Author Topic: இனியவை நாற்பது  (Read 17959 times)

Offline Global Angel

Re: இனியவை நாற்பது
« Reply #15 on: September 12, 2011, 10:10:21 PM »
15

பிறன்மனை பின்னோக்காப் பீடினி தாற்ற
வறனுழக்கும் பைங்கூழ்க்கு வான்சோர் வினிதே
மறமன்னர் தங்கடையுள் மாமலைபோல் யானை
மதமுழக்கங் கேட்டல் இனிது.



(ப-ரை.) பிறன் மனை - பிறனுடைய மனைவியை, பின் நோக்கா - திரும்பிப் பாராத, பீடு - பெருமை, இனிது -; வறன் - நீரின்மை யால், உழக்கும் - வருந்தும், பைங்கூழ்க்கு பசிய - பயிர்க்கு, வான்சோர்வு - மழை பொழிதல், ஆற்ற இனிது - மிக இனிது ; மறம் மன்னர் - வீரத்தையுடைய அரசர், கடையுள் - கடைவாயிலின்கண், மாமலை போல்யானை - பெரிய மலைபோலும் யானைகளது, மதம் முழக்கம் - மதத்தாற் செய்யும் பிளிற்றொலியை, கேட்டல் -, இனிது-
.

‘பிறன் மனையாள் பின்னோக்கும் பேதைமை யின்னா' என்றார் பிறரும்.

பின்நோக்குதல் - திரும்பிப் பார்த்த வண்ணம் நடத்தல் ; இது காதலின் நிகழ்வது என்பதனை,

"எருத்தத் திரண்டு விழிபடை யாமையென் னாருயிரை
வருத்தத் திருத்த முகம்பிறக் கிட்டு மயினடக்குந்
திருத்தத்தைக் கண்டு விளர்த்த வென் னாதய னூர்தி செங்கோல்
பொருத்தத்த னூர்தியும் பண்டே விளர்த்துப் புகழ்கொண்டவே"

(தணிகைப் புராணம் , களவு - 81)

என்னும் பாவானு மறிக. இனி , மனத்துக்கொள்ளுதல் எனினுமாம். ‘பிறன்மனை நோக்காத பேராண்மை' என்பதற்குப் பரிமேலழகர் ‘பிறன் மனையாளை உட்கொள்ளாத பெரிய ஆண் தகைமை என உரை செய்திருத்தல் காண்க. வான் : ஆகு பெயர்

 
 
                    

Offline Global Angel

Re: இனியவை நாற்பது
« Reply #16 on: September 12, 2011, 10:12:40 PM »
16

கற்றார்முன் கல்வி உரைத்தல் மிகுஇனிதே
மிக்காரைச் சேர்தல் மிகமாண முன்இனிதே
எள்துணை யானும் இரவாது தான்ஈதல்
எத்துணையும் ஆற்ற இனிது.



(ப-ரை.) கற்றார் முன் - கற்றவர்க்கு முன்பு, கல்வி உரைத்தல் தங் கல்வியைச் சொல்லி ஏற்றுதல், மிக இனிது - மிகவினிது ; மிக்காரை -(அறிவான்) மேம்பட்டாரை; சேர்தல் பொருந்தல், மிகமாண - மிக மாட்சிமைப்பட, முன் இனிது முற்பட வினிது; எள் துணை ஆனும் - எள்ளளவாயினும், இராவது (தான் பிறரிடம்) யாசி யாது, தான் ஈதல் - (பிறர்க்குக்) கொடுத்தல், எ துணையும் - எல்லா விதத்தானும், ஆற்ற இனிது - மிக இனிது.

"கற்றன கல்லார் செவிமாட்டிக் கையுறூஉங்
குற்றந் தமதே பிறிதன்று"

(நீதிநெறி விளக்கம் - 25)

என்றிருத்தலின, ‘கற்றார் முற் கல்வியுரைத்தன மிக வினிதே எனவும்,

‘நல்லினத்தி னூங்குந் துணையில்லை என்றிருத்தலின்,
‘மிக்காரைச் சேர்தன் மிகமாண முன்னினிதே எனவும்;
"எள்ளுவ என்சில இன்னுயி ரேனுங்
கொள்ளுதல் தீது கொடுப்பது நன்றால்"

(கம்பர்)

என்றிருத்தலின், ‘எள்துணையானு மிரவாது தானீதல், எத்துணையுமாற்ற வினிது' எனவுங் கூறினா ரென்க
.
 
