Author Topic: இனியவை நாற்பது  (Read 17818 times)

Offline Global Angel

இனியவை நாற்பது
« on: September 12, 2011, 08:58:12 PM »
                               பதினெண் கீழ்க்கணக்கு


                                   பூதஞ் சேந்தனார் இயற்றிய

                                        இனியவை நாற்பது


முகவுரை
 
இனியவை நாற்பது இன்னா நாற்பதோடு பெயர் ஒற்றுமை உடையது. இந் நூலாசிரியரும் கடவுள் வாழ்த்தில் கபில தேவரைப் போன்றே சிவபெருமானை முற்படக் குறிக்கின்றார். கபில தேவர் இன்னா என்று சுட்டியதை ஒப்ப, இவரும் தாம்கூறும் அறங்களை இனிது என்னும் சொல்லால் குறிக்கின்றார். இனிய பொருள்களை நாற்பது பாடல்களில் இவர் தொகுத்துக் கூறியுள்ளமையால் இவரது நூல் 'இனியவை நாற்பது' எனவழங்கப் பெறுவதாயிற்று.

எனினும், இன்னா நாற்பது போன்ற கட்டுக்கோப்பு இந் நூலகத்து இல்லை. இன்னா நாற்பதில் ஒவ்வொரு பாடலிலும் நான்கு இன்னாத பொருள்கள் கூறப்படுகின்றன. இந் நூலில் நான்கு இனிய பொருள்களை எடுத்துக் கூறும் பாடல்கள் நான்கே நான்குதான் உள்ளன(1,3,4,5). எஞ்சிய எல்லாம் மும்மூன்று இனிய பொருள்களையே சுட்டியுள்ளன ; இவற்றில்
எல்லாம் முன் இரண்டு அடிகளில் இரு பொருள்களும், பின்இரண்டு அடிகளில் ஒரு பொருளுமாக அமைந்துள்ளமை கவனத்திற்கு உரியது.

மூன்று இனிய பொருள்களை மிகுதியும் எடுத்துக்கூறும் இந் நூல் திரிகடுகத்தோடு ஒத்த பண்புஉடையது என்று கொள்ளலாம். அன்றியும் திரிகடுகத்தில் எடுத்தாளப் பெறும் சொற்பொருளமைதிகளை இனியவை நாற்பதுபெரிதும் அடியொற்றிச் செல்லுகிறது. இவற்றை நோக்கினால், பொருளமைப்பில் திரிகடுகத்தையும், நூல் அமைப்பில் இன்னா நாற்பதையும் இந்த ஆசிரியர் மேற்கொண்டனராதல் வேண்டும். திரிகடுகத்தை இளம்பூரணர் முதலிய பழைய உரைகாரர்கள் எடுத்தாளுதலினாலும், இந் நூலை எவரும் எடுத்தாளாமையினாலும், இந்நூல் திரிகடுகத்திற்குப் பிற்பட்டது என்று கருத இடமுண்டு.

இந் நூலின் பெயரை 'இனியது நாற்பது'என்றும், 'இனியவை நாற்பது' என்றும், 'இனிது நாற்பது'என்றும், 'இனிய நாற்பது' என்றும், பதிப்பாரிசியர்கள் முதலியோர் குறித்துள்ளனர். 'இன்னா நாற்பது' என்பதைப் போல 'இனியவை நாற்பது' எனஇந் நூற் பெயரைக் கொள்ளுதல் நலம்.

இந் நூலின் ஆசிரியர், மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ் சேந்தனார். இப் பெயரில் சேந்தனார் என்பது இயற் பெயர். பூதன் என்பது இவர் தந்தையார்பெயர். இவர் தந்தையார் மதுரையில் தமிழாசிரியராய்ச் சிறந்து விளங்கியமை குறித்து, மதுரைத் தமிழாசிரியர் என்னும் சிறப்புப் பெயருடன் வழங்கப்பெற்றார். சேந்தன் என்பது முருகனுக்கு உரிய பெயர்களில் ஒன்று ஆகும். பதினோராந் திருமுறையில் திருப்பல்லாண்டு பாடியவர் சேந்தனார் என்பதும், திவாகரம் செய்வித்தவன் சேந்தன் என்னும் பெயர்பெற்றிருத்தலும் ஈண்டுச் சிந்தித்தற்குரியன.

பூதஞ் சேந்தனார் சிவனை முதலிலும், அடுத்துத் திருமாலையும், பின்னர்ப் பிரமதேவனையும் தமது கடவுள் வாழ்த்தில் குறிப்பிடுகின்றார்.

பிரமதேவன் வணக்கம் பின் சளுக்கியர் காலத்திலேதான் பிரபலமாகக் காணப்படுகிறது. கி. பி. 9-ஆம் நூற்றாண்டில் இவ் வணக்கம் தமிழ்நாட்டில் புகுந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர் சிலர் கருதுகின்றனர். 'பொலிசை' என இவர் ஆளும் சொல் (39) இலக்கிய வழக்கிலோ சாசன வழக்கிலோ, இக் காலத்திற்கு முன்னர்க் காணப்பெறவில்லை. சீவக சிந்தாமணியிலேதான் (2546) இச் சொல் வழக்கு உள்ளது. எனவே, சீவக சிந்தாமணி தோன்றிய காலப் பகுதியில் இனியவைநாற்பதும் தோன்றியிருக்கலாம்.

கடவுள் வாழ்த்து நீங்கலாக நாற்பது பாடல்கள் இந் நூலில் உள்ளன. இவற்றுள், 'ஊரும் கலிமா' எனத் தொடங்கும் பாடல் ஒன்றுமே (8 ) பஃறொடை வெண்பா. ஏனைய எல்லாம் நாலடி கொண்ட அளவியல் வெண்பாக்கள். இந் நூல் முழுமைக்கும் செம்மையாய் அமைந்த பழைய உரை உள்ளது.
 
