Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
தமிழ் மொழி மாற்ற பெட்டி
https://translate.google.com/#view=home&op=translate&sl=en&tl=ta
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
காலக்கண்ணாடி
»
ஹிட்லரை பணிய வைத்த செண்பகராமன்...!
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ஹிட்லரை பணிய வைத்த செண்பகராமன்...! (Read 289 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 221483
Total likes: 27205
Total likes: 27205
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
ஹிட்லரை பணிய வைத்த செண்பகராமன்...!
«
on:
May 29, 2025, 05:32:39 PM »
தென்னாட்டு போஸ் என்றும், ஒவ்வொரு இந்தியனின் உள்ளத்தையும் கிளர்ந்தெழச் செய்யும் ‘ஜெய்ஹிந்த்’ என்னும் கோஷத்தின் தந்தையாகவும் போற்றப்படுபவர் மாவீரன் செண்பகராமன். இந்தியாவை அடிமைப்படுத்திய வெள்ளை ஏகாதிபத்தியத்தை நடுநடுங்க வைத்தவர்களில் செண்பகராமன் முக்கியமானவர். 1914-ம் ஆண்டு முதல் உலக போர் நடந்த காலமாகும். உலகின் வயிற்றை கங்காரு குட்டி போல் மரண பயம் கவ்வியிருந்தது. இந்தியாவில் பிரிட்டன் மயான அமைதி ஏற்படுத்தி இருந்தது.
செப்டம்பர் 24-ந் தேதியன்று சென்னையில் திடீரென்று மூன்று குண்டுகள் வீசப்பட்டன. துறைமுகம் மற்றும் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் இரண்டும், உயர்நீதிமன்றத்தின் சுற்றுச்சுவரை சேதப்படுத்திய ஒன்றும் என மூன்று குண்டுகள் வீசப்பட்டன. எங்கிருந்து வந்தன அந்த குண்டுகள்? வெள்ளையர்கள் தலையை பிய்த்துக்கொண்டனர். நிச்சயம் வான் வழியில்லை. இவை கடல் வழியே எம்டன் என்ற ஜெர்மானிய கப்பல் மூலம் வந்தவை. கடலில் கப்பல்கள் மிதந்து வருவது ராட்சத வண்ணப்பறவை நீந்துவது போல் இருக்கும். எம்டனோ நீர்மூழ்கி கப்பல் ஆகும். இந்த கப்பலை இயக்கிய வழிகாட்டி செண்பகராமன் ஆவார். பிரிட்டிஷ் கப்பல் படை சுதாரிப்பதற்குள் செண்பகராமன் அவர்கள் கண்களில் மண்ணைத் தூவி பறந்துவிட்டார்.
15-9-1891-ல் திருவனந்தபுரம் புத்தன்சந்தை என்ற ஊரில் செண்பகராமன் பிறந்தார். அவரது பெற்றோர் சின்னசாமி பிள்ளை-நாகம்மா ஆவர். குழந்தை பிராயத்திலே செண்பகராமன் பெரும் நாட்டுப்பற்றுடன் இருந்தார். வெள்ளையருக்கு எதிரான அவரின் கலக மனநிலையை உணர்ந்த வெள்ளை அரசு அந்த ஊரை விட்டு அவர் வெளியேறக்கூடாது என தடை விதித்தது. செண்பகராமனுக்கு அப்போது கிடைத்த துணை சர் வில்லியம் ஸ்ட்ரிக்லாண்ட் ஆவார்.
இவர் ஜெர்மானிய உளவு அதிகாரி. முதலில் இருவரும் ரகசியமாக கப்பல் மூலம் இலங்கை சென்றனர். அங்கிருந்து இத்தாலி பயணமாயினர். அப்போது செண்பகராமன் வயது 15 ஆகும். போன இடத்தில் இத்தாலி மொழியைப் பயின்று இலக்கியமும், அறிவியலும் கற்றார். பின்பு செண்பகராமன் அங்கிருந்து சுவிட்சர்லாந்து சென்றார். அங்கு அறிவியல் பயின்று முனைவர் பட்டம் பெற்றார். மீண்டும் செண்பகராமன் ஜெர்மனி போனார். பொறியியல் பயின்று அங்கு முனைவர் பட்டம் பெற்றார்.
