3
« Last post by Ninja on Today at 01:59:48 PM »
வருஷத்துக்கு ஒரு முறை நடக்குற குறிச்சிகுளம் திருவிழா. சுத்துப்பட்டு ஊர்ல இருந்துலாம் வருவாங்க. ஏழூரு மக்க சேர்ந்து நடத்துர திருவிழா, ஜே ஜேன்னு இருக்கும். வெளியூர் என்ன, வெளிநாட்டுக்கே போயிருந்தாலும் ஊர்காரங்க குறிச்சிகுளம் திருவிழாக்கு மட்டும் சரியா வந்துடுவாங்க. எங்க சாமி 'திரௌபதி அம்மன்'. துடியான சாமின்னு சொல்லுவாங்க, ஆனா அம்மன் முகத்தை பார்த்தா அவ்வளவு அழகா கருணை பொங்கி வழியும். சின்ன வயசுல ஸ்கூலுக்கு லீவு போட வச்சு கூட்டிட்டு போயிடுவாங்க. கலர் கலரா கடைங்க, விதவிதமா பலூன் பறக்கும், ஊர் முழுக்க கலர் பேப்பர் தொங்கவிட்டிருப்பாங்க. கோலாகலாமா இருக்கும் ஊரே. சின்ன ஊரு தான் ஆனா ஒவ்வொரு வீட்டுக்கும் அஞ்சு பத்து பேரு வெளியூர்ல இருந்து வந்திருப்பாங்க. வாசல்ல வச்சு பொங்கல் வைக்கிறது, சமைக்கிறதுன்னு கலகலப்பா இருக்கும். ஊரு, ஆள் பேரல்லாம் தெரியாட்டியும் எல்லாரும் ஒன்னுமன்னா சேர்ந்து வேலைய பார்த்துக்கிட்டு இருப்பாங்க.
திருவிழாவும் சும்மா கிடையாது, கொடியேத்ததுல ஆரம்பிக்கும் திருவிழா. கொடியேத்தனவுடனே ஊர்காரங்க காப்பு கட்டுவாங்க, அது முடிஞ்சு முத நாளே மொளபாரி போடுவாங்க, கடைசி நாள் அந்த மொளபாரி எல்லாம் மொளைச்சு, முளைப்பாரிக்கட்டு நடக்கும். எல்லாரு வீட்லயும் முளைப்பாரி போடுவாங்க. தினமும் தெருகூத்து நடக்கும், மகாபாரத சொற்பொழிவெல்லாம் நடக்கும். அம்மன் தினமும் வீதி உலா வருவாங்க தேர்ல, பெரிய தேரு கடைசி நாள் தான் வரும். அம்மன் உலா வரும்போது எல்லார் வீட்டு வாசல்லயும் தண்ணி தெளிச்சி கோலம் போட்ருவாங்க. எல்லா தெருமுக்குலையும் நின்னு தீபாரதனை காட்டி விபூதி பூசிவிடுவாங்க. சில வீடுகள்ல தனியா சாமிக்கு தேங்காய் உடைப்பாங்க.
கடைசி நாள் தேர்திருவிழாக்கு முன்னமா தீமிதி திருவிழா நடக்கும். நான்லாம் சின்ன வயசுல தீமிதினா கொத்திக்கிற நெருப்புல நடந்து வருவாங்கன்னு நினைச்சிப்பேன், ஆனா தீங்கங்கும் சாதாரணமில்ல கொழுந்துவிட்டு எரியிற தீ மாதிரி தான், கங்கு போடும்போதே அனலடிக்கும். அந்த தீமிதியும் மொட்ட வெயில்ல தான் நடக்கும். படத்துல காட்ற மாதிரி மெதுவாலாம் நடந்து வந்துட்டு இருக்கமாட்டாங்க. திபுதிபுதிபுன்னு ஓடிவருவாங்க அந்த பக்கத்துல இருந்து இந்த பக்கத்துக்கு. சின்ன பசங்களை பார்க்க கூடாதுன்னு சில சமயம் வீட்ல இருக்கவங்க இழுத்துட்டு போயிருவாங்க.
அப்புறம் வரும் பாருங்க இந்த திருவிழாவோட ஹைலட்டே கோவில் பக்கத்துல இருக்கிற க்ரவுண்ட்ல பெரிய சிலை மாதிரி செம்மண்ண புடிச்சி வச்சிருப்பாங்க படுத்த வாக்குல, சும்மா சின்ன செலயெல்லாம் இல்ல ரொம்ப பெருசா புடிச்சி வச்சிருப்பாங்க. பார்க்கவே பயங்கரமா இருக்கும். இத நாங்க அரவான் களபலின்னு சொல்லுவோம். ஊர் கூடி பொங்கல் வச்சு முடிச்ச அப்புறம், அரவான் பலி கொடுக்கிறது நடக்கும். சின்ன பசங்க பார்க்க கூடாதுன்னு தான் சொல்லுவாங்க ஆனா நாம என்னைக்கு கேட்டிருக்கோம். பெரிய சாமி அரிவாள வச்சு அரவான் மேல இருக்க கோழிய வெட்டி அரவான பலி கொடுத்து அதுல ரத்த சாதத்த பிசைஞ்சு சுத்தி இருக்க எல்லார் மேலயும் வீசுவாங்க.
அந்த களபலிய பார்க்கவே கூட்டமான கூட்டமா இருக்கும். பக்கத்துலயே ஏரிக்கரை வேற, இளந்தாரி பசங்கள்லாம் மரத்துமேல ஏறி உட்கார்ந்துட்டு பார்ப்பாங்க, சின்னபசங்கள்லாம் அம்மா, ஆத்தா புடவைக்கு பின்னாடி ஒளிஞ்சிட்டு பார்ப்பாங்க. பூசாரி சாமியாடுறத பார்க்கவே பயங்கரமா இருக்கும். அப்புறம் ஊர் பொம்பளைங்கள்லாம் முளைப்பாரி தூக்கிட்டு வந்து கோவில்ல பொங்கல் வச்சு சாமி கும்பிடுவாங்க. தேர் வடம் பிடிக்கவும் அவ்வளவு கூட்டமா இருக்கும். ஆடி அசஞ்சு வர்ர தேர மாதிரி மனசும் இதையல்லாம் அச போடுது.