« Last Edit: September 12, 2011, 09:02:02 PM by Global Angel »
                    

Offline Global Angel

Re: இனியவை நாற்பது
« Reply #1 on: September 12, 2011, 09:09:13 PM »
1

பிச்சைபுக் காயினுங் கற்றல் மிகஇனிதே
நற்சவையில் கைக்கொடுத்தல் சாலவும் முன்னினிதே
முத்தேர் முறுவலார் சொல்லினி தாங்கினிதே
தெற்றவும் மேலாயார்ச் சேர்வு.



(ப-ரை)பிச்சை புக்கு ஆயினும் - பிச்சை யெடுத்துண்டாயினும் ; கற்றல் - (கற்பனவற்றைக் கசடறக்) கற்றல் ; மிக இனிது ; நல் சவையில் - (அங்ஙனங் கற்ற கல்விகள்) நல்ல சபையின் கண் கைக்கொடுத்தல் - (தமக்கு) வந்துதவுதல், சாலவும் - மிகவும், முன் இனிது - முற்பட வினிது ; முத்து ஏர் முறுவலார் - முத்தையொக்கும் பற்களையுடைய மகளிரது, சொல் - வாய்ச்சொல், இனிது -; ஆங்கு - அது போல, மேலாயார்ச் சேர்வு - பெரியாரைத் துணைக் கொள்ளுதல், தெற்றவும் இனிது - தெளியவுமினிது.ஆயினும் என்புழி உம்மை இழிவு சிறப்பு.

" கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே "

என்றார் பின்னோரும். சவை - ‘சபா' என்னும் வடசொல் ‘ஆ' ஈறு ‘ஐ' ஆதல் முறைபற்றிச் ‘சபை' என்றாகி, சகர வகர வொற்றுமை பற்றிச் ‘சவை' என்றாயது.

நற்சவை - சபைக்கு நன்மையாவது நல்லோர் கூடியிருத்தல். அதனை,

"நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவ ராடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே"

(புறம்: 177)

என்பதனா னறிக. கைக்கொடுத்தலாவது கற்றன வெல்லாம் வேண்டுமுன் நினைவிற்கு வந்து நிற்றல்.

"நெடும்பகற் கற்ற அவையத் துதவாது
உடைந்துளார் உட்குவருங் கல்வி - கடும்பகல்
ஏதிலான் பாற்கண்ட இல்லினும் பொல்லாதே
தீதென்று நீப்பரி தால்"

என்னும் நீதிநெறிவிளக்கச் செய்யுள் ஈண்டறியத்தக்கது. ஏர் : உவமவுருபு ; ‘தணிகை வெற்பேரும்' என்றார் பெரியாரும். ‘ஏர்' என்பதற்கு ‘அழகு' எனப்பொருள் கோடலுமொன்று. மகளிர் சொல் இனிதாதலைத் ‘தேன் மொழியார்' என்னும் பெயரானு மறிக. சிலப்பதிகார முடையார்,

"பாகுபொதி பவளந் திறந்து நிலா உதவிய
நாகிள முத்தி னகைநலங் காட்டி"

என்றமையும் அப் பொருளை வற்புறுத்து மென்க. தெற்ற இனிதாதலாவது, மிக வினிதாதல்

 
 
                    

Offline Global Angel

Re: இனியவை நாற்பது
« Reply #2 on: September 12, 2011, 09:13:07 PM »
2

உடையான் வழக்கினி தொப்ப முடிந்தால்
மனைவாழ்க்கை முன் இனிது மாணாதா மாயின்
நிலையாமை நோக்கி நெடியார் துறத்தல்
தலையாகத் தான்இனிது நான்கு.


(ப-ரை.) உடையான் - பொருளுடையானது, வழக்கு - ஈகை, இனிது -; ஒப்ப முடிந்தால் - மனைவி யுள்ளமுங் கணவனுள்ளமும் (மாறுபாடின்றி) ஒன்றுபடக் கூடுமாயின். மனை வாழ்க்கை - இல்வாழ்க்கையானது, முன் இனிது - முற்பட வினிது ; மாணாதாம் ஆயின் - (அங்ஙனம்) மாட்சிமைப்படா தெனின், நிலையாமை நோக்கி - (யாக்கை முதலியன) நில்லாமையை ஆராய்ந்து, நெடியார் - தாமதியாதவராய், துறத்தல் - (அகம் புறமாகிய இருவகைப் பற்றுகளையும்) விடுதல், தலையாக நன்கு இனிது - தலைப்பட மிக வினிது.

ஒப்பமுடிதலின அருமை தோன்ற ‘ஒப்ப முடிந்தால்' என்றார்.

"காதல் மனையாளுங் காதலனும் மாறின்றித்
தீதி லொருகருமஞ் செய்பவே - ஓதுகலை
எண்ணிரண்டு மொன்றுமதி யென்முகத்தாய் நோக்கல்தான்
கண்ணிரண்டும் ஒன்றையே காண்"

என நன்னெறியும்,

"மருவிய காதல் மனையாளுந் தானும்
இருவரும் பூண்டுய்ப்பி னல்லான் - ஒருவரான்
இல்வாழ்க்கை யென்னும் இயல்புடைய வான்சகடஞ்
செல்லாது தெற்றிற்று நின்று "

என அறநெறிச்சாரமும் கூறுதல் காண்க.

