Author Topic: ரசித்த சிறந்த கதை சொல்லிகளின் கதைகள்  (Read 6251 times)

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 35
  • Total likes: 35
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
நாயனம் - ஆ.மாதவன்

இறந்தவருக்கு ஒன்றும் தெரியாது. புதியமல் ஜிப்பா, வேஷ்டி அணிந்து கொண்டு, நெற்றியில் மூன்று விரல் திருநீற்றுப் பட்டையுடன், நீட்டி நிமிர்ந்து  அந்திமத்துயில் கொள்கிறார். கறுப்பு உடம்பு, வயசாளி, மேல்வரிசைப் பல் கொஞ்சம் பெரிசு, உதட்டை மீறி ஏளனச் சிரிப்பாக அது வெளித் தெரிகிறது. தலைமாட்டில் குத்து விளக்கும், நுனி வாழையிலையில் நிறை நாழி பழமும் ஊதுவத்தியும், சிவப்பு அரளிப்பூ மாலையுமாக ஜோடித்திருக்கிறார்கள். சாவு மணம் ஊதுவத்தியிலிருந்து கமழ்கிறது.
‘யென்னைப் பெத்த யப்போவ்.. யெனக்கினி ஆரிருக்கா?... என்று கால்மாட்டில் பெண்அள் கும்பலிலிருந்து நாற்பது வயசுக்காரி கறுப்பி முட்டி முட்டி அழுகிறாள். அவளுக்கு பச்சைக் கண்டாங்கிதான், பொருந்துகிறது.
சாயங்காலம் நெருங்கி கொண்டிருக்கிறது. தென்னந் தோப்புக்கு அப்பால், வாழைப் பண்ணையைத் தாண்டி, பாறைகள் நிறைந்த ஆற்றின் புது வெள்ளத்தின் குளிரைக் காற்று சுமந்து வருகிறது. காக்கைகள் கூட்டுக்குப் பறந்து போகின்றன. தாழைப்புதர் வேலிகளின் நடுவில்- வாய்க்கால் கரையிலிருந்து , முற்றிய கமுகு மரத்தை வெட்டிச் சுமந்து கொண்டுவந்து, முற்றத்தில் பாடை ஏணி தயாரிக்கிறார்கள். பிளந்த கமுகுமரம், வெளீரென்று பொள்ளையாக முற்றத்தில் துண்டாகக் கிடக்கிறது.
வாசலில், இளவுக் கூட்டத்தினரிடையே, செத்தவரின் தடியன்களான ஆண்பிள்ளைகள் இரண்டு அழுக்குத் துண்டை அணிந்து கொண்டு சுறுசுறுவென்று , எண்ணெய்ச் சிலைகள் போலத் தலைகுனிந்து அமர்ந்திருக்கிறர்கள். சின்னவன், கொஞ்சம் அழுகிறான். பெரியவன் முழங்கையைக் கன்னத்துக்கு முட்டுக் கொடுத்துக் கூரையின் துலாக் கட்டையைப் பார்த்துக்கொண்டிருக்கிறான். உள்ளேயிருந்து வரும் ஒப்பாரி, இப்பொழுது பழக்கமாகிச் சாதாரணமாகி விடுகிறது.
“ இப்படியே இருந்தாப் பொழுதுதான் இருட்டும். இருட்டு வருமுன்னே இதோ அதோன்னு காரியத்தை முடிப்பம்; என்ன தங்கப்பா??”
“ஆமாமாம். நாயனக்காரனைத்தான் இன்னம் காணோம். யாரு போயிருக்காங்க அழைச்சார?”
“வடிவேலும் சின்னண்ணணும் போயிருக்கிறாங்க. மேலாத்தூரிலே இன்னிக்கு ஆம்புட்றது கஸ்டம் . அல்லாம், முத்துபட்டி திருவிழாவுக்குப் போயிருப்பாங்க.”
“சின்னண்ணன் போயிருக்கிறான்லியா அப்போ நிச்சயம் யாரையாவது இட்டுக்கிட்டு வருவான். வரட்டும். அதுக்குள்ளியும் மத்த வேலைங்களெப் பாக்கறது.”
மழைவரும் போல் இருந்தது. அந்தியிருள் குளிர ஆரம்பித்தது. கியாஸ் விளக்கொன்றைச் சுமந்து கொண்டு , வயல் வரப்பு வழியாக வாய்க்காலைத் தாண்டி ஒருவன் கரையேறி வந்து கொண்டிருக்கிறான். விளக்கின் ஒளியில், வாழை மரமும், பச்சை ஓலைய்ப் பந்தலும் பெரிய பெரிய நிழல்களாக வளர்ந்து திரைக்காட்சி போல மாறி மாறிப் போயிற்று.
விளக்கு சுமந்து வந்தவன், வேர்க்க விறுவிறுக்க முற்றத்தில் ஸ்டாண்டு மேல் விளக்கை இறக்கி வைத்தான். விளக்கின் உஸ்... உஸ்..! உள்ளே அழுகை ஓய்ந்து போயிருந்தது. குசுகுசுத்த குரலில் பெண்கள் வக்கணை பேசுகிறார்கள். ஊதுவத்தி இன்னும் மணமாக மணத்துக்கொண்டு புகை பரத்துகிறது.
விளக்கு வந்துவிட்ட வசதியில் முற்றத்துச் சந்தடி, அங்கிங்காக விலகி நின்றுகொண்டு இருட்டில், தெரியாத வயல் வரப்பைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. சலிப்பு- எல்லாரது முகத்திலும் அசட்டுக்களையை விரவிவிட்டிருக்கிறது. சும்மாவேனும் எத்தனை தரம் வெற்றிலை போடுகிறது? எத்தனை தரம் பீடி பிடிக்கிறது?
“விடிஞ்ச மொதக்கொண்டு ஒண்ணுமே சாப்பிடலே. எப்போ இந்தக் காரியம் முடியறது, குளிச்சு மாத்திச் சாப்பிடுறதோ? சரியான தொந்தரவு போ.”
யாரோ ஓராள் இருட்டைப் பொத்துக்கொண்டு வெள்ளையாக நடையும் வேகமுமாக ஓடிவந்தான்.
“சின்னண்ணனும், வடிவேலும் தட்றாம்பட்டிக்குச் சைக்கிள்லே போயிருக்கிறாங்க. மேலாத்தூரிலே யாரும் நாயனக்காரங்க ஆப்டலியாம். சேதி சொல்லச் சொன்னாங்க.” வந்தவன்  பந்தலையும்- கியாஸ் விளக்கையும்- முசுமுசுத்த கும்பலையும் - உள்ளே பெண்களீன் அர்த்தமற்ற அலமலங்களையும் - மாறி மாறி ப் பார்த்துவிட்டுப் பீடிக்கு நெருப்புத் தேடி ஒதுங்கினான். எப்பிடியும் தட்றாம்பட்டி போய் ஆளை இட்டுக் கொண்டுவர இன்னும் ஒரு மணியோ , ஒன்றரை மணியோ நேரமாகலாம், கும்பலின் முகம் சுணங்கியது.
“இந்தக் காலத்திலே, யாருப்பா நாயனமும் , பல்லக்கும் வச்சிக்கிறாங்க? ஏதோ அக்கம் அசலுக்கு ஒரு தொந்தரவு இல்லாமெ, காரியத்தை முடிக்கிறதெ விட்டுவிட்டு? இப்போ பாரு , எத்தினிஎ பேரு இதுக்கோசரம் காத்துக் கெடக்கிறாங்க ?”
”இல்லே, மூத்த பிள்ளைதான் சொல்லிச்சிது. செத்தவரு முன்னாடியே சொல்லி வச்ச சங்கதியாம். தமக்கு , சுடுகாடு யாத்திரை தவுல் நாயனக் கச்சேரியோட நடத்தணுமினு. அதாம் அந்த பொண்ணும் அழுகையா அழுதிச்சி. செத்தவங்க ஆத்துமா நிம்மதியாப் போகட்டுமேன்னு தான், இப்போ, மேலாத்தூர் போய் அங்கியும் ஆம்புடாமே தட்றாம்பட்டி போயிருக்காங்களாம்.”
“நல்ல ரோதனையாப் போச்சு. செத்தவங்களுக்கென்ன? அவுங்க போயிட்டாங்க. இருக்கிறவங்க களுத்து அறுபடுது “.
மழை வந்தேவிட்டது. ஹோவென்று . கூரை மேலும் பச்சைப் பந்தல் மேலும் இரைச்சலிட்டது. சுற்றிலும் கமுகு, தென்னை , தாழைப்புதூர் மேல் எல்லாம் கொட்டியதால் இரைச்சல் பலமாகக் கேட்டது. கியாஸ் லைட்டைத் திண்ணைமேல் தூக்கி வைத்தார்கள். திண்ணையில் அமர்ந்திருந்தவர்களின் தலை முண்டாசும், தலையும் பெரிய நிழல்களாகச் சுவரில் உருக்குலைந்து தெரிந்தன.
உள்ளே ஏதோ குழந்தை அடம்பிடித்து அழத் துவங்கியது. தாய்க்காரி பூச்சாண்டியைக் கூப்பிடுகிறாள். பிய்த்து எறிவேன் என்கிறாள். ‘சனியனே , உயிரை வாங்காதே’ என்கிறாள். குழந்தை நிறுத்தாமல் அழுகிறது.
எல்லோர் முகத்திலும் ,சலிப்பும், விசாரமும், பொறுமை இழந்த வெறுப்பும் நிறைந்திருக்கின்ற்ன. தலை நரைத்த முக்கியஸ்தர்களுக்கு யாரை, என்ன பேசி, நிலைமையை ஒக்கிட்டு வைப்பது என்று தெரியவில்லை. எல்லாரும், இருட்டாக நிறைந்து கிடக்கும் வயலின் வரப்புப் பாதையையே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். மழை சட்டென்று ஓய்கிறது. இரைச்சல் அடங்குகிறது. கூரையிலிருந்து தண்ணீர் சொட்டுகிறது. முற்றத்தில் தண்ணீர் தேங்கி வழிந்து போகிறது.
இதற்குள்ளியும் பாடை தயாராகி , உடம்பு சிவப்புப் பட்டு மூடிக்கொண்டு , நீட்டி நிமிர்ந்து- பந்தலில் தயாராகி இருந்தது. நீர்மாலைக்குப் போன புத்திரர்கள் இரண்டு பேரும், மழையில் குளித்துத் தலைமேல் வெண்கல ஏனத்தைச் சுமந்து கொண்டு, பிணத்தின் தலைமாட்டில் வந்து, முக்காடிட்ட முண்டச்சி போல நின்றார்கள்.
‘பொம்மனாட்டிங்க குலவை போடுங்க தாயீ. அதுக்கும் சொல்லியா தரவோணும்?’ என்று தலையாரி குரல் கேட்க, தாமதித்து நின்றவர்கள் போல் கிழவிகள். கொலு கொலுவென்று ஒப்பாரி போலவே குலவையிட்டார்கள். இருட்டில் ஒதுங்கி நின்றவர்  ஒன்றிரண்டு பேர் கூடப் பந்தலுக்குள் வந்து  திண்ணையில் நுழைந்தார்கள்.
‘வாய்க்கரிசி போட இன்னும் , உள்ளே பொம்மனாட்டிக இருந்தா வந்து போடலாம். நேரமிருக்குது” என்றார் தலையார்.   
” அட அதெல்லாம் எப்பவோ முடிஞ்சு போச்சே. இன்னும் புதுசாத்தான் ஆரம்பிக்கோணும். புறப்படுறதை விட்டுப்பிட்டு , அடியைப்புடிடா ஆபயாண்டீன்னு முதல்லே இருந்தே ஆரம்பிக்கோணுமா? தம்பி , சின்னத்தம்பு உன் கைக்கடியாரத்தலே மணியென்ன இப்போ?”
“ மணியா? அதெல்லாம் ரொம்ப ஆச்சு. ஒம்போது ஆகப்போவுது. எப்போ நாயனக்காரங்க வந்து எப்போ பொறப்படபோறமோ?’
எல்லோரது கண்களும் வயல் வரப்பையே பார்த்துக் கொண்டிருந்தன . இப்போது - மரண சம்பவத்தை விட , நாயனந்தான் முக்கியப் பிரச்சனையாக அத்தனை பேர் மனத்திலும் பெரிய உருக்கொண்டு நின்றது.
“யாரோ வர்ராப்போல இருக்குதுங்களே” என்று ஒரு குரல் தொலைவில் இருட்டுப்பாதையைப் பார்த்துச் சந்தேகப்பட்டது.
“ஆமாண்ணோவ், வர்ராங்க போல , யாரப்பா அது வெளக்கை சித்தெ தூக்கிக்கொண்டு போங்களென். மழையிலே சகதியும் அதுவுமா கெடக்குது. சின்னண்ணன் தான், தோள் அசைப்பைப் பார்த்தா தெரியுதில்லே”.
எல்லாரது முகங்களும் தெளிவடைந்தன. இடுப்பு வேஷ்டியை முறுக்கிக்கொண்டு, முண்டாசைச் சரி செய்துகொண்டு எல்லாரும் எழுந்து தயாராகி நின்றனர். சில ஆண் பிள்ளைகள் உள்ளே பெண்களிடம் போய் விடை பெற்று வந்தனர். உள்ளே விட்டிருந்த அழுகை ‘யங்கப்போ’ என்று பின்னும் ஈனமாக எழுந்தது.
கியாஸ் விளக்கு வட்டத்தில், சின்னண்ணனும் வடிவேலுவும் வென்றுவந்த வீரர்கள் போல நின்றனர்.
“ அட , மேலாத்தூரிலே போனா அங்கே ஒரு ஈ, காக்கை இல்லெ. படு ஓட்டமா ஓடினோம். வீரண்ணன் சேரியிலே, ஒரு நல்ல வித்வான். மாரியம்மன் கொடையப்போ கூட நம்மூருக்கு வந்து வாசிச்சான். முனிரத்தினம்ன்னு பேரு . எப்படியும் அவரெ இட்டாந்திராலாம்ன்னு போனா. மனுசன், சீக்கா படுத்த படுக்கையா கெடக்கிறான். விடா முடியாதுன்னு, சைக்கிளைப் உடிச்சோம். தட்றாம்பட்டுலே, தோ... இவங்களெத் தான் புடிச்சுக் கொண்ணாந்தோம். சமத்திலே ஆள் ஆம்பிட்டதே தம்பிரான் புண்ணியமாப் போச்சு.”
எல்லோரும் பார்த்தார்கள்.
காய்ந்து போன மூங்கில் குழாய் போல, சாம்பல் பூத்த நாயனத்தை வைத்துக்கொண்டு , மாறு கண்ணும் குட்டைக் கிராப்பும், காவி மேலாப்புமாக, ஒரு குட்டை ஆசாமி, ‘இவனா?’ என்று கருவுவதற்குள் , ‘இவனாவது அந்த நேரத்தில் வந்து தொலைஞ்சானே’ என்ற சமாதானம் , எல்லாருக்கும் வெறுப்பை மிஞ்சி எட்டிப் பார்த்தது. தவுல்காரன், அடுப்படி, தவசிப்பிள்ளை மாதிரி வேர்க்க விறுவிறுக்க , ‘ஐயோ’ என்ற பார்வையில், முன்னால் வரமாட்டேன் என்று பின்னால் நின்றான்.
‘வெட்டியானெக் கூப்பிடுறது. நெருப்பெல்லாம் ரெடி..சங்கை ஊதச்சொல்லு பொறப்படலாமா? உள்ளே கேட்டுக்கோ.’
தாறுடுத்திக் கொண்டு பாடைப்பக்கம் நாலுபேர் தயாரானார்கள். கருமாதிக்கான பிள்ளைகள் இரண்டும், பெரியவன் தீச்சட்டியை வெட்டியான் கையிலிருந்து வாங்கிக் கொண்டான். சின்னவன், ஈர உடையில் , வெட வெடவென்று நடுங்கிக்கொண்டு , பெரியவன் பின்னால் செய்வதறியாமல் நின்றான்.
“பொறப்படுங்கப்பா. தூக்கு” என்ற கட்டளை பிறந்ததும் தாறுடுத்த நால்வரும் பாடையின் பக்கம் வந்தார்கள். உள்ளேயிருந்து பெண்கள், முட்டிக்கொண்டு தலைவிரி கோலமாக ஓடிவந்தார்கள். “யெங்களெ உட்டுட்டுப் போறீங்களே?” என்று கதறல் சகதியும் அதுவமாகக் கிடந்ததினால் விழுந்து அழுவதற்கு எல்லாரும் தயங்கினார்கள். பெண் மட்டும். ‘ங்கப்போ எனக்கினி யாருருக்கா” என்று பாடையின் கால்மாட்டில் வந்து விழுந்தாள்.
”கோவிந்தா!கோவிந்தா!” என்ற கோஷத்துடன் பாடை தோளில் ஏறிற்று. “யாருப்பா அது நாயனம். உம் ... சும்மா உங்களைப் பார்க்கவா கூட்டியாந்தோம் முன்னாடி போங்க. வெளக்குத் தூக்கறவன் கூடவே போங்க. மோளத்தைப் பிடிங்க..”
நாயனக்காரன் முகம் பரிதாபமாக இருந்தது. அழைத்துவந்த வேலண்ணன் அவன் காதருகில் எதோ சொன்னான். நாயனக்காரன் மெல்ல உதட்டில் வைத்து, “பீ ப்பீ.. ‘ என்று சுத்தம் பார்த்தான். ஊர்வலம் , சகதி வழுக்கும் வரப்புப்பாதையில் போய்க்க்கொண்டிருந்தது. கியாஸ் விளக்கின் ஒளியில் எல்லார் நிழலும் தாழைப் புதரின் மேலே கமுகு மர உச்சி வரை தெரிந்தது.
’கூ..ஊஉ..ஊஉ..’ என்றூ, வெட்டியானின் இரட்டைச் சங்கு அழுதது. நாயனக்காரன் வாசிக்க ஆரம்பித்திருந்தான். ‘பீ..பீ’ என்ற அவலம் பரிதாபகரமாக இருந்தது. தவுல்காரன் சந்தர்ப்பம் தெரியாமல் வீறிட்ட குழந்தைபோல-வாத்தியத்தைத் தொப்புத் தொப்பென்று மொத்தினான்.
விவஸ்தை கெட்ட மழை. வருதடி வைத்த அலமங்கலும், கீழே வழுக்கும் வரப்புப் பாதையும், தாழைப்புதரும், கௌமுகின் தோப்பின் உச்சியில் தங்கி நின்ற குளிர்ந்த இருட்டும், மரணமும் , பசியும், அசதியும், வெறுப்பும்,துக்கமும், எரிச்ச்சலும், கோபமும், எல்லாருடைய உள்ளங்களிலும் நாயனத்தின் கர்ண கடூரமான அபஸ்வரமாக வந்து விழுந்து வயிறெரியச் செய்தது.
கியாஸ் விளக்கு முன்னால் போய்க் கொண்டிருந்தது.தீச்சட்டியில் குமைந்த வறட்டியின் புகையால் சங்கு ஊதுபவன் செருமினான். அனைவரும் பேச்சற்ற அவல உருவங்களாக நிழல்களை நீளவிட்டு நடந்து கொண்டிருந்தார்கள்.
‘பீப்பீ..பீ..பீ’   
எல்லாருக்கும் வயிற்றைப் புரட்டியது. நெஞ்சில் ஏதோ அடைத்துக் கொண்டது போல சிரமமாக வந்தது. தலையைப்பிய்த்தது.
பின்னும் , ‘பீ..ப்பீ..பீ..பீ!   
ஊர்வலம், ‘சனியனே’ என்ற பாவனையில் அவனையே பார்த்துக்க் கொண்டு வழி நடந்தது. யாராருக்கெல்லாமோ பாதை வழுக்கியது. பின்னால் நடந்து வந்து கொண்டிருந்த சிறுவன் ஒருவன், சக்தி தேங்கிய பள்ளத்தில் விழுந்தான். உடன் வந்த ஒருவர் , அவனைத் தூக்கிவிட்டுவிட்டு . ‘நீயெல்லாம் அங்கே எதுக்கோசரம் வரணும் , சனியனே?” என்று எந்த எரிச்சலையோ அவன் மேல் கோபமாக் கொட்டினார்.
ஆற்றங்கரை வரப்பு ஆரம்பமாகியிருந்தது. சிள் வண்டுகளின் இரைச்சல் கேட்டது. அக்கரையில், கடந்து வஞ்சித்துறையிலிருந்து தவளைகள், ‘குறோம் குறோம்’ என்று  எதிர்ப்புக்குரல் எழுப்பிக் கொண்டிருந்தன. குட்டி குட்டிக் கறுப்புப் பன்றிகள் போலப்பாறைகள் நிறைந்த ஆற்றில், புதுவெள்ளம் இரைச்சலோடு ஒழுகும் அரவம் கேட்டது. குளிர் , இன்னும் விறைப்பாக உடல்களைக் குத்திற்று.
சுடுகாட்டுத் தூரம் தீராத் தொலைவெளியாகத் தோன்றியது. இன்னும், பீ..ப்பீ..பீ..பீ..’
நாயனக்காரன் பக்கமாகத் தலை முண்டாசோடு வந்து கொண்டிருந்த தலையாரி முத்தன் , அவனையும் அந்த நாயனத்தையும் ஒரு முறை வெறித்துப் பார்த்தார். கியாஸ் லைட்டின் மஞ்சள் வெளிச்சத்தில் உப்பென்று மூச்சு நிறைந்த கன்னங்களுடன், நாயனக்காரனின், அந்தப் பொட்டைக்கண் முகம், எரிச்சலை இன்னும் வளர்த்தது.
இன்னும், பீ..ப்பீ..பீ..பீ..’
”படவா ராஸ்கல். நாயனமா வாசிக்கிறே?” தலையாரி முத்தன் ரொம்ப முரடு. அவரது அதட்டலை பாடை தூக்கிக்கொண்டு முன்னால் போய்க் கொண்டிருந்தவர்கள் கூடத் தயக்கத்தோடு திரும்பி நின்று செவிமடுத்தனர்.
அவ்வளவுதான்!
