Author Topic: ~ "பாட்டி தாத்தா சொன்ன கதைகள்" ~  (Read 2023 times)

Offline MysteRy

வித்தியாசமான உதவி !



ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவனுக்குப் பசியெடுத்தது. ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான். மரத்தின் மேல் சரசரவென்று ஏறி அவற்றில் சில பழங்களைப் பறித்துத் தின்றான். மிகக் கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன. அவற்றை எட்டிப் பறிக்கக் கிளையின் மேல் நகர்ந்து சென்ற போது அவனது பாரம் தாங்காமல் ஒரு கிளை முறிந்து விட்டது.

சட்டென்று சுதாரித்த அவன் கீழே இருந்த ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்க ஆரம்பித்தான். குனிந்து பார்த்தால் தரை வெகு கீழே இருந்தது. ஏற்கெனவே பயந்து போயிருந்த அவன் மேலும் பயந்து கண்ணை மூடிக் கொண்டு "யாராவது காப்பாற்றுங்கள்' என்று திரும்பத் திரும்ப அலற ஆரம்பித்தான். உள்ளங்கை வியர்த்து வழுக்க ஆரம்பிக்கும் நிலை வந்து விட்டது.

தற்செயலாக அப்போது அந்தப் பக்கம் ஒரு முதியவர் வந்தார். மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்தார். அவன் மேல் ஒரு சிறிய கல்லை விட்டு எறிந்தார். கல் பட்டவுடன் வலியில் கீழே பார்த்தவனுக்கு ஆத்திரம் வந்தது. "பெரியவரே, உதவச் சொன்னால் கல்லால் அடிக்கிறீரே. அறிவில்லையா உமக்கு" என்று கோபத்துடன் கேட்டான்.

பெரியவர் பதில் பேசாமல் மற்றொரு சிறிய கல்லை எடுத்து அவன் மேல் எறிந்தார். மேலும் கோபமுற்ற இளைஞன் பெருமுயற்சி எடுத்து கையை வீசி மேலிருந்த கிளை ஒன்றை பலமாக பற்றிக் கொண்டு "நான் கீழே வந்தால் உம்மைச் சும்மா விட மாட்டேன்" என்று எச்சரித்தான்.

பெரியவர் மேலும் ஒரு கல்லை அவன் மேல் வீசினார். இளைஞன் இப்போது இன்னொரு பெருமுயற்சி எடுத்து கிளைமேல் ஏறி விட்டான். விடுவிடுவென இறங்கி வந்த அவன் நேராகப் பெரியவரிடம் வந்தான். அவரை சரமாரியாகத் திட்டினான். "ஏன் அப்படிச் செய்தீர்? உம்மை நான் உதவிதானே கேட்டேன்?" என்றான்.

பெரியவர் அமைதியாக சிரித்துக் கொண்டே "தம்பி.. நான் உனக்கு உதவிதான் செய்தேன்" என்றார். இளைஞன் திருதிருவென முழித்தான்.

பெரியவர் விளக்கினார். "நான் உன்னை முதலில் பார்த்த போது நீ பயத்தால் உறைந்து போயிருந்தாய். உன் மூளை வேலை செய்யவில்லை. நான் கல்லை விட்டு எறிந்ததும் பயம் மறைய ஆரம்பித்து நீ என்னை எப்படிப் பிடிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாய். யோசிக்க ஆரம்பித்தவுடன் நீயாகவே உன்னைக் காப்பாற்றிக் கொண்டு கீழே இறங்கி விட்டாய். உன்னை உன்னாலேயே காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று உன் அறிவுக்கு முதலில் புலப்படவில்லை. உன் பயம் உன் கண்ணை மறைத்துக் கொண்டிருந்தது. அதிலிருந்து உன்னை நான் திசை திருப்பினேன்" என்று சொல்லி விட்டுத் தன் வழியே அவர் போய் விட்டார்.
« Last Edit: January 10, 2013, 01:52:52 PM by MysteRy »

Offline MysteRy

துறவி கையில் கிடைத்த சிலம்பு!