மனைவாழ்க்கை ஏனைய துறவற வாழ்க்கையைக் காட்டிலும் இனிதாதலை,

"அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று"

(குறள்- 46)

எனத் தெய்வப்புலமைத் திருவள்ளுவனாரும் கூறினார். துறத்தல் (புறமாகிய செல்வத்தின்கண்ணும் அகமாகிய உடம்பின்கண்ணும் உளதாய பற்றினை அவற்றது நிலையாமை நோக்கி) விடுதல் நெடியார் - (செல்லற்குக் காலம்) நீட்டியாதவராய் ; இது முற்றெச்சம் இஃது இப்பொருட்டாதலை,

"இல்லம் இளமை எழில்வனப்பு மீக்கூற்றஞ்
செல்வம் வலியென்று இவையெல்லாம் - மெல்ல
நிலையாமை கண்டு நெடியார் துறப்பர்
தலையாயார் தாமுய்யக் கொண்டு "

என்னும் நாலடிச் செய்யுள் வலியுறுத்தும்.

‘தலையாகத் துறத்தல் ' என முடித்து, ‘தலைப்பட்டார் தீரத்துறந்தார் என்பதற் கொப்பத் ‘(தாம்) தலைப்படுமாறு துறத்தல் ' எனப் பொருளுரைப்பாரு முளர்.
 
                    

Offline Global Angel

Re: இனியவை நாற்பது
« Reply #3 on: September 12, 2011, 09:15:56 PM »
3

ஏவது மாறா இளங்கிளைமை முன்இனிதே
நாளும் நவைபோகான் கற்றல் மிகஇனிதே
ஏருடையான் வேளாண்மை தானினிது ஆங்கினிதே
தேரிற்கோள் நட்புத் திசைக்கு.



(ப-ரை.) ஏவது மாறா - ஏவலை மறாது செய்யும், இளங்கிளைமை - மக்களுடைமை, முன்இனிது - முற்பட வினிது ; நவை போகான் - குற்றங்களிற் செல்லாதவனாய், நாளும் கற்றல் - நாடோறுங் கற்றல், மிக இனிது -; ஏர் உடையான் - (தனதென) உழுமாடுகளையுடையானது, வேளாண்மை - பயிர்த்தொழில், இனிது -; ஆங்கு - அதுபோல , தேரின் - ஆராயின், திசைக்கு - (தான் செல்லுந் திசையில், கோன் நட்பு - நட்புக்கொள்ளுதல், இனிது -;

ஏவது ‘ஏவு' முதனிலைத் தொழிற்பெயரும், ‘உணர்வதுடையார் ' (நாலடி) என்புழிப்போல ‘அது' பகுதிப் பொருள் விகுதியுமாம். அன்றி, ‘மேவா ரிலாஅக் கடை' (திருக்குறள்) என்புழிப்போல, ‘ஏவுவது' என்பது விகாரமாயிற் றென்பது மொன்று. இனி ‘ஏவியது' என்னும் வினையாலணைந்த பெயர் ‘ஏவது எனக் குறைந்த தென்பாருமுளர். இளங்கிளையாவார் மிக்க ளென்க ; ‘ கேளாதே வந்து கிளைகளா யிற்றோன்றி ' என்னும் நாலடிச் செய்யுள் காண்க. ஏர் - எருது ; ‘ஏரழ குழுபெற்றப்பேர் ' என்னும் 11 ஆவது நிகண்டு. நாளுங்கற்றல் - நாண்முழுதுங் கற்றலுமாம். வேற்றூராகலின் நட்புக் கோடல் நன்றென்பார், ‘கோணட்புத் திசைக்கு ' என்றார். திசைக்கு : வேற்றுமை மயக்கம் . ‘ தான் செல்லுந், திசைக்குப் பாழ் நட்டாரையின்மை என்னும் நான்மணிக்கடிகையும் ஈண்டுக் கருதத்தக்கது.

 
                    

Offline Global Angel

Re: இனியவை நாற்பது
« Reply #4 on: September 12, 2011, 09:24:33 PM »
4

யானை யுடைய படைகாண்டல் முன்இனிதே1
ஊனைத்தின் றூனைப் பெருக்காமை முன்இனிதே
கான்யாற் றடைகரை யூர்இனி தாங்கினிதே
மான முடையார் மதிப்பு.



(ப-ரை.) யானையுடைய படை - யானைகளையுடைய சேனையை, காண்டல் - (அரசன்) செய்து கொள்ளுதல் முன் இனிது - முற்பட வினிது ஊனை தின்று - (பிறிதோ ருயிரின்) தசையைத் தின்று ; ஊனைப்பெருக்காமை - (தன்) உடம்பை வளர்க்காமை, முன் இனிது -; கான்யாற்று அடை கரை ஊர்-முல்லை நிலத்து யாற்றினது நீரடை கரைக்கண் உள்ள ஊர், இனிது - வாழ்தற் கினிது ; ஆங்கு - அவைபோல, மானம் உடையார் - மானமுடையவரது, மதிப்பு கொள்கை , இனிது -;


"கடலெனக் காற்றெனக் கடுங்கட் கூற்றென
வுடல்சின வுருமென"


(குணமாலையார் - 123)

எனவும்,

"காற்றெனக் கடலெனக் கருவரை யுருமெனக்
கூற்றென "

(கனக மாலையார் - 281)

எனவும் சிந்தாமணி யுடையார் கூறியபடி, விசையாற் காற்றும், ஒலியாற் கடலும், வடிவால் வரையும், அச்சத்தா லுருமும், கொலையாற் கூற்று மெனத்தக்க யானைகளைப் பெறுதலின் அருமையும், பெற்ற வழி யுளதாம் பயனுந் தோன்ற ‘யானையுடைய படைகாண்டன் முன்னினிதே ' எனவும்.

"தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பான்
எங்ஙன மாளு மருள் "

(குறள் - 251)

என்றபடி, தன்னூன் வளர்த்தல் கருதிப் பிறிதோருயிரின் தசையைத் தின்பவன் அருளிலனாய் அவ்வுலகத்தை இழத்தலின், ‘ஊனைத்தின் றூனைப் பெருக்காமை முன்னினிதே' எனவும்,

"மானயா நோக்கியர் மருங்கல் போல்வதோர்
கானயாற் றடைகரைத் கதிர்கண் போழ்கலாத்
தேனயாம் பூம்பொழிற் றிண்ணை வெண்மணல் "

(கனகமாலையார் - 266)

எனச் சிந்தாமணியுடையார் உரைத்தவாறு, நுடக்கமும் அழகுமுடைய கான்யாற்று நீரடைகரை பொழில் செறிந்து வெண்மணல் பரந்திருத்தலின் வாழ்தற்கு வசதியுண்மை தோன்றக் ‘கான்யாற்றடை கரை யூரினிது' எனவும், தம் நிலையிற் றாழாமையுந் தெய்வத்தாற் றாழ்வு வந்துழி உயிர் வாழாமையுமாகிய மானமுடையார் கொள்கை,

"இம்மையு நன்றா மியனெறியுங் கைவிடா
தும்மையு நல்ல பயத்தலாற் - செம்மையி
னானங் கமழுங் கதுப்பினாய் நன்றேகாண்
மான முடையார் மதிப்பு "

என்று நாலடியாரிற் கூறிவண்ணம் இருமையும் பயத்தலின் ‘ மானமுடையார் மதிப்பு இனிதே' எனவுங் கூறினா ரென்க.

காண்டல் - செய்தல் ; ‘நகரங் கண்டான் ' என்னும் வழக்குண்மை தெரிக. இனி , ‘காண்டல்'‘பார்த்தல் ' என்பாருமுளர்.

பின்னர் நிற்கும் ‘ஊன்' கருவியாகுபெய ரென்க.
 
                    

Offline Global Angel

Re: இனியவை நாற்பது
« Reply #5 on: September 12, 2011, 09:27:55 PM »
5
கொல்லாமை முன்இனிது கோல்கோடி மாராயஞ்
செய்யாமை முன்இனிது செங்கோலன் ஆகுதல்
எய்துந் திறத்தால் இனிதென்ப யார்மாட்டும்
பொல்லாங் குரையாமை நன்கு.



(ப-ரை.) கொல்லாமை - (ஓருயிரைக்) கொல்லாமை, முன் இனிது - மிக வினிது ; கோல் கோடி - (அரசன்) நடுவு நிலைமை தவறி, மாராயம் செய்யாமை (தன்கண் வினை செய்வார்க்குச்) சிறப்புச் செய்யாமை முன் இனிது - மிக வினிது, செங்கோலன் ஆகுதல் (அவன்) முறை செலுத்துவோனாதல், (முன்னினிது) மிகவினிது ; யார் மாட்டும் - யாவரிடத்தும், எய்தும் திறத்தால் கூடியமட்டில், பொல்லாங்கு உரையாமை - (பிறர்மீது) குற்றங்கூறாமை, நன்குஇனிது - மிக வினிது, என்ப - என்பர் (மேலோர்)

கொலை பஞ்சமா பாதகங்களி லொன்றாகலின் ‘கொல்லாமை முன்னினிது ' என்றார். ‘கோல் கோடி மாராயன் செய்யாமை ' என்பது பாடமென்ப. ‘ராயன்' என்னும் வடசொற்றிரிபு அக்காலத்து வழங்கக் காணாமையானும், ‘கோடி செய்யாமை ' என்னும் முடிபு நேரிதன்மை யானும், கோல் கோடிச் செய்யாமையே செங்கோல் னாகுதலாகலிற், கூறியது கூறல் என்னுங் குற்றம் நேர்தலானும் அது பாடமாகாதென்க. ‘மாராயம் -அரசனாற் செய்யுஞ் சிறப்பு ' என்பர் நச்சினார்க்கினியர், (பொருளதிகாரம், புறத் - 69). அரசன் தக்க காரணமின்றி விளையாட்டாக வேட்டமாடி உயிர்களைக் கொல்லுதலும், தன்கண் வினை செய்வார் பலருள்ளும் ஒருவன்மாட்டு விருப்புற்று நடுவு நிலைமை தவறி அவற்குரித்தாகாத சிறப்புகளைச் செய்தலும், மற்றொருவன் மாட்டு வெறுப்புற்று அவன்மீது குற்றஞ் சாற்றலும் கூடாவாம்; இவையின்றி நீதி செலுத்தல் இனிதென்பது கருத்தென்க. பொல்லாங்குரையாமையைச் சோர்வற மேற்கொள்ளுத லரிதென்பார், ‘எய்துந்திறத்தால்' என்றார். ‘கோல் கோடி' என்புழிக் கோலென்றது தராசுக்கோலை என்றுணர்க. செவ்விய கோலொத்தலின் ‘செங்கோல்' ஆயிற்றென்ப.
 
                    

Offline Global Angel

Re: இனியவை நாற்பது
« Reply #6 on: September 12, 2011, 09:30:35 PM »
6

ஆற்றுந் துணையால் அறஞ்செய்கை முன்இனிதே
பாற்பட்டார் கூறும் பயமொழி மாண்பினிதே
வாய்ப்புடைய ராகி வலவைகள் அல்லாரைக்
காப்படையக் கோடல் இனிது.