தலையாரி, நாயனக்காரன் பிடரியில் இமைக்கும் நேரத்தில் ஒரு மொத்து. ஆற்றில் துணி துவைப்பது மாதிரி ஒரு சத்தம். நாயனத்தை அப்படியே இழுத்துப் பறித்து கால் மூட்டின் மேல் வைத்து , இரண்டு கைகளாஅலும், ‘சடக்’ இரண்டு துண்டு ! புது வெள்ளமாகச் சலசலத்து ஓடிக் கொண்டிருந்த ஆற்றின் இருட்டில் நாயனத் துண்டுகள் போய் விழுந்தன.
‘ஒடிக்கோ பயமவனே, நாயனமா வாசிக்க வந்தே? நின்னா உன்னையும் முறிச்சு ஆத்திலெ வீசி யெறிஞ்சுடுவேன்.”
ஊர்வலம் தயங்கக் கொஞ்சம் நின்றது. எல்லார் முகத்திலும், ’முத்தண்ணே நீ செஞ்ச காரியத்துக்கு உனக்கு தங்கக் காப்பு அடிச்சுப் போட்டாலும் தகும்’ என்ற திருப்தி பளிச்சிட்டது.
“என்ன நின்னுட்டீங்க?- போங்கப்பா தோ மயானம் வந்தாச்சே, நல்ல நாயனக்காரனெ கொண்ணாந்தீங்க”.
இதைக் கேட்க நாயனக்காரனும் தவுல்காரனும் வரப்பு வெளியில் இல்லை. ஆற்றின் இடப்பக்கம் சந்தின் இருட்டில் இறங்கித் தெற்குப் பார்த்த பாதை வழியாக , இரண்டு பேரும் ‘செத்தோம் பிழைச்சோம்’ என்று விழுந்து எழுந்து ஓடிக்கொண்டிருந்தனர்1
விடாப்பிடியாகக் கழுத்தை அழுத்திய சனியன் விட்டுத் தொலைத்த நிம்மதியில் ஊர்வலம் சுடுகாட்டை நெருங்கிக் கொண்டிருந்தது.
============================
அன்புடன் ஆதி

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 35
  • Total likes: 35
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
காந்தி - அசோகமித்திரன்

அன்று காபி அவனுக்கு மிகவும் கசப்பாக இருந்தது. கசப்பு அவனுக்கு என்றுமே பிடித்தமானதொன்று. பத்து நண்பர்களோடு இருக்கும்போதுகூட ‘பத்து கப், ஒன்றில் மட்டும் சர்க்கரை இல்லாமல்’ என்று அவன்தான் காபி கொண்டு வருபவனிடம் கூறுவான். அந்தக் காபியைக் குடிப்பதில் ஆரம்ப நாட்களில் இருந்த பெருமை விலகிப் போய், அதுவே பழக்கமாகப் போய்விட்டு  வெகு நாட்களாகியும், அன்றுதான் காபியின் கசப்பை கசப்பாக, ருசிக்கத்தக்கதல்லாததாக உணர முடிந்தது. ‘சர்க்கரை கொண்டு வா’ என்று சொல்லத் திடமில்லாமல் கோப்பையில் பாதிக்கு மேல் காபியிருக்க அவன் அதை ஒதுக்கி விட்டு நாற்காலியில் சாய்ந்து கொண்டான். அந்த ஹோட்டலிலும் மின் விசிறிகளை ஓட வைப்பதை நிறுத்தி வெகு நாட்களாகிவிட்டன. அவன் சட்டையின் பொத்தான்களை அவிழ்த்துக்கொண்டு ஊதிக் கொண்டான். மார்பின் மேல் காற்று கசப்பாகப் படிந்து மறைந்தது.
உள்ளிருக்கும் கசப்புத்தான் வெளியிலும் கசப்பாக உணர்வளிக்கிறது என்று  அவனுக்குத் தெரியாமலில்லை. உண்மை கசப்பானது, உண்மை கசப்பானது என்று நண்பர்களுடன் விவாதிப்பதையே மிக முக்கியமானதாக, அர்த்தம் பொருந்தியதாக, வாழ்வே அதில்தான் மையம் கொண்டிருக்கிறது என்பது போன்ற மனநிலை கொண்டுவிட்ட  இந்த ஏழெட்டு வருட காலத்தில் பல நூறு முறை அவன் அதைக் கூறியிருப்பான். உண்மை கசப்பானது என்று யாராலோ எந்தச் சந்தர்ப்பத்திலோ கூறப்பட்டாலும் அவர்கள் அவனைப் பார்த்து ஒரு முறை கண் சிமிட்டும் அளவுக்கு அவன் உண்மை கசப்பானது என்ற வாக்கியத்துடன் இணைக்கப்பட்டிருந்தான். அதில் அவனுக்கு முதலில் சங்கோசமிருந்து பின் சங்கடமிருந்து, அதன் பின் பெருமையிருந்து, அதற்குப் பின்னால் அது சம்பிரதாயமான கிட்டத்தட்ட உணர்வேயெழுப்ப இயலாத, செத்த அசைச் சொல்லாகவும் போய் விட்டிருக்கும் என்ற நேரத்தில் அவன் கசப்பை மனதில், உடலில், வாயில், காபியில் உணர வந்திருப்பதை நினைக்க, அந்த நினைப்பைத் தடுக்க இயலாமல் போன தன் நிலையை எண்ணி மேலும் மாய்ந்து போனான்.
இவ்வளவிற்கும் அவனைப் பற்றிப் பொய்யைப் பரப்பித் திரிபவன் அவனுடைய நண்பன். ‘திரிபவன்’ என்று நினைத்து விட்டோமே என்று வருத்தம் கொண்டான். அவனைப் பற்றி பொய்யை ஒருவரிடத்தில், ஓரிடத்தில் மட்டும் அவன் நண்பன் கூறியிருந்தால் அந்த நண்பனையே நேருக்கு நேர் பார்த்துக் கேட்டுவிடலாம். ஆனால் அதற்கு இடம் கொடுக்காமல் அந்த நண்பன் பலரிடத்தில், பல சந்தர்ப்பங்களில் பொய்யை, பல பொய்களைக் கூறியிருக்கிறான். தீர்மானமாக, முன் திட்டத்துடன், துவேஷத்துடன் கூறியிருக்கிறான். இன்னமும் கூறி வருகிறான். இனியும் அந்த நண்பனைப் பார்த்து அதுபற்றிக் கேட்க முடியாது, கேட்க வேண்டியதில்லை. அந்தப் பொய்களைத் தான் நம்புகிறான் என்னும் அளவுக்கு அந்த நண்பன் நடந்து கொண்டு வருகிறான். அபிப்ராயங்கள் பற்றிச் சந்தேகம் கொண்டு, சந்தேகம் கொள்ள வைத்துப் பேசலாம், விவாதிக்கலாம், மாற்றிக் கொள்ளலாம், மாற்ற வைக்கலாம். ஆனால் நம்பிக்கைகளை மாற்ற முடியுமா?
அவனுக்கு அவனைப் பற்றிப் பொய்கள் வெளியில் உலவுகின்றன என்பதில்கூட அவ்வளவு துக்கம் ஏற்படவில்லை. ஆனால் அந்த நண்பனால் அவை உலவவிடப் படுகின்றன என்பதுதான் சித்ரவதையேற்படுத்தியது. நண்பன்! எப்பேர்ப்பட்ட நண்பன்.
ஒருகணம் எல்லா வேதனையும் மறந்து அந்த நண்பனைப் பற்றிய ஒட்டுமொத்தமான உணர்வில் தன்னை பற்றிய நினைவும் மறைய லயித்தான். அவர்கள் இருவரின் உறவு நான்கு மாதங்களுக்கு மேற்பட்டதில்லை. நான்கே மாதங்கள். தன்னைப் பிறப்பிக்க அம்மா, அப்பா; தன்னோடுகூடப் பிறந்தவர்கள்; சந்தர்ப்ப சூழ்நிலையானாலும் தன்னிச்சை காரணமாகவும் பள்ளி நாட்களில் ஏற்பட்ட எண்ணற்ற நண்பர்கள்; உறவுகள்; நான்காம் படிவத்தில் டபிள்யு. எச். ஹென்லியின் ‘இரவிலிருந்து’ என்னும் கவிதையை ஒரு தரிசனமாக மாற்றிக் கற்றுக்கொடுத்த ஆங்கில மொழி ஆசிரியர்; எவ்வளவோ மாதங்கள் புரியாத முடிச்சாக இருந்த கால்குலஸ் இண்டெக்ரேஷன் அடிப்படையை ஒரு வலுவிழந்த நொடியில் தனக்குப் பிரகாசமாக்கிய கணிதப் பேராசிரியர்; நன்றாகத் தூக்கியெறியப்பட்டு மெதுவாகக் கீழிறங்கும் சுழற் பந்தைத் தவறாமல் கவர் - டிரைவ் செய்யப் பாதங்களை நகர்த்திக் கொள்ளக்கற்றுக் கொடுத்த கிரிக்கெட் வைஸ் காப்டன்; தன்னுடைய அழுக்குப் படிந்த ஷர்ட்களையும் டிரௌசர்களையும் பச்சைக் குழந்தையைக் கையாளுவது போல நல்ல வெயில் நேரத்திலும் பொறுமையாகக் கிணற்றடியில் சோப்புப் போட்டு அலசி உலர்த்தும் அவன் தங்கை; இப்படி இன்னும் எவ்வளவோ பேர்கள் எவ்வளவோ ஆண்டுகளாக அவன் மனத்தில், அவன் பிரக்ஞையில் ஆழ்ந்து போயிருந்த போதிலும் அந்த நண்பன், நான்கே மாதங்கள் முன்பு ஏற்பட்ட நண்பனுக்கு அவனுடைய முழு ஜீவித இயக்கத்தையும் அர்ப்பணம் செய்திருந்தான். நண்பர் வட்டமே முழு உலகமும் என்றிருந்த அந்த வயதில், அந்த நண்பர் வட்டத்திலும் அந்த நண்பனே முழு வியாபகமும் என இருந்த நேரத்தில் தன் பிரக்ஞையே சிதறிப் போகிற விதத்தில் அந்த நண்பன் தோற்றம் கொண்டு விட்டான். தோற்றம் என்றால் என்ன?
சளசளவென்று பேசிக்கொண்டு காலைத் தேய்த்துத் தேய்த்து நடப்பதால் உண்டாகும் அளவு மீறிய செருப்புச் சப்தத்துடன் மூன்று இளைஞர்கள் அந்த ஹோட்டலுக்குள் நுழைந்தார்கள். வேண்டுமென்றே செய்கிறார்கள் என்றுகூடத் தோன்றும் முறையில் நாற்காலிகளைத் தடாம் முடாம் என்று நகர்த்தி ஒரு மேஜையைச் சுற்றி உட்கார்ந்தார்கள். அவர்களில் ஒருவனின் தலை மயிர் நீண்டு வளர்ந்து கழுத்துக்குப் பின்னால் ஷர்ட் காலரைத் தொட்டுப் புரண்ட வண்ணமிருந்தது. இப்போது எல்லோரும் தலைமயிரை நீளமாக வளர்த்துக் கொள்கிறார்கள். ஆனால் எல்லோருக்கும் கழுத்துக்கு அடியில் உள்பக்கமாக மயிர் தானாகச் சுருண்டு கொள்வதில்லை. அவனுடைய நண்பன் முடி அப்படித்தான் சுருண்டு கொண்டிருக்கும். அவனை முதன் முதலாகச் சந்தித்த தினத்தன்றுகூடப் பேச்சு எது எதிலோ சென்று தலைமுடி பற்றி ஒருகணம் சுழன்றபோது அந்த நண்பன் பெருமையடித்துக் கொண்டான். அன்றிரவு மற்ற நண்பர்கள் நேரமாகிவிட்டது என்று ஒவ்வொருவராகச் சென்றுவிட்ட பின் அவர்கள் இருவரும்தான் வீட்டு மொட்டை மாடியில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அறிமுகமான முதல் நாள் என்ற உணர்வே இருவருக்கும் தோன்ற முடியாத வண்ணம் அந்த நண்பன் தொடர்ச்சியாகவும் முழு ஈடுபாடுடனும் பேசிக் கொண்டிருந்தான். அவன் எதைப் பற்றிப் பேசினாலும், அவன் பேசுவது மிகவும் அபத்தமானதாக இருந்தாலும், முழு மூச்சோடும் மனித சம்பாஷணையில் சாத்தியமான அதிக  பட்ச ஆர்வத்துடனும் பேசிக்கொண்டிருந்தான். இவன் அந்த நண்பன் பேசும் விஷயங்களைக் காட்டிலும் அவனுடைய பேச்சு வெளிப்பாடு விதத்தில் லயம் கொண்டு தலையசைத்துக் கொண்டிருந்தான். அந்த இடத்தில் அவர்கள் உட்கார்ந்திருந்த நிலையில் அப்போது ஆகாயத்தில் தத்தளித்துக் கொண்டிருந்த நட்சத்திரங்களும் வேறு சில வீடுகளின் மாடிப் பகுதிகளும் மட்டும் நிழலாகப் பார்வையில் தெரிந்தன. அப்போது அந்த நண்பன் சட்டென்று “அதோ பார்” என்றான். அது எதிர்வீட்டு மொட்டைமாடி. அங்கே யாரோ ஒரு பையன் ஒரு சிம்னி விளக்கு உதவியில் பரிட்சைக்குப் படித்துக்கொண்டிருக்க வேண்டும். விளக்கு இவர்கள் இருந்த இடத்தில் தெரியவில்லை. அந்தப் பையன் எழுந்திருக்கிறான். சிம்னி விளக்கின் மங்கல் ஒளி ஒருகணம் பையன் முகத்தில் விழுந்தது. அந்த ஒருகணத்தில் கோடிகணக்கான மைல் தூரத்தில் நட்சத்திரங்கள் சிறு புள்ளிகளாக மின்னிக் கொண்டிருக்கும் கருநிற வானப் பின்னணியில் சுமார் இருபது முப்பது அடி தூரத்தில் அந்தப் பையனின் முகத்தின் ஒரு பகுதி மட்டும் சிம்னி விளக்கு ஒளிவிழுந்து ஆகாயத்தில் சஞ்சரிக்கும் தேவதை போல - அப்படித் தேவதைகள் இருக்குமானால்  பூமியின் எண்ணற்ற ஸ்தூல சக்திகளால் கட்டுப்பட்டிருக்கும் மனித உணர்வை, மனிதக்கற்பனையை, உளமன எழுச்சியை, எல்லைக்கடங்கா அகண்ட வெளியில் இழுத்துச் செல்லும் தேவதை போலக் காட்சியளித்தது. அந்த ஒரு கணம் அப்பையனின் முகம் சாந்தத்தில், அமைதியில், அழகில், பரிசுத்தத்தில் தெரிந்தது தெரியாததான இலட்சிய மனிதப் பிறவிகள் யாவரையும் ஒரு நொடியில் பிரகாசப்படுத்திப் போவது போல இருந்தது. அந்தப் பையன் விளக்கை எடுத்துக் கொண்டு கீழே இறங்கிப் போய்விட்டான். நண்பன் பேசுவதை நிறுத்திவிட்டு வெகுநேரம் சிலைபோல உட்கார்ந்திருந்தான். அவன் லயம் கலைந்து ஒரு முறை பெருமூச்சு விட்டவுடன் இவன், “நீ சாப்பிட்டுவிட்டு இன்றிரவு இங்கே இருந்து விடேன்,” என்றான். சிறிது நேரம் முன்பு வரை ஆவேச இயக்கத்தின் உருவமாக இருந்த நண்பன் இப்போது எதிர்ப்பே சாத்தியமில்லாதவனாக மாறியிருந்தான். இரவு உணவு முடித்துவிட்டு இருவரும் மீண்டும் மாடிக்கு வந்தார்கள். ஏனோ இருவருக்கும் பேச விஷயங்களே இல்லாமல் போயிருந்தது. திடீரென்று நண்பன் அழ ஆரம்பித்தான். விம்மி விம்மி அழ ஆரம்பித்தான். இவன் அவனை அணைத்துக் கொண்டான். என்ன காரணம் என்று கேட்கத் தோன்றாமல் அவனை இறுக அணைத்துக் கொண்டான். அந்தச் சோகம் அற்ப சுய நல சோக்கு மன முறிவால் உண்டானதாகத் தோன்றவில்லை. ஒரு மனிதனின் வாழ்க்கைச் சோகமாகவும் தோன்றவில்லை. காலம் காலமாகக் கோடிக்கணக்கில் தோன்றி, உழன்று, மறைந்த மனித குலம் அனைத்திற்குமாக உண்டான சோகமாக இருந்தது. மனிதனின் முதன்மையானதும், மகத்தானதுமான இழப்புக்கு ஏற்பட்ட சோகமாக இருந்தது. மனித இனம் இழந்த பரிசுத்தத்திற்காக உருகி அழித்துக்கொள்ளும் சோகமாக இருந்தது. நண்பன் வெகு நேரம் அழுது ஓய்ந்தபின் அப்படியே படுத்துத் தூங்கிவிட்டான். இவனும் தன் கண்களிலிருந்து தாரை தாரையாகப் பெருகிய கண்ணீரைத் துடைத்துக்கொண்டு படுத்தபடியே வெகுநேரம் ஆகாயத்தைப் பார்த்த வண்ணம் விழித்திருந்தான். அந்த நண்பன், பரிசுத்தத்தின் எல்லையையும் சோகத்தின் எல்லையையும் உணர்வில் எட்டி அந்த மகத்தான அனுபவத்தை இன்னொருவனுக்கும் பகிர்ந்தளிக்கக்கூடிய நண்பன், இப்பொழுது முன் திட்டத்தோடும் துவேஷத்தோடும் ஒருவனைப் பற்றிப் பொய்களைக் கூறிப் பரப்பி வருகிறான்!
அந்த மூன்று இளைஞர்கள் எழுந்து போய்விட்டார்கள். அவர்களை விட ஓரிரு வயதே பெரியவனாக இருக்கக்கூடிய தனக்கு அவர்களை எப்படித் தனியே இளைஞர்கள் என்று அழைக்கத் தோன்றியது என்று எண்ணிக் கொண்டான். ஏன் தன்னால் இப்படி முதுமையுணர்ச்சியோடு சிந்தனையில் விழுந்து கிடக்க முடிகிறது? அவன் எதிரே அந்த அசைவ ஹோட்டலிலும் தனக்கு இடமுண்டு என்று சொல்வது போல் ஒரு காந்திப் படம் புன்முறுவலித்துக் கொண்டிருந்தது. காந்தி! எப்பேர்ப்பட்ட மனிதர்! எவ்வளவு அசாத்தியமான நம்பிக்கைகளும் எதிர்ப்பார்ப்புகளும் கொண்ட அபூர்வப் பிறவி! முப்பது வயதிலேயே முதுமை கொண்ட மனிதர். எங்கோ கடல் கடந்த நாட்டில் தனக்கு நேர்ந்த ஒரு அவமதிப்பை மனித இனத்திற்கே பொதுமைப்படுத்திக் கொள்ளக்கூடிய மன விசாலம் பெற்று இயற்கையின் தன்னிச்சையான அள்ளித் தெளிப்பால் கிடைத்த தோல் நிறத்தாலே கூட ஒரு மனிதன் இன்னொருவனை விட உயர்த்தி எனக் கொள்ளக்கூடிய எந்தவித நியாயவாதத்திற்கும் உட்பட முடியாத ஆனால் எவ்வளவோ நூற்றாண்டுகளாக நடைமுறை வாழ்க்கையில் ஒன்றிப் போய்விட்ட சிருஷ்டி விநோதப் பெருமையையும் அகங்காரத்தையும் முற்றிலும் உணர்ந்து, சோகத்தில் தோய்ந்து, அந்தச் சோகத்தின் உந்துதலால் எண்ணற்ற அசாத்தியமான பணிகளில் ஈடுபட்ட மனிதர். அந்த வெள்ளிக்கிழமையன்று மாலை குண்டடிப்பட்டுச் சாகும்வரை சுயசுத்திரிகரிப்புத் தவத்தைத் தவறவிடாதவர். மனித இயல்பின் சபலங்களையும் பலவீனங்களையும் தெள்ளத் தெளிவாக உணர்ந்தவர். அப்படிப்பட்ட மனிதருக்கு மனமுறிவும் ஏமாற்றங்களும் சாத்தியமேயில்லை. ஆனால் அவருடைய கடைசி ஆண்டுகள் கண்ணீரில் உப்பரிக்கப்பட்டவை. அழையா இடங்களுக்கு அவராகப் போய் அவரைக் கேட்காத ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் அவராகக் கொடுத்து, பிரளயமாகப் பொங்கி வந்தப் பயங்கரக் கேடுகளுக்கு அவரே காரணம் எனத் தோற்றம் கொண்டு மற்றோரையும் நினைக்க வைத்து, தான் கண்டெடுத்து உருவாக்கி வளர்த்துவிட்ட சீடர்களைக் கிழம் ஏன் இப்படி தொல்லை கொடுக்கிறது எனச் சொல்லாமல் சொல்ல வைத்து, தன்னை வணங்கிய ஒருவன் கையாலேயே சாவும் அடைந்தவர். மனித சிந்தனைத் தொடர்ச்சி தொடக்க காலத்திலிருந்து இன்று வரை ஏற்பட்டுள்ள துன்பியல் காவியங்களில் எது மகத்தானது? இராமன் கதையா? தருமனா? ஈடிபஸ்ஸா? ஒதெல்லோவா, லியர் அரசனா, டாக்டர் ஃபாஸ்டஸ்ஸா? இல்லை, காந்தியல்லவா? களங்கம் நிறைந்த புறவாழ்க்கையை வெறுத்து ஒதுக்காமல் தன் வரையிலாவது சாதிக்க வேண்டும் என்று பரிசுத்தத்தையே நாடிச் சென்ற தீரன் காந்தி அல்லவா?