 
                    

Offline Global Angel

Re: இனியவை நாற்பது
« Reply #17 on: September 12, 2011, 10:14:27 PM »
17

நாட்டார்க்கு நல்ல செயலினி தெத்துணையும்
ஒட்டாரை ஒட்டிக் கொளல் அதனின் முன்இனிதே
பற்பல தானியத்தது ஆகிப் பலருடையும்
மெய்த்துணையுஞ் சேரல் இனிது
.


(ப-ரை.) நட்டார்க்கு - (தன்கண்) நட்புடையார்க்கு, நல்ல செயல் - இனியவற்றைச் செய்தல், இனிது-; எ துணையும் ஒட்டாரை எவ்வளவும் (தன் பகைவரோடு) சேராதவரை ஒட்டிக்கொளல் - நட்பாக்கிக் கொள்ளுதல், அதனின்-, முன் இனிது - மிக வினிது ; பற்பல தானியத்தது ஆகி - பற்பலவகை உணவுப் பொருள் களுடையதாய், பலர் உடையும் - (புறத்தார்) பலர் தோற்றம் கேதுவாகிய, மெய்துணையும் - மெய்க் காப்பு வீரரொடும், சேரல் - (அரண்) பொருந்துதல், இனிது-.

"நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக் கொளல்"

(குறள் - 679)

"கொற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்
நிலைக்கெளிதாம் நீர தரண்"

(குறள் - 745)

"எல்லாப் பொருளும் உடைத்தா யிட
நல்லா ளுடைய தரண்"

(குறள் - 746)

என்பவற்றின் பொருள் இப் பாவின்கண் அமைந்து கிடத்த லறிக. ‘ஒட்டாரை யொட்டிக் கொளல் ' என்பதற்குத் ‘தன் பகைவர் பிறரொடு கூடாமல் மாற்றிவைத்தல் எனினுமாம். ‘ அதனின்' ஐந்தனுருபு ஈண்டு உறழ்பொருளின் வந்ததென்க. உடையும் காரியத்தின்கண் வந்த பெயரெச்சமாதல் காண்க

 
 
                    

Offline Global Angel

Re: இனியவை நாற்பது
« Reply #18 on: September 12, 2011, 10:16:32 PM »
18


மன்றின் முதுமக்கள் வாழும் பதிஇனிதே
தந்திரத்தின் வாழும் தவசிகள் மாண்பினிதே
எஞ்சா விழுச்சீர் இருமுது மக்களைக்
கண்டெழுதல் காலை இனிது.



(ப-ரை.) மன்றின் - அம்பலத்தின்கண், முதுமக்கள் - அறிவுடையோர், வாழும் பதி - வாழ்கின்ற ஊர், இனிது-; தந்திரத்தின் - நூல் விதிப்படி , வாழும் தவசிகள், வாழ்கின்ற தவத்தோரது, மாண்பு - மாட்சிமை, இனிது-; எஞ்சா குறையாத, விழுச்சீர் - மிக்க சிறப்பினையுடைய , இருமுதுமக்களை தாய் தந்தையரை, காலை - காலையில், கண்டு - (அவர் இருக்குமிடஞ் சென்று) கண்டு, எழுதல் - (அவர் பாதங்களின் வீழ்ந்து) எழுதல், இனிது-.

மன்றமாவது ஊர் மன்றம்; அஃதாவது சபைகூடும் பொதுவிடம் மன்றத்து அறிவுடையார் வாழின், நீதி பெறப்படுதலின், ‘மன்றின் முதுமக்கள் வாழும் பதியினிதே' என்றார். தந்திரம் - நூல் ; அஃதிலக்கணையால் நூல்விதிக்காயிற்று. ‘கண்டொழுதல்' என்பது பாடமாயின், ‘அவரிருக்கு மிடத்திற் றொழுதல் ' என்றுரை செய்க
 
                    

Offline Global Angel

Re: இனியவை நாற்பது
« Reply #19 on: September 12, 2011, 10:19:32 PM »
19

நட்டார்ப் புறங்கூறான் வாழ்தல் நனிஇனிதே
பட்டாங்கு பேணிப் பணிந்தொழுகல் முன்இனிதே
முட்டில் பெரும்பொருள் ஆக்கியக்கால் மற்றது
தக்குழி ஈதல் இனிது.