(ப-ரை.) ஆற்றுந் துணையால் - கூடிய மட்டும், அறஞ்செய்கை - தருமஞ் செய்தல், முன் இனிது - மிக வினிது ; பால்பட்டார் நன்னெறிப் பட்டார் , கூறும் - சொல்லும், பயம் மொழி - பயனுடைய சொல்லின், மாண்பு - மாட்சிமை, இனிது-; வாய்ப்பு உடையர் ஆகி (கல்வி, செல்வம், அதிகாரம், ஆண்மை முதலிய நலம் யாவும்) பொருந்துதலுடையவராய், வலவைகள் அல்லாரை நாணிலிகளல் லாதவரை, காப்பு அடைய கோடல் - காப்பாகப் பொருந்தக் கொள்ளுதல், இனிது-.

அறமாவது நல்லன நினைத்தலும், நல்லன சொல்லுதலும், நல்லன செய்தலுமாம். ஆற்றுந்துணையாவது பொருளளவிற்கேற்பச் செய்தல்.

"ஒல்லும் வகையான் அறவினை யோவாதே
செல்லும்வா யெல்லாஞ் செயல்"

(குறள் - 33)

என்றார் பொய்யில் புலவரும். தமது தன்மையை விடாதார் பகைவராயினும், நொதுமலராயினும், நண்பராயினும் பயனுடை மொழிகளையே பகர்தலின் ‘பாற்பட்டார் கூறும் பயமொழி ' என்றார். கல்வி, செல்வம், அதிகாரம், ஆண்மை முதலிய எல்லா மிருந்தும் ஒருவன் கண் நாணொன் றில்லையாயின அவன், தன்னை யடைந்தாரைக் கைவிடுவ னென்பது, ‘வாய்ப்புடையராகி வலகைளல்லாரைக், காப்படையக் கோட லினிது' என்பதன் கருத்தென்க.

 
                    

Offline Global Angel

Re: இனியவை நாற்பது
« Reply #7 on: September 12, 2011, 09:32:25 PM »
7


அந்தண ரோத்துடைமை ஆற்ற மிகஇனிதே
பந்தம் உடையான் படையாண்மை முன்இனிதே
தந்தையே ஆயினுந் தானடங்கான் ஆகுமேல்
கொண்டடையா னாகல் இனிது
.


(ப-ரை.) அந்தணர் - பிராமணர்க்கு, ஓத்து உடைமை - வேதத்தினை, மறவாமை, ஆற்ற மிக இனிது - மிகவினிது; பந்தம் உடையான் - (மனைவி மக்கண் முதலியோர் மாட்டுப்) பற்றுடையவன், படை ஆண்மை - சேனையை ஆளுந்தன்மை, முன் இனிது - முற்பட வினிது ; தந்தையே ஆயினும் -(தன்னைப்பெற்ற) தந்தையே யானாலும், தான் அடங்கான் ஆகுமேல அவன் (மனமொழி மெய்கள் தீ நெறிக்கட் சென்று) அடங்கானெனின், கொண்டு அடையான் ஆதல் - அவன் சொற் கொண்டு அதன்வழி நில்லாதானாதல், இனிது-.

அந்தணர் - அழகிய தன்மை யுடையார் அல்லது வேதாந்தத்தை அணவுவார் என்பது சொல்லின்படி பொருள். அதனை,

"அந்தண்மை பூண்ட அருமறை யந்தத்துச்
சிந்தைசெ யந்தணர்"

என்னுந் திருமூலநாயனார் திருவாக்கா னறிக. ஓதப்படுதலின் ஓத்தாயிற்று. பார்ப்பார் வேதத்தை மறந்துழி இழிகுலத்தரா மாகலின், மறக்கலாகா தென்னுங் கருத்தாற் செந்நாப்போதாரும்,

"மறப்பினு மோத்து கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்"

என்னும் பாவின்கண் ‘மறப்பினும்' என்றமை காண்க. உறவினர் மாட்டுப் பற்றுடையானாயின் பழிக் கஞ்சித் தன் சேனையில் ஓருயிர்க்கும் வீணாக இழிவு நேராதபடி பாதுகாப்பானாகலின் பந்தமுடையான் படையாண்மை முன்னினிதே ' என்றார்.

"அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி"

(குறள் - 506)

என்றிருத்தல் காண்க. இதற்குச் ‘சுற்றமுடையார் படையை ஆளுந்தன்மை மிகவினிது' எனப் பொருளுரைப்பாரு முளர்.

"ஓதி யுணர்ந்தும் பிறர்க்குரைத்துந் தானடங்காப்
பேதையிற் பேதையா ரில்"

(குறள் - 834)

என்றிருத்தலின் தந்தையாயினும் மனமொழி மெய்களினடங்கானாயின், அவன்பால் உபதேச மொழிகளைக் கேட்டு அவற்றின் வழியொழுகாமை இனி தென்றார். இதற்குத் தந்தையே யானாலும் அவன் அடங்காதவனானால் அவனை உடன் கொண்டு ஓரிடத்தை அடையாதவனாகுதல் இனிது என் றுரை பகர்வாருமுளர். ஏல் : ‘எனின்' என்பதன் மரூஉ.

 
 
                    

Offline Global Angel

Re: இனியவை நாற்பது
« Reply #8 on: September 12, 2011, 09:34:25 PM »
8
ஊருங் கலிமா உரனுடைமை முன்இனிதே
தார்புனை மன்னர் தமக்குற்ற வெஞ்சமத்துக்
கார்வரை யானைக் கதங்காண்டல் முன்இனிதே
ஆர்வ முடையவர் ஆற்றவும் நல்லவை
பேதுறார் கேட்டல் இனிது.