மாணவராக இருந்துகொண்டே செண்பகராமன் பொதுநலப்பற்றும் கொண்டிருந்தார். உலகில் எந்த மூலையில் ஒரு நாடு அடிமைப்பட்டு கிடந்தாலும் செண்பகராமன் மனம் குமுறுவார். பர்மா, துருக்கி, தென்ஆப்பிரிக்கா சென்று கிளைகளை அமைத்தார். ஆப்பிரிக்கா கண்டத்தில் நிலவிய நிறவெறி செண்பகராமனுக்கு மேலும் ஆத்திரம் தந்தது. நீக்ரோ மக்களுக்காக முழு சக்தியுடன் குரல் கொடுத்தார். கலிபோர்னியா, அமெரிக்க நாடுகளுக்கும் செண்பகராமன் பயணம் செய்தார். செண்பகராமனின் உரை அக்னி சுடராக தெறித்து தூங்கிய மூடர்களையும் தட்டி எழுப்பியது. செண்பகராமனின் வெள்ளையர் எதிர்ப்பு ஒரே நேரத்தில் இங்கிலாந்தும், அமெரிக்காவும் அவர் மீது சினம் கொண்டன. அவர்மீது வழக்கு தொடுத்து உலகெங்கும் அவரை வெள்ளையர்கள் தேடத் தொடங்கினர்.
செண்பகராமனுக்கு பாதுகாப்பாக தெரிந்த இடம் ஜெர்மனியின் தலைநகரமான பெர்லின் ஆகும். ஜெர்மனியின் அதிபர் கெய்சர் செண்பகராமனால் ஈர்க்கப்பட்டார். அனைத்து அரசு விழாக்களுக்கும் செண்பகராமன் அழைக்கப்பட்டார். அவரை சிறப்பிக்கும் வகையில் ஜெர்மன் அரசு வொன் என்ற சிறப்பு விருதளித்தது. செண்பகராமன் லட்சுமிபாய் என்பவரை 1930-ல் திருமணம் செய்தார்.
மறுபுறம் செண்பகராமன் சிந்தனை இந்தியாவை சுற்றியே இருந்தது. இந்திய விடுதலையை வலுப்படுத்த இந்திய ஆதரவு சர்வதேச அமைப்பை செண்பகராமன் உருவாக்கினார். மேலும் அதன் தலைவராக இயங்கினார். ஐரோப்பாவில் இந்திய நிலைமையை பட்டவர்த்தனமாக சொல்ல ஒரு பத்திரிகையை தொடங்கினார். வியன்னாவில் நடந்த ஒரு மாநாட்டில் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸை சந்திக்கும் வாய்ப்பு செண்பகராமனுக்கு கிடைத்தது. அப்போதுதான் ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை நேதாஜியிடம் செண்பகராமன் பயன்படுத்தினார். அந்த வார்த்தை பின்னாளில் இந்தியாவின் தாரக மந்திரமானது. இதுபோலவே செண்பகராமன் உருவாக்கி இருந்த இந்திய தேசியதொண்டர் படை குறித்து நேதாஜியிடம் விளக்கினார். பின்னாளில் நேதாஜி தொடங்கிய இந்திய தேசிய ராணுவத்திற்கு அதுதான் அடிப்படை என்று சில வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
செண்பகராமன் தன் வாழ்நாளில் சந்தித்த இரு பெரும் ஆளுமைகள் லெனினும், ஹிட்லரும் ஆவர். 1917-ல் சோவியத் ருஷ்ய புரட்சியை நடத்திய லெனின் உலகின் வெவ்வேறு விடுதலை இயக்கங்களோடு தொடர்புகொண்டு ஆதரவு தந்தார். இருவரும் நேரில் சந்தித்தனர். இதற்கு பிறகு காபூலில் செண்பகராமன் முதல் சுதந்திர அரசை அமைத்தார். அதில் வெளியுறவு அமைச்சரான செண்பகராமனுக்கு லெனின் வாழ்த்து அனுப்பினார். இதை போலவே செண்பகராமன் இரண்டாம் உலக யுத்தத்திற்கு காரணமாய் இருந்த நாஜிக்களின் தலைவர் ஹிட்லரையும் சந்தித்தார். எனினும் இந்நட்பு கூடா நட்பாய் அமைந்தது.