துறவி கையில் கிடைத்த சிலம்பு!
ஒரு ராஜாவின் அரண்மனையில் சிலம்பு ஒன்று காணாமல் போய்விட்டது. அரசனுக்கு கடுமையான கோபம். சிலம்பை ஒரு மாதத்துக்குள் கண்டுபிடித்து தருபவர்களுக்கு பரிசளிக்கப்படும் என்று அறிவித்தார். ஒரு மாதத்துக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டால் மரண தண்டனை என்றும் அறிவித்தார்.

அந்த ஊருக்கு புதிதாக வந்த துறவியின் கையில் சிலம்பு கிடைத்தது. அந்த சிலம்பு குறித்து அந்த ஊர் மக்களிடம் கேட்டறிந்தார் துறவி. மக்கள் அரசனின் உத்தரவை அவரிடம் தெரிவித்தனர்.

அரசனின் உத்தரவை அறிந்த துறவி ஒரு மாதம் கழித்து அந்த சிலம்பை அரசனிடம் கொடுத்தார். உடனே அரசன் அந்த துறவியைப் பார்த்து, “உனக்கு இப்போது மரண தண்டனை கொடுக்க வேண்டியிருக்கும்” என்றார்.

அதற்கு அந்த துறவி, “சிலம்பு கிடைத்ததும் ஓடோடி வந்து தந்திருந்தால் பரிசுக்கு ஆசைப்பட்டதாக ஆகிவிடும். மரணதண்டனை கிடைக்கும் என்று அஞ்சி, சிலம்பை கொடுக்காமலேயே இருந்தால் மரண தண்டனைக்கு அஞ்சியவன் ஆகிவிடுவேன். சிலம்பை அப்படியே வைத்துக் கொண்டால் பிறர் பொருளுக்கு ஆசைப்பட்டவனாக ஆகிவிடுவேன் என்று தெரிவித்து, அறவழியில் நடக்கும் ஒருவனை அழிக்க எந்த அரசுக்கும் அதிகாரம் இல்லை.”என்று தெரிவித்தார்.

இதைக் கேட்ட அரசர் தலைவணங்கித் துறவியை அனுப்பி வைத்தார்.

Offline MysteRy

உலகத்திற்கு உப்பாய் இரு:



ஒரு காலத்தில் இந்திரத்யும்னன் என்று ஒரு மாமன்னன் இருந்தான். அவன் ஆட்சி காலத்தில் மக்கள் போற்றும் வண்ணம் தான தர்மங்கள் செய்து, சிறப்பாக அரசாண்டு, நேரே சொர்க்கத்திற்குப் போனான். சொர்க்கபுரியின் இன்பத்தில் திளைத்துக் கொண்டிருந்த அவனை ஒரு நாள் சொர்க்கத்தின் 'தலை' கூப்பிடுவதாக தேவதூதன் வந்து சொன்னான். மன்னன் சென்று என்னவென்று கேட்ட போது 'உனக்கு சொர்க்க வாசம் முடிந்து விட்டது. பூலோகத்திற்கு நாளை கிளம்பத் தயாரக இரு' என்று கட்டளை போட்டது 'தலை'.

ஏனென்று மன்னன் கேட்டான். 'நீ செய்த நல்ல காரியங்களை நினைவில் வைத்திருக்க யாருமே இனிமேல் பூலோகத்தில் உயிருடன் இல்லை. இன்றுடன் அந்த கணக்குத் தீர்ந்து விடும். ஆகவே கிளம்பும் வழியைப் பார்' என்று பதில் வந்தது. 'இதற்குத் தீர்வே இல்லையா?' என்று மன்னன் முறையிட்டான். 'தலை' முகவாயைச் சொறிந்து கொண்டு யோசித்தது. பிறகு 'மன்னா, நீ கீழே போய் உனது நற்காரியங்களால் இன்னும் பலன் பெறும் ஒரு ஜீவனையாவது கண்டு பிடித்தால் உனக்கு சொர்க்கம் நீடிக்கப் படும்' என்று சொன்னது.
மன்னனும் கிளம்பிப் பூலோகம் வந்தான். பல நூறு ஆண்டுகள் கடந்து விட்டிருந்தன. அவன் வாழ்ந்த இடமே தலை கீழாக மாறிப் போயிருந்தது. மக்களில் யாரையும் அவனால் அடையாளம் கண்டு பிடிக்க முடியவில்லை. மனதைத் தேற்றி நம்பிக்கையை ஏற்றிக் கொண்டு விடாமுயற்சியாகத் தேடி, இருப்பதிலேயே வயதான ஒரு மனிதரை சந்தித்தான்.

