« on: March 12, 2012, 11:32:28 AM »
படித்ததில் பிடித்தது!
அரசர்கள் முரசறைந்தனர்
அன்று, இன்றோ
அதிபர் ஒருவர் ஆணையிடுகிறார்.
நாகரீகம் வளர்ந்ததென
நாங்கள் எப்படி நம்புவது?
நரவேட்டையும்
நாடுபிடிக்கும் வேட்கையும்
நசிந்து விட வில்லையே!
யுத்தத்திற் கெதிராய்
நித்தம் ஆர்ப்பரிக்கும், சகலரின்
சப்தங்களும், சங்கு நெறிபட்டு
நிசப்தங்களாகின்றன.
சண்டியர்களின் சவடால் மட்டும்
சாகாவரம் பெறுகின்றன.
உண்மையில்
ஊடகங்களின் வளர்ச்சி, உலகிற்கு
உண்மையுரைக்க அல்ல, மாறாக
மறைக்கவே பயன்பெறுகின்றது.
ஜப்பான் தொடங்கி ஈராக் வரை
சரித்திரம் நெடுக சவக்கடங்குகள்
சுதந்திரம் என்பது சிலரின்
தந்திரமாகிப் போனது.
சுதந்திர தேவி என்பவள்
அமெரிக்காவிற்கு மட்டும்
செந்தமானவளோ...
அப்படித்தான் கருதுகிறார்கள்
அமெரிக்க அதிபர்கள்...
ஆனால் பாவம் அமெரிக்கர்கள்
அவர்களின் கருத்துக்கு அங்கே சுதந்திரமில்லை.
அலை அலையாய் கூடி
ஆர்ப்பரித்தாலும்,
யுத்த நிறுத்த முடிவு
சாத்தியமே யில்லை.
ஏனெனில்
அதிபரின் கவலையெல்லாம்
ஆயுத வியாபாரிகளின்...
ஆலை அதிபர்களின்...
அசகாய வணிகர்களின்...
அளவிடாத சுதந்திரம் பற்றித்தானே.
சுதந்திர வேட்கையொன்று
சத்தியமாய் இருந்திருந்தால்
ஷெரோனின் கொடுமையிலிருந்து
பாலஸ்தீனத்தை பாதுகாக்கலாம்.
பிறர் நலன் நாடுவதே
பிரதானமாய் இருந்திருந்தால்
ஆப்பிரிக்க நாடுகளை
அரவணைத்துச் செல்லலாம்.
இவை ஒன்றும் மெய்யில்லை
எண்ணெய் மட்டுமே மெய்...
ஜப்பானில் சாதித்ததென்ன
சந்ததி சந்ததியாய்
சரீர குறைபாடு.
வியட்நாமில் விளைந்ததென்ன
விலைமாதர்களும் - பால்
வினை நோய்களும்.
ஆப்கானில் அடைந்ததென்ன
அகிலமெங்கும் வினியோகிக்க
அளப்பெரும் அபின் உற்பத்தி.
அடுக்கடுக்காய் அவலங்கள்
அத்தனையும் மனித குல நாசங்கள்
அமெரிக்க கைங்கரியத்தால்
அகிலம் அடைந்த யோகங்கள்???
தாயின் அசுத்தத்தில்
தப்பிப் பிழைத்தவன்
தலைகால் புரியாமல்
தடுமாறித் திரிகின்றான்
ஆயுதங்களின் அணிவகுப்பில்
அமைதி தழைக்காது
அராஜகமே அரங்கேறும்...
வான்வழி தாக்குதல்கள்
வன்முறைக்கே வித்திடும்...
தொழில் நுட்ப மயக்கத்தில்
துள்ளிக் குதிப்பவர்கள்,
பி-52 பராக்கிரமத்தில்
பெருமிதம் கொள்பவர்கள்
'கொலம்பியா' - ஓடத்தை
கொஞ்சம் நினைக்கட்டும்...
வான் வெளியும், புவி வழியும்
வல்லோன் இறைவனுக்கே சொந்தம்.
வாரி சுருட்ட நினைத்தால்
விழ வேண்டும் நரகத்தில் - இது திண்ணம்.
எண்ணெய் மட்டுமல்ல, எந்த வளமும்
எவருக்கும் சொந்தமல்ல.
ஏமாற்றி கொள்ளையடிக்க - மாறாக
இறைவனுக்கே சொந்தம்.
இயற்கை வளங்கள்
இறைவனின் வரங்கள். அவன்
இடும் கட்டளைக்கேற்ப
இடம் மாறும் அருள்கள்.
அவன் மட்டும் ஆணையிட்டால்
எண்ணெய் வயல்கள்
என்றும் வற்றலாம்.
பாலை நிலம், புஷ்ஷின் உள்ளம் போல்
பாறை நிலமாகலாம்.
இத்தனை இழப்புக்குப்பின்
இப்படி ஒன்று நடந்து விட்டால் - அதிபரே
என்ன செய்யப் போகின்றீர்!!! -தமிழில்: அபூ ஹாஜர்
« Last Edit: March 12, 2012, 11:35:01 AM by Yousuf »

Logged