ஒருமுறை ஹிட்லர் இந்தியர்கள் சுதந்திரம் பெறுவதற்கு தகுதியானவர்கள் அல்ல என்று இழிவாக பேசிவிட்டார். இதைக் கேட்டதும் கொதித்தெழுந்த செண்பகராமன் நீங்கள் இப்படி பேசியது தவறானது என்று எதிர்த்து பேசி இந்தியர்களின் பாரம்பரிய சிறப்புகளை அவர் புரியும்படி பேசி ஹிட்லர் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என்று வலியுறுத்தினார். மிரண்டு போன ஹிட்லர் செண்பகராமனிடம் மன்னிப்பு கோரினார். எனினும் செண்பகராமன் ஹிட்லரை எழுத்து மூலமாக மன்னிப்பு கேட்கவைத்தார்.
இச்சம்பவம் ஹிட்லரின் கூட இருந்த நாஜிக்களுக்கு கொதிப்பூட்டியது. தருணம் பார்த்து செண்பகராமனை பழித்தீர்க்க நினைத்தனர். ஒரு விருந்து நிகழ்வில் செண்பகராமன் உண்ணும் உணவில் மெல்ல கொல்லும் விஷத்தை கலந்துவிட்டனர். செண்பகராமன் உடல் நலம் குன்றியது. தீவிர சிகிச்சை பெற்றும் பலனளிக்கவில்லை. செண்பகராமனின் வாழ்க்கை முடிவை நெருங்கியது. 26-5-1934-ல் அவர் மனைவி லட்சுமிபாய் மடியில் அவர் உயிர் பிரிந்தது. சாகும் தருவாயில் தன் மனைவியிடம் இரு கோரிக்கைகள் வைத்தார். செண்பகராமன் இறந்தபிறகும் அவர் மனைவி இந்திய சுதந்திர போராட்டத்தில் ஈடுபட வேண்டும். கணவனின் சாம்பலை எடுத்து கரமணை ஆற்றில் கரைக்க வேண்டும்.
மேலும் அவர் பிறந்த நாஞ்சில் நாட்டு வயல்களில் அவர் சாம்பலைத் தூவ வேண்டும். கணவனின் மரணத்திற்கு பிறகு லட்சுமி பாயின் வாழ்க்கையும் துன்பக்கேணியானது. பிந்தைய ஆண்டுகளில் கணவரின் சாம்பலை லட்சுமி பாய் இந்தியா எடுத்து வந்தார். இந்தியாவின் முதல் போர்க் கப்பல் மூலம் 1966-ல் சாம்பல் எடுத்துவரப்பட்டது. செண்பகராமனின் இறுதி விருப்பம் நிறைவேற்றப்பட்டது. 1972-ல் லட்சுமிபாய் நிராதரவான சூழலில் உயிர்துறந்தார்.
➡️➡️
Version 2:
இந்திய விடுதலைக்கு ஜெர்மனி துணை செய்யும் என்று நம்பிக் கெட்டவர்களில் நேதாஜிக்கு ஒரு முன்னோடி இருக்கிறார். அவர்... செண்பகராமன் பிள்ளை.தமிழ்நாட்டைச் சேர்ந்த இவரின் வாழ்க்கை, எந்த ஒரு திரைப்படத்தை விடவும் அதிகத் திருப்புமுனைகளும் வியப்பும் கொண்டது. 'ஜெய்ஹிந்த் செண்பகராமன்’ என்றும் அழைக்கப்படும் செண்பகராமன் பிள்ளை, திருவனந்தபுரத்தில் பிறந்தவர். தந்தை சின்னசாமிப் பிள்ளை - தாய் நாகம்மாள். திருவனந்தபுரம் மன்னர் உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் படிவம் படித்துக்கொண்டு இருந்தபோது, 'ஸ்ரீபாரத மாதா வாலிபர் சங்கம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, இந்திய விடுதலைப் போராட்டக் களத்தில் இறங்கினார். 'ஜெய்ஹிந்த்’ என்ற முழக்கத்தை முதலில் எழுப்பியவர்செண்பகராமன்தான் என்கிறார்கள்.அதுகுறித்து, ஆதாரபூர்வமான தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால், 1933-ம் ஆண்டு வியன்னாவில் நடந்த மாநாடு ஒன்றில் செண்பகராமன் இந்த முழக்கத்தை முழங்கினார் என்ற குறிப்பு காணப்படுகிறது.
