கானுறை=====> வெண்ணெல்

காட்டில் வாழும் சினக்கொண்ட நாய்களையுடைய வேட்டுவர் மான் தசைகளை விற்பதற்காக கூடைகளில் கொண்டு வருவர்; இடைச்சியர் தயிரை விற்பதற்காகக் குடங்களில் கொண்டு வருவர். ஏரைக்கொண்டு உழவுத்தொழில் செய்யும் உழவர்களின் பெரிய இல்லங்களில் வாழும் மகளிர், வேட்டுவர் கொண்டு வந்த தசைகளையும், இடைச்சியர் கொண்டு வந்த தயிரையும் பெற்றுக் கொண்டு, குளக்கரையில் உள்ள நிலத்தில் விளைந்த நெல்லை

முகந்தனர்=====> படையோர்

அள்ளிக் கொடுக்க, வேட்டுவரும் இடைச்சியரும் மகிழ்ச்சியுடன் அந்நெல்லைப் பெற்றுச் செல்கின்றனர். இத்தகைய வளமான நல்ல ஊர், தெற்கே பொதிகைமலை உள்ள பாண்டிய நாட்டில் உள்ளது. அங்கே, ஏழு கோட்டைகளின் கதவுகளை உடைத்து அவற்றைக் கைப்பற்றி உன்னுடைய சின்னமாகிய பெரிய புலிவாயைப் பொறிக்கும் ஆற்றல் உடையவன் நீ. நீ படையெடுத்துச் சென்றதைப் புலவர்கள் புகழ்ந்து பாடுகிறார்கள். உன் படைவீரர்கள்

தாதுஎரு=====> இருக்கை

பூக்களின் தாதுக்கள் நிறைந்த தெருக்களில் உள்ள பாசறைகளில் உலராத பச்சிலைகளை இடையிடையே வைத்துக் கட்டப்பட்ட அரும்புகள் அடங்கிய பூப்பந்தைப் போன்ற, தசைகளோடு கூடிய சோற்றுருண்டைகளைப் பாணர்களின் சுற்றத்தார்களுக்கு அளித்து அவர்களை உண்பிக்கிறார்கள். இத்தகைய சிறப்பு வாய்ந்தது உன் போர்முனைகளின் இருப்பிடம்.

வல்லோன்=====> விழவினும் பலவே

அன்புடைய துணைவனும் துணைவியும், கலை வல்லுநர்களால் செய்யப்பட்ட அழகிய பாவைகள் அல்லியம் என்னும் கூத்தில் ஆடுவதைப்போல், சேர்ந்து செல்லும் குளிர்ந்த மலர்களையுடைய சோலையில், நள்ளிரவில் தனியே சென்றால் காம உணர்வு மிகும் என்ற காரணத்தால் எவரும் தனியே செல்வதில்லை. அந்தச் சோலைகளில், நடத்தற்கு இனிய, மணல் மிகுந்த, புதிய பூக்களையுடைய சாலைகளின் வாயில்களில் உள்ள மாடந்தோறும் செம்மறிக் கிடாவை வெட்டி நீ நடத்தும் விழாக்களைவிட உன் போர்முனைகளில் நீ அளிக்கும் விருந்துகள் பலவாகும்.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #33 on: February 09, 2013, 05:02:24 PM »


புறநானூறு, 34.(செய்தி கொன்றவர்க்கு உய்தி இல்லை!)
பாடியவர் : ஆலத்தூர் கிழார்.
பாடப்பட்டோன் : கிள்ளிவளவன்.
திணை : பாடாண்.
துறை: இயன் மொழி.
========================================

ஆன்முலை அறுத்த அறனி லோர்க்கும்
மாண்இழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும்
குரவர்த் தப்பிய கொடுமை யோர்க்கும்
வழுவாய் மருங்கின் கழுவாயும் உளஎன
நிலம்புடை பெயர்வ தாயினும் ஒருவன்

செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்என
அறம் பாடிற்றே ஆயிழை கணவ;
காலை அந்தியும் மாலை அந்தியும்
புறவுக் கருவன்ன புன்புல வரகின்
பாற்பெய் புன்கம் தேனொடு மயக்கிக்

குறுமுயற் கொழுஞ்சூடு கிழித்த ஒக்கலொடு
இரத்தி நீடிய அகன்தலை மன்றத்துக்
கரப்பில் உள்ளமொடு வேண்டுமொழி பயிற்றி
அமலைக் கொழுஞ்சோறு ஆர்ந்த பாணர்க்கு
அகலாச் செல்வம் முழுவதும் செய்தோன்

எங்கோன் வளவன் வாழ்க என்றுநின்
பீடுகெழு நோன்தாள் பாடேன் ஆயின்
படுபுஅறி யலனே பல்கதிர்ச் செல்வன்;
யானோ தஞ்சம்; பெரும! இவ்வுலகத்துச்
சான்றோர் செய்த நன்றுண் டாயின்

இமையத்து ஈண்டி இன்குரல் பயிற்றிக்
கொண்டல் மாமழை பொழிந்த
நுண்பல் துளியினும் வாழிய பலவே!

அருஞ்சொற்பொருள்:-

மாண் = மாட்சிமை
குரவர் = மூத்தோர் (பெற்றோர்)
தப்பல் = தவறு புரிதல்
வழுவாய் = தவறுதல்
மருங்கு = இடம், பக்கம்
கழுவாய் = பரிகாரம்
புடை = இடம்
செய்தி = செய்கை (செய்த நன்றி)
உய்தி = தப்பிப் பிழைத்தல்
ஆயிழை = தெரிந்தெடுத்த அணிகலன்களையுடையவள்
அந்தி = மாலைக்காலம், அதிகாலை
புறவு = புறா
புன்புலம் = புல்லிய இடம், தரிசு நிலம்
புன்கம் = உணவு, சோறு
சூடு = சுடப்பட்டது
ஒக்கல் = சுற்றம்
இரத்தி = இலந்தை
மன்றம் = பலர் கூடும் வெளி ( பொதுவிடம்)
கரப்பு = வஞ்சகம் (மறைத்தல்)
அமலை = திரளை, கட்டி
ஆர்ந்த = அருந்திய
பீடு = பெருமை
நோன்றாள் = நோன்+தாள் = வலிய தாள்
படுதல் = தோன்றுதல்
தஞ்சம் = எளிமை
ஈண்டுதல் = திரளுதல்
கொண்டல் = கீழ்க்காற்று
நுண்பஃறுளி = நுண்+பல்+துளி.

இதன் பொருள்:-

பசுவின் முலையை அறுத்த தீவினையாளர்களுக்கும், (சிறந்த அணிகலன்களை அணிந்த) மகளிரின் கருவை அழித்தவர்களுக்கும், பெற்றோர்களுக்குத் தவறிழைத்தவர்களுக்கும் அவர் செய்த கொடிய செயல்களை ஆராயுமிடத்து, அவர் செய்த பாவச் செயல்களின் விளைவுகளிலிருந்து நீங்குவதற்குப் பரிகாரம் உண்டு. ஆனால், உலகமே தலைகீழாகப் பெயர்ந்தாலும் ஒருவன் செய்த நற்செயல்களை அழித்தவர்களுக்கு அவற்றின் விளைவுகளிலிருந்து விடுதலை இல்லை என்று அறநூல்கள் கூறுகின்றன.

நன்கு ஆராய்ந்து எடுத்த ஆபரணங்களை அணிந்தவளின் கணவ! காலை வேளையிலும் மாலை வேளையிலும், புன்செய் நிலத்தில் விளைந்த புறாவின் முட்டை போன்ற வரகினது அரிசியைப் பாலிலிட்டு ஆக்கிய சோற்றில் தேனும், கொழுத்த முயலின் இறைச்சியும் கலந்த உணவை, இலந்தை மரத்தடியில் உள்ள பொதுவிடத்தில், வஞ்சமில்லாத உள்ளத்தோடு, வேண்டுவனெல்லாம் பேசி, பாணர்கள் உண்டு மகிழ்வார்கள். அப்பாணர்களுக்குத் தன்னுடைய பெருஞ்செல்வம் அனைத்தையும் அளித்த என் தலைவன் கிள்ளி வளவன் வாழ்க என்று பெருமை பொருந்திய உன்னை நான் பாடேனாயின், பல கதிர்களை உடைய கதிரவன் தோன்றமாட்டான். நான் எளியவன்; தலைவ! இவ்வுலகில் சான்றோர்கள் செய்த நல்ல செயல்கள் உண்டாயின், இமயமலையில் திரண்ட மேகங்கள் இனிய ஓசையுடன் பெய்த பெருமழையின் நுண்ணிய பல துளிகளைவிட அதிக நாட்கள் நீ வாழ்க.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #34 on: February 09, 2013, 05:06:27 PM »


புறநானூறு, 35.(உழுபடையும் பொருபடையும்!)
பாடியவர் : வெள்ளைக்குடி நாகனார்.
பாடப்பட்டோன் : சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்.
திணை : பாடாண்.
துறை: செவியறிவுறூஉ. அரசன் செய்ய வேண்டிய கடமைகளை முறைதவறாமல் செய்யுமாறு அவன் கேட்க அறிவுறுத்தல்.
=========================================

நளிஇரு முந்நீர் ஏணி யாக
வளிஇடை வழங்கா வானம் சூடிய
மண்திணி கிடக்கைத் தண்தமிழ்க் கிழவர்
முரசுமுழங்கு தானை மூவர் உள்ளும்
அரசுஎனப் படுவது நினதே பெரும!