அவரிடம் 'ஐயா! உமக்கு இந்திரத்யும்னன் என்று இந்தப் பகுதியை அரசாண்ட மன்னனைப் பற்றித் தெரியுமா?' என்று ஆர்வத்துடனும் மிகுந்த எதிர்பார்ப்புடனும் கேட்டான். வயோதிகர் இடுங்கிய கண்களால் அவனை மேலும் கீழும் பார்த்து விட்டு உதட்டைப் பிதுக்கி விட்டார். 'வேண்டுமானால் என்னை விட வயதான ஆந்தை ஒன்று பக்கத்து மரப் பொந்தில் தூங்கிக் கொண்டிருக்கிறது. இரவில் அது விழித்த பின் அதனிடம் போய்க் கேள்' என்று சொல்லி விட்டார்.

வேறு வழியில்லாமல் இரவு வரை கோவில் நிழலில் உட்கார்ந்திருந்து விட்டு இரவு ஆந்தையைப் பார்த்தான். தலையை முதுகுப் பக்கம் வைத்து ஒரு இரையைக் குறி வைத்துக் கொண்டிருந்த ஆந்தையிடம் இந்திரத்யும்னனைப் பற்றிக் கேட்டான். இரையைத் தப்ப விட்ட எரிச்சலில் ஆந்தை 'எனக்குத் தெரியாது. இங்கே ஒரு கிழட்டு நாரை தினமும் காலைப் பொழுதில் திரியும். வேண்டுமானால் அதைக் கண்டு பிடித்துக் கேள்' என்று சொல்லி விட்டுத் தன் வேலையைப் பார்க்கப் போய் விட்டது.

காலையில் அலைந்து திரிந்து நாரையைக் கண்டு பிடித்தான். அதனிடம் கேட்டபோது. 'எனக்கு நினைவில்லை. ஆனால் பக்கத்து ஏரியில் ஒரு ஆமை கிடக்கிறது. அதற்கு நினைவிருக்க வாய்ப்பிருக்கிறது' என்று நம்பிக்கையை வளர்த்தி விட்டது.

மன்னன் ஏரியைத் தேடி ஓடினான். அங்கே வயதான ஆமையைப் பார்த்தான். தள்ளாத வயதில் சிரமப் பட்டுக் கொண்டிருந்தது அந்த ஆமை. நம் மன்னன் அதனிடம் இந்திரத்யும்னனைப் பற்றிக் கேட்டான். ஆமை உடனே 'ஆமாம். அவனால்தான் இந்த ஏரியும் இருக்கிறது, அதில் இருக்கும் உயிரினங்களும் நன்றியுடன் உயிர் வாழ்கின்றன' என்று சொன்னது. அப்போது மன்னன் 'நானேதான் அந்த இந்திரத்யும்னன்! எனக்கு இந்த ஏரியை ஏற்படுத்தியதாக நினைவில்லையே. நீ ஏதோ தப்பாகச் சொல்கிறாய்' என்று நம்பிக்கை இழந்து போய் ஆமையிடம் சொன்னான்.


ஆமையும் 'கதை அப்படியில்லையப்பா! நீ அரசாண்ட போது மக்களுக்குத் தினமும் ஏராளமான பசுக்களைத் தானமாக வழங்கினாய். மக்கள் அவற்றையெல்லாம் இந்தப் பகுதியிலுள்ள புல் தரையில் மேய விட்டார்கள். மாடுகள் தினமும் அலைந்து திரிந்து தன் குளம்புகளால் மண்ணைக் கிளப்பி விட்டதால் இந்தப் பகுதி நாளடைவில் பள்ளமாகப் போய் விட்டது. மழை பெய்து நீர் பிடித்ததால் ஏரியாக மாறிவிட்டது. இந்தப் பகுதியின் செழிப்பிற்கே இந்த ஏரிதான் காரணம் என்றும் ஆகி விட்டது. அதைக் கேட்டுத்தான் நான் இங்கே குடியேறினேன். இத்தனை நாள் நன்றியுடன் வாழ்ந்திருக்கிறேன். இன்னமும் பல உயிரினங்களும் வாழ்கின்றன. வாழப் போகின்றன' என்றது.

