Author Topic: கல்கியின் பொன்னியின் செல்வன்  (Read 96402 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
தியாக சிகரம் - அத்தியாயம் 20

பறவைக் குஞ்சுகள்

கொடும்பாளூரிலிருந்து வானதி பழையாறை நகருக்கு வந்த புதிதில், சோழ நாட்டின் நீர்வளம் அவளை ஒரே ஆச்சரியக் கடலில் ஆழ்த்தியிருந்தது. கொடும்பாளூர்ப் பக்கத்தில் நதி ஒன்றும் கிடையாது; ஏரிகள் உண்டு. மழை பெய்யும் காலங்களில் ஏரிகள் தண்ணீர் நிறைந்து ததும்பிக் கொண்டிருக்கும். கோடைக் காலத்தில் காய்ந்துவிடும். இம்மாதிரி இரு கரைகளையும் தொட்டுக் கொண்டு தண்ணீர் ததும்பிச் சுழிகளும் சுழல்களுமாய் ஓடும் நதிகளும், வாய்க்கால்களும், கண்ணிகளும் அங்கே இல்லை. தாமரையும் செங்கழு நீரும் தழைத்துப் பூத்துக் கொழித்த தடாகங்களை வானதி பிறந்த ஊரில் பார்க்க முடியாது. இவற்றையெல்லாம் வானதி பார்த்துப் பார்த்து மெய்ம்மறந்து உட்கார்ந்திருப்பாள். குளத்து மீனுக்குக் குடைபிடித்த தாமரை இலைகளின் மீது முத்துக்கள் போன்ற நீர்த்துளிகள் அங்குமிங்கும் ஓடிக் களிப்பதைப் பார்த்து மகிழ்வாள். கமல மலர்களையும் அல்லிப் பூக்களையும் கருவண்டுகள் சுற்றிச் சுழன்று வந்து ஆடிப்பாடுவதைக் கண்டதும் பரவசமாகி விடுவாள். பொழுது போவதே தெரியாமல் போய்விடும்.

ஒரு சமயம் வானதியும், குந்தவையும் செம்பியன் மாதேவி அழைத்ததின் பேரில் (இக்காலத்தில் திருநல்லத்துக்குக் கோனேரிராஜபுரம் என்று பெயர் வழங்குகிறது.) திருநல்லத்துக்குப் போயிருந்தார்கள். வசந்த மாளிகையில் தங்கியிருந்தார்கள். செம்பியன் மாதேவியும் குந்தவையும் அடிக்கடி சைவ சமயக் குரவர்களின் வரலாறுகளைப் பற்றியும், அவர்களுடைய பதிகங்களில் கனிந்துச் சொட்டும் பக்திரசத்தைப் பற்றியும், பேசத் தொடங்கிவிடுவார்கள். அதையெல்லாம் கேட்டுக் கொண்டிருப்பதில் வானதிக்குச் சிரத்தை இருப்பதில்லை. அதைக் காட்டிலும் வசந்த மாளிகையை யொட்டியிருந்த தோட்டங்களிலே சென்று பறவைகளின் இனிய கீதங்களைக் கேட்பதிலும், தடாகத்திலே பூத்துக் குலுங்கிய தாமரை மலர்களைச் சுற்றி வந்து கொண்டிருந்த கரு நீல வண்டுகளின் இன்ப ரீங்காரத்தைக் கேட்பதிலும் அவளுக்கு ஆர்வம் அதிகமாயிருந்தது. இன்னும் மாளிகையின் ஒரு பக்கமாகச் சென்று கொண்டிருந்த நதிவெள்ளம் சுழி போட்டுக் கொண்டு ஓடுவதையும், அந்தச் சுழிகளில் அழகிய செக்கச் சிவந்த கடம்ப மலர்கள் சுழன்று கொண்டிருப்பதையும் பார்க்க அவளுக்கு மிக்க ஆர்வம் இருந்தது. கொடும்பாளூர்ப் பகுதிகளில் இம்மாதிரி மனோரம்யமான காட்சிகளைப் பார்க்க இயலாதல்லவா?

ஒரு நாள் மழவரையர் மகளாரும், இளைய பிராட்டி குந்தவையும் சுவாரஸ்யமாக ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். வானதி அவர்கள் அருகில் சென்றபோது, இளைய பிராட்டி "வானதி! நீ தோட்டத்திற்குப் போ! சற்று நேரத்துக்கெல்லாம் நானும் வருகிறேன்!" என்றார். வானதி குதூகலத்துடன் துள்ளிக் குதித்து ஓடினாள். தோட்டத்தில் சற்று நேரம் சுற்றி அலைந்து விட்டுத் தாமரைக் குளக்கரைக்குச் சென்றாள். குளக்கரையில் வானை மறைத்துக் கொண்டு வளர்ந்திருந்த மரங்கள் பல இருந்தன. அவற்றில் நெடிதுயர்ந்து பல்கிப் பரவித் தழைத்திருந்த இலுப்பை மரம் ஒன்றிருந்தது. இலுப்பைப் பூக்கள் உதிர்ந்து பூமியை அடியோடு மறைத்துக் கொண்டிருந்தன. அவற்றின் நறுமணம் கம்மென்று வீசித் தோட்டம் முழுவதும் பரவியிருந்தது. அந்த மரத்தடியில் ஒரு பெரிய வேரின் பேரில் வானதி உட்கார்ந்தாள். அடிமரத்தில் சாய்ந்து கொண்டு மேலும் கீழும் நாலாபுறமும் பார்த்துக் கொண்டிருந்தாள். பறவை இனங்களின் இனிய கீதங்கள் அவளுடைய செவிகளில் அமுத வெள்ளமாகப் பாய்ந்து கொண்டிருந்தன. அவள் அந்த நாள்வரை அநுபவித்திராத இன்ப உணர்ச்சி அவள் இதயத்தில் தோன்றியது. அந்த உள்ளக் களிப்பு அடிக்கடி பொங்கித் ததும்பி அவள் மேனியெல்லாம் பரவியது. வாழ்க்கை இவ்வளவு ஆனந்த மயமாக இருக்கக்கூடும் என்று வானதி அன்று வரை கனவிலும் கருதியதில்லை.

அந்த மரத்தடியிலிருந்து பார்த்தால் சற்றுத் தூரத்தில் ஆற்று வெள்ளம் தெரிந்தது. அவ்வப்போது நதி ஓட்டத்தின் இனிய காட்சிகளையும் அவள் மரங்களின் இடைவெளி வழியாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஒருமுறை, யாரோ ஒரு வாலிபன் ஆற்றில் நீந்திக் கொண்டிருப்பது தெரிந்தது. செந்நிற நீர்ப் பிரவாகத்தில் அவனுடைய பொன்னொளிர் மேனி பாதி தண்ணீரிலும் பாதி மேலேயும் மிதந்த வனப்பு மிக்க காட்சி அவள் உள்ளத்தைக் கவர்ந்தது. சீச்சீ! யாரோ இளம்பிள்ளை ஒருவனுடைய தோற்றத்தில் தனது கவனம் செல்வது என்ன அசட்டுத்தனம்? நாணம், மடம் என்னும் இயல்புகளைத் தன் உடன் பிறந்த செல்வங்களாகக் கொண்டிருந்த வானதிக்கு அந்த எண்ணம் மிக்க கூச்சத்தை உண்டாக்கியது. அவளுடைய உள்ளக் கட்டுப்பாட்டையும் மீறிக் கண்கள் மீண்டும் இரண்டொரு தடவை நதிப்பக்கம் சென்றன.

வானதிக்குத் தன் பேரில் கோபமே உண்டாயிற்று. அங்கிருந்து எழுந்து போய்விடலாமா என்று எண்ணினாள். அச்சமயம் வேறொரு நிகழ்ச்சி அவளுடைய உள்ளத்தைக் கவர்ந்தது. அவள் அமர்ந்திருந்த இடத்துக்கு அருகாமையில், தலைக்கு மேலே பறவைக் குஞ்சுகளின் கூக்குரலைக் கேட்டு நிமிர்ந்து பார்த்தாள். அங்கே அவள் கண்ட காட்சி அவளுக்கு ஏக காலத்தில் பரிதாபத்தையும் திகிலையும் உண்டாக்கின. ஒரு மரக்கிளையில் கவணை போலப் பிரிந்த இடத்தில் பட்சிக் கூடு ஒன்று இருந்தது. அதில் சில பறவைக் குஞ்சுகள் தலைகளை நீட்டிக் கொண்டிருந்தன. அவைதாம் 'கிறீச்' என்று மெல்லிய குரலில் சத்தமிட்டன. அந்தச் சத்தத்தில் பயமும், அபாய அறிவிப்பும், பரிதாபமான அடைக்கல விண்ணப்ப முறையீடும் கலந்திருந்தன. அவ்விதம் கலந்திருந்ததாக வானதியின் செவிகளில் ஒலித்தது. கூட்டுக்கு அருகில் மரக்கிளையில் ஒரு காட்டுப் பூனை ஏறிக் கொண்டிருந்தது. மெள்ள மெள்ள அது கூட்டை நெருங்கி வந்து கொண்டிருந்தது!

அதைப் பார்த்த வானதி, "ஐயோ! ஐயோ!" என்று சத்தமிட்டாள். அடுத்த கணத்தில் "என்ன? என்ன?" என்று ஒரு குரல் கேட்டது. யாரோ விரைந்து ஓடி வரும் காலடிச் சத்தமும் கேட்டது. வானதி அந்தப் பக்கம் பார்த்தாள். சற்று முன் நதி வெள்ளத்தில் நீந்திக் கொண்டிருந்த வாலிபன்தான் கரையேறி ஓடி வந்து கொண்டிருந்தான் என்பதை அவள் அறிந்தாள்.