அலங்குகதிர்க் கனலி நால்வயின் தோன்றினும்
இலங்குகதிர் வெள்ளி தென்புலம் படரினும்
அந்தண் காவிரி வந்துகவர்பு ஊட்டத்
தோடுகொள் வேலின் தோற்றம் போல
ஆடுகண் கரும்பின் வெண்பூ நுடங்கும்

நாடுஎனப் படுவது நினதே அத்தை; ஆங்க,
நாடுகெழு செல்வத்துப் பீடுகெழு வேந்தே!
நினவ கூறுவல் எனவ கேண்மதி:
அறம்புரிந் தன்ன செங்கோல் நாட்டத்து
முறைவேண்டு பொழுதின் பதன்எளியோர் ஈண்டு

உறைவேண்டு பொழுதில் பெயல்பெற் றோறே;
ஞாயிறு சுமந்த கோடுதிரள் கொண்மூ
மாக விசும்பின் நடுவுநின் றாங்குக்
கண்பொர விளங்கும்நின் விண்பொரு வியன்குடை
வெயில்மறைக் கொண்டன்றோஅன்றே; வருந்திய

குடிமறைப் பதுவே கூர்வேல் வளவ!
வெளிற்றுப்பனந் துணியின் வீற்றுவீற்றுக் கிடப்பக்
களிற்றுக் கணம் பொருத கண்ணகன் பறந்தலை
வருபடை தாங்கிப் பெயர்புறத் தார்த்துப்
பொருபடை தரூஉங் கொற்றமும் உழுபடை

ஊன்றுசால் மருங்கின் ஈன்றதன் பயனே;
மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும்
இயற்கை அல்லன செயற்கையில் தோன்றினும்
காவலர்ப் பழிக்கும்இக் கண்ணகன் ஞாலம்;
அதுநற்கு அறிந்தனை யாயின் நீயும்

நொதும லாளர் பொதுமொழி கொள்ளாது
பகடு புறந்தருநர் பாரம் ஓம்பிக்
குடிபுறம் தருகுவை யாயின்நின்
அடிபுறம் தருகுவர் அடங்கா தேரே.

அருஞ்சொற்பொருள்:-

நளி = செறிந்த
ஏணி = எல்லை
வளி = காற்று
திணிதல் = செறிதல்
கிடக்கை = பூமி
அலங்கு = விளங்கு
கனலி = ஞாயிறு
வயின் = இடம்
இலங்குதல் = ஒளிசெய்தல்
வெள்ளி = சுக்கிரன்
படர்தல் = செல்லுதல்
கவர்பு = வேறுபடல், பிரிதல்
தோடு = இலை
நுடங்குதல் = ஆடல்
அத்தை = அசைச் சொல்
கெழு = பொருந்திய
பீடு = பெருமை
நினவ = உன்னிடம்
எனவ = என்னுடைய
புரிதல் = செய்தல்
நாட்டம் = ஆராய்ச்சி
முறை = அரச நீதி (முறையீடு)
உறை= துளி
கோடு = பக்கம்
கொண்மூ = மேகம்
மாகம் = மேலிடம்
பொரு = முட்டிய
வெளிறு = இல்லாமை
துணி = துண்டு
வீற்று = வேறுபாடு
கணம் = திரட்சி (கூட்டம்)
கண்ணகன் = அகன்ற இடம்
பறந்தலை = போர்க்களம்
ஆர்த்தல் = பொருதல்
தரூஉம் = தரும்
கொற்றம் = வெற்றி
சால் = உழவு சால்
மருங்கு = பக்கம்
வாரி = விளைவு
நொதுமல் = அயல், விருப்பு வெறுப்பு இன்மை
பகடு = எருது
பாரம் =பெருங்குடும்பம்
ஓம்புதல் = பாதுகாத்தல்
புறந்தருதல் = ஓம்பல், தோற்றல், புகழ்தல்

இதன் பொருள்:-

நளிஇரு=====> அன்றே; வருந்திய

நீர் செறிந்த பெரிய கடல் எல்லையாக, காற்றால் ஊடுருவிச் செல்ல முடியாத, வானத்தால் சூழப்பட்ட, மண் செறிந்த இவ்வுலகில், குளிர்ந்த தமிழ் நாட்டிற்கு உரியவராகிய, முரசு முழங்கும் படையுடன் கூடிய சேர, சோழ, பாண்டிய மூவேந்தர்களுக்குள்ளும் அரசு என்று சிறப்பித்துக் கூறப்படுவது உன்னுடைய அரசுதான்.

ஒளியுடன் கூடிய கதிரவன் நான்கு திசைகளில் தோன்றினும், ஒளிறும் வெள்ளி தெற்கே சென்றாலும், அழகிய குளிர்ந்த நீரையுடைய காவிரி பல கிளைகளாகப் பிரிந்து நீர்வளம் அளிக்கிறது. அதனால், வேல்களின் தொகுப்பைப்போல் காட்சி அளிக்கும், அசையும் கணுக்களையுடைய கரும்பின் வெண்ணிறப் பூக்கள் காற்றில் ஆடுகின்றன.

உன்னுடைய நாடு அத்தகைய வளமுடையது. நாடு என்று சொல்லப்படுவது உன்னுடைய நாடுதான். அத்தகைய நாட்டையும் அதில் பொருந்திய செல்வத்தையுமுடைய, பெருமை பொருந்திய வேந்தே! உன்னிடம் சில செய்திகளைக் கூறுகிறேன்; நீ என் சொற்களைக் கேட்பாயாக.

அறமே (உருவெடுத்து) ஆட்சி செய்வதைப்போல் ஆட்சி புரிந்து, ஆராய்ச்சியுடன் செங்கோல் செலுத்தும் உன் ஆட்சியில் எளியோர் உன்னிடம் நீதி கேட்டால், மழைத்துளியை விரும்பியவர்களுக்குப் பெருமழை பெய்ததைப்போல் வேண்டிய நீதியைத் தக்க சமயத்தில் பெறுவர். கதிரவனைச் சுமந்து செல்லும் திரண்ட மேகங்கள் உயர்ந்த ஆகாயத்தின் நடுவே நின்று அதன் வெயிலை மறைப்பதுபோல் கணுக்கள் திரண்டு விளங்கி வானத்தை முட்டிப் பரந்து உயர்ந்து நிற்கும் உன் வெண்கொற்றக்குடை வெயிலை மறைப்பதற்காகப் பிடிக்கப்பட்டது அன்று.

குடிமறை=====> அடங்கா தேரே

கூரிய வேல்களை உடைய சோழனே! உன்குடை குடிமக்களின் வருத்தத்தைப் போக்குவதற்காகப் பிடிக்கப்பட்டது ஆகும். யானைகளின் தும்பிக்கைகள், துளையுள்ள பனைமரங்களின் துண்டுகள்போல் வேறுவேறு இடங்களில் வீழ்ந்து கிடக்கும் அகன்ற இடமுள்ள போர்க்களத்தில், உன் படையை எதிர்த்த உன் பகைவர்கள் புறமுதுகுகாட்டி ஓடினார்கள். உன் வீரர்கள் அதைக்கண்டு ஆரவாரித்தனர். பகைவர்களை எதிர்த்துப் போரிட்டு நீ பெறும் வெற்றி, உழவர்களின் கலப்பை நிலத்தில் ஊன்றி உழுவதால் விளைந்த நெல்லின் பயனே ஆகும். மழை பெய்யத் தவறினாலும், விளைவு குறைந்தாலும், இயற்கைக்கு மாறான நிகழ்ச்சிகள் மக்களின் செயல்களால் தோன்றினாலும் இந்தப் பரந்த உலகம் அரசர்களைத்தான் பழிக்கும். அதை நீ நன்கு அறிந்தனையாயின், அயலார் கூறும் பயனற்ற சொற்களைக் கேளாது, காளைகளை ஏர்ககளில் பூட்டி உழவுத் தொழில் செய்து பெருங்குடும்பங்களைப் பாதுகாப்பவர்களை நீ பாதுகாப்பாயானால், உன் பகைவர்களும் உன்னைப் புகழ்வர்.

