என் அன்புள்ள அம்மாவுக்கு! உன் அன்பு மகள் கவியின் காணிக்கை மடல் !
அன்பின் வடிவே, தாயே, உன்னைப் போல வாழ என்னால் முடியாது,
ஆனால் உன்னுடைய தியாகத்தை நான் என்றும் மறவமாட்டேன்.
இந்த கவிதை உனக்கானது – உன் அன்பின் நினைவாக, உன் அருமையின் அடையாளமாக.!
அம்மா ! இன்றும் நான் உனக்கு குழந்தைதான்! என்
கைகளைப் பற்றி நடக்கக் கற்றுக்கொடுத்த என் அன்பு தாயே !
உன்னிடம் நான் நிம்மதியாய் இருக்கிறேன்!
உன் கரங்களில் மழலையாய் சிரிக்கிறேன்!
உன் இதயத்தில் எப்போதும் எனக்கே முதல் இடம்,
உன் வாழ்வில் நான் தான் முதன்மை! எனக்கே முதல் உரிமை !
என் தவறுகளை மறந்து மன்னிக்கும் முதல் ஆன்மா நீயே !
உனக்கு மூன்று குழந்தைகள் என்றாலும்,
உன் விழிகளின் கவனம் என்மேல் சற்று அதிகமே !
நான் சோர்ந்த போதெல்லாம் உன் கரம் மட்டுமே என்னை காத்தது.
உன் இதயம் என்னை தழுவியதுமே, எந்த பிரிவும் எந்த துயரும்
என்னை சோர்ந்து போக செய்யவில்லை !
என் அன்பு தாயே ! நீ எனக்கு மட்டும் தாயல்ல
நான் பெற்ற பிள்ளைகளுக்கும் நீ தான் தாயாக இருக்கிறாய் !
பெற்ற என்னை விட உன்னையே தேடுகின்ற அளவிற்கு
உனது அன்பை கொடுக்கிறாய் ! உன் வெள்ளை மனம்,
என் எல்லா கவலைகளையும் மறக்க செய்யும் !
உன்னைப்போல் இல்லை யாரும் இவ்வுலகில்!
உன்னைத் தவிர யாரும் என்னை புரிந்தவரும் இல்லை !
என் வாழ்வு கசந்தாலும், உன் அன்பு இனிப்பாய் இருந்தது,
என் வாழ்வின் சிறந்த பரிசு, உன்னைப்போல் மகாதேவியை நான் தாயாக பெற்றதுதான்! உன் தாய்மையின் வெளிச்சத்தில்
நான்,என்றும் இளமையாகவே இருப்பேன்,
உன் மூச்சில் நான் உயிர் வாழ்ந்தாலும்,
உன் கரம் என்னை நிம்மதியாய் நடத்தும்!
எனக்காக துணை நிற்கிறாய்! எனக்காக எல்லோரிடமும் பரிந்து பேசுகிறாய் ! என் சந்தோஷமே உனது சந்தோஷமாய் எண்ணுகிறாய் ! உனக்காக நீ எதுவும் கேட்டதில்லை கடவுளிடம் !
எனக்காக மட்டுமே வேண்டுகிறாய்!
உனக்காக எதுவும் ஆசைபட்டதில்லை இதுவரை !
என் ஆசையை நிறைவேற்ற போராடுகிறாய் !
அம்மா! அன்பின் திரு உருவம் நீ ! எத்துணை கவலைகள் இருந்தாலும் உன் மடியில் தலை சாய்க்கும்போது எல்லாம் பறந்து போகும் !
வருடும் உன் கரங்கள் எனது தன்னம்பிக்கையின் ஆயுதம்!
நீ இல்லை என்றால் நான் வெற்று காகிதம் !
உன் சுவாசம் எனது சுவாசம், உன் புன்னகை எனது சிரிப்பு,
உன் கரம் எனது காப்பு! உன் இதயம் எனது வீடு!
தாயே, உன்னைவிட பெரிய வரம் இல்லை! எனக்கு தேவையும் இல்லை !
உன்னைப்போல் வேறு ஒரு தெய்வமும் இங்கு இல்லை!
நீயே எனது உயிர்! நீயே எனது வெளிச்சம் !
அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால்
நான் உன்னை எனது மகளாக சுமக்க வேண்டும் !
இந்த ஜென்மத்தில் நான் பட்ட கடன் தீர்க்க வேண்டும் என் அன்பு தாயே!