அவரது 17-வது வயதில், ஸ்ட்ரிக்ட்லேண்ட் என்ற விலங்கியல் ஆய்வாளரின் நட்பு கிடைத்தது. ஸ்ட்ரிக்ட்லேண்ட், இந்தியாவில் விலங்கினத் தொகுதி பற்றி ஆய்வில் இருந்தார். அவருடன் இத்தாலிக்குச் சென்ற செண்பகராமன், அங்கே சில ஆண்டுகள் கல்வி பயின்றிருக்கிறார். பிறகு, சுவிட்சர்லாந்து மற்றும் பெர்லின் பல்கலைக்கழகங்களில் படித்துப் பொறியியல் துறையில் டாக்டர் பட்டம் பெற்றார். ஜெர்மனியில் இருந்தபடியே அவர், 'இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கம்’ என்ற சர்வதேசக் குழுவை உருவாக்கிப் போராடினார். 'புரோஇந்தியா’ என்ற மாத இதழைத் தொடங்கினார். ஆங்கிலம் மற்றும் ஜெர்மனியில் அந்த இதழ் வெளியிடப்பட்டது. இந்தியாவில் உள்ள ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து 1915-ல் ஆப்கானிஸ்தானில் மாற்று அரசு ஒன்றை உருவாக்கினார்கள். இந்த அரசின் வெளிவிவகாரத் துறை அமைச்சராக செண்பகராமன் பிள்ளை நியமிக்கப்பட்டார்.1918-ல் பிரிட்டிஷ் அரசின் நெருக்கடி காரணமாக, இந்த அரசுக்குக் கொடுத்த ஆதரவை ஜப்பான் திரும்பப் பெற்றது. ஆகவே, இந்தியாவின் தற்காலிக அரசு ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றப்பட்டது. 1914-ல் மூண்ட உலகப் போரின்போது ஜெர்மனி அரசு, 'எம்டன்’ என்ற பெயர் கொண்ட பெரிய யுத்தக் கப்பல் ஒன்றை கடல் தாக்குதலுக்குப் பயன்படுத்தியது. 1908-ம் ஆண்டு கட்டப்பட்ட எம்டன் கப்பல் 3,600 டன் எடை கொண்டது. அதன் வேகம் 25 நாட்டிக்கல் மைல். நிலக்கரிதான் அதற்கான எரிபொருள். 10 1/2 செ.மீ பீரங்கிகள் 10 கொண்டது. எதிரியின் கப்பல்களைக் குறிவைத்துச் சுடுவதில் தன்னிரகற்றது. இந்தக் கப்பலில் 360 கடல் வீரர்கள் இருந்தார்கள். இந்தக் கப்பல் பசிஃபிக் கடலில் 4,200 மைல்கள் தூரத்தை 14 நாட்களில் கடந்து சாதனை செய்து இருக்கிறது.எம்டன் கப்பலின் கேப்டனாக இருந்தவர் கார்ல்பான் முல்லர். அவர், நிகரற்ற கடலோடி வீரர். புகைக்கூண்டு, புறவடிவம், அதன் நிறம் ஆகியவற்றை உருமாற்றிக்கொண்டு எதிரிகளைத் திணறடித்தது எம்டன். முதல் உலகப் போரில் 20 கப்பல்களை வீழ்த்தி இருக்கிறது எம்டன்.அந்தக் கப்பல் செப்டம்பர் 21-ம் தேதியன்று சென்னைக்கு வந்தது. செப்டம்பர் 22-ம் தேதி, ஆங்கில அரசுக்குச் சொந்தமான இரு பெரிய எண்ணெய்க் கிடங்குகளின் மீதும், சென்னைத் துறைமுகத்தின் மீதும் பீரங்கித் தாக்குதல் நடத்தியது. இதில், 8,000 பவுண்ட் மதிப்புள்ள 34,600 கேலன் எண்ணெய் நாசமானது. பத்துக்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தார்கள்.