சிறப்புக் குறிப்பு:-

செல்வமுடைய, பெருமை பொருந்திய வேந்தே! உன்னிடம் சில செய்திகளைக் கூறுகிறேன்; நீ என் சொற்களைக் கேட்பாயாக. நீ செங்கோல் செலுத்துகிறாய்; உன் ஆட்சி முறையாக நடைபெறுகிறது. அயலார் கூறும் பயனற்ற சொற்களைக் கேளாது, உன் குடிமக்களைப் பாதுகாப்பாயாக; நீ அவ்வாறு செய்தால் உன் பகைவர்களும் உன்னைப் புகழ்வர்” என்று அரசன் கேட்குமாறு அறிவுறுத்தியதால், இப்பாடல் செவியறிவுறூஉத் துறையை சார்ந்தது என்று கருதப்படுகிறது.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #35 on: February 09, 2013, 05:09:56 PM »


புறநானூறு, 36.(நீயே அறிந்து செய்க!)
பாடியவர் : ஆலத்தூர் கிழார்.
பாடப்பட்டோன் : சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்.
திணை : வஞ்சி.
துறை: துணை வஞ்சி.
========================================

அடுநை யாயினும் விடுநை யாயினும்
நீஅளந் தறிதிநின் புரைமை வார்கோல்
செறியரிச் சிலம்பின் குறுந்தொடி மகளிர்
பொலஞ்செய் கழங்கின் தெற்றி யாடும்
தண்ணான் பொருநை வெண்மணல் சிதையக்

கருங்கைக் கொல்லன் அரஞ்செய் அவ்வாய்
நெடுங்கை நவியம் பாய்தலின் நிலையழிந்து
வீகமழ் நெடுஞ்சினை புலம்பக் காவுதொறும்
கடிமரம் தடியும் ஓசை தன்ஊர்
நெடுமதில் வரைப்பின் கடிமனை இயம்ப

ஆங்குஇனி திருந்த வேந்தனொடு ஈங்குநின்
சிலைத்தார் முரசம் கறங்க
மலைத்தனை எண்பது நாணுத்தகவு உடைத்தே.

அருஞ்சொற்பொருள்:-

அடுநை = அழிப்பாய்
விடுநை = அழிக்காமல் விடுவாய்
புரைமை = உயர்ச்சி (பெருமை)
வார் = நுண்மை
செறி = செறிந்த
அரி = சிலம்புப் பரல்
கழங்கு = கழற்சிக்காய்
தெற்றி = மேட்டிடம்
கருமை = வலிமை
நவியம் = கோடரி
வீ = பூ
சினை = மரக்கொம்பு
புலம்பு = தனிமை
காவு = காடு
கடி = காவல்
தடிதல் = வெட்டல்
வரை = எல்லை
இயம்பல் = ஒலித்தல்
சிலை = வில்
தார் = மாலை
கறங்கல் = ஒலித்தல்
மலைத்தல் = பொருதல்
தகவு = தகுதி

இதன் பொருள்:-

பரல்கள் செறிந்த சிலம்பையும், சித்திரவேலைப்பாடுகள் அமைந்த சிறிய வளையல்களையும் அணிந்த மகளிர், பொன்னால் செய்யபட்ட கழற்காய்களை வைத்து ஆன் பொருநை ஆற்றங்கரையில், திண்ணைபோல் உயர்ந்த மணல்மேடுகளில் இருந்து விளையாடி வெண்ணிறமான ஆற்று மணலைச் சிதைக்கிறார்கள். வலிய கைகளையுடைய கொல்லன், அரத்தால் கூர்மையாகச் செய்த, நெடிய காம்புடன் கூடிய கோடரியால் காவல் மரங்களை வெட்டுவதால், நின்ற நிலையிலிருந்து கலங்கிய பூமணம் கமழும் அந்த மரங்களின் நெடிய கிளைகள் துண்டாகுகின்றன. காடுகள் தோறும் காவல் மரங்களை வெட்டும் ஓசை தன் ஊரில் உள்ள நெடிய மதில்களை அரணாகக்கொண்ட அரண்மனையில் ஒலிக்க, அங்கே, அதைப்பற்றிக் கவலையின்றி சேரன் இனிதே இருக்கிறான். வானவில் போன்ற வண்ணங்கள் நிறைந்த மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட முரசு ஒலிக்க, அவனுடன் இங்கே போர்செய்வது வெட்கப்பட வேண்டிய செயல். ஆகவே, உன் பகைவனாகிய சேரனை, நீ கொன்றாலும், கொல்லாவிட்டாலும் உன் செயலால் உனக்கு வரும் பெருமையை நீயே ஆராய்ந்து அறிந்து கொள்.

சிறப்புக் குறிப்பு:-

பிறரை வெற்றி கொள்ள நிற்பவனை சமாதானப்படுத்தும் பாடல்கள் துணைவஞ்சி என்ற துறையில் அடங்கும். சேரனை வெல்ல நினைத்து அவனுடன் போர் புரியவிருக்கும் கிள்ளிவளவனுக்கு அறிவுரை கூறிப் போரை நிறுத்துமாறு ஆலத்தூர் கிழார் இப்பாடலில் கூறுவதால், இப்பாடல் துணை வஞ்சி என்ற துறையைச் சார்ந்ததாகக் கருதப்படுகிறது.

இப்பாடலில், அரண்மனைக்கு அருகில் உள்ள காவல் மரங்களை வெட்டும் இடத்தில், சிறுமிகள் அச்சமின்றி விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், சேரன் அரண்மனையை விட்டு வெளிய வந்து போர் புரியவில்லை என்பது, அவன் வீரமற்றவன் என்பதை வலியுறுத்துவதற்காகக் கூறப்பட்டிருக்கிறது.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #36 on: February 09, 2013, 05:12:38 PM »


புறநானூறு, 37.(புறவும் போரும்!)
பாடியவர் : மாறோக்கத்து நப்பசலையார்.
பாடப்பட்டோன் : சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்.
திணை : வாகை.
துறை: அரச வாகை; முதல் வஞ்சியும் ஆகும்.
=========================================

நஞ்சுடை வால்எயிற்று ஐந்தலை சுமந்த
வேக வெந்திறல் நாகம் புக்கென
விசும்புதீப் பிறப்பத் திருகிப் பசுங்கொடிப்
பெருமலை விடரகத்து உரும்எறிந் தாங்குப்
புள்ளுறு புன்கண் தீர்த்த வெள்வேல்

சினங்கெழு தானைச் செம்பியன் மருக!
கராஅம் கலித்த குண்டுகண் அகழி
இடம்கருங் குட்டத்து உடந்தொக்கு ஓடி
யாமம் கொள்பவர் சுடர்நிழல் கதூஉம்
கடுமுரண் முதலைய நெடுநீர் இலஞ்சிச்

செம்புஉறழ் புரிசைச் செம்மல் மூதூர்
வம்புஅணி யானை வேந்துஅகத் துண்மையின்
நல்ல என்னாது சிதைத்தல்
வல்லையால் நெடுந்தகை! செருவத் தானே!

அருஞ்சொற்பொருள்:-

வால் = வெண்மை
எயிறு = பல்
ஐ = அழகு
வெம்பல் = சினத்தல்
திறல் = வெற்றி, வலி
புக்கல் = புகுதல்
என = என்று
விசும்பு = ஆகாயம்
திருகி = முறுகி
முறுகல் = வேகங் கொள்ளுதல்
விடர் = மலைப்பிளப்பு, குகை
உரும் = இடி
புள் = பறவை
புன்கண் = துன்பம்
செம்பியன் = சோழன்
மருகன் = வழித்தோன்றல்
கராம் = ஆண் முதலை, முதலையுள் ஒரு வகை
கலித்த = தழைத்த (நிறைந்த)
குண்டு = ஆழம்
குட்டம் = ஆழம், மடு
யாமம் = நள்ளிரவு
கதூஉம் = கவ்வும், பற்றும்
கடு = விரைவு
முரண் = வலிமை
நெடு = மிகுதி
இலஞ்சி = நீர்நிலை, மடு
உறழ்வு = செறிவு
புரிசை = மதில்
செம்மல் = தலைமை
மூதூர் = பழைமையான ஊர்
வம்பு = கச்சு (முகபடாம்)
சிதைத்தல் = அழித்தல்
நெடுந்தகை = பெரியோன்
செரு = போர்.