தூரத்தில் சொர்க்கபுரியில் இருந்து மன்னனைக் கூட்டிப் போக விமானம் வருவது மன்னனுக்குத் தெரிந்தது.

நீதி: நாம் செய்யும் நல்ல காரியங்களுக்கு பலன் பல நாட்களுக்கும் பல தலைமுறைகளுக்கும் நீட்டித்திருக்கும் படியாக யோசித்துச் செய்வது நல்லது

Offline MysteRy

கிடைத்ததை விடலாமா?



ஒரு நாள் சிறுத்தை பசியுடன் உணவைத் தேடியது. அப்போது ஒரு கறுப்பு மானையும் ஒரு புள்ளி மானையும் கண்டது.

அவை இரண்டும் மலையடிவாரத்தில் மேய்ந்து கொண்டிருந்தன. சிறுத்தை மிகுந்த எச்சரிக்கையுடன் மலையடிவாரத்தருகே சென்றது. ஆனால் எதனைத் தாக்குவது என அது முடிவு செய்யவில்லை.

அதே நேரத்தில் சிறுத்தையைப் பார்த்த மான்கள் இரண்டும் வேகமாக ஓடின. பிறகு அவை இரண்டும் ஒரு இடத்தில் இடது வலது பாதைகளில் ஓடின.

சிறுத்தை அந்த இடத்துக்கு வந்தது. “எதைத் துரத்தலாம்?” என்று தயங்கி நின்றது.

பிறகு, “சரி.. கறுப்பு மானைத் துரத்தலாம். அதன் இறைச்சிதான் சுவையாக இருக்கும்” என்று முடிவு செய்து கறுப்பு மானைத் துரத்தத் தொடங்கியது. ஆனால் அதற்குள் அது தொலைதூரம் ஓடிப் போய் விட்டது.

உடனே சிறுத்தை, "அது வேகமாக ஓடக் கூடிய மான். அதைப் பிடிக்க முடியாது. பசி வேறு அதிகமாகி விட்டது. சரி... புள்ளி மானைப் பிடிக்கலாம்" என்று தீர்மானித்து திரும்பி வந்து எதிர் பாதையில் ஓடியது.

ஆனால் புள்ளிமான் எப்போதோ பஞ்சாய்ப் பறந்து விட்டிருந்தது.

இப்படித்தான் முடிவெடுப்பதில் தயக்கம் காட்டுபவர்கள் கிடைத்ததை இழந்து நிற்கிறார்கள்.

Offline MysteRy

"மலை தடுக்கி விழாதவர்"



அது ஒரு பெரிய கல்யாண மண்டபம். ஒரு பெரிய புள்ளியின் மகனின் கல்யாணம். அங்கு சொல் வித்தகர், சொல் விளக்கச் செம்மல் என்று பல சிறப்பு பெயர்களைக் கொண்ட கவிஞர் தமிழ் விழைவோன் வந்திருந்தார். அவருடன் உரையாட விரும்பாதர்களே இருக்க முடியாது. எதற்கும் அளவாய் அழகாய், பொருத்தமாய், திருத்தமாய், ஆணித்தரமாய் விளக்கம் தருவதைப் பாரட்டாமல் இருக்க முடியாது.. அந்தத் துறையில் அவர் ஓர் அசத்தல் மன்னன்.

மாப்பிள்ளை அழைப்பு கல்யாண மண்டப வாசலில் மெதுவாக வந்து கொண்டிருந்தது.. உள்ளே குறைந்த பேர்களே இருந்தனர். அவர்களும் கல்யாண ஏற்பாடுகளில் மும்மரமாக இருந்தனர். தமிழ் விழைவோன் ஒரு இருக்கையில் அமர்ந்த வண்ணம் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்தார்.

