Author Topic: குழந்தைகளையும் பாதிக்கும் மன அழுத்தம்  (Read 4931 times)

Offline kanmani

குழந்தைகளையும் பாதிக்கும் மன அழுத்தம்

பட்டாம்பூச்சியை போல சிறகடித்து பறக்கும் பருவம் மழலைப்பருவம். எது பற்றியும் கவலையில்லாமல் சுற்றித்திரிந்தாலும், அந்த பிஞ்சு மனங்களையும் காயமடையச் செய்யும் சில காரணங்கள் உள்ளன. தங்களின் சோகத்தை வெளியில் சொல்ல முடியாத பெரும்பாலான குழந்தைகள் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றன.

குழந்தைகளின் மன அழுத்தத்தை அதிகரிக்க பல காரணங்கள் உள்ளன. அவை:

ஒவ்வொரு பூக்களுக்கும் ஒவ்வொரு மனமுண்டு. அதுபோலத்தான் குழந்தைகளின் குணமும். குழந்தைகளின் மனதில் பாதிப்பு ஏற்பட்டால் சிலகுழந்தைகள் அழுது ஆர்பாட்டம் செய்வார்கள். ஒரு சிலர் கோபமாகவும், ஆத்திரமாகவும் இயலாமையை வெளிப்படுத்துவார்கள். சிலர் எப்போதும் சோகமாகவும், கவலையோடும் காணப்படுவார்கள். இதற்கெல்லாம் மருத்துவர்கள் கூறும் காரணங்களை தெரிந்து கொள்வோம்.

உறவில் விரிசல்

பெற்றோர்களிடையே ஏற்படும் பெரும்பாலான பிரச்சினைகள் குழந்தைகளை பாதிக்கின்றன. குடும்பத்தில் ஏற்படும் குழப்பமான சூழ்நிலைகளும் மன அழுத்தத்திற்கு காரணமாகின்றன. மிக நெருக்கமானவர்களின் பிரிவு. செல்லப்பிராணிகளின் இறப்பும் மனதை பாதிக்கின்றன.

தோல்விகள் பாதிக்கும்

சின்னசின்ன தோல்விகளைக் கூட தாங்க முடியாமல் சில குழந்தைகள் தங்களுக்குள்ளேயே நத்தையாக சுருங்கிவிடுகின்றனர். அடிக்கடி ஏற்படும் உடல் நோய்களும் குழந்தைகளின் மன அழுத்தத்தை அதிகரிக்கின்றன.

எதிர்பாராத துன்புறுத்தல்

பள்ளிகளிலோ, வெளியிடங்களிலே பிற குழந்தைகளினால் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படும்போது மன அழுத்தம் ஏற்படுகிறது. உறவினர்களோ, மற்றவர்களோ குழந்தைகளை தவறாக பயன்படுத்துவதும் பிரச்சினைக்கு காரணமாகிறது. பெற்றோரைப் பாதிக்கும் மனஉணர்வுகள் சில நேரங்களில் குழந்தையையும் பாதிக்கும்.

சில குழந்தைகளுக்கு இது பரம்பரையாகவும் வரலாம். அத்தகைய குழந்தைகள் மேலே காட்டப்பட்ட காரணங்களுள் ஏதேனும் ஒன்று ஏற்பட்டால் கூட அதை ஏற்றுக் கொள்ளவோ அல்லது சமாளிக்கவோ முடியாமல் அதிகம் திணறிப் போய் விடுவார்கள். வெகுவிரைவில் மனஅழுத்த நோய்க்கும் ஆளாகி விடுவார்கள்.

ஆதரவாய் இருங்கள்

மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் பெற்றோர்கள் மனம்விட்டு உரையாடவேண்டும். அவர்களை சொல்வதே கேட்டாலே பாரம் இறங்கிய உணர்வு குழந்தைகளுக்கு ஏற்படும்.

