3
« Last post by Luminous on February 24, 2026, 08:05:30 PM »
நாம் அகதிகள்… எங்கள் கலை அல்ல
அரமண்டி ஆழத்தில் நிலம் தொடும் பாதம்
அது தனி மனிதன் நிற்கும் நிலை அல்ல .
சமூகம் தாங்கும் செம்மையின் சின்னம்.
அடவின் அதிர்வில் விழிக்கும் நரம்புகள்
உடலின் வலிமையை மட்டும் தருவதில்லை,
ஒற்றுமையின் ஒலி அதில் ஒளிந்திருக்கிறது.
முத்திரை பேசும் போது
மௌனமும் மொழியாகிறது.
அபிநயம் மலரும் கணங்களில்
அகந்தை கரையும்,
அருவருப்பு உருகும்.
பரதம் கற்ற ஒழுக்கம்
வாழ்க்கை வழியில் நெறியாகும்.
சமநிலை கற்ற உடல்
சமத்துவம் உணரும் மனமாகும்.
இங்கு பெண், ஆண் என்ற பாகுபாடு இல்லை,
இங்கு நிறம் கேட்காது,
இங்கு வர்க்கம் பாராது,
தாளம் மட்டும் கேட்கும்.
அதில் அனைவரும் இணைந்தால்
இசை இனிமை பெருகும்.
முன்னோர் கலை வழியாக
உடலும் மனமும் காத்தனர்.
அதோடு சமூகத்தின் சீரையும்
சிந்தனையின் சுத்தத்தையும் பேணினர்.
இன்று
ஒரு நாட்டை விட்டு
மற்றொரு நாட்டிற்கு செல்கிறோம்
நாங்கள் செல்லவில்லை,
சொந்த நிலத்திலிருந்து
அனுப்பப்படுகிறோம்…
சில நேரம் துரத்தப்படுகிறோம்.
ஆனால்,
எங்கு சென்றாலும்
எங்கள் நாட்டின் பாரம்பரியக் கலையை
நாங்கள் எடுத்துச் செல்வோம்.
நாங்கள் அழிந்தாலும்
எங்கள் கலை அழியாது.
நாங்கள் தான் அகதிகள்
எங்கள் கலை அல்ல.
அது எல்லைகளை கடந்துச் செல்லும்,
அது இதயங்களை இணைக்கும்,
அது மொழி தெரியாத மண்ணிலும்
மனங்களை மலரச் செய்யும்.
இப்படிப் பட்ட பரதத்தை
மக்கள் கலையாய் வளர்த்தால்
நலம் ஒருவருக்கே அல்ல
நாட்டிற்கே பெருகும்.
நானும் அந்த மரபை பின்பற்றி
என் வாழ்வில் ஒளி ஏற்றுவேன்.
வருங்கால சந்ததிக்காக
ஒற்றுமை, ஒழுக்கம், ஒளி எனும்
மூன்று விளக்குகளை எடுத்துச் செல்வேன்.
உடல் உறுதி,
மன அமைதி,
சமூக ஒற்றுமை
இவை மூன்றும் இணையும் போது
பரதம் ஒரு நடனம் அல்ல…
ஒரு நாட்டு நெஞ்சின் நாதம்.
LUMINOUS 🧡💛💚💙💜🧚♀️