அந்த இடத்தில் ஒரு சுவற்றின் அருகே ஒரு ஓரத்தில் 8 வயது மதிக்கத்தக்க சிறு பெண் ஏதோ செய்துக் கொண்டிருந்தாள். எதோ ஒரு ஆவலில் அந்தப் பெண் அருகே சென்று, “அம்மா, என்ன செய்துக் கொண்டிருக்கிறாய்” என்று கேட்டார்.

அதற்கு அவள், “நான் எறும்பைக் கொன்று கொண்டிருக்கிறேன்.” என்றாள்.

“அம்மா, இப்ப இந்த ஜென்மத்தில் நீ ஒரு பெண்ணாய் இருந்து எறும்பைக் கொன்றால் அடுத்த ஜென்மத்தில் அந்த எறும்பு பெண்ணாகி நீ எறும்பாக இருக்கும் போது உன்னைக் கொல்லும். வேண்டாம் கொல்லாதே” என்றார். தான் இப்படி சொல்வதால் அவள் மேற்கொண்டு எறும்பைக் கொல்வதை நிறுத்துவாள் என நினைத்தார்.

ஆனால்.. அவளோ, “போன ஜென்மத்தில் நான் எறும்பாக இருந்த போது என்னைக் கொன்ற எறும்பைத்தான் நான் இப்போது கொன்று கொண்டிருக்கிறேன்” என்றாள்.

அவள் சொல்வதை முழுவதும் ஏற்க முடியாது என்ற போதிலும் தான் சொன்ன வார்த்தைகளைக் கொண்டே அவள் பதில் சொன்ன விதம் அவருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. பொதுவாக அவர் விளக்கத்தைக் கேட்டு மற்றவர் வாய் அடைத்துப் போவது உண்டு. இன்றோ தனக்கு அந்த நிலை ஏற்பட்டதை அவர் உணர்ந்தார்.

யாரும் மலை தடுக்கி வீழ்வதில்லை. சிறு கல் தடுக்கித்தான் வீழ்வார்கள்.

Offline MysteRy

பெற்றோர்கள் சொன்னால் கேட்கனும்...



ஒரு ஊருல ஒரு கருவண்டு இருந்துசாம் அதுக்கு ஒரு சிறிய வண்டு இருந்துசாம் தினமும் காலைல அந்த பெரிய வண்டு இரைதேட அந்த சின்ன வண்ட விட்டுட்டு போகுமாம் போகும் போது அம்மா வரும் வரையில் இங்க தான் இருக்கனும் எங்கயும் போகக்கூடாதுனு சொல்லிட்டு போச்சாம் அம்மா மட்டும் போராங்க நாமும் போய் பார்கலாம்னு அந்த சிறிய வண்டு சொல்பேச்சு கேக்காம போச்சாம் மலர்களுக்குள்ள மட்டும் இருந்த வண்டு உலகத்தப் பார்த்ததும் ஆச்சரியமா இருந்துச்சாம் சந்தோசமா இருந்துச்சாம் அம்மா பாரே நம்மல விட்டுட்டு சந்தோசமா இருக்காங்கனு அம்மா மேலயே கோபம் வந்துச்சாம் போகும் போது ஒரு குளத்தை பார்த்துச்சாம் அதுல அழகான செந்தாமரைப் பூ ஒன்று மெத்தை விரிச்சது போன்று இருந்துச்சாம் அதுமேல இந்த சிறுவண்டு உட்கார்ந்ததும் ஊஞ்சல் ஆடரமாதிரி இருந்துச்சாம் அதிக சந்தோசத்துல இருந்தபோது நேரம் போனதே தெரியலயாம் மாலை நேரம் வந்ததும் சூரியன் வந்துசாம் வந்ததும் அந்த தாமரை பூ சுறுங்கிடுச்சாம் வண்டு வெளியே வரமுடியாம ரொம்ப நேரம் அழுது ரொம்ப கஷ்டப்பட்டு மீண்டும் அழுது அழுது மூஞ்செல்லாம் வீங்கி அங்கயே தூங்கிடுச்சாம் இரவு முழுவதும் சிறு வண்ட கானாமல் தாய் வண்டு அழுதுட்டே தேடிச்சாம் காலை சூரியன் வந்ததும் அந்த தாமரை விரிஞ்சுசாம் அந்த சிறு வண்டு அதுக்குள்ள தூங்கிட்டு இருந்துச்சாம் அப்பரம் தாய் வண்டு வந்து பார்கும் போது தூங்கிட்டு இந்துச்சாம் அத எழுப்பி முத்தம் கொடுத்து வீட்டுக்கு கூட்டிட்டு போச்சாம் அதனால பெற்றேர் சொல்லரது எல்லாமே நன்மைக்குதான் அத கேட்டு நடந்தா வாழ்க்கைல எந்த கஷ்டமும் வரதாது என்பதை உணருகிறேம்.