இதன் பொருள்:-

புறாவிற்கு வந்த துன்பத்தைத் தீர்த்த, ஓளி பொருந்திய வேலையுடைய, சினங்கொண்ட படையையுடைய செம்பியன் வழித்தோன்றலே! நஞ்சுடைய வெண்ணிறமான பற்களும், அழகிய தலையும், வலிமையும், சினமுமுடைய பாம்பு ஒன்று மலையிலிருந்த குகையில் புகுந்தது. அச்சமயம், வானமே தீப்பிடித்ததுபோல், வேகத்துடன், பசுமையான கொடிகள் நிறைந்த அந்த மலைக்குகையின் மேல் இடிவிழுந்து அந்த நாகத்தை அழித்தது. அதுபோல், முதலைகள் நிரம்பிய ஆழமான அகழியின் இருண்ட இடங்களில், அங்கிருந்த முதலைகள் ஒன்றாகக் கூடி, நள்ளிரவில் காவல் புரிவோரின் நிழலைக் கவ்வும் அந்த அகழிக்கு அருகே உள்ள செம்பால் புனையப்பட்ட மதிலையுடைய, தலைமை பொருந்திய பழைய ஊரில் கச்சு அணிந்த யானைகளுடைய இடத்தில் அரசன் உள்ளான் என்ற காரணத்தால், அவ்விடத்தில் உள்ளவை எல்லாம் நல்லவை என்றுகூடக் கருதாது, நீ அவற்றைப் போரில் அழிக்கும் ஆற்றல் உடையவன்.

சிறப்புக் குறிப்பு:-

அரசனது இயல்பை எடுத்துரைப்பதால் இப்பாடல் ”அரச வாகை” என்ற துறையைச் சார்ந்தது. மற்றும், சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனின் முன்னோர்களில் ஒருவனாகிய செம்பியனின் சிறப்பைக் கூறுவதால், இப்பாடல் ”முதல் வஞ்சி” என்ற துறையையும் சார்ந்ததாகக் கருதப்படுகிறது.

இப்பாடலில், பாம்பு குகைக்குள் இருப்பது பகை மன்னன் அரண்மனைக்குள் இருப்பதற்கும், இடியினால் பாம்பு அழிக்கப்படுவது கிள்ளிவளவனால் பகைமன்னன் அழிக்கப்படுவதற்கும் உவமையாகும்.

ஒரு பருந்தால் துரத்தப்பட்ட புறா ஒன்று செம்பியன் என்று அழைக்கப்பட்ட சிபி என்ற சோழ மன்னனிடம் தஞ்சம் புகுந்தது. அப்புறாவுக்குப் பதிலாக, அதன் எடைக்கு எடை ஈடாகத் தன் தசையை அளிப்பதாகவும் அந்தப் புறாவை இன்னலுக்குள்ளாக்க வேண்டாம் என்றும் அந்தப் பருந்தை சிபி வேண்டிக்கொண்டான். அந்தப் பருந்து அதற்கு சம்மதித்தது. புறாவைத் தராசின் ஒரு தட்டில் வைத்து அதற்கு எதிராக சிபி தன் உடலிலிருந்து தன் தசையை வெட்டிவைத்தான். சிபி, தன் தசைகளை எவ்வளவு வெட்டிவைத்தாலும் புறாவின் எடைக்கு சமனாகவில்லை. கடைசியாக, சிபி, தானே அந்தத் தராசில் புகுந்தான். பின்னர், அந்தப் புறாவும் அதைத் துரத்தி வந்த பருந்தும் தாங்கள் தேவர்கள் என்பதையும் அவர்கள் சிபியைச் சோதிப்பதற்காக அவ்வாறு வந்ததாகவும் கூறினர். இது ஒரு கதை. இந்தக் கதை தமிழ் நாட்டில் நெடுங்காலமாக நிலவி வந்திருக்கிறது. மாறோக்கத்து நப்பசலையார் புறநானூற்றுப் பாடல் 39-இல், “ புறவின் அல்லல் சொல்லிய” என்று மீண்டும் இந்தக் கதையை நினைவு கூர்கிறார். புலவர் தாமப்பல் கண்ணனார், பாடல் 43-இல், “தன்னகம் புக்க குறுநடைப் புறவின் தபுதி அஞ்சிச் சீரை புக்க வரையா ஈகை உரவோன் மருக” என்று சோழன் நலங்கிள்ளியின் தம்பி மாவளத்தானுக்கு அவனுடைய முன்னோர்களின் ஒருவனான சிபி, புறாவைக் காப்பாற்றியதை நினைவுபடுத்துகிறார். புறநானூற்றுப் பாடல் 46 –இல் கோவூர் கிழார் “புறாவின் அல்லல் அன்றியும், பிறவும் இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை!” என்று சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனிடம் கூறுவதையும் காண்க. மற்றும், சிலப்பதிகாரத்தில் கண்ணகி, பாண்டியன் நெடுஞ்செழியனிடம் சென்று வழக்குரைத்த போது, இப்பாடலில் உள்ள “புள்ளுறு புன்கண் தீர்த்தோன்” என்ற சொற்றடரை இளங்கோவடிகள் பயன்படுத்தியிருப்பதையும் காண்க.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #37 on: February 09, 2013, 06:42:37 PM »


புறநானூறு, 38.(வேண்டியது விளைக்கும் வேந்தன்!)
பாடியவர் : ஆவூர் மூலங்கிழார்.
பாடப்பட்டோன் : சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்.
திணை : பாடாண்.
துறை: இயன் மொழி.
========================================

வரைபுரையும் மழகளிற்றின்மிசை
வான்துடைக்கும் வகையபோல
விரவுஉருவின கொடிநுடங்கும்
வியன்தானை விறல்வேந்தே!
நீ உடன்று நோக்கும்வாய் எரிதவழ

நீ நயந்து நோக்கும்வாய் பொன்பூப்பச்
செஞ்ஞாயிற்று நிலவுவேண்டினும்
வெண்திங்களுள் வெயில்வேண்டினும்
வேண்டியது விளைக்கும் ஆற்றலை ஆகலின்
நின்நிழல் பிறந்து நின்நிழல் வளர்ந்த

எம்அளவு எவனோ மற்றே? இன்நிலைப்
பொலம்பூங் காவின் நன்னாட் டோரும்
செய்வினை மருங்கின் எய்தல் அல்லதை
உடையோர் ஈதலும் இல்லோர் இரத்தலும்
கடவ தன்மையின் கையறவு உடைத்துஎன

ஆண்டுச்செய் நுகர்ச்சி ஈண்டும் கூடலின்
நின்நாடு உள்ளுவர் பரிசிலர்
ஒன்னார் தேஎத்தும் நின்னுடைத் தெனவே

அருஞ்சொற்பொருள்:-

வரை = மலை, மலையுச்சி
புரைய = ஒரு உவமைச் சொல்
புரைதல் = ஒத்தல்
மழம் = இளமை
விரவு = கலப்பு
உருவு = வடிவம், உருவம்
நுடங்கும் = அசையும், ஆடும்
வியன் = பரந்த
விறல் = வெற்றி
உடன்று = வெகுண்டு
நயத்தல் = அன்பு செய்தல்
மற்று – அசைச் சொல்
கடவது = செய்ய வேண்டியது
கையறுதல் = செயலறுதல்
நுகர்ச்சி = அனுபவம்.

இதன் பொருள்:-

வரைபுரையும்=====> எரிதவழ

மலைபோன்ற இளம் யானைகளின்மேல், ஆகாயத்தைத் தடவுவதுபோல் பல நிறங்கள் கலந்த கொடிகள் அசைந்து ஆடுகின்றன. பெரிய படையையுடைய வெற்றி பொருந்திய வேந்தே! நீ சினந்து பார்த்தால் தீ பரவும்

நீ நயந்து=====> நின்னுடைத் தெனவே

அன்புடன் பார்த்தால் பொன் விளங்கும்; ஞாயிற்றில் நிலவை விரும்பினாலும், திங்களில் வெயிலை விரும்பினாலும் வேண்டியதை விளைவிக்கும் ஆற்றல் உடையவன். இனிய நிலையையுடைய, பொன்னாலான பூக்கள் நிறைந்த சோலைகள் உள்ள நல்ல நாடாகிய விண்ணுலகத்தில் உள்ளோர், தாம் செய்த நல்வினைக்கேற்ப இன்பம் அனுபவிக்க முடியுமே தவிர, அங்கே செல்வமுடையோர் இல்லாதோர்க்கு வழங்குவதும், வறியவர்கள் செல்வமுடையவர்களிடத்துச் சென்று இரத்தலும் செய்யக்கூடிய செயல்கள் அல்ல. விண்ணுலகில் அனுபவிக்கக் கூடிய இன்பம் மட்டுமல்லாமல் ஈகையினால் வரும் இன்பத்தையும் உன் நாட்டில் அனுபவிக்க முடியும் என்று கருதி, உன் பகைவர்களின் நாட்டில் இருந்தாலும் உன்னாடு உன்னை உடையதால் பரிசிலர் உன் நாட்டையே நினைப்பர். ஆதலால், உன் நிழலில் பிறந்து உன் நிழலில் வளர்ந்த எம் நினைவின் அளவைக் கூறவும் முடியுமோ?