அதே சமயத்தில் எங்கிருந்தோ இரண்டு பெரிய பறவைகள் வந்து விட்டன. கூட்டைச் சுற்றி அவை கராபுராவென்று கத்திக் கொண்டு வட்டமிட்டன. அவை அக்குஞ்சுகளின் தாயும் தகப்பனுமாகவே இருக்க வேண்டும். குஞ்சுகளைக் காப்பாற்றுவதற்காகவே அவை அவசரமாக வந்திருக்க வேண்டும் என்பதை வானதி உணர்ந்தாள். இரண்டும் நீள மூக்குகள் உள்ள பறவைகள். மரங்கொத்திப் பறவைகள் என்பவை இவைதாம் போலும். ஒரு பறவை கூட்டைச் சுற்றி அதிகமாக வட்டமிட்டது. இன்னொன்று பூனையை நெருங்கி அதை மூக்கினால் கொத்தித் தாக்கும் பாவனையுடன் சத்தமிட்டது! பூனையை அந்தப் பறவையினால் ஒன்றும் செய்துவிட முடியாது. பூனையின் வாயில் அகப்பட்டால் மறுகணம் அதன் வயிற்றுக்குள்ளேயே போய்விட வேண்டியதுதான். ஆயினும் தன் குஞ்சுகளைக் காப்பதற்காக அந்தப் பறவை அப்படித் தீரத்துடன் போராடியது. தாயையும் தகப்பனையும் இளம் பிராயத்திலேயே இழந்துவிட்ட வானதிக்கு அந்த காட்சி மிக்க மனக்கசிவை உண்டாக்கியது.

பூனை சற்றுச் சும்மா இருந்துவிட்டுத் திடீரென்று முன்னங்கால் ஒன்றைக் கூட்டின் பக்கம் நீட்டியது. பறவைக் குஞ்சுகள் இருந்த கூட்டின் ஒரு முனையையும் தொட்டுவிட்டது. வானதி மறுபடியும் அலறினாள். இதற்குள் அந்த வாலிபன் நெருங்கி விட்டான். அவனை அருகில் பார்ப்பதற்கு வானதிக்கு மிக்க கூச்சமாயிருந்தது. மறுமொழி சொல்ல வரவில்லை; பேசுவதற்கு நா எழவில்லை. சமிக்ஞையினால் பட்சியின் கூட்டைச் சுட்டிக் காட்டினான்.

அதுவரையில் அந்தப் பெண்ணுக்குத்தான் ஏதோ அபாயம் என்று எண்ணிக் கொண்டிருந்தான். வானதி சுட்டிக் காட்டிய இடத்தை அண்ணாந்து பார்த்தான். மறுபடியும் வானதியை நோக்கிப் புன்னகை புரிந்தான். அவனுடைய பார்வையும், புன்னகையும் வானதியின் நெஞ்சத்தை நெகிழச் செய்து, பறவைக் குஞ்சுகளின் நிலையைக் கூட மறந்துவிடச் செய்தன.

ஆனால் வாலிபன் உடனே அங்கிருந்து விரைந்து ஓடி, மரக்கிளையின் பறவைக் கூடு இருந்த இடத்துக்கு நேர் கீழே சென்று நின்றான். காட்டுப் பூனையை அதட்டினான். அது கீழே குனிந்து பார்த்து உருமியது. "பொல்லாத பூனையாயிருக்கிறதே!" என்று சொல்லிக் கொண்டே தரையிலிருந்து ஒரு கல்லைப் பொறுக்கி வேகமாக விட்டெறிந்தான். கல் பூனையின் மீது படாமல் அதன் அருகில் மரக்கிளையைத் தாக்கியது. பூனை உடனே தாவி வேறு கிளையில் பாய்ந்து, அங்கிருந்து இன்னொரு அடர்ந்த மரத்துக்குச் சென்று பின்னர் மறைந்துவிட்டது.

ஆனால் இதற்குள் வேறொரு விபரீதம் நேர்ந்துவிட்டது. பூனையில் ஒரு கால் பறவைக் கூட்டின் முனையைப் பற்றி இழுத்ததல்லவா? அதனால் சிறிது ஆடிப் போயிருந்த கூடு வாலிபனின் கல்லெறி மரக்கிளையில் தாக்கிய வேகத்தினால் அதிகமாக நிலை குலைந்து, சிறிது சிறிதாக அந்தக் கூடு கிளையின் கப்பிலிருந்து நழுவியது. முழுதும் நழுவி விழுந்திருந்தால் காட்டுப் பூனை வாயிலிருந்து தப்பிய குஞ்சுகள் தரையில் விழுந்து மாண்டிருக்கும்! நல்ல வேளையாகக் கூட்டின் ஒரு முனை கிளையைக் கவ்விக் கொண்டிருந்தது. கூடு அதில் இருந்த குஞ்சுகளுடன் கீழே தொங்கி ஊசலாடியது. குஞ்சுகளின் உயிர்களும் ஊசலாடின. மரங்கொத்திப் பறவைகள் முன்னை விடப் பீதியுடன் அலறிக்கொண்டு குஞ்சுகள் இருந்த கூட்டைச் சுற்றிச் சுற்றி வந்தன. காற்று கொஞ்சம் வேகமாக அடித்தால் கூடு தரையில் விழுந்து விடும். அவ்வளவு உயரத்திலிருந்து விழுந்தால் குஞ்சுகள் பிழைப்பது துர்லபந்தான்.

வாலிபன் ஒரு கணநேரம் யோசித்தான். முதலில் மரத்தின் மேல் தாவி ஏற அவன் எண்ணியதாகத் தோன்றியது. மறு கணத்தில் மனத்தை மாற்றிக் கொண்டதாகக் காணப்பட்டது.

வானதியைப் பார்த்து, "பெண்ணே! சற்று இங்கே வா! கூடு கீழே விழுந்தால் உன் சேலைத் தலைப்பினால் பிடித்துக் கொள்! இதோ நான் ஒரு நொடியில் திரும்பி வருகிறேன்!" என்று சொல்லிவிட்டு ஓடினான்.

அவன் சொன்னபடியே மிகச் சொற்ப நேரத்தில் திரும்பி வந்தான். ஆனால் இப்போது அவன் நடந்து வரவில்லை. யானை மீது ஏறிக்கொண்டு வந்தான். வானதிக்கு அவன் என்ன செய்யப் போகிறான் என்பது ஒருவாறு தெரிந்துவிட்டது. ஆகையால் அங்கிருந்து தாமரைக் குளத்தின் படிக்கட்டை அடைந்தாள். சில படிகள் இறங்கி உட்கார்ந்து கொண்டு யானை மேல் வந்த வாலிபன் என்ன செய்கிறான் என்பதைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

யானை மரத்தடிக்கு வந்ததும் நின்றது. அதன் முதுகில் இருந்தபடி வாலிபன் பறவைக் கூட்டைக் கையினால் தாங்கி முன்னால் அது இருந்த கிளைப் பொந்திலே ஜாக்கிரதையாக வைத்தான். தாய்ப் பறவையும், தகப்பன் பறவையும் இப்போது முன்னைவிட அதிகமாகக் கூச்சலிட்டன. ஆனால் அந்தக் கூச்சலில் இப்போது குதூகல த்வனி மேலிட்டிருப்பதாகத் தோன்றியது.

வாலிபன் பின்னர் திரும்பிச் சுற்று முற்றும் பார்த்தான். "பெண்ணே! எங்கே போனாய்?" என்று கூவினான். வானதி பெரிதும் நாணம் அடைந்து மௌனமாயிருந்தாள். வாலிபன் யானையின் மீதிருந்து கீழிறங்கினான். பின்னர் மறுபடியும் சுற்று முற்றும் பார்த்தான்.

வானதி மனதில் எதையோ நினைத்துக்கொண்டாள். அந்த நினைவு அவளுக்குப் பெரும் வேடிக்கையாயிருந்தது. அவளை அறியாமல் சிரிப்பு வந்தது. உரத்த சத்தத்துடன் கலகலவென்று சிரித்தாள்.

அதைக் கேட்டுவிட்டு வாலிபன் குளத்தின் படிக்கட்டுக்கு வந்தான். வானதியைப் பார்த்து, "பெண்ணே! ஏன் சிரிக்கிறாய்? நீ இவ்வளவு பலமாகச் சிரிக்கும்படியாக இப்போது என்ன நேர்ந்து விட்டது?" என்றான்.

வாலிபன் குரல் வானதியின் செவிகளில் விழுந்ததும் மறுபடியும் முன்போல அவளுடைய நெஞ்சம் நெகிழ்ந்து பொங்கிற்று; கூச்சம் முன்னிலும் அதிகமாயிற்று. அவனை ஏறிட்டுப் பார்க்க முடியாதபடியால், அப்புறமும், இப்புறமும் பார்த்துக் கொண்டிருந்தாள். "பெண்ணே! ஏன் சிரித்தாய்? சொல்ல மாட்டாயா?" என்று மீண்டும் வாலிபன் கேட்டான்.