(ப-ரை.) நட்டார் - (தன்னிடம்) நட்புக்கொண்டாரை, புறங்கூறான்- புறங்கூறாதவனாய், வாழ்தல் - வாழ்வது, நனி இனிது - மிகவினிது; பட்டாங்கு - சத்தியத்தை, பேணி பாதுகாத்து, பணிந்து ஒழுகல் - (யாவர்க்கும்) அடங்கி நடத்தல், முன் இனிது - முற்பட வினிது, முட்டு இல் - குறையில்லாத, பெரும் பொருள் - பெரும் பொருளை, ஆக்கியக்கால் - தேடினால், அது அப்பொருளை, தக்க உழி - தக்க பாத்திரத்தில், ஈதல் - கொடுத்தல், இனிது-.

புறங்கூறலாவது காணாவிடத்துப் பிறரை இகழ்ந்துரைத்தல் ; ‘தீய புறங்கூற்றின் மூங்கையாய் நிற்பானேல் யாதும் அறங்கூற வேண்டா வவற்கு ' என்றர் நாலடியாரினும், ‘பொய்யா விளங்கே விளக்கு' ஆகலின் ‘பட்டாங்கு பேணி' எனவும், ‘எல்லார்க்கும் நன்றாம் பணிதல்' ஆகலின் ‘பணிந்தொழுகல்' எனவும்,

"உறக்குந் துணையதோ ராலம்வித் தீண்டி
யிறப்ப நிழற்பயந் தாஅங் - கறப்பயனுந்
தான்சிறி தாயினுந் தக்கார்கைப் பட்டக்கால்
வான்சிறிதாப் போர்த்து விடும்"

(நாலடி - 38)

ஆதலின் ‘தக்குழி யீதல் ' எனவுங் கூறினார்.

புறங்கூறான் : முற்றெச்சம் . மற்று : அசை. ‘தக்குழி என்புழி, அகரந் தொக்கது
 
                    

Offline Global Angel

Re: இனியவை நாற்பது
« Reply #20 on: September 12, 2011, 10:22:10 PM »
20
சலவரைச் சாரா விடுதல் இனிதே
புலவர்தம் வாய்மொழி போற்றல் இனிதே
மலர்தலை ஞாலத்து மன்னுயிர்க் கெல்லாம்
தகுதியால் வாழ்தல் இனிது.



(ப-ரை.) சலவரை - வஞ்சகரை , சாரா விடுதல் - அடையாது நீக்குதல், இனிது-; புலவர்தம் - அறிவுடையாருடைய வாய்மொழி - வாய்ச் சொற்களை, போற்றல் - பாதுகாத்துக் கோடல், இனிது-; மலர்தலை - அகன்ற இடத்தையுடைய ஞாலத்து - பூமியில் வாழ்கின்ற , மன் உயிர்க்கு எல்லாம் - நிலை பெற்ற எல்லாவுயிர்க்கும், தகுதியால் - உரிமைப்பட, வாழ்தல் வாழ்வது, இனிது.


சலம் - மாறுபாடு. ‘தீயினத்தி, னல்லற் படுப்பதூஉமில்' என்றார் பிறரும்.

புலம் - அறிவு , ‘வாய்மொழி' என்றது தீயசொற் பயிலாவென்ற சிறப்புத் தெரித்தற் கென்க.

‘நல்லார்சொற் கேட்பதுவு நன்றே ' என்றார் பிறரும்.

மன்னுயிர்க்கெல்லாம் உரிமைப்பட வாழ்தலாவது மன்னுயிரெல்லாந் தன்னுயிரெனக் கொண்டு ஒழுகுதல்.

"உலகு பசிப்பப் பசிக்கு முலகு
துயர்தீரத் தீரு நிலவு
நிறுத்திவாழ் வஞ்சி யுடையாள்வி யென்னு
மொருத்தியா லுண்டிவ் வுலகு"

என்றிருத்தல் காண்க.

 
 
                    

Offline Global Angel

Re: இனியவை நாற்பது
« Reply #21 on: September 12, 2011, 10:31:09 PM »
21
பிறன்கைப் பொருள்வௌவான் வாழ்தல் இனிதே
அறம்புரிந் தல்லவை நீக்கல் இனிதே
மறந்தேயும் மாணா மயரிகள் சேராத்
திறந்தெரிந்து வாழ்தல் இனிது.



(ப-ரை.) பிறன் - பிறனுடைய, கை பொருள் - கைப்பொருளை, வௌவான் - அபகரியாதவனாய், வாழ்தல் - வாழ்வது, இனிது-; அறம் புரிந்து - அறத்தைச் செய்து, அல்லவை நீக்கல் பாவங்களைச் செய்யாமை, இனிது-; மறந்தேயும் - மறந்தாயினும், மாணா - மாட்சிமைப்படாத, மயரிகள் - அறிவிலிகளை, சேரா திறம் - சேராத வழிகளை, தெரிந்து வாழ்தல் - ஆராய்ந்து அறிந்து வாழ்வது, இனிது-.