அவன் காந்தியைப் பார்த்தது கிடையாது. அவன் பிறந்ததே அவர் இறந்து சில ஆண்டுகளுக்குப் பிறகுதான். அவரைப்பற்றி அவன் முதன் முதலில் கேட்டதெல்லாம் அவர் பெயருடன் கூடவே தாத்தா, தாத்தா என்று சொல்லப்பட்டு ஏதோ பல்லுப்போன, உடல் வலுவிழந்த, விவரம் அறியாச் சிறுவர்களுக்கு மட்டும் களிப்பூட்டும் விதூஷக உருவம்தான். ஆனால் அப்படி இல்லை, எண்பது வயதை நெருங்கியபோதும் உலகம் அனைத்துக்கும் பொதுவான, பொருத்தமான பிரச்சினைகளில் முழு மூச்சுடன் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர், தனக்கு அந்தரங்கம் என்று எதையுமே வைத்துக் கொள்ளாதவர், ஒரு நாளில் இருபத்திநான்கு மணி நேரத்திலும் தன்னை மற்றவர் பார்வைக்கும் பரிசோதனைக்கும் பாராட்டுக்கும் கண்டனத்திற்கும் வெளிப்படுத்திக் கொண்டவர். தனக்கே கூச்சமேற்படுத்தும் நினைவுகளையும் அனுபவங்களையும் அவரைப் பேர் ஊர் தெரியாதவர்கள் கூட என்றோ எப்போதோ அறிந்து அவரைப்பற்றி விகாரமாக எண்ணிக் கொள்ளக்கூடிய வகையில் ஒப்புதல் வாக்குமூலம் போல சுயசரிதை எழுதியவர், தான் நேற்றிருந்தவனில்லை, ஒவ்வொரு கணமும் மறுபிறவி எடுக்கக் கூடியவன் - மாற்றம் கொள்ளக் கூடியவன் - உயரக்கூடியவன் - என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் தான் முன்கணம் களங்கமுற்றதை  இந்தக் கணம் பகிரங்கப்படுத்தத் தயங்காதவர், இந்த மனிதர் கடவுளைக் குறிப்பது என்று தான் நம்பிய ஒரு சொல்லை உச்சரித்தபடிதான் தன் இறுதி மூச்சை விட்டார். அவர் கடவுளைக் கண்டாரா? கடவுள்தான் மனித துயரத்தின் எல்லையா? இந்த மனிதரால் எப்படிச் சிரிக்கவும் முடிந்திருக்கிறது?
காபிக் கோப்பை மீது உட்கார வந்த ஒரு ஈயைச் சட்டென்று விரட்டினான். அரைக் கோப்பை அளவு மிஞ்சியிருந்த காபி மீது லேசாக ஏடு பரவ ஆரம்பித்திருந்தது. இந்த காபியைத்தான் குடிக்கப் போவதில்லையே, ஏன் ஈயை விரட்டினோம் என்று அவனுக்குத் தோன்றியது. ஓர் ஈ எத்தனை நாட்கள் உயிர் வாழ்ந்திருக்கும்? பத்து நாட்கள்? இருபது நாட்கள்? ஒரு மாதம்? அந்தக் குறுகிய கால வாழ்க்கையில் ஒரு கணம், அதன் ஒரு வாய் உணவு, பெரும்பங்கைத்தான் வகிக்க வேண்டும். அவனால் இப்போது சாக்கடையில் கொட்டப்பட இருக்கும் அந்த காபி எத்தனை ஜீவ ராசிகளின் முழு ஜீவித ஆதாரமாக இருக்கக்கூடும்?எவ்வளவு எளிதில் சிருஷ்டி தர்மத்தை, ஓருயிர் தான் வாழவேண்டும் என்று மேற்கொள்ளும் இயக்கத்தை, தன்னால் ஒரு சலனம் கூட இல்லாமல் புறக்கணிக்க முடிகிறது, துஷ்பிரயோகம் செய்ய முடிகிறது? மனிதனுக்கும் மனிதனுக்கும்கூட இப்படித்தானோ? காந்தி இதற்குத்தான் மீண்டும் மீண்டும் தான் ஆங்கிலேயரை வெறுக்கவில்லை, ஆங்கிலேயரைத் துவேஷிக்கவில்லை என்று கூறிக் கொண்டாரோ?
ஆனால் காந்தியை அவனுடைய நண்பன் ஒத்துக்கொண்டதில்லை. காந்தியாலே கூட தனக்கும் தன் நண்பனுக்கும் இப்படிக் குரோதம் தோன்றிவிட்டதோ என்று நினைத்துக் கொண்டான். “காந்தியைப் போல ஒரு அயோக்கியன் மனித சரித்திரத்திலேயே பிறந்ததில்லை. அவனைப் போல் ஒரு மனித இன விரோதி செயல்பட்டதேயில்லை. இன்று சோவியத்தாரர்கள் அவர்களுக்குச் சௌகரியமாயிருக்கிறது என்று அவர்களும் காந்தி பஜனை செய்யலாம். ஆனால் அவனைப் போன்ற ஒரு பாட்டாளி வர்க்கச் சத்ரு உலகத்தில் தோன்றியதே இல்லை” - இவ்வளவு திட்டவட்டமாக, தீவிரமாக, பெயர் ஊர் தெரியாத ஒரு சிறுவன் முகத்தின் பரிசுத்தத் தோற்றத்தில் உள்மன வயப்பட்டு உருகிக் கண்ணீர் வடிக்கவும் கூடிய அவனுடைய நண்பன் கூறியிருந்தான். திரும்பத் திரும்பக் கூறியிருக்கிறான். காந்தியைப் பற்றித் தான் அறிந்ததெல்லாம் அவனுடைய நண்பனும் அறிந்திருக்க வேண்டும். அப்படியிருந்தும் இவ்வளவு நிந்தனையை வெகு எளிதாக மனதின் அடித்தளத்திலிருந்து காந்திமீது சுமத்த முடிகிறது. “எப்படிக் கூறுகிறாய்?” என்று இவன் கேட்டிருக்கிறான்.
“அந்த மனிதனுடைய ஒவ்வொரு செய்கையும் அவன் அயோக்கியன் என்று காட்டுகிறது. ஊருக்கெல்லாம் உபதேசம். தான் செய்வதெல்லாம் அதற்கு நேர் எதிரானது.”
“எப்படி?”
“ஒரு செயல்கூடப் பாட்டாளி மக்கள் நன்மைக்காக என்று கிடையாது. தானும் தன் பனியா இனத்தினரும் நிரந்தரமாக ஏகபோக வர்த்தக ஆதிக்கம் இழக்காமல் இருக்கவேண்டும் என்றுதான் அவன் செயல்பட்டது. ஒருமுறை கூட உண்மையான தொழிலாளிகள் வர்க்கத்துடன் இணைந்துகொள்ளவில்லை மாறாக ஒவ்வொரு தொழிலாளர் கிளர்ச்சியின் போதும் பனியா முதலாளிகள் உடைமைகளையும் நலன்களையுமே பாதுகாக்க விவரமறியா ஏழைகளைப் பலியிட்டிருக்கிறான். சுதேசி இயக்கம் சுதேசி இயக்கம் என்று கூச்சலிட்டதெல்லாம் பனியா மில் முதலாளிகளின் கொள்ளையடிப்பைப் பாதுகாக்கத்தான். ஆங்கிலத் துணி பகிஷ்கரிப்பு பம்பாய் மில்களின் ஏகபோக வர்த்தகத்தை வலுப்படுத்தத்தான். எந்தத் தொழிற்சங்கக் கிளர்ச்சியிலும் தலையிட்டு  மில் முதலாளிகளுக்குச் சாதகமாகவே கிளர்ச்சியைத் திசை திருப்பி விடுவதுதான் அவன் நோக்கம். எந்த உண்மையான மக்கள் எழுச்சியும் பண முதலைகளுக்குச் சாதகமாக மாற்றி விடுவதுதான் அவன் ஆயுள் லட்சியம். கை நூற்பு, கைவேலை, சர்வோதயம் என்றெல்லாம் ஏழைகள் என்றென்றைக்கும் ஏழைகளாகவே இருந்து சாவதற்காகச் செய்த தந்திரம். யாரும் ஆங்கில மருந்துகளை உபயோகிக்கக் கூடாது, மேல் நாட்டு வைத்திய முறை நோயாளிகளைக் கொள்ளையடிப்பதற்காக என்று நாளெல்லாம் அலறிவிட்டுத் தனக்கு மட்டும் உடம்புக்கு வந்தால் உடனே அதே வைத்தியர்களிடம் ஓடுவதுதான் அவனுடைய வழக்கம். ‘உனக்கு ஆபரேஷன் செய்தால் நீ பிழைப்பாய்’ என்று கூறியபோது வாயை மூடிக்கொண்டு ஆபரேஷன்  செய்துகொண்டவன் தானே இந்தக் காந்தி!”
“தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்வது யாருக்கும் முதல் தர்மமில்லையா?”
“அதுதான், அதுவேதான். தன் உயிர் என்றால் எது வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். மற்றவர்களுக்கெல்லாம் உபதேசம். மாட்டுப் பால் குடித்தால் ஹிம்சை. ஆட்டுப்பால் குடித்தால் அஹிம்சை.”
“இப்படி ஒன்றிரண்டு விஷயங்களை மட்டும் வைத்துக்கொண்டு ஒருவரின் முழு வாழ்நாள் சாதனைகளையும் இலட்சியங்களையும் புறக்கணிக்க முடியுமா?”
“என்ன சாதனை? என்ன இலட்சியம்? ஒத்துழையாமை என்று கூறி மக்களை ஏவி விடுவது, அது ஒரு உண்மையான மக்கள் புரட்சியாக மாறும்போது எஜமானர்களுக்குச் சாதகமாகக் கைவிடுவது! பெஷாவரில் என்ன நடந்தது?மக்களோடு கார்வாலி ரெஜிமெண்ட் இணைந்து கொண்டு ஒரு வாரத்திற்கும் மேலாக ஆங்கில ஆதிக்கத்தை உதறித் தள்ளியிருக்கிறது. நினைத்துப் பார்க்கவும் முடியாத பயங்கர அடக்குமுறையைக் கட்டவிழ்த்து அந்த கார்வாலி ரெஜிமெண்டைச் சின்னாபின்னமாகப் படுகொலை செய்து, சித்திரவதை செய்து அந்தமானில் தீவாந்திரத்திற்கு அனுப்பிய போது இந்த மகாயோக்கியன் இர்வினுடன் ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறான். ‘அரசியல் கைதிகள் எல்லாரையும் விடுவிக்க வேண்டும். கார்வாலி வீரர்களைத் தவிர.’ இவன் தேசப்பிதா.”
“நீ முழு விவரங்களையும் ஒருங்கிணைத்துப் பார்க்காமல் பகுதி பகுதியாகத் துண்டித்துப் பேசுகிறாய்.”
“நான் பேச  என்ன இருக்கிறது? இந்திய சரித்திரம் முழுக்கவே இவன் துரோகச் செய்ல்களை அடுக்கிக் கொண்டே போகிறதே? பம்பாயில் கப்பற்படைக் கிளர்ச்சி போது என்ன நடந்தது? கப்பற்படை வீரர்களுடன் பம்பாய் நகரத் தொழிலாளர் வர்க்கம் அனைத்துமே சேர்ந்து கொண்டது. இந்திய வரலாற்றிலேயே முற்றிலும் சுயமான, பூரணமான இந்து முஸ்லீம் - இணைப்பு என்று அப்போதுதான் நடந்தது. அந்தப் போராட்ட மட்டும் அரவணைக்கப்பட்டு வளர்க்கப்பட்டிருந்தால் 1857 புரட்சியைக் காட்டிலும் பரிபூரணமான உண்மையான சுதந்திரப் புரட்சியாக மாறியிருக்கும். ஆனால் இந்த மகாத்மா என்ன செய்தான் அப்போது? ஆங்கிலப்படை பலத்தைத் திரணமாக மதித்து எதிர்த்து நின்ற அந்த உண்மையான வீரர்களை ஆதரித்து ஒரு வார்த்தை கூறவில்லை. ஒரு அறிக்கை விடவில்லை. மாறாக அவர்கள் முதுகில் கத்தி பாய்ச்சினான். ‘இந்த விதமான இணைப்பு நான் வேண்டும் உன்னத ஹிந்து - முஸ்லீம் இணைப்பு அல்ல. படைவீரர்கள் அதிகாரிகளை மீறித் தள்ளும் கட்டுப்பாடற்ற தன்மையை என்னால் ஒப்புக் கொள்ள முடியாது.’   கட்டுப்பாடற்ற தன்மை! இவன் வாழ்க்கையே முழுக்க முழுக்கக் கட்டுப்பாடற்ற தன்மை. இவன் உபதேசிக்கிறான் கட்டுப்பாடு!”
“நீ தவறான ஆதாரங்களையே படித்திருக்கிறாய்.”
“இவன் தவறான ஆதாரங்களைத்தான் உலகமெல்லாம் பரப்பியிருக்கிறான்? அதைத்தானே உலகமெல்லாம் தெரிந்து கொண்டிருக்கிறது? பொய், புனைசுருட்டு, திரித்துக்கூறல்,  உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுதல், தனக்கு ஒரு நியாயம், மக்களுக்கு வேறொரு நியாயம்....”
“உன் ஆதாரம் எது? நீ எதை வைத்துக்கொண்டு இப்படிப் பேசுகிறாய்?”
“நீ ஆர்.பி. டட் எழுதிய ‘இன்றைய இந்தியா’ படி. புரியும் இந்த மகாத்மாவின் மகாத்மியம். இவன் கைப்பட எழுதிய கடிதங்களும் அறிக்கைகளுமே இருக்கின்றன.”
“அவ்வளவுதானா? ஒருவரைப்பற்றி ஒருவர் எழுதியதை மட்டும் வைத்துக்கொண்டு தீர்ப்புக்கூறிவிட முடியுமா? ஒருவன் எண்பதாண்டுகள் பொது வாழ்க்கைக்கே அர்ப்பணித்துச் செயல்பட்டிருந்த போது ஒருவர் விமர்சனத்தை மட்டும் வைத்துக்கொண்டு அந்த எண்பதாண்டு பணிகளை உதறித் தள்ளிவிட முடியுமா? நாம் அவரின் செயல்களை நாமாகப் பரிசீலித்து முடிவுக்கு வர வேண்டாமா?”
”என் பரிசீலனை முடிந்துவிட்டது. இவன் கார்வாலி ரெஜிமெண்டைத் துரோகம் செய்யவில்லை என்று கூற முடியுமா? இவனுடைய காந்தி இர்வின் ஒப்பந்தம் பனியா முதலாளிகள் உடமைகள் பாதுகாப்புக்காகவென்றே செய்யப்படவில்லை என்று கூறமுடியுமா? இவன் மேல்நாட்டு வைத்தியமுறை ஆபரேஷன் செய்து கொள்ளவில்லை என்று கூற முடியுமா? இவன் கப்பற்படை வீரர்கள் எழுச்சியை ஒடுக்குவதற்குச் செயல்படவில்லை என்று கூறமுடியுமா? என் பரிசீலனை முடிந்துவிட்டது. அஹீம்சையாம் அஹிம்சை! காஷ்மீரில் இவன் அஹிம்சையைக் காண்பித்திருக்கலாமே? படையெடுப்புக்கு எதிராக இந்தியத் துருப்புக்களை அனுப்பியபோது இவன் வாயை மூடிக்கொண்டிதானே இருந்தான்!”
இப்போது காந்தி படம் இன்னமும் அதிகமாகப் புன்முறுவலித்துக் கொண்டிருப்பது போல் தோன்றிற்று. பல கோடி ஆண்டுகள் முன்பு நேர்ந்திருக்க வேண்டிய சிருஷ்டியிலிருந்து தொடங்கி உலக வரலாற்றின் ஒவ்வொரு நாளும் மறுபரிசீலனைக்கும் புது முடிவுகளுக்கும் உட்பட்டுக் கொண்டிருக்கும் இன்றுகூட காந்தி பற்றி மட்டும் ஒருவனுக்கு அவன் பரிசீலனை முடிந்துவிட்டது. அந்த நண்பனுக்குக் காந்தி பற்றிய பரிசீலனை மட்டும் என்றில்லை. அந்த நண்பனுடைய காந்தி பற்றிய பரிசீலனையைத் துணை வைத்துக்கொண்டு தன்னைத் தானே பரிசீலித்துக்கொள்ள முடியுமா எதை சத்தியம் என்று வைத்துக்கொண்டு அடுத்தக் கட்டத்திற்குப் போவது? இதனால் தான் காந்தி தன் சுயசரிதத்தைச் ‘சத்திய சோதனை’ என்று பெயரிட்டாரோ?
அவனுடைய நண்பன் ‘சத்திய சோதனை’யைப் படித்திருக்க மாட்டானென்று அவனுக்குத் தோன்றிற்று. அதைப் படித்திருந்தால் அவன் பார்வைக்கு இன்னும் டஜன் கணக்கில் குறைகளும் பாதகங்களும் அடுக்க முடியும். அந்த மனிதர் அதெல்லாவற்றையும் எழுதி வைத்துப் போயிருக்கிறார். அது முழு வாழ்க்கைச் சுயசரிதம் அல்ல. அதில் கண்டிருப்பதற்குப் பின்னர் இன்னும் இருபதாண்டுகளுக்கும் மேலாக காந்தி வாழ்ந்திருக்கிறார். உலக சரித்திரம் அந்த இருபதாண்டுகளில்தான் பயங்கரத் தீவிரம் அடைந்திருக்கிறது. முழு தேசங்கள் அழிந்திருக்கின்றன. முழு நம்பிக்கைகள் அழிந்திருக்கின்றன.  முழு கலாச்சாரங்கள் அழிந்திருக்கின்றன. நேரடியாகவும் சில இயக்கங்களின் விளைவாகவும் மக்கள் லட்சக் கணக்கில் அணு அணுவாகவும் ஒரேயடியாகவும் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். காட்டுமிராண்டிகளாக மனிதர் வாழ்ந்த காலத்தில் ஒருவன் முகத்தை இன்னொருவன் அறிந்துதான் கொலை செய்திருக்கிறான். இன்று கொலையாளிக்கு அவன் யாரை எவ்வளவு பேரைக் கொலை செய்யப்போகிறான் என்று தெரியாது. அவன் வரையில் அவன் விசையைத் தள்ளுபவன். கொலை செய்யப்படுபவர்களுக்கும் அவர்களுடைய முடிவுக்கு எவன் உண்மையான காரணம் என்று தெரியாது. அப்படித் தெரிந்தாலும் அவன் பல ஆயிரம் மைல்களுக்கப்பால் ஒரு சுரங்க அறையில் மிகவும் பத்திரமாக, மிகவும் பத்தியமாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருப்பான். அங்கு அவன் கூட இருக்கும் நாய் பூனைகளிடம் கருணையின் வடிவமாக இருப்பான்..
நான்  யாரையோ எதற்குச் சொல்ல வேண்டும், என் நண்பனே அப்படித்தானே இருக்கிறான்? - சிந்தனை பொது விஷயங்களிலிருந்து பிரிந்து மீண்டும் தன்னைப் பற்றியதாக மாறியதில் அவன் வேதனை தணிந்தது போலிருந்தது. சட்டென்று பொங்கி எழுந்தது. தன்னலனைப் பற்றிய சிந்தனைகளுக்குத்தான் எவ்வளவு கட்டுப்பட்டு அடிமையாக இருக்கிறானென்ற உணர்வு அவன் வேதனையை அக்கணத்தில் விம்மியழுது தீர்க்க வேண்டியதொன்றாகக் கூர்மைப்படுத்தியது. அந்த உண்மையும் எல்லா உண்மைகளைப் போலக் கசப்பாக இருந்தது.
அவன் எதிரே அரைக்கோப்பையளவில் ஆறிக்குளிர்ந்து போயிருந்த காபி மீது காற்று வீசும்போது நூற்றுக்கணக்கான நுணுக்கமான கோடுகளின் நெளிவுமூலம் காபி திரவத்தின் மேற்பரப்பில் பரவிய மெல்லிய ஏடு தன்னை வெளிக்காட்டிக் கொண்டிருந்தது. 
அன்புடன் ஆதி

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 35
  • Total likes: 35
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
ஒரு பழைய கிழவரும், ஒரு புதிய உலகமும்-ஆதவன்


டர்ரென்று கனவேகமாகச் சீறிப் பாய்ந்து வரும் மோட்டார் சைக்கிளின் ஓசை, தரையின் அதிர்வு-நாகராஜன் பதற்றத்துடன் அவசரமாக நடைபாதை மீது தாவி ஏறினார். ஆம், அதே இளைஞன்தான். மோட்டார் சைக்கிள் செயலற்றுப் போக வைக்கும் மூர்க்கமான ஓசையை உமிழ்ந்தவாறு அவரை அடித்துத் தள்ளிவிடும் போல சின்னா பின்னமாக்கிவிடும்போல தோன்றியது.
ஒரே கணம்தான்; அதோ, அவனும் அவனுடைய‌ வாகனமும் தூரத்தில் சென்று மறைந்துவிட்டன.
அவருக்குப் படபடப்பு அடங்குவதற்கு சில விநாடிகள் பிடித்தன. அவர் மனதில் அந்த  இளைஞன்பால் மீண்டும் வெறுப்புணர்ச்சி ஏற்பட்டது. அவன் வேண்டுமென்றேதான் இப்படிச் செய்கிறானென்பதை இந்தக் கணம் மறுபடி ருசுப் படுத்தியிருந்தது. அவர் வீட்டை விட்டு வெளியே இறங்க‌ வேண்டியதுதான் தாமதம், உடனே அவனுடைய மோட்டார் சைக்கிள் எங்கிருந்தோ அவரைத் துரத்திக் கொண்டு வந்து விடுகிறது. அவரைப் பதட்டமடையச் செய்வதில் அவனுக்கு ஒரு குரூரமான மகிழ்ச்சி கிடைப்பதாகப் தோண்றியது. உருப்படியான எதிலும் தீவிரப் பிடிவில்லாமல், ஆழமான‌ எதனுடனும் தம்மை முழுமையாகச் சம்பந்தப்படுத்திக் கொண்டு அதன் விளைவுகளைச் சந்திக்கத் துணிவில்லாமல், தாமே உருவாக்கிக் கொண்ட ஒரு நிரந்தரமான சலிப்பில் உழலும் இக்கால இளைஞர்களுக்கு இதுபோன்ற பொறுக்கித்தனமான முறைகளில்தான் மனக் கிளர்ச்சியையும் பரவசத்தையும் உருவாக்கிக் கொள்ளத் தோன்றுகிறது. தம்மை நிரூபித்துக்கொள்ளத்தெரிகிறது. அவருடைய பதட்டம் அவனுக்கு ஒரு எல்.எஸ்.டி. அவனுடைய உப்புமா வாழ்க்கையில் அவர் ஒரு ஊறுகாய்.