வானதி மனத்தைக் திடப்படுத்திக்கொண்டு, "ஒன்றுமில்லை. நீ பெரிய வீரனாயிருக்கிறாயே என்று எண்ணிச் சிரித்தேன். பூனையோடு சண்டை போடுவதற்கு யானையின் பேரில் வந்தாய் அல்லவா?" என்றுகேட்டாள். அதைக் கேட்டு வாலிபனும் சிரித்தான்.

"பெண்ணே! அது பூனைதானா? நீ போட்ட கூக்குரலைக் கேட்டுப் புலியோ என்று பயந்துவிட்டேன்!" என்று சொன்னான்.

வானதிக்கு இதற்குள் துணிவு வந்துவிட்டது; அவளிடமிருந்த கூச்சமும் குறைந்துவிட்டது.

"ஆகா! அப்படியா? புலிக்கொடி பறக்கும் சோழ நாட்டில் புலியைக் கண்டுதான் எதற்காகப் பயப்படவேணும்? நீ பாண்டிய நாட்டனா?" என்றாள்.

அதைக்கேட்ட வாலிபனின் முகம் முன்னைக் காட்டிலும் சற்று அதிகமாக மலர்ச்சி அடைந்தது.

"பெண்ணே! நான் வேற்று நாட்டவன் அல்ல; இந்தச் சோழ நாட்டைச் சேர்ந்தவன்தான்! யானை மீது ஏறி வேறு போர்க்களங்களுக்கும் சென்றிருக்கிறேன். நீ யார்? எந்த ஊர்ப் பெண்? பெரிய வாயாடிப் பெண்ணாக இருக்கிறாயே?" என்றான்.

"யானைப்பாகா! மரியாதையாகப் பேசு! நான் யாராயிருந்தால் உனக்கு என்ன? எதற்காக அதைப்பற்றிக் கேட்கிறாய்?" என்றாள் வானதி.

"சரி அப்படியானால் நான் கேட்கவில்லை. பெரிய இடத்துப் பெண் போலிருக்கிறது! போகிறேன்!" என்று சொல்லிவிட்டு அந்த வாலிபன் படியேறி மேலே போகலானான்.

வானதி மறுபடியும் விளையாட்டு பரிகாசம் தொனித்த குரலில், "யானைப்பாகா! யானைப்பாகா! என்னையும் உன் யானையின் மேல் ஏற்றிக்கொண்டு போகிறாயா?" என்றாள்.

"சரி, ஏற்றிக்கொண்டு போகிறேன். எனக்கு என்ன கூலி தருவாய்?" என்று கேட்டான்.

"கூலியா? என் பெரியப்பாவிடம் சொல்லி உனக்குக் கொடும்பாளூர் அரண்மனையில் உத்தியோகம் வாங்கித் தருகிறேன். இல்லாவிட்டால், யானைப் படைக்குச் சேநாதிபதியாக்கச் செய்கிறேன்!" என்றாள் வானதி.

"ஓகோ! கொடும்பாளூர் இளவரசியா தாங்கள்?" என்றான் அந்த வாலிபன். இதுவரையில் மலர்ந்திருந்த அவனது முகம் இப்போது சுருங்கியது. புன்னகை மறைந்தது; புருவங்கள் நெறிந்தன.

"ஏன்? கொடும்பாளூர் இளவரசி என்றால் அவ்வளவு மட்டமா? உன் யானை மேல் ஏறக்கூடாதா?" என்றாள் வானதி.

"இல்லை, இல்லை! கொடும்பாளூர் அரண்மனைக் கொட்டாரத்தில் எவ்வளவோ யானைகள் இருக்கின்றன; எத்தனையோ யானைப்பாகர்களும் இருக்கிறார்கள். நான் என்னத்திற்கு?" என்று சொல்லிவிட்டு அந்த வாலிபன் விடுவிடு என்று நடந்து போனான். அவன் ஒருவேளை திரும்பிப் பார்ப்பானோ என்று சற்று நேரம் வரையில் வானதி எதிர் பார்த்தாள். ஆனால் அவன் திரும்பியே பாராமல் நடந்து சென்று யானை மேல் ஏறிப் போய்விட்டான்.

இந்தச் சம்பவம் வானதியின் உள்ளத்தில் வெகுவாகப் பதிந்துவிட்டது. அடிக்கடி அது அவளுடைய ஞாபகத்துக்கு வந்தது. அந்த யானைப்பாகனுடைய உருவத் தோற்றமும் மலர்ந்த முகமும் இனிய குரலும் நினைவுக்கு வந்தபோதெல்லாம் உள்ளத்தில் இனந் தெரியாத இன்ப உணர்ச்சி உண்டாயிற்று. அவன் பறவைக் குஞ்சுகளைக் காப்பாற்ற யானைமேல் ஏறி வந்ததை நினைத்தபோதெல்லாம் அவளையறியாமல் நகைப்பு வந்தது. தனக்குத்தானே சிரித்துக் கொண்டாள். பிறகு அதற்காக வெட்கமும் அடைந்தாள். அந்த யானைப்பாகனின் அகம்பாவத்தையும், கொடும்பாளூர் என்ற வார்த்தையைக் கேட்டவுடனே அவன் முகத்தைச் சுருக்கிக் கொண்டு போய்விட்டதையும் எண்ணியபோதெல்லாம் அவன் பேரில் கோபம் உண்டாகி வளர்ந்தது. மொத்தத்தில், அந்த யானைப்பாகனைப் பற்றி அடிக்கடி நினைவு வந்து கொண்டிருந்தது. இது தவறோ என்ற சந்தேகமும் கூடத் தோன்றி அவளை மிகவும் வருத்திக் கொண்டிருந்தது.

திருநல்லத்துக்கு தமது தமக்கையைப் பார்க்கப் பொன்னியின் செல்வர் வரப்போகிறார் என்று அரண்மனையில் பேச்சாக இருந்தது. சோழநாட்டின் கண்மணியாக விளங்கிய இளவரசரைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் அரண்மனைப் பெண்கள் எல்லாருக்கும் இருந்ததுபோல் வானதிக்கும் இருந்தது. அதற்குச் சந்தர்ப்பம் எளிதில் கிடைக்கவில்லை. இளவரசர் வந்துவிட்டார் என்று பேச்சாக இருந்ததே தவிர, அவர் அந்தப்புரத்துக்குள் வரவேயில்லை. இயற்கையில் சங்கோசம் நிறைந்த வானதியோ மற்றத் தோழிப் பெண்களைப் போல் சந்தர்ப்பத்தை உண்டு பண்ணிக் கொண்டு போய் அவரைப் பார்க்க விரும்பவில்லை. திருநல்லத்தை விட்டு இளவரசர் புறப்பட்ட அன்றைக்குத்தான் அரண்மனை மேல் மாடத்தில் நின்று வானதி பொன்னியின் செல்வரைப் பார்க்க நேர்ந்தது. அவர் யானையின் மீது ஏறிப் பிரயாணமாகிக் கொண்டிருந்தார். வானதி தன் கண்களை நம்பமுடியவில்லை என்றால், அது சம்பிரதாய வார்த்தையன்று. யானைப்பாகன் என்று தான் எண்ணிக் கேலிப் பேசிச் சிரித்து அதிகாரம் செய்யவும் துணிந்த வாலிபனே இந்த மாநிலம் போற்றும் இளவரசர் அருள்மொழிவர்மன் என்று கண்டால், வானதிக்கு அவளுடைய கண்களை எப்படி நம்பமுடியும்? பின்னர், பக்கத்திலிருந்த பெண்களைப் பலமுறை கேட்டுத்தான் அதை நிச்சயம் செய்துகொண்டாள். இதனால் அவள் அடைந்த அவமானத்தையும், மனவேதனையும் சொல்லிச் சாத்தியமில்லை.

உலகம் ஆளப் பிறந்தவருக்குத் கொடும்பாளூர் அரண்மனையின் யானைக் கொட்டாரத் தலைவன் உத்தியோகம் செய்துவைப்பதாகத் தான் சொன்னதை அவள் நினைத்தபோது ஒரு பக்கம் சிரிப்பு வந்தது! அதே சமயத்தில் கண்களில் கண்ணீர் வந்தது. தன்னுடைய மூடத்தனத்தை நினைத்து வருந்தினாள். அப்போது அவருடைய முகம் சுருங்கியதன் காரணம் அவரை, "யானைப்பாகா!" என்று அழைத்ததுதான் என்று நம்பினாள். நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு என்னும் குணங்களில் ஒன்றும் இல்லாத பெண் என்று தான் தன்னைப்பற்றி அவர் எண்ணியிருப்பார்! இதை நினைத்தபோது வானதியின் உள்ளம் அடைந்த வேதனைக்கு அளவே இல்லை. ஆற்றிலோ, குளத்திலோ விழுந்து உயிரையே விட்டு விடலாமா என்று கூடப் பலமுறை எண்ணினாள். இளையபிராட்டி குந்தவையிடம் தான் செய்த குற்றத்தைச் சொல்லிவிடப் பலமுறை முயன்றாள். ஆனால் அதற்குத் துணிவு வரவில்லை; நா எழவில்லை. இளவரசரே குந்தவை தேவியிடம் சொல்லியிருந்தால் அவரே தன்னிடம் கேட்டிருப்பார். குந்தவை தேவி கேளாததினால் இளவரசர் சொல்லவில்லை என்று முடிவு செய்தாள். எத்தனையோ மனவேதனைக்கு மத்தியில் இந்த எண்ணம் அவளுக்குச் சிறிது ஆறுதல் அளித்தது. என்றைக்காவது ஒருநாள் பொன்னியின் செல்வரிடம் நேரில் மன்னிப்புக் கேட்டுக் கொண்ட பிறகு உயிரை விட்டு விடலாம் என்று கருதினாள். ஆனால் அதற்கும் தைரியம் வரவில்லை.