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #38 on: February 09, 2013, 06:44:21 PM »


புறநானூறு, 39.(புகழினும் சிறந்த சிறப்பு!)
பாடியவர் : மாறோக்கத்து நப்பசலையார்.
பாடப்பட்டோன் : சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்.
திணை : பாடாண்.
துறை: இயன் மொழி.
=========================================

புறவின் அல்லல் சொல்லிய கறையடி
யானை வான்மருப் பெறிந்த வெண்கடைக்
கோல்நிறை துலாஅம் புக்கோன் மருக!
ஈதல்நின் புகழும் அன்றே; சார்தல்
ஒன்னார் உட்கும் துன்னரும் கடுந்திறல்

தூங்கெயில் எறிந்தநின் ஊங்கணோர் நினைப்பின்
அடுதல்நின் புகழும் அன்றே; கெடுவின்று
மறங்கெழு சோழர் உறந்தை அவையத்து
அறம்நின்று நிலையிற் றாகலின் அதனால்
முறைமைநின் புகழும் அன்றே; மறம்மிக்கு

எழுசமம் கடந்த எழுஉறழ் திணிதோள்
கண்ணார் கண்ணிக் கலிமான் வளவ!
யாங்கனம் மொழிகோ யானே? ஓங்கிய
வரையளந் தறியாப் பொன்படு நெடுங்கோட்டு
இமையம் சூட்டிய ஏம விற்பொறி

மாண்வினை நெடுந்தேர் வானவன் தொலைய
வாடா வஞ்சி வாட்டும்நின்
பீடுகெழு நோன்தாள் பாடுங் காலே.

அருஞ்சொற்பொருள்:-

சொல்லிய = “களைய”
கறை = உரல், கருங்காலி
வால் = வெண்மை
மருப்பு = கொம்பு
எறித்தல் = இட்டமைத்தல்
கோல் = துலாக்கோல்
நிறை = நிறுத்தல் அளவு
மருகன் = வழித்தோன்றல்
சார்தல் = சென்றடைதல் (நெருங்குதல்)
ஒன்னார் = பகைவர்
உட்குதல் = அஞ்சுதல்
துன்னுதல் = அணுகுதல்
தூங்கெயில் = ஆகாயக்கோட்டை
எறிந்த = அழித்த
ஊங்கணோர் = முன்னுள்ளோர்
அடுதல் = வெல்லுதல்
உறந்தை = உறையூர்
எழு = எழுந்த
சமம் = போர்
எழு = கணைய மரம்
திணி = செறிந்த
கலிமான் = குதிரை
பொன் = ஒளி
கோடு = சிகரம்
ஏமம் = காவல்
மாண் = சிறந்த
வினை = செயல் (வேலைப்பாடு)
வானவன் = சேரன்
தொலைய = அழிய
வாட்டுதல் = வருத்துதல், கெடுத்தல், அழித்தல்
பீடு = பெருமை
தாள் = முயற்சி, கால்

இதன் பொருள்:-

புறாவின் துன்பத்தைக் களைய வேண்டி, உரல் போன்ற பாதங்களையுடைய யானையின் வெண்ணிறமான தந்தத்தைக் கடைந்து செய்யப்பட்ட துலாக்கோலில் புகுந்து தன்னையே அளித்த செம்பியனின் வழித்தோன்றலே! அத்தகைய மரபில் வந்தவனாதலால், ஈதல் உனக்குப் புகழ் தருவது அன்று. பகைவர்கள் நெருங்குவதற்கு அஞ்சும், வான்தவழும் கோட்டைகளை அழித்த உன் முன்னோர்களை நினைத்துப் பார்த்தால், பகைவர்களை அழித்தல் உன் மரபினோருக்கு இயல்பான செயல். ஆதலால், அதுவும் உனக்கும் புகழ் தருவது அன்று. கேடின்றி, வீரம் பொருந்திய சோழனது உறையூரில் உள்ள அரசவையில் அறம் எப்பொழுதும் நிலைபெற்றுள்ளது. ஆகவே, முறைசெய்து நல்லாட்சி புரிவதும் உனக்குப் புகழ் தருவது அன்று. வீரம் மிகுந்து, எழுந்த போரை வென்ற, கணையமரம் போன்ற வலிய தோள்களையும், கண்ணைக் கவரும் மாலைகளையும், விரைந்து செல்லும் குதிரைகளையும் உடைய சோழ மன்னனே! உயரத்தை அளந்து அறிய முடியாத, பொன்போன்ற ஓளியுடன் மிளிறும் நெடிய சிகரங்களையுடைய இமயத்தில் தன் காவற் சின்னமாகிய வில்லைப் பொறித்தவனும், சிறப்பான வேலைப்பாடுகளுடன் கூடிய தேர்களையுடயவனுமாகிய சேரன் அழியுமாறு அவனுடைய வஞ்சி நகரத்தை அழித்த உன் பெருமைக்குரிய முயற்சியை நான் எப்படிப் பாடுவேன்?

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #39 on: February 09, 2013, 06:45:38 PM »


புறநானூறு, 40.(ஒரு பிடியும் எழு களிரும்!)
பாடியவர் : ஆவூர் மூலங்கிழார்.
பாடப்பட்டோன் : சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்.
திணை : பாடாண்.
துறை: செவியறிவுறூஉ.
========================================

நீயே, பிறர்ஓம்புறு மறமன்னெயில்
ஓம்பாது கடந்தட்டுஅவர்
முடிபுனைந்த பசும்பொன்னின்
அடிபொலியக் கழல்தைஇய
வல்லாளனை வயவேந்தே!

யாமேநின், இகழ்பாடுவோர் எருத்தடங்கப்
புகழ்பாடுவோர் பொலிவுதோன்ற
இன்றுகண் டாங்குக் காண்குவம் என்றும்
இன்சொல்எண் பதத்தை ஆகுமதி; பெரும!
ஒருபிடி படியுஞ் சீறிடம்

எழுகளிறு புரக்கும் நாடுகிழ வோயே!


அருஞ்சொற்பொருள்:-

ஓம்பல் = பாதுகாத்தல்
எயில் = அரண்
கடந்து = எதிர் நின்று
அட்டு = அழித்து
தைஇய = இழைத்த
வயம் = வெற்றி
எருத்து = கழுத்து
பொலித்தல் = சிறத்தல்
பிடி = பெண் யானை.

இதன் பொருள்:-

நீயே=====> வயவேந்தே!

பகைவர்கள் பாதுகாத்த அரண்களை ஒருபொருட்டாக மதியாது, அவற்றை அழித்து, பகைவர்களின் முடியில் சூடிய பொன்னாலாகிய மகுடங்களை உருக்கி உன் கால்களில் வீரக் கழலாக அணிந்த வலிய ஆண்மையுடைய வேந்தே!

யாமேநின்=====> நாடுகிழ வோயே

ஒரு பெண்யானை படுக்கும் சிறிய இடத்தில் ஏழு யானைகளுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் விளையும் நாட்டுக்கு உரியவனே! தலைவா! நீ இன்சொல் உடையவனாகவும் காட்சிக்கு எளியவனாகவும் இருப்பாயாக. உன்னை இகழ்ந்து பாடுவோர் தலைகுனியவும், உன்னைப் புகழ்ந்து பாடுவோர் பெருமிதத்தால் தலை நிமிர்ந்து விளங்கவும், இன்று கண்டதுபோல் என்றும் காண்போமாக.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #40 on: February 10, 2013, 10:21:18 PM »


புறநானூறு, 41.(காலனுக்கு மேலோன்!)
பாடியவர் : கோவூர் கிழார்.
பாடப்பட்டோன் : சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்.
திணை : வஞ்சி.
துறை: கொற்ற வள்ளை.
========================================

காலனும் காலம் பார்க்கும்; பாராது
வேல்ஈண்டு தானை விழுமியோர் தொலைய,
வேண்டிடத்து அடூஉம் வெல்போர் வேந்தே!
திசைஇரு நான்கும் உற்கம் உற்கவும்,
பெருமரத்து இலையில் நெடுங்கோடு வற்றல் பற்றவும்,

