Author Topic: பாரதிதாசன் கவிதைகள்  (Read 10825 times)

Offline Global Angel

Re: பாரதிதாசன் கவிதைகள்
« Reply #45 on: January 12, 2013, 02:52:58 AM »
பலிபீடம்

த - ஓடத்திலேறிய மாந்தரே - பலி
பீடத்திலே சாய்ந்தீ ரே!

பாடுபட்டீர்கள் பருக்கையில்லா தொரு
பட்டியில் மாடென வாழ்கின்றீர் - மதக்
கேடர்கள் காலினில் வீழ்கின்றீர் - ஒண்ட
வீடுமில்லாமலே தாழ்கின்றீர்! (மத)

பாதிக்குதே பசி என்றுரைத்தால், செய்த
பாபத்தைக் காரணம் காட்டுவார் - மத
வாதத்தை உம்மிடம் நீட்டுவார் - பதில்
ஓதி நின்றால் படை கூட்டுவார். (மத)

வாதனை சொல்லி வணங்கி நின்றால் தெய்வ
சோதனை என்றவர் சொல்லுவார் - பணச்
சாதனையால் உம்மை வெல்லுவார் - கெட்ட
போதனையால் தினம் கொல்லுவார். (மத)

பேதிக்கும் நோய்க்கும் பெரும்பசிக்கும் பல
பீதிக்கும் வாய்திறப் பீர்களோ! - இழி
சாதியென்றால் எதிர்ப்பீர்களோ? - செல்வர்
வீதியைத் தான் மதிப்பீர்களோ? (மத)

கூடித் தவிக்கும் குழந்தை மனைவியர்
கூழை நினைத்திடும் போதிலே - கோயில்
வேடிக்கையாம் தெரு மீதிலே - செல்வர்
வாடிக்கை ஏற்பீரோ காதிலே? (மத)

தொட்டிடும் வேலை தொடங்கலு மின்றியே
தொந்தி சுமக்கும்பு ரோகிதர் - இட்ட
சட்டப்படிக்கு நீரோ பதர் - அவர்
அட்டகாசத்தினுக் கேதெதிர்? (மத)

மூடத்தனத்தை முடுக்கும் மதத்தை நிர்
மூலப்படுத்தக்கை ஓங்குவீர் - பலி
பீடத்தை விட்டினி நீங்குவீர் - செல்வ
நாடு நமக்கென்று வாங்குவீர். (மத)
                    

Offline Global Angel

Re: பாரதிதாசன் கவிதைகள்
« Reply #46 on: January 12, 2013, 02:53:32 AM »
நீங்களே சொல்லுங்கள்

சித்திரச் சோலைகளே! உமை நன்கு
திருத்த இப் பாரினிலே - முன்னர்
எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தன
ரோ! உங்கள் வேரினிலே.

நித்தம் திருத்திய நேர்மையி னால்மிகு
நெல்விளை நன்னிலமே! - உனக்
கெத்தனை மாந்தர்கள் நெற்றி வியர்வை
இறைத்தனர் காண்கிலமே.

தாமரை பூத்த தடாகங்களே! உமைத்
தக்க்அக் காலத்திலே - எங்கள்
தூய்மைச் சகோதரர் தூர்ந்து மறைந்ததைச்
சொல்லவோ ஞாலத்திலே.

மாமிகு பாதைகளே! உமை இப்பெரு
வையமெ லாம் வகுத்தார் - அவர்
ஆமை எனப்புலன் ஐந்தும் ஒடுங்கிட
அந்தியெலாம் உழைத்தார்.

ஆர்த்திடும் யந்திரக் கூட்டங்களே! - உங்கள்
ஆதி அந்தம் சொல்லவோ? - நீங்கள்
ஊர்த் தொழிலாளர் உழைத்த உழைப்பில்
உதித்தது மெய் அல்லவோ?

கீர்த்திகொள் போகப் பொருட்புவியே! உன்றன்
கீழிருக்கும் கடைக்கால் - எங்கள்
சீர்த்தொழி லாளர் உழைத்த உடம்பிற்
சிதைந்த நரம்புகள் தோல்!

நீர்கனல் நல்ல நிலம்வெளி காற்றென
நின்ற இயற்கைகளே! - உம்மைச்
சாரும் புவிப்பொருள் தந்ததெவை? தொழி
லாளர் தடக்கைகளே!

தாரணியே! தொழிலாளர் உழைப்புக்குச்
சாட்சியும் நீயன்றோ? - பசி
தீரும் என்றால் உயிர்போகும் எனச்சொல்லும்
செல்வர்கள் நீதி நன்றோ?

எலிகள் புசிக்க எலாம் கொடுத்தே சிங்க
ஏறுகள் ஏங்கிடுமோ - இனிப்
புலிகள் நரிக்குப் புசிப்பளித்தே பெரும்
புதரினில் தூங்கிடுமோ?

கிலியை விடுத்துக் கிளர்ந்தெழுவார் இனிக்
கெஞ்சும்உத் தேசமில்லை - சொந்த
வலிவுடையார் இன்ப வாழ்வுடையார் இந்த
வார்த்தைக்கு மோசமில்லை.
                    

