24
« Last post by Thenmozhi on February 20, 2026, 03:14:50 AM »
விடுமுறை என்றாலே என்றாலே ஞாபகத்துக்கு வருவது பாட்டி வீடு.எங்களுக்கு பள்ளி பெரிய விடுமுறை வருவது ஆகஸ்ட் மாதம்.ஒவ்வொரு வருடமும் விடுமுறைக்கு இலங்கையில் உள்ள பாட்டி வீட்டுக்கு செல்வோம்.எங்களை வரவேற்க பாட்டி ,தாத்தா விமான நிலையத்தில் ஆவலோடு காத்திருப்பார்கள்...எங்களை ஆரத்தழுவி முத்தமடுவதில் என் மனம் காற்றில் பறக்கின்ற சந்தோசம்..
விமான நிலையத்திலிருந்து பாட்டி வீட்டை சென்றடையும் வரை ,பாட்டி தாத்தாவுடன் பலகதை பேசிட்டு வருவேன்.போகும் வழியில் பல்வேறு உணவுகள் வாங்கி கொடுத்துண்டு மகிழ்வோம்.பாட்டி வீட்டை சென்றடைந்ததும் முதலில் உங்களை வரவேற்பது நாய்க்குட்டி வீமா தான்.எங்கள் வருகையை கண்டு மகிழ பாட்டி வீடு பூராகவும் மாமா, அத்தை, பெரியம்மா பெரியப்பா என உறவுகள் கூடி இருப்பார்கள்.
அவர்களைப் பார்க்கும்போது இனம் புரியாத மகிழ்ச்சி என் மனதில்...எல்லோரும் பேசிட்டு இருக்கும்போது பாட்டி சொல்லுவார் "நான் இல்லாத நேரத்திலும் இப்படி சந்தோசமாக ஒற்றுமையாக இருக்க வேண்டும் எல்லோரும் "என்று.....
மறுநாள் காலை சுடச்சுட பால் அப்பத்தில் ஆரம்பிக்கும் பாட்டியின் கைப்பக்குவம். அந்தப் பால் அப்பத்தின் சுவை இன்னும் என்னாக்கினை விட்டு அகலவில்லை.தாத்தா கடற்கரையில் சென்று மீன், நண்டு ,கணவாய் வாங்கிட்டு வருவாங்க.அதனை பாட்டி பக்குவமாய் ஒடியல் கூழாகி ,எல்லா உறவுகளும் சூழ்ந்து இருந்து ,குடித்து மகிழ்வோம்..அப்போது பாட்டியின் குரல் ஓங்கி ஒலிக்கும்" மீன் முள் வரும் பத்திரமா சாப்பிடுங்க" என்று...
பாட்டி வகைவகையாய் வாய்க்கு வக்கனையாய் சமைத்து தருவாங்க.பாட்டி சமையல் மண் சட்டி, பானையில் பண்ணுறது தான் தனிச்சுவை.அரிசிமா புட்டு,மீன் பொரியல் ,இடியப்பம்,சம்பல் ,சொதி நண்டு குழம்பு,இட்லி ,தோசை ,வடை என்று பாட்டியின் கைப்பக்குவத்தை யாராலும் அசைக்க முடியாது...பாட்டி தான் எனக்கு சமையல் கற்றுக் கொடுத்தாங்க...
பாட்டியின் வீட்டைச் சூழ பல வகையான பழமரங்கள்.வீட்டு முற்றத்தில் இருந்தால் இயற்கையான காற்று...மாம்பழம் வாழைப்பழம், பலாப்பழம் ,கொய்யாப்பழம்,இளநீர் என இயற்கையான பழங்களை பாட்டியும், தாத்தாவும் எங்களுக்கு தருவார்கள்.அந்தப் பழங்களின் சுவை இன்னும் என் நாக்கில் இன்னும் சுவையூகிறது.
பாட்டி ,தாத்தா கூட தூங்கும் போது பல்வேறு புராணக் கதைகள் ,நீதிக் கதைகள் கூறுவார்கள்.அவர்களின் கதையை கேட்டு அப்படியே நான் தூங்குவேன்.தாத்தா கூத்து பாடல்கள் எனக்கு சொல்லிக் கொடுப்பார்.நான் அந்தப் பாடல்களைப் பாடும் போது "என் பேர்த்தி கெட்டிக்காரி" என்று தாத்தா கூறுவார்.தாத்தா பாடல்கள் தான் இசைமேல் ஆர்வத்தை எனக்கு தூண்டியது.
பாட்டி பக்கத்தில் இருக்கிற கோவிலுக்கு என்னைக் கூட்டிட்டு போவாங்க.அங்கே பெரிய ஆலமரம் ஒன்று இருக்கிறது.அந்த ஆலமர விழுதுல ஊஞ்சலாடுவோம்.
பாட்டி வீட்டுக்கு வரும் உறவினர்களுடன் கிளித்தட்டு,கபடி என்று விளையாடி மகிழ்வோம்.அங்கே சாளரங்கள் திறந்து வைத்து தூங்குவதால் ,காற்றோட்டம் இதமாக வந்து நிம்மதியான தூக்கத்தை தரும்.
பாட்டி வீட்டில் ஆடு, மாடு ,கோழி என வளர்த்து வந்தார்.இவற்றிற்கு உணவு கொடுத்து,விளையாடுவது எனக்கு ரொம்ப பிடிக்கும்.அதிகாலையில் எழும்பும்போது சூரிய உதயம்,சேவல் கூவுதல்,காகம் கரைதல்,பட்சிகளின் ரீங்காரம்,கோவில் மணியோசை எல்லா ஒலிகளும் மனதுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும்.
பாட்டி, தாத்தா உறவுகளுடன் ஊரைச் சுற்றி பார்ப்போம்.என்ன ஊரைச் சுற்றிப் பார்த்தாலும் பாட்டி வீட்டில் இருக்கிற சந்தோசம் போல் வராது.பாட்டி ,தாத்தாவின் பாசம் எல்லையற்றது.பாட்டியின் கைப்பக்குவம் தனித்துவமானது.பள்ளி விடுமுறையை பாட்டி வீட்டில் சந்தோஷமாக கழித்தது என் வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவுகள்....
இப்போ விடுமுறைக்கு பாட்டி வீட்டுக்கு செல்கின்றேன்.ஆனால் அங்கே வரவேகற்க அன்பான பாட்டி ,தாத்தா உயிருடன் இல்லை.அவர்களின் உயிரோட்டமான வீட்டில் எங்கள் பொழுதைக் கழித்துவிட்டு திரும்புகின்றோம். அவர்களின் ஆசீர்வாதம் எப்போதும் எங்க கூட இருக்கும்.தாத்தா ,பாட்டி உங்களை மிஸ் பண்றேன்.....