இந்தத் தாக்குதலில், புனித ஜார்ஜ் கோட்டைச் சுவரின் ஒரு பகுதி அடியோடு பெயர்ந்து விழுந்தது. கோட்டையை நோக்கி வீசப்பட்ட ஒரு குண்டு வெடிக்காமல் மண்ணில் புதைந்தது. அது இன்றும் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கிறது. எம்டன் ஏற்படுத்திய பீதியால், ஏராளமானோர் சென்னையைக் காலி செய்துவிட்டுப் பதறி ஓடினர். இந்தக் கப்பலில் செண்பகராமன் வரவில்லை. அவரது பெயர் அந்தக் கப்பலின் பெயர் பட்டியலில் இல்லை என்று ஒரு சாரார் கூறுகிறார்கள். ஆனால், அவர் அந்தக் கப்பலில் பயணம் செய்தார் என்று, அவரது மனைவி கூறியிருக்கிறார். பாதுகாப்பு கருதி வேறு பெயரில் அவர் பயணம் செய்திருக்கக்கூடும் என்றும் கருதுகிறார்கள்.
1933-ம் ஆண்டு பெர்லினில் வாழ்ந்த மணிப்பூரைச் சேர்ந்த லட்சுமிபாய் என்ற பெண்ணை, செண்பகராமன் திருமணம் செய்துகொண்டார். முதல் உலகப் போருக்குப் பிறகு, ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சி உருவானது. செண்பகராமன், ஹிட்லருடன் நெருக்கமாகப் பழகி வந்தார். இந்தியா குறித்து ஹிட்லருக்குள் இருந்த ஆழமான வெறுப்பை உணர்ந்த செண்பகராமன், வெளிப்படையாகத் தனது எதிர்ப்பைத் தெரிவித்து இருக்கிறார். ஆகவே, நாஜிக்களின் நெருக்கடிக்கு ஆளானார்.ஒரு விருந்தில் செண்பகராமன் சாப்பிட்ட உணவில் விஷம் கலக்கப்பட்டு இருந்தது. அதை அறியாமல் சாப்பிட்டுவிட்டு நோய்மையுற்ற இவர், சிகிக்சை பெற இத்தாலி சென்றார். தீவிர சிகிக்சை அளித்தும் செண்பகராமன் இறந்து போனார். அவருக்குத் தரப்பட்ட உணவில் யார் விஷம் கலந்தது? அல்லது அது ஒரு கட்டுக்கதையா என்பது தெளிவற்ற தகவலாகவே இன்றும் இருந்து வருகிறது.1934-ம் ஆண்டு மே மாதம் 26-ம் தேதி செண்பகராமனின் உயிர் பிரிந்தது. தனது இறுதி விருப்பமாக, 'என்னுடைய சாம்பலை இந்தியாவுக்கு எடுத்துச் சென்று, எனது தாயாரின் சாம்பலைக் கரைத்த, கேரளாவில் உள்ள கரமனை ஆற்றில் கரைக்க வேண்டும். மீதியை நாஞ்சில் நாட்டு வயல்களில் தூவ வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார்.ஆனால், அவரது மனைவி லட்சுமிபாயால் அதை எளிதாக நிறைவேற்ற முடியவில்லை. கணவனின் அஸ்தியைப் பாதுகாப்பாக வைத்திருந்தபோதும், லட்சுமி பாய் மீது நாஜி அரசு குற்றம் சுமத்தி அவரை மனநலக் காப்பத்தில் அடைத்தது. அவரைச் சித்ரவதைகள் செய்தது. கணவனின் அஸ்தியை வைத்துக்கொண்டு, லட்சுமிபாய் 30 வருடங்கள் போராடினார்.