நீரே தாகம் தணிக்கும்
என் கிறான் ஒருவன்
இல்லை பானியே தாகம் தணிக்கும்
என்கிறான் மற்றொருவன்
இல்லை இல்லை
வாட்டரே தாகம் தணிக்கும்
என்கிறான் இன்னொருவன்
மூவரும் அடித்துக் கொண்டு
சாகிறார்கள்
தாகம் தணியாமலே
இது தான்
மதவாதிகளின் கதை
பொருள் ஒன்று தான்
பெயர் தான் வேறு வேறு
இதை புரிந்து கொள்ளாத
அறியாமையே காரணம்
இறைவனை அறியாதவனே
இறைவனின் பெயரால் சண்டையிடுகிறான்
சண்டையிடுபவன் மதவாதியல்ல
வெறும் மதம் பிடித்தவன்
வலையில் நீர் அகப்படாது
மதம் பிடித்தவனிடம்
மகேசன் அகப்படமாட்டான்
பறக்கும் போது
சத்தமிடும் வண்டு
பூவின் மேலமர்ந்து
தேன் அருந்தும் போது அமைதியாகிவிடும்
இறைவனை அடையாதவனே
சர்ச்சைகள் செய்கிறான்
அடைந்தவன் அமைதியாகி விடுகின்றான்
எல்லா பூவிலும் தேன் இருக்கிறது
என அறியும் வண்டு
பூவிடம் பேதம் பார்ப்பதில்லை
ஞானிகளும் அப்படித்தான்
ஒருவன் ஆலயத்தை இடித்துவிட்டு
மசூதி கட்டுகிறான்
இன்னொருவன் மசூதியை இடித்துவிட்டு
ஆலயம் கட்டுகிறான்
இவர்கள் வணங்குவது
கட்டிடங்களைத்தான்
கடவுளை அல்ல
இதயமே இறைவனின்
ஆலயம்
கடவுளின் பக்தன்
கடப்பாரை ஏந்த மாட்டான்
பூக்களை தொடுக்கும்
நாரையே ஏந்துவான்
இறைவன்
எல்லா இடங்களிலும் இருக்கிறான்
என்பதை அறிந்தவன்
இடஒதுக்கீடு செய்வானா?
இறைவன்
எல்லா உயிர்களிலும் இருக்கிறான்
என்பதை அறிந்தவன்
பிற உயிர்களை பகைப்பானா