Author Topic: ~ புறநானூறு ~  (Read 106622 times)

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #15 on: February 08, 2013, 06:43:18 PM »
புறநானூறு, 16.(செவ்வானும் சுடுநெருப்பும்)
பாடியவர் : பாண்டரங் கண்ணனார்.
பாடப்பட்டோன் : சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி.
திணை : வஞ்சி. வஞ்சிப் பூவைத் தலையில் சூடிப் பகைவரின் நாட்டைக் கைக்கொள்ளக் கருதிச் செல்லுதல்.
துறை: மழபுல வஞ்சி. பகைவர் நாட்டைக் கொள்ளையிடுதல், எரித்தல் ஆகிய செயல்களைச் செய்து அழித்தலைப் பற்றிக் கூறுதல்.
========================================

வினைமாட்சிய விரைபுரவியொடு
மழையுருவின தோல்பரப்பி
முனைமுருங்கத் தலைச்சென்றவர்
விளைவயல் கவர்புஊட்டி
மனைமரம் விறகுஆகக்

கடிதுறைநீர்க் களிறுபடீஇ
எல்லுப்பட இட்ட சுடுதீ விளக்கம்
செல்சுடர் ஞாயிற்றுச் செக்கரின் தோன்றப்
புலம்கெட இறுக்கும் வரம்பில் தானைத்
துணைவேண்டாச் செருவென்றிப்

புலவுவாள் புலர்சாந்தின்
முருகன் சீற்றத்து உருகெழு குருசில்!
மயங்குவள்ளை மலர்ஆம்பல்,
பனிப்பகன்றைக் கனிப்பாகல்
கரும்புஅல்லது காடுஅறியாப்

பெருந்தண்பணை பாழ்ஆக
ஏமநன் னாடு ஒள்எரி ஊட்டினை;
நாம நல்லமர் செய்ய
ஓராங்கு மலைந்தன பெரும!நின் களிறே.

அருஞ்சொற்பொருள்:-

விரைவு = வேகம்
புரவி = குதிரை
மழை = மேகம்
உரு = நிறம்
தோல் = கேடயம்
முனை = போர்முனை
முருங்க = கலங்க
தலைச்சென்று = மேற்சென்று
கவர்பு = கொள்ளை
ஊட்டி = அடித்து (ஊட்டுதல் = புகட்டுதல், அனுபவிக்கச் செய்தல்)
கடி = காவல்
கடிதுறை = காவற் பொய்கை
படீஇ = படியச் செய்து
எல்லு = கதிரவன்
எல் = ஒளி
செக்கர் = சிவப்பு, செவ்வானம்
புலம் = இடம்
இறுத்தல் = செலுத்தல், தங்குதல்
செரு = போர்
உரு = அச்சம்
குரிசில் = அரசன், தலைவன்
மயங்குதல் = கலத்தல்
வள்ளை = ஒருகொடி
ஆம்பல் = அல்லி
பகன்றை = சீந்தில், சிவதை, கிலுகிலுப்பை (ஒருவகைக் கொடி)
பாகல் = ஒருவகைக் கொடி
காடு = புன்செய் நிலம்
பணை = மருத நிலம்
ஏமம் = காவல்
நாமம் = அச்சம்
ஓர் ஆங்கு = ஒன்றுசேர, ஒன்று போல், எண்ணியவாறு
ஆங்கு = அவ்வாறு
மலைத்தல் = பொருதல், போரிடுதல்

இதன் பொருள்:-

வினைமாட்சிய=====> செருவென்றி

போரில் தேர்ச்சி பெற்ற, விரைந்து செல்லும் குதிரைப்படையுடனும், மேகம் போல் பரப்பிய கேடயங்களுடனும், போர்க்களம் கலங்குமாறு மேற்சென்று பகைவர்களின் நெல்விளையும் வயல்களைக் கொள்ளையிட்டாய். அவர்களின் வீட்டிலுள்ள கதவு, தூண் போன்ற மரத்தால் செய்த பொருட்களை விறகாக்கி அவற்றை தீயில் எரித்தாய். யானையைப் படியச் செய்து காவல் உள்ள நீர்த்துறைகளைப் பாழ் செய்தாய். பகைவர்களின் நாட்டில் நீ மூட்டிய தீயிலிருந்து எழுந்த ஒளி, சுடருடன் கூடிய ஞாயிற்றின் சிவந்த நிறம் போலத் தோன்றியது. பெருமளவில் படையைப் பரப்பி, துணைப்படை தேவையில்லாமல் போரில் வெற்றிபெற்றாய்.

புலவுவாள்=====> நின் களிறே

புலவு நாற்றத்தையுடைய வாளும், பூசிய சந்தனம் உலர்ந்த மார்பும், முருகன் போன்ற சினமும், அச்சமும் பொருந்திய தலைவ! ஒன்றோடு ஒன்று சேர்ந்த வள்ளையும், மலர்ந்த ஆம்பலும், குளிர்ந்த பகன்றையும், பழுத்த பாகலையும் உடைய, கரும்பு அல்லாத பிற பயிர்கள் விளையாத புன்செய் நிலமும், பெரிய குளிர்ந்த மருத நிலமும் பாழாகுமாறு பகைவர்களின் காவலுடைய நல்ல நாட்டிற்குத் தீ மூட்டினாய். அரசே! அஞ்சத்தக்க நல்ல போரை நீ எண்ணியவாறு உன் யானைகள் செய்தன.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #16 on: February 08, 2013, 06:44:39 PM »
புறநானூறு, 17.(யானையும் வேந்தனும்!)
பாடியவர் : குறுங்கோழியூர்கிழார்.
பாடப்பட்டோன் : சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை.
திணை : வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.
துறை: அரசவாகை. அரசனது இயல்பை எடுத்துரைப்பது அரச வாகையாகும்.
=========================================

தென் குமரி, வட பெருங்கல்,
குண குட கடலா வெல்லை,
குன்று, மலை, காடு, நாடு
ஒன்று பட்டு வழி மொழியக்
கொடிது கடிந்து, கோல் திருத்திப்

படுவது உண்டு, பகல் ஆற்றி,
இனிது உருண்ட சுடர் நேமி
முழுது ஆண்டோர் வழி காவல!
குலை இறைஞ்சிய கோள் தாழை
அகல் வயல், மலை வேலி

நிலவு மணல் வியன் கானல்
தெண் கழிமிசைச் சுடர்ப் பூவின்
தண் தொண்டியோர் அடு பொருந!
மாப் பயம்பின் பொறை போற்றாது
நீடு குழி அகப் பட்ட

பீடு உடைய எறுழ் முன்பின்
கோடு முற்றிய கொல் களிறு
நிலை கலங்கக் குழி கொன்று
கிளை புகலத் தலைக் கூடியாங்கு
நீ பட்ட அரு முன்பின்

பெருந் தளர்ச்சி பலர் உவப்பப்
பிறிது சென்று மலர் தாயத்துப்
பலர் நாப்பண் மீக் கூறலின்
உண் டாகிய உயர் மண்ணும்
சென்று பட்ட விழுக் கலனும்

பெறல் கூடும் இவன்நெஞ்சு உறப்பெறின் எனவும்,
ஏந்து கொடி இறைப் புரிசை
வீங்கு சிறை வியல் அருப்பம்
இழந்து வைகுதும் இனிநாம் இவன்
உடன்று நோக்கினன் பெரிது எனவும்

வேற்று அரசு பணி தொடங்குநின்
ஆற்ற லொடு புகழ் ஏத்திக்
காண்கு வந்திசின் பெரும! ஈண்டிய
மழையென மருளும் பல்தோல் மலையெனத்
தேன் இறை கொள்ளும் இரும்பல் யானை

உடலுநர் உட்க வீங்கிக் கடலென
வான்நீர்க்கு ஊக்கும் தானை ஆனாது
கடுஒடுங்கு எயிற்ற அரவுத்தலை பனிப்ப
இடியென முழங்கு முரசின்
வரையா ஈகைக் குடவர் கோவே!

அருஞ்சொற்பொருள்:-

குணக்கு = கிழக்கு
குடக்கு = மேற்கு
கோல் = அரசாட்சி
படுவது = உரியது, அனுபவிப்பது
பகல் = நடுநிலை
நேமி = சக்கரம்
கோள் = கொள்ளத்தக்க
தாழை = தென்னை
கானல் = கடற்கரை, காடு
தெண் = தெளிந்த
கழி = கடலையடுத்த உப்பங்கழி
தொண்டி = தொண்டி என்னும் ஊர்
அடுதல் = வெல்லுதல்
பொருநன் = அரசன்
பயம்பு = பள்ளம்
பொறை= பூமி
எறுழ் = வலிமை
முன்பு = வலிமை
கோடு = கொம்பு
கிளை = உறவு
புகலுதல் = விரும்புதல்
தலைக்கூடுதல் = நிறைவேற்றுதல் (சேர்தல்)
அரு = காணமுடியாத (பொறுத்தற்கரிய)
தாயம் = சுற்றம்
நாப்பண் = நடுவே
உண்டு = தன்னிடத்தே இருந்த
உயர்மண் = உயர்ந்த நிலம்
உறல் = அணைதல், சார்தல், புணர்தல்
ஏந்தல் = உயர்ச்சி
இறை = உயர்ச்சி, தங்குதல்
புரிசை = மதில்
வீங்கு = மிக்க
சிறை = காவல்
வியல் = அகலம்
அருப்பம் = அரண், மதில்
வைகுதல் = இருத்தல்
உடன்று = வெகுண்டு
ஈண்டுதல் = திரளுதல்
தோல் = கேடயம்
தேன் = வண்டு
இரு = பெரிய
உடலுநர் = பகைவர்
உட்குதல் = அஞ்சுதல்
ஊக்கும் = முயலும்
ஆனாது = அமையாது
கடு = நஞ்சு
ஒடுங்குதல் = பதுங்கல், தங்குதல்
எயிறு = பல்
அரவு = பாம்பு
பனி = நடுக்கம்
வரையா = அளவில்லாத (குறையாத)
குடவர் = குட நாட்டவர்

இதன் பொருள்:-

தென் குமரி=====> நீடு குழி அகப் பட்ட

தெற்கே குமரியும், வடக்கே இமயமும், கிழக்கிலும் மேற்கிலும் கடலை எல்லையாகக்கொண்டு குன்று, மலை, காடு, நாடு ஆகியவற்றில் வாழ்வோர் ஒருங்கே வழிபாடு செய்ய, கொடுமைகளை நீக்கி, செங்கோல் செலுத்தி, உரிய வரியைத் திரட்டி நடுவு நிலைமையோடு உலகம் (தமிழ் நாடு) முழுவதையும் இனிமையாக நல்லாட்சி புரிந்தவர்களின் வழித்தோன்றலே!

குலைகள் தாழ்ந்து பறிப்பதற்கு ஏற்றதாக உள்ள தென்னை மரங்களையும், அகன்ற வயல்களையும், மலையையே வேலியாக உள்ள இடங்களையும், நிலவு போன்ற மணல் நிறைந்த கடற்கரையையும், தெள்ளிய கழியிடத்து நெருப்புப்போல் பூத்த சிவந்த ஒளிவிடும் பூக்களையும் உடைய குளிர்ந்த தொண்டி என்னும் ஊரில் வாழ்வோரின் வெற்றி வேந்தனே!