‘கைப்பொருள் கொடுத்துங் கற்றல்' என்புழிக் கைப்பொருளாவது சேமநிதியென்பர் நச்சினார்க்கினியர். பிறர் பொருளெட்டியே யெனவும் என்றார் பிறரும்.

‘அல்லவை நீக்கல்' என்றார், ‘அல்லவை செய்தார்க் கறங்கூற்றம்' ஆகலின்.

மேல் ‘சலவரைச் சாரா விடுத லினிது என்றார். இதனுள் 'மறந்தேயு மாணா மயரிகட் சேராத், திறந்தெரிந்து வாழ்தலினிது' என்றதென்னை யெனின், சலவரென்பார் பிறரை மயக்குவாரும், மயரிகளென்பார் தாம் மயங்குவாரு மாகலானும், மயக்குவாரைச் சேர்தலினும் மயங்குவாரைச் சேர்தல் பேரிடர் விளைத்தலானுமென்க.

 
                    

Offline Global Angel

Re: இனியவை நாற்பது
« Reply #22 on: September 12, 2011, 10:35:20 PM »
22

வருவா யறிந்து வழங்கல் இனிதே
ஒருவர்பங் காகாத ஊக்கம் இனிதே
பெருவகைத் தாயினும் பெட்டவை செய்யார்
திரிபின்றி வாழ்தல் இனிது.


(ப-ரை.) வருவாய் - (தமக்குப்) பொருள் வருகின்ற நெறியினள வினை, அறிந்து-, வழங்கல் - கொடுத்தல், இனிது-; ஒருவர் பங்கு ஆகாத - ஒருவர்க்குச் சார்பாகாத ஊக்கம் - மனவெழுச்சி , இனிது-; பெருவகைத்து ஆயினும்- பெரிய பயனையுடைத்தாயினும், பெட்டவை - தாம் விரும்பியவற்றை , செய்யார் - ஆராயாது செய்யாதவராய், திரிபின்றி - தம்மியல்பின் வேறுபடுதலில்லாது, வாழ்தல் - வாழ்வது, இனிது-.

வருவாய் : ஆகுபெயர். பிறரும், ‘ஆற்றி னளவறிந் தீக' எனவும், ‘வருவாயுட் கால்வழங்கி வாழ்தல்' எனவும், ‘வந்த பொருளின் காற்கூறு வருமே லிடர்நீக் குதற்கமைந்து, மைந்த விருகானினக் காக்கி மற்றைக் காலே வழங்கிடுக' எனவுங் கூறினர். தொடர்புடையார்க்குச் சார்பாக மனஞ் செல்லுதல் இயல்பாகலின், ‘ஒருவர் பங்காகாதவூக்க மினிதே' என்றார். ‘தொழிற் பயன் பெரியதாயினும் அதனை நோக்காது' தன்மனத்தின்கட்டோன்றும் விருப்பினை யடக்கித் தம்மியல்பின் நிற்றல்வேண்டுமென்பார், ‘பெட்டவை செய்யார், திரிபின்றி வாழ்தலினிது என்றார். தம் இயல்பாவது தமக்கும் பிறர்க்கும் நல்லன செய்தல்.
 
 
                    

Offline Global Angel

Re: இனியவை நாற்பது
« Reply #23 on: September 12, 2011, 10:40:10 PM »
23

காவோ டறக்குளம் தொட்டல் மிகஇனிதே
ஆவோடு பொன்னீதல் அந்தணர்க்கு முன்இனிதே
பாவமும் அஞ்சாராய்ப் பற்றுந் தொழில்மொழிச்
சூதரைச் சோர்தல் இனிது.



(ப-ரை.) காவோடு - சோலை வளர்த்தலோடு, அறக்குளம் தருமத்திற்குக் குளத்தை, தொட்டல் - வெட்டுதல் மிக இனிது-; அந்தணர்க்கு - மறையவர்க்கு, ஆவோடு - பசுவோடு, பொன் ஈதல் - பொன்னைக் கொடுத்தல், முன் இனிது - மிகவினிது ; பாவமும் அஞ்சாராய் - (இம்மையிற் பழிக்கேயன்றி மறுமையிற்) பாவத்திற்கும் அஞ்சாதவராய், பற்றும் - (அப் பாவத்தைப்) பற்றுகின்ற, தொழில் - தொழிலையும், மொழி - சொல்லையுமுடைய, சூதரை - சூதாடிகளை, சோர்தல் - நீக்கல்,இனிது.

