5
« Last post by Luminous on March 05, 2026, 10:09:58 PM »
1 முதல் 10ஆம் வகுப்பு வரை நான் படித்த காலத்துக்கு சாட்சி என் தோழி உஷா. தினமும் காலை எங்கள் வீட்டுக்கு வந்து என்னை டியூஷனுக்கு அழைத்து போவது அவள்தான். அவள் வந்த பிறகுதான் நான் எழுந்திருப்பேன்.
அதற்குள் என் அம்மா ஆரம்பித்து விடுவார்கள்
“அந்த குழந்தை காலையிலேயே எழுந்து ரெடி ஆகிட்டு டியூஷன் போக வருது… நீ இன்னும் தூங்கிக்கிட்டே இருக்கே!” என்று.
நான் எழுந்து ரெடி ஆகும் வரை அம்மா “அர்ச்சனையை ஆரம்பித்து விடுவாங்க
உடனே நான், அம்மா நம்ம வீட்டுக்கு வந்தவளுக்கு எதாவது குடிக்க கொடுக்கணுமே என்று சொல்வேன். அதுவே எங்களுக்கு தினமும் காபி கிடைக்க காரணம்.
அந்த சிறிய காலையிலான சம்பவங்களே இன்றும் மனதில் இனிமையாக நிற்கின்றன.
4ஆம் வகுப்பில் நடந்த ஒரு சம்பவம் இன்னும் மறக்க முடியாதது. நான் பள்ளியில் முதல் மாணவி. சுதந்திர தினத்தன்று கலெக்டர் வந்து பரிசு வழங்கினார். ஆனால் பட்டியலில் தவறுதலாக என் பெயருக்கு பதிலாக உஷாவின் பெயர் எழுதப்பட்டிருந்தது.
பரிசு வாங்க அவள் மேடைக்கு சென்றதை பார்த்தவுடன் எனக்கு மயக்கம் வந்து விழுந்துவிட்டேன்.
அடுத்த நாள் ஆசிரியர் உண்மை அறிந்து, பரிசு பெட்டி எனக்கு கொடுத்தார். அதில் இருந்த பொருட்களை 2ஆம், 3ஆம் இடம் பெற்றவர்களுக்கும் பகிர சொல்லியபோது எனக்கு கோபம் வந்தது.
நான் அதை வீட்டில் வைத்துவிட்டேன். சில நாட்கள் ஆசிரியர் என்னை கடிந்து கொண்டாலும், அதனால் எங்கள் நட்பு குறையவில்லை.
10ஆம் வகுப்பு வரை ஒன்றாகப் படித்தோம்.
பின்னர் பள்ளி, கல்லூரி, வீடு, எல்லாம் மாறிவிட்டது. ஒரு நாள் கல்லூரிக்கு செல்லும் வழியில் அவளை திடீரென சந்தித்தேன். பல வருடங்கள் கழித்து சந்தித்த மகிழ்ச்சி. ஆனால் ஒரு சின்ன சம்பவம் அவள் நான் யார்? என்று கேட்டபோது, எனக்கு பெயர் நினைவில் வராமல் போனது. அதனால் அவள் வருத்தப்பட்டு பேசாமல் சென்றுவிட்டாள். அந்த நாள் முதல் அவளை நான் மிகவும் மிஸ் செய்தேன்.
சமீபத்தில், கடந்த மாதம் மீண்டும் சந்தித்தோம். நானாக முன் வந்து உன் பெயர் உஷா தானே? என்று கேட்டேன். அவள் தலையில் மெதுவாக அடித்துக் கொண்டு சிரித்தாள்.
முகத்தில் நிறைந்த சந்தோஷம். நாங்கள் நீண்ட நேரம் பேசினோம், ஒன்றாக சாப்பிட்டோம். மீண்டும் பழைய பாசம் திரும்பிவிட்டது.
இப்போது அவள் மீண்டும் என் வாழ்க்கையில் நெருக்கமான தோழி. சில நட்புகள் தூரமானாலும், காலம் கடந்தாலும், மனதில் பதிந்த இடம் மாறாது என்பதை உஷா எனக்கு உணர்த்தினாள்.