Offline Global Angel

Re: பாரதிதாசன் கவிதைகள்
« Reply #47 on: January 12, 2013, 02:54:03 AM »
வியர்வைக் கடல்

அதிகாலை

கிழக்கு வெளுக்குமுன் வெளியிலற் கிளம்பினேன்
ஒளிசெயும் மணியிருள், குளிர்ச்சி; நிசப்தம்,
இவற்றிடை என்னுளம் துள்ளும் மான்குட்டி!
உத்ஸாகம் எனைத் தூக்கி ஒடினது!

இயற்கை

குன்றம் இருக்கும் அக்குன்றத்தின் பால்
குளமும், அழகிய குளிர்பூஞ் சோலையும்
அழகு செய்யும்! அவ்விடத் தில்தான்
என்றவன் சொந்த நன்செய் உள்ளது.

பகல்

கடல்மிசை உதித்த பரிதியின் நெடுங்கதிர்
வானெலாம் பாய்ந்தது! பறந்தது வல்லிருள்!
புவியின் சித்திரம் ஒளியிற் பொலிந்தது.
இயற்கை தந்த எழிலிடை நடந்தேன்.

வயல்

வளம்பெற நிறைந்த இளம்பயிர்ப் பசுமை
மரகதம் குவிந்த வண்ணம் ஆயிற்று;
மரகதக் குவியல்மேல் வாய்ந்த பனித்துளி
காணக்கண் கூசும் வயிரக் களஞ்சியம்!
பரந்தஎன் வயலைப் பார்த்துக்கொண் டிருந்தேன்
மகிழ்ச்சி தவிர மற்றொன்று காணேன்!

உழைப்பு

களையினைக் களைவது கருதி, எனது
பண்ணை ஆட்கள் பலபேர் வந்தனர்.
என்னை வணங்கினர்; வயலில் இறங்கினர்.
வில்லாய் வளந்தது மேனி; அவர்தோள்
விசையாய்க் களைந்தது களையின் விளைவை!
முகவிழி கவிழ்ந்து வயலில் மொய்த்தது.

நடுப்பகல்

காலை போதினைக் கனலாற் பொசுக்கிச்
சூரியன் ஏறி உச்சியிற் சூழ்ந்தான்.
சுடுவெயில் உழவர் தோலை உரித்தது;
புதுமலர்ச் சோலையில் போய்விட்டேன் நான்.


வெயில்

குளிர்புனல் தெளிந்து நிறைந்த மணிக்குளம்!
நிழல்சேர் கரையில் நின்றுகொண் டிருந்தேன்.
புழுக்கமும் வியர்வையும் எழுப்பி என்னை
நலிவு செய்த நச்சு வெய்யில்,
வானி லிருந்து மண்ணிற் குதித்துத்
தேன்மலர்ச் சோலைச் செழுமை கடந்தென்
உளத்தையும் உயிரையும் பிளப்பது விந்தை!
குளத்தில் விழுந்து குளிக்கத் தொடங்கினேன்.
வெள்ளப் புனலும் கொள்ளிபோல் சுட்டது.

உழைப்புத் துன்பம்

காலைப் போதினைக் கனலால் பொசுக்கிச்
சோலையும் கடந்து சுடவந்த வெயில்
விரிபுனற் குளத்தையும் வெதுப்பிய தெண்ணினேன்.
எண்ணும் போதென் கண்ணின் எதிரில்
வியர்வையும் அயர்வுமாய்ப் பண்ணை யாட்கள்
வந்து நின்று வணக்கம் செய்தனர்.
ஐயகோ நெஞ்சமே, இந்த ஆட்கள்
தாங்கொணாக் கனலை எவ்வாறு தாங்கினர்?

வியர்வைக் கடலின் காட்சி

களைபோக்கு சிறுபயன் விளைக்க இவர்கள்
உடலைக் கசக்கி உதிர்த்த வியர்வையின்
ஒவ்வொரு துளியிலும் கண்டேன்
இவ்வுல குழைப்பவர்க்குரிய தென்பதையே!
                    

Offline Global Angel

Re: பாரதிதாசன் கவிதைகள்
« Reply #48 on: January 12, 2013, 02:54:40 AM »
புதிய உலகு செய்வாம்

புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம். (புதிய)

பொதுஉடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்
புனிதமோ டதைஎங்கள் உயிரென்று காப்போம். (புதிய)

இதயமெலாம் அன்பு நதியினில் நனைப்போம்
'இது எனதெ'ன்னுமோர் கொடுமையைத் தவிர்ப்போம் (புதிய)

உணர்வெனும் கனலிடை அயர்வினை எரிப்போம்
'ஒருபொருள்தனி’எனும் மனிதரைச் சிரிப்போம்! (புதிய)

இயல்பொருள் பயன்தர மறுத்திடில் பசிப்போம்
ஈவதுண்டாம் எனில் அனைவரும் புசிப்போம் (புதிய)
« Last Edit: January 12, 2013, 03:04:47 AM by Global Angel »
                    

Offline Global Angel

Re: பாரதிதாசன் கவிதைகள்
« Reply #49 on: January 14, 2013, 01:15:41 AM »
 சாய்ந்த தராசு

வாழ்வதிலும் நலம் சூழ்வதிலும் புவி
மக்களெல்லாம் ஒப்புடையார்!