"காவோ டறக்குளந் தொட்டானும் நாவினால்
வேதங் கரைகண்ட பார்ப்பானுந் - தீதிகந்து
ஒல்வது பாத்துண்ணும் ஒருவனும் இம்மூவர்
செல்வர் எனப்படு வார்"

(திரிகடுகம் - 70)

"காவலர்த்துங் குளந்தொட்டுங் கடப்பாடு வழுவாமல்
மேவினர்க்கு வேண்டுவன மகிழ்ந்தளித்தும் விருந்தளித்தும்
நாவலர்க்கும் வளம்பெருக நல்கியும்நா னிலத்துள்ளோர்
யாவருக்குந் தவிராது ஈகைவினைத் துறைநின்றார்"

(பெரியபுராணம் ; திருநாவுக்கரசு - 36)

எனவும் ஆன்றோர் பிறருங் கூறினார்.

ஆவோடு பொன்னீதல் - கோதாந ஸுவர்ந தானங்கள் பற்றுந் தொழின் மொழியாவன பொய்த்தொழிலும் பொய்ம் மொழியுமாம். ‘பழிபாவங்கட்கஞ்சாத சூதரொடு சேரற்க' வென்பது கருத்தென்றுணர்க.

"ஐயநீ ஆடுதற்கு அமைந்த சூதுமற்று
எய்துநல் குரவினுக்கு இயைந்த தூதுவெம்
பொய்யினுக்கு அருந்துணை புன்மைக்கு ஈன்றதாய்
மெய்யினுக்கு உறுபகை யென்பர் மேலையோர்"

(நைட. சூதாடு.21)

என்றிருத்தல் காண்க.

 
                    

Offline Global Angel

Re: இனியவை நாற்பது
« Reply #24 on: September 12, 2011, 10:42:50 PM »
24

வெல்வது வேண்டி வெகுளாதா னோன்பினிதே
ஒல்லுந் துணையும்ஒன்று உய்ப்பான் பொறை இனிதே
இல்லது காமுற் றிரங்கி இடர்ப்படார்
செய்வது செய்தல் இனிது
.


(ப-ரை.) வெல்வது - மேம்படுதலை, வேண்டி - விரும்பி, வெகுளாதான் - கோபியாதவனது, நோன்பு - தவம், இனிது-; ஒல்லும் துணையும் - கூடியவளவும் ஒன்று உய்ப்பான் - எடுத்துக்கொண்டதொரு கருமத்தை நடத்துவோனது, பொறை - ஆற்றல் , இனிது-; இல்லது - (தம்மிடத்து) இல்லாததொரு பொருளை, காமுற்று - விரும்பி , இரங்கி - (அது பெறாமையின்) மனம் ஏங்கி, இடர்ப்படார் - துன்பப்படாதவராய், செய்வது - (உள்ளது கொண்டு) செய்யத் தக்கதொரு கருமத்தை, செய்தல் செய்வது, இனிது-.

மேம்படுதாவது மேற்கொண்ட தவத்தை இடையூறு புகாது காத்து இனிது முடித்தல். ‘வெல்வது வேண்டி வெகுளிவிடல் என்றார்.

ஆற்றலாவது இடுக்கண் முதலியவற்றாற் றளராமை.

"பெற்ற சிறுகப் பெறாத பெரிதுள்ளுஞ்
சிற்றுயிர்க் காக்க மரிதம்மா"

(நீதிநெறி விளக்கம் - 94)

என்றபடி பெறாதவற்றைக் காமுறுதல் உயிர்க்கியல்பாகலின் ‘இல்லது காமுற்றிரங்கி யிடர்ப்படார்' என்றார்.

இல்லது : வினையாலணைந்த பெயர்.

 
 
« Last Edit: September 12, 2011, 10:44:43 PM by Global Angel »
                    

Offline Global Angel

Re: இனியவை நாற்பது
« Reply #25 on: September 12, 2011, 10:48:09 PM »
25

ஐவாய வேட்கை யவாவடக்கல் முன்இனிதே
கைவாய்ப் பொருள்பெறினுங் கல்லார்கண் தீர்வினிதே
நில்லாத காட்சி நிறையில் மனிதரைப்
புல்லா விடுதல் இனிது.