எனக்கு சத்யா என்ற இன்னொரு நெருங்கிய தோழி இருக்கிறார். நாங்கள் இருவரும் கல்லூரியில் படித்த காலத்தில், அவளுடைய அப்பா புற்றுநோயால் இறந்துவிட்டார்.
சத்யா எங்கள் துறையின் டாப்பர்.
மிகவும் புத்திசாலி. நான் அவளுடன் ஒப்பிடும்போது சாதாரணமாக இருப்பவள். உண்மையில், எங்களுடைய குணாதிசயங்களும் முற்றிலும் வேறுபட்டவை. அவள் மிகவும் அமைதியானவள்.
நான் பேசிக்கொண்டே இருப்பவள். அவள் எப்போதும் ஒழுக்கமும் நேர்த்தியும் கொண்டவர். வகுப்பில் நாங்கள் அதிகமாக பேசிக்கொள்ளவில்லை. என் நண்பர்கள் குழு சற்று சுறுசுறுப்பானவர்கள். ஆனால் அவள் எல்லோரும் நல்ல பெண் என்று சொல்லும் வகையான அமைதியான குணம் கொண்டவள்.
அந்த நேரத்தில் அவளுடைய அப்பா திடீரென இறந்ததால், அவள் மிகவும் மனம் உடைந்திருந்தாள். அதே சமயத்தில் செமஸ்டர் தேர்வுகளும் இருந்தன. தேர்வு எழுத அவள் வந்திருந்தாலும், மிகவும் கவலையுடன் இருந்தாள். ஒருநாள் பேருந்தில் நான் அவளுடன் அருகில் அமர்ந்திருந்தேன்.
அவள் சாப்பிடாமல் அழுதுகொண்டே இருந்தாள். அந்த நாளில் நான் எடுத்துவந்த மதிய உணவை அவளுடன் பகிர்ந்து கொடுத்தேன். அதன்பிறகு அந்த செமஸ்டர் தேர்வு முடியும் வரை, தினமும் காலை உணவும் மதிய உணவும் சேர்த்து அவளுக்காகவும் நான் எடுத்துச் செல்வேன். அந்த செமஸ்டரில் கூட அவள்தான் டாப்பராக வந்தாள்.
இதையெல்லாம் நான் இப்போது நினைவுகூர்வதற்குக் காரணம் ஒன்று உள்ளது. சமீபத்தில் ஒரு தோழியின் திருமண வரவேற்பில் நாங்கள் அனைவரும் சந்தித்தோம். அப்போது சத்யா என்னிடம் நேராகச் சொல்லவில்லை.
ஆனால் அந்த நாட்களில் நான் அவளுக்கு தினமும் சாப்பாடு கொண்டு வந்ததை மற்ற நண்பர்களிடம் மிகவும் பாராட்டி பேசினாள்.
இப்போது அவள் ஒரு மதிப்புமிக்க கல்வி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாள்.
அந்த கடினமான காலத்தில் நான் செய்த அந்த சிறிய உதவியும் அவளுக்குப் பெரிய ஆதரவாக இருந்தது என்று கூறியதாக நண்பர்கள் சொன்னார்கள்.
நான் செய்தது மிகவும் சிறிய உதவிதான் என்று நினைத்தேன். ஆனால் அது அவள் மனதில் இவ்வளவு பெரிய நினைவாக இருந்தது என்று கேள்விப்பட்டபோது எனக்கு ஒருவிதமான மகிழ்ச்சியும் கண்களில் நீரும் வந்தது.
நமக்குச் சிறியதாகத் தோன்றும் உதவியும், சரியான நேரத்தில் கிடைத்தால் அதை பெறும் ஒருவருக்கு மிகப்பெரியதாக உணரப்படலாம் என்பதை அப்போது உணர்ந்தேன்.
இப்போது நானும் சத்யாவும் நல்ல நெருங்கிய நண்பர்களாக இருக்கிறோம். இந்த அனுபவத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது. பொறுமையாக கேட்டதற்கு நண்பர்களுக்கு நன்றி.
💜
LUMINOUS 😇💙💚💛🧡💜💐