இல்லை, இது அவ்வளவு சரியான உருவகமில்லை. அவன் ஒரு பஞ்சாபி இளைஞன். உப்புமா அவருக்கு இருப்பதைப் போல அவனுக்குச் சலிப்பின் சின்னமில்லை; வேறெந்த விதமான சின்னமும் கூட இல்லை. ரொட்டி என்று வேண்டுமானால் சொல்லலாம். அல்லது பூரி அல்லது ஸமோஸா.
அவர் ஸலூனை அடைந்தபோது வாசலிலிருந்து நாற்காலியின் ஒய்யாரமாகச் சாய்ந்து உட்கார்ந்திருந்த ஒரு பையன் முள்ளங்கியைப் பேனாக் கத்தியால் சிறுசிறு துண்டங்களாக நறுக்கி வாயில் போட்டு மென்று கொண்டிருந்தான். அவர் உள்ளே நுழையும்போது அவரை அலட்சியமாக ஒரு பார்வை பார்த்தான். வம்புக்கிழுக்கும் பார்வை. ‘அல்லது முள்ளங்கி’ என்று தன் முந்தைய நினைவின் தொடர்ச்சியாக அவனைப் பார்த்து அவர் சேர்த்துக் கொண்டார். முள்ளங்கியை நேரடியாகப் பல்லால் கடித்துத் தின்று அவனுக்கு அலுத்திருக்க வேண்டும். எனவே கத்தியால நறுக்கித் தின்னுகிறான். சலூனில் அந்த முள்ளங்கிப் பையனைத் தவிர இன்னும் நாலைந்து பேர் காத்திருந்தார்கள். இருவர் நடுத்தரப் பிராயத்தினர். வேறு இருவர் அவரைப் போல அறுபதின் வாசலில் இருப்பவர்கள். இவர்களை அங்கே பார்த்ததில் அவருக்கு ஆச்சரியமுண்டாக வில்லை. ஆனால் முள்ளங்கிப் பையனையும், புகை பிடித்தவாறு ஃபிலிம்ஃபேரைப் புரட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்த இன்னொருவரையும் (இவனுக்கு முள்ளங்கியை விட இரண்டு மூன்று வயது அதிகமிருக்கும்) பார்த்துத்தான் ஆச்சரியமாக இருந்தது. அவர்கள் ஸலூனுக்கு வந்து ஆறு மாதங்களுக்கு மேல் ஆகியிருந்ததைத் தலை மயிரின் அடர்த்தி மூலம் பறைசாற்றிக் கொண்டு, அந்தப் பிராயத்து இளைஞர்களிடமிருந்து வேறெந்த விதத்திலும் கூட மாறுபட்டவர்களாக இல்லாமலிருந்தார்கள். இன்று திடீரென்று அவர்கள் ஏன் சலூனுக்கு வரவேண்டுமென்று அவர் யோசித்தார். ஒரு வேளை யாருடனாவது தலைமயிரைப் பணயமாக வைத்துப் பந்தயம் கட்டி அவர்கள் தோற்றிருக்கலாம். அல்லது இந்தப் பேட்டையில் விருதாவாகச் சுற்றிக் கொண்டிருக்கும் ரவுடிப் பையன்கள் கும்பலைச் சேர்ந்தவர்களாக இவர்களும் இருக்கலாம்-அந்த மோட்டார் சைக்கிள் இளைஞனைப் போல. காலையிலிருந்து இரவு வரையில் இவர்கள் பஸ் ஸ்டாண்ட் வெற்றிலை பாக்குக் கடை, டீக்கடை, ஸலூன் என்று ஒவ்வொரு இடமாகப் போய் உட்கார்ந்து கொண்டு வருவோர் போவோரை வம்புக்கிழுத்துக் கொண்டிருப்பார்கள். சம்பந்தப்பட்ட கடைக்காரர்களும் இவர்களை எதுவும் சொல்வதில்லை. இதெல்லாம் தினசரி வாழ்க்கையின் ஒரு சாதாரணப் பகுதியாகிவிட்டது. ரோஷமிருந்தவர்களுக்கும் ரோஷம் மரத்துப் போய் விட்டது. எந்த வீட்டுப் பிள்ளையோ, யாருடைய பிள்ளையோ? அவனுடைய அப்பா செல்வாக்குள்ள இடங்களில் தொடர்புடையவராக இருக்கமாம். எதற்கு வீண் பொல்லாப்பு?
ஆம். ரவுடித்தனமே ஒரு பண்பாக வணக்கத்துக்கும் மரியாதைக்கும் உரியதாக ஆகிவிட்டது.
ஃபிலிம்ஃபேர் பையனுக்கருகில், பெஞ்சில், அன்றையத் தினசரி கிடந்தது. அது அவர்கள் வீட்டில் வாங்குகிற தினசரி இல்லை. ஆனால் உண்மையில், அதுதான் அவருக்குப் பிரியமான தினசரி. அவர் அதைக் கையிலெடுத்துக் கொண்டு, பெஞ்சில் அமர்ந்தவாறே அதைப் பார்வையிடத் தொடங்கினார்.
டில்லிக்கு வந்து இருபத்தி ஐந்து வருடங்களுக்கு மேலாக தினசரி காலையில் அவர் படித்து வந்தது அந்த தினசரியைத்தான். அதாவது அவர் உத்தியோகத்திலிருந்த வரை. ஆனால் இப்போது ரிட்டையராகி மகனுடன் அவனுடைய வீட்டில் தங்கியிருக்கும்போது, அவன் விரும்பித் தருவிக்கும் தினசரியைத்தான் அவரும் படிக்க வேண்டியிருக்கிறது. அவருக்கு விருப்பமான தினசரியையும் வேண்டுமானால் தருவிக்க அவன் தயாராகவே இருந்தான். ஆனால் ‘எதற்கு இரண்டு பேப்பர்!’ என்று அவர் தடுத்துவிட்டார். பலனாக, இப்போதெல்லாம் அவருக்கு தினசரி படித்த மாதிரியே இருப்பதில்லை.
இப்போது அவர் தன் பழைய தினசரியை வெகு நாட்களுக்குப் பிறகு ஆசை தீரப் படித்துத் தீர்த்தார். மனதில் ஒரு அலாதியான நிறைவு ஏற்பட்டது. இந்தத் தினசரியில் தலைப்புகளின் தன்மை, செய்திகளை வெளியிடும் முறை எல்லவற்றிலும் அவர்கள் இப்போது வாங்கி வந்த‌ திணசரியில் இல்லாத ஒரு அடக்கமும் அமைதியும் இருந்தது. அவருடைய மகனுக்கோ அந்த இன்னொரு தினசரியில் வரும் பளீரென்ற தலைப்புகள், காரசாரமான தலையங்கங்கள் இவைதான் பிடிக்கின்றன. எப்படி அவனுடைய மனைவியின் காரமான சமையல் பிடிக்கிறதோ, அப்படி எல்லாம் சுவையைப் பொறுத்த விஷயம்தான்.
அவ‌ருக்குத் த‌ன் மாட்டுப் பெண்ணின் ச‌மைய‌ல் பிடிப்ப‌தேயில்லை. ஆனால் என்ன‌ செய்ய‌ முடியும்? பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் இனி அவ‌ர் அதைத்தான் சாப்பிட்டாக‌ வேண்டும். க‌ல்யாணி இப்ப‌டி அவ‌ரை விட்டுவிட்டுப் போய் விட்டாளே! அவ‌ள் குண‌ம் மாதிரியேதான் அவ‌ள் ச‌ம‌ைய‌லும். சாத்வீக‌மாக‌ இருக்கும். ஆனால் ச‌ப்பென்று இருக்காது. அவ‌ள் இருந்த‌ வ‌ரையில் அவ‌ர் முடி வெட்டிக் கொள்ள‌ப் போகும் தின‌ங்க‌ளை ஒரு வைபவ‌மாக‌வே கொண்டாடுவாள்; ஸ்பெஷ‌லாக‌ ஏதாவ‌து ப‌ல‌கார‌ம் செய்து விடுவாள். அவ‌ர் ஸலூனுக்குப் போய்த் திரும்பி வ‌ந்த‌ பிற‌கு இர‌ண்டாவ‌து டோஸ் காப்பி, எண்ணெய், வெந்நீர் எல்லாம் த‌யாராக‌ இருக்கும். பாவ‌ம், அந்த‌க் கால‌த்து ம‌னுஷி. ‘பெண்க‌ள் விடுத‌லை இய‌க்க‌த்தினால் பாதிக்க‌ப்ப‌டாத‌வ‌ள். க‌ண‌வ‌னுக்கு பணி விடை செய்வ‌திலேயே நிறைவு பெறுப‌வ‌ள்.’ அவ‌ருக்குத் திடீரென்று அவ‌ள் மீது கோப‌ம் கூட‌ ஏற்ப‌ட்ட‌து. அவ‌ள் இருந்த‌ வ‌ரையில் அவ‌ரை அள‌வு மீறிச் சீராட்டிய‌த‌ன் கார‌ண‌மாக‌த்தானே, இன்று அவ‌ர் மிக‌ அதிக‌மாக‌த் துன்ப‌ப்ப‌ட‌ வேண்டியிருக்கிற‌து! ‘பாவ்லாவ்’வின் நாய் போல‌, முடி வெட்டிக் கொள்ளும் தின‌ம் வ‌ந்த‌வுட‌னேயே அவ‌ருடைய‌ நாக்கு ருசியான‌ சிற்றுண்டிக்கு ஏங்க‌த் தொட‌ங்குகிற‌து.
காலையிலிருந்தே அவ‌ருக்கு ந‌ல்ல‌ ப‌சி. ஆனால் வீட்டில் ‘பிரெட்’ கூட‌ இல்லை. பிரெட் தொழிற்சாலைக‌ளில் ஒரு வாரமாக ஏதோ ஸ்டிரைக் நடந்துகொண்டிருக்கிறது. அவருடைய மாட்டுப் பெண் அவளுடைய ’ஸ்பெஷாலிடி’யான உப்புமா கிண்டினாள். அவருக்கென்று இல்லை. எல்லோருக்குமாகத்தான். மாணவர் ரகளையொன்றைத் தொடர்ந்து யுனிவர்ஸிடி சென்ற இரண்டு வாரங்களாக மூடப் பட்டுக் கிடக்கிறது. அவருடைய மகன், மாட்டுப்பெண் இருவரும் யுனிவர்ஸிடியில் லெக்சரர்கள். இப்போது போனஸ் விடுமுறை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே இப்போது சில நாட்களாகவே தினசரி காலையில் பலகாரம், பிறகு தாமதமாகச் சாப்பாடு. பலகாரம் என்பது பெரும்பாலும் பிரெட், அல்லது உப்புமா.
உப்புமாவைக் கூட ஒருவர் மோசமாகப் பண்ண முடியுமென்பது அவள் மூலமாக அதைப் பண்ணிச் சாப்பிடுவது வரையில் அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. வழக்கம் போல எப்படியோ அதை விழுங்கிவிட்டு, ஹார்லிக்ஸ் கரைத்துக் கொடுத்தாள்.அதைக் குடித்துவிட்டு, ஸலூனுக்கு வந்து சேர்ந்திருந்தார்.
முள்ளங்கிப் பையன் முள்ளங்கியை முடித்துவிட்டு கொய்யாப் பழம் தின்னத் தொடங்கியிருந்தான். அவர் ஒரு கணம் பொறாமையுடன் அவனைப் பார்த்தார். கொய்யாப் பழத்தையும் அவன் அந்தக் கத்தியால்,நறுக்கித்தான் தின்றான். தின்னுவதை விடவும் அதிகமாக அந்தக் கத்தியைப் பயன்படுத்துவதில்தான் அவனுக்கு இன்பம் கிடைத்தது போலிருந்தது.
ஆரம்பத்தில் முடி வெட்டிக் கொள்ள உட்கார்ந்தவர்களில் இருவர் எழுந்து போனார்கள். காத்திருந்தவர்களில் இருவர் எழுந்து அந்த இடங்களில் போய் உட்கார்ந்தார்கள். அவருடைய முறை வருவதற்கு இன்னமும் நேரமாகும். அவர் நாவிதர்களின் கைவரிசையைச் சற்று நேரம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார். ஃபிலிம்ஃபேர் பையன் இன்னமும் அந்தப் பத்திரிகையைக் கீழே வைக்கவில்லை. அங்கே வேறு பத்திரிகைகளும் இல்லை. அவருக்கு அந்தப் பையன் மீது அனுதாபமேற்பட்டது. அவ்வளவு ஒரு இடத்தில் அமர்ந்து எதயோ படித்துக் கொண்டிருப்பது அதுஃபிலிம்ஃபேராகவே இருந்தால் கூட-அவனுக்கு மிகவும் இயல்பற்ற ஒரு செயலாக அவருக்குப் பட்டது. என்ன துரதிர்ஷ்டம்! இந்த ஃபிலிம்ஃபேரை மட்டுமாவது அவன் படித்துத்தான் ஆகவேண்டியிருக்கிறது. இல்லாவிட்டால் நாளை யாராவது ராஜேஷ் கன்னா சம்பந்தப்பட்ட புதிய வம்பை அவனிடம் பேச வரும்போது அவன் பேந்தப் பேந்த விழிக்க வேண்டி வரும். பாவம்! இந்தப் படிப்பைக் கூட அவன் தவிர்க்க முடிந்தால்!
எல்லோருக்குமே ஆசையாகத்தான் இருக்கிறது, படிப்பைத் தவிர்ப்பதற்கு. படிக்காமலேயே புத்திசாலியாக இருக்கவே எல்லோரும் விரும்புகிறார்கள். அதாவது புத்தகப் படிப்புமட்டுமல்ல, வாழ்க்கைப் படிப்பும் கூடத்தான்.எம்.ஏ. படித்த தன் மாட்டுப் பெண்ணுக்கு கல்யாணியின் புத்திசாலித் தனத்தில் கால் பங்கு கூட கிடையாதென்று அவருக்குத் தோன்றுகிறது. இதை அவர் வாய் விட்டுச் சொல்ல முடியுமா? ரிடையராகிற சமயத்தில் அவருக்குத் துணையாக இருந்த ஒரு மகானுபாவன்,ஃபைல்களை ஆதியோடந்தம் படிப்பதையே கௌரவக் குறைச்சலா நினைத்துக்கொண்டு ஏதோ நுனிப்புல் மேய்ந்து தப்பும் தவறுமாக எதையோ எழுதி ஒப்பேற்றிக் கொண்டிருந்தான். அவனுக்கு சமீபத்தில் பிரமோஷன் கிடைத்திருப்பதாகச் சொன்னார்கள். அவருடைய மகன் பளீரென்ற தலப்புகளும், சாதாரணமான தலையங்கங்களும் உள்ள தினசரியைக் காலையில் கரைத்துக் குடித்துவிட்டு, நாளின் எஞ்சிய பகுதியில் வருகிறவர் போகிறவர்களிடம் அந்தக் கருத்துக்களைத் தன் கருத்துக்களைப் போலச் சொல்லிக் கொள்ளுகிறான். ஆனால், உண்மையில் அவனுக்கென்று எந்த விஷயத்திலும் எந்தவிதமான திடமான அபிப்பிராயமும் கிடையாது என்பதை அவர் வெகு நாள் முன்பே அறிந்திருந்தார். இல்லாவிட்டால் இவளுடைய சமையலை மறு பேச்சில்லாமல் இவ்வளவு நாள் சாப்பிட்டுக் கொண்டிருப்பானா, அறிவில்லாதவன். இப்படிப்பட்டவர்கள் மாணவர்களுக்கு என்ன போதிக்க முடியும், என்ன திடமான வழியை அவர்களுக்குக் காட்ட முடியும்?
கடைசியில் அவருடைய முறையும் வந்தது. அவர் நாற்காலியில் போய் உட்கார்ந்தார். நாவிதன் அவரைக் கழுத்துக்குக் கீழே வெள்ளைத் துணியால் போர்த்தினான். அவருக்குத் திடீரென்று அமைதியும் ஆசுவாசமும் ஏற்பட்டது. மீண்டும் சிறு பையனாகிவிட்டது போல; பொறுப்புகள் இல்லாதவராய், சீராட்டலுக்குரியவராய். இப்போது அவர் எதுவும் செய்ய வேண்டியதில்லை, எல்லாம் நாவிதன் பார்த்துக் கொள்வான். ஒரு நல்ல தந்தையைப் போல, தாயைப் போல மனைவியைப் போல. எல்லா நாவிதர்களிடமும் அவர் இப்படி ஆசுவாசமாக உணர முடிந்ததில்லை. ஒரு வருடம் முன்பு இவனைக் கண்டுபிடிக்கும் வரையில் அவர் எவ்வளவு சிரமப்பட வேண்டியிருந்தது!
பல வருடங்களாக கனாட் பிளேஸில் ஒரு குறிப்பிட்ட ஸலூனிலிருந்து ஒரு குறிப்பிட்ட கிழவனிடம்தான் அவர் முடி வெட்டிக் கொண்டார்; ஆனால் திடீரென்று ஒரு நாள் அந்தக் கிழவர் இறந்துவிட்டதாகச் சொன்னார்கள். அன்று இன்னொருவன் அவருக்கு முடிவெட்டி விட்டான். அவன் அவர் தலையைத் தொட்டுத் திருப்பிய விதம், தலைமயிரை வாரிய விதம், சிரைத்த விதம், காதுகளின் மேல் புறத்தில் மழித்த விதம், எல்லாமே அவருக்கு அருவருப்பூட்டின. அவர் அதன் பிறகு அந்த ஸ்லூன் பக்கமே போகவில்லை. நாவிதனுடன் நாம் கொள்ளும் உறவு வெறும் வார்த்தை உறவல்ல. ஸ்பரிச உறவு- மனைவியுடன் கொள்ளும் உறவைப் போல -சிலரால்தான் நாம் கவரப்படுகிறோம். சிலர் தீண்டுவதுதான் நமக்கு இதமளிக்கிறது. நம்மைக் கவராதவர்கள் பேச்சைப் பொறுத்துக் கொள்ளலாம். ஸ்பரிசத்தைப் பொறுக்க முடியாது. அவனை அவருக்குப் பிடிக்காமல் போனது அவனுடைய குறையென்றுகூடச் சொல்ல முடியாது. அவருடைய துரதிர்ஷ்டமென்றுதான் சொல்ல வேண்டும். இந்த துரதிர்ஷ்டம் பல நாட்கள் நீடித்தது. எத்தனை சலூன்களுக்குச் சென்றிருப்பார், எத்தனை நாவிதர்களிடம் பண்ணிக் கொண்டிருப்பார்! யாருமே அவருக்குத் திருப்தியளிக்க முடியவில்லை. கடைசியில் ஒரு வருடத்துக்கு முன்பு அவர் வீட்டருகிலேயே இந்த சலூன் திறந்தது. அதனுடைய முதலாளியாகிய இந்த நடுத்தர வயது நாவிதனிடம் தான் ஸலூன் நாற்காலிகளில் பெற விரும்பிய ஆசுவாசத்தை அவர் மீண்டும்-வெகு நாட்களுக்குப் பிறகு -பெற முடிந்தது. அவனுக்கு வயதென்னவோ முப்பத்தைந்துக்குள்தான் இருக்கும். ஆனாலும் அவருடைய பழைய கிழட்டு நாவிதரிடம் இருந்த அதே பக்குவமும் இங்கிதமும் மென்மையானதொரு கர்வமும் அவனுடைய ஒவ்வொரு அடைவிலும் ஸ்பரிசத்திலும் இருந்தது. அவன் ஒரு கலைஞன். தான் செய்கிற தொழில் குறித்து அவனுக்குத் தாழ்வு மனப்பான்மை கிடையாது. இந்தத் தாழ்வு மனப்பான்மை விளைவிக்கும் முரட்டுத்தனமோ அல்லது போலியான பணிவோ அவனிடம் இல்லை.
கல்யாணியிடம் அவரைக் கவர்ந்ததும் இவ்வகைக் குணங்கள்தாம். அவளுக்கு அவர்பால் போலியான மரியாதை கிடையாது. தன்னம்பிக்கையின்மையும் பலவீனமும் ஏற்படுத்தும் காழ்ப்புணர்ச்சிகளும் போர்க் கோலங்களும் கிடையாது. தன் சூழ்நிலை, தன் வேலை,தன் உறவுகள் ஆகியவைபால் அவளுக்கு ஒரு நிச்சயமும் நம்பிக்கையும் இருந்தது. அன்பும் ஈடுபாடும் இருந்தது. ஷரத்துகளில்லாத ஈடுபாடு. அவளுடைய இந்த நிச்சயம் அவருக்கு அவர் வேண்டிய திண்மையையும் பாதுகாப்பையும் அளித்தது. அவளுடைய உலகம் குழப்பமில்லாத உலகம்; மிக எளிமையான உலகம். அந்த எளிமை வெகுளித்தனமானதல்ல, விவேகம் நிரம்பியது. முதிர்ச்சியை உள்ளடக்கியிருப்பது. இந்த நாவிதனின் எளிமையைப்போல. அவனுடைய மௌனத்தைப் போல.