ஏழ்மையில் மக்களைத் தள்ளுவதோ? - இதை
இன்பமெனச் சிலர் கொள்ளுவதோ? (வா)

கூழுக்குப் பற்பலர் வாடவும் சிற்சிலர்
கொள்ளையடிப்பதும் நீதியோ - புவி
வாழ்வதுதான் எந்தத் தேதியோ? (வா)

சிற்சிலர் வாழ்ந்திடப் பற்பலர் உழைத்துத்
தீர்கஎனும் இந்த லோகமே - உரு
அற்றொழிந் தாலும்நன் றாகுமே! (வா)

காண்பதெலாம் தொழிலாளி செய்தான் அவன்
காணத்தகுந்தது வறுமையாம் - அவன்
பூணத் தகுந்ததும் பொறுமையாம்! (வா)

அன்பெனச் சொல்லியிங் காதிமுதற் பேத
வன்மை வளர்த்தனர் பாரிலே - அதன்
பின்புகண் டோம்இதை நேரிலே (வா)

மக்கள் பசிக்க மடத்தலைவர்க் கெனில்
வாழை யிலைமுற்றும் நறுநெய்யாயம் - இது
மிக்குயிர் மேல்வைத்த கருணையாம் (வா)

கோயிலிலே பொருள் கூட்டும் குருக்களும்
கோதையர் தோளினிற் சாய்கின்றார் - இங்கு
நோயினிலே மக்கள் மாய்கின்றார் (வா)

கோரும் துரைத்தனத்தாரும் பெரும் பொருள்
கொண்டவர்க்கே நலம் கூட்டுவார் - உழைப்
போரிடமே கத்திதீட்டுவார் (வா)

மக்களெல்லாம் சமமாக அடைந்திட
மாநிலம் தந்ததில் வஞ்சமோ? - பசி
மிக்கவரின் தொகை கொஞ்சமோ? (வா)
                    

Offline Global Angel

Re: பாரதிதாசன் கவிதைகள்
« Reply #50 on: January 14, 2013, 01:16:41 AM »
உலகம் உன்னுடையது!

ள்ளம் பறிப்பாய், பாதாளத்தின்
அடிப்புறம் நோக்கி அழுந்துக! அழுந்துக!
பள்ளந்தனில்விழும் பிள்ளைப் பூச்சியே,
தலையைத்தாழ்த்து! முகத்தைத்தாழ்த்து!
தோளையும் உதட்டையும் தொங்கவை! ஈன
உளத்தை, உடலை, உயிரைச் சுருக்கு!
நக்கிக்குடி! அதை நல்லதென்றுசொல்!
தாழ்ந்துதாழ்ந்து தாழ்ந்த நாயினும்
தாழ்ந்துபோ! குனிந்து தரையைக்கௌவி
ஆமையைப் போலே அடங்கி ஒடுங்கு!
பொட்டுப் பூச்சியே, புன்மைத் தேரையே
அழு! இளி! அஞ்சு! குனி! பிதற்று!
கன்னங்கருத்த இருட்டின் கறையே.
தொங்கும் நரம்பின் தூளே! இதைக்கேள்;
மனிதரில் நீயுமோர் மனிதன்; மண்ணன்று!
இமைதிற! எழுந்து நன்றாய் எண்ணுவாய்!
தோளை உயர்த்துச் சுடர் முகம் தூக்கு!
மீசையை முறுக்கி மேலே ஏற்று!
விழித்தவிழியில் மேதினிக் கொளிசெய்!
நகைப்பை முழக்கு! நடத்து லோகத்தை!
உன்வீடு - உனது பக்கத்தின் வீட்டின்
இடையில் வைத்த சுவரை இடித்து
வீதிகள் இடையில் திரையை விலக்கி
நாட்டொடு நாட்டை இணைத்து மேலே
ஏறு! வானை இடிக்கும் மலைமேல்
ஏறு விடாமல்; ஏறு மேன்மேல்!
ஏறி நின்று பாரடா எங்கும்;
எங்கும் பாரடா இப்புவி மக்களைப்!
பாரடா உன மானிடப் பரப்பைப்!
பாரடா உன்னுடன் பிறந்த பட்டாளம்!
'என்குலம்' என்றுனைத் தன்னிடம் ஒட்டிய
மக்களட்பெருங்கடல் பார்த்து மகிழ்ச்சிகொள்!
அறிவை விரிவுசெய்! அகண்டமாக்கு!
விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை!
அணைந்துகொள்! உன்னைச் சங்கமமாக்கு.
மானிட சமுத்திரம் நானென்று கூவு!
பிரிவிலை எங்கும் பேதமில்லை
உலகம் உண்ணஉண்! உடுத்த உடுப்பாய்!
புகல்வேன்; 'உடைமை மக்களுக்குப் பொது'
புவியை நடத்துப் பொதுவில் நடத்து!
வானைப் போல மக்களைத் தாவும்
வெள்ளை அன்பால் இதனைக்
குள்ள மனிதர்க்கும் கூறடா தோழனே!
                    