பழையாறைக்குப் போன பிறகு இளவரசரைச் சந்திக்கும் சந்தர்ப்பம் நேரலாம் என்று தோன்றியபோதெல்லாம் ஓடி ஒளிந்து கொண்டாள். இளவரசரின் முன்னால் போவதைக் காட்டிலும் உயிரையே விட்டுவிடலாம் என்று கருதலானாள். திருநல்லத்தில் நடந்ததை அறியாத இளையபிராட்டியும் அவளுடைய தோழிமார்களும், "இந்தப் பெண் இவ்வளவு கூச்சப்படுகிறாளே!" என்று மட்டும் ஆச்சரியப்பட்டார்கள்! அவளுடைய பயந்த சுபாவத்தோடு இதுவும் சேர்ந்தது என்று நினைத்தார்கள்.

பொன்னியின் செல்வர் தன்னிடம் அருவருப்புக் கொள்வதற்கு வேறு முக்கிய காரணமும் உண்டு என்பதை வானதி விரைவில் அறிந்து கொண்டாள். இளவரசர் அருள்மொழிவர்மன் ஒரு காலத்தில் உலகமாளும் சக்கரவர்த்தியாவார் என்று பலரும் நம்பியதுபோல அவளுடைய பிறந்த வீட்டிலும் நம்பினார்கள். அதனால் அவளை அருள்மொழிவர்மருக்கு மணம் செய்து வைத்துவிட வேண்டுமென்று அவளுடைய பெரிய தகப்பனார் திட்டமிட்டிருந்தார் என்பது வானதிக்கு ஒருவாறு தெரிந்திருந்தது. அந்த நோக்கத்துடனேயே அவளைப் பழையாறைக்குப் பூதி விக்கிரம கேசரி அனுப்பி வைத்திருப்பதாகக் குந்தவை தேவியின் மற்றத் தோழிப்பெண்கள் அடிக்கடி ஜாடைமாடையாகப் பேசிக் கொள்வார்கள். சில சமயம் வானதியிடமே சொல்லிப் பரிகசிப்பார்கள். "ஆகையினாலேதான் நீ இளவரசர் முன்னாலேயே போகமாட்டேன் என்கிறாய்! எங்களுக்குத் தெரியாதா உன் கள்ளத்தனம்?" என்பார்கள். இந்த வார்த்தைகள் வானதியின் காதில் நாராசமாக விழுந்தன. தான் கொடும்பாளூர்ப் பெண் என்று அறிந்ததும் யானைப்பாகனுடைய முகம் சுருங்கியதன் காரணம் இதுவாகவே இருக்கலாம் அல்லவா?

இவ்வாறெல்லாம் வானதியின் இளம் உள்ளம் கொந்தளித்துக் கொண்டிருந்த நிலைமையிலேதான் ஒருநாள் பொன்னியின் செல்வர் ஈழத்துப் போருக்குப் புறப்பட்டார். அன்றைக்கு அரண்மனையிலிருந்து எல்லாத் தோழிப் பெண்களும் கையில் மங்கள தீபங்களுடன் நின்று அவரை வாழ்த்தி அனுப்ப ஏற்பாடாயிருந்தது. இந்தச் சமயத்திலும் வரமுடியாது என்று மறுக்க வானதியினால் இயலவில்லை. போருக்குப் புறப்படும் இளவரசரை ஒருமுறை பார்த்துவிடவேண்டும் என்ற ஆர்வமும் அவள் உள்ளத்தில் பொங்கியது. வாய் திறந்து பேசாவிட்டாலும் தன் முகபாவத்தைக் கொண்டும் நயன பாஷையினாலும் அவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளலாம் என்ற சபலமும் இருந்தது. ஆனால் அவள் எண்ணியதற்கெல்லாம் மாறான சம்பவம் நடந்துவிட்டது. இளவரசர் அருகில் வந்து அவளை ஏறிட்டுப் பார்த்ததும் வானதி உணர்விழந்து, தீபத்தையும் போட்டுவிட்டுத் தரையில் விழுந்து மூர்ச்சையானாள். இதன் பிறகு நிகழ்ந்தவையெல்லாம் வாசகர்கள் அறிந்தவைதாம் அல்லவா?

ஓட்டுக் கூரை ஓடத்தில் மிதந்து சென்றுகொண்டிருந்த வானதி திருநல்லத்தை அணுகியபோது அவளுடைய உள்ளத்தில் மேற்கூறிய சம்பவங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து சென்றன. பொன்னியின் செல்வருக்குத் தன்மீது அநுதாபமும் உண்டு என்பதை அவள் உணர்ந்திருந்தாள். அதை அவர் இளைய பிராட்டி மூலமாகவும் நேரிலேயும் தெரிவித்ததும் உண்டு. ஆனால் அவருடைய அன்பு பூரணமடையாத வண்ணம் அவ்வப்போது தடைசெய்த முட்டுக்கட்டை ஒன்றும் இருந்தது. அது இன்னதென்பதையும் அவள் அறிந்திருந்தாள். இளவரசர் ஒரு காலத்தில் சக்கரவர்த்தியாகலாம் என்னும் எண்ணத்தின் பேரில் அவளை அவர் கழுத்தில் கட்டிவிடப் பார்க்கிறார்கள் என்று இளவரசர் நம்பியதுதான் அந்த முட்டுக்கட்டை. இவ்விதம் அவர் நம்புவதற்குக் காரணம் இல்லாமற் போகவில்லை. வானதியின் பெரிய தந்தை இதைப்பற்றிப் பலமுறை பேசியதுண்டு. ஏன்? இளையபிராட்டி குந்தவை தேவியே அந்தச் சதியாலோசனையில் சம்பந்தப்பட்டவர்தாம். அது இன்னும் பலருக்கும் தெரிந்திருந்தது. அந்த ஓடக்காரப் பெண் பூங்குழலிகூட அதைக் குறிப்பிட்டுப் பரிகாசம் செய்யவில்லையா? ஆகையால் இளவரசர் மனத்தில் அந்த எண்ணம் தங்கி நின்று அவருடைய அன்புக்கே ஒரு முட்டுக்கட்டையாக இருந்ததில் வியப்பில்லைதானே!

ஆனால் சற்று முன்பு வானதி செய்த சபதத்தை இளவரசர் அறிய நேரும்போது அந்த முட்டுக்கட்டை நீங்கிவிடும் அல்லவா? அதை அவர் அறியுமாறு நேரிடுமா? தானே அவரிடம் சொல்லிவிட்டால் என்ன? அடி அசட்டு வானதி! உனக்குத்தான் அவர் முன்னால் நின்றால் வாய் அடைத்துவிடுகிறதே! அவரை யானைப்பாகன் என்று நீ எண்ணியபோது, இந்தத் திருநல்லத்தில் சக்கரவட்டமாகப் பேசி அவரிடம் 'வாயாடிப் பெண்' என்ற பெயரும் பெற்றாய்! அதற்குப் பிறகு அவரை முகம் எடுத்துப் பார்க்கவும், வாய் திறந்து பேசவும் உன்னால் முடியவில்லையே? அநாதை வானதி! மறுமுறை நீ இளவரசரைப் பார்க்க நேரும்போது அப்படி மோசம் போய்விடாதே! துணிச்சலுடன் உன் மனத்தில் உள்ளதைச் சொல்லிவிடு! "நீங்கள் சிங்காதனம் ஏறினாலும் நான் ஏறமாட்டேன்! அவ்வாறு சபதம் செய்திருக்கிறேன்! தாங்கள் வெறும் யானைப்பாகனாகவே இருந்து, என்னையும் தங்களுடன் யானைமீது ஏற்றிக்கொண்டு ஒரு தடவை சென்றால், அதையே சொர்க்க வாழ்விலும் மேலாகக் கருதுவேன்" என்று தைரியமாகச் சொல்லிவிடு!

எல்லாம் சரிதான்! ஆனால் அவ்விதம் சொல்லுவதற்குச் சந்தர்ப்பம் கிடைக்குமா? இந்த வெள்ளம் என்னை எங்கே கொண்டுபோய்ச் சேர்க்கப்போகிறது? கரை சேராமலே முழுகிச் செத்துப் போய்விடுவேனோ! ஒருநாளும் அவ்விதம் நேராது. அதோ கரை தெரிகிறதே! திருநல்லத்து வசந்த மாளிகையின் மகுட கலசம் தெரிகிறதே! ஆஹா! இளவரசர் யானைமேல் ஏறி வந்து பறவைக் குஞ்சுகளைக் காப்பாற்றியதும், என்னுடன் இதமாகப் பேசியதும் நேற்று நடந்ததுபோல் அல்லவா; தோன்றுகின்றன?

இது என்ன? அதோ ஒரு யானை! அதன்பேரில் ஒரு யானைப்பாகன்! வெள்ளத்தின் வேகத்தை அந்த யானை எவ்வளவு அலட்சியமாக முண்டிக்கொண்டு குன்று நகருவது போல் நகருகிறது! அதோ கரை ஏறிவிட்டது! கரையோடு மேற்கு நோக்கிச் செல்கிறது! யானையின் மேல் கம்பீரமாக உட்கார்ந்திருப்பவன் யாராயிருக்கும்? ஒருவேளை...சீச்சீ! இது என்ன பைத்தியக்கார எண்ணம்? இளவரசர் இங்கே எதற்காக இப்படித் தனியாக யானை மீது வருகிறார்?