இவனுடைய தொழிலின் தன்மை காரணமாகவே இவனுக்கு ஒரு முதிர்ச்சி ஏற்பட்டிருக்க வேண்டும். இந்த நாவிதனுக்கு முடி திருத்திக் கொள்வதற்காக வருகிற பலர் இப்படி வெட்ட வேண்டும் அப்படி வெட்ட வேண்டும்’ என்று உத்தரவிடும்போதெல்லாம், மனிதர்களின் சுய முக்கியத் துவத்தையும் அகந்தையையும் அவன் நெருக்கத்தில் தருசித்து இந்தத் தரிசனங்களின் பின்னணியில் தன்னுடைய சுய அபிமானம், சுய வெளிப்பாடு ஆகியவற்றையும் தவிர்க்க முடியாமல் பரிசீலனைக்கு உள்ளாக்க நேர்ந்தது. மற்றவர்களை உறுத்தாத விதத்தில் இவற்றை மொண்ணையாக்கிக் கொள்வதற்குப் பயின்றிருக்க வேண்டும். சில புடவை அல்லது நகை வியாபாரிகளிடமும், தையல்காரர்களிடமும் இதே விதமான முதிர்ச்சியை அவர் சந்தித்திருக்கிறார். ஆனால் கல்யாணியின் முதிர்ச்சியை உருவாக்கிய உலைக்களம் எது என்றுதான் அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. தன்னுடைய ஆதி நாட்களின் முன்கோபமா? குடித்துக் குடித்துக் குட்டிச்சுவராய்ப் போன அவளுடைய அப்பாவின் பொறுப்பின்மையா? அவளுடைய நாத்தனாரின் தன் தமக்கையின் மௌடிகத்தை வித்தாகக் கொண்ட குரோதமும் பொறாமையுமா?
‘ஹேர் கட்’ முடிந்துவிட்டது. அவரைச் சுற்றியிருந்த வெள்ளைப் போர்வையை அவன் அவிழ்த்து உதறினான். டவலால் அவர் முகம், கழுத்து யாவற்றையும் அழுத்தித் துடைத்து, அவர் சட்டை மேலெல்லாம் தட்டினான். இவ்வளவு சீக்கிரம் முடிந்துவிட்டதேயென்று அவருக்கு ஏக்கமாக இருந்தது. அவர் நாற்காலியிலிருந்து இறங்கி, ஐந்து ரூபாய் நோட்டொன்றை எடுத்துக் கொடுத்தார். அவன் காத்திருந்த அடுத்த ஆசாமியை ‘வந்து உட்காரலாம்’ என்று சைகை செய்துவிட்டு, அங்கே அறை மூலையிலிருந்த மேஜையின் இழுப்பறையைத் திறந்து- அதுதான் அவனுடைய பணப்பெட்டி -அவருக்குச் சில்லறை எடுத்துக் கொடுத்தான். அவர் அதை எண்ணிக்கூடப் பார்க்காமல் சட்டைப் பையில் போட்டுக்கொண்டு, வந்தனம் தெரிவிக்கும் முறையில் அவனைப் பார்த்துப் புன்னகை செய்துவிட்டுக் கிளம்பினார். அந்தப் பணப் பரிவர்த்தனை அவர்களிருவரையும் எப்போதுமே சங்கடத்திலாழ்த்துவதாகத் தோன்றியது. அது அவர்களுடைய சம்பந்தம் பிரயோஜன ரீதியானது என்பதை உணர்த்தியது. அதுதான் உண்மையுமா? அப்படியல்லவென்று அவர் நினைப்பது – தன் சொந்த மகன் கூடத் தன்னிடம் காட்டாத ஒரு அக்கறையை   
இந்த நாவிதன் காட்டுவதாக நினைப்பது ஒரு பிரமைதானா?
அவர் சலூன் வாசலையடைந்த அதே சமயம் அந்த முள்ளங்கிப் பையன் பக்கத்து டீக்கடை ரேடியோவிலிருந்து ஒலித்த சினிமாப் பாடலினால் கவரப்பட்டு சற்று முன்னர் அங்கிருந்து எழுந்து சென்றிருந்தவன் – மீண்டும் சலூனுக்குள் பிரவேசித்தான். “நீ என்னப்பா, எனக்கு அப்புறமாக வந்தவர்களுக்கெல்லாம் பண்ணிவிட்டாய்; நான் இரண்டு மணி நேரமாகக் காத்திருக்கிறேன்! நீ என்ன, கிழடுகளுக்காக மட்டும்தான் கடை திறந்திருக்கிறாயா?” என்று திடீரென்று உரத்த குரலில் சத்தமிட்டான். நாகராஜனுக்குச் சுருக்கென்றது. அவர் சலூன் வாசலில் நின்றார். நாவிதன் சாந்தமாக ஏதோ பதில் கூற முயன்றான். அதற்குள் ஃபிலிம்ஃபேர் இளைஞன், “இந்த நாவிதனும் கிழடுமாதிரி தாண்டா -ஸாலா!” என்றான். இருவருமாக உரக்கச் சிரித்தார்கள். தொடர்ந்து அவனுடைய ஆண்மையைப் பற்றிச் சந்தேகம் தெரிவித்து இரு பொருள்பட அவர்கள் பேசிக் கொண்டு போனார்கள். அவனைச் சீண்டுகிற முறையில், ஃபிலிம்ஃபேர் பையன் ஒரு ஆபாச மான சினிமாப் பாட்டைப் பாடியவாறு அந்த நாவிதனைத் தழுவிக்கொள்ள முயன்றான். முதலாளி நாவிதனைத் தவிர அந்தக் கடையிலிருந்து வேறு இரண்டு நாவிதர்கள் எதுவுமே நடக்காதது போலத் தங்கள் வேலையில் ஆழ்ந்திருந்தார்கள். அவனும் பதட்டமில்லாமல், “தயவு செய்து இங்கே சத்தம் போடாதீர்கள்” என்று மட்டும் சொன்னான். கடைசியில் காத்திருந்த மற்றவர்கள் அந்தப் பையன்களின் நடத்தையில் அதிருப்தியுற்றவர்களாக, ஆனால் அந்த அதிருப்தியை வெளிப்படுத்தவும் தயங்கியவர்களாக அமர்ந்திருந்தார்கள்.
நாகராஜனுக்குப் பொறுக்கவில்லை. அந்த நாவிதனுக்கு ஆதரவாக ஏதாவது சொல்ல வேண்டும்போல இருந்தது. ஆனால் அவருடைய உதவி உண்மையிலேயே அவனுக்குச் சாதகமானதாக இருக்குமாவென்றும் அவருக்குச் சந்தேக மாயிருந்தது. என்ன இருந்தாலும் அவர் இந்த ஊர்க்கார ரில்லை. அவருடைய இந்தி உச்சரிப்பு அந்தப் பையன்களுடைய கொண்டாட்டத்தை அதிகப்படுத்தி, அவரை அவர்களுடைய கிண்டலிலிருந்து காப்பாற்றும் அதிகப் படியான பொறுப்பை வேறு அந்த நாவிதன் மேல் சுமத்தக்கூடும். அவருக்கு புஜபலமில்லை; வேறு பலங்களுமில்லை. அவர் அங்கிருந்து நடக்கத் தொடங்கினார். இதற்காகத் தன்னையே வெறுத்துக் கொண்டார். தான் செய்யத் தவறியவற்றுக்குச் சுலபமாகச் சமாதானங்கள் கற்பித்துக் கொள்ள அவரால் முடிகிறது. ஆனால் இந்தத் தர்க்கம் ஒரு இறுதியான விடையாகாது. அவருடைய கோழைத் தனத்துக்கு மன்னிப்பாகாது. ஆம், இதுவும் ஒரு கோழைத்தனம். அவன் முடிதிருத்தும் அழகை மனதாரப் பாராட்ட வேண்டும், அவனுக்கு ஏதாவது ‘டிப்’ கொடுக்க வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் நினைத்து, பிறகு அதை செயலாக்காமல் விடுகிறாரே, அதுவும் கோழைத்தனம்தான். கல்யாணியின் வேலைத் திறனை ஒரு முறைகூட வாய் நிறையப் புகழாமலிருந்ததும், அவளுடைய நாத்தனாரின் குரோத ஜ்வாலையில் அவள் வெந்த நாட்களில் வெளிப்படையாகத் தன்னை மனைவியின் பக்கம்தானென்று காண்பித்துக் கொள்ளாமலிருந்ததும் கூடக் கோழைத்தனம் தான். ‘என் மனசு அவளுக்குத் தெரியும்’ என்று அப்போதெல்லாம் அவர் தருணங்களை மீண்டும் அசைபோட நேருகையில், அந்தச் சமாதானம் அவருக்குத் திருப்தியளிப்பதாக இல்லை…
அவர் சாலையைக் கடப்பதற்காகக் காலையெடுத்து வைத்த சமயத்தில், சொல்லி வைத்தாற்போல அந்த மோட்டார் சைக்கிள் இளைஞன் பேய் வேகத்தில் நடைபாதைக்கு வெகு சமீபமாகச் சாலையில் தன் வாகனத்தைச் செலுத்திக் கொண்டு வந்தான். அவர் அவசரமாக முன் வைத்த காலைப் பின்னுக்கிழுத்துக் கொண்டார். மீண்டும் அவருக்குக் கோபம் வெடித்துக் கொண்டு கிளம்பியது. அந்த மோட்டார் சைக்கிள் இளைஞன் மேலெழுந்த கோபம் ஸலூனில் சற்று முன் பார்த்த பக்கம் திசை மாறியது. மறுபடி ஸலூனுக்குத் திரும்பலாமாவென்று நினைத்தார். சென்றிருப்பார்; ஆனால் அப்போது திடீரென்று “தாத்தா! தாத்தா!” என்று அவருடைய பேத்தியின் குரல் கேட்டது. அவர் எதிர்ச்சாரியைப் பார்த்தார். அங்கே அனு தன் அப்பாவின் கையைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்தாள். அவன் – அவருடைய பிள்ளை – வாயில் பீடாவைக் குதப்பிக் கொண்டிருந்தான். பீடா போட்டுக் கொள்வதற்காக அவன் வெளியே வந்திருக்க வேண்டும். அவர் ஸ்லூனுக்குத் திரும்பும் எண்ணத்தைக் கைவிட்டு, சாலையைக் கடந்து அவர்களருகில் வந்தார். “என்ன காட்டுமிராண்டித்தனமா விட்டுண்டு போறான்கள்!” என்று மோட்டார் சைக்கிள் இளைஞன் பற்றிய தன் மனத்தாங்கலை மகனுடன் பகிர்ந்து கொண்டார்.
மகன் ஒரு கணம் பேசவில்லை. பிறகு வெற்றிலைச் சாறை ‘புளிச்’சென்று துப்பிவிட்டு (அனு வியப்புடன் அப்பாவின் வெற்றிலைச் சாறு தரையில் விழுந்த இடத்தை ஒரு கணம் நின்று பார்த்தாள்) “பொழுது போகலை இவாளுக்கெல்லாம்!” என்றான். அவன் அந்த இளைஞனுக்கு அனுதாபம் தெரிவிக்கிறானா அல்லது அவனைக் கண்டிக்கிறானா என்று தெரியாமலிருந்தது. அவர் மேலும் கடுமையாக ஏதோ சொல்ல வாயெடுத்தார். அதற்குள் அனு அவரருகில் ஓடிவந்து அவர் சட்டையைப் பிடித்து இழுத்து, “தாத்தா, நீயும் ஸ்பிட் பண்ணு தாத்தா!” என்றாள்.
அவள் என்ன சொல்கிறாளென்று புரிந்து கொள்ள அவருக்குச் சில விநாடிகள் பிடித்தன. “நான் வெற்றிலை போட்டுக்கலையே!” என்றார்.
“நீயும் போட்டுக்கோயேன்”.
“இப்ப இல்லை; சாப்பிட்டப்புறம்”.
“அப்பா சாப்பிடறதுக்கு முந்தியே போட்டுண்டிருக்கா, பாரு!”
“நீ கொஞ்சம் தொணப்பாமல் வரமாட்டியா?” என்று மாதவன் – அவருடைய மகன் அவளைக் கடிந்து கொண்டான். அவள் அப்பாவைச் சற்றே முன்னே போக விட்டு விட்டு, பின்னாலிருந்து அவனுக்கு வலிப்புக் காட்டினாள்; தாத்தா மட்டும் பார்க்கும் படியாக, ‘உஷ்!’ என்று நாகராஜன் அவளுக்குச் சைகை காட்டினார். அப்பா எங்கேயாவது பார்த்துவிடப் போகிறார் என்பதைப் போல. தாத்தாவும் பேத்தியும் இப்படி நிறைய ரகசியமான தருணங்களைப் பகிர்ந்து கொள்வதுண்டு. அவள் அப்பாவின் கையை விட்டு தாத்தாவின் கையைப் பிடித்துக் கொண்டாள். “தாத்தா!”
“உம்?”
அவள் அவரைக் கீழே குனியுமாறு சைகை செய்தாள். அவள் ஏதோ ரகசியம் சொல்ல வேண்டுமாம்; அவர் குனிந்தார். அவள் அவர் காதில் கிசுகிசுத்தாள். “நீ சாப்பிட்டப்புறம் வெத்தலை போட்டுண்டு ஸ்பீட் பண்றயா?”
அவர் பதிலுக்கு அவள் காதில் கிசுகிசுத்தார். “சரி”.
அனு மட்டும் அந்த வீட்டில் இல்லாமலிருந்தால், இறுக்கமான மௌனங்களிலும் அபிப்பிராய மோதல்களிலும் அவர்கள் எப்போதும் உழன்று கொண்டிருப்பார்கள்; அவள் இருப்பதால் ஒருவருக்கு மற்றவர் சலித்துவிடும்போது, அல்லது பரஸ்பரம் உடன்பாடு ஏற்படாமல் போகும்போது, சட்டென்று அவளுடன் பேசத் தொடங்கிவிட முடிகிறது. பாவம், பெரியவர்கள் தன்னை எப்படிச் சாதுரியமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்களென்று அந்தக் குழந்தைக்குத் தெரியவில்லை. வீடு நெருங்கியதுமே முன்பாக ஓடிச் சென்று காலிங் பெல் விசையை அழுத்தினாள். அவளுடைய அம்மா வந்து கதவைத் திறந்தாள்.
அவர் வீட்டினுள் வந்ததும் உடைகளைக் களைந்துவிட்டு உடனடியாக குளிக்கப் போகாமல் சற்று நேரம் மின் விசிறிக்கடியில் வியர்வை உலர்வதற்காக உட்கார்ந்திருந்தார். ரேடியோ ஒலி சன்னமாகக் கேட்டுக் கொண்டிருந்தது; அவளுடைய மாட்டுப்பெண் தயா ரேடியோவுடன் சேர்ந்து, அதில் கேட்ட டியூனை முனகிக் கொண்டிருந்தாள். மாதவன் வெற்றிலையைத் துப்பிவிட்டு வந்து ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டிருக்க அனு அவனுக்குப் பழிப்புக் காட்டுவது போல ஒரு பென்ஸிலை சிகரெட் போல வாயில் வைத்துக் கொண்டு ஃபூஃபூ என்று ஊதிக் கொண்டிருந்தாள். சாப்பாட்டு மேஜை மேல் சாப்பிடுவதற்கான சாமக்கிரியைகள் தயாராக எடுத்து வைக்கப்பட்டிருந்தன. அமைதியான குடும்பச் சூழ்நிலை; நாகராஜனின் உடல் இலேசாக நடுங்கியது. வியர்வையின் ஈரம் படிந்திருந்த சருமத்தில் காற்றுப் பட்டதனால் இருக்கலாம். ஸலூனில் நடந்த நிகழ்ச்சியை அவர் நினைத்துக் கொண்டார். அந்த அறையின் அமைதியும் இதமும் திடீரென்று அவரை உறுத்தத் தொடங்கின. அது ஒரு மாயையாகத் தோன்றியது. வெளியே போக்கிரிகள் உலகைச் சின்னபின்னமாக்கிக் கொண்டிருக்கிறாரகள்.
குளித்துச் சாப்பிட்டு விட்டு அவர் தன் பேத்தியுடன் சற்று நேரம் விளையாடிக் கொண்டிருந்தார். அப்படியே கண்ணயர்ந்து விட்டார். காலையில் வெளியே சென்ற அசதி மீண்டும் விழித்துக் கொண்ட போது மணி நாலாகிவிட்டிருந்தது. காப்பி வாசனை அடித்தது. குழாயிலிருந்து ஜலம் விழும் ஓசை கேட்டது. இரை கொண்ட மலைப் பாம்பு போல நடுப்பகல் நேரத்தில் ஸ்தம்பித்துக் கிடந்த உலகம் மீண்டும் இயங்கத் தொடங்கிவிட்டது. அவர் முகத்தை அலம்பிக் கொண்டு வந்தபோது மேஜை மீது காப்பி தயாராக வைக்கப்பட்டிருந்தது. ஒரு வாய் அருந்தினார்; இன்று அவ்வளவு மோசமாக இல்லை. காலைக் காப்பியைப் பொறுத்த வரையில், அவர்தான் எல்லாரையும் விடச் சீக்கிரமாக எழுந்திருப்பாராகையால், அவரே கலந்து விடுவார். ஆனால் மாலையில், மாட்டுப் பெண் தயாரிப்பதைத்தான் குடிக்கவேண்டியிருந்தது.
முன் அறையிலிருந்து உரத்த பேச்சுக் குரல்கள் கேட்டன. பிற்பகல் நேரம்தான் பெரும்பாலும் அந்த வீட்டில் பேச்சு நேரம். அவர்கள் ‘சமூக மிருகங்களாக’ ஆகும் நேரம். மனிதன் தான் வெறும் மிருகமில்லை என்று தனக்கும் மற்றவர்களுக்கும் நிரூபித்துக் கொள்ள ஏன் இவ்வளவு பிரயாசை எடுத்துக் கொள்கிறான்? வெளியிலிருந்து யாரும் வராவிட்டால்கூட, அவர்கள் மூவரும் ஏதாவது பேசிக் கொண்டிருப்பார்கள். ஆனால் இன்று யாரோ வந்திருந்தார்கள் போலிருக்கிறது. அவருடைய பிள்ளையின் குரலையும் மாட்டுப் பெண்ணின் குரலையும் தவிர, இன்னொரு ஆண் குரலும் ஒரு பெண் குரலும் கேட்டன. அவையும் அவருக்குப் பரிச்சயமானவையாகவே தோன்றின. அந்தச் சிரிப்பு! ருஷ்யாவுக்குப் போய்விட்டு வந்திருந்த புரொபசர் மோட்வானி மாதிரியல்லவா இருக்கிறது! ஆமாம், அவர்தான் மனைவியுடன் வந்திருக்கிறார்… மோட்வானி அதே பேட்டையில் இன்னொரு ப்ளாக்கில் இருந்தார். தற்போதுள்ள துணை வேந்தருக்கு அடுத்த படியாக இவர் வருவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக சர்வகலாசாலை வட்டங்களில் பேசிக் கொள்ளப்பட்டது. சரியான இடங்களில் சரியான நபர்களை அவருக்குத் தெரிந்திருந்தது. சந்தர்ப்ப வசத்தால் ஏற்பட்ட அவருடைய இந்த அண்மையை மகனும் மாட்டுப் பெண்ணும் நன்றாகப் பயன்படுத்திக் கொள்வதில் முனைந்திருந்தார்கள். மாட்டுப் பெண்ணின் பங்குதான் இதில் அதிகமிருக்கும். அவள் அவளுடைய அப்பாவின் பெண்தானே?
அவளுடைய குரல்தான் எல்லாருடையதும் விட அதிகமாகக் கேட்டுக் கொண்டிருந்தது; சிரிப்பும் கூட. இரண்டாவது ஸ்தானம் பெறும் குரல் யாருடையதென்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டார். காப்பியிலிருந்து அவருடைய கவனத்தைத் திருப்ப இது பயன்பட்டது. அவருடைய‌ பிள்ளையின் குரல் அபூர்வமாகத்தான் எப்போதாவது ஒலித்தது. அவனை முத‌லிலேயே அவர் தள்ளுபடி செய்ய‌ வேண்டியதாயிற்று.
அவள் மாட்டுப்பெண் அவர்கள் எல்லாரையும் விட‌ அதிகமாக டிராயிங் ரூம் கலாச்சாரத்தில் ஊறியவளா யிருந்தாள். எல்லாம் பயிற்சியைப் பொறுத்த விஷயம்தான். அவளுடைய அப்பா அளித்த பயிற்சி. தீவிரச் சார்புகள் உள்ளவர்கள்போல் காட்டிக் கொள்ள வேண்டும். ஆவேசமாக எதையும் ஆமோதித்தோ அல்லது மறுத்தோ பேச வேண்டும். தன்னிடமோ பிறரிடமோ எதையும் புனிதமாகக் கருதாமல் ஒவ்வொன்றையும் ரஞ்சகப்படுத்த‌ வேண்டும். நாடகமாக்க வேண்டும். டிராயிங் ரூம் ஆடியன்ஸுக்காக. அவளுடைய அப்பாவுக்கு நாகராஜுக்கு இருந்த அளவுகூடத் தீவிரச் சார்புகள் கிடையாது. ஆனால் அவர் அப்படியிருப்பது போல நடிக்கத் தெரிந்தவர். பேசிப் பேசியே முன்னுக்கு வந்துவிட்டார். அவருடைய மகளும் இந்தத் திறமைகளுக்கு வாரிசாகியிருக்கிறாள்.
அவருக்கு இது போன்ற தருணங்களில் தன் மகன் மீது ஏற்படும் அனுதாபம் இப்போதும் ஏற்பட்டது. மகனே, இவர்கள் உன்னை ஏமாற்றிவிட்டார்கள். தாயின் தாத்தா காலத்திலிருந்து இவர்கள் டில்லியில் இருந்து வருகிறார்கள். நீயும் நானும் நேற்றைக்குத்தான் இங்கு வந்தோம். அவர்கள் வீட்டு டிராயிங் ரூம் சூழ்நிலை தேர்ச்சியான அந்த‌ நடிப்பு உன்னை மயக்கிவிட்டது. உன் அப்பவைப் போல‌ அன்றி அவர் உன்னுடன் அமர்ந்து சிகரெட் குடித்தார். அவருடைய பெண்ணும் மனைவியும் உனக்கு மது ஊற்றிக் கொடுத்து இனிய வார்த்தைகள் பேசி புதிய உலகங்களுக்கு அழைத்துச் சென்றார்கள். அது உண்மையிலேயே புதிதுதானென்று நீ நினைத்தாய். அவருடைய மகளுடன் நீ சுதந்திரமாகப் பேசவும் பழகவும் அனுமதித்து, தன் மதிப்பீடுகள் எவ்வளவு நவீனமானவையென அதன் மூலம் காட்டி உன்னைக் கவர்ந்தார். அதே சமயம், தன் மகளுடன் அந்த அளவு பழகிய பிறகு அவளைத் திரஸ்கரிக்க உன் மதிப்பீடுகள் இடந்தராதென்பதை உணர்ந்து அதன் மூலமே உன்னைச் சிறைப்படுத்தி விட்டார். மதிப்பீடுகளின் குழப்பம் உன் சுதந்திரத்தைப் பறித்து விட்டது. உனக்குப் பயிற்சியேயில்லாத ஆயுதங்களை உன் மேல் பிரயோகித்து உன்னை இவர் கட்டிப் போட்டுவிட்டார். எவ்வளவு நேர்மையற்ற, விதிகளை மீறிய விளையாட்டு!