Offline Global Angel

Re: பாரதிதாசன் கவிதைகள்
« Reply #51 on: January 14, 2013, 01:17:17 AM »
 உலகப்பன் பாட்டு

குத்தறிவு மன்றத்தில் உலகம் என்ற
பழையமுத லாளியினை நிற்கவைத்து
மிகுத்திருந்த உன்நன்செய், புன்செய் யாவும்
வெகுகாலத் தின்முன்னே, மக்கள் யாரும்
சுகித்திருக்கக் குத்தகைக்கு விட்டதுண்டோ?
சொல்!என்றேன்; உலகப்பன் ஆம் ஆம் என்றான்.
வகுத்தஅந்தக் குத்தகைக்குச் சீட்டுமுண்டோ
வாய்ச்சொல்லோ என்றுரைத்தேன். வாய்ச்சொல் என்றான்.

குத்தகைக்கா ரர்தமக்குத் குறித்த எல்லை
குறித்தபடி உள்ளதுவா என்றுகேட்டேன்.
கைத்திறனும் வாய்த்திறனும் கொண்டபேர்கள்
கண்மூடி மக்களது நிலத்தையெல்லாம்
கொத்திக்கொண் டேப்பமிட்டு வந்த தாலே
கூலிமக்கள் அதிகரித்தார், என்னசெய்வேன்!
பொத்தல் இலைக் கலமானார் ஏழைமக்கள்.
புனல் நிறைந்த தொட்டியைப்போல் ஆனார் செல்வர்;

அதிகரித்த தொகைதொகையாய்ச் செல்வமெல்லாம்
அடுக்கடுக்காய்ச் சிலரிடம்போய் ஏறிக்கொண்டு
சதிராடு தேவடியாள் போல்ஆடிற்று!
தரித்திரரோ புழுப்போலே துடிக்கின்றார்கள்;
இதுஇந்நாள் நிலை என்றான் உலகப்பன் தான்!
இந்நிலையி லிருப்பதனால் உலகப்பா நீ!
புதுகணக்குப் போட்டுவிடு, பொருளைஎல்லாம்
பொதுவாக எல்லார்க்கும்நீ குத்தகைசெய்.

ஏழைமுத லாளியென்பது இல்லாமற்செய்,
என்றுரைத்தேன். உலகப்பன் எழுந்து துள்ளி,
ஆழமப்பா உன் வார்த்தை! உண்மையப்பா,
அதற்கென்ன தடையப்பா, இல்லையப்பா;
ஆழமப்பா உன்கருத்து, மெய்தானப்பா,
அழகாயும் இருக்குதப்பா, நல்லதப்பா,
தாழ்வுயர்வு நீங்குமப்பா, என்றுசொல்லித்
தகதகென ஆடினான், நான்சிரித்து,

ஆடுகின்றாய் உலகப்பா! யோசித்துப்பார்!
ஆர்ப்பாட்டக் காரர்இதை ஒப்பாரப்பா!
தேடப்பா ஒருவழியை என்று சொன்னேன்.
செகத்தப்பன் யோசித்துச் சித்தம்சேர்ந்தான்,
ஓடப்ப ராயிருக்கும் ஏழையப்பர்
உதையப்ப ராகிவிட்டால், ஓர்நொடிக்குள்
ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி
ஒப்பப்பர் ஆய்விடுவார் உணரப்பா நீ!
                    

Offline Global Angel

Re: பாரதிதாசன் கவிதைகள்
« Reply #52 on: January 14, 2013, 01:18:07 AM »
முன்னேறு!

சாதிமத பேதங்கள் மூட வழக்கங்கள்
தாங்கி நடைபெற்றுவரும் சண்டை யுலகிதனை
ஊதையினில் துரும்புபோல் அலைக்கழிப்போம்: பின்னர்
ஒழித்திடுவோம்; புதியதோர் உலகம் செய்வோம்!
பேதமிலா அறிவுடைய அவ்வுலகத்திற்குப்
பேசுசுய மரியாதை உலகு எனப் பேர்வைப்போம்!
ஈதேகாண்! சுமூகமே, யாம் சொன்னவழியில்
ஏறுநீ! ஏறுநீ! ஏறுநீ!! ஏறே.

அண்டுபவர் அண்டாத வைகை செய்கின்ற
அநியாயம் செய்வதெது? மதங்கள் அன்றோ?
கொண்டு விட்டோம் பேரறிவு, பெருஞ்செயல்கள்
கொழித்து விட்டோம் என்றிங்கே கூறுவார்கள்.
பண்டொழிந்த புத்தன், ராமாநுஜன் மு
கம்மது, கிறிஸ்து - எனும் பலபேர் சொல்லிச்
சண்டையிடும் அறியாமை அறிந்தாரில்லை!
சமூகமே ஏறுநீ, எம்கொள்கைக்கே!
                    