ஒரு முறை யானைமீது வந்த இளவரசரை யானைப்பாகன் என்று நான் எண்ணிவிட்டால், அப்புறம் எந்த யானைப்பாகனைக் கண்டாலும் இளவரசராயிருக்கலாம் என்று சந்தேகிக்க வேண்டுமா? என்ன அறிவீனம்! இருந்தாலும், இவன் வெறும் யானைப்பாகனாகவே இருந்தாலும், எனக்கு ஒருவேளை உதவி செய்யக்கூடும் அல்லவா? என்னை இந்த ஓட்டுக்கூரை இடத்திலிருந்து, இந்தப் பெரு வெள்ளத்திலிருந்து, கரையேற்றிவிடலாம் அல்லவா? நான் யார் என்று சொன்னால் என்னை யானை மேல் ஏற்றிப் பொன்னியின் செல்வரிடம் அழைத்துக்கொண்டு போகவும் கூடும் அல்லவா?

இத்தகைய எண்ணம் தோன்றியதும், வானதி, "யானைப்பாகா! யானைப்பாகா!" என்று கூவி அழைத்தாள். அது அவன் காதில் விழவில்லையோ, அல்லது விழுந்ததும் அவன் இலட்சியம் செய்யவில்லையோ, தெரியாது. யானை நிற்கவும் இல்லை; யானைப்பாகன் திரும்பிப் பார்க்கவும் இல்லை! யானையின் நடை வேகமாகிக் கொண்டிருந்தது. வெகு சீக்கிரத்தில் நதிக்கரையின் வளைவு ஒன்றில் திரும்பி யானையும் யானைப்பாகனும் மறைந்து விட்டனர்.

வானதி இந்த ஏமாற்றத்தைப்பற்றி எண்ணமிடுவதற்குள் பெரும் பீதிகரமான மற்றொரு எண்ணம் அவள் மனதில் உதித்தது. ஓட்டுக்கூரை திடீரென்று அதிவேகமாக சுழன்று செல்லத் தொடங்கியதாகத் தோன்றியது. ஆம், ஆம்! ஆற்று வெள்ளம் அங்கே அதிகமான வேகத்தை அடைந்திருந்தது. நதிக்கரையும், அதன் ஓரத்தில் வளர்ந்திருந்த பிரம்மாண்டமானா விருட்சங்களின் தடிமனான வேர்களும் அவளுடைய சமீபத்தில் விரைந்து வந்து கொண்டிருந்தன. ஓட்டுக்கூரை ஓடம் மரங்களின் வேர்களில் மோதிக்கொள்ளப் போவது நிச்சயம். மோதிக் கொண்டதும் தூள் தூளாகித் தண்ணீரில் மூழ்கிவிடும். பிறகு தன்னுடைய கதி என்ன? தப்பிப் பிழைத்துக் கரை ஏற முடியுமா? சுழல்களில் சிக்கி மரங்களின் வேர்களில் அடிபட்டுச் சாக நேரிடுமா?

ஐயோ! இது என்ன? அந்த மரங்களின் வேர்களுக்கு மத்தியில் பயங்கரமான முதலை ஒன்று வாயைப் பிளந்து கொண்டிருக்கிறதே! அது உண்மை முதலையா? அல்லது பொம்மையா! அல்லது என் உள்ளத்தின் பிரமையா?

இதோ கரை நெருங்கிவிட்டது! மரங்களின் வேர்களின் மேல் ஓட்டுக் கூரை மோதிக்கொள்ளப் போகிறது!

வானதி தன் கண்களை இறுக்கி மூடிக்கொண்டாள்! "தாயே! துர்க்கா பரமேசுவரி! தாய் தந்தையற்ற இந்த அநாதைப் பெண்ணுக்கு நீதான் கதி! என்னை உன் பாதங்களில் சேர்த்துக் கொள்!" என்று பிரார்த்தனை செய்தாள்.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
தியாக சிகரம் - அத்தியாயம் 21

உயிர் ஊசலாடியது!

ஒரு கண நேரம் ஒரு யுகமாகத் தோன்றக்கூடிய சந்தர்ப்பங்கள் சில உண்டு. அவற்றில் ஒன்றும், இப்போது வானதிக்கு நேர்ந்தது. அவள் கண்ணை மூடிக்கொண்டு, துர்க்கா பரமேசுவரியைப் பிரார்த்தனை செய்துகொண்டு, ஓட்டுக்கூரை ஓடத்தில் சுழன்று சென்ற நேரம் சில வினாடிகள்தான் இருக்கும். ஆயினும் அவை சில யுகங்களாகவே அவளுக்குத் தோன்றின. பின்னர் ஏற்பட்ட ஒரு பெரிய அதிர்ச்சி அவளுடைய தேகத்தையெல்லாம் குலுக்கிப் போட்டபோது அவளுடைய கண்களும் திறந்து கொண்டன. கூரை ஓடம் ஆற்றங்கரை மரத்தின் வேரில் மோதியதனால் அந்த அதிர்ச்சி உண்டாயிற்று என்பதை அவள் அறிந்தாள். அதனால் அந்தக் கூரை சுக்கல் சுக்கலான போது அதிர்ஷ்டவசமாக வானதியின் பாதி உடம்பு, வளைந்திருந்த மரக் கிளைகளில் சிக்கிக் கொண்டிருந்தது. அதனால் அவள் மரத்தின் வேர்களில் மோதப்படாமல் தப்பினாள். தனது நிலையை ஒருவாறு உணர்ந்து மரக்கிளைகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள். வெள்ளத்தின் சுழல் அவளுடைய கால்களைப் பிடித்து அதிவேகமாக இழுத்துக் கொண்டிருந்தது. அந்த வேகத்தினால் கால்கள் பிய்த்துக்கொண்டு போய் விடும் போலிருந்தது. அவள் உடுத்தியிருந்த சேலையும் அவளை இழுத்து, வெள்ளத்தில் விட்டு விட முயன்றதாகத் தோன்றியது.

வானதிக்கு அச்சமயம் அதிசயமான மனோதிடமும் தைரியமும் எங்கிருந்தோ வந்திருந்தன. பல்லைக் கடித்துக் கொண்டு தன் முழு பலத்தையும் கொண்டு எழும்பி மரக்கிளையின் மேலே தாவி ஏறினாள். வளைந்து ஊசலாடிய மெல்லிய கிளைகளுக்கு மேலே இரண்டு கவடுகளாகப் பிரிந்த ஒரு பெரிய கிளையில் வசதியான இடத்தில் கெட்டியாக உட்கார்ந்து கொண்டாள். சேலைத் தலைப்புகளை முறுக்கித் தண்ணீரைப் பிழிந்தாள்.

அப்போது சடபடவென்று தண்ணீர் அடிபடும் சத்தம் கேட்டது. சற்று முன்னால், அவள் கண்களை மூடிக்கொள்வதற்கு முன்னால், பார்த்த முதலையின் நினைவு வந்தது.

கீழே குனிந்து நாலு பக்கமும் உற்றுப் பார்த்தாள். முதலில் முதலையின் வால் தண்ணீரை அடிக்கும் காட்சி மட்டும் தென்பட்டது. முதலையின் உடம்பில் பெரும்பகுதியை அவள் ஏறி வந்த ஓட்டுக் கூரையின் உடைந்து சிதறிய பகுதிகள் மறைந்துக் கொண்டிருந்தன. சிறிது சிறிதாக முதலை தன் வாலின் உதவி கொண்டும் உடம்பை அசைத்தும் நெளிந்தும் அந்தக் கூரைப் பகுதிகளிலிருந்து முழுதும் விடுவித்துக்கொண்டு வெளி வந்தது; அப்படி வெளிவந்த மகிழ்ச்சியைக் காட்டுவதற்காக முதலை தன் வாயை அகலப் பிளந்தது. வானதியைப் பார்த்து அது, "வா, வா! எப்படியும் நீ என் வாயில் விழ வேண்டியதுதான்!" என்று சொல்வது போலிருந்தது.

வானதியும் தான் தப்பிப் பிழைத்த விதத்தை எண்ணிப் பார்த்து உற்சாகம் கொண்டிருந்தாள். "ஓகோ! அப்படியா சொல்கிறாய்? என்னை விழுங்கி விடுவேன் என்றா சொல்கிறாய்? முதலையே! உன் கைவரிசை, வால் வரிசை ஒன்றும் என்னிடம் பலியாது! நீ பல்லைக் காட்டுவதிலும் உபயோகமில்லை. உன் பசிக்கு என்னை நம்பியிராதே! வேறு யாரையாவது பார்த்துக்கொண்டு போ!" என்று வானதி முதலையிடம் பேசினாள். அந்தக் குரலைக் கேட்ட முதலை தன் இரண்டு பயங்கரமான கண்களாலும் அவளை உற்றுப் பார்க்கத் தொடங்கியது.

