பெண்ணே
உன் நீதிதேவன் சபையில்
நாம் ஆண்கள் குற்றவாளிகள் தான்
ஒப்புக்கொள்கிறோம்
பாலூட்டும் தனங்களை கடித்து
ரத்தம் குடிக்கும் அட்டைகள் நாம்
எங்களை பெருகிறவள் நீ
எங்களால் இழப்பவளும் நீயே
நீ எங்கள் கண்களாய் இருந்தாய்
நாங்கள் உன் கண்ணீராக இருந்தோம்
நீ எங்கள் ஆடைகளாய் இருந்தாய்
நாங்கள் உன்முன்னே நிர்வாணமாய் இருந்தோம்
நீ எங்கள் முகவரியாய் இருந்தாய்
நாங்கள் உன் முகத்திரையாய் இருந்தோம்
நீ எங்கள் சிறகுகளாய் இருந்தாய்
நாங்கள் உன்னை அடைக்கும் கூண்டுகளாய் இருந்தோம்
நீ எங்கள் விடியலாய் இருந்தாய்
நாங்கள் உனது அஸ்தமனமாய் இருந்தோம்
நீ கர்ப்பக்கிரகமாய் இருந்தாய்
நாங்கள் உன்னை கழிவறையாய் மாற்றி விட்டோம்
எங்கள் வெற்றிக்குப் பின்னால் நீ இருந்தாய்
உன் தோல்விக்குப் பின்னால் நாங்கள் இருந்தோம்
வாழ்க்கை சதுரங்கத்தில்
உன்னை வெட்டியபடியே முன்னேறியவர்கள் நாங்கள்
நாமே நீ இட்ட பிச்சை தான்
உன்னை எங்களிடம் கையேந்தும்
பிச்சைக்காரி ஆக்கிவிட்டோம்
தாய்மைக்காக சமைபவளே
உன் சதையை தின்று
பசியாறும் கழுகுகள் நாங்கள்
நீ உன்னை விற்றால்
அது விபச்சாரம்
நாங்கள் எங்களை விற்றால்
அது திருமணம்
இந்திரனாகி உன்னை
கற்பழிப்பவரும் நாம் தான்
கெளதமனாகி உன்னை
சபிப்பவரும் நாம் தான்
காதல் கூட
நாம் உனக்கு விரிக்கும் வலைதான்
தாலி கூட
நாம் உனக்கு பூட்டும் விலங்கு தான்
அவதாரங்களையும் தீர்க்கதரிசிகளையும்
பெருகிறவள் நீ
நாமோ உன்னை பாவத்தின் பிறப்பிடமாக
பெயர் சூட்டுகிறோம்
பெண்ணே
உன் முன்னால் குற்ற உணர்ச்சியோடு
தலை குனிந்து நிற்கிறோம்
உன் பெண்மை எனும்
தெய்வீக நெருப்பில்
எங்களை பரிசுத்தப்படுத்துவாயாக