வெங்கதிர்க் கனலி துற்றவும், பிறவும்,
அஞ்சுவரத் தகுந புள்ளுக்குரல் இயம்பவும்,
எயிறுநிலத்து வீழவும், எண்ணெய் ஆடவும்,
களிறுமேல் கொள்ளவும், காழகம் நீப்பவும்,
வெள்ளி நோன்படை கட்டிலொடு கவிழவும்,

கனவின் அரியன காணா நனவின்
செருச்செய் முன்ப! நின் வருதிறன் நோக்கி,
மையல் கொண்ட ஏமம்இல் இருக்கையர்,
புதல்வர் பூங்கண் முத்தி, மனையோட்கு
எவ்வம் கரக்கும் பைதல் மாக்களடு

பெருங்கலக் குற்றன்றால் தானே; காற்றோடு
எரிநிகழ்ந் தன்ன செலவின்
செருமிகு வளவ! நிற் சினைஇயோர் நாடே

அருஞ்சொற்பொருள்:-

காலன் = இயமன்
ஈண்டுதல் = செறிதல், நிறைதல்
விழுமியோர் = சிறந்தோர்
அடுதல் = வெல்லுதல், கொல்லுதல்
உற்கம் = விண்வீழ் கொள்ளி
உற்கவும் = எரிந்து விழவும்
கனலி = கதிரவன்
துற்றவும் = நெருங்கவும்
புள் = பறவை
எயிறு = பல்
களிறு = ஆண் பன்றி, ஆண் யானை, விலங்கேற்றின் பொது
காழகம் = உடை
செரு = போர்
முன்பு = வலிமை
ஏமம் = பாதுகாவல்
எவ்வம் = துன்பம்
கரக்கும் = மறைக்கும்
பைதல் = துயரம்
செலவு = படையெடுப்ப
சினைஇயோர் = சினம் கொள்ளச் செய்தோர்

இதன் பொருள்:-

காலனும்=====> பற்றவும்

எமனும் உயிரைக் கொள்ள தக்க நேரம் வரை காத்திருக்கிறான். ஆனால், நீ நேரம் பார்க்காமல், வேல்களோடு கூடிய பகைவர்களின் படையை நீ விரும்பிய நேரத்தில் அழிப்பாய். போர்களில் வெற்றி பெரும் வேந்தே! . காற்றொடு தீ கலந்தாற்போல் படையெடுக்கும் வலிமை மிகுந்த சோழனே! உன்னைச் சினமூட்டியவர்களின் நாட்டில், எட்டுத் திசைகளிலும் வானத்திலிருந்து எரிகொள்ளிகள் எரிந்து விழுகின்றன; பெரிய மரத்தில் இலையில்லாத நெடிய கிளைகள் பட்டுப்போகின்றன.

வெங்கதிர்=====> கவிழவும்

கதிரவனின் கதிர்கள் சுட்டு எரிக்கின்றன; மற்றும், அச்சம் தரும் பறவைகள் ஒலிக்கின்றன. இவையெல்லாம், உன்னைச் சினமூட்டும் பகைவர்களின் நாடுகளில் உண்மையாகவே நடைபெறும் நிகழ்ச்சிகள். இவை மட்டுமல்லாமல், அங்குள்ளவர்கள் பல கெட்ட கனவுகளும் காண்கின்றனர். பற்கள் நிலத்தில் விழுவது போலவும், எண்ணெய் தேய்த்துக் குளிப்பது போலவும், பெண்பன்றி ஆண்பன்றி மேல் ஏறுவது போலவும், தங்கள் ஆடைகள் கழன்று கீழே விழுவது போலவும், ஓளி திகழும் படைக்கலங்கள் தாமிருந்த கட்டிலினின்று கவிழ்ந்து விழுவது போலவும்

கனவின்=====> சினைஇயோர் நாடே

கனவுகள் காண்கின்றனர். இதுபோல் நனவிலும் கனவிலும் காணத் தகாத நிகழ்ச்சிகளை உன் பகைவர்கள் காணுமாறு போர் செய்யும் வலியவனே! நீ படையெடுத்து வருவதைக் கண்டு, கலங்கிய பாதுகாவல் இல்லாத உன் பகைவர்கள், தம் குழந்தைகளின் பூப்போன்ற கண்களில் முத்தமிட்டு, தம் மனைவியரிடம் தம் துயரம் தெரியாதவாறு மறைத்துத் துன்பத்தோடு உள்ளனர்.

சிறப்புக் குறிப்பு:-

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனின் பகைவர்களை அழிக்கு ஆற்றல்களையும் வெற்றிகளையும் கூறுவதால் இப்பாடல் கொற்ற வள்ளை என்ற துறையைச் சார்ந்தது.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #41 on: February 10, 2013, 11:01:35 PM »


புறநானூறு, 42.(ஈகையும் வாகையும்!)
பாடியவர் : இடைக்காடனார்.
பாடப்பட்டோன் : சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்.
திணை : வாகை.
துறை: அரசவாகை.
========================================

ஆனா ஈகை அடுபோர் அண்ணல்நின்
யானையும் மலையின் தோன்றும்; பெருமநின்
தானையும் கடலென முழங்கும்; கூர்நுனை
வேலும் மின்னின் விளங்கும் ; உலகத்து
அரைசுதலை பனிக்கும் ஆற்றலை யாதலின்,

புரைதீர்ந் தன்றுஅது புதுவதோ அன்றே;
தண்புனற் பூசல் அல்லது நொந்து
களைக வாழி வளவ! என்றுநின்
முனைதரு பூசல் கனவினும் அறியாது
புலிபுறங் காக்கும் குருளை போல

மெலிவில் செங்கோல் நீபுறங் காப்பப்
பெருவிறல் யாணர்த் தாகி அரிநர்
கீழ்மடைக் கொண்ட வாளையும் உழவர்
படைமிளிர்ந் திட்ட யாமையும் அறைநர்
கரும்பிற் கொண்ட தேனும் பெருந்துறை

நீர்தரு மகளிர் குற்ற குவளையும்
வன்புலக் கேளிர்க்கு வருவிருந்து அயரும்
மென்புல வைப்பின் நன்னாட்டுப் பொருந!
மலையின் இழிந்து மாக்கடல் நோக்கி
நிலவரை இழிதரும் பல்யாறு போலப்

புலவ ரெல்லாம் நின்நோக் கினரே;
நீயே, மருந்தில் கணிச்சி வருந்த வட்டித்துக்
கூற்றுவெகுண் டன்ன முன்பொடு
மாற்றுஇரு வேந்தர் மண்நோக் கினையே.

அருஞ்சொற்பொருள்:-

ஆனா = குறையாத
அண்ணல் = மன்னன், பெருமையிற் சிறந்தோன்
தானை = படை
அரைசு = அரசன், அரசாட்சி
பனிக்கும் = நடுங்கச் செய்யும்
புரை = குற்றம், பழுது (குறை)
பூசல் = பெரிதொலித்தல்
முனை = போர்முனை
குருளை = புலிக்குட்டி
மெலிவு = தளர்ச்சி
புறங்காத்தல் = பாதுகாத்தல்
விறல் = சிறப்பு
யாணர் = புது வருவாய்
அரித்தல் = அறுத்தல்
மடை = வாய்க்கால்
வாளை = வாளை மீன்
அறைதல் = துண்டித்தல்
குற்ற = பறித்த
வன்புலம் = குறிஞ்சி, முல்லை
மென்புலம் = மருதம், நெய்தல்
அயர்தல் = செய்தல்
வைப்பு = இடம், ஊர்
கணிச்சி = கோடரி
வட்டித்தல் = சுழலுதல் (சுழற்றுதல்).