முடிவில், அஸ்தியோடு இந்தியாவுக்கு வந்து சேர்ந்தார். மும்பையில் தங்கி இருந்த அவர், இந்திய அரசின் மரியாதையோடு அந்த அஸ்தி கரைக்கப்பட வேண்டும் என்பதற்காகப் போராடினார். அதுவும் எளிதாக நடக்கவில்லை. ஒரு கட்டத்தில், இந்திரா காந்திக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், இந்திரா ஒரு சிறுமியாக தனது வீட்டுக்கு வந்து போன நிகழ்வை நினைவுபடுத்தி, தனது கணவனின் இறுதி ஆசையை நிறைவேற்ற உதவும்படி கேட்டுக்கொண்டார்.இந்திய அரசு சார்பில், செண்பகராமனின் அஸ்தியைக் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. 1966-ம் இந்திய அரசு சார்பில், செண்பகராமனின் அஸ்தியைக் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. 1966-ம் இந்தியாவின் போர்க் கப்பல் ஒன்றில் செண்பகராமனின் அஸ்தியை எடுத்துக் கொண்டு மும்பையில் இருந்து கொச்சிக்குப் பயணமானார் லட்சுமிபாய். செண்பகராமன் விரும்பியபடியே அவரது அஸ்தி கரமனை ஆற்றில் கரைக்கப்பட்டது. எந்த நதியின் நீரில் தனது தாயின் அஸ்தி கரைந்து போனதோ, அதே நதியில் செண்பகராமனும் கரைந்து போனார். ஆனால், அவர் விரும்பியபடி நாஞ்சில் நாட்டு வயல்களில் அந்த அஸ்தி தூவப்பட்டதா என்ற விவரம் தெரியவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு, தமிழக அரசு செண்பகராமனுக்கு சிலை வைத்துக் கொண்டாடி இருக்கிறது. 1972-ம் ஆண்டு லட்சுமி பாய் மும்பையில் காலமானார்.செண்பகராமனோடு ஜெர்மனிக்குச் சென்ற அவரது அண்ணன் பத்மநாபன் என்ன ஆனார்? அவரது வாழ்க்கை எப்படி இருந்தது? என்ற விவரங்களை இன்றும் அறிந்து கொள்ள முடியவில்லை. செண்பகராமன் அஸ்தி யோடு 32 வருடங்கள் காத்திருந்த அவரது மனைவியின் வலி மிகுந்த போராட்டம் வரலாற்றின் பாதையில் அழியாத துயரமென மினுங்கிக்கொண்டே இருக்கிறது.
வரலாற்றில் ஆண் அடையும் துயரம் ஒரு விதம் என்றால், பெண் அடையும் துயரம் இன்னொரு விதம். அதன் நிகழ்கால சாட்சியைப் போலவே லட்சுமிபாய் இருந்தார். செண்பகராமனின் அஸ்தியைக் கரைத்த நாளில், லட்சுமிபாய் கதறி அழுதிருக்கிறார். அந்த அழுகை இறந்துபோன கணவனை நினைத்து அழுதது இல்லை. ஒருவரின் ஆசை நிறைவேறுவதற்கு எவ்வளவு தடைகள், போராட்டங்களைக் கடந்து வர வேண்டியிருக்கிறது. அதற்குள் எத்தனை அரசியல் நெருக்கடிகள், கெடுபிடிகள் இருக்கின்றன என்பதை நினைத்தே அழுதிருக்கிறார். வரலாற்றில் படிந்துபோன அந்த துயரக் குரலை உங்களால் செவி கொடுத்துக் கேட்க முடிந்தால், வரலாறு உயிருள்ளது என்பதை வலிமையாக உணர முடியும்.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
காலக்கண்ணாடி
»
ஹிட்லரை பணிய வைத்த செண்பகராமன்...!