5
« Last post by Madhurangi on March 06, 2026, 04:49:50 AM »
என் உயிர் தோழி Fazee
“எதிர் துருவங்கள் ஒன்றை ஒன்று ஈர்க்கும்” என்ற விதி காந்தத்துக்கு மட்டும் அல்ல ,வாழ்க்கைக்கும் பொருந்தும் என்பதற்கு எங்கள் நட்பே ஆகச்சிறந்த சாட்சி.
இயல்பிலேயே நாங்கள் இரண்டு துருவங்கள்.
எதற்கெடுத்தாலும் தயங்கி நிற்கும் ஒரு பயந்த மனசு நான்.
ஆனால் Fazee,தவறு என்று தெரிந்தால் யாருக்கும் அஞ்சாமல் நிமிர்ந்து பேசும் துணிச்சலின் உருவம்.
எங்களைப் பிரிக்க வேண்டிய இந்த மாறுபாடுகளே, எங்களை இன்னும் வலுவாக இணைத்தது என்பது வாழ்க்கையின் அழகான விந்தை.
எங்க வாழ்கைல நம்ம நட்பை பறைசாற்ற நிறைய தருணங்கள் இருந்தாலும் மறக்க முடியாத ஒரு சம்பவம்னா ,
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே இருந்தபோது, எனக்கு கடுமையான eye infection ஏற்பட்டது. Admission பெற பள்ளிக்குச் சென்றபோது, தொற்று பரவிவிடுமோ என்ற பயத்தில் பலர் என்னை விட்டு விலகி நின்றார்கள்.
அந்த நேரத்தில் நான் உணர்ந்த தனிமை, அந்த வயதில் மிகப் பெரிய வேதனை.
ஆனால் அந்த கூட்டத்தில் ஒருத்தி மட்டும் விலகவில்லை.
அவள் வந்து என் கையைப் பிடித்தாள். அருகில் நின்றாள்.
அவள் — என் Fazee
அன்று அவள் சொன்ன “நீ முடிப்பே” என்ற ஒரு வரி, ஒரு தேர்வை கடக்க உதவியதல்ல; வாழ்க்கையில் என்னை நம்ப கற்றுத்தந்தது.
சில நேரங்களில் நட்பு என்பது பெரிய செயல்கள் அல்ல.
அது சரியான நேரத்தில் துணை நிற்பதுதானே?
எங்க நட்பு இரண்டு பேருக்குள் மட்டுமே இருக்கவில்லை. அது மெதுவாக எங்க குடும்பங்களையும் இணைத்தது.
அவள் பாடும் அந்த ஆழ்ந்த குரல் பாடல்களுக்கு என் அம்மா முதல் ரசிகை.
அவள் வீட்டில் பெருநாள் என்றாலே, வட்டிலாப்பமும் பிரியாணியும் எனக்கென்று ஒரு பங்கு அவங்க உம்மா ஒதுக்கி வச்சுடுவாங்க.
‘உக்கு மாமி’, ‘Fareeha (dha)தாத்தா ’, ‘கம்பளை சாச்சா-சாச்சி’ னு அவ உறவுகளும் என் உறவாகி போனாங்க
திருமணத்திற்குப் பிறகு பல நட்புகள் மெதுவாக மங்கிவிடும் என்று சொல்வார்கள்.
ஆனால் எங்கள் நட்பு அதற்கு விதிவிலக்காக இருந்தது.அவளோட சேர்ந்து எங்க நட்பையும் அவள் கணவன் புரிஞ்சுட்டது இன்னும் எங்கள் நட்பு அதே நெருக்கத்தோட தொடர்வதற்கு ஒரு பெரிய காரணம்.
ஒரு காலத்தில், அவள் கண்டிப்பாக அரபு மொழி ஆசிரியையாக வருவாள் என்று நான் நம்பிக்கையுடன் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் , “நான் குடும்பத் தலைவியாக மட்டுமே இருக்க விரும்புகிறேன்” என்று அவள் சொன்னபோது, எனக்கு சிறிய ஏமாற்றம் தோன்றியது என்பது உண்மை.
ஆனால் வாழ்க்கை எனக்கு ஒரு பெரிய பாடம் கற்றுத்தந்தது.
அவள் தனது குடும்பத்தை சிறப்பாக வழிநடத்தி, கணவரின் தொழிலில் உறுதுணையாக நின்று, அமைதியாக பல வெற்றிகளை கட்டியெழுப்பிய விதம் —
வெற்றி என்றால் பதவி அல்லது பெயர் மட்டும் அல்ல;
ஒரு குடும்பத்தை உறுதியாக நிமிர வைப்பதும் ஒரு பெரிய சாதனையே என்பதை எனக்கு நிரூபித்தது.
இன்று நான் பெருமையுடன் சொல்வேன் —
அவள் எடுத்த பாதை வேறாக இருந்தாலும், அது குறைவானதல்ல;
அது அவளுக்கே உரிய வலிமையான தேர்வு
என்றும் எங்களுக்குள் ஒளிவுமறைவு இருந்ததே இல்லை.
சிறிய வெற்றியோ, மனதை உருக்கும் கவலையோ — என் முதல் அழைப்பு அவளுக்குத்தான்.
அவளுக்கே உரித்தான அந்த ஆழ்ந்த குரலில்
“அடியேய்…” என்று தொடங்கும் அந்த ஒரு வார்த்தை —
எனக்கு மருந்து.
வாழ்க்கையில் பலர் வருவார்கள்.
சிலர் நினைவாக மாறுவார்கள்.
மிக சிலர் மட்டும் — அடையாளமாக மாறுவார்கள்.
எனக்காக எப்பவுமே நிற்கும்.என் வாழ்க்கையின் அந்த அடையாளம் — என் Fazee ❤️