இதன் பொருள்:-

ஆனா ஈகை=====> ஆற்றலை யாதலின்

குறையாது கொடுக்கும் ஈகையும் வெல்லும் போரும் உடைய தலைவனே! உன் யானை, மலை போலத் தோன்றும். பெருமானே! உன் படைகளோ கடல் போல் முழங்கும். உன்னுடைய கூர்மையான நுனியையுடைய வேல் மின்னலைப் போல ஒளியுடன் விளங்கும். நீ உலகத்து அரசர்களெல்லாம் நடுங்கச் செய்யும் ஆற்றல் உடையவன். ஆதலால்,

புரைதீர்=====> குருளை போல

உன் நாட்டில் குறையில்லாத ஆட்சி நிலவுகிறது. இது உனக்குப் புதியது அல்ல. குளிர்ந்த நீரோட்டத்தினால் எழும் ஒலியைத் தவிர, உன் வீரர்கள் வருந்தி, “ எம் துயரத்தைக் களைக, வளவனே” என்று போர்முனையில் ஒலி எழுப்புவதை, நீ கனவிலும் கேட்டதில்லை. புலி தன் குட்டிகளைப் பாதுகாப்பதைப் போல்

மெலிவில்=====> பெருந்துறை

செங்கோல் செலுத்தி நீ உன் நாட்டு மக்களைக் காப்பாற்றுகின்றாய். உன் நாடு மிகச்சிறந்த புதுவருவாயை உடையது. அங்கு, கடைமடையில் நெல் அறுப்போர் பிடித்த வாளைமீன், உழவர்களின் ஏர் முனையில் சிக்கிய ஆமை, கரும்பு அறுப்போர் கரும்பிலிருந்து எடுத்த இனிய கருப்பஞ் சாறு, பெரிய நீர்த்துறையிலிருந்து

நீர்தரு மகளிர்=====> பல்யாறு போலப்

நீர் கொண்டுவரும் மகளிர் பறித்த குவளை மலர்கள் ஆகியவற்றை, மலை மற்றும் காடு போன்ற வலிய நிலங்களிலிருந்து வருபவர்களுக்கு விருந்தாக அளிக்கும் மருத வளம் மிகுந்த நல்ல நாட்டின் தலைவனே! மலைகளிலிருந்து வரும் ஆறுகளெல்லாம் பெரிய கடலை நோக்கிச் செல்வது போல

புலவ ரெல்லாம்=====> மண்நோக் கினையே

புலவரெல்லாம் உன்னையே நோக்கி வருகின்றனர். நீ, ஒப்பற்ற கணிச்சி என்னும் ஆயுததைச் சுழற்றிச் சினந்து கொல்லும் கூற்றுவன் போன்ற வலிமையோடு மற்ற இரு வேந்தர்களின் நிலத்தை நோக்குகிறாய்.

சிறப்புக் குறிப்பு:-

இங்கு, மற்ற இரு வேந்தர்கள் என்பது சேர பாண்டிய மன்னர்களைக் குறிக்கும்.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #42 on: February 10, 2013, 11:05:49 PM »


புறநானூறு, 43.(பிறப்பும் சிறப்பும்!)
பாடியவர் : தாமற்பல் கண்ணனார்.
பாடப்பட்டோன் : சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தான்.
திணை : வாகை.
துறை: அரசவாகை.
=======================================

நிலமிசை வாழ்நர் அலமரல் தீரத்
தெறுகதிர்க் கனலி வெம்மை தாங்கிக்
கால்உண வாகச் சுடரொடு கொட்கும்
அவிர்சடை முனிவரும் மருளக் கொடுஞ்சிறைக்
கூருகிர்ப் பருந்தின் ஏறுகுறித் தொரீஇத்

தன்னகம் புக்க குறுநடைப் புறவின்
தபுதி யஞ்சிச் சீரை புக்க
வரையா ஈகை உரவோன் மருக!
நேரார்க் கடந்த முரண்மிகு திருவின்
தேர்வண் கிள்ளி தம்பி! வார்கோல்

கொடுமர மறவர் பெரும! கடுமான்
கைவண் தோன்றல்! ஐயம் உடையேன்:
ஆர்புனை தெரியல்நின் முன்னோர் எல்லாம்
பார்ப்பார் நோவன செய்யலர்: மற்றுஇது
நீர்த்தோ நினக்குஎன வெறுப்பக் கூறி

நின்யான் பிழைத்தது நோவாய் என்னினும்
நீபிழைத் தாய்போல் நனிநா ணினையே;
தம்மைப் பிழைத்தோர்ப் பொறுக்குஞ் செம்மல்!
இக்குடிப் பிறந்தோர்க் கெண்மை காணும்எனக்
காண்டகு மொய்ம்ப! காட்டினை; ஆகலின்

யானே பிழைத்தனென்; சிறக்கநின் ஆயுள்;
மிக்குவரும் இன்னீர்க் காவிரி
எக்கர் இட்ட மணலினும் பலவே!

அருஞ்சொற்பொருள்:-

அலமரல் = வருந்தல், துன்பமுறல்
தெறு = சினம், அச்சம், துன்பம்
கனலி = கதிரவன்
கால் = காற்று
கொட்குதல் = சுழலல்
அவிர் = ஓளி
சிறை = சிறகு
உகிர் = நகம்
ஏறு = இடி
ஒரீஇ = நீக்கி (தப்பி)
தபுதி = அழிவு
சீரை = துலாத்தட்டு
உரம் = வலி
நேரார் = பகைவர்
முரண் = வலி
வண் = மிகுதி
வார் = நேர்மை
கோல் = அம்பு
கொடுமரம் = வில்
கடு = விரைவு
மான் = குதிரை
கைவண் = வண்கை = கொடைக்கை
வண்மை = ஈகை
தோன்றல் = அரசன்
ஆர் = ஆத்தி
தெரியல் = மாலை
நீர் = தன்மை
நீர்த்தோ = தன்மையான செயலோ (தகுமோ)
நனி = மிக
எண்மை = எளிமை
மொய்ம்பு = தோள்வலி
எக்கர் = மணற்குன்று

இதன் பொருள்:-

நிலமிசை=====> தொரீஇத்

உலகில் வாழ்வோரின் துன்பங்கள் தீர, சுடும் கதிரவனின் வெப்பத்தைத் தாம் பொறுத்து, காற்றை உணவாகக் கொண்டு, கதிரவனின் சுடர்போல் சுழன்று திரியும், விளங்கிய சடையையுடைய முனிவர்கள் திகைக்குமாறு, வளைந்த சிறகினையும் கூரிய நகங்களையுமுடைய பருந்தின் தாக்குதலுக்குத் தப்பி

தன்னகம்=====> வார்கோல்

தன்னிடத்தில் அடைக்கலம் புகுந்த, குறுகிய நடையையுடய புறாவின் அழிவுக்கு அஞ்சி, தராசில் புகுந்த, வரையாது வழங்கும் வள்ளலின் வழித்தோன்றலே! பகைவரை வென்ற, மிகுந்த செல்வத்தையுடைய, கிள்ளிவளவனின் தம்பியே! நீண்ட அம்பினையும்

கொடுமர=====> வெறுப்பக் கூறி

வளைந்த வில்லையுமுடைய மறவர்களுக்குத் தலைவ! விரைந்து செல்லும் குதிரைகளையும் வள்லல் தன்மையுமுடைய தலைவ! ”உன் குடிப்பிறப்பிலே எனக்கு ஐயம் எழுகிறது. ஆத்திமாலை சூடிய உன் முன்னோரெல்லாம் பார்ப்பனர்கள் நோவுமாறு எந்தச் செயலையும் செய்யமாட்டர்கள். நீ செய்த செயல் உன் தகுதிக்கு ஏற்றதோ?” என்று நீ வெறுக்குமாறு நான் கூறினேன்.

நின்யான்=====> மணலினும் பலவே!

இருப்பினும், என் பிழையைக் கண்டு வெறுக்காமல், நீ தவறு செய்ததைப்போல் வெட்கப்பட்டாய். தமக்குத் தவறிழைத்தவர்களைப் பொறுத்தருளும் தலைவ! தவறிழைத்தவர்களைப் பொறுக்கும் தகுதி உன் குலத்தில் பிறந்தார்க்கு எளிது என்று எனக்குக் காட்டிய வலியவனே! உன் செயலால் நான் பிழைத்தேன். பெருகி வரும் இனிய நீரையுடைய காவிரிக்கரையில் உள்ள மணல்மேடுகளிலுள்ள மணல்களைவிட நீ அதிக நாட்கள் வாழ்வாயாக!

சிறப்புக் குறிப்பு:-

இப்பாடலில், மாவளத்தான் தவறுகளைப் பொறுத்தருளும் இயல்பினன் என்று அவனைப் புகழ்ந்து பாடப்பட்டிருப்பதால் இப்பாடல் அரச வாகை என்னும் துறையைச் சார்ந்ததாகியது.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #43 on: February 10, 2013, 11:10:09 PM »


புறநானூறு, 44.(அறமும் மறமும்!)
பாடியவர் : கோவூர் கிழார்.
பாடப்பட்டோன் : சோழன் நெடுங்கிள்ளி.
திணை : வாகை.
துறை: அரசவாகை.
=======================================

இரும்பிடித் தொழுதியடு பெருங்கயம் படியா
நெல்லுடைக் கவளமொடு நெய்ம்மிதி பெறாஅ
திருந்தரை நோன்வெளில் வருந்த ஒற்றி
நிலமிசைப் புரளும் கைய வெய்துயிர்த்து
அலமரல் யானை உருமென முழங்கவும்

பாலில் குழவி அலறவும் மகளிர்
பூவில் வறுந்தலை முடிப்பவும் நீரில்
வினைபுனை நல்லில் இனைகூஉக் கேட்பவும்
இன்னாது அம்ம ஈங்குஇனிது இருத்தல்;
துன்னரும் துப்பின் வயமான் தோன்றல்!