Offline Global Angel

Re: பாரதிதாசன் கவிதைகள்
« Reply #53 on: January 14, 2013, 01:19:00 AM »
மானிட சக்தி

மானிடத் தன்மையைக் கொண்டு - பலர்
வையத்தை ஆள்வது நாம்கண்ட துண்டு
மானிடத் தன்மையை நம்பி - அதன்
வன்மையினாற்புவி வாழ்வுகொள் தம்பி!
'மானிடம்' என்றொரு வாளும் - அதை
வசத்தில் அடைந்திட்ட உன்இரு தோளும்
வானும் வசப்பட வைக்கும் - இதில்
வைத்திடும் நம்பிக்கை, வாழ்வைப் பெருக்கும் (மானிட)

மானிடன் வாழ்ந்த வரைக்கும் - இந்த
வையத்திலே அவன் செய்தவரைக்கும்
மானுடத் தன்மைக்கு வேறாய் - ஒரு
வல்லமை கேட்டிருந்தால் அதைக் கூறாய்!
மானிட மென்பது புல்லோ? - அன்றி
மரக்கட்டை யைக்குறித் திடவந்த சொல்லோ?
கானிடை வாழ்ந்ததும் உண்டு - பின்பு
கடலை வசப்படச் செய்ததும் அதுதான்! (மானிட)

மானிடம் போற்ற மறுக்கும் - ஒரு
மானிடம் தன்னைத்தன் உயிரும் வெறுக்கும்;
மானிடம் என்பது குன்று - தனில்
வாய்ந்த சமத்துவ உச்சியில் நின்று
மானிடருக் கினி தாக - இங்கு
வாய்த்த பகுத்தறி வாம்விழி யாலே
வான்திசை எங்கணும் நீ பார்! - வாழ்வின்
வல்லம 'மானிடத் தன்மை' என்றேதேர். (மானிட)
                    

Offline Global Angel

Re: பாரதிதாசன் கவிதைகள்
« Reply #54 on: January 14, 2013, 01:20:01 AM »
ஆய்ந்து பார்!!

சாந்தியால் உலகம் தழைப்பது நன்றா?
சமயபே தம்வளர்த்தே தளர்வது நன்றா?
மாந்தரிற் சாதிவகுப்பது சரியா?
மக்கள் ஒரே குலமாய் வாழ்வது சரியா?

வாய்ந்தபோர்க் குறிபோல் மதக்குறி இனிதா?
மனமொழி மெய்ஒன்றி மகிழுதல் இனிதா?
ஆய்ந்து பார் நெஞ்சமே அமைதிதான் சிறப்பா?
அண்டை வீட்டைப்பறிக்கும் சண்டைதான் சிறப்பா?

காணுமானிடரைக் கனம் செயல் முறையா?
கடவுள் எனும் மயக்கில் கவிழ்ப்பது முறையா?
மாணுறும் தன்னம்பிக்கை வளர்ப்பது நலமா?
வயப்படும் பக்தியினால் பயப்படல் நலமா?

வீணரைப் பணிவது மக்களின் கடனா?
மேவும் உழைப்பினிலே ஏவுதல் கடனா?
நாணு மூடவழக்கம் நாடுதல் பெரிதா?
நல்லறி வென்னும்வழிச் செல்லுதல் பெரிதா?

கோயிலுக் கொன்று கொடுத்திடல் அறமா?
கோடிகொடுக்கும் கல்வி தேடிடல் அறமா?
வாயிலில் வறியரை வளர்த்திடல் அன்போ?
மடத்தில் வீணிற்பொருளைக் கொடுத்திடல் அன்போ?

நாயினுங் கடையாய் நலிவது மேலா?
நல்ல கூட்டுத்தொழில்கள் நாட்டிடல் மேலா?
ஓய்வறியார் உறங்க இடந்தரல் உயர்வா?
ஊரை வளைக்கும்குரு மார்செயல் உயர்வா?

மாதர்தம் உரிமை மறுப்பது மாண்பா?
மாதர் முன்னேற்றத்தால் மகிழ்வது மாண்பா?
மேதினி துயர்பட விரும்புதல் இதமா?
விதவைக்கு மறுமணம் உதவுதல் இதமா?

கோதையர் காதல் மணம் கொள்வது சீரோ?
குழந்தைக்கு மணஞ்செய்து கொல்வது சீரோ?
போதனையாற் பெண்கள் பொதுவெனல் கனமோ?
பொட்டுக்கட்டும் வழக்கம் போக்குதல் கனமோ?

பாழ்படும் பழமை சூழ்வது திறமா?
பகுத்தறிவால் நலம் வகுப்பது திறமா?
தாழ்பவர் தம்மைத் தாழ்த்துதல் சால்போ?
தனம் காப்பவர் தங்கள் இனம் காத்தல் சால்போ?

ஆழ்வுறும் ஆத்திகம் வைதிகம் சுகமா?
அகிலமேற் சமதர்மம் அமைப்பது சுகமா?
சூழும் நற்பேதம் தொடர்வது வாழ்வோ?
சுயமரியாதையால் உயர்வது வாழ்வோ?
                    

Offline Global Angel

Re: பாரதிதாசன் கவிதைகள்
« Reply #55 on: January 14, 2013, 01:20:54 AM »
மாண்டவன் மீண்டான்!

ற்றோரம் தழை மரங்கள் அடர்ந்த ஒரு தோப்பில்
அழகான இளமங்கை ஆடுகின்றாள் ஊஞ்சல்!
சேற்று மண்ணால் திண்ணையிலே உட்கார்ந்து பொம்மை
செய்துவிளை யாடுகின்றான் மற்றுமொரு பிள்ளை!
ஏற்றிவைத்த மணிவிளக்கின் அண்டையிலே பாயில்
இளஞ்சிசுவும் பெற்றவளும் கொஞ்சுகின்றார்! ஓர்பால்
ஏற்றகடன் தொல்லையினால் நோய்கொண்ட தந்தை
ஏ! என்று கூச்சலிட்டான்; நிலைதவறி வீழ்ந்தான்!