(ப-ரை.) ஊரும் கலிமா - (தான் ஏறிச்) செலுத்துகின்ற போருக்கு உரிய குதிரை, உரனுடைமை - வலிமையுடையதாயிருத்தல், முன் இனிது - மிக வினிது ; தார்புனை மன்னர் தமக்கு - மாலையணிந்த அரசர்களுக்கு உற்ற வெஞ்சமத்து - போர் வாய்த்த களத்தில் , கார் வரை யானை - கரிய மலை போன்ற யானைகளின், கதம் - வெகுண்டு செய்யும் போரை, காண்டல் - காணுதல், முன் இனிது -; ஆற்றவும் ஆர்வம் உடையவர் - மிகவும் அன்புடையார், நல்லவை - நல்ல கேள்விகளை , பேது உறார் - மயக்கமடையாதவர்களாய், கேட்டல் - கேட்பது ; இனிது-.

அரசன் ஏறிச் செல்லுங் குதிரைக்குப் பசி தாகம் பொறுத்தற்கும் வேண்டியபோது விரைந்தோடுதற்கும் நெடிது நேரஞ்சாரி செல்வதற்கும் வலிமை வேண்டுதலின், ‘ஊருங் கலிமா வுரனுடைமை முன்னினிதே' என்றார். தார் அடையாள மாலை; ‘கண்ணியுந் தாருமெண்ணின ராண்டே' என்னுந் தொல்காப்பயிச்சூத்திர வுரை காண்க.

"குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
உண்டாகச் செய்பவான் வினை "

(குறள் - 758)

என்றவாறு யானைப்போர் காண்டற்குத் தக்க காட்சியாதலுணர்க. ‘ஆற்றவும் ஆர்வமுடையார் நல்லவை பேதுறார் கேட்டல் இனிது' என்றார்; பேரார்வமுடையார்க்கன்றிக் கேட்ட நற்பொருள்களை உட்கொள்ளுதலும், உள்ளத்தமைத்தலும், பின் சிந்தித்துத் தெளிதலும், தெளிந்தவழி நிற்றலுங் கூடாமையினென்க.

‘ஆற்றவும் நல்லவை' என முடிப்பாரு முளர். பேதுறார் : ஒரு சொல் லெனினுமாம்.

இது பஃறொடை வெண்பா.

 
                    

Offline Global Angel

Re: இனியவை நாற்பது
« Reply #9 on: September 12, 2011, 09:36:30 PM »
9
தங்க ணமர்புடையார் தாம்வாழ்தல் முன்இனிதே
அங்கண் விசும்பின் அகல்நிலாக் காண்பினிதே
பங்கமில் செய்கையராகிப் பரிந்துயார்க்கும்
அன்புடைய ராதல் இனிது.


(ப-ரை.) தங்கண் - தங்குமிடத்தே, அமர்பு உடையார் நட்புடையார், வாழ்தல் - (செல்வமுடையராய்) வாழ்தல், முன் இனிது - மிக வினிது ; அம் கண் விசும்பின் - அழகிய இடமகன்ற வானத்தில் அகல் நிலா - விரிந்த நிலாவை, காண்பு - காணுதல், இனிது -; பங்கம் இல் செய்கையர் ஆகி - குற்றமில்லாத நடையுடையவராய், யார்க்கும் பரிந்து - யாவர்க்கும் இரங்கி, அன்புடையர் ஆதல் - அன்புடைய ராயிருத்தல், இனிது-.


தம்மை யடுத்து ஒட்டி வாழ்பவர் நன்மைகளைப் பெற்று வாழ்தல், தம் பெருமிதத்திற்கு கேதுவாகலின், ‘தங்க ணமர் புடையார் தாம் வாழ்தல் முன்னினிதே 'எனவும் , அழகுந் தன்மையுமுடைத்தாய் விழிக்கு விருந்து செய்தலின், ‘அகனிலாக் காண்பினிதே 'எனவும்.

‘என்பி லதனை வெயில்போலக் காயுமே
யன்பி லதனை யறம்'

(குறள் - 77)

என்றிருத்தலின், ‘யார்க்கு மன்புடைய ராத லினிது' எனவுங் கூறினாரென்க.

தாம் : அசை.
 

 
                    

Offline Global Angel

Re: இனியவை நாற்பது
« Reply #10 on: September 12, 2011, 09:38:25 PM »
10
கடமுண்டு வாழாமை காண்டல் இனிதே
நிறைமாண்பில் பெண்டிரை நீக்கல் இனிதே
மனமாண்பி லாதவரை யஞ்சி யகறல்
எனைமாண்புந் தான்இனிது நன்கு.


(ப-ரை.) கடம் உண்டு - கடன் கொண்டு உண்டு, வாழாமை காண்டல் - வாழாதிருத்தல், இனிது-; நிறை மாண்பு இல் - கற்பு மாட்சிமையில்லாத, பெண்டிரை - மனைவியரை, நீக்கல் - விலக்கி விடுதல், இனிது-; மனம் மாண்பு இலாதவரை - மனத்தின்கண் மாட்சிமை யில்லாதவரை, அஞ்சி அகறல் - அஞ்சி நீங்குதல், எனை மாண்பும் - எல்லா மாட்சியினும், நன்கு இனிது - மிக வினிது.