பெரிய குழியான இடம் இருப்பதை அறியாது, அந்த நெடிய குழியில் வீழ்ந்த

பீடு உடைய=====> இரும்பல் யானை

செருக்கும், மிகுந்த வலிமையும் உடைய, தந்தங்கள் முதிர்ந்த யானை அக்குழியைத் தூர்த்துத் தன்னை விரும்பும் சுற்றத்தோடு சென்று வாழ்ந்ததைப்போல் உன் அரிய வலிமையால் பகைவரிடம் நீ அடைந்த தளர்ச்சியினின்று நீங்கி, மீண்டும் அகன்ற உன் நாட்டிற்குச் சென்றது உன் சுற்றத்தார் நடுவே புகழ்ந்து பேசப்படுகிறது. நீ பாண்டியனால் தோற்கடிக்கப்பட்டு சிறையிலடைக்கப்படுவதற்கு முன்பு, உன்னால் தோற்கடிக்கப்பட்ட உன் பகைவர்கள், “இவன் மனமுவந்தால் நாம் இழந்த நம் நாட்டையும் இவனால் கொள்ளப்பட்ட அணிகலன்களையும் திரும்பப்பெறக்கூடும்” என்று எண்ணினார்கள். மற்றும், உன் வரவை எதிர்பாராத பகைவர்கள், தாங்கள் கவர்ந்து கொண்ட கொடி பறக்கும் உயர்ந்த மதில், மிகுந்த காடுகள், அகழி முதலியவைகளைக் காவலாக உடைய அரண்களை இழந்து வருந்த நேரிடும் என்று எண்ணினார்கள். இவ்வாறு எண்ணிய உன் பகைவர்கள் உனக்குப் பணிபுரிவதற்குக் காரணமாகிய உன் புகழை வாழ்த்தி உன்னைக் காண வந்தேன். உன் வீரர்கள் ஏந்தியிருக்கும் கேடயங்கள் திரண்ட மேகங்களைப்போல் காட்சி அளிக்கின்றன. உன் யானைகளைப் பெரிய மலை என்று எண்ணி தேனீக்களின் கூட்டம் அவைகளிடம் வந்து தங்குகின்றன.

உடலுநர்=====> குடவர் கோவே

பகைவர்கள் அஞ்சும் உன் படையைக் கடலென்று கருதி மேகங்கள் நீர் கொள்ள முயலுகின்றன. இத்துணை வலிமையும் பெருமையும் உடைய படைகள் மட்டுமல்லாமல், பல்லில் நஞ்சுடைய பாம்பு நடுங்குமாறு இடிபோல் முழங்கும் முரசும் உடையவனே! குறையாத கொடையுடைய குடநாட்டின் அரசே!
=========================================

பாடலின் பின்னணி

சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் சிறையிலிருந்து தப்பிச் சென்றதை இப்பாடலில் குறுங்கோழியூர் கிழார் புகழ்ந்து பாடுகிறார். அவன் சிறையிலிருந்து தப்பிச் சென்றதை, குழியில் அகப்பட்ட யானை, தன் வலிமையால் குழியைத் தூர்த்து வெளியேறிச் சென்று தன் இனத்தோடு வாழ்ந்ததற்கு ஒப்பிடுகிறார்.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #17 on: February 08, 2013, 06:46:07 PM »
புறநானூறு, 18.(நீரும் நிலனும்)
பாடியவர் : குடபுலவியனார்.
பாடப்பட்டோன் : பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.
திணை : பொதுவியல்.
துறை: முதுமொழிக் காஞ்சி; பொருண்மொழிக் காஞ்சி எனவும் பாடம்.
=========================================

முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇப்
பரந்து பட்ட வியன் ஞாலம்
தாளின் தந்து, தம்புகழ் நிறீஇ:
ஒருதாம் ஆகிய உரவோர் உம்பல்!
ஒன்றுபத்து அடுக்கிய கோடிகடை இரீஇய

பெருமைத்து ஆக நின் ஆயுள் தானே!
நீர்த் தாழ்ந்த குறுங் காஞ்சிப்
பூக் கதூஉம் இன வாளை,
நுண் ஆரல், பரு வரால்,
குரூஉக் கெடிற்ற, குண்டு அகழி;

வான் உட்கும் வடிநீண் மதில்;
மல்லல் மூதூர் வய வேந்தே!
செல்லும் உலகத்துச் செல்வம் வேண்டினும்,
ஞாலம் காவலர் தோள்வலி முருக்கி,
ஒருநீ ஆகல் வேண்டினும், சிறந்த

நல்இசை நிறுத்தல் வேண்டினும், மற்றதன்
தகுதி கேள், இனி, மிகுதியாள!
நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே;
உண்டி முதற்றே உணவின் பிண்டம்;

உணவெனப் படுவது நிலத்தோடு நீரே;
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசி னோரே;
வித்திவான் நோக்கும் புன்புலம் கண்ணகன்
வைப்புற்று ஆயினும், நண்ணி ஆளும்

இறைவன் தாட்குஉத வாதே; அதனால்,
அடுபோர்ச் செழிய! இகழாது வல்லே
நிலன்நெளி மருங்கின் நீர்நிலை பெருகத்
தட்டோர் அம்ம, இவண்தட் டோரே;
தள்ளா தோர்இவண் தள்ளா தோரே.

அருஞ்சொற்பொருள்:-

முழங்குதல் = ஒலித்தல்
முந்நீர் = கடல்
வளைஇ = சூழப்பட்டு
தாள் = முயற்சி
தந்து = கொண்டு
உரம் = வலி
உம்பல் = வழித்தோன்றல்
இரீஇய = இருக்கச் செய்த
கதூஊம் = பற்றும் (கதுவுதல் = பற்றுதல்)
பரு = கனத்த
குரு = ஒளி
கெடிறு = கெளிற்று மீன்
உட்கும் = அஞ்சும்
வடிதல் = நீளுதல்
மல்லல் = வளமை
வயம் = வலி
முருக்கி = அழித்து
மிகுதியாள = பெரியோன்
பிண்டம் = உடல்
வித்தி = விதைத்து
வைப்பு = இடம்
நண்ணி = நெருங்கி (பொருந்தி)
தாள் = முயற்சி
வல்லே = விரைவாக
நெளிதல் = குழிதல், வளைதல்
தட்டல் = முட்டுப்பாடு
தட்டோர் = தடுத்தோர்
அம்ம - அசைச் சொல்
தள்ளோதார் = தடுக்காதவர்

இதன் பொருள்:-

முழங்கு=====> பிண்டம்

ஒலிக்கும் கடல் சூழ்ந்த பரந்து கிடக்கும் அகன்ற உலகத்தைத் தமது முயற்சியால் வென்று, தம்முடைய புகழை உலகத்தில் நிலைநிறுத்தித் தாமே ஆட்சி செய்த வலியவர்களின் வழித்தோன்றலே! ஒன்று, பத்து என்ற எண்களின் வரிசையில் கடைசி எண்ணாகக் கருதப்படும் கோடி என்ற பெருமையுடைய எண் அளவுக்கு நீ வாழ்க! நீரளவுக்குத் தாழ்ந்து இருக்கும் சிறிய காஞ்சிப்பூவைக் கவ்வும் வாளை மீன்களின் கூட்டமும், சிறிய ஆரல் மீன்களும், பருத்த வரால் மீன்களும், ஒளிறும் கெளிறு மீன்களும் நிறைந்துள்ள ஆழமான அகழியும், வானளாவிய நெடிய மதிலும் உடைய வளமான பழைய ஊரில் உள்ள வலிய வேந்தனே! நீ மரணத்திற்குப் பிறகு செல்ல இருக்கும் உலகத்தில் அனுபவிப்பதற்கேற்ற செல்வத்தை விரும்பினாலும், உலகத்தை காக்கும் மற்ற அரசர்களின் வலிமையை அழித்து நீ ஒருவனே தலைவனாக விரும்பினாலும், சிறந்த புகழை நிலைநாட்ட விரும்பினாலும், அதற்குரிய தகுதியை நான் கூறுகிறேன்; நீ அதைக் கேட்பாயாக! நீரில்லாமல் வாழ முடியாத இவ்வுடலுக்கு உணவு கொடுத்தவர்கள்தான் உயிர் கொடுத்தவர் ஆவர். உணவாலாகிய இவ்வுடலுக்கு உணவுதான் முதன்மையானது.

உணவெனப் படுவது=====> தள்ளா தோரே

ஆகவே, உணவு என்று சொல்லப்படுவது நிலத்தோடு கூடிய நீர். அந்நீரையும் நிலத்தையும் ஒன்று சேர்த்து உணவுப் பொருள்களை விளைவித்தவர்கள்தான் உயிரையும் உடலையும் வாழவைப்பவர் ஆவர். விதைகளை விதைத்துவிட்டு மழையை எதிர்பார்த்திருக்கும் புன்செய் நிலம் அகன்ற பரப்புடையதாக இருந்தாலும் அதனால் மன்னனுக்கு ஒருபயனுமில்லை. ஆகவே, கொல்லும் போரையுடைய பாண்டியனே! நான் கூறுவதை இகழாது கேள்! வளைந்து செல்லும் ஆழமான இடங்களில் விரைந்து நீர்நிலைகளை உருவாக்கியவர்கள்தான் இவ்வுலகில் தாம் விரும்பியவற்றைத் தடுத்து நிறுத்தி வைத்துக்கொண்டவராவர். அவ்வாறு செய்யாதவர்கள், இவ்வுலகில் தாம் விரும்பியவற்றை நிலை நிறுத்திக் கொள்ளாதவராவர்.

சிறப்புக் குறிப்பு.

”நீர் இன்று அமையாது உலகு” என்று வள்ளுவர் கூறுவது இங்கு ஒப்பு நோக்கத் தக்கது.

”நீர்நிலை பெருகத் தட்டோர் அம்ம இவண் தட்டோரே; தள்ளாதோர் இவன் தள்ளாதோரே” என்ற இந்த அடிகளில் நீர்நிலைகள் கட்டி நீரைத் தேக்கி வைத்தவர்கள், செல்வம், புகழ், ஆட்சி முதலியவற்றைத் தக்க வைத்துக்கொள்ள முடியும் என்ற கருத்தும் உலகுக்கு நீர் இன்றையமையாததால், நீர்நிலைகள் கட்டி, நீரைத் தேக்கி வைக்கத் தவறியவர்கள் செல்வம், புகழ், ஆட்சி முதலியவற்றை இழக்க நேரிடும் என்றும் குடபுலவியனார் கூறுவதாகக் கொள்ளலாம்.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #18 on: February 08, 2013, 06:47:20 PM »
புறநானூறு, 19.(எழுவரை வென்ற ஒருவன்)
பாடியவர் : குடபுலவியனார்.
பாடப்பட்டோன் : பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.
திணை : வாகை.
துறை: அரசவாகை. அரசனது இயல்பை எடுத்துரைப்பது அரச வாகையாகும்.
=========================================

இமிழ்கடல் வளைஇய ஈண்டுஅகல் கிடக்கைத்
தமிழ்தலை மயங்கிய தலையாலங் கானத்து
மன்உயிர்ப் பன்மையும் கூற்றத்து ஒருமையும்
நின்னொடு தூக்கிய வென்வேற் செழிய!
இரும்புலி வேட்டுவன் பொறிஅறிந்து மாட்டிய

பெருங்கல் அடாரும் போன்ம்என விரும்பி
முயங்கினேன் அல்லனோ யானே; மயங்கிக்
குன்றத்து இறுத்த குரீஇஇனம் போல
அம்புசென்று இறுத்த அரும்புண் யானைத்

தூம்புஉடைத் தடக்கை வாயடு துமிந்து
நாஞ்சில் ஒப்ப நிலமிசைப் புரள,
எறிந்துகளம் படுத்த ஏந்துவாள் வலத்தர்
எந்தையோடு கிடந்தோர் எம்புன் தலைப்புதல்வர்
இன்ன விறலும் உளகொல் நமக்குஎன,
மூதில் பெண்டிர் கசிந்துஅழ, நாணிக்

கூற்றுக்கண் ஓடிய வெருவரு பறந்தலை,
எழுவர் நல்வலங் கடந்தோய்நின்
கழூஉ விளங்கு ஆரம் கவைஇய மார்பே.