(ப-ரை.) ஐவாய வேட்கை - ஐந்து வழியான் வருகின்ற ஆசையையும், அவா - (அதனை ஒருகால் விடினும் பழைய பயிற்சி வயத்தான் அதன்கட் செல்லும்) நினைவையும், அடக்கல் ஒழித்தல், இனிது-; கைவாய்ப் பொருள்- கையினிடத்து நிற்கக் கூடிய பொருளை, பெறினும் - பெறுவதாயிருப்பினும், கல்லார் கண் - கல்லாதவரை, தீர்வு - விடுதல் , இனிது-; நில்லாத காட்சி நிலையில்லாத அறிவினையுடைய, நிறையில் - (நெஞ்சை) நிறுத்துலில்லாத, மனிதரை-, புல்லா விடுதல் - சேராது நீங்குதல், இனிது-.

ஐந்து வழியாவன : மெய், வாய், கண் , மூக்கு, செவி என்பன.

"மெய்வாய்கண் மூக்குச் செவியெனப் பேர்பெற்ற
ஐவாய வேட்கை அவாவினைக் - கைவாய்க்
கலங்காமல் காத்துய்க்கும் ஆற்ற லுடையான்
விலங்காது வீடு பெறும் "

(நாலடி - 59)

என்பது காண்க.

கைவாய்ப் பொருளென்றது சேம நிதியை; 22ஆவது பாட்டின்குறிப்புரை காண்க.

"விலங்கொடு மக்க ளனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்"

(குறள் - 410)

என்றிருத்தலின், ‘கல்லார்கட் டீர்வினிதே ' என்றார்.

கற்றுவைத்தும் அறிவு மயங்குதலும் மனஞ்சென்றவழி யெல்லாஞ் செல்லுதலுமாகிய தீயொழுக்க முடையார், சேர்க்கை கேடு பயத்தலின், ‘நில்லாத காட்சி நிறையின் மனிதரைப் புல்லாவிடுதலினிது என்றார். நிறையாவது (நெஞ்சினை) நிறுத்தல். ‘நிறையெனப் படுவது மறைபிறரறியாமை' எனக் கலித்தொகை கூறுதலுமறிக.

புல்லா : வினையெச்ச வீறு புணர்ந்து கெட்ட தென்க.

 
 
                    

Offline Global Angel

Re: இனியவை நாற்பது
« Reply #26 on: September 12, 2011, 10:54:24 PM »
26

நச்சித்தற் சென்றார் நசைகொல்லா மாண்பினிதே
உட்கில் வழிவாழா ஊக்கம் மிகஇனிதே
எத்திறத் தானும் இயைவ கரவாத
பற்றினின் பாங்கினியது இல்.



(ப-ரை.) நச்சி - (ஒரு பொருளைப் பெற) விரும்பி, தன் சென்றார் - தன்னை அடைந்தவரது, நசை - விருப்பம், கொல்லா - அழுங்குவியாத, மாண்பு - மாட்சிமை, இனிது-; உட்கு - மதிப்பு, இல்வழி - இல்லாத விடத்து, வாழா - வாழாமைக் கேதுவாகிய, ஊக்கம் - மனவெழுச்சி, மிக இனிது-; எத்திறத்தானும் - எப்படியாயினும், இயைவ - (பிறர்க்குக்) கொடுக்கக் கூடியவற்றை , கரவாத - ஒளிக்காத, பற்றினின் - அன்பினும், பாங்கு இனியது இல் - நன்றாகவினியது வேறொன் றில்லை.

‘தன் நச்சி ' எனக் கூட்டுவாரு முளர். ‘ செல்லுதல்' ஈண்டு அடைதல். நசை கொல்லலாவது ஒன்றைப் பெறலாமென்ற ஆசை நாளடைவிற் றேய்ந்து அழியுமாறு செய்தல் ; அஃதாவது கொடுத்தற்கிசைவில்லையாயின் உடனே மறாது பன்முறையும் தருவதாகப் பொய்கூறி நாளடைவில் அவ்வாசை தானே அழியுமாறு செய்தல். அஃது அப்பொருட்டாதலை,

"இசையா ஒரு பொருள் இல்லென்றல் யார்க்கும்
வசையன்று வையத்து இயற்கை - நசையழுங்க
நின்றோடிப் பொய்த்தல் நிரைதொடீஇ செய்ந்நன்றி
கொன்றாரின் குற்றம் உடைத்து"

(நாலடி- 111)

என்னும் பாவா னறிக.