அறவை ஆயின் நினதுஎனத் திறத்தல்
மறவை ஆயின் போரொடு திறத்தல்
அறவையும் மறவையும் அல்லை ஆகத்
திறவாது அடைத்த திண்ணிலைக் கதவின்
நீள்மதில் ஒருசிறை ஒடுங்குதல்
நாணுத்தக உடைத்திது காணுங் காலே

அருஞ்சொற்பொருள்:-

இரு = கரிய
பிடி = பெண் யானை
தொழுதி = கூட்டம்
கயம் = குளம்
மிதி = மிதித்துத் திரட்டப்பட்ட கவளம்
திருந்திய = செவ்விய, திருந்துதல், ஒழுங்காதல்
அரை = மரத்தின் அடிப்பாகம்
நோன் = வலி
வெளில் = யானை கட்டும் கம்பம்
ஒற்றி = தள்ளி
வெய்து = வெம்மையுடையது
உயிர்த்தல் = பெருமூச்சு விடுதல்
அலமரல் = கலங்குதல்
உரும் = இடி
இனை = வருத்தம்
ஈங்கு = இவ்விடம்
துன்னுதல் = நெருங்குதல்
துப்பு = வலி
வயம் = வலிமை
மான் = குதிரை
தோன்றல் = அரசன்
அறவை = அற வழியில் நடப்பவன்
மறவை = வீர வழியில் நடப்பவன்
திண் = வலி
சிறை = பக்கம்

இதன் பொருள்:-

இரும்பிடி=====> முழங்கவும்

ஆண் யானைகள் பெண்யானைகளின் கூட்டத்தோடு சேர்ந்து குளங்களில் படியாமல் உள்ளன; நெய்யோடு சேர்த்து, மிதித்துத் திரட்டப்பட்ட உணவுக் கவளங்களை உண்ணாமல், செவ்விய பக்கங்களையும் வலிமையுமுடைய கம்பங்களைச் சாய்த்து, நிலத்தில் புரளும் தும்பிக்கைகளுடன் வெப்பமுடைய பெருமூச்சு விட்டுக் கலங்கி இடி இடிப்பதுபோல் பிளிறுகின்றன.

பாலில்=====> தோன்றல்

குழந்தைகள் பாலில்லாமல் அலறுகின்றனர். மகளிர் பூவில்லாத வெறுந்தலையை முடிந்துகொள்கிறார்கள். நல்ல வேலைப்படுகளுடன் கூடிய வீடுகளில் வாழும் மக்கள் நீரின்றி வருந்தும் ஒலி கேட்கிறது. இனியும் நீ இங்கே இருப்பது கொடிய செயல். பகைவர்கள் நெருங்குதற்கரிய வலிமையுடைய குதிரைகளையுடைய அரசே!

அறவை=====> காணுங் காலே

நீ அறவழியில் நடக்க விரும்பினால், உன் கோட்டையின் கதவுகளைத் திறந்து, இந்த நாடு உன்னுடையது என்று நலங்கிள்ளிக்கு அளித்துப் போரைத் தவிர்ப்பாயாக; வீர வழியில் நடப்பவனாக இருந்தால் கோட்டையின் கதவுகளைத் திறந்து நலங்கிள்ளியுடன் போருக்குப் போவாயாக.” அறவழியிலும் வீரவழியிலும் செயல் படாமல், திறவாமல் அடைக்கப்பட்ட நீண்ட வலிய கதவுகளையுடைய மதில்களின் ஒருபக்கத்தில் நீ ஒளிந்திருப்பது வெட்கத்திற்குரிய செயல்.

சிறப்புக் குறிப்பு:-

சங்க காலத்தில், மன்னர்கள் தவறு செய்தால், அவர்களைத் தட்டிக் கேட்டு, இடித்துரைத்து நல்வழிப்படுத்தும் அறிவும், ஆற்றலும் உடைய புலவர்கள் இருந்தார்கள் என்பதும், அரசர்கள் புலவர்களுக்கு அந்த உரிமையைக் கொடுத்திருந்தனர் என்பதும் தெரிகிறது.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #44 on: February 10, 2013, 11:15:54 PM »


புறநானூறு, 45.(தோற்பது நும் குடியே!)
பாடியவர் : கோவூர் கிழார்.
பாடப்பட்டோன் : சோழன் நலங்கிள்ளியும், நெடுங்கிள்ளியும்.
திணை : வஞ்சி.
துறை: துணை வஞ்சி.
========================================

இரும்பனை வெண்தோடு மலைந்தோன் அல்லன்;
கருஞ்சினை வேம்பின் தெரியலோன் அல்லன்;
நின்ன கண்ணியும் ஆர்மிடைந் தன்றே; நின்னொடு
பொருவோன் கண்ணியும் ஆர்மிடைந் தன்றே;
ஒருவீர் தோற்பினும் தோற்பதும் குடியே;

இருவீர் வேறல் இயற்கையும் அன்றே; அதனால்,
குடிப்பொருள் அன்றுநும் செய்தி; கொடித்தேர்
நும்மோர் அன்ன வேந்தர்க்கு
மெய்ம்மலி உவகை செய்யும்இவ் இகலே!

அருஞ்சொற்பொருள்:-

இரு = பெரிய
வெண் = வெண்மை
தோடு = இலை, ஓலை, பூவிதழ்
மலைதல் = அணிதல், சூடுதல்
சினை = மரக்கொம்பு
தெரியல் = மாலை
கண்ணி = மாலை
ஆர் = ஆத்தி
மிடைதல் = நிறைதல், செறிதல்
வேறல் = வெல்லுதல்
பொருள் = தன்மை (தகுதி)
செய்தி = செய்கை
மலி = நிறைதல், மிகுதல்
உவகை = மகிழ்ச்சி, களிப்பு
இகல் = பகை

இதன் பொருள்:-

இரும்பனை=====> தோற்பதும் குடியே

இங்கு போர் புரிபவர்களில் யாரும் கரிய பனையின் வெண்ணிறப் பூமாலை அணிந்தவன் அல்லன்; கரிய வேம்பின் மாலையை அணிந்தவனும் அல்லன். உன்னுடைய மாலை ஆத்திப் பூக்களால் தொடுக்கப்பட்டது. உன்னோடு போர் புரிபவனின் மாலையும் ஆத்திப் பூவால் தொடுக்கப்பட்டதுதான். உங்கள் இருவரில் ஒருவர் தோற்றாலும் தோற்பது சோழனின் குடிதான்.

இருவீர் வேறல்=====> இவ் இகலே

இப்போரில் நீங்கள் இருவரும் வெற்றி பெறுவது இயற்கையும் அல்ல. ஆதலால், உங்கள் செயல் உங்கள் குடிப்பெருமைக்குத் தகுந்ததன்று. தேர்களில் கொடியோடுகூடிய உம்போன்ற வேந்தர்கள், இந்தப் போரைப்பார்த்துத் தங்கள் உடலெல்லாம் மிகவும் பூரிக்கும் வகையில் ஏளனமாகச் சிர்ப்பார்கள்.

பாடலின் பின்னணி:-

தங்களுக்குள் இருந்த பகை காரணமாக சோழன் நலங்கிள்ளிக்கும் சோழன் நெடுங்கிள்ளிக்கும் இடையே போர் மூண்டது. சோழ குலத்தில் தோன்றிய இருவரும் ஒருவரோடு ஒருவர் போரிடுவது ஏளனத்துக்குரியது என்று அவர்களுக்கு எடுத்துரைத்து, அவர்களைச் சமாதானப் படுத்துவதற்குக் கோவூர் கிழார் மேற்கொண்ட முயற்சி இப்பாடலிலிருந்து தெரிகிறது.

சிறப்புக் குறிப்பு:-

பனந்தோட்டாலாகிய மாலை சேரர்களுக்குரியது; வேப்பம்பூ மாலை பாண்டியனுக்குரியது. இங்கு, போர்புரிபவர்கள் இருவருமே சோழர்கள் என்பதைக் குறிப்பிடுவதற்காக, கோவூர் கிழார், பனந்தோட்டு மலை அணிந்தவனோ வேப்பம்பூ மாலை அணிந்தவனோ இங்கு போர் புரியவைல்லை என்று கூறுகிறார்.

இப்பாடலும், முந்திய பாடலைப்போல், கோவூர் கிழார், அரசர்கள் தவறு செய்தால் அவர்களுக்கு அறிவுரை வழங்கும் ஆற்றல் உடையவராக இருந்தார் என்பதையும் அரசர்களிடத்து அவருக்கு மிகுந்த செல்வாக்கு இருந்தது என்பதையும் உறுதிப்படுத்துகிறது.