அருஞ்சொற்பொருள்:-

இமிழல் = ஒலித்தல்
கிடக்கை = உலகம்
ஈண்டுதல் = செறிதல்
தலை = இடம்
மயங்குதல் = கலத்தல், கூடுதல்
தூக்குதல் = ஆராய்தல், ஒப்பு நோக்குதல்
இரு = பெரிய
அடார் = விலங்குகளை அகப்படுத்தும் பொறி
போன்ம் = போலும்
முயங்குதல் = தழுவுதல்
மயங்கி = கலங்கி
இறுத்தல் = தங்குதல்
குரீஇ = குருவி
தூம்பு = இடுக்கு, துளை
தடக்கை = பெரிய கை, வளைந்த கை
துமித்தல் = அறுத்தல்
நாஞ்சில் = கலப்பை
எறிதல் = அறுத்தல்
படுத்தல் = வீழ்த்துதல்
வலம் = வெற்றி, வலி
எந்தை = எம்+தந்தை = எம் தலைவன்
விறல் = வெற்றி
மூதில் = மறக்குடி
கசிதல் = உருகுதல், நெகிழ்தல்
வெரு = அச்சம்; பறந்தலை = போர்க்களம்
கடத்தல் = வெல்லுதல்
கழூஉ = கழுவி
கவைஇய = அகத்திட்ட

இதன் பொருள்:-

ஒலிக்குங் கடலால் சூழப்பட்ட திரண்ட, அகன்ற உலகில் தமிழர்களின் படைகள் தலையாலங்கானத்தில் கைகலந்தன. அப்போரில், பல உயிர்களைத் தனியன் ஒருவனாகக் கொன்ற உனக்கு கூற்றுவன் ஒப்பானவனா என்று ஆராயத்தக்க அளவிற்கு உன் வெற்றிக்குக் காரணமான வேலையுடைய செழிய! வயல்களிலிருந்து தம் நிலை கலங்கி மலைக்குச் சென்று தங்கிய குருவிக் கூட்டம் போல் உடலெங்கும் அம்புகள் துளைத்துத் தங்கியதால் பொறுத்தற்கரிய புண்களைக் கொண்ட யானையின் துளையுடைய பெரிய தும்பிக்கை வாளால் வெட்டப்பட்டு நிலத்தில் கலப்பையைப்போல் புரளுகிறது. அவ்வாறு தும்பிக்கையை வாளால் வெட்டிய வீர இளைஞர்கள் தம் தந்தையரோடு போர்க்களத்தில் இறந்து கிடக்கின்றனர். அதைக் கண்ட மறக்குல மகளிர், இத்தகைய வெற்றியும் நமக்குக் கிடைத்ததோ என்று கண் கசிந்து அழுகின்றனர். அஞ்சத்தக்க போர்க்களத்தில் எழுவரின் நல்ல வலிமையை அழித்தாய். உன் அழிக்கும் ஆற்றலைக் கண்டு கூற்றுவன் வருந்தி நாணுகிறான்.

பெரிய புலியைப் பிடிக்கும் வேடன் மாட்டிய அடார் என்னும் கல்லைப் போன்ற மார்பினன் என்று எண்ணி, கழுவி விளங்கிய முத்தாரம் அணிந்த உன் மார்பை விரும்பித் தழுவினேன் அல்லனோ!

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #19 on: February 08, 2013, 06:48:27 PM »
புறநானூறு, 20.(மண்ணும் உண்பர்)
பாடியவர் : குறுங்கோழியூர்கிழார்.
பாடப்பட்டோன் : சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை.
திணை : வாகை.
துறை: அரசவாகை.
=========================================

இருமுந்நீர்க் குட்டமும்
வியன்ஞாலத்து அகலமும்
வளிவழங்கு திசையும்
வறிது நிலைஇய காயமும் என்றாங்கு
அவைஅளந்து அறியினும் அளத்தற்கு அரியை;

அறிவும் ஈரமும் பெருங்க ணோட்டமும்
சோறுபடுக்கும் தீயொடு
செஞ்ஞாயிற்றுத் தெறல்அல்லது
பிறிதுதெறல் அறியார் நின்நிழல்வாழ் வோரே;
திருவில் அல்லது கொலைவில் அறியார்;

நாஞ்சில் அல்லது படையும் அறியார்;
திறனறி வயவரொடு தெவ்வர் தேயஅப்
பிறர்மண் உண்ணும் செம்மல் நின்நாட்டு
வயவுறு மகளிர் வேட்டுஉணின் அல்லது
பகைவர் உண்ணா அருமண் ணினையே!

அம்புதுஞ்சும் கடிஅரணால்
அறம்துஞ்சும் செங்கோலையே!
புதுப்புள் வரினும் பழம்புள் போகினும்
விதுப்புற அறியா ஏமக் காப்பினை
அனையை ஆகல் மாறே
மன்னுயிர் எல்லாம் நின்அஞ் சும்மே.

அருஞ்சொற்பொருள்:-

இரு = பெரிய
முந்நீர் = கடல்
குட்டம் = ஆழம்
காயம் = ஆகாயம்
வறிது = உள்ளீஈடற்றது
ஈரம் = அருள்
படுத்தல் = செய்தல்
தெறல் = வெம்மை
திருவில் = வானவில்
நாஞ்சில் = கலப்பை
திறன் = கூறுபாடு, வழி
வயவர் = வீரர்
செம்மல் = தலைவன்
வயவு = கருப்பம்
வேட்டல் = விருப்பம்
துஞ்சும் = தங்கும்
துஞ்சல் = நிலைத்தல்
ஏமம் = காவல்
விதுப்பு = நடுக்கம்
அனைய ஆகன் மாறு = அத்தன்மையை உடைமையால்

இதன் பொருள்:-

இருமுந்நீர்=====> கொலைவில் அறியார்

பெரிய கடலின் ஆழத்தையும், அகன்ற உலகத்தின் அகலத்தையும், காற்று செல்லும் திசையையும், ஆகாயத்தின் வெறுமையையும் அளந்து அறிய முடிந்தாலும், உன்னுடைய அறிவும், அருளும், கண்ணோட்டமும் அளப்பதற்கு அரிது. உன் நாட்டில், சோறு சமைப்பதற்காக மூட்டிய தீயின் வெப்பமும் சிவந்த ஞாயிற்றின் கதிர்களால் எழும் வெப்பமும்தான் உண்டு. இவற்றைத் தவிர வேறு வெப்பத்தை உன் ஆட்சியில் வாழ்வோர் அறிந்திலர். வானவில் அல்லது கொலைவில்லை அவர்கள் அறியமாட்டர்கள்.

நாஞ்சில்=====> நின்அஞ் சும்மே

கலப்பையைத் தவிர வேறு படையை அவர்கள் அறிந்திலர். போர்த்திறம் மிக்க வீரர்களோடு சென்று பகைவர்களின் நாட்டைக் கவரும் அரசே! உன் நாட்டில் கருவுற்ற பெண்கள் வேட்கையால் உன் நாட்டு மண்ணை உண்ணுவார்களே தவிர உன் பகைவர்களால் உன் நாட்டு மண்ணைக் கொள்ள முடியாது.

உன் நாட்டில் அம்புகளோடு கூடிய காவலுடைய இடங்கள் உள்ளன. அங்கே, நீ அறம் நிலைபெற்ற செங்கோல் செலுத்துகிறாய். புதிய பறவைகள் வருவது பழைய பறவைகள் தங்கள் இடத்தைவிட்டுச் செல்வது போன்ற நிமித்தங்களால் நீ கலங்காமல் வாழக்கூடிய காவலுடையவன். நீ அத்தகையவன் ஆதலால், உலகத்து உயிர்களெல்லாம் உன் நன்மையைக் கருதி அஞ்சிக் கொண்டிருக்கிறார்கள்.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #20 on: February 09, 2013, 04:10:03 PM »
புறநானூறு, 21
பாடியவர்: ஐயூர் மூலங்கிழார்.
பாடப்பட்டோன்: கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி.
திணை: வாகை.
துறை: அரச வாகை
======================================

"புலவரை யிறந்த புகழ்சாற் றோன்றல்
நிலவரை யிறந்த குண்டுகண் ணகழி
வான்றோய் வன்ன புரிசை விசும்பின்
மீன்புத் தன்ன வுருவ ஞாயிற்
கதிர்நுழை கல்லா மரம்பயிற் கடிமிளை
அருங்குறும் புடுத்த கானப் பேரெயில்
கருங்கைக் கொல்லன் செந்தீ மாட்டிய
இரும்புண் நீரினும் மீட்டற் கரிதென
ஆடுகொளக் குழைந்த தும்பைப் புலவர்
பாடுதுறை முற்றிய கொற்ற வேந்தே
இகழுந ரிசையொடு மாயப்
புகழொடு விளங்கிப் பூக்கநின் வேலே!"

இதன் பொருள்:-

புலவரை இறந்த=====> மரம்பயில் கடிமிளை;

புலவர், தம் பாடும் அளவிற்கும் மேம்பட்ட புகழுடையவனே,

பாதாள உலகத்தை எட்டும் அளவை உடைய ஆழமான அகழிகளையும்,
வானை முட்டுவது போன்ற உயரமான மதில்களையும்,
வானின்கண் விண்மீன் பூத்தது போல் ஆங்காங்கே ஒளி வீசிக்கொண்டிருக்கும் மதில் புறத்து ஏவறைகளையும்,
கதிரவனின் கதிர் நுழைய முடியாதபடிக்கு இருக்கும் காவற்காட்டினையும்,

அருக்குறும்பு====> பூக்கநின் வேலே

கொண்டு, சூழ முடியாதபடி அரிதாய் விளங்கிய "கானப்பேரெயில்", பல அரண்களை உடையதாயிருந்தது!

கரிய வலிமையான கைகளை உடைய கொல்லனின் உலைக் களத்தினில் காய்ச்சிய இரும்பு, அது உண்ட நீரைத், திரும்பப் பெறுவது இயலாது!
அதுபோல், உக்கிரப் பெருவழுதி கைக்கொண்ட எனது கானப்பேரெயிலை மீட்பது இயலாது என, அதை ஆண்ட மன்னன் வேங்கைமார்பன் வருந்தும்படியாக கானப்பேரெயிலை வெற்றிகொண்டாய்!
அது போன்றே, தும்பை அணிந்து நீ போர் புரிந்து பல மன்னர்களை வெற்றி கொண்டு, புலவர் பாடும் புறத்துறை அனைத்தையும் செயலில் செய்த வீரனே, உன் பகைவரின் புகழ் கெட, உன் கை வேல் புகழொடு விளங்குவதாக!

கானப்பேரெயில்- இது தற்போது, காளையார்கோவில் என்று வழங்கப்பெறுகிறது!
இந்தக் கானப்பேரெயிலை ஆண்ட வேங்கைமார்பனை வெற்றிகொண்ட உக்கிரப்பெருவழுதியை பாராட்டி, ஐயூர் மூலங்கிழாரால் பாடப்பெற்ற இப்பாடல், உவமை அழகு செறிந்தது!