ஆனால் இவருடைய விளையாட்டுகள் எல்லாமே விதிகளை மீறியவைதாம். அவருடைய வீட்டில் டெலிவிஷன் இருந்தது. பல விலையுயர்நத விளையாட்டுப் பொருள்கள் இருந்தன. அவற்றை வைத்து ஆசை காட்டி அவர் அனுவைத் தன்னுடன் இரண்டு நாள், மூன்று நாள் இருப்பதற்காக அழைத்துப் போவார். இதில் என்ன சாமர்த்தியமிருக்கிறது? நேர்மையுள்ளவனாக இருந்தால் அவனும் என்னைப் போல அனுவுக்குக் கதை சொல்லட்டும். அவளுடைய பாஷையில், அவளுடைய மட்டத்தில், அவளுடன் பேசட்டும். கொனஷ்டைகள் காட்டிச் சிரிக்க வைக்கட்டும். பிறகு பார்க்கலாம், அனு யாரிடம் வருகிறாளென்று. ஜப்பானிலும், ஜெர்மனியிலும் செய்த ரஞ்சகப் பொருள்களைச் சாட்சிக்குக் கூப்பிடுவானேன்!
நேற்றுக் கூட அவர் வந்திருந்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டுப் போனார். தவிர்க்க முடியாமல் சர்வகலாசாலை மூடப்பட்டிருந்தது பற்றியும், மாணவர் ரகளையைப் பற்றியும் – மாணவர்களுடைய போக்கைக் கண்டித்துப் பேசினார். இளைஞர்களிடையே ரவுடித்தனமே வாழ்க்கை முறையாகி வருகிறது, என்றார். இவன் பெரிய யோக்கியன் மாதிரி!
நாகராஜன், அவருடைய கட்சிக்கு எதிர்க்கட்சி எடுத்துக் கொள்ள வேண்டுமென்பதற்காகவே நேற்று அவரிடம் மாணவர்களை ஆதரித்துப் பேசினார். பெரியவர்கள் இளைஞர்களிடம் அக்கறை எடுத்துக் கொண்டு அவர்களைப் புரிந்துகொள்ள முயலுவதில்லை, என்றார். இளைஞர்கள் பாவம், தாரதம்மியங்களை ஆராயாமல் உணர்ச்சி வேகத்தில் அலைக்கழிக்கப் படுபவர்கள். பெரியவர்கள்தான் அவர்களைப் பக்குவமாக சரியான திசையில் திருப்பிவிட வேண்டும்…
இப்போது, தன்னுடைய நேற்றைய பேச்சை நினைத்து அவருக்குச் சிரிப்பாக இருந்தது. வெட்கமாகவும் இருந்தது. சே! நம்முடைய வெளிப்பாடுகள் பல சமயங்களில் எத்தகைய தவறான உந்துதல்களின் அடிப்படையில், தவறான நோக்கங்களுடன் உருவாகின்றன! சம்பந்திக்குப் பதிலாக வேறு யாராவது இருந்திருந்தால் நாகராஜனின் பேச்சும் வேறு விதமாக இருந்திருக்கும்.
அவர் காப்பியைக் குடித்து முடித்துவிட்டு அங்கேயே உட்கார்ந்திருந்தார். அடுத்த அறைக்குச் சென்று அங்கு நடந்த சம்பாஷணையில் கலந்து கொள்ள அவருக்குப் பயமாக இருந்தது. தம்முடைய வெளிப்பாடுகள் மறுபடி கட்டுக்கடங்காமல் தறிகெட்டுப் பாயத் தொடங்குமோவென்று கவலையாக இருந்தது…
அப்படியானால் அவருக்குத் தன் உந்துதல்களைப் பற்றிய நிச்சயமில்லையா?
கடைசியில், அங்கு உட்கார்ந்தும் அவருக்கு அலுத்துப் போயிற்று. அவர்களுடைய சம்பபாஷணையை வெறும் கிளர்ச்சியூட்டும் சாதனமாகப் பயன்படுத்தி, தம்மை வெளிப்படுத்திக் கொள்ளாமலேயே இருந்து விடலாம் என்று நினைத்தவராய் அவர் முன் அறைக்குச் சென்றார். அந்த மோட்டார் சைக்கிள் இளைஞனைப் போல, அவருக்கும் கிளர்ச்சி வேண்டித்தான் இருக்கிறதோ?
இன்றும், யுனிவர்ஸிடி மூடியிருப்பதைப் பற்றித்தான் இவர்களும் பேசிக் கொண்டிருந்தார்கள். இப்படியெல்லாம் ஏன் நடக்கிறது, தவறு யார் பக்கம் என்பதையெல்லாம் அலசிக் கொண்டிருந்தார்கள். நாகராஜன் அங்கே சென்றதும் “நமஸ்தேஜி!” என்று மோட்வானியும் மிஸஸ் மோட்வானியும் அவருக்கு வணக்கம் தெரிவித்தார்கள். நாகராஜன் பதிலுக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு அங்கிருந்த காலி நாற்காலியில் உட்கார்ந்தார்.
“தூங்கிக் கொண்டிருந்தீர்களாக்கும்!” என்றார் மோட்வானி.
“ஆமாம்”.
“இந்த வெதரில் வேறு ஒன்றும் செய்ய முடிவதில்லை”.
“அதுதான் யுனிவர்ஸிடியும் தூங்குகிறது போலிருக்கிறது!” என்றார் நாகராஜன். எல்லோரும் சிரித்தார்கள். ஒரு மரியாதைக்காக அவர்கள் சிரித்தது போலிருந்தது. நாகராஜனின் பிரச்னையே, இப்போதெல்லாம், அவரை யாரும் ஸீரியஸ்ஸாக எடுத்துக் கொள்ளாததுதான். வயது காரணமாக அவர் பலமுறை தன் இயலபை மீறிய உரத்த குரலில் பேசவும், எதிராளியை உசுப்புகிற விதத்தில் வார்த்தைகளைப் பயன்படுத்தவும் நேருகிறது.
“என்ன, யுனிவர்ஸிடியை எப்போது திறக்கப் போகிறீர்கள்?” என்று நாகராஜனே மறுபடி பேசினார், வேறு யாரும் பேசாததால்.
“என்னைக் கேட்டீர்களானால்? நான் வைசஸ்சான்ஸலர் அல்லவே!” என்றார் மோட்வானி.
“அட்லீஸ்ட், இதுவரையில் இல்லை” என்றாள் தயா, ஆண்களுடைய ஈகோவுக்குத் தீனி போடுவதில் பெண்களுக்கே உரிய சாமர்த்தியத்துடன். மோட்வானி அமுத்தலாகப் புன்னகை புரிந்தார். அவ்வளவுதான்; நாகராஜனுக்கு திடீரென்று அவருடைய ஈகோவைக் காயப்படுத்த வேண்டுமென்ற ஆசை பிறந்துவிட்டது.
“எனக்கு மாணவர்களின் எதிர்காலத்தை நினைத்தால் பயங்கரமாக இருக்கிறது” என்றார் அவர். அது பொதுவாகச் சொல்லப்பட்டதா அல்லது குறிப்பாகச் சொல்லப்பட்டதா என்று தெரிந்து கொள்ள முடியாமலிருந்தது. அவருடைய மகனின் முகத்தில் பதட்டம் ஏற்பட்டது. “அரசியல்வாதிகளின் விளையாட்டுக்குச் சர்வகலாசாலையும் ஒரு நிலைக்களனாகி விட்டதே!” என்றார் அவர் தொடர்ந்து. இதுவும் பொடி வைத்த வாக்கியம்தான். மோட்வானி ஒரு வலதுசாரி அரசியல் கட்சியுடன் சம்பந்தம் கொண்டிருந்தாரென்பது சிதம்பர ரகசியம்.
மோட்வானிக்கு ஏதாவது சொல்லாமல் இருக்க முடியவில்லை. கடவுளரின் ஓவியங்களில் தென்படுவது போன்ற ஒரு கருணை நிரம்பிய – தவறுகளை மன்னிக்கும் – புன்னகை அவர் முகத்தில் தோன்றியது. “இது ஒரு பரிச்சயமான ஆர்குமென்ட்” என்றார். “ஆனால் நான் உங்களை ஒன்று கேட்கிறேன் – சர்வகலாசாலையில் அரசியல் கலப்பில்லாமல் இருக்க வேண்டுமென்று நீங்கள் ஏன் எதிர்பார்க்கிறீர்களா? வாலிபப் பருவத்தையடைந்துவிட்ட ஒரு ஜனநாயகத்தில், ஒவ்வொரு மூலை முடுக்கிலும் – சர்வகலாசாலை உட்பட அரசியல் பிரக்ஞையும், வெவ்வேறு அபிப்பிராயக் குழுக்களும் ஏற்படுவது இயல்புதானே? மாணவர்களை அவர்களைச் சுற்றியுள்ள சமூகத்தின் காற்றே படாத வண்ணம் ‘இன்சுலேட்’ செய்யும் கல்விமுறை எமக்கு உடன்பாடு இல்லை. அத்தகையதொரு அமைப்பில் உருவாகும் மாணவர்கள், பிற்பாடு நடைமுறைச் சமூகத்துடன் தம்மைப் பொருத்திக் கொள்ள முடியாமல் திணறக்கூடும். மிருகக் காட்சிச் சாலையில் வெகுநாள் இருந்த பிறகு காட்டில் கொண்டு விடப்பட்ட மிருகங்களைப் போல”
“உயர்ந்த நோக்கம்தான்… இதை நேரடியாகவே அமுலாக்கலாமே!”
“எனக்குப் புரியவில்லை”.
“ஸ்டிரைக், வன்முறை, லஞ்சம், குழுச் சண்டை ஆகியவற்றில் வகுப்புகள் நடத்தலாம்; கட்சித் தலைவர்களின் பேச்சுத் தொகுப்பைக் கட்டாயப் பாடமாக வைக்கலாம்”.
“நான் சொன்னதை நீங்கள் மிக குறுகிய பிரமாணத்தில் புரிந்து கொள்கிறீர்கள்!”
“இருக்கலாம். நீங்கள்தான் எனக்கு தயவு செய்து தெளிவு ஏற்படுத்த வேண்டும்!”   
மோட்வானி மறுபடி ஜாக்கிரதையாகப் பொறுக்கி யெடுத்துத் தொடுத்த சொற்றொடர்கள் மூலம், தான் நம்பிக்கை வைத்திருக்கும் அல்லது அவர் நம்பிக்கை வைத்திருப்பதாகப் பிறர் அவரைப் பற்றி நினைக்க விரும்பும் – கருத்துகளுக்கு உருவகம் கொடுத்தார். நாகராஜன் மறுபடி இவற்றையெல்லாம் மோட்வானி தம்முடைய சுயலாபத்துக்குச் சாதகமான முறையில் தான் தேர்ந்தெடுத்திருப்பதாகத் தர்க்கம் புரிந்தார்.
“நீங்கள் என்னைப் புரிந்து கொள்ள விரும்பவில்லை” என்றார் மோட்வானி, சோர்வுடன். (அவ்வளவும் நடிப்பு!)
“நம்மிடையேயுள்ள வயது வித்தியாசம் காரணமாயிருக்க லாம் – ‘ஜெனரேஷன் கேப்’ – இல்லையா?” என்று நாகராஜன் மிஸஸ் மோட்வானியைப் பார்த்தார். அவள் அவர் பார்வையைத் தவிர்த்தாள். பிரபல இடதுசாரிப் பத்திரிகையொன்றின் சமீபத்திய இதழில், சர்வகலா சாலைகளில் அமைதியின்மை ஏற்படுவதற்கு முதல் காரணமாக அவள் தலைமுறை இடைவெளியை அடையாளம் கண்டுகொண்டு விளாசித் தள்ளியிருந்தாள். நமக்குத் தேவை மேலும் மேலும், மாணவர்களுடைய அலைவரிசையில் சிந்திக்கத் தெரிந்த இளம் லெச்சசரர்கள், என்று அறைகூவியிருந்தாள். அவளுடைய கவர்ச்சியில் கால் பங்குகூட இல்லாத மிஸ்டர் மோட்வானியைப் பார்க்கும் போது இளம் லெச்சரர்கள் சர்வகலாசாலையில் வேண்டுமென்ற அவளுடைய தாகம் புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. அந்த இடதுசாரிப் பத்திரிகையில் வழக்கமாக எழுதுவதோடு இல்லாமல், அதன் ஆசிரியர் குழுவிலும் மிஸஸ் மோட்வானி சம்மந்தப்பட்டிருந்தாள். இந்தச் சம்பவம் பல வி.ஐ.பி.- களுடைய அறிமுகத்தை அவளுக்குச் சம்பாதித்துக் கொடுத்திருந்தது. ருஷ்யா சென்று வந்த சர்வகலாசாலைப் பிரதிநிதிகள் குழுவில் மோட்வானி இடம் பெற்றதற்கு அவள்தான் முக்கியக் காரணமென்று பேசிக் கொண்டார்கள். அவளுடைய அரசியல் சார்பு மட்டுமல்ல, நாற்பதிலும் கட்டுக் குலையாத அவளுடைய உடலும் அவளுக்குச் சாதகமாக இருந்தது. மொத்தத்தில், வலது, இடது, நடுப்புறம் முதலிய எந்தத் திசையிலிருந்தும் பார்த்தாலும் மோட்வானியின் எதிர்காலம் பிரகாசம் நிறைந்த ஒன்றாக இருந்தது.
“ஸார், இதை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ள முயல வேண்டும்” என்று மோட்வானி மறுபடி பேசத் தொடங்கினார். அவருடைய குரலின் சுருதியும் தோரணையும் இப்போது கணிசமான அளவு மட்டுப்பட்டிருப்பதை நாகராஜன் திருப்தியுடன் கவனித்தார். “நான் ஒரு லட்சியத்தை,அடிப்படைக் கொள்கையை, மனதில் கொண்டு பேசுகிறேன். நடைமுறையில் நம் அரசியலும் சரி, சர்வகலாசாலையும் சரி, இந்த ல்டசியத்துக்குப் பல மைல் தூரம் தங்கியிருப்பதை நான் உணராமலீல்லை.”
“இதை நாம் உணர்ந்தால் போதும்” என்றார் நாகராஜன். (அயோக்கியன்! என்ன சப்பைக் கட்டு கட்டுகிறான்!”
“அதே சமயத்தில், நடைமுறையிலுள்ள சில குறைபாடுகள், ஆரோக்கியமான ஜனநாயகப் போக்குகளுக்கெதிராக நம்மை “ப்ரஜுடிஸ்” செய்துவிடக்கூடாது.
“உதாரணமாக, உங்கள் பேச்சுப் பிடிக்கவில்லை யென்பதற்காக எல்லாக் கிழவர்களிடமும் நாங்கள் பேசாமலிருந்தோமென்று வைத்துக் கொள்ளுங்கள்” என்று மிஸஸ் மோட்வானி மாதவனைப் பார்த்தாள். அவன் முகத்தில் பளிச்சென்று- அவளுக்காக வேண்டி- ஒரு அங்கீகாரப் புன்னகை மலர்ந்தது. அவன் இன்னும் சில நாட்களில் தன்னுடைய தீஸிஸைச் சமர்ப்பிக்க வேண்டும். இன்றைய சூழ்நிலையில், மோட்வானி வீட்டு நாயைக்கூட அவன் விரோதித்துக் கொள்ளத் தயாரில்லை. நாகராஜனை அந்தப் புன்னகை உசுப்பிவிட்டது. “கிழவர்களை உங்களுக்குப் பிடிக்காதுதான். மிஸஸ் மோட்வானி!” என்றாரோ, மிஸ்டர் மோட்வானியின் முகத்தில் சவக்களை ஏற்பட்டது. தயா அவசரமாக ‘இதோ வருகிறேன்’ என்று எழுந்து சென்றாள். மாதவன், சின்னா பின்னமாகத் தொடங்கியிருந்த அந்த மாலை நேரத்தை மிகத் தாமதமாகி விடுமுன் காப்பாற்றும் அவசரத்துடன், “இதென்ன, நாமெல்லாம் ஒருவரோடொருவர் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறோமோ?” என்றான். மோட்வானி அந்தத் துரும்பை நன்றியுடன் பற்றிக்கொண்டு “உங்கள் அப்பாதான் தொடங்கினார்” என்றார். “அவர் எங்கள் மேல் மிகக் கோபமாயிருக்கிறார் போலிருக்கிறது” என்றாள் மிஸஸ் மோட்வானி.(பிச்!)
“நோ, நோ” என்றார் நாகராஜன். “நான் சில விஷயங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ள விரும்பினேன். அவ்வளவுதான். மிஸ்டர் மோட்வானி-நான் தவறாக ஏதாவது சொல்லியிருந்தால் மன்னியுங்கள்.”
“சே, சே! தவறென்ன இதில்! இது ஒரு சிநேகமான சர்ச்சை” என்றார் மோட்வானி.
இப்படியாக, அவர்களுடைய விவாதம் டயர் ‘பங்சர்’, ஆன மோட்டாரைப் போலத் திடீரென்று பாதி வழியில் நின்று போயிற்று. அதற்கு ‘செயற்கைச் சுவாசம்’ அளிப்பது போல டிரிங்க்ஸ் ஊற்றிய கண்ணாடித் தம்ளர்களுடன் வந்தாள்.+ நாகராஜனைத் தவிர மற்றவர்கள் ஆளுக்கொரு தம்ளர் எடுத்துக் கொண்டார்கள். “சீர்ஸ்!”
இப்போது நாகராஜன் வெற்றிகரமாகத் தனிமைப்படுத்தப்பட்டு விட்டார். அந்த அறையில் பரவிய ஜின்னின் மணம் அவரைப் பார்த்துக் கொக்கரிப்பது போலிருந்தது. அவருடைய மாட்டுப்பெண் அவரை ‘செக்மேட்’ செய்து விட்டாள். குடிக்காத அவர் அவருடைய கருத்துக்களுடன் சேர்ந்து சட்டை செய்ய லாயக்கற்றவராகி விட்டார். புதிய உலகத்தின் துடிப்பையும் அசைவுகளையும் பற்றிஅவர் என்ன கண்டார்?
தயா தற்போது சர்வகலாசாலையின் துணை வேந்தராயிருந்த ஒரு வயதான மராத்திக்காரரின் பேசும் தோரணையைக் கேலியாக அபிநயம் பிடித்துக் காட்டினாள். அவர்கள் எல்லாரும் கண்களில் நீர் தளும்ப விழுந்து விழுந்து சிரித்தார்கள். அந்தத் துணை வேந்தர் நாகராஜன் மிகவும் மதித்த ஒரு அறிஞர், பண்பாளர். நாகராஜனுக்கு இருந்த இந்த மதிப்பை அவருடைய* மாட்டுப்பெண்ணும் அறிவாள். அவரைச் சீற்றம் கொள்ளச் செய்வதற்காகவே இப்படிச் செய்தாள் போலும். அவர் சற்று நேரம் பொம்மை போல அசையாமல் உட்கார்ந்திருந்தார். பிறகு,”ஓகே, யூ காரி ஆன்!” என்று அவர்களிடம் சமத்காரமாகச் சொல்லிவிட்டு எழுந்து வந்து விட்டார். காலையில் ஸலூனிலிருந்து வெளியேறியபோது உணர்ந்ததைப் போலவே இப்போதும் அவர் உணர்ந்தார்.
அந்த வீட்டுக்கு, நல்ல வேளையாக, ஒரு மொட்டை மாடி இருந்தது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் அதுதான் அவருக்கு ஆசிரமமளித்தது. அவர் மொட்டை மாடிக்குச் சென்று கைபிடிச் சுவர் மேல் சாய்ந்தாற்போல நின்று கொண்டு கீழே தென்பட்ட காட்சிகளை வேடிக்கை பார்க்கத் தொடங்கினார். முன் தோட்டத்தில், கீழ் வீட்டுச் சிறுவனுடன் விளையாடிக் கொண்டிருந்த அனு, நிமிர்ந்து அவரைப் பார்த்து கையை ஆட்டினாள். அவர் பதிலுக்கு அவரைப் பார்த்து கையை ஆட்டினார். கீழே வீட்டுச் சொந்தக்காரன் தன் குடும்பத்துடன் இருந்தான்; இவர்கள் இருப்பது முதல் மாடியில்.   
அவர் மொட்டை மாடியில் இங்குமங்குமாக உலவத் தொடங்கினார். தன் வெளிப்பாடுகளை ஆராயத் தொடங்கினார். தான் உண்மையிலேயே மிக அதிகமாகப் பேசிவிட்டோமோ? ஸலூனில் தன்னைக் காலையில் வெளிப்படுத்திக் கொள்ளாதது அவரை உறுத்திக் கொண்டே இருந்திருக்க வேண்டும். அது இப்படி அவரை வெடிக்கச் செய்திருக்க வேண்டும். அல்லது அவருடைய மகன், மாட்டுப் பெண் ஆகியோருடைய வாழ்க்கை முறை, மதிப்பீடுகள் ஆகியவற்றுக்கெதிராக அவர் போற்றி வரும் வெறுப்புணர்ச்சிதான் இத்தகைய சம்பாஷணைகளின்போது தளும்பி விடுகிறதோ? அல்லது அவர் காலத்தில் எஸ்.எஸ்.எல்.ஸி. வரை தான் படித்திருந்தாரென்ற ஒரு தாழ்வு மனப்பான்மை காரணமாக, அவருடைய மகனைப் போல மேல் படிப்பு படித்தவர்கள் கூட்டம் எவ்வளவு மேலோட்டமானதென்று தனக்குத் தானே நிரூபித்துக் கொண்டு திருப்திப்பட்டுக் கொள்ள அவர் விரும்புகிறார் போலும்.