உட்கு - உள்குதல் , நினைத்தல் ; ஈண்டு மதித்தல்.

"இம்மி யரிசித் துணையானும் வைகலும்
நும்மில் இயைவ கொடுத்துண்மின்"

(நாலடி- 94)

என்றிருத்தலின் ‘எத்திறத்தானு மியைவ கரவாத' என்றார். பற்று - இல்வாழ்க்கையுமாம்.

 
 
                    

Offline Global Angel

Re: இனியவை நாற்பது
« Reply #27 on: September 12, 2011, 10:57:36 PM »
27
தானங் கொடுப்பான் தகையாண்மைமுன் இனிதே
மானம் படவரின் வாழாமை முன்இனிதே
ஊனங்கொண் டாடார் உறுதி உடையவை
கோள்முறையாற் கோடல் இனிது.



(ப-ரை.) தானம் கொடுப்பான் - (அபயமென்பார்க்கு) இடங்கொடுப்பானது, தகை ஆண்மை - பெருமை பொருந்திய வீரம் , முன் இனிது - மிக வினிது ; பட மானம் வரின் - தான் இறப்ப மானம் எய்து மெல்லை வரின், வாழாமை - உயிர் வாழாமை, முன் இனிது-; ஊனம் கொண்டாடார் - குற்றம் பாராட்டாதவராய், உறுதி உடையவை - நன்மை யுடையனவற்றை , கோள் முறையால் - கொள்ளுமுறைமைப்படி , கோடல் - கொள்ளுதல், இனிது-.

தானம் கொடுப்பான் அபயப்ரதானஞ்செய்து தன் பக்கல் இடந் தந்து பாதுகாப்பவன். ‘மாவீரனல்லனாயின் அது செய்யத் துணியான் ' என்பது குறிப்பு. ‘தானங்கொடுப்பான் தகையாண்மை' என்பதற்கு அன்ன முதலிய தானங்களைச் செய்வானது தகுதியின் றலைமை என்பர் பழையவுரைகாரர். மானம் இன்னதென 14 ஆவது பாட்டுரைக்கண் உரைத்தாம். ‘மானம் வரின்' என்பதற்குப் பரிமேலழகருரை கண்டு தெளிக. ‘நீரை நீக்கிப் பாலை யுண்ணும் அன்னப்பறவை போலக் குற்றமுடையன நீக்கிக் குணமுடையன கொள்க' என்பார். ‘ஊனங்கொண்டாடாருறுதி யுடையவை எனவும், காரணகாரியம், ஐநக ஐந்யம் முதலிய சம்பந்தங்களுள் யாதானு மொன்றுபற்றி இது கேட்டபின் இது கேட்கத்தக்கதென ஆன்றோர் கொள்ளுமுறைப்படி கொள்க என்பர், ‘ கோண் முறையால்' எனவுங் கூறினார்.

இனி, கோள்முறையாவது கோடன் மரபென்பாருமுளர். அஃதின்னதென,

"கோடல் மரபே கூறுங் காலைப்
பொழுதொடு சென்று வழிபடல் முனியான்
குணத்தொடு பழகி யவன்குறிப் பிற்சார்ந்து
இருவென இருந்து சொல்லெனச் சொல்லிப்
பருகுவன் அன்ன ஆர்வத்த னாகிச்
சித்திரப் பாவையின் அத்தக வடங்கிச்
செவிவா யாக நெஞ்சுகள னாகக்
கேட்டவை கேட்டவை விடாதுளத் தமைத்துப்
போவெனப் போதல் என்மனார் புலவர்"

(நன்னூல்)

என்னுஞ் சூத்திரத்தா னறிந்துகொள்க.

 
                    

Offline Global Angel

Re: இனியவை நாற்பது
« Reply #28 on: September 12, 2011, 10:59:54 PM »
28

ஆற்றானை யாற்றென் றலையாமை முன்இனிதே
கூற்றம் வரவுண்மை சிந்தித்து வாழ்வினிதே
ஆக்க மழியினும் அல்லவை கூறாத
தேர்ச்சியின் தேர்வினியது இல்.



(ப-ரை.) ஆற்றானை - (ஒரு தொழிலைச்) செய்யமாட்டாதானை, ஆற்று - (அதனைச்) செய்யென, அலையாமை - வருத்தாமை, முன் இனிது - மிகவினிது ; கூற்றம் - யமனது, வரவு உண்மை - வருகையின் நிச்சயத்தை சிந்தித்து வாழ்வு - நினைத்து வாழ்வது , இனிது-; ஆக்கம் அழியினும் - செல்வமழிந்தாலும், அல்லவை கூறாத - பாவச் சொற்களைச் சொல்லாமைக் கேதுவாகிய , தேர்ச்சியின் - தெளிவினும், தேர்வு-தெளிவு, இனியது இல் - பிறிதொன்றில்லை.