அதற்குச் சான்று,
"கருங்கைக் கொல்லன் செந்தீ மாட்டிய
இரும்புண் நீரினும் மீட்டற்கு அரிது"
என்னும் அடிகளே!

நெருப்பில் காய்ச்சிய இரும்பில் பட்ட நீரை, மறுபடியும் திரும்பப் பெறுவது எப்படி அரிதோ?!
அதேபோல், உக்கிரப்பெருவழுதி கொண்ட கானப்பேரெயிலை மீட்பது அரிது என்று அதை ஆண்ட வேங்கைமார்பன் எண்ணுவது உவமையின் சிறப்பு!

ஞாயில்= ஏவறை; மதில்புறத்து அமைந்த அம்பு ஏவும் அறை.
கடிமிளை= காவற்காடு; கணையம்.
வைகல்= நாள்.
இகழுநர்= பகைவர்.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #21 on: February 09, 2013, 04:12:18 PM »
புறநானூறு, 22.(ஈகையும் நாவும்!)
பாடியவர் : குறுங்கோழியூர்கிழார்.
பாடப்பட்டோன் : சேரமான் யானைக்கட் சேஎய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை.
திணை : வாகை.
துறை: அரசவாகை.
=========================================

தூங்குகையான் ஓங்குநடைய
உறழ்மணியான் உயர்மருப்பின
பிறைநுதலான் செறல்நோக்கின
பாவடியால் பணைஎருத்தின
தேன்சிதைந்த வரைபோல

மிஞிறுஆர்க்கும் கமழ்கடாஅத்து
அயறுசோரும் இருஞ்சென்னிய
மைந்துமலிந்த மழகளிறு
கந்துசேர்பு நிலைஇவழங்கப்
பாஅல்நின்று கதிர்சோரும்

வானஉறையும் மதிபோலும்
மாலைவெண் குடைநீழலான்
வாள்மருங்கிலோர் காப்புஉறங்க,
அலங்குசெந்நெல் கதிர்வேய்ந்த
ஆய்கரும்பின் கொடிக்கூரை

சாறுகொண்ட களம்போல
வேறுவேறு பொலிவுதோன்றக்
குற்றானா உலக்கையால்
கலிச்சும்மை வியல்ஆங்கண்
பொலம்தோட்டுப் பைந்தும்பை

மிசைஅலங்கு உளைய பனைப்போழ் செரிஇச்
சினமாந்தர் வெறிக்குரவை
ஓதநீரில் பெயர்புபொங்க;
வாய்காவாது பரந்துபட்ட
வியன்பாசறைக் காப்பாள!

வேந்துதந்த பணிதிறையாற்
சேர்ந்தவர் கடும்புஆர்த்தும்
ஓங்குகொல்லியோர் அடு பொருந!
வேழ நோக்கின் விறல்வெம் சேஎய்!
வாழிய பெரும! நின் வரம்பில் படைப்பே

நிற்பாடிய அலங்குசெந்நாப்
பிறர்இசை நுவலாமை
ஒம்பாது ஈயும் ஆற்றல் எங்கோ!
மாந்தரஞ் சேரல் இரும்பொறை ஓம்பிய நாடே
புத்தேள் உலகத்து அற்றுஎனக் கேட்டுவந்து

இனிது கண்டிசின்; பெரும! முனிவிலை
வேறுபுலத்து இறுக்கும் தானையொடு
சோறுபட நடத்திநீ துஞ்சாய் மாறே.

அருஞ்சொற்பொருள்:-

தூங்குதல் = அசைந்தாடுதல்
ஓங்கல் = உயர்ச்சி
உறழ்தல் = மாறுபடுதல்
மருப்பு = கொம்பு
செறல் = கோபித்தல்
பா = பரந்த
பணைத்தல் = பருத்தல்
எருத்து = கழுத்து
சிதைதல் = சிதறுதல்
வரை = மலை
மிஞிறு = தேனீ
ஆர்த்தல் = ஒலித்தல்
கமழ்தல் = மணத்தல்
கடாஅம் = மதம்
அயறு = புண்ணிலிருந்து வடியும் நீர்
சோர்தல் = விழுதல்
மைந்து = வலிமை
மலி = மிகுதி
மழ = இளமை
கந்து = தூண், யானை கட்டும் தறி
சேர்பு = பொருந்தி
சோர்தல் = விழுதல்
மருங்கு = பக்கம்
காப்பு = பாதுகாவல்
அலங்குதல் = அசைதல், ஒளி செய்தல்
ஆய் = மென்மை
கொடி = ஒழுங்கு
சாறு = திருவிழா
ஆனா = நீங்காத (அமையாத)
கலி = ஒலி, முழக்கம்
சும்மை = ஆரவாரம்
பொலம் = பொன், அழகு
தோடு = பூவிதழ்
மிசை = மேற்பக்கம்
அலங்குதல் = அசைதல்
உளை = தலை
பனைப்போழ் = பனந்தோடு
ஓதம் = கடல்
பெயர்பு = கிளர்ந்து
அயன் = அகன்ற
கடும்பு = சுற்றம்
ஆர்த்துதல் = கொடுத்தல், நிறைவித்தல்
விறல் = வெற்றி
வெம்மை = விருப்பம்
படைப்பு = செல்வம்
நுவலுதல் = சொல்லுதல்
ஓம்புதல் = பாதுகாத்தல்
அற்று = அத்தன்மையது
முனிவு = வெறுப்பு, கோபம்
படுத்தல் = செய்தல்
துஞ்சுதல் = சோம்புதல்

இதன் பொருள்:-

தூங்குகையான்=====> கொடிக்கூரை

அசையும் தும்பிக்கை, தலை நிமிர்ந்த நடை, மாறி மாறி ஒலிக்கும் மணிகள், உயர்ந்த கொம்புகள் (தந்தங்கள்), பிறை நிலா போன்ற நெற்றி, கோபம் மிகுந்த பார்வை, அகன்ற காலடிகள், பருத்த கழுத்து ஆகியவற்றுடன் வலிமை மிகுந்த இளம் யானை ஒன்று தான் கட்டப்பட்டிருக்கும் கம்பத்திலே நின்று அசைந்து கொண்டிருக்கிறது. அந்த யானையின் பெரிய தலையில் உள்ள புண்களிலிருந்து மணமுள்ள மதநீர் வடிகிறது. அந்த மதநீரை நுகர்வதற்கு, தேனீக்கள் யானையின் தலையில் ஒலியுடன் மொய்க்கின்றன, அந்த யானையின் தலை தேன்கூடு சிதைந்த மலைபோல் காட்சியளிக்கிறது. அந்த யானையின் பக்கத்தில், முத்து மாலைகளுடன் அலங்கரிக்கப்பட்டு, வானத்திலிருந்து ஒளிவிடும் திங்கள்போல் விளங்கும், வெண்கொற்றக் குடையின் பாதுகாவலில் வீரர்கள் வாள் அணியாமல் உறங்குகிறார்கள். அசையும் செந்நெல் கதிர்களால் வேயப்பட்டு, கரும்பால் ஒழுங்காகக் கட்டப்பட்ட கூரைவீடுகள்,

சாறுகொண்ட=====> வரம்பில் படைப்பே

வேறுவேறு அழகுடன் விழாக்கோலம் பூண்டதுபோல் காட்சி அளிக்கின்றன. அங்கே, பெண்கள் உலக்கையால் குத்தும் ஒலி கேட்டுக்கொண்டே இருக்கிறது. மிகுந்த ஆரவாரமுடைய அகன்ற இடத்தில், பொன்னாலான இதழ்களையுடைய, பசுமையான தும்பை மலர்களுடன், அசையும் பனையோலைகளைச் செருகிக்கொண்டு சினத்தோடு வீரர்கள் குரவை ஆடுகிறார்கள். அவர்களின் குரவைக் கூத்தின் ஒலி கடல் ஒலிபோல் ஆரவாரமாக உள்ளது. உன்னுடைய பெரிய படையைக்கண்டு பகைவர்கள் அஞ்சுகிறார்கள். அகன்ற பாசறையையுடையவனே!

பகைமன்னர்கள் கொண்டுவந்து தந்த திறைப்பொருளால் உன்னை அடைந்தவர்களின் சுற்றத்தாரை நீ வாழச் செய்கிறாய். உயர்ந்த கொல்லிமலையினரின் வெற்றி மிகுந்த தலைவனே! யானையின் பார்வை போன்ற கூர்மையான பார்வையை உடையவனே! வெற்றியை விரும்பும் சேஎய் என்று அழைக்கப் படுவோனே! தலைவ, நீ வாழ்க.

நிற்பாடிய=====> துஞ்சாய் மாறே.

உன் செல்வம் எல்லை இல்லாதது. உன்னப் பாடிய செவ்விய நாவால் பிறர் புகழைப் பாடவேண்டிய தேவை இல்லாதவாறு, குறையாது கொடுக்கும் ஆற்றல் மிகுந்த எம் அரசே! மாந்தரஞ் சேரல் இரும்பொறையால் பாதுகாக்கப்படும் நாடு தேவருலகத்தைப் போன்றது என்று பிறர் சொல்லக் கேட்டு வந்தேன். என் கண்ணுக்கு இனிமையாக உன்னைக் கண்டேன். தலைவ! நீ சோம்பல் இல்லாதவன்; முயற்சியில் வெறுப்பில்லாமல், வேற்று நாட்டில் சென்று தங்கும் படையுடன், உன் நாட்டில் வளம் பெருகுமாறு ஆட்சி செய்வாயாக.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #22 on: February 09, 2013, 04:16:45 PM »


புறநானூறு, 23.(நண்ணார் நாணுவர்!)
பாடியவர் : கல்லாடனார்.
பாடப்பட்டோன் : பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.
திணை : வாகை.
துறை: அரச வாகை; நல்லிசை வஞ்சியும் ஆம்.
=========================================

வெளிறில் நோன்காழ்ப் பணைநிலை முனைஇக்
களிறுபடிந்து உண்டெனக் கலங்கிய துறையும்
கார்நறுங் கடம்பின் பாசிலைத் தெரியல்
சூர்நவை முருகன் சுற்றத்து அன்னநின்
கூர்நல் அம்பின் கொடுவில் கூளியர்

கொள்வது கொண்டு கொள்ளா மிச்சில்
கொள்பதம் ஒழிய வீசிய புலனும்
வடிநவில் நவியம் பாய்தலின் ஊர்தொறும்
கடிமரம் துளங்கிய காவும்; நெடுநகர்
வினைபுனை நல்லில் வெவ்வெரி இனைப்பக்

கனைஎரி உரறிய மருங்கு நோக்கி
நண்ணார் நாண நாள்தொறும் தலைச்சென்று
இன்னும் இன்னபல செய்குவன் யாவரும்
துன்னல் போகிய துணிவி னோன்என
ஞாலம் நெளிய ஈண்டிய வியன்படை

ஆலங் கானத்து அமர்கடந்து அட்ட
கால முன்பநின் கண்டனென் வருவல்;
அறுமருப்பு எழிற்கலை புலிப்பால் பட்டெனச்
சிறுமறி தழீஇய தெறிநடை மடப்பிணை
பூளை நீடிய வெருவரு பறந்தலை

வேளை வெண்பூக் கறிக்கும்
ஆளில் அத்தம் ஆகிய காடே.