தனக்குள் பதுங்கியிருந்த துவேஷங்களும் குரோதங்களும் அவரை எப்போதும் போல அன்றும் வெட்கமடையச் செய்தன. ‘நான் என்னைச் சற்று முன் வெளிப்படுத்திக் கொண்ட முறை மிக ஆபாசமானது’ என்று அவர் நினைத்தார். இல்லை. வெளிப்படுத்திக் கொண்ட முறைகூட ஆபாசமானதில்லை; உள்நோக்கம் ஆபாசமானது. முந்தின நாள் மாலை சினிமாத் தியேட்டரில் நடந்த நிகழ்ச்சியை அவர் நினைத்துக் கொண்டார். சாதாரணமாக அவர் அவர்கள் சினிமாவுக்குப் போகும்போது தான் வரவில்லையென்று வீட்டிலிருந்து விடுவாரென்றாலும் நேற்று என்னவோ அபூர்வமாக அவரும் அவர்களுடன் சென்றிருந்தார். ஒரு அசட்டுப் பிசட்டென்ற இந்திப்படம். அவருக்குத் தலையை வலிக்கத் தொடங்கிவிட்து. இன்டர்வெல்லுக்குச் சற்று முன்பாக வெளியே வந்து காப்பி ஸ்டாலில் காப்பி ஆர்டர் செய்தார். ஒரு வாய் அருந்தினார். கண்றாவியாக இருந்தது. இந்தக் காப்பிக்கு எழுபத்தைந்து பைசாவா? என்ன கயவாளித்தனம்! வேறு சிலரும் அந்தக் காப்பியை உறிஞ்சிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் முகத்தில் எந்தவிதமான பாவமும் இல்லை. உலகமே ரோஷமற்றுப் போய்விட்டதாக அவருக்குத் தோன்றியது. இது போன்ற படங்களைப் பார்க்கிறார்கள்; இது போன்ற காப்பியைக் குடிக்கிறார்கள்.
அவர் ‘டங்க்’கென்று ஓசையுடன் காப்பிக் கோப்பையைக் கௌண்டரில் வைத்தார்.   
“இந்தாப்பா!” என்று காப்பி கொடுத்துக் கொண்டிருந்தவனைக் கூப்பிட்டார். அவன் அவரருகில் வந்தான். “இதென்ன காப்பியா?”
“ஆமாம், ஸாப்”.
“இல்லை; இது காப்பியே இல்லை”.
அவன் பேசாமல் நின்றான்.   
“இது காப்பியில்லை” என்றார் அவர் மீண்டும். சுற்றியிருந்தவர்கள் அந்தப் பக்கம் பார்க்கத் தொடங்கினார்கள்.
“காப்ப்பிதான் ஸாப்”
“இல்லை”.
“இவ்வளவு பேர் குடித்தார்கள்; யாரும் எதுவும் சொல்லவில்லை. நீங்கள்தான்”
“அவர்களுக்குச் சுரணையில்லை. உனக்கு வெட்கமில்லை. எதையே ஒன்றைக் காப்பியென்று ஏமாற்றி இவ்வளவு பணம் வேறு பறிக்கிறாயே அயோக்கிய ராஸ்கல்!”
“கொஞ்சம் மரியாதையாகப் பேசுங்கள்”.
“உனக்கு மரியாதை வேறா திருட்டு ராஸ்கல்!”
அவ்வளவுதான்; அவன் அவர் சட்டையைப் பிடித்துவிட்டான். இதற்குள் இன்டர்வெல் விட்டு அங்கு நிறையக் கூட்டம் கூடிவிட்டது. பலர் அவர்களிடையில் குறுக்கிட்டு அடிதடி நேராமல் விலக்கி விட்டார்கள். அதே சமயம் அவருடைய மகனும் வெளியே சென்ற அப்பாவை இன்னும் காணோமே என்று அங்கே தேடிக் கொண்டு வ‌ந்து விட்டான்.
அந்த‌ வெளிப்பாட்டை இப்போது நினைத்துப் பார்க்கும் போது அவ‌ருக்குப் பெருமையாக‌ இருந்த‌து. துக்க‌மாக‌வும் இருந்த‌து. ச‌ண்டையைப் பிரித்து விட்டார்க‌ளே த‌விர‌ காப்பியின் த‌ர‌த்துக்கு எதிராக‌ அவ‌ர் உய‌ர்த்திய‌ குர‌லுக்குப் ப‌ல‌ம் சேர்க்க‌ யாரும் முன்வ‌ர‌வில்லை. அவ‌ர்க்குத்தான் ருசி கெட்டுப் போய்விட்ட‌தா? ருசியின் அடிப்ப‌டைக‌ளே மாறிவிட்ட‌ன‌வா?
எப்ப‌டியிருந்தாலும், அந்த‌ வெளிப்பாடு தூய்மையான‌து. இன்றைய வெளிப்பாடுகளைப் போல மோட்வானி போன்றவர்கள்பால் வெறுப்பு, மாட்டுப் பெண்ணின் பால் அதிருப்தி போன்ற உணர்வு கறை படியாதது. அவர் தன்னை இன்னமும் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும் தன் வெளிப்பாடுகளைச் சுத்தமாக்கிக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவருக்கும், இள வயதில் விதவையாக்கப்பட்டு அவருடனேயே தங்கி அவருடைய தாம்பத்திய வாழ்க்கையின் ஆரம்ப நாட்களை நரகமாக்கிய அவருடைய தமக்கைக்கும் என்ன வித்தியாசம்? அவளுக்குக் கல்யாணியிடம் தவறு கண்டுபிடிப்பதன் மூலமாகத்தான் தன் முக்கியத்துவத்தை ஸ்தாபித்துக் கொள்ள வேண்டியிருந்தது. அவருக்கும் அது போல ?
சே. சே.
இது அந்தக் காலமில்லை. அவருடைய மனைவி தன் நாத்தனாரைச் சகித்துக் கொண்டதைப் போல, அவருடைய மாட்டுப் பெண் அவரைச் சகித்துக் கொள்ள மாட்டாள். அவள் அப்படி இருக்க வேண்டுமென்று அவர் எதிர் பார்ப்பதும் நியாயமாகாது. இந்த அளவாவது அவள் அவரைச் சகித்துக் கொள்கிறாளேயென்று, வேளா வேளைக்குச் சோறு போடுகிறாளேயென்று – அவர் நன்றியுடன் இருக்க வேண்டும்.
அவர்களின்றி அவரால் இருக்க முடியாது. அனுவைப் பிரிந்து நிச்சயமாக இருக்க முடியாது. தனிமையைப் போக்கிக் கொள்ள அவர் அவர்களையே நம்பியிருப்பவர்.
தனிமை அவருக்குப் பிரியமானதில்லை. நேற்று சினிமாத் தியேட்டரில் ஒரு கணத்துக்கு அந்தப் பெருங்கூட்டத்திடையே தன் தனிமையை அவர் உணர்ந்தார். நேற்று அங்கே அவருடைய எதிர்ப்புக்குத் துணை கிடைக்காததுதான் இன்று சலூனில் அவரைத் தயங்கச் செய்திருக்க வேண்டும். தனிமையைப் பற்றிய பயம்தான், இறுதியில் மனிதனுடைய பாய்ச்சலைக் கட்டுப்படுத்துகிறது, அவனைச் சமரசங்களில் சிக்க வைக்கிறது.
அவருடைய மகனும் மாட்டுப்பெண்ணும் மட்டும் தம் வர்க்கத்தினரிடமிருந்து வேறுபடுகிறவர்களாயிருக்க வேண்டுமென்றும், தம்மைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டுமென்றும் அவர் எதிர்பார்ப்பது எப்படி நியாயமாகும்?
ஒருவேளை, அதன் மூலம்தான் அவர்களுடன் சேர்ந்து வசிப்பதை அவர் நியாயப்படுத்திக் கொள்ள விரும்புகிறார் போலும்.
அட, சுயநலக்காரக் கிழவா!
அவர் மீண்டும் கைப்பிடிச்சுவரருகில் சென்று சாலையைப் பார்த்தார். அவருடைய மகன், மாட்டுப்பெண், மோட்வானி தம்பதியர் நால்வரும் அப்போதுதான் வீட்டிலிருந்து வெளிப்பட்டு சாலையில் நடந்து கொண்டிருந்தார்கள். மோட்வானி எதற்கோ உரக்கச் சிரித்தார். அவருடைய மாட்டுப்பெண் தான் மறுபடி நகைச்சுவை மிளிர எதையாவது சொல்லியிருக்க வேண்டும்.
அவள் அவருடைய மகனைக் கவர்ந்த, அவனுடைய எதிர்ப் பண்பினள். அப்படியானால், அவள் கல்யாணியின் மறுபுறமா?
கல்யாணியின் சுயநலமின்மை, நேர்மையான வெளிப்பாடுகள்; தீவிர நம்பிக்கைகளும் அவற்றுக்காகப் போராடும் துணிச்சலும்.
கீழே அனு இன்னமும் அந்தச் சிறுவனுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். வீட்டுச் சொந்தக்காரன் ஒரு ஈஸிசேரில் சாய்ந்தவாறு வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தான். நாகராஜன் நிற்பதைக் கவனித்து ‘கீழே வாருங்களேன்’ என்று சைகை செய்தான்.
நாகராஜன் படிகளில் இறங்கிக் கீழே சென்றார். அவனருகில் இருந்த காலி நாற்காலியில் உட்கார்ந்தார். “உங்களுக்குத் தெரியுமா ஒரு விஷயம்- இந்த ஸலூனில் இருந்த நாவிதனை யாரோ இன்று கத்தியால் குத்தி விட்டார்களாம்” என்றான் வீட்டுக்காரன்.
நாகராஜனுக்கு படிகளில் இறங்கி வந்ததால் ஏற்பட்ட இதயப் படபடப்பு இப்போது மேலும் அதிகமாவது போலிருந்தது. “யார்”- என்று பதட்டத்துடன் தனக்கு வழக்கமாகப் பண்ணிவிடும் நாவிதனை விவரித்தார். அவன்தான், என்று வீட்டுக்காரன் ஊர்ஜிதப்படுத்தினவுடன், இதை நான் எதிர்பார்த்திருந்தேனா என்ன, என்று தன் விசாரணைக்காக அவர் வெட்கினார்.
பிறகு ஒரு இலேசான நம்பிக்கையுடன், ஒரு இலேசான பயத்துடன் கேட்டார். “உயிருக்கு ஆபத்தில்லையே?”
வீட்டுக்காரன் உதட்டைப் பிதுக்கினான். “ஆஸ்பத்திரிக்குச் செல்லும் வழியிலேயே உயிர் பிரிந்து விட்டதாம்.குத்தினது யார் தெரியுமா? ஒரு பதினெட்டு வயதுப் பையன்”.
ஆம். முள்ளங்கியும் கொய்யாப்பழமும் நறுக்கிக் கொண்டிருந்த அந்தப் பையனாகத்தான் இருக்கும். அவர் மேலே பேசவில்லை. ஒரு வேளை, தன்னால் இது நடக்காமல் தவிர்க்க முடிந்திருக்கலாம். தன் கைகளிலும் அந்த நாவிதனின் ரத்தக்கறை படிந்திருப்பது போன்ற பிரமை அவருக்கு ஏற்பட்டது.
வெளியே திடீரென்று அவருக்குப் பரிச்சயமான அந்த மோட்டார் சைக்கிள் ஓசை தூரத்தில் மெல்லியதாகக் கிளம்பி, கிடுகிடுவென்று வேகமாக உயர்ந்தவாறே அருகில் நெருங்கி உச்ச கட்டத்தை அடைந்து அவர்கள் செவிகளை அதிரச் செய்துவிட்டு, மறுபடி தூரத்தில் தேய்ந்து மறைந்தது.
“தாத்தா! ஆத்துக்குப் போகலாமா?” என்றாள் அனு. அவரருகில் வந்து.
அவர் அந்தக் குழந்தையின் பரிசுத்தமான ஸ்பரிசத்தினால் தன்னைக் கழுவிக் கொள்ளவிரும்பியவரைப் போல, அவளை அவசரமாக தன்னுடன் சேர்த்து இறுக அணைத்துக் கொண்டார்.
அன்புடன் ஆதி

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 35
  • Total likes: 35
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
குழந்தைக்கு ஜுரம்-தி.ஜானகிராமன்


னைவி சொன்னதைக் கேட்டார். குழந்தையைப் பார்த்தார். மணிபர்ஸைப் பார்த்தார். புத்தகம் போடும் பஞ்சாபகேசனை நினைத்தார். வாத்தியார் நெஞ்சு புகைந்தது. வயிற்றைப் பற்றிக் கொண்டு வந்தது.
“ஏண்டாய்யா, குழந்தையைக் கொடுத்தியே போதாதா? வியாதியை வேற கொடுத்து அனுப்பிச்சுருக்கியே அதை?” என்று மனசிலே சொல்லிக் கொண்டே சுவரில் அசைந்த காலண்டரை ப் பார்த்தார். அதில் பரமசிவன் மீசையும் மாடும் இரண்டு பிள்ளையுமாக உட்கார்ந்திருந்தார். வியாதி வெக்கை இல்லாத பிள்ளைகள்.
கழுவாத சாயங்கால மூஞ்சி மாதிரி எண்ணெய்ப் பாடம் கறுத்து மின்னும் தலையணையில் தலை வைத்துக் குழந்தை மல்லாந்து படுத்திருந்தது. மூன்று நாளாக மூடிய கண் திறக்கவில்லை. நெற்றியில் நெருப்புப் பறக்கிறது. சளி ஜுரமா, பிடிவாத ஜுரமா இன்னும் டாக்டருக்குப் பிடிபடவில்லை. நெற்றியில் நெருப்புப் பறக்கிறது. மாசம் பிறந்து இரண்டாவது வாரம் பாதி நடக்கிறது. இல்லின், மைஸின் என்று என்னவோ எழுதிக் கொண்டிருக்கிறார் டாக்டர். தம் கையிலே இருக்கிற பெட்டியைப் பிரிக்க யோசனை, ‘ட்யூஷன்’ சொல்லிக் கொடுத்து உளவடைக்க டாக்டருக்கு அவ்வளவு சின்னக் குழந்தைகளும் இல்லை. சந்நிதித் தெரு வன்னியர் வீட்டு ‘ட்யூசன்’ பணம் எட்டு ரூபாய் தீர்ந்துவிட்டது. என்ன செய்யலாம் என்று மனசை நோண்டும்போதுதான் மனைவி அதை ஞாபகமூட்டினாள்.
“இன்னும் ஒரு புஸ்தகம் அச்சுப்போட எழுதிக் கொடுத்தீங்களே, அதைத் திருப்பிக் கேக்கறாப் போலாவது அந்தப் பாவியைப் பார்த்துக்கிட்டு வாங்களேன்” என்றாள் அவள்.
“நீயே பாவிங்கறே. நீயே போகச் சொல்றியே?”
“வேற வழி இல்லேன்னா…” என்னவோ ரோசமாகச் சொல்லி வாக்கியத்தை முடிக்கத்தான் பார்த்தார். ஆனால் குழப்பத்தில் முடிவே மௌனமாகக் கரைந்துவிட்டது.
“இனிமேல் உங்க வீட்டுக் குத்துச் செங்கல் மிதிக்க மாட்டேன்யா” என்று புத்தகம் போடுகிற பஞ்சுவிடம் இரண்டு மாதம் முன்னால் சொல்லிவிட்டு வந்ததுதான்.
சின்னராஜா எம்.ஏ., எல்.டி. எழுதியதாக பஞ்சு பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளுக்குப் போடுகிற புத்தகங்களெல்லாம் இந்த சரவண வாத்தியார் எழுதிக் கொடுத்ததுதான். நாலு வருஷமாக இது நடந்துவருகிறது. இருபது புத்தகங்கள் ஆகிவிட்டன. பஞ்சு புத்தகத்துக்கு ஐம்பது ரூபாய் வீதம் ஏகபோகமாக உடைமையை எல்லாம் அவரிடம் எழுதி வாங்கி க்ஷேமமாக இருந்து வந்தார். நானூறு ரூபாய் மிச்சம் கொடுக்க வேண்டியிருந்தது.
ஆடி மாசம் பணத்துக்காகப் போய் நின்றார் சரவணவாத்தியார்.
“அடுத்த திங்கட்கிழமை ஒரு செக் வர வேண்டியிருக்கு. வந்தவுடனே, மாத்தி உம்ம வீட்டுக்கு வந்து உமக்குக் கொடுக்க வேண்டிய முந்நூறு ரூபாயையும் கொடுத்துவிட்டு மறுகாரியம் பார்க்கிறேன். சரிதானா?” என்றார் பஞ்சு.
முந்நூறு என்கிறானே!
“நானூறு ரூபாயில்லே?”
“நானூறா? நல்லா யோசிச்சுப் பாரும். போன வாரம் வந்ததிருந்தப்போ, நானூறு ரூபாய்னு சொன்னீர். இல்லை ஐயா, முந்நூறுன்னு திருத்தினேன். சரீன்னீரேய்யா.”
“இல்லே, நீங்க முந்நூறுன்னீங்க. நானூறுன்னு நான்தான் திருத்தினேன். நீங்கதான் சரின்னிங்க.”
“இல்லே, நல்லா யோசிச்சுப் பாரும்.”
சரவண வாத்தியார் நன்றாக யோசித்துப் பார்த்தார், நானூறு ரூபாய் நிச்சயம்.
“இல்லைங்க, நானூறுதான்.”
“ஏன்யா, எத்தினி நாளாய்யா இநத் வேலையை ஆரம்பிச்சிருக்கீரு? வாத்தியாராச்சேன்னு கொஞ்சம் இரங்கினத்துக்கா இந்தத் தண்டனை எனக்கு? ரங்கசாமி வாத்தியார்தான் போக்கடாப் பயன்னு நெனச்சேன். நீரும் சேந்துப்பிட்டீரா?”
வாத்தியாருக்கு உடம்பெல்லாம் பதறிற்று. அவர் வாத்தியார். யாரும் அவரை இப்படித் தூக்கி எறிந்து பேசுகிறதில்லை. என்ன இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவருக்கு மரியாதை உண்டு. அதாவது அவமரியாதை கிடைத்ததில்லை.
முட்டி வந்த ஆத்திரத்தை அமுக்கிக்கொண்டு, பணிந்த குரலில், “நீங்க தெரியாம சொல்றீங்க, நல்லா யோசனை பண்ணிப்பாருங்க” என்றார்.
“தெரியாமச் சொல்றேனா? நானா? நோட்டிலே எழுதி வச்சிருக்கேன்யா?”
“எடுங்க.”
“கடையிலே இருக்கு. இன்னிக்குச் சாயங்காலம் பார்த்தேன். அப்புறம் என்ன?”
“என்ன எழுதியிருக்கீங்க?”
“உமக்குக் கொடுக்க வேண்டியது ஆயிரம். எழுநூறு ரூபா உம்ம பத்துவழி ஆயிருக்கு.”
“அறுநூறில்லே?”
“ஏன்யா, செலவுக்கு வேணும்னு போன மாசம் இரண்டாம் நாள் ராத்திரி வந்து ஐம்பது ஐம்பதுன்னு வாங்கிண்டுப் போனீரய்யா.”
“நான் ரண்டு தடவை வந்தது வாஸ்தவம். ஆனா ஒண்ணும் வாங்கலியே!”
“வாங்கலியா? என்னமாய்யா இப்படித் துணிஞ்சி சொல்ல நாக்கு வரது உமக்கு? பையன்களுக்கெல்லாம் தர்மம் போதிக்கிறீரே. வாண்டாம்யா. இதெல்லாம் விட்டுடும். இப்படி இருந்தா லட்சுமி நீர் இருக்கிற தெருப்பக்கம் கூட வரமாட்டா.”
“பஞ்சு, நெசமாத்தான் சொல்றீங்களா?”
“நெசமாத்தானா? நான் என்ன உமக்குப் புடிச்ச சிஷ்யப் பையனா, உம்மோட உள்ளாக்காட்டி விளையாடறதுக்கு.”
ஒரு வார்த்தைக்குப் பத்து வார்த்தையாகப் பஞ்சுவின் வாயிலிருந்து தெறிக்கின்றன. குரலும் பெரிய குரல். வாத்தியார் கலங்கியேவிட்டார்.
“அப்ப முந்நூறுதான்னு சொல்றீங்க.”
“வேணும்னா நாளைக்கு காலமே வந்து நோட்டைப் பாருமே, எழுதியிருக்கேனா இல்லியான்னு.”
”நீங்க நோட்டிலே எழுதினதுக்கு நானா பொறுப்பு? எனக்கு நேர எழுதலியே.”
வாத்தியாருக்கே ஆச்சரியமாக இருந்தது, எப்படி இதைச் சொன்னோம் என்று.
“அப்படியா? நான்தான்யா அயோக்கியன். நீர் பரம யோக்கியர். அரிச்சந்திரன். ஐயா, இனிமே உம்ம சகவாசம் நமக்கு வாண்டாம்யா. நீர் எழுதிக் கொடுத்த புஸ்தகம் இன்னும் ஒண்ணே ஒண்ணு இருக்கு. அதை எடுத்துக் குடுத்துடறேன். நல்ல யோக்யனா, நல்லவனா, புஸ்தகம் போடற ஆள் யாராவது இருப்பான். அவன்கிட்ட கொண்டு குடுத்துக்கும்.”
சரவண வாத்தியார் வாய் அடைத்து நின்றார். இந்த லட்சணத்தில் வேறு யாரோ இரண்டு பேர் அங்கு வந்திருந்தார்கள்.
பஞ்சு சொன்னார் “ஓய் சரவணம், இப்ப ரொம்ப சங்கடமான நிலையில் மாட்டிவிட்டீரையா என்னை? இந்த உலகத்திலே வாத்தியார்னு சொன்னா அவா கட்சியைத்தான் யாரும் எடுத்துப்பன். இந்த இரண்டு பேரும் இப்ப உமக்குச் சாதகமாகப் பேசினால்கூட நான் ஆச்சரியப்படறதுக்கில்லே. என்னை இந்த மாதிரி இக்கட்டா கொண்டு நிறுத்திப்பிட்டீரே.””
