கீரை உடலுக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் அதில் உடலுக்கு வேண்டிய எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.
எனவே வாரத்திற்கு ஒரு முறை ஏதேனும் ஒரு கீரையை சமைத்து சாப்பிட வேண்டும். இப்போது அந்த கீரையில் பசலைக் கீரையை எப்படி சப்ஜி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
பசலை கீரை - 2 கட்டு (நறுக்கி கழுவியது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
பட்டாணி - 1/2 கிலோ
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 4 (அரைத்தது)
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
தக்காளி - 2 (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் பட்டாணியை வேக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பிறகு அதில் இஞ்சி பூண்டு விழுது, அரைத்த மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
பின்பு அத்துடன் மஞ்சள் தூள், தக்காளி, உப்பு, வேக வைத்த பட்டாணி, நறுக்கிய கீரை சேர்த்து, தேவையான தண்ணீர் விட்டு, மூடி வைத்து, தீயை குறைவில் வைத்து வேக வைக்க வேண்டும்.
பின் அதனை இறக்கி, ஒரு முறை கடைந்து, பாத்திரத்தில் ஊற்றி விட வேண்டும்.
அடுத்து மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து, தாளித்து, கடைந்த கீரையில் ஊற்ற வேண்டும்.
இப்போது சுவையான கீரை சப்ஜி ரெடி!!! இதனை சாதத்துடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
குறிப்பு: வேண்டுமெனில் இதில் வேறு கீரைகளையும் பயன்படுத்தி செய்யலாம்.