அருஞ்சொற்பொருள்:-

வெளிறு = வெண்ணிறம்
நோன்மை = வலிமை
காழ் = வயிரம் (உறுதி)
காழ்த்தல் = முற்றுதல்
பணை = விலங்கின் படுக்கை, கூடம்
நிலை = நிற்றல்
முனை = வெறுப்பு
கார் = கார்காலம்
நறுமை = நன்மை
நவைதல் = கொல்லுதல்
கொடு = வளைந்த
கூளியர் = படைவீரர்
கூளி = உறவு, வலிமை
மிச்சில் = எஞ்சியது
பதம் = உணவு
வடித்தல் = கூராக்குதல்
நவிலுதல் = பழகுதல், கற்றல்
நவியம் = கோடரி
துளங்கல் = கலங்கல் (நிலை கலங்கல்)
கா = சோலை (காடு)
இனைப்ப = கெடுப்ப
கனை = மிகுதி
உரறுதல் = முழங்குதல்
மருங்கு = பக்கம்
நண்ணார் = பகைவர்
துன்னுதல் = நெருங்குதல்
நெளிதல் = சுருளுதல்
வியன் = மிகுதி (பெரிய)
அட்ட = அழித்த (கொன்ற)
காலன் = இயமன்
முன்பு = வலிமை
அறுதல் = இல்லாமற் போதல்
மருப்பு = கொம்பு
எழில் = உயர்ச்சி (பெரிய)
கலை = ஆண்மான்
மறி = மான் குட்டி
தெறித்தல் = பாய்தல் (துள்ளல்)
மடம் = மென்மை
பிணை = பெண்மான்
பூளை = ஒரு செடி
பறந்தலை = பாழிடம்
வேளை = ஒரு பூண்டு
கறித்தல் = கடித்துத் தின்னுதல்
அத்தம் = பாலை நிலம், வழி

இதன் பொருள்:-

வெளிறில்=====> கூளியர்

வலிய, முற்றிய மரத்தூண்களால் கட்டப்பட்ட கூடத்தில் இருப்பதை வெறுத்து, வெளியேறிய யானைகள் நீரை உண்டதால் நீர்த்துறைகள் கலங்கி உள்ளன. கார்காலத்தில், மணமுள்ள கடம்பமரத்தின் பசுமையான இலைகளுடன் கூடிய மாலைகளை அணிந்து, சூரபன்மனைக் கொன்ற முருகனின் படைவீரர்களைப் போன்ற உன் வீரர்கள் கூரிய நல்ல அம்புகளையும், வளைந்த வில்லையும் உடையவர்களாக உள்ளனர்.

கொள்வது கொண்டு=====> வெவ்வெரி இனைப்ப

அவர்கள் தமக்கு வேண்டிய உணவுப் பொருட்களை எடுத்துக்கொண்டு மிச்சமிருப்பதைப் பகைவர்கள் உணவுப் பொருளாகப் பயன்படுத்த முடியாதவாறு நிலத்தில் சிதறினார்கள். உன் வீரர்கள் கூர்மையான கோடரியைக்கொண்டு காவல் மரங்களை வெட்டியதால் காவற் காடுகள் நிலைகுலைந்தன. பெரிய நகரத்தில் அழகிய வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்ட நல்ல வீடுகளில் சமைப்பதற்காக மூட்டிய தீயை அவிக்கும் வகையில்

கனைஎரி=====> வியன்படை

பெரிய தீயைப் பல பக்கங்களிலும் உன் வீரர்கள் மூட்டியதைப் பார்த்த உன் பகைவர்கள் நாணுகிறார்கள். நீ, நாள்தோறும் தம்மிடம் வந்து இன்னும் இது போன்ற செயல்களைச் செய்வாயோ என்று எண்ணுகிறார்கள்; யாவரும் அணுகமுடியாத துணிவுடையவன் என்றும் எண்ணுகிறார்கள். நீ, பூமியால் சுமக்க முடியாத அளவுக்குப் பெரிய படையை உடையவன்;

ஆலங் கானத்து=====> காடே

தலையாலங்கானத்தில் பகைவரை இயமன்போல் எதிர்நின்று அழித்தவன். நீ மிகுந்த வலிமையுடையவன். தன் கொம்புகளை இழந்த பெரிய ஆண்மான் புலியிடம் சிக்கிக்கொண்டதால், அதன் துணையாகிய மெல்லிய பெண்மான் தன் சிறிய குட்டியை அணைத்துக்கொண்டு துள்ளிய நடையுடன், பூளைச்செடி வளர்ந்த அஞ்சத்தக்கப் பாழிடத்தில் வேளையின் வெண்ணிறப் பூக்களைத் தின்னும் ஆள் நடமாட்டம் இல்லாத, கடத்தற்கரிய காட்டு வழியாக உன்னைக் காணவந்தேன்.

சிறப்புக் குறிப்பு:-

கல்லாடனார் தான் காட்டு வழியாக வந்த பொழுது ஆண்மான் புலியிடம் சிக்கிக்கொண்டதையும் அம்மானின் துணையாகிய பெண்மான் தன் குட்டியுடன் அச்சத்தோடும் உண்ணுவதற்கு நல்ல உணவில்லாமல் வருந்ததத் தக்க நிலையில் இருப்பதைக் கண்டதாகவும் இப்பாடலில் கூறுகிறார். அவர் கூறுவது, படைவீரர்கள் இறந்த பிறகு அவர்களின் மனைவியரும் குழந்தைகளும் படும் துன்பத்தை மறைமுகமாகப் பாண்டியனுக்குச் சுட்டிக்காட்டுவதாகத் தோன்றுகிறது.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #23 on: February 09, 2013, 04:24:22 PM »


புறநானூறு, 24.(வல்லுநர் வாழ்ந்தோர்!)
பாடியவர் : மாங்குடி கிழார்.
பாடப்பட்டோன் : பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.
திணை : பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: பொருண்மொழிக் காஞ்சி . உயிர்க்கு நலம் செய்யும் உறுதிப் பொருள்களை எடுத்துக் கூறுதல்.
=========================================

நெல்அரியும் இருந்தொழுவர்
செஞ்ஞாயிற்று வெயில்முனையின்
தெண்கடல்திரை மிசைப்பாயுந்து,
திண்திமில் வன்பரதவர்
வெப்புடைய மட்டுண்டு,

தண்குரவைச் சீர்தூங்குந்து,
தூவற்கலித்த தேம்பாய்புன்னை
மெல்லிணர்க் கண்ணி மிலைந்த மைந்தர்
எல்வளை மகளிர்த் தலைக்கை தரூஉந்து,
வண்டுபட மலர்ந்த தண்ணறுங் கானல்

முண்டகக் கோதை ஒண்டொடி மகளிர்
இரும் பனையின் குரும்பை நீரும்,
பூங்கரும்பின் தீஞ்சாறும்,
ஓங்குமணற் குவவுத்தாழைத்
தீநீரோடு உடன்விராஅய்

முந்நீர்உண்டு முந்நீர்ப்பாயும்
தாங்கா உறையுள் நல்லூர் கெழீஇய
ஒம்பா ஈகை மாவேள் எவ்வி,
புனலம் புதவின் மிழலையொடு கழனிக்
கயலார் நாரை போர்வில் சேக்கும்,

பொன்னணி யானைத் தொன்முதிர் வேளிர்
குப்பை நெல்லின் முத்தூறு தந்த
கொற்ற நீள்குடைக் கொடித்தேர்ச் செழிய!
நின்று நிலைஇயர்நின் நாண்மீன்; நில்லாது
படாஅச் செலீஇயர் நின்பகைவர் மீனே;

நின்னொடு தொன்றுமூத்த உயிரினும் உயிரொடு
நின்று மூத்த யாக்கை யன்ன நின்
ஆடுகுடி மூத்த விழுத்திணைச் சிறந்த
வாளின் வாழ்நர் தாள்வலம் வாழ்த்த,
இரவன் மாக்கள் ஈகை நுவல,

ஒண்டொடி மகளிர் பொலங்கலத்து ஏந்திய
தண்கமழ் தேறல் மடுப்ப மகிழ்சிறந்து
ஆங்குஇனிது ஒழுகுமதி பெரும! ஆங்கது
வல்லுநர் வாழ்ந்தோர் என்ப தொல்லிசை
மலர்தலை உலகத்துத் தோன்றிப்

பலர்செலச் செல்லாது நின்றுவிளிந் தோரே.

அருஞ்சொற்பொருள்:-

அரித்தல் = அறுத்தல் (அறுவடை செய்தல்)
இரு = பெரிய
தொழுவர் = மருதநில மக்கள் (உழவர்)
திண் = வலி
திமில் = மரக்கலம், தோணி
பரதவர் = நெய்தல் நில மக்கள் (மீனவர்)
மட்டு = கள்
குரவை = கூத்து
சீர் = தாளவொத்து
தூங்கல் = ஆடல்
உந்துதல் = பொருந்துதல்
தூவல் = நீர்த்துளி
கலித்தல் = தழைத்தல்
பாய = பரப்பிய
இணர் = கொத்து
மிலைதல் = சூடுதல்
மைந்தர் = ஆடவர்
தலைக்கை தருதல் = கையால் தழுவி அன்பு காட்டுதல்.
கானல் = கடற்கரைச் சோலை
முண்டகம் = நீர் முள்ளி
கோதை = பூமாலை
குரும்பை = நுங்கு (தென்னை, பனை முதலியவற்றின் இளங்காய்)
பூ = பொலிவு, அழகு
குவவுதல் = குவிந்த
தாழை = தென்னை
விரவுதல் = கலத்தல்
உறையுள் = தங்குமிடம்
தாங்குதல் = ஆதரித்தல், நிறுத்துதல், தடுத்தல்
கெழீஇய = பொருந்திய
புதவு = நீர் பாயும் மடைவாய், மதகு, கதவு
மிழலை = மிழலைக் கூற்றம்
கழனி = வயல்
சேக்கை = விலங்கின் படுக்கை
குப்பை = தானியக் குவியல்
முத்தூறு = முத்தூற்றுக் கூற்றம்
கொற்றம் = வெற்றி
நாண்மீன் = நட்சத்திரம்
மூத்த = முதிர்ந்த
ஆடு = வெற்றி
விழு = சிறந்த
திணை = குடி
வலம் = வலிமை
தாள் = முயற்சி
இரவன் = இரக்கும் பரிசிலர்
தேறல் = மது
மடுத்தல் = உண்ணுதல், விழுங்குதல்
வல்லுநர் = வல்லவர்.

இதன் பொருள்:-

நெல்அரியும்=====> உடன்விராஅய்

நெல்லை அறுவடை செய்யும் உழவர்கள் கதிரவனின் வெயிலின் வெப்பத்தை வெறுத்து, தெளிந்த கடல் அலைகள் மீது பாய்வர். வலிய மரக்கலங்களை உடைய மீனவர்கள், புளித்த கள்ளை உண்டு

மெல்லிய குரவைக் கூத்தைத் தாளத்திற்கேற்ப ஆடுவர். கடல் நீர்த்துளிகளால் தழைத்து வளர்ந்த புன்னை மரங்களின் தேன்நிறைந்த மலர்களால் கட்டப்பட்ட மாலையை அணிந்த ஆடவர்கள், ஒளிவீசும் வளை அணிந்த கைகளையுடைய மகளிரைக் அன்புடன் கையால் தழுவி ஆடுவர். வண்டுகள் மொய்க்கும் மலர்கள் நிறைந்த, குளிர்ந்த, நறுமணம் பொருந்திய கடற்கரைச் சோலையில்

நீர்முள்ளிப் பூக்களால் தொடுக்கப்பட்ட மாலையணிந்த மகளிர், பெரிய பனை நுங்கின் நீர், அழகிய கரும்பின் இனிய சாறு, உயர்ந்த மணற் குவியலில் தழைத்த தென்னையின் இளநீர் ஆகிய மூன்றையும் கலந்து

முந்நீர்உண்டு=====> ஈகை நுவல

குடித்துக் கடலில் பாய்ந்து விளையாடுவர். இவ்வாறு பல்வேறு மக்களும் மகிழ்ச்சியாக வாழும் நல்ல ஊர்கள் அடங்கிய நாடு மிழலைக் கூற்றம். அந்நாட்டின் தலைவன், குறையாது கொடுக்கும் கொடைத்தன்மையையுடைய வேளிர் குலத்தைச் சார்ந்த எவ்வி என்பவன். மிழலைக் கூற்றத்தைப் போலவே, முத்தூற்றுக் கூற்றம் என்னும் நாடும் ஒருவளமான நாடு. அந்நாட்டில், நீர் பாயும் மதகுகள் உள்ளன. அங்கே, வயல்களில் உள்ல கயல் மீன்களை மேய்ந்த நாரை வைக்கோற்போரில் உறங்குகின்றன.