வானதி "ஓகோ! உன்னுடைய சபலம் உன்னை விடவில்லை போலிருக்கிறது!" என்று கூறிவிட்டுச் சுற்று முற்றும் பார்த்தாள். அவளுடைய நிலைமை சற்றுப் பீதி அளிக்கக் கூடியதாகவே தோன்றியது. தண்ணீரின் பக்கம் அந்தப் பெரிய மரத்தின் கிளைகள் வளைந்து தொங்கின. ஆனால் கரையின் பக்கத்தில் அப்படித் தாழ்ந்திருந்த கிளைகளையே காணவில்லை. அடிமரத்தின் வழியாக இறங்கினால், அங்கே வேர்களோடு வேராக முதலை காத்துக் கொண்டிருந்தது. நதியின் பக்கம் வளைந்திருந்த கிளைகளிலிருந்து குதித்தால் மடுவின் சுழல் அவளைச் சுற்றிச் சுற்றிப் பாதாளத்துக்கு இழுத்துக் கொண்டு போகக் காத்திருந்தது. அந்தப் பெரிய சுழலைச் சற்று நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தால் கூடத் தலை சுற்றும் போலத் தோன்றியது. "கரைப் பக்கம் கிளைகள் உயரமாக இருந்தாலும் பாதகமில்லை, எப்படியோ குதித்துச் சமாளிக்கலாம்" என்று எண்ணி, மரக்கிளைகளின் வழியாக நடந்து மறு பக்கம் போக எத்தனித்து எழுந்தாள்.

ஏற்கனவே வெகு நேரம் அவளுடைய உடம்பின் கீழ்ப் பகுதி முழுவதும் தண்ணீரில் இருந்தபடியால் கால்கள் சில்லிட்டுப் போயிருந்தன. எழுந்து நிற்க முயன்றபோது கால்கள் வெடவெடவென்று நடுங்கின. "சீச்சீ! கால்களே! உங்களுக்கு என்ன வந்து விட்டது?" என்று சொல்லிவிட்டு வானதி மறுபடி உட்கார்ந்து கொண்டாள். யாருக்குப் பொறுமை அதிகம்? முதலைக்கா, தனக்கா?... என்று சோதித்துப் பார்க்க வேண்டியது தான் போலும்!

இச்சமயம், கஜேந்திரனின் பிளிறல் சத்தம் கேட்டு வானதி திடுக்கிட்டாள். சற்று முன் நதியைக் குறுக்கே கடந்து கரை ஏறி மேற்கு நோக்கிச் சென்ற யானை திரும்பி வந்து கொண்டிருந்தது. அதே சமயத்தில் ஆற்றின் கரை ஓரமாகப் படகு ஒன்று வருவதையும் கவனித்தாள். அந்தப் படகில் இருவர் இருந்தார்கள். ஆம், ஆம்; அந்த இருவரில் ஒருவன் ஜோதிடரின் சீடன்; இன்னொருத்தி பூங்குழலிதான்! கடைசியில் தன்னைக் காப்பாற்றி அழைத்துப் போகப் பூங்குழலிதானா வரவேண்டும்?

படகு மரத்தின் அடியில் வந்தது. மரக்கிளை மேல் உட்கார்ந்திருந்த வானதியைப் பூங்குழலி பார்த்து விட்டாள். சிரித்துக் கொண்டே "இளவரசி! நல்ல இடம் பார்த்து ஒளிந்து கொண்டீர்கள், சீக்கிரம் இறங்கி வாருங்கள்! அதோ அந்த யானையின் மேல் வருகிறது யார் தெரியுமா?" என்று கேட்டாள்.

வானதியின் மனத்தில் சட்டென்று உண்மை உதயமாகி விட்டது. ஆனாலும் அதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக , "தெரியாதே? யார்?" என்று கேட்டாள்.

"தாங்கள் யாரைத் தேடிக் கொண்டு புறப்பட்டீர்களோ, அவர் தான்! இளவரசர் தான்" என்றாள் பூங்குழலி.

வானதி அடங்கா வியப்புடன் யானையின் மேல் வருகிறவரைச் சில கண நேரம் பார்த்துக்கொண்டிருந்தாள். அவர் அருகில் வரும் சமயத்தில் தான் மரக்கிளையின் மேல் உட்கார்ந்திருப்பது மிக்க அசம்பாவிதம் என்று தோன்றியது. பூங்குழலியின் யோசனைப்படி அவளுடைய படகில் இறங்கிவிட வேண்டியதுதான் என்று எண்ணிக் கீழே பார்த்தாள்.

அச்சமயம் படகு வெள்ளத்தின் வேகத்தினால் மரத்தடியில் நிற்க முடியாமல் நகர்ந்து செல்வதைக் கண்டாள். படகுடன் போக விரும்பாமல் பூங்குழலி தாவிக் குதித்ததையும் பார்த்தாள். ஐயோ இது என்ன? பக்கத்தில் பயங்கர முதலை கிடப்பதை இந்தப் பெண் கவனிக்கவில்லையா, என்ன? ஒரு கணத்தில் ஒன்பதினாயிரம் எண்ணங்கள் வானதியின் உள்ளத்தில் எழுந்து கொந்தளித்தன. அவள் வாயிலிருந்து ஏதோ உளறிக்குளறி வார்த்தைகள் வந்தன.

"முதலை!" என்பது மட்டும் பூங்குழலியின் காதில் விழுந்தது. அவள் திரும்பிப் பார்த்தாள். ஆம்; அவளுக்கு வெகு சமீபத்தில் பிரம்மாண்டமான முதலை அதன் வாயைப் பிளந்து கொண்டிருந்தது. பூங்குழலி திரும்பிப் பார்த்த சமயம் முதலை தன் வாலை ஓங்கித் தண்ணீரில் அடித்தது.

பூங்குழலி எவ்வளவோ தைரியசாலிதான்! எத்தனையோ அபாயங்களைச் சமாளித்திருக்கிறாள். ஆனால் பத்தடி தூரத்தில் வாயைப் பிளந்து கொண்டிருக்கும் முதலைக்கு முன்னால் மனோ தைரியத்தை மட்டும் வைத்துக்கொண்டு என்ன செய்ய? கரணம் தப்பினால் மரணம்! ஒரு வினாடியில் உயிர் தப்பாவிட்டால், முதலையின் வாயில் போக வேண்டியதுதான்! எப்படி உயிர் தப்புவது? மறுபடியும் படகில் ஏறிக்கொள்ள வேண்டியதுதான்!

இவ்வாறு எண்ணிப் பூங்குழலி தண்ணீரில் பாய்ந்தாள். படகு அதற்குள் கொஞ்ச தூரம் போய்விட்டது. ஜோதிடரின் சீடன் படகை அவ்விடத்தில் நிறுத்த முடியாது என்று தீர்மானித்துச் சற்றுக் கீழ்ப்புறம் சென்று கரையோரமாக அதை ஒதுக்க எண்ணிக் கொண்டு போனான். பூங்குழலியின் ஆபத்தான நிலையை அவன் கவனிக்கவில்லை. படகைப் பிடிக்கத் தாவி நீந்திச் சென்ற பூங்குழலி அலைமோதும் கடலைக் காட்டிலும் காவேரி வெள்ளத்தின் கரையோரச் சுழல் அபாயகரமானது என்று கண்டாள். சுழலின் வேகம் அவளைக் கீழ் நோக்கி இழுத்தது. முதலை அவள் பின்னால் அவளைப் பிடிப்பதற்காக நகரத் தொடங்கி விட்டதென்பதை உணர்ந்தாள். இந்த நிலையில் அவளுடைய சேலையின் தலைப்பு வளைந்திருந்த மரக்கிளைகளில் மாட்டிக் கொண்டு அவளுடைய நிலையை மேலும் அபாயகரமாக்கியது.

இதையெல்லாம் மேற்கிளைமீது அமர்ந்திருந்த வானதி கண்டாள். தன்மீது பூங்குழலி கொண்டிருந்த மனக்கசப்பும், சற்று முன்னால் அவளுடைய கொடூர வார்த்தை காரணமாகத் தான் செய்த சபதமும், அவள் தன்னைக் கை தூக்கிவிட வேண்டாம் என்று எண்ணிக் கையை உதறித் தண்ணீரில் விழுந்ததும் மின்னல் வேகத்தில் அவள் மனதில் தோன்றி மறைந்தன. கூடவே, அப்பெண் பொன்னியின் செல்வரைக் கடலிலிருந்து காப்பாற்றிச் சூடாமணி விஹாரத்தில் கொண்டு போய்ச் சேர்த்ததும், அதனால் சோழ நாடும், தானும் அவளுக்குப் பட்டிருந்த நன்றிக்கடனும் நினைவுக்கு வந்தன. அதோ, யானைமீது அவர் வந்து கொண்டிருக்கிறார். அவர் வருவதற்குள்ளே இவள் முதலை வாயில் அகப்பட்டுக் கொண்டு விட்டால், அவர் மனம் என்ன பாடுபடும்? தன்னைப் பற்றி அவர் என்ன எண்ணுவார்? பார்க்கப் போனால் தன்னைக் காப்பாற்றும் எண்ணத்துடன் அல்லவா இவள் தொடர்ந்து வந்து இந்த அபாயத்துக்கு உள்ளாயிருக்கிறாள்?