"உண்கடன் வழிமொழிந் திரக்குங்கால் முகனுந்தாங்
கொண்டது கொடுக்குங்கால் முகனும்வே றாகுதல்
பண்டுமிவ் வுலகத் தியற்கைஃ தின்றும்
புதுவ தன்றே புலனுடைய மாந்திர்"

(கலி - 22)

எனவும்,

"விடன்கொண்ட மீனைப் போலும்
வெந்தழன் மெழுகைப் போலும்
படன்கொண்ட பாந்தள் வாயிற்
பற்றிய தேரை போலுந்
திடன்கொண்ட ராம பாணஞ்
செருக்களத் துற்ற போது
கடன்கொண்ட நெஞ்சம் போலுங்
கலங்கின னிலங்கை வேந்தன் "

எனவும் இருத்தலின், ‘கடமுண்டு வாழாமை காண்ட லினிதே' என்றார். ‘நிறை மாண்பில் பெண்டிரை நீக்க லினிதே ' என்றது. கற்பழிந்த மனைவியொடு கலந்து வாழ்தல் இம்மையிற் றலையிறக்கத்தையும் பெருந்துன்பத்தையும் தருதலே யன்றி, மறுமையினும் நரகத்தைத் தருதல் பற்றி யென்க. அது கூடாதென்பதனை,

"வினையிலென் மகன்றனுடல் வேறுசெய்வித் தோனைக்
குனிசிலையி னாளையுயிர் கோறல்புரி யேனேல்
மனைவியய லான்மருவல் கண்டுமவள் கையாற்
றினையளவு மோர்பொழுது தின்றவனு மாவேன் "

(பாரதம்)

"கற்பழி மனைவி யோடு கலந்திருப் பவனு மற்றோர்
பொற்புடை மனைவி தன்னைப் புணர்வதற் கெண்ணு வானுஞ்
சொற்பொரு ளுணர்த்தி னானைத் தொழவுள நாணு வானும்
விற்பன வலாத விற்று மெய்வளர்த் தழிகு வானும் "

‘ஆவனா னுண்மை ........(பிரபுலிங்கலீலை) என்றிருத்தலிற்றெளிக.

மன மாண்பிலாதவார் - கெட்ட எண்ணமுடையார்; துட்டர்கள். ‘துட்டரைக் கண்டாற் றூரநில்' என்னும் பழமொழி காண்க. ‘எனை, மாண்பு' என்புழி இன்னும் உம்மையும் செய்யுள் விகாரத்தாற்றொக்கன.
 
                    

Offline Global Angel

Re: இனியவை நாற்பது
« Reply #11 on: September 12, 2011, 10:02:04 PM »
11
அதர்சென்று வாழாமை ஆற்ற இனிதே
குதர்சென்று கொள்ளாத கூர்மை இனிதே
உயிர்சென்று தான்படினும் உண்ணார்கைத் துண்ணாப்
பெருமைபோற் பீடுடையது இல்.



(ப-ரை.) அதர் சென்று - வழிபோய், வாழாமை - வாழாதிருத்தல், ஆற்ற இனிது - மிகவினிது; குதர் சென்று - தப்பு வழியிற் சென்று, கொள்ளாத (நூற்குப் பொருள்) கொள்ளாத கூர்மை - மதிநுட்பம் , இனிது-; உயிர் சென்று படினும் - (பசியான்) உயிர் இறந்துபடினும், உண்ணாதார் கைத்து - உண்ணத்தகாதார் கையிலுணவை, உண்ணா - உண்ணாத, பெருமைபோல் - பெருமைபோல ‘பீடு உடையது இல் - பெருமையுடையது (பிறிதொன்று) இல்லை.

அதர் செல்லலாவது,

"பத்தூர்புக் கிரந்துண்டு பலபதிகம் பாடிப்
பாவையரைக் கிறிபேசிப் படிறாடித் திரிவீர்"

(தேவாரம்)

என்றபடி ஊரூராய்ச் சென்றிரத்தல். அன்றி , நாடோடியாத லெனினும் வழிபறித்த லெனினுமாம். இவற்றுள் வழிபறித்தல் வேடர்க்குக் குலத்தொழிலாகலின் ஏனையோருள் அத் தொழிலின் முயல்வார் சிற்சிலரையே நோக்கிக் கூறியதாமாகலின், அப் பொருள் சிறவாதென்க. நூற்பொருளை நுனித்தறியாது வலிந்தும் நலிந்துந் தங்கருத்திற் கியைந்தவாறு கொள்பவார் பலராகலின், ‘குதர்சென்று கொள்ளாத கூர்மை இனிதே ' என்றார். உண்ணாரெனப்படுவார் தாழ்ந்த வருணத்தோர்.

"தான்கெடினுந் தக்கார்கே டெண்ணற்க தன்னுடம்பின்
ஊன்கெடினும் உண்ணார்கைத் துண்ணற்க"

என்னும் நாலடியினை ஈண்டறிக.

இனி, ‘உண்ணிருண் ணீரென் றுபசரியார் தம் மனையி 'லுண்ணாமை கோடி யுறும் ' என்றிருத்தலின், ‘ஈண்டு உண்ணார் அன்போடுபசரியாதார் ' என்பாருமுளர். அன்றியும், ‘உண்ணார் என்றது குரு, தெய்வம் , வறிய ராதியரை; அவர் பொருள்கொண்டு உண்ணுதல் பெரும்பாவமாகலின் என்பாருமுண்டு ; அவர் ‘கைத்து' ‘பொருள்' என்பர், தான் ; அசை . ‘உயிர் சென்று படினும் என்புழி உடம்பின் தொழில் உயிர்மே லேற்றப்பட்டது; இஃது உபசார வழக்கு.

 
 
 

                    

Offline Global Angel

Re: இனியவை நாற்பது
« Reply #12 on: September 12, 2011, 10:03:59 PM »
12
குழவி பிணியின்றி வாழ்தல் இனிதே
கழறும் அவையஞ்சான் கல்வி இனிதே
மயரிக ளல்லராய் மாண்புடையார்ச் சேரும்
திருவுந்தீர் வின்றேல் இனிது.


(ப-ரை.) குழவி - குழந்தைகள், பிணி இன்றி - நோயில்லாது, வாழ்தல் - வாழ்வது, இனிது -; கழறும் (சொல்லுதற்குரிய சபையினையறிந்து அதற்கேற்பச்) சொல்லுகின்ற , அவை அஞ்சான் - சபைக்கு அஞ்சாதவனுடைய , கல்வி - கல்வியானது, இனிது -; மயரிகள் அல்லராய் - மயக்கமுடைய ரல்லராய், மாண்பு உடையார் சேரும் - மாட்சிமையுடையாரை யடையும், திருவும் - செல்வமும் தீர்வு இன்றேல் - நீங்காதாயின், இனிது - .