பொன்னாலான அணிகலன்களை அணிந்த யானைகள் உள்ளன; வயல்களில் விளைந்த நெல் குவியல் குவில்களாகக் கிடக்கின்றன. அந்த நாட்டை ஆள்பவனும் வேளிரின் குலத்தைச் சார்ந்தவன்தான்.
அத்தகைய மிழலைக் கூற்றத்தையும் முத்தூற்றுக் கூற்றத்தையும் வென்ற செழியனே! ஒளி பொருந்திய நீண்ட குடையையும், கொடிபறக்கும் தேரையையும் உடைய செழியனே! நீ நீண்ட நாட்கள் வாழ்க! உன் பகைவர்கள் நீண்ட நாட்கள் வாழாது ஒழிக! உயிருடன் கூடிய உடல் போன்று உன்னுடன் தொடர்புடைய உன் வெற்றி மிகுந்த வாட்படை வீரர்கள் உன் முயற்சியையும் வலிமையையும் வாழ்த்த, ஒளிபொருந்திய வளையல்களை அணிந்த மகளிர்,

ஒண்டொடி=====> நின்றுவிளிந் தோரே

பொன்னானாலான பாத்திரங்களில் கொண்டுவந்து தரும் குளிர்ந்த, மணமுள்ள மதுவைக் குடித்து, மகிழ்ச்சியோடு சிறந்து வாழ்வாயாக! தலைவ! இந்தகைய வாழ்க்கை வாழ்ந்தவர்கள்தான் உண்மையிலேயே வாழ்ந்தவர்களாகக் கருதப்படுவார்கள் என்று அறிஞர்கள் கூறுவர். அவ்வாறு இல்லாமல், இந்தப் பரந்த உலகத்தில் தோன்றிப் புகழ் பெருக வாழாமல் வாழ்ந்து முடித்தோர் பலர். அவர்கள் வாழ்ந்தாலும் இறந்ததாகவே கருதப்படுவர்.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #24 on: February 09, 2013, 04:31:03 PM »


புறநானூறு, 25.(கூந்தலும் வேலும்!)
பாடியவர் : கல்லாடனார்.
பாடப்பட்டோன் : பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.
திணை : வாகை.
துறை: அரசவாகை.
========================================

மீன்திகழ் விசும்பின் பாய்இருள் அகல
ஈண்டுசெலல் மரபின் தன் இயல் வழாஅது
உரவுச்சினம் திருகிய உருகெழு ஞாயிறு
நிலவுத்திகழ் மதியமொடு நிலஞ்சேர்ந் தாஅங்கு
உடலருந் துப்பின் ஒன்றுமொழி வேந்தரை

அணங்கரும் பறந்தலை உணங்கப் பண்ணிப்,
பிணியுறு முரசம் கொண்ட காலை
நிலைதிரிபு எறியத் திண்மடை கலங்கிச்
சிதைதல் உய்ந்தன்றோ நின்வேல்; செழிய!
முலைபொலி அகம் உருப்ப நூறி,

மெய்ம்மறந்து பட்ட வரையாப் பூசல்,
ஒள் நுதல் மகளிர் கைம்மை கூர,
அவிர்அறல் கடுக்கும் அம்மென்
குவைஇரும் கூந்தல் கொய்தல் கண்டே

அருஞ்சொற்பொருள்:-

விசும்பு = ஆகாயம்
பாய்தல் = பரவுதல்
ஈண்டு = விரைவு
உரவு = வலி
திருகிய = வளைந்த, முறுகிய
உரு = அச்சம்
உடலுதல் = பொருதல்
துப்பு = வலி
ஒன்றுமொழிதல் = வஞ்சினம் கூறுதல்
அணங்கு = வருத்தம்
பறந்தலை = போர்க்களம்
உணங்கல் = துன்பப்படல்
திரிபு = வேறுபாடு
எறிதல் = நீக்கல், வெல்லுதல்
திண் = வலி
மடை = ஆயுத மூட்டு
சிதைதல் = கெடுதல், அழிதல்
ஆகம் = மார்பு, நெஞ்சு
உருத்தல் = வெப்புமுறச் செய்தல்
நூறுதல் = அழித்தல், நசுக்குதல், இடித்தல்
படுத்தல் = செய்தல்
பூசல் = பெரிதொலித்தல்
கூர்த்தல் = மிகுத்தல்
கூர் = மிகுதி
அவிர்தல் = விளங்கல்
அறல் = கருமணல்
கடுக்கும் = ஒக்கும்
குவை = திரட்சி
இரு = கரிய
கொய்தல் = அறுத்தல்

இதன் பொருள்:-

மீன்திகழ்=====> வேந்தரை

விண்மீன்கள் திகழும் ஆகாயத்தில் பரவிய இருள் அகல, விரைந்து செல்லும் தன்மையிலிருந்து தவறாது, வலிய, வெப்பம் மிகுந்த, அச்சம் பொருந்திய கதிரவனும், நிலாவொளியைத் தரும் திங்களும் வந்து நிலத்தில் சேர்ந்தாற்போல விளங்கி, வஞ்சினம் கூறிய, வலிமையுடைய இரு வேந்தர்களும் (சேரனும் சோழனும்) அழியுமாறு நீ போர் செய்தாய்;

அணங்கரும்=====> கொய்தல் கண்டே

அவ்விருவரையும் கொடிய போர்க்களத்தில் நிலைகலங்கச் செய்தாய்; அவர்களிடமிருந்து, வாரால் பிணிக்கப்பட்ட போர்முரசுகளைக் கைப்பற்றினாய்; நின்ற நிலையிலே நின்று, உன்னைச் சூழ்ந்த பகைவர்களின் வீரர்களைப் பிடித்துத் தூக்கியெறிந்தாய். செழியனே! போரில் கணவனை இழந்த மகளிர், கருமணல் போன்று விளங்கும் தம் கூந்தலை அறுத்துக்கொண்டு, துயரத்துடன் தம் முலைகள் பொலிந்த மார்பகங்களை வெப்பம் உண்டாகுமாறு அடித்துக்கொண்டார்கள். அதைக் கண்டதும் நீ போரை நிறுத்தியதால், உன் வேல்கள் தொடர்ந்து பகைவர்ளைத் தாக்கப் பயன்படுத்தப்படவில்லை. ஆகவே, அவைகள் சேதமில்லாமல் தப்பின

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #25 on: February 09, 2013, 04:35:16 PM »


புறநானூறு, 26.(நோற்றார் நின் பகைவர்!)
பாடியவர் : மாங்குடி மருதனார்.
பாடப்பட்டோன் : பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.
திணை : வாகை.
துறை: அரசவாகை.
=========================================

நளிகடல் இரும்குட்டத்து
வளிபுடைத்த கலம்போலக்
களிறுசென்று களன்அகற்றவும்,
களன்அகற்றிய வியல்ஆங்கண்
ஒளிறுஇலைய எஃகுஏந்தி

அரைசுபட அமர்உழக்கி,
உரைசெல முரசுவெளவி,
முடித்தலை அடுப்பாகப்
புனல்குருதி உலைக்கொளீஇத்
தொடித்தோள் துடுப்பின் துழந்த வல்சியின்

அடுகளம் வேட்ட அடுபோர்ச் செழிய!
ஆன்ற கேள்வி அடங்கிய கொள்கை
நான்மறை முதல்வர் சுற்ற மாக,
மன்னர் ஏவல் செய்ய மன்னிய
வேள்வி முற்றிய வாய்வாள் வேந்தே!

நோற்றோர் மன்ற நின் பகைவர் நின்னொடு
மாற்றார் என்னும் பெயர்பெற்று
ஆற்றார் ஆயினும் ஆண்டுவாழ் வோரே

அருஞ்சொற்பொருள்:-

நளி = பெருமை
இரு = பெரிய
குட்டம் = ஆழம்
வளி = காற்று
புடைத்தல் = குத்துதல், தட்டுதல்
கலம் = மரக்கலம் (கப்பல்)
வியல் = அகலம்
எஃகு = வேல், ஆயுதம்
அரைசு = அரசன்
அமர் = போர்
உழக்குதல் = கலக்குதல், வெல்லல்
உரை = புகழ்
புனல் = நீர்
துழத்தல் = கலத்தல்
வல்சி = உணவு
அடு களம் = போர்க்களம்
அடுதல் = கொல்லல்
ஆன்ற = மாட்சிமைப்பட்ட, நிறைந்த
கொள்கை = அறிவு, கோட்பாடு, நோன்பு
முதல்வர் = தலைவர்
மன்னுதல் = நிலைபெறுதல்
வாய் = சிறப்பு
முற்றிய = முடித்த
நோற்றல் = தவஞ் செய்தல், பொறுத்தல்
மன்ற – அசைச் சொல், மிக
மாற்றார் = பகைவர்
ஆண்டு = அவ்வுலகம்

இதன் பொருள்:-

நளிகடல்=====> துழந்த வல்சியின்

ஆழம் மிகுந்த பெரிய கடலில் காற்றால் தள்ளப்பட்டு ஓடும் மரக்கலம் நீரைக் கிழித்துக்கொண்டு செல்வதுபோல, உன் யானை போர்க்களத்தில் பகைவர்களின் படையை ஊடுருவிச் சென்றது. அந்த யானை சென்ற அகன்ற பாதையில் ஒளிவிடும் வேல்களை ஏந்தி உன்னை எதிர்த்து நின்ற வேந்தர்களை அழித்து அவர்களது புகழ் பொருந்திய முரசுகளை நீ கைப்பற்றினாய். அவ்வரசர்களின் முடியணிந்த தலைகளை அடுப்பாகவும், அவர்களின் குருதியை உலை நீராகவும், வீரவளை அணிந்த அவர்களின் கைகளைத் துடுப்பாகவும் கொண்டு துழாவிச்

அடுகளம் வேட்ட=====> வாய்வாள் வேந்தே!

சமைக்கப்பட்ட உணவால் போர் வேள்வி செய்த செழிய!
நிலைபெற்ற புகழுடைய வேள்விகளைச் செய்து முடித்த வேந்தே! நீ அவ்வேள்விகளைச் செய்த பொழுது, நிறைந்த கேள்வி, ஐம்புலன்களை அடக்கிய மனவலிமை, நான்கு வேதங்களையும் கற்றதால் பெற்ற அறிவு ஆகியவற்றையுடைய அந்தணர்களை உன்னைச் சூழ்ந்திருந்தார்கள்; பகை மன்னர்கள் உனக்கு ஏவல் செய்தார்கள்.