இவ்வளவு எண்ணங்களும், இங்கே நேயர்கள் படிப்பதற்கு ஆன நேரத்தில் நூற்றில் ஒரு பங்கு நேரத்திற்குள்ளே, வானதியின் உள்ளத்தில் தோன்றின. "வாயுவேகம் மனோவேகம்" என்று சொல்வது வெறும் வார்த்தை அன்று. எல்லா வேகங்களுக்குள்ளும் சிந்தனையின் வேகம்தான் அதிக வேகமானது. இவ்விதம் எண்ணமிட்ட நேரத்திலேயே தன்னுடைய கடமை இன்னதென்பதையும் வானதி நிச்சயித்துவிட்டாள். மேற்கிளையிலிருந்து ஒரு கிளை கீழே இறங்கி, அதன்மீது படுத்த வண்ணம் கைகளைக் கீழே நீட்டினாள். பூங்குழலியின் தலைக் கூந்தலை வாரிப் பிடித்துக்கொண்டாள். பூங்குழலி மேல் நோக்கிப் பார்த்தாள். வானதியின் கைப்பிடியிலிருந்து அவள் தப்பிச் செல்ல முயலவில்லை. ஒரு கரத்தை மேலே நீட்டினாள். வானதி இப்போது அந்தக் கரத்தைப் பிடித்துக் கொண்டாள். பூங்குழலியை மேலே இழுக்கத் தொடங்கினாள். இன்னொரு கையினால் மரக்கிளை ஒன்றைப் பற்றிக் கொண்டு பூங்குழலி வெள்ளத்திலிருந்து மேலே எழும்பினாள். வானதி இருந்த கிளையிலேயே அவளும் தாவி ஏறினாள். இரண்டு பேரையும் தாங்க முடியாமல் அந்தக் கிளை வளைந்தது. பூங்குழலியும் மேலே ஏற முயற்சித்தாள். அந்த முயற்சியில் அவளுடைய கால்கள் தடுமாறின. மறுகணத்தில் அவள் மரக்கிளைக்கும், நதி வெள்ளத்துக்கும் இடையில் தொங்கிக் கொண்டிருந்தாள். அவளுடைய ஒரு கையை மட்டும் வானதியின் இரு கரங்களும் கெட்டியாகப் பற்றிக் கொண்டிருந்தன.

மரத்தின் வேர்களுக்கு மத்தியில் கிடந்த முதலை வெளிப் புறப்படுவதற்குச் சிறிது நேரம் ஆயிற்று. இப்போது அது வெளிவந்து விட்டது. மரக்கிளையிலிருந்து தொங்கிய உருவத்தைப் பார்த்து விட்டு, வாயை மறுபடியும் அகலமாகத் திறந்தது. பூங்குழலியின் உடலும், உயிரும் ஊசலாடிக் கொண்டிருந்தன.

வானதியின் மெல்லிய கரங்கள் பூங்குழலியின் வைர உடலின் கனத்தினால் இற்று விழுந்துவிடும் போலிருந்தன. அவளுடைய உள்ளமோ எந்தக் கணத்தில் பூங்குழலி தன் கையிலிருந்து நழுவி முதலையின் வாயில் விழுந்து விடுவாளோ என்ற எண்ணத்தினால் துடி துடித்தது.

அத்தகைய விபத்து நேர்ந்துவிட்டால், பிறகு இளவரசரின் முகத்தை அவள் ஏறிட்டுப் பார்க்கவே முடியாது. பூங்குழலி விழும்போது அவளும் கூட விழுந்து உயிரை விட்டு விடுவதே மேலானது. அப்படித்தான் செய்ய வேண்டும்.

அதோ யானை நெருங்கி வந்துவிட்டது. இளவரசர் அதன்மேல் வருகிறார். அவர் வந்து காப்பாற்றும் வரையில், பூங்குழலியை விட்டு விடாமலிருக்க இந்தக் கரங்களில் சக்தி இருக்குமா...? யானை ஆற்றங்கரையில் வந்து மரத்தடியில் நின்றது. மறுபடியும் ஒரு தடவை பிளிறியது, அந்தச் சத்தத்தைக் கேட்டு முதலை அந்தப் பக்கம் திரும்பிப் பார்த்தது. என்ன நினைத்துக் கொண்டதோ என்னமோ மறுபடியும் மரத்தின் வேர்களுக்கு மத்தியில் சென்று படுத்துக் கொண்டது.

வானதியும் மரக்கிளையின் மீது குனிந்த வண்ணம் யானையைப் பார்த்தாள். அதன் மேலிருந்தவரையும் பார்த்தாள். ஆம்; அவர் இளவரசர்தான்! பொன்னியின் செல்வர்தான்!

"யானைப்பாகா! யானைப்பாகா! அன்றொரு நாள் பறவைக் குஞ்சுகளைக் காப்பாற்றியதுபோல் இன்றைக்கு இந்தப் பேதை பெண்களைக் காப்பாற்று!" என்று தனக்கு மட்டும் கேட்கக் கூடிய மெல்லிய குரலில் கூறிக் கொண்டாள்.

முடியாது; இனி இந்த ஓடக்காரப் பெண்ணைத் தாங்க முடியாது! இனி ஒரு நிமிஷம் தாமதித்தாலும் தோள் பட்டைகளிலிருந்து கைகள் தனியாகப் பிய்ந்து விழுந்துவிடும்! அப்பப்பா! இவள் பெயர் பூங்குழலி! ஆனால் என்ன கனம் கனக்கிறாள்? இரும்பினால் செய்த உடம்பு போல அல்லவா இருக்கிறது!

"யானைப்பாகா! யானைப்பாகா! சீக்கிரம் வரமாட்டாயா?..."

பூங்குழலி கிறீச்' என்று கத்தினாள். அதைக் கேட்ட வானதி அவளை முதலை பிடித்துக் கொண்டதாக எண்ணினாள். சொல்ல முடியாத பயங்கரம் அவள் மனதில் குடிகொண்டது. கண்களை இறுக மூடிக்கொண்டாள்.

அவளுடைய கைகளைப் பிடித்துக் கீழ் நோக்கி இழுத்துக் கொண்டிருந்த கனம் மேலும் அதிகமாயிற்று. முதலைதான் பூங்குழலியைப் பிடித்து இழுப்பதாக எண்ணிக் கண்ணை மூடிய வண்ணம் அவளை இன்னும் கெட்டியாகப் பிடித்து மேலே தூக்க முயன்றாள்.

"கையைவிடு! வானதி! கையை விடு!" என்று செவியில் அமுதென ஒலித்த இளவரசரின் குரல் கேட்டது. இன்னது செய்கிறோம் என்று தெரியாமல் கையை விட்டாள். அவளுடைய தோள்களைப் பிய்த்து இழுத்த பாரம் நீங்கியது. கண்களைத் திறந்து பார்த்தாள்.

பூங்குழலியைக் கஜேந்திரன் துதிக்கையினால் சுழற்றிப் பற்றி எடுத்துக் கரையில் இறக்கி விடுவதைக் கண்டாள். பூங்குழலியின் கண்கள் மூடியிருந்தன. யானைத் துதிக்கை அவள் மீது சுற்றியபோதுதான் அவள் அவ்வாறு 'கிறீச்'சிட்டுக் கத்தியிருக்க வேண்டும்.

அதேமாதிரி தானும் ஒரு தடவை கத்திவிட்டு மூர்ச்சையடைந்தது வானதிக்கு நினைவு வந்தது. இப்போது அதைக்காட்டிலும் பன்மடங்கு அபாயகரமான நிலைமையாயிருந்தும், தான் பயப்படாமலும் பிரக்ஞை இழக்காமலும் இருப்பதை நினைக்க அவளுக்கே வியப்பாயிருந்தது.

தன்னுடைய தைரியத்தைப் பார்த்து மெச்சிப் பாராட்ட இளையபிராட்டி இங்கே இல்லையே! ஆயினும் பாதகமில்லை. எப்படியும் ஒருநாள் அவருக்குத் தெரியாமற் போகாது. இப்போது என்னுடைய கதி என்ன? பூங்குழலியை மட்டும் அழைத்துக்கொண்டு என்னை இந்த மரத்தின் மேலேயே விட்டு விட்டு இளவரசர் போய்விடுவாரா?

அவ்விதம் அவர் செய்தால் அது என்னுடைய அசட்டுத்தனத்துக்குச் சரியான தண்டனையாகத்தான் இருக்கும்! இல்லை, இல்லை! கஜராஜனின் துதிக்கை மறுபடியும் அவளை நோக்கி நீண்டு கொண்டு வந்தது. வானதி மீண்டும் ஒரு தடவை கண்களை மூடிக் கொண்டாள். மறுகணம் அவள் மரக்கிளையிலிருந்து தூக்கப்பட்டுக் கெட்டியான தரையில் விடப்பட்டதை உணர்ந்தாள். கண் விழித்துப் பார்த்தபோது தான் நதிக்கரையில் பூங்குழலிக்கு அருகில் நிற்பதைக் கண்டாள்.

தன்னை அறியாமல் எழுந்த அன்புடனும் ஆர்வத்துடனும் அந்த ஓடக்காரப் பெண்ணைக் கட்டித் தழுவிக் கொண்டாள்.

பூங்குழலி கண்களில் நீர் ததும்ப, தழுதழுத்த குரலில், "இளவரசி! இன்று 'என் உயிரைக் காப்பாற்றினீர்கள். நான் உங்களை நதி வெள்ளத்தில் முழுகிப் போகாமல் காப்பாற்றி அழைத்துப்போக வந்தேன். அதற்கு மாறாக நீங்கள் என்னை முதலை வாயிலிருந்து காப்பாற்றினீர்கள். இந்த நன்றியை என்றும் மறக்க மாட்டேன்" என்றாள்.

"பூங்குழலி! நானா உன்னைக் காப்பாற்றினேன்? உன்னையும் என்னையும் அந்த யானைப்பாகன் அல்லவா காப்பாற்றினார்? அவரிடம் உன் நன்றியைக் கூறு!" என்றாள் வானதி.