குழந்தைகள் கூறுவதை முழுவதுமாக கேட்டப்பிறகே பெற்றோர்கள் பேச வேண்டும். எதற்கெடுத்தாலும் இடைமறித்து குழந்தைகளை குற்றம் சொல்லக்கூடாது. ஆதரவு வார்த்தைகள், நம்பிக்கையூட்டும் வார்த்தைகளைச் சொல்லி அவர்களுக்கு ஊக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

செயல்பாடுகளை கவனியுங்கள்

சோர்வாய் இருக்கும் குழந்தைகளை அடிக்கடி கவனிக்க வேண்டும். இதனால் பெற்றோர் தன்னை கவனித்து வருகிறார்கள், தனது நலனில் அக்கறை காட்டுகிறார்கள் என்பதை குழந்தைகள் புரிந்து கொள்வார்கள். இந்த எண்ணமே அவர்கள் மனஅழுத்தத்தில் இருந்து விடுபட பெரிதும் உதவும்.

பிரச்சினைகளை புரிய வையுங்கள்

குழந்தைகளிடம் உள்ள பிரச்சினைகள் குறித்து வெளிப்படையாக பேசுங்கள். அவர்களுடைய பிரச்சினைகளை தெளிவாக புரிய வைப்பதன் மூலம் மன அழுத்தத்தில் இருந்து எளிதில் விடுவிக்க முடியும்.

குடும்பத்தோடு சுற்றுலாவிற்கு அழைத்துச்செல்வதன் மூலம் உற்சாகத்தை ஏற்படுத்தலாம். இடமாறுதலுக்காக உறவினர்கள் அல்லது நண்பர்களின் வீட்டுக்கு அனுப்பி வைக்கலாம். தங்களுக்குத் தேவையான பாதுகாப்பும், உதவியும் கிடைப்பதை உணர்ந்ததும் குழந்தைகள் மனஅழுத்தத்தில் இருந்து விடுபடுவார்கள்.

புதிய நண்பர்களை அறிமுகம் செய்து வைப்பது, புதிய இடங்களுக்கு அழைத்துச் செல்வது, புதிய விளையாட்டுக்களில் ஈடுபடுத்துவது, வளர்ப்புப் பிராணிகளைப் பரிசளிப்பது போன்றவைகளால் மன அழுத்தம் குறையும்.

மகிழ்ச்சியை ஏற்படுத்துங்கள்

எதை செய்தால் மனம் மகிழ்ச்சியடைகிறதோ அத்தகைய செயல்களை செய்வதற்கு அனுமதி அளியுங்கள். அது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுங்கள். தோல்விகளும், துயரங்களும் எல்லோருக்கும் ஏற்படுவதுண்டு. எனவே இது ஏதோ விபரீதமானதோ, அல்லது நடக்கக் கூடாததோ அல்ல என்பதை குழந்தைகளுக்குப் புரியும் படியாக எடுத்துச் சொல்லுங்கள். வேகமாக நடப்பது, ஓடுவது, போன்ற சாதாரண உடற்பயிற்சிகளை செய்யச் சொல்லி குழந்தையின் மனஉளைச்சலைக் குறையுங்கள்.

இந்த முறைகளை கடைப்பிடித்த பிறகும், மன அழுத்தத்திற்கான காரணத்தை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலோ அல்லது குழந்தையின் மனஅழுத்தம் குறையவில்லை என்றாலோ குழந்தை மனநல மருத்துவரின் உதவியை காலதாமதம் செய்யாமல் நாடுங்கள்.

சரியான நேரத்தில் சரியான மருத்துவரிடம் அழைத்துச் செல்லாமல் போனால் மற்றவர்களை வேண்டுமானால் நீங்கள் திருப்திப் படுத்தலாம், ஆனால் உங்கள் செல்லக் குழந்தையின் எதிர்காலம் பாழாகி விடக்கூடும். எனவே இதை மனதில் கொண்டு உறுதியோடு செயல்படுங்கள். ஒற்றுமையும், அபரிமிதமான பாசமும்தான் எத்தகைய நோய்களில் இருந்தும் குழந்தைகளை பாதுகாக்கும் என்பதை ஒவ்வொரு பெற்றோரும் உணர்ந்து கொள்ள வேண்டும்

Offline chinnu

thanks kanmani yedho kozhandha nu poturundhudhu athu naan intha pakkam vandhen anyway thanks marupadiyum enna pola kozhanthaningaluku potadhuku(F)(F)(F)(F)