நோற்றோர்=====> வாழ் வோரே

உன்னோடு மாறுபட்டு உன்னை எதிர்த்த பகைவர்களும் ஒருவகையில் நோன்பு செய்தவர்கள்தான். அவர்கள் போரில் வீரமரணம் அடைந்ததால் விண்ணுலகம் சென்று வாழ்கிறார்கள்.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #26 on: February 09, 2013, 04:38:28 PM »


புறநானூறு, 27.(புலவர் பாடும் புகழ்!)
பாடியவர் : உறையூர் முதுகண்ணன் சாத்தனார்.
பாடப்பட்டோன் : சோழன் நலங்கிள்ளி.
திணை : பொதுவியல்.
துறை: முதுமொழிக் காஞ்சி. அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று உறுதிப் பொருட்களைப் பற்றிக் கூறுவது.
=========================================

சேற்றுவளர் தாமரை பயந்த ஒண்கேழ்
நூற்றிதழ் அலரின் நிறைகண்டு அன்ன
வேற்றுமை இல்லா விழுத்திணைப் பிறந்து
வீற்றிருந் தோரை எண்ணுங் காலை
உரையும் பாட்டும் உடையோர் சிலரே;

மரைஇலை போல மாய்ந்திசினோர் பலரே:
புலவர் பாடும் புகழுடையோர், விசும்பின்
வலவன் ஏவா வான ஊர்தி
எய்துப என்பதம் செய்வினை முடித்தெனக்
கேட்பல்; எந்தை! சேட்சென்னி! நலங்கிள்ளி!

தேய்தல் உண்மையும் பெருகல் உண்மையும்
மாய்தல் உண்மையும் பிறத்தல் உண்மையும்
அறியா தோரையும் அறியக் காட்டித்
திங்கட் புத்தேள் திரிதரும் உலகத்து
வல்லார் ஆயினும் வல்லுநர் ஆயினும்

வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி
அருள வல்லை ஆகுமதி; அருளிலர்
கொடா அமை வல்லர் ஆகுக;
கெடாத் துப்பின்நின் பகைஎதிர்ந் தோரே

அருஞ்சொற்பொருள்:-

பயத்தல் = கொடுத்தல், பிறப்பித்தல் (பூத்த)
கேழ் = நிறம்
அலரி = மலர் (பூவிற்குப் பொதுப் பெயர்)
நிரை = ஒழுங்கு, படைவகுப்பு (வரிசை)
விழு = சிறந்த
திணை = குடி
உரை = புகழ்
மரை = தாமரை
வலவன் = ஓட்டுபவன்
ஊர்தி = வாகனம்
எய்துதல் = அடைதல்
தேய்தல் = குறைதல்
பெருகல் = வளர்தல்
புத்தேள் = தெய்வம்
வல்லுநர் = அறிஞர்
மருங்கு = விலாப்பக்கம், இடை, வடிவு
துப்பு = வலிமை

இதன் பொருள்:-

சேற்றுவளர்=====> உடையோர் சிலரே

சேற்றிலே வளரும் தாமரைச் செடியில் பூத்த ஒளிபொருந்திய தாமரை மலரில் உள்ள பல இதழ்களின் வரிசைபோல், உயர்வு தாழ்வு இல்லாத சிறந்த குடியில் பிறந்த அரசர்களை எண்ணிப்பார்க்கும்பொழுது, புகழுக்கும், புலவர்களால் புகழ்ந்து பாடும் பாடல்களுக்கும் உரியவர்கள் சிலரே.

மரைஇலை=====> நலங்கிள்ளி!

தாமரையின் இலைபோலப் பயனின்றி மறைந்தவர் பலர். தாம் செய்ய வேண்டிய நல்வினைகளைச் செய்து முடித்தவர்கள் புலவர்களால் பாடப்படும் புகழுடையவர்களாவார்கள். மற்றும், அவர்கள் ஆகாயத்தில் ஒட்டுநர் தேவையில்லாமல் தானாகவே செல்லும் விமானங்களைப் பெறுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். என் தலைவ! சேட் சென்னி என்று அழைக்கப்படும் நலங்கிள்ளி!

தேய்தல்=====> வல்லுநர் ஆயினும்

தேய்தல், வளர்தல், மறைதல், இறந்தவர்கள் மீண்டும் பிறத்தல் போன்ற உண்மைகளை அறியாதவர்களுக்கு அறிவுறுத்தும் திங்கள் தெய்வம் உலாவும் இவ்வுலகத்தில், ஆற்றல் இல்லாதவர்களாக இருந்தாலும், அறிஞர்களாக இருந்தாலும்

வருந்தி=====> பகைஎதிர்ந் தோரே

உன்னிடம் வருந்தி வந்தவர்களின் நிலையைப் பார்த்து அவர்களுக்கு அருள் செய்வாயாக! குறைவற்ற வலிமையையுடைய உன் பகையை எதிர்கொண்டவர்கள் அருளில்லாதவர்களாகவும் ஈகைத்தன்மை அற்றவர்களாகவும் ஆவார்களாக.

சிறப்புக் குறிப்பு:-

நூறு என்ற சொல் ஒரு எண்ணைக் குறிக்காமல் பல என்ற பொருளில் இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. ”நூற்றிதழ் தாமரைப்பூ” என்று (ஐங்குறுநூறு – 20) பிறரும் பாடியுள்ளனர்.

”உரை” என்ற சொல் எல்லோராலும் புகழப்படும் புகழையும், ”பாட்டு” என்பது புலவர்களால் பாடப்படும் புகழையும் குறிக்கும் என்று அவ்வை சு. துரைசாமிப் பிள்ளை அவர்கள் தம் நூலில் குறிப்பிடுகிறார்.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #27 on: February 09, 2013, 04:41:35 PM »
புறநானூறு, 28.(போற்றாமையும் ஆற்றாமையும்!)
பாடியவர் : உறையூர் முதுகண்ணன் சாத்தனார்.
பாடப்பட்டோன் : சோழன் நலங்கிள்ளி.
திணை : பொதுவியல்.
துறை: முதுமொழிக் காஞ்சி.
=========================================

சிறப்பில் சிதடும் உறுப்பில் பிண்டமும்
கூனும் குறளும் ஊமும் செவிடும்
மாவும் மருளும் உளப்பட வாழ்நர்க்கு
எண்பேர் எச்சம் என்றிவை எல்லாம்
பேதைமை அல்லது ஊதியம் இல்லென

முன்னும் அறிந்தோர் கூறினர்; இன்னும்,
அதன்திறம் அத்தையான் உரைக்க வந்தது
வட்ட வரிய செம்பொறிச் சேவல்
ஏனல் காப்போர் உணர்த்திய கூஉம்
கானத் தோர்நின் தெவ்வர்; நீயே

புறஞ்சிறை மாக்கட்கு அறங்குறித்து அகத்தோர்
புய்த்தெறி கரும்பின் விடுகழை தாமரைப்
பூம்போது சிதைய வீழ்ந்தெனக் கூத்தர்
ஆடுகளம் கடுக்கும் அகநாட் டையே;
அதனால் அறனும் பொருளும் இன்பமும் மூன்றும்

ஆற்றும் பெருமநின் செல்வம்
ஆற்றாமை நின் போற்றா மையே

அருஞ்சொற்பொருள்:-

சிதடு = குருடு
பிண்டம் = தசை
குறள் = குறுமை (ஈரடி உள்ள மனிதன்)
ஊம் = ஊமை
மா = விலங்கு
மருள் = மயக்கம் (அறிவு மயக்கம்)
உளப்பாடு = உள்ள தன்மை
எச்சம் = குறைபாடு
பேதைமை = பேதைத் தன்மையுடைய பிறப்பு
ஊதியம் = பயன்
திறம் = கூறுபாடு, தத்துவம்
வரி = கோடு
பொறி = புள்ளி
ஏனல் = தினைப்புனம்
புய்த்தல் = பிடுங்கல், பறித்தல்
கழை = கட்டை, கழி
போது = மலரும் பருவத்திலுள்ள அரும்பு
கடுக்கும் = ஒக்கும்
போற்றுதல் = பாதுகாத்தல்

இதன் பொருள்:-

சிறப்பில்=====> இல்லென

சிறப்பில்லாத குருடு, உருவமில்லாத தசைப் பிண்டம், கூன், குட்டை, ஊமை, செவிடு, விலங்கின் வடிவம், அறிவு மயக்கம், ஆகிய எட்டுவகைக் குறையுள்ள பிறவிகள் எல்லாம் பயனற்றவை

முன்னும்=====> தெவ்வர்; நீயே

என்று அறிஞர்கள் முன்னரே கூறினர். நான் சொல்ல வந்தது, ”எது பயனுள்ள பிறவி” என்பது. வட்ட வடிவமான வரிகளையும், சிவந்த புள்ளிகளையும் உடைய சேவல் கோழிகள் கூவித் தினைப்புனம் காப்பவர்களை எழுப்பும் காட்டில் உன் பகைவர்கள் ஒளிந்து கொண்டிருக்கிறார்கள். நீயோ

புறஞ்சிறை=====> இன்பமும் மூன்றும்

வளமான நாட்டில் உள்ளாய். உன் நாட்டில், கரும்பு விளையும் வயல்களின் வேலிக்கு வெளியே இருப்பவர்கள் கரும்பு வேண்டும் என்று கேட்பதால், வேலிக்கு உள்ளே இருப்பவர்கள் கரும்புகளைப் பிடுங்கி வேலிக்கு வெளியே எறிகிறார்கள். அவர்கள் எறியும் கரும்புகளின் தண்டுகள், அருகில் உள்ள குளங்களிலுள்ள தாமரை அரும்புகளின் மீது விழுவதால் அவ்வரும்புகள் சிதறிக்கிடக்கின்றன. இந்தக் காட்சியைப் பார்த்தால், கழைக்கூத்தர்கள் ஆடும் களத்தில் பூக்கள் சிதறிக் கிடப்பதுபோல் உள்ளது. நீ இத்தகைய மருத நில வளமுடைய நாட்டை உடையவன். அதனால், உன் செல்வம் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றையும்

ஆற்றும்=====> போற்றா மையே

அடைவதற்குப் பயன்படட்டும். அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றையும் அடைவதற்கு உன் செல்வத்தை நீ பயன்படுத்தாவிட்டால், நீ உன்னைப் பாதுகாத்துக்கொள்ளத் தவறியவனாவாய்.

