10
« Last post by Ninja on April 20, 2026, 11:32:19 PM »
கனவுகள், ஆசைகள், ஏக்கங்கள் இதெல்லாம் தான் ஒரு மனுஷனோட வாழ்க்கை குறிக்கோளா இருக்கும். கனவை அடையனும், ஆசைபட்டது கிடைக்கனும், நடக்கனும், இதெல்லாம் தான் நம்ம வாழ்க்கையோட வெற்றியா நினைக்கிறோம். ஆனா அது நம்மளோட ஆசையா, நம்மளோட கனவாங்கிறது ரொம்ப முக்கியமான விஷயம். ஏன் இப்படி சொல்றேன்னா, சின்ன வயசுல அம்மா ஆசைப்பட்டாங்க, ‘நான் டாக்டர் ஆகனும்னு’ நானும் அவங்க ஆசைய என்னோட கனவா மாத்திக்கிட்டேன். அந்த கனவை நோக்கி நான் நடந்தேன், ஓடல.. ஏன்னா அது என்னோட கனவா இருக்கல, அதனால அந்த கனவு மேல எனக்கு அக்கறை இல்லாம இருந்துச்சு.
வயசுக்கே இருக்கிற விளையாட்டுத்தனம், என்னுடைய குறும்புத்தனம்னு வாய்ப்பும், திறமையும் இருந்தும் எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சேன். அம்மாவோட ஆசையான என்னோட கனவை என்னால அடைய முடியல, என்னோட தோல்வியற்ற தோல்வி அது. அதை தோல்வின்னே என்னால உணர முடியல. ஆனா காலேஜ் சேர்ந்ததும் எனக்குன்னு ஒரு கனவு உருவாச்சு. ஒரு கனவில்ல பல கனவுகள். அந்த கனவுகளை நோக்கி ஓடினேன். எப்படியும் என்னுடைய ஆசைகளை அடைஞ்சிருவேன்னு உறுதியா நம்பினேன். நான் என்ன மாதிரியான பெண்மணியா வரனும் அந்த கனவுகள் தான் என்னை கொஞ்சம் கொஞ்சமா செதுக்கிட்டு இருந்துச்சுன்னே சொல்லலாம்.
ஆனா உண்மையில நடந்தது என்னனா, என்னால அந்த கனவை அடைய முடியல. எனக்கு ஆசிரியர் ஆகனும்னு ஆசை, சின்ன வயசுல இருந்தே யாருக்காவது ஏதாவது பாடத்துல சொல்லி தரனும்னா என்கிட்ட தான் வருவாங்க. அப்போலாம் எனக்கு புரியல இது தான் நம்மளோட திறமை. இது தான் நம்ம கனவா, ஆசையா மாற போகுதுன்னு. காலேஜ் படிக்கும்போது தான் என் கனவுகளுக்கு சிறகு முளைக்க தொடங்கிச்சு. இல்ல, இல்ல அந்த சிறகுகளை நானே வளர்த்தேன். பார்த்து பார்த்து அவ்வளவு ஆசையா. காலேஜ் முடிச்சதும் நிதர்சனம் வேற மாதிரி இருந்துச்சு.
முதுகலை பட்டம் படிக்க சொன்னாங்க, அதையும் படிச்சேன், ஆனா அப்படி படிக்கும்போது அந்த படிப்புக்கான செலவை நானே ஏத்துக்கிற மாதிரி இருந்ததால வேலைக்கு போக வேண்டிய கட்டாயம் ஆகிருச்சு. முதுகலை இரண்டாம் வருஷம் போகும்போதே என்னால வேலைல படிப்புலன்னு முழுமையா கவனம் செலுத்த முடியல. என் கனவுகள் தேய தொடங்குதோன்னு ரொம்ப சந்தேகமாவும், வருத்தமாவும் இருந்துச்சு. முதுகலை முடிச்சதும், பி.எச்.டி முடிச்சிட்டு வர சொன்னாங்க.. அவ்வளவு தான். ஆசையா ஆசையா வளர்த்த சிறகை நானே உடைச்சிக்கிட்டேன். கடமைகளும், பொறுப்புகளும் என் கனவையும் ஆசையையும் தூர வைக்க சொன்னுச்சு. கனவை நோக்கி ஓடிட்டு இருந்த நான், கடமைகளை நோக்கி ஓட ஆரம்பிச்சேன்.
இன்னும் ஓடிக்கிட்டே தான் இருக்கேன், ஆனா இப்படி ஓடின ஓட்டத்துல என் கனவு என்னன்னே பல சமயம் மறந்து போயிடுது. தோல்வி எது தெரியுமா? நாம அடைய முடியாத கனவு தான் தோல்வி. அந்த கனவு கானல் நீரா மாறுறதை நாமளே பார்க்கிறது தான் தோல்வி. இந்த தோல்வி என் வாழ்க்கைய மாத்துச்சா இல்லையான்னு கேட்டா.. எல்லா தோல்வியும் வாழ்க்கைய மாத்துறது இல்ல.. சில தோல்விகள் வாழ்க்கைய கத்துக்கொடுக்கும். என் தோல்வியும் அப்படி தான்.
என் கனவை நான் இப்ப அடையாம இருக்கலாம், ஆனா எப்பவும் அது என் மனசுல அடங்காத குதிரையா ஓடிட்டே தான் இருக்கும். எந்த கனவு நம்மள தூங்கவிடாம செய்யுதோ அந்த கனவு எதிர்காலத்தில நமக்கு சாத்தியமான ஒன்னா ஆகியிருக்கும். உங்களுக்கும் அப்படி தானே?