அண்டை அயல் மனிதரெல்லாம் ஓடிவந்தார் ஆங்கே
அருந்துணைவி நாயகனின் முகத்தில்முகம் வைத்துக்
கெண்டைவிழிப் புனல்சோர அழுதுதுடித் திட்டாள்;
கீழ்க்கிடந்து மெய்சோர்ந்த நோயாளி தானும்
தொண்டையிலே உயிரெழுப்பும் ஒலியின்றிக் கண்ணில்
தோற்றமது குறைபடச் சுவாசம்மேல் வாங்க,
மண்டைசுழ லக்கண்ணீர் வடித்துவடித் தழுதான்
மனமுண்டு வாயில்லை என்செய்வான் பாவம்!

‘பேசாயோ வாய்திறந்து பெற்றெடுத்த உன்றன்
பிள்ளைகளைக் கண்கொண்டு பாராயோ என்றன்
வீசாத மணிஒளியே என்றுரைத்தாள் மனைவி.
விருப்பமதை இன்னதென விளம்பிடுக, என்று
நேசரெலாம் கேட்டார்கள்; கேட்ட நோயாளி
நெஞ்சினையும் விழிகளையும் தன்னிலையில் ஆக்கிப்
பேசமுடியா நிலையில் ஈனசுரத் தாலே
பெண்டுபிள்ளை! பெண்டுபிள்ளை!! என்றுரைத்தான்,
சோர்ந்தான்!!!

எதிர்இருந்தோர் இதுகேட்டார்: மிகஇரக்கங்கொண்டார்
இறப்பவனைத் தேற்றவெண்ணி ஏதேதோ சொன்னார்
இதுதேதி உன்கடனைத் தீர்க்கின்றோம் என்றார்.
இருந்தநிலை மாறவில்லை மற்றொருவன் வந்து
மதிவந்து விட்டதண்ணே நமதுசர்க் காருக்கு!
'மக்களுக்குப் புவிப்பொருள்கள் பொது' வென்று சர்க்கார்
பதிந்து விட்டார் இனிப்பெண்டு பிள்ளைகளைப் பற்றிப்
பயமில்லை! கவலையில்லை! மெய்யண்ணே, மெய்மெய்!!

என்று சொன்னான் தேற்று மொழி, இறக்கின்றமனிதன்
இறக்குங்கால் கவலையின்றி இறக்கட்டும் என்று!
நன்றிந்த வார்த்தை, அவன் காதினிலே பாய்ந்து
நலிவுற்ற உள்ளத்தைப் புலியுளமாய்ச் செய்து
சென்ற உயிர் செல்லாமல் செய்ததனால் அங்குச்
செத்துவிட்ட அம்மனிதன் பொத்தெனவே குந்தி,
இன்றுநான் சாவதற்கே அஞ்சவில்லை என்றான்!
இறப்பதனில் இனியெனக்குக் கற்கண்டென்றானே!
                    

Offline Global Angel

Re: பாரதிதாசன் கவிதைகள்
« Reply #56 on: January 14, 2013, 01:21:51 AM »
வாழ்வில் உயர்வு கொள்!

சுயமரி யாதைகொள்தோழா! - நீ
துயர்கெடுப்பாய் வாழ்வில் உயர்வடைவாயே! - (சுய)

உயர்வென்று பார்ப்பனன் சொன்னால், - நீ
உலகினில் மக்கள் எலாம்சமம் என்பாய்;
துயருறத் தாழ்ந்தவர் உள்ளார் - என்று
சொல்லிடுந் தீயரைத் தூவென் றுமிழ்வாய்!
அயலொரு கூட்டத்தார் ஆள்வோர் - சிலர்
ஆட்பட்டிருப்பவர் என்று சொல்வோரைப்
பயமின்றி நீதிருந் தச்சொல்! - சிலர்
பழமைசொன் னால்புது நிலைநலம் காட்டு! (சுய)

சேசு முகம்மது என்றும்! - மற்றும்
சிவனென்றும் அரியென்றும் சித்தார்த்தனென்றும்,
பேசி வளர்க்கின்ற போரில் - உன்
பெயரையும் கூட்டுவர் நீஒப்ப வேண்டாம்!
காசைப் பிடுங்கிடு தற்கே - பலர்
கடவுளென் பார்!இரு காதையும் மூடு!
கூசி நடுங்கிடு தம்பி! - கெட்ட
கோயிலென் றால்ஒரு காதத்திலோடு! (சுய)

கோயில் திருப்பணி என்பர் - அந்தக்
கோவில் விழாவென்று சொல்லியுன் வீட்டு
வாயிலில் வந்து னைக் காசு - கேட்கும்
வஞ்சக மூடரை மனிதர் என்னாதே!
வாயைத் திறக்கவும் சக்தி - இன்றி
வயிற்றைப் பிசைந்திடும் ஏழைகட்கேநீ
தாயென்ற பாவனை யோடும் - உன்
சதையையும் ஈந்திட ஒப்புதல் வேண்டும். (சுய)