Offline MysteRy

புத்திசாலி கழுதை:



ஒரு நாள் ஒரு காட்டுப் பகுதியில் கழுதை ஒன்று புல்மேய்ந்து கொண்டிருந்தது.

கழுதையை கவனித்த ஓநாய் ஒன்று அதை அடித்துத் தின்னும் நோக்கத்துடன் அதன் மீது பாய்ந்தது. தனக்கு வந்த ஆபத்தைக் கண்டு பயந்தது கழுதை.

ஓநாயை எதிர்த்து சண்டை போடுவது கஷ்டம். அதனால் ஏதாவது ஒரு தந்திரம் செய்து தான் சமாளிக்க வேண்டும் என கழுதை தீர்மானித்தது.

ஓநாயின் பாய்ச்சலின் போது சற்று விலகிக் கொண்டு, ""ஓநாயாரே, உம்முடைய வலிமையின் முன்னால் நான் எம்மாத்திரம்... நான் இன்று உமக்கு இரையாகப் போவது உறுதி. இதை யாராலும் தடுக்க. முடியாது நானும் உமக்கு இரையாகத் தயாராக இருக்கிறேன். அதற்கு முன்னால் நான் சொல்லக் கூடிய விஷயத்தைத் தயவு செய்து கேட்க வேண்டும்,'' என வேண்டிக் கொண்டது.

""நீ என்ன சொல்ல விரும்பினாய். சொல்வதை சீக்கிரம் சொல். எனக்கு பசி அதிகமாக இருக்கிறது,'' என உறுமியது ஓநாய்.

""ஓநாயாரே என் காலில் பெரிய முள் ஒன்று குத்தி விட்டது. முள்ளை எடுக்க நான் எவ்வளவோ முயற்சி செய்தும் முடியவில்லை. காலில் முள் உள்ள நிலையில் நீர் என்னை அடித்துச் சாப்பிட்டால் அந்த முள் உமது தொண்டையில் மாட்டிக் கொள்ளும். அது உமக்குக் கடுமையான வேதனையைத் தருவதுடன் உமது உயிரை வாங்கி விடவும் கூடும். அதற்கு அருள் கூர்ந்து முதலில் என் காலில் இருக்கும் முள்ளை எடுத்துவிடும். அதற்குப் பிறகு நீர் என்னை அடித்துத் தின்பதில் எனக்கு ஆட்சேபனை ஏதும் இல்லை,'' என கழுதை கூறிற்று.

ஏமாந்த ஓநாய் ஒத்துக் கொண்டது.

கழுதை தனது பின்னங் கால்களைத் திருப்பிக் காண்பித்து, ""இடது காலில் தான் முள் இருக்கிறது!'' எனக் கூறிற்று.

ஓநாய் கழுதையின் பின்னங்கால்களில் முள் இருக்கிறதா என ஆராய்ச்சி செய்தது. அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு கழுதை பின்னங் கால்களால் ஓநாயைப் பலமாக உதைத்துப் படுகாயப்படுத்தியது.

கழுதையின் உதை தாளமாட்டாது ஓநாய் துடிதுடித்து வீழ்ந்தது. அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு கழுதை வேகமாக ஓடி தப்பித்துக் கொண்டது.