வன்மை கண்டு ஏவினல்லது தன்மாட்டு அன்புடைமை கண்டு ஏவி வருத்தினும் வினை முடியாதாகலின் ‘ஆற்றானை யாற்றென்றலையாமை' என்றார். இதனை,

"அறிந்தாற்றிச் செய்கிற்பாற் கல்லால் வினைதான்
சிறந்தானென் றேவற்பாற் றன்று"

(குறள் - 515)

என்பதனானுந் தெளிக.

மரணம் வருதலை நினைப்பிற் பாவ வழியில் மனஞ்செல்லாமையின் ‘கூற்றம் வரவுண்மை சிந்தித்து வாழ்வு' என்றார் ‘பின்றையே நின்றது கூற்றமென் றெண்ணி ' என்றார் பிறரும்.

அல்லவை யென்றது பிறர்க்குத் தீங்கு பயக்கும் பொய் முதலியனவும் வருணத்திற்கு உரிய அல்லனவுமாம். அவைகூறின் ஒருவன்மாட்டு ஒழுக்கமின்மை வெளிப்படுதலின் கூறாத தேர்ச்சியின்' என்றார்.

"ஒழுக்க முடையவர்க் கொல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்"

(குறள் - 139)

என்றிருத்தல் காண்க.

‘கூறாத' : காரியத்தின்கண் வந்த பெயரெச்சமாம்.

 
 
                    

Offline Global Angel

Re: இனியவை நாற்பது
« Reply #29 on: September 12, 2011, 11:01:54 PM »
29
கயவரைக் கைகழிந்து வாழ்தல் இனிதே
உயர்வுள்ளி ஊக்கம் பிறத்தல் இனிதே
எளியர் இவரென் றிகழ்ந்துரையா ராகி
ஒளிபட வாழ்தல் இனிது.


(ப-ரை.) கயவரை - கீழ்மக்களை , கைகழிந்து - நீங்கி, வாழ்தல் - வாழ்வது, இனிது-; உயர்வு உள்ளி (தான் மேன் மேல்) உயர்தலை நினைத்து, ஊக்கம் பிறத்தல் - (ஒருவற்கு) மனவெழுச்சியுண்டாதல், இனிது-; எளியர் இவர் என்று- இவர்வறிய ரென்று, இகழ்ந்து உரையாராகி - அவமதித்து இழிவு சொல்லாராகி, ஒளிபட வாழ்தல் - புகழுண்டாக வாழ்வது , இனிது-.

‘கையிகந்து' என்பதூஉம் பாடம் ; ‘கயவரைக் கையிகந்து வாழ்தல்' என்றார் பிறரும்

"மனத்தான் மறுவில ரேனுந் தாஞ்சேர்ந்த
இனத்தல் இகழப் படுவார்"

(நாலடி - 180)

ஆகலின், ‘கயவரைக் கைகழிந்து வாழ்த லினிதே' என்றார்.

தன்னை ‘நிலையினும், மேன்மே லுயர்த்து நிறுப்பானும்' தானேயாமாகலின், அது செய்தற்கு மனங்கிளர்தல் நன்றென்பார், ‘உயர்வுள்ளி யூக்கம் பிறத்த லினிதே ' என்றார். இனி, ‘உயர்வுள்ளி' என்பதற்குத் ‘தான் இருக்கும் உயர்ந்த பதவியை நினைத்து எனவும் பொருள் கூறுப. ஒளிபட வாழ்தல் ஈண்டு அதற்குக் காரணமாய ஈதலையுணர்த்தி நின்றது. என்னை? ‘ஈதலிசைபட வாழ்தல் என்றிருத்தலினென்க. எனவே, ‘இகழ்ந்துரையாராகி, யொளிபட வாழ்தல்' என்பதற்கு ‘நன்கு மதித்து இனியவை கூறி ஈதல் ' என்பது பொருளாயிற்று.

"இகழ்ந்தெள்ளா தீவாரைக் காணின் மகிழ்ந்துள்ள
முள்ளு ளுவப்ப துடைத்து"

(குறள் - 1507)

என்றார் திருக்குறளாசிரியரும்.