கடவுள் துவக்கிக் கொடுத்த - பல
கவிதைகள், பதிகங்கள் செப்பிய பேர்கள்,
கடவுள் புவிக்கவ தாரம், - அந்தக்
கடவுளின் தொண்டர்கள், லோக குருக்கள்,
கடவுள் நிகர் தம்பிரான்கள் - ஜீயர்,
கழுகொத்த பூசுரர், பரமாத்து, மாக்கள்
கடவுள் அனுப்பிய தூதர் - வேறு
கதைகளினாலும் சுகங்கண்டதுண்டா? (சுய)

அடிமை தவிர்ந்ததும் உண்டோ? - அன்றி
ஆதிமுதல் இந்தத் தேதிவரைக்கும்,
மிடிமை தவிர்த்ததும் உண்டோ? - அன்றி
மேல்நிலை என்பதைக் கண்டதும் உண்டோ?
குடிக்கவும் நீரற் றிருக்கும் - ஏழைக்
கூட்டத்தை எண்ணாமல்; கொடுந்தடி யர்க்கு
மடங்கட்டி வைத்ததி னாலே - தம்பி!
வசம்கெட்டுப் போனது நமதுநன்னாடு. (சுய)

உழக்காத வஞ்சகர் தம்மை - மிக
உயர்வான சாதுக்கள் என்பது நன்றோ?
விழித்திருக் கும்போதி லேயே - நாட்டில்
விளையாடும் திருடரைச் 'சாமி' என் கின்றார்!
அழியாத மூடத் தனத்தை - ஏட்டில்
அழகாய் வரைந்திடும் பழிகாரர் தம்மை
முழுதாய்ந்த பாவலர் என்பார் - இவர்
முதலெழுத் தோதினும் மதியிருட் டாகும்! (சுய)
                    

Offline Global Angel

Re: பாரதிதாசன் கவிதைகள்
« Reply #57 on: January 14, 2013, 01:22:44 AM »
தொழிலாளர் விண்ணப்பம்

காடு களைந்தோம் - நல்ல
கழனிதிருத்தியும் உழவுபுரிந்தும்
நாடுகள் செய்தோம் - அங்கு
நாற்றிசை வீதிகள் தோற்றவும் செய்தோம்
வீடுகள் கண்டோம் - அங்கு
வேண்டிய பண்டங்கள் ஈண்டிடச் செய்தோம்
பாடுகள் பட்டோம் - புவி
பதமுறவே நாங்கள் நிதமும் உழைத்தோம்.

மலையைப் பிளந்தோம் - புவி
வாழவென்றேகடல் ஆழமும் தூர்த்தோம்
அலைகடல்மீதில் - பல்
லாயிரங்கப்பல்கள் போய்வரச்செய்தோம்
பல தொல்லையுற்றோம் - யாம்
பாதாளம் சென்று பசும்பொன் எடுத்தோம்.
உலையில் இரும்பை - யாம்
உருக்கிப்பல் யந்திரம் பெருக்கியுந்தந்தோம்.

ஆடைகள் நெய்தோம் - பெரும்
ஆற்றைவளைத்து நெல்நாற்றுகள் நட்டோம்;
கூடைகலங்கள் - முதல்
கோபுரம் நற்சுதை வேலைகள் செய்தோம்
கோடையைக் காக்க - யாம்
குடையளித்தோம் நல்ல நடையன்கள் செய்தோம்
தேடிய பண்டம் - இந்தச்
செகத்தில் நிறைந்திட முகத்தெதிர் வைத்தோம்.

வாழ்வுக்கொவ்வாத - இந்த
வையத்தை இந்நிலை எய்தப்புரிந்தோம்,
ஆழ்கடல், காடு, - மலை
அத்தனையிற்பல சத்தை யெடுத்தோம்.
ஈழை, அசுத்தம் - குப்பை
இலை என்னவே எங்கள் தலையிற் சுமந்தோம்.
சூழக்கிடந்தோம் - புவித்
தொழிலாளராம் எங்கள் நிலைமையைக் கேளீர்!

கந்தையணிந்தோம்! - இரு
கையை விரித்தெங்கள் மெய்யினைப் போர்த்தோம்
மொந்தையிற் கூழைப் - பலர்
மொய்த்துக் குடித்துப் பசித்துக் கிடந்தோம்
சந்தையில் மாடாய் - யாம்
சந்ததம் தங்கிட வீடுமில்லாமல்
சிந்தை மெலிந்தோம் - எங்கள்
சேவைக்கெலாம்இது செய் நன்றிதானோ?

மதத்தின் தலைவர்! - இந்த
மண்ணை வளைத்துள்ள அண்ணாத்தைமாரே!
குதர்க்கம் விளைத்தே - பெருங்
கொள்ளையடித்திட்ட கோடீசுரர்காள்!
வதக்கிப் பிழிந்தே - சொத்தை
வடிகட்டி எம்மைத் துடிக்க விட்டீரே!
நிதியின் பெருக்கம் - விளை
நிலமுற்றும் உங்கள் வசம் பண்ணி விட்டீர்.

செப்புதல் கேட்பீர்! - இந்தச்
செகத்தொழிலாளர்கள் மிகப் பலர் ஆதலின்.
கப்பல்களாக - இனித்
தொழும்பர்களாக மதித்திடவேண்டாம்!
இப்பொழுதே நீர் - பொது
இன்பம் விளைந்திட உங்களின் சொத்தை
ஒப்படைப்பீரே - எங்கள்
உடலில் இரத்தம் கொதிப்பேறு முன்பே
ஒப்படைப்பீரே!
                    