சிறப்புக் குறிப்பு:-

இப்பிறவியில் செல்வத்தைப் நல்வழியில் பயன்படுத்தி, அறவழியில் நின்று, பொருள் ஈட்டி, இன்பம் துய்த்து வாழ்ந்தால், மறுபிறவில் குருடு, கூன், ஊமம், செவிடு போன்ற குறைகள் இல்லாமல் தன்னைப் பாதுகாத்துக்கொள்ளலாம் என்று மறைமுகமாகப் புலவர் உறையூர் முதுகண்ணன் சாத்தனார் சோழன் நலங்கிள்ளிக்கு அறிவுரை கூறுகிறார்.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #28 on: February 09, 2013, 04:44:53 PM »


புறநானூறு, 29.(நண்பின் பண்பினன் ஆகுக!)
பாடியவர் : உறையூர் முதுகண்ணன் சாத்தனார்.
பாடப்பட்டோன் : சோழன் நலங்கிள்ளி.
திணை : பொதுவியல்.
துறை: முதுமொழிக் காஞ்சி.
=========================================

அழல்புரிந்த அடர்தாமரை
ஐதுஅடர்ந்த நூல்பெய்து
புனைவினைப் பொலிந்த பொலம்நறுந் தெரியல்
பாறுமயிர் இருந்தலை பொலியச் சூடிப்
பாண்முற் றுகநின் நாள்மகிழ் இருக்கை;

பாண்முற்று ஒழிந்த பின்றை மகளிர்
தோள்முற் றுகநின் சாந்துபுலர் அகலம்; ஆங்க,
முனிவில் முற்றத்து இனிதுமுரசு இயம்பக்
கொடியோர்த் தெறுதலும் செவ்வியோர்க்கு அளித்தலும்
ஒடியா முறையின் மடிவிலை யாகி

நல்லதன் நலனும் தீயதன் தீமையும்
இல்லை என்போர்க்கு இனன்ஆ கிலியர்;
நெல்விளை கழனிப் படுபுள் ஓப்புநர்
ஒழிமடல் விறகின் கழுமீன் சுட்டு
வெங்கள் தொலைச்சியும் அமையார், தெங்கின்

இளநீர் உதிர்க்கும் வளமிகு நன்னாடு
பெற்றனர் உவக்கும்நின் படைகொள் மாக்கள்
பற்றா மாக்களின் பரிவுமுந் துறுத்துக்
கூவை துற்ற நாற்கால் பந்தர்ச்
சிறுமனை வாழ்க்கையின் ஒரீஇ வருநர்க்கு

உதவி ஆற்றும் நண்பின் பண்புடை
ஊழிற்று ஆகநின் செய்கை; விழவின்
கோடியர் நீர்மை போல முறைமுறை
ஆடுநர் கழியும்இவ் உலகத்துக் கூடிய
நகைப்புறன் ஆகநின் சுற்றம்;

இசைப்புற னாக நீ ஓம்பிய பொருளே.

அருஞ்சொற்பொருள்:-

அழல் = நெருப்பு
அடர் = தகடு
ஐது = நுண்ணியது, நெருக்கம்
பொலன் = பொன்
தெரியல் = பூமாலை
நறுமை = நன்மை
பாறுதல் = பரந்து கிடத்தல்
இரு = கரிய
பாண் = பாணர்
முற்றுதல் = சூழ்தல்
இருக்கை = இருப்பிடம்
புலர்தல் = உலர்தல்
அகலம் = மார்பு
முனிவு = வெறுப்பு, கோபம்
தெறுதல் = அழித்தல்
ஒடியா = வளையாத, முறியாத
மடிவு = சோம்பல்
ஓப்புதல் = ஓட்டுதல்
ஒழிதல் = அழிதல்
மடல் = பனைமட்டை
விறகு = எரிகட்டை
கழி = கடலையடுத்த உப்பங்கழி (உப்பாறு)
வெங்கள் = விருப்பமான கள்
தொலைச்சிய = அழித்த
பற்றலர் = பகைவர்
கூவை = ஒருவகைச் செடி
துற்றல் = குவிதல், நெருங்கல்(வேய்தல்)
நண்பு = நட்பு
ஊழ் = முறை
விழவு = விழா
கோடியர் = கூத்தர்
நீர்மை = குணம், தன்மை
புறன் = இடம்.

இதன் பொருள்:-

அழல்புரிந்த=====> இருக்கை

பொன்னைத் தீயிலிட்டுத் தகடாக்கிச் செய்த தாமரை மலர்களை நெருக்கமாக நூலால் கோத்து அலங்கரித்துச் செய்யப்பட்ட நல்ல மாலையைக் கரிய முடியுள்ள தலையில் சூடிய பாணர்கள் பகல் நேரத்தில் உன் அரசவையில் உன்னைச் சூழ்ந்திருப்பார்களாக.

பாண்முற்று=====> மடிவிலை யாகி

பாணர்களோடு கூடியிருந்த பிறகு, மகளிர் உன்னுடைய சந்தனம் பூசிய மார்பைத் தழுவுவார்களாக. விரும்பத்தக்க உன் அரண்மனையின் முற்றத்தில் முரசு இனிதாய் முழங்குவதாக. தீயோரைத் தண்டித்தலும், நடுவுநிலைமை உடையவர்களுக்கு அருள் செய்வதும் சோம்பலின்றி இடையறாத முறையில் நடைபெறுவதாக.

நல்லதன்=====> அமையார், தெங்கின்

நல்வினைகளால் நன்மையும் தீவினைகளால் தீமையும் விளையும் என்பதை மறுப்பவர்களோடு நீ சேராதிருப்பாயாக. நெல் விளையும் வயல்களுக்கு வரும் பறவைகளை ஓட்டுபவர்கள், பனைமரங்களிலிருந்து கீழே விழுந்த பனைமட்டைகளை விறகாகக்கொண்டு உப்பங்கழியிலுள்ள மீன்களைச் சுட்டுத் தின்று, விருப்பமான கள்ளைக் குடித்து, நிறைவு பெறாதவர்களாகி,

இளநீர்=====> வருநர்க்கு

தென்னைமரங்களிலிருந்து இளந்தேங்காய்களை உதிர்த்து அவற்றிலிருந்து இளநீரையும் குடித்து மகிழும் வளமான நாட்டை உன்னுடைய படைவீரர்கள் பெற்றிருக்கிறார்கள். உன்னுடைய பகைவர்கள் உன்னிடம் இரக்கத்தை எதிர்பார்த்து வருவதுபோல், கூவை இலையால் வேயப்பட்ட நான்கு கால்களாலாகிய பந்தர் போன்ற வீடுகளில் வாவழ்பவர்கள் அங்கிருந்து விலகி உன் இரக்கத்தைப் எதிர்பார்த்து வரும்பொழுது,

உதவி=====> ஓம்பிய பொருளே

உன் செயல்கள் அவர்களிடம் நட்புடனும் பண்புடனும் உதவி செய்யும் வகையில் அமைவதாக. திருவிழாவில் கூத்தாடுபவர்கள் மாறி மாறி வேறு வேறு வேடம் தரித்து ஆடுவதுபோல், இவ்வுலகில் எல்லாம் முறை முறையே தோன்றி மறைவது இயற்கை. அத்தகைய இவ்வுலகில் உன் சுற்றம் மகிழ்வுடன் இருப்பதாக; நீ பாதுகாத்த செல்வம் உனக்குப் புகழ் அளிப்பதாக.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #29 on: February 09, 2013, 04:47:59 PM »


புறநானூறு, 30.(எங்ஙனம் பாடுவர்?)
பாடியவர் : உறையூர் முதுகண்ணன் சாத்தனார்.
பாடப்பட்டோன் : சோழன் நலங்கிள்ளி.
திணை : பாடாண்.
துறை: இயன் மொழி.
=========================================

செஞ்ஞா யிற்றுச் செலவும், அஞ்ஞாயிற்றுப்
பரிப்பும், பரிப்புச் சூழ்ந்தமண் டிலமும்,
வளிதிரிதரு திசையும்,
வறிது நிலைஇய காயமும் என்றிவை
சென்றளந்து அறிந்தார் போல என்றும்

இனைத்துஎன் போரும் உளரே; அனைத்தும்
அறிவுஅறி வாகச் செறிவினை யாகிக்
களிறுகவுள் அடுத்த எறிகல் போல
ஒளித்த துப்பினை ஆதலின் வெளிப்பட
யாங்ஙனம் பாடுவர் புலவர்? கூம்பொடு

மீப்பாய் களையாது மிசைப்பரம் தோண்டாது
புகாஅர்ப் புகுந்த பெருங்கலம் தகாஅர்
இடைப்புலப் பெருவழிச் சொரியும்
கடல்பல் தாரத்த நாடுகிழ வோயே!

அருஞ்சொற்பொருள்:-

செலவு = வழி
பரிப்பு = இயக்கம்
மண்டிலம் = வட்டம்
வளி = காற்று
காயம் = ஆகாயம்
இனைத்து = இத்துணை அளவு
செறிவு = அடக்கம்
கவுள் = கன்னம்
அடுத்தல் = சேர்த்தல்
துப்பு = வலிமை
கூம்பு = பாய்மர
மீப்பாய் = மேற்பாய்
பரம் = பாரம்
தோண்டல் = அகழ்தல் (எடுத்தல்)
புகார் = ஆற்றுமுகம்
தகார் = தகுதி இல்லாதவர்
தாரம் = அரும்பண்டம்.

இதன் பொருள்:-

சிவந்த ஞாயிறு செல்லும் வழியும், அதன் இயக்கமும், அந்த இயக்கத்தைச் சூழ்ந்த வட்டமும், காற்று இயங்கும் திசையும், ஒரு ஆதாரமும் இல்லாமல் வெற்றிடமாகிய ஆகாயத்தின் இயங்கும் தன்மையையும் ஆங்காங்கே சென்று அளந்து அறிந்ததுபோல் சொல்லக்கூடிய அறிவும் கல்வியும் உடையவர்கள் உள்ளனர். அத்தகைய அறிஞர்களின் அறிவாலும் அறிய முடியாத அடக்கம் உடையவனாகி, யானை தன் கன்னத்தில் எறிவதற்காக மறைத்துவைத்திருக்கும் கல்லைப்போல் உன் வலிமை மறைவாக உள்ளது. ஆகவே, உன் வலிமையைப் புலவர்களால் எப்படிப் புகழ்ந்து பாட முடியும்?

ஆறு கடலில் கலக்கும் இடத்தில், கூம்புகளையும் பாய்களையும் அகற்றாது, பாரத்தைக் குறைக்காமல், புகுந்த பெரிய மரக்கலங்களில் உள்ள பொருட்களை, அம்மரக்கலங்களைச் செலுத்தும் தகுதி இல்லாத மீனவர்களும் நெய்தல் நில மக்களும் கொண்டு போகும்பொழுது அப்பொருட்கள் இடைவழியெல்லாம் சிதறிக் கிடக்கின்றன. உன் நாடு அத்தகைய வளமுடையது.

சிறப்புக் குறிப்பு:-

பெரிய மரக்கலங்கள் துறைமுகத்திற்குள் நுழையும் முன், கூம்பையும் பாய்மரங்களையும் களைவதும், பாரத்தைக் குறைப்பதும் முறையாகச் செய்ய வேண்டிய செயல்கள். காவிரி ஆறு கடலில் கலக்கும் பூம்புகார் துறைமுகத்தில், ஆற்றின் ஆழம் அதிகமாக இருப்பதால் அத்தகைய செயல்களைச் செய்ய வேண்டிய தேவையில்லை என்று தெரிகிறது. மற்றும், பெரிய மரக்கலங்களில் உள்ள பொருட்களின் மிகுதியால், அம்மரக்கலங்களைச் செலுத்துவோர் மட்டுமல்லாமல், அங்குள்ள மற்ற மக்களும் அம்மரக்கலங்களிலுள்ள பொருட்களை நாட்டுக்குள் கொண்டு செல்கிறார்கள். அவ்வாறு அவர்கள் கொண்டு செல்லும் பொழுது, பொருட்கள் வழியிலே சிதறிக் கிடக்கின்றன. பொருட்கள் கீழே சிதறிக் கிடப்பதைப் பற்றி யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. இந்தக் காட்சி, சோழன் நலன்கிள்ளியின் நாட்டின், நீர்வளத்தையும், பொருளாதார வளத்தையும் குறிப்பிடுவதாகத் தோன்றுகிறது.

பார்தீரா தமிழர்களின் வளமையை? இப்படியானது நமது பெருமை. தமிழன் என்று பெருமை கொண்டோர் அனைவரும் இந்தப் பாடலை பகிர வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. வாழ்க தமிழர் மறை.