பாலக்கிரக தோடம் பட்சிதோட முதலிய அப் பருவத் துணமையின் ‘ குழவி பிணியின்றி வாழ்த லினிதே ' எனவும் ;

"உளரெனினும் இல்லாரோ டொப்பர் களனஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தார்"

(குறள் - 730)

என்றிருத்தலின்,

‘கழறு மவையஞ்சான் கல்வி யினிதே' எனவும்:

"பரீஇ யுயிர்செகுக்கும் பாம்பொடும் இன்னா
மரீஇப் பின்னைப் பிரிவு "

(நாலடி - 220)

என்றிருத்தலின் , ‘மாண்புடையார்ச் சேருந் திருவுந் தீர்வின்றேலினிது ' எனவுங் கூறினா ரென்க. ‘திருவும்' என்புழி உம்மை எச்சவும்மையாம்.

 
 
                    

Offline Global Angel

Re: இனியவை நாற்பது
« Reply #13 on: September 12, 2011, 10:05:51 PM »
13

மான மழிந்தபின் வாழாமை முன்இனிதே
தான மழியாமைத் தானடங்கி வாழ்வினிதே
ஊனமொன் றின்றி உயர்ந்த பொருளுடைமை
மானிடவர்க் கெல்லாம் இனிது.



(ப-ரை.) மானம் அழிந்த பின் - பெருமை கெட்ட பின், வாழாமை - (உயிர்) வாழாமை, முன் இனிது - மிக வினிது ; தானம் அழியாமை (தானிருந்து வாழும்) இருப்புச் சிதையாதபடி, தான் அடங்கி வாழ்வு - தான் அடங்கி வாழ்தல், இனிது-; ஊனம் ஒன்று இன்றி குறைவு சிறிதுமில்லாது, உயர்ந்த பொருள் உடைமை மிக்க பொருளுடையராதல், மானிடவர்க்கு எல்லாம் - எல்லா மக்கட்கும், இனிது -;

மானம் அழிதல் - நிலையினின்றுந் தாழ்தல்.

"தலையி னிழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையி னிழிந்தக் கடை"

(குறள் - 964)

எனவும்

"மயிர்நீப்பின் வாழாக் கவரிமா வன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின் "

(குறள் - 969)

எனவும் பிறருங் கூறுதலின் ‘மான் மழிந்தபின் வாழாமை முன்னினிதே ' என்றார். ஒருவன் தானடங்கி வாழானாயின் அவன் குடியிருப்புச் சிதைதல் ஒருதலை யெனல் குறித்தன ரென்க. ஊனமொன்றின்றி யுயர்ந்த பொருளாவது கல்வியாம் ; என்னை?

"கேடில்விழுச்செல்வங் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை "

(குறள் - 400)

எனவும்,

"தம்மிற்றம் மக்க ளறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லா மினிது"

(குறள் - 68)

எனவும் பெரியாரும் பணித்தமையி னென்க. கலித்தொகையுடையார் ஒரு காரணம் பற்றிச் செல்வப் பொருளைக் ‘கேடில் விழுச்செல்வம்' என்றாரேனும், நச்சினார்கினியர் வழுவமைத்தமையுங் கண்டு தெளிக.

‘ஒன்று' என்புழி முற்றும்மை விகாரத்தாற்றொக்க தென்க.

 
 
                    

Offline Global Angel

Re: இனியவை நாற்பது
« Reply #14 on: September 12, 2011, 10:07:57 PM »
14

குழவி தளர்நடை காண்டல் இனிதே
அவர்மழலை கேட்டல் அமிழ்தின் இனிதே
வினையுடையான் வந்தடைந்து வெய்துறும் போழ்து
மனனஞ்சான் ஆகல் இனிது.


(ப-ரை.) குழவி - குழந்தைகளது, தளர்நடை - தளர்ந்த நடையை, காண்டல் - காணுதல், (பெற்றோர்க்கு) இனிது-; அவர் மழலை - அக்குழந்தைகளின் மழலைச் சொற்களை , கேட்டல்-; அமிழ்தின் - தேவாமுதத்தினும் , இனிது-; வினையுடையான் - தீவினை செய்தவன், வந்து அடைந்து - (அதன் பயனாகிய துன்பந்) தன்பால் வந்து சேர்ந்து , வெய்து உறும் போழ்தும் - (தான் தாபமடையுங் காலத்தும், மனன் அஞ்சான் ஆகல் - மனம் அஞ்சாது நிற்றல், இனிது-.

தளர் நடையைக் குறுகுறு நடத்தல் என்ப.

"குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
இட்டுந் தொட்டுங் கவ்வியுந் துழந்தும்
நெய்யுடை யடிசில் மெய்பட விதிர்த்தும்
மயக்குறு மக்களை யில்லோர்க்குப்
பயக்குறை யில்லைத்தாம் வாழும் நாளே "

(புறம் - 188)

என்றார் ஒரு புலவர். ‘அமிழ்தின்' என்புழிச் சிறப்பும்மை விகாரத்தாற்றொக்கது. ‘இன்' உறழ் பொருளின் வந்தது; ஒப்புப் பொருளின் வந்ததெனினு மமையும். தீவினைப் பயன் நுகர்ந்தே தீரவேண்டுதலின், ‘மனனஞ்சானாக லினிது' என்றார். ‘வெய்துறும்' ஒரு சொல் லெனினுமாம்