Offline Global Angel

Re: பாரதிதாசன் கவிதைகள்
« Reply #58 on: January 14, 2013, 01:23:23 AM »
கூடித் தொழில் செய்க

கூடித் தொழில் செய்தோர் கொள்ளைலா பம்பெற்றார்
வாடிடும் பேதத்தால் வாய்ப்பதுண்டோ தோழர்களே!

நாடிய ஓர் தொழில் நாட்டார் பலர் சேர்ந்தால்
கேடில்லை நன்மை கிடைக்குமன்றோ தோழர்களே!

சிறுமுதலால் லாபம் சிறிதாகும்; ஆயிரம்பேர்
உறுமுதலால் லாபம் உயருமன்றோ தோழர்களே!

அறுபதுபேர் ஆக்கும் அதனை ஒருவன்
பெறுவதுதான் சாத்தியமோ பேசிடுவீர் தோழர்களே!

பற்பலபேர் சேர்க்கை பலம்சேர்க்கும்; செய்தொழிலில்
முற்போக்கும் உண்டாகும் முன்னிடுவீர் தோழர்களே!

ஒற்றைக் கைதட்டினால் ஓசை பெருகிடுமோ
மற்றும் பலரால் வளம்பெறுமோ தோழர்களே!

ஒருவன் அறிதொழிலை ஊரார் தொழிலாக்கிப்
பெரும்பே றடைவதுதான் வெற்றி என்க தோழர்களே!

இருவர் ஒருதொழிலில் இரண்டுநாள் ஒத்திருந்த
சரிதம் அரிதுநம் தாய்நாட்டில் தோழர்களே!

நாடெங்கும் வாழ்குவதிற் கேடொன்று மில்லைஎனும்
பாடம் அதைஉணர்ந்தாற் பயன்பெறலாம் தோழர்களே!

பீடுற்றார் மேற்கில் பிறநாட்டார் என்பதெல்லாம்
கூடித் தொழில்செய்யும் கொள்கையினால் தோழர்களே!

ஐந்துரூபாய்ச் சரக்கை ஐந்துபணத்தால் முடித்தல்
சிந்தை ஒருமித்தால் செய்திடலாம் தோழர்களே!

சந்தைக் கடையோ நம் தாய்நாடு? லக்ஷம்பேர்
சிந்தைவைத்தால் நம் தொழிலும் சிறப்படையும் தோழர்களே!

வாடித் தொழிலின்றி வறுமையாற் சாவதெல்லாம்
கூடித் தொழில்செய்யாக் குற்றத்தால் தோழர்களே!

கூடித் தொழில்செய்யாக் குற்றத்தால் இன்றுவரை
மூடிய தொழிற்சாலை முக்கோடி! தோழர்களே!

கூடைமுறம் கட்டுநரும் கூடித்தொழில்செய்யின்
தேடிவரும் லாபம் சிறப்புவரும் தோழர்களே!
                    

Offline Global Angel

Re: பாரதிதாசன் கவிதைகள்
« Reply #59 on: January 14, 2013, 01:24:45 AM »
தளை அறு!

டவுள் கடவுள் என்றெதற்கும்
கதறுகின்ற மனிதர்காள்!
கடவுள் என்ற நாமதேயம்
கழறிடாத நாளிலும்

உடமையாவும் பொதுமையாக
உலகுநன்று வாழ்ந்ததாம்;
'கடையர்' 'செல்வர்' என்ற தொல்லை
கடவுள்பேர் இழைத்ததே!

உடைசுமந்த கழுதைகொண்
டுழைத்ததோர் நிலைமையும்
உடமைமுற்றும் படையைஏவி
அடையும்மன்னர் நிலைமையும்

கடவுளாணையாயின் அந்த
உடைவெளுக்கும் தோழரைக்
கடவுள்தான் முன்னேற்றுமோ? தன்
கழுதைதான் முன்னேற்றுமோ?

ஊரிலேனும் நாட்டிலேனும்
உலகிலேனும் எண்ணினால்
நீர்நிறைந்த கடலையொக்கும்
நேர் உழைப்ப வர்தொகை!

நீர்மிதந்த ஓடமொக்கும்
நிறைமுதல்கொள் வோர்தொகை;
நேரிற்சூறை மோதுமாயின்
தோணிஓட்டம் மேவுமோ?

தொழிலறிந்த ஏழை மக்கள்
தொழில் புரிந்து செல்வர்பால்
அழிவிலாமு தல்கொடுக்க
அம்முதற் பணத்தினால்

பழிமிகுந்த அரசமைத்துப்
படைகள் தம்மை ஏவியே
தொழில்புரிந்த ஏழை மக்கள்
சோற்றிலே மண் போடுவார்!

நடவுசெய்த தோழர்கூலி
நாலணாவை ஏற்பதும்
உடலுழைப்பி லாதசெல்வர்
உலகைஆண் டுலாவலும்

கடவுளாணை என்றுரைத்த
கயவர் கூட்டமீதிலே
கடவுள்என்ற கட்டறுத்துத்
தொழிலுளாரை ஏவுவோம்.