“சாயங்காலம் நோட்டைப் பார்த்தவங்க தப்பாச் சொல்லுவாங்களா?” என்றார் வந்திருந்த இருவரில் ஒருவர்.
ஒரு தடவை அந்த ஆசாமியை அர்த்தம் இல்லாமல் பார்த்துவிட்டுப் பஞ்சுவின் பக்கம் திரும்பினார் வாத்தியார்.
“பஞ்சு, ஒரு கால் கடுதாசி கொடுங்களேன்” என்றார்.
“இதோ!”
வாத்தியார் விறுவிறுவென்று எழுதினார். “இருபது புத்தகங்கள் எழுதிக் கொடுத்ததற்காகப் பஞ்சு பிரசுரம் உரிமையாளர் சோ.பஞ்சாபகேசனிடம் நான் வாங்கிக் கொண்ட ரூபாய் ஆயிரம். இத்தோடு என் கணக்குத் தீர்ந்துவிட்டது” என்று கையெழுத்திட்டு எழுதி நீட்டினார்.
“என்னது?”
“பாருங்க.”
பஞ்சு பார்த்தார். “எல்லா ரூபாயும் வாங்கிக்கொண்டதாக எழுதிக் கொடுத்துவிட்டீரா? எனக்கு என்னத்துக்கையா பிச்சைக்காசு?” என்று அதைக் கிழித்து எறிந்தான் பஞ்சு. “இந்தக் கிண்டல்லாம் வாண்டாம். திங்கட்கிழமை உமக்கு மூந்நூறு ரூபாய் வரும்,”
“உம்ம ரூபாயே எனக்கு வாண்டாம்.”
“என் ரூபாய் என்ன? உம்ம ரூபாய் அது. கொண்டு வந்து கொடுத்துடறேன். வாண்டாம்னா நீர் கிழிச்சுப் போட்டுக்கும். எனக்கு என்னத்துக்கு? இந்த மாதிரி யார்கிட்டியும் எனக்கு ஏற்பட்டதில்லை ஐயா.”
“அப்ப நான் வரட்டுமா?”
“சரி.”
வாத்தியார் திரும்பினார். அவர் மனதில் புயல் அடித்தது. அரிக்குஞ்சட்டியில் குழந்தை தண்ணீரைத் தட்டுகிற கலக்கமாகத்தான் பஞ்சுவுக்கு அது தோன்றிற்று.
கூட வந்தார் பஞ்சு. “ஓய், சும்மா மனசை அலட்டிக்காதீர். நல்ல யோசிச்சுப் பாத்து வந்து சொல்லும். நான் அப்படி எல்லாம் வார்த்தை புரளமாட்டேன்யா. நாளைக்கு வரீரா?”
“இனிமே இந்த வீட்டுக் குத்துச் செங்கல் ஏறுவனா!”
“அப்படியா? அப்படின்னா உம்ம சௌகரியம். சரி, பணத்தை அனுப்பிச்சுடறேன். அதையும் உம்ம வீட்டுக் குத்துச் செங்கல் ஏறவிடாமல் அடிச்சுப்பிடாதீர்.”
வாத்தியார் பதில் சொல்லவில்லை. பேசாமல் தெருவில் இறங்கி நடந்துவிட்டார். மனிதனுக்குப் பொய் சொல்ல எப்படி மனசு வரும்? திருடலாம், கொல்லலாம், கற்பை இழக்கலாம். அவர்களோடு பழகலாம். பொய் சொல்பவர்களோடு எப்படிப் பழகமுடியும்? பொய்! பொய்யா? பொய் எப்படிச் சொல்ல முடியும்? வாத்தியாருக்குப் புரியவில்லை. பதறிற்று. திட்டம் போட்ட கயமையாக இருக்கிறதே இது!
“இருபத்தோராவது புத்தகத்தை இவனிடமா கொடுக்கிறது? சை! எப்பேர்ப்பட்ட புத்தகம்!” ஆனால் புறப்பட்டு வந்த கோபத்தில் அதை வாங்கிக்கொள்ளவில்லை. வீட்டுக்கு வந்தார். பெண்டாட்டியிடம் ஒருமுறை எல்லாவற்றையும் சொல்லி அழுதார். புகைந்தார். மனசாரத் திட்டினார். அப்புறம் அந்தப் பக்கம் தலை காட்டவில்லை. பணமுடை நாலு தடவை கழுத்தைப் பிடித்தபோதும் தைரியமாக இருந்துவிட்டார்.
நேற்றோடு பதினேராவது திங்கட்கிழமை போய்விட்டது. வலிய வருகிறேன் என்று பயமுறுத்திய பணம் வரவில்லை.
மீண்டும் போகலாமா? பொய்யனை எப்படிப் பார்க்கிறது?”
“குததுச் செங்கல் ஏறமாட்டேன்னு சொல்லிவிட்டேன் தெரியுமா?” என்றார்.
“ஏறாம வாசல்லெ நின்ன வாக்கிலே கேளுங்க.”
“நான் போய்ப் பணம்னு கேக்கமாட்டேன்.”
“புதுப் புஸ்தகத்தைத் திருப்பி வாங்கி வராப்பல போங்களேன். அப்ப அவனாப் பேச்சு எடுககமாட்டானா?”
அதுவும் சரிதான் என்று பணமுடை காதோடு சொல்லிற்று. சமாதானம் இல்லை.
குழந்தை இன்னம் கண்ணைத் திறக்கவில்லை. ஹார்லிக்ஸ்தான் கொடுக்க வேண்டுமாம். இல்லாவிட்டால் திராட்சைப் பழத்தை ஜலத்தில் கொதிக்கவைத்துக் கொடுக்கலாமாம்.
பெருங்காயத் தகரத்தைத் திறந்தார். ஒரு ரூபாயும் பத்து நயா பைசாவில் ஆறும் மின்னின. இரண்டு பத்தை விட்டுவிட்டு மீதியை எடுத்துக்கொண்டார். பார்லி, திராட்சை வாங்கி வரலாம். வரும்போது, பஸ்ஸில் ஏறிப் பத்து நயா பைசாவுக்கு ஒரு டிக்கெட் வாங்கிக் கொண்டுபோய், இறங்கிப் பஞ்சுவின் வீட்டை நோக்கி நடந்தார்.
“பஞ்சு இருக்காரா?”
“வாங்க ஸார்” என்றான் ரத்தினமலை. ரத்தினமலை பஞ்சுவின் அந்தரங்க வேலைக்காரன். வாசலில் யார் வந்தாலும், “இருங்க, இருக்காங்களா பாத்திட்டு வரேன்” என்று ஒன்றுமே தெரியாதவன் போல உள்ளே ஓடிப்போய் வந்து, இருக்கிறார் அல்லது இல்லை என்று வந்த ஆளுக்கு ஏற்பத் தகவல் தருகிறவன்.
“இருக்காரா?”
“இருக்காங்க” என்று உள்ளே போகாமலே சொன்னான் அவன்.
“பாக்கலாமா?”
“பார்க்கலாம். அம்மாவுக்கு ரொம்ப உடம்பு ஜாஸ்தியா இருக்கு. ரத்த ரத்தமாச் சாயங்காலமே புடிச்சி வாந்தி எடுக்கறாங்க. அய்யா பக்கத்திலே உட்கார்ந்திருக்காங்க.”
“ரத்த ரத்தமாவா? என்ன உடம்பு?”
“என்னமோ தெரியலீங்க. திடுதிடுப்பினு வந்திடிச்சி.”
“திடுதிடுப்புனா? சாயங்காலாமா?”
“ஆமாங்க. சாயங்காலம் அஞ்சு மணி வரைக்கும் நடமாடிக்கிட்டுத்தான் இருந்தாங்க. அப்புறம் திடீர்னு தலை வலிக்கிதுன்னாங்க. ரத்தமா வாந்தி எடுத்திச்சு. டாக்டர் வந்து ஊசி போட்டுப் போனாரு. கண்ணைத் தொறக்கல. படுத்துக்கிடக்காங்க.”
“போய்ப் பார்ப்பதா வேண்டாமா? வேற்று மனிதரைக் கண்டதும் பஞ்சுவின் மனைவி கூச்சப்பட்டால் என்ன செய்கிறது? உள்ளே போவதா, திரும்பிப் போவதா என்று தெரியாமல் குழம்பிக் குழம்பி நின்றார் அவர்.
ஒரு பையன் தெருவில் ஓடிவந்து வாசல்படி ஏறினான். அவரைக் கண்டு நின்றான்,
“என்ன ஸார்?”
“என்னப்பா கையிலே?”
“ஐஸ் ஸார். அத்தங்காளுக்கு ரொம்ப சீரிஸ்ஸா இருக்கு. உள்ள வறிங்களா?” என்று கேட்டுக்கொண்டே ஓடினான்.
இதற்கிடையில் வேலைக்காரப் பையன் உள்ளே போய் வந்துவிட்டான்.
“நீங்க வந்திருக்கீங்கன்னு சொன்னேன். ஒண்ணும் சொல்லலை ஸார்” என்றான்.
திரும்பிப் போகலாமா? வந்த சமாசாரம் பஞ்சுவுக்குத் தெரிந்துவிட்டது. உள்ளே போகாமல் திரும்பிவிட்டால் என்ன நினைத்துக் கொள்வார்? அவர் மனைவி கூச்சப்பட்டால்… கூச்சம் என்ன? அப்படி உடம்பாக இருந்தால், கூச்சமா தெரியப்போகிறது? உண்மையில் கவலைக்கிடமாக இருந்தால் கூச்சமும் சங்கோசமுமா வரும்?
செருப்பைக் கழற்றிவிட்டு உள்ளே போனார். என்ன இது?
அவர் எதிர்பார்த்தவாறு இல்லை. உள்ளே ஏக கூட்டம். பஞ்சுவின் மனைவி படுக்கையில் கிடந்தாள். சுற்றி ஏழெட்டுப் பெண்கள். பஞ்சு, மனைவியின் காலடியில் உட்கார்ந்திருந்தார். பஞ்சுவின் குழந்தை இரண்டு தூங்கிக் கொண்டிருந்தன. இன்னொரு குழந்தை விசித்து விசித்து அழுதுகொண்டிருந்தது. அதை ஒரு பாட்டி சமாதானம் செய்துகொண்டிருந்தாள். இரண்டாவது குழந்தை விவரம் தெரிந்த பெண். அது திகில் படர்ந்த முகத்துடன் சுவேரோரமாக அப்பாவைப் பார்த்த வண்ணம் சிலையாக உட்கார்ந்திருந்தது. தலைப்பக்கம் உட்கார்ந்திருந்த அம்மாளின் கண் அழுது கலங்கிக்கிடந்தது.
“என்ன உடம்பு ஸார்?”
“சாயங்காலம் வரையில் ஒண்ணும் இல்லே. திடீர்னு அஞ்சு மணிக்கு ரத்தமா வாந்தி எடுத்தாள். தலை வலிக்கிறதுன்னாள்ளாம். கடைக்குப் பையன் ஓடிவந்து சொன்னான். வந்தேன். இப்படி பிரக்ஞையில்லாமல் கிடக்கா. டாக்டர் வந்து ஊசி போட்டார். பயப்பட வாண்டாம்னார். என்னன்னு கேட்டேன். ஏதே பலஹீனந்தான்னட்டுப் போனார்” என்று பஞ்சு மனைவியின் முகத்தைப் பார்த்தார்.
வாத்தியாரும் பார்த்தார். கண் சொருகியிருந்தது. திடீரென்று பல்லை நறநறவென்று கடித்தாள் நோயாளி. கை விறைத்தது. உடம்பைப் போட்டு முறித்துக்கொண்டாள். பயங்கரமாக இருந்தது. எல்லோரும் அமுக்கி அவளைப் பிடித்துக்கொண்டார்கள். அமுக்க முடியாமல் அமுக்கினார்கள்.
“என்னடீம்மா இது? இப்படி முறிக்கிறதே! ஒண்ணும் புரியலியே. இந்தக் குடும்பத்தை இவ இல்லாட்டா யாருடீ காப்பாத்த முடியும்?” என்று தலைமாட்டு ஸ்திரீ புலம்பினாள். குபுகுபுவென்று அழுகை வந்தது அவளுக்கு.
“மறுபடியும் டாக்டரைக் கூப்பிட்டுப் பார்க்கணும், ஸார்” என்றார் வாத்தியார்.
“வீட்டு டாக்டர் சரியாப் போயிடும்னு சொல்லிட்டுப் போயிட்டார். ஆனா மறுபடியும் அழச்சிண்டு வரச்சொல்லிப் பையனை அனுப்பிச்சிருக்கேன். போயிருக்கான்.”
குழந்தை அழுதது. நினைத்து நினைத்து தலைமாட்டு அம்மாள் அழுதாள். ஐந்து நிமிஷத்துக்கு ஒருமுறை உடம்பை முறித்து வளைத்து விறைக்கிற போதெல்லாம் மற்றப் பெண்கள் அணைத்துப் பிடித்துக் கொண்டார்கள்.
“டாக்டர் பன்னிரண்டு மணிக்குத்தான் வருவாராம்” என்றான் பெரிய பையன் வந்து.
“எங்கே போயிருக்காராம்?”
“தெரியலே. எனக்கு சந்தேகமாயிருக்கு.”
“என்ன?”
“அவர் பிள்ளை படுத்துண்டால் ஏந்திருக்க மாட்டார்னு சொன்னான். ஆளே இல்லவே இல்லைங்கறான். எது நெஜம்னு தெரியலே.”
“ராஜு டாக்டர் சேதி தெரிஞ்சதுதானே? படுத்துனுட்டால் என்ன கூப்பிட்டாலும் வரமாட்டாங்களே!” என்றது கும்பலில் ஒரு குரல்.
வாத்தியார் வெளியே ஓடினார். இரண்டு மூன்று டாக்டர்களின் வீட்டுக் கதவுகளைத் தட்டினார். “இல்லவே இல்லை. வரமுடியாது” என்ற இரண்டு பதில்களை மூடிய கதவே கொடுத்துவிட்டது. மூன்றாவது டாக்டரிடம் ஒடினார். மாடிப்பால்கனியிலிருந்தே டாக்டர் வியாதியைப் பற்றி விசாரித்தார். வாத்தியார் சொன்னதைக் கேட்டதும், “டாக்டர்தான் ஊசி போட்டிருக்கார்னேளே. காலமே வந்து எப்படி இருக்குன்னு சொல்லுங்கோ” என்று உள்ளே போனார். தாழ்ப்பாள் ஓசை கேட்டது. சட்டென்று பராங்குசத்தின் ஞாபகம் வந்தது வாத்தியாருக்கு. கூடப் படித்தவனாயிற்றே. ஒரு சைக்கிள் ரிக்ஷாவில் ஏறிக்கொண்டார். ஒரு மைல் இருக்கிறது பராங்குசம் வீடு.
“ஸார், பராங்குசம் ஸார்!”
“யாரு?”
“நான்தான் ஸார்.”
நான்தானென்றால் அடையாளம் தெரியுமோ? அவனைப் பார்த்தே ஒரு வருஷமாயிற்று.
“நான்தான் சரவணன் ஸார். வாத்தியார்.”
“ஓகோ, இதோ வந்துட்டேன்.”
அவரைக் கெஞ்சிக் கூத்தாடிக் கையோடு அழைத்துக் கொண்டே வந்துவிட்டார் சரவணம். சைக்கிள் ரிக்ஷா லொலொடவென்று சத்தம் செய்தது.
உள்ளே போய்ச் சேர்ந்தார் பராங்குசம். உடம்பு முறியாக முறித்தது. டாக்டர் எழுந்து “இப்படி வாங்க கொஞ்சம்” என்று பஞ்சுவையும் சரவணத்தையும் தனியாக வாசலுக்கு அழைத்துப் போனார்.
“ஸார், இது கிருமித் தொத்து, உடனே ஆஸ்பத்திரிக்குப் போனா ஆனதைச் செஞ்சிப்பிடுவாங்க. இப்படியே இன்னும் நாலு மணிநேரம் விட்டு வச்சா, ‘க்ரிடிக்கலா’ப் போயிடும். அப்புறம் ரொம்ப சிரமம். இப்பவே வாங்க. இப்ப ஆஸ்பத்திரியில் சேத்துட்டா நாளை மத்தியானம் திரும்ப வந்துடலாம். இங்கியே வச்சிருக்கிறது நல்லதில்லை. ஆஸ்பத்திரியிலேதான் இதுக்கு வசதி உண்டு. நானும்கூட வந்து அட்மிட் பண்ணிடறேன். என்ன சொல்றீங்க? அப்புறம் வருத்தப்படப்படாது.”
பஞ்சு உள்ளே வந்தார். பெண்மணிகளைக் கலந்து பேசினார். ஆஸ்பத்திரி என்றதும் தலைமாட்டு அம்மாள் புதிதாக ஒரு பாட்டம் ஆரம்பித்துவிட்டாள். “செவ்வாய்க்கிழமையும் அதுவுமா… இங்கேயே பார்க்க முடியாதா?”
பஞ்சுவும் கலங்கினதைப் பார்த்து, அவருக்கும் எல்லோருக்கும் தைரியம் சொல்லிவிட்டு, ஓடிப்போய் ஒரு டாக்ஸியைப் பிடித்து வந்தார் சரவணம். டாக்ஸி வந்த பிறகு மீண்டும் தகராறு. பிரக்ஞை வந்த மனைவி அடம்பிடித்தாள். சரவணன் அவளுக்கு வேறு நல்ல வார்த்தை சொல்லி சரி சொல்லச் செய்ய அரை மணியாயிற்று.
மெதுவாகக் காரில் ஏற்றினார்கள். சரவணமும் டாக்டரும் முன்னால் உட்கார்ந்து கொண்டார்கள்.
ஆஸ்பத்திரியில் பரபரவென்று ஒரு படுக்கையை ஒழித்துத் தயார் செய்தார்கள். டாக்டர் வந்தார். “நல்ல வேளை! இப்பம் கொண்டு வந்தீங்களே. இன்னும் ஒரு மணி ஆயிருந்ததோ சொல்றதுக்கில்லை. இனிமே பயம் இல்லை. கவலைப்படாதீங்க ஸார், காலமே பத்து மணிக்கு வீட்டுக்குப் போயிடலாம்” என்று தைரியம் சொன்னார். கவனித்தார்.
வாத்தியாருக்கு உயிர் வந்தது. மருந்து கொடுத்தார்கள். ஊசி போட்டார்கள்.
“அவர் மாத்திரம் இருக்கட்டும். நீங்கள்ளாம் போகலாம். இனிமே கவலையில்லை” என்றார் டாக்டர்.
“அப்ப நீங்க போங்க. நான் இருக்கேன். ரொம்ப தாங்க்ஸ் உங்களுக்கு” என்று நன்றி சொன்னார் பஞ்சு.
பாரங்குசத்தை வீட்டில் இறக்கிவிட்டது டாக்ஸி. வாத்தியாரும் இறங்கினார். பஞ்சு டாக்ஸிக்காகக் கொடுத்த மூன்று ரூபாய் போதவில்லை. காத்திருந்த கூலி ஒரு ரூபாய்க்கு மேல் ஏறியிருந்தது. மூன்று ரூபாய் ஆறணாவுக்குக் கையை விட்டு ஆறணாவை தந்தார் சரவணம். ஒரு ரூபாயைக் கொடுத்து மீதி பத்தணாவை வாங்கிக்கொண்டார்.
டாக்ஸி போனதும் திடீரென்று குழந்தையின் ஞாபகம் வந்தது சரவணத்துக்கு. அவர் சொன்னதைக் கேட்டுவிட்டு “ஒண்ணும் இல்லை. இந்த மாத்திரையைக் கொடுங்க சரியாயிடும்” என்று பராங்குசம் ஒரு மருந்தைக் கொடுத்தார்.
“என்ன கொடுக்கணும்?”
“ஒண்ணே கால் ரூபாய்.”
“ம் அப்புறம்…”
“கொடுங்களேன் நான் அந்தப் பக்கம் வந்தா வந்து பாக்கறேன்.”
“ரொம்ப நன்றி, பராங்குசம்.”
“இங்கேயே படுத்திருங்களேன். மணி ஒண்ணாச்சே. காலமே போயிக்கிறது.”
“குழந்தைக்கு மருந்து கொடுக்கணுமே!”
“அப்ப சரி, டாக்ஸியை விட்டுவிட்டீங்களே. சரி, ரிக்‌ஷாவாவது வைச்சிக்கிட்டுப் போங்க.”
“சரி, அப்ப வரட்டுமா?”
“ரைட், குட்நைட். ஒண்ணும் கவலைப்படாதீங்க, காலமே அந்தப் பக்கம் வந்தா வர்றேன்.”
“சரி.”
ரிக்‌ஷா எதற்கு? ஒன்றரை மைல்தான். நடந்தே போய்விடலாம். பையை எடுத்துச் சில்லறையை எண்ணினார். நயா பைசா எல்லாம் போய், ரூபாய், உடைந்து பத்தணா பாக்கி. தாகம் தாங்கவில்லை. சாயங்காலம் ஏழு மணிக்குச் சாப்பிட்டது. வெற்றிலைபாக்குக் கடையில் நாலு மலைப்பழமும் கலரும் சாப்பிட்டார். வெற்றிலை போட்டுக் கொண்டார். நடந்தார்.
ஹிஹிஹிஹி என்று யாரோ இருளில் சிரித்தார்கள்.
பாதி பயத்திலும் பிரமையிலும் உற்றுப் பார்த்தார் அவர். யாரும் இல்லை. ஜட்கா ஸ்டாண்ட்குதிரை! புல் தின்கிற சவடாலில் அது கனைத்தது. சரவணத்திற்கும் அடக்க முடியாமல் சிரிப்பு வந்தது. வீடு போகிற வரையில் சிரித்துக் கொண்டே போனார். நிலவு எழுந்ததைக் கண்டு பொழுது புலர்ந்த திகைப்பில் நாலைந்து நார்த்தங்குருவிகள் வாழைத் தோப்பில் சிரித்துக்கொண்டிருந்தன.


அன்புடன் ஆதி