"என் உயிர்மேல் எனக்கு அவ்வளவாக ஆசை ஒன்றுமில்லை. ஆனால் என் அத்தை அவளுடைய செல்வப் புதல்வரிடம் ஓர் அவசரச் செய்தி சொல்லும்படி என்னை அனுப்பினாள். அதைச் சொல்லுவதற்கு முன்னால் நான் செத்துப் போக விரும்பவில்லை!" என்றாள் பூங்குழலி.

யானையின் மேலிருந்தவரை வானதி நிமிர்ந்து பார்த்தாள். ஏதோ ஒரு விஷமக் குதூகலம் அவளை அச்சமயம் பற்றிக் கொண்டிருந்தது.

"யானைப்பாகா! யானைப்பாகா! எங்களை உன் யானை மேல் ஏற்றிக்கொண்டு போகிறாயா?" என்று கேட்டுவிட்டுக் கலீர் என்று சிரித்தாள்.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
தியாக சிகரம் - அத்தியாயம் 22

மகிழ்ச்சியும், துயரமும்

வானதியின் சிரிப்பொலியுடன் கலந்த வார்த்தைகளைக் கேட்டுவிட்டு, இளவரசரும் சிரித்துக்கொண்டே யானையின் மேலிருந்து கீழிறங்கினார்.

"ஆகா! யானை ஏற்றம் என்பது மிகவும் கடினமான காரியம். இராஜ்ய சிம்மாசனத்தில் ஏறுவது போலத்தான். யானை மேல் ஏறுவதும் கஷ்டம்; அதன்மேல் உட்கார்ந்திருப்பதும் கஷ்டம்! யானை மேலிருந்து இறங்குவது எல்லாவற்றையும் விடக் கஷ்டம். ஆயினும், அந்தக் கஷ்டங்களையும் சில சமயம் ஒருவன் அநுபவிக்க வேண்டியிருக்கிறது!" என்றார் பொன்னியின் செல்வர்.

"சிலர் அந்தக் கஷ்டத்தை மிக அற்பமான காரணங்களுக்காகக்கூட அநுபவிக்கிறார்கள். பறவைக் குஞ்சுகளைக் காப்பாற்றுவதற்காக யானை மேல் ஏறிக்கொண்டு ஓடி வருகிறவர்களும் உண்டு!" என்றாள் வானதி.

"அந்தச் சம்பவம் உனக்கு இன்னும் நினைவு இருக்கிறதா, வானதி! நீ அதைப்பற்றி இன்று வரை பேச்சே எடுக்காததினால் மறந்துவிட்டாயோ என்று எண்ணினேன்!" என்றார் இளவரசர்.

"உலகமெல்லாம் சுற்றி அலைந்து அநேக வீரச் செயல்களில் ஈடுபடுகிறவர்கள் மறந்துவிடுவார்கள். அரண்மனையிலேயே இருக்கும் பேதைப் பெண்ணுக்கு அதை ஞாபகம் வைத்துக்கொள்வதைவிட வேறு என்ன வேலை? தாங்கள் அன்றைக்கு யானை மேல் ஏறிக்கொண்டு வந்ததும் நினைவிலிருக்கிறது; நான் கொடும்பாளூர்ப் பெண் என்று சொன்னதும் தாங்கள் முகத்தைச் சுருக்கிக்கொண்டு திரும்பிப் போனதும் நினைவில் இருக்கிறது!"

"அதற்கு அப்போது காரணம் இருந்தது, வானதி!"

"அந்தக் காரணம் இப்போதும் இருக்கிறது, ஐயா! தாங்கள் உலகமாளும் சக்கரவர்த்தியின் புதல்வர்; சோழவளநாட்டின் கண்ணின் மணி போன்ற பொன்னியின் செல்வர். நானோ பொட்டைக் காட்டுப் பிராந்தியத்தில் பிறந்து வளர்ந்தவள். சிற்றரசர் குலமகள்; அதிலும், போரில் இறந்து போனவருடைய அநாதை மகள்!..."

"வானதி! நீ எனக்கு அநீதி செய்கிறாய்! நியாயம் அற்ற வார்த்தை கூறுகிறாய்! போனால் போகட்டும்! நான் தஞ்சைக்கு அவசரமாகப் போகவேண்டும்! சீக்கிரம் சொல்! நீ எப்படி இங்கே வந்து சேர்ந்தாய்? தனியாக ஏன் வந்தாய்? ஓட்டுக் கூரை மேல் மிதந்து வந்தாயாமே? இந்தப் பெண் இங்கே எதற்காக வந்தாள்? எப்படி இத்தகைய பிராணாபத்தில் சிக்கிக்கொண்டாள்?..."

"நான் ஒருத்தி இங்கே நின்று கொண்டிருப்பது தங்களுக்கு ஞாபகம் வந்ததுபற்றிச் சந்தோஷம். ஒரு நிமிஷம் தனியாகப் பேச அவகாசம் கொடுத்தால், நான் சொல்லவேண்டியதைச் சொல்லி விட்டுப் போயே போய்விடுவேன்!" என்றாள் பூங்குழலி.

அந்த இரண்டு பெண்களும் அச்சமயம் இளவரசரின் முன்னால் நேருக்கு நேர் நின்றபோது, எப்படியோ அவர்களுக்கு அசாதாரண தைரியமும், வாசாலகமும் ஏற்பட்டிருந்தன.

"சமுத்திரகுமாரி! உன்னை மறந்துவிட்டேன் என்றா நினைத்தாய்? அது எப்படி முடியும்? நீதான் நான் கூப்பிடக் கூப்பிட, நின்றுகூடப் பதில் சொல்லாமல் படகைச் செலுத்திக் கொண்டு வந்தாய்! அப்படி அவசரமாக வந்தவள் மரக்கிளைக்கும், முதலையின் திறந்த வாய்க்கும் நடுவில் நின்று ஊஞ்சலாடிக்கொண்டிருந்ததை என் ஆயுள் உள்ளளவும் மறக்க முடியாது!" என்று சொல்லிவிட்டு இளவரசர் சிரித்தார்.

"உன்னைத் தூக்கமுடியாமல் தூக்கிப் பிடித்துக்கொண்டு வானதி பட்டுக்கொண்டிருந்த அவஸ்தையையும் நான் மறக்க முடியாது. ஆனால் நீங்கள் இருவரும் இங்கே எப்படி வந்து சேர்ந்தீர்கள்? எதற்காக? யாராவது ஒருவர் சீக்கிரம் சொல்லுங்கள்!"

"பொன்னியின் செல்வ! தானும் தங்கள் திருத்தமக்கை யாரும் தங்களை வழியில் கண்டு நிறுத்தித் தஞ்சாவூருக்குப் போவதைத் தடை செய்வதற்காக வந்தோம். தாங்கள் தற்சமயம் தஞ்சாவூர் வந்தால், அங்கே பெரிய யுத்தம் மூளும் என்று இளையபிராட்டி அஞ்சுகிறார். அதற்கு முன்னால் சந்தித்துப் பேச விரும்புகிறார்..."

"இளையபிராட்டி இப்போது எங்கே?"

"குடந்தையில் இருக்கிறார்..."

"நீ மட்டும் எப்படி இங்கே வந்தாய்?"

"வழியில் குடந்தை ஜோதிடர் வீட்டில் நானும் இளைய பிராட்டியும் சிறிது நேரம் தங்கினோம். அந்தச் சமயத்தில் காவேரி கரையை உடைத்துக்கொண்டு வந்து, ஜோதிடர் வீட்டையே அடித்துக்கொண்டு வந்து விட்டது. இளவரசே! காவேரித் தாய் தங்களைக் குழந்தைப் பிராயத்தில் காப்பாற்றியதாகச் சொல்கிறார்கள். தங்களுக்கு இந்தப் பொன்னி நதியின் பேரில் எவ்வளவோ ஆசை உண்டு என்பதையும் அறிவேன். ஆனால் இன்று இந்த நதியினால் நாடு நகரங்களும், மக்கள் மிருகங்களும் பட்ட கஷ்டத்தை நினைப்பதற்கே பயங்கரமாயிருக்கிறது. காவேரித் தாய் மிகக் கொடுமையானவள் என்று சொல்லத் தோன்றுகிறது..."

"வானதி! காவேரி அன்னையின் பேரில் அப்படிப் பழி சொல்லாதே! இந்த மாதரசிக்கு எங்கள் சோழ நாட்டின்பேரில் அவ்வளவு ஆசை. அந்த ஆசை வரம்பு மீறிப் போகும்போது கரையை உடைத்துக்கொண்டு கிளம்பிவிடுகிறாள். இதை அறியாதவர்கள் அன்னையின் பேரில் வீண்பழி சொல்லுகிறார்கள்! ஏன்! கரையை மீறிக்கொண்டு வருவதற்காக சமுத்திரராஜன் பேரில்கூடச் சிலர் குறை சொல்கிறார்கள். ஆனால் பூங்குழலி அப்படிக் கடலரசன் பேரில் குறை சொல்ல மாட்டாள்!" என்றார் இளவரசர்.

"மன்னியுங்கள்! நானும் இனிக் காவேரி அன்னையின் பேரில் குற்றம் சொல்லவில்லை. நானும், தங்கள் தமக்கையும் குடந்தை ஜோதிடர் வீட்டில் இருந்தபோது திடீரென்று காவேரியின் ஆசை பொங்கிப் பெருகிவிட்டது. தங்கள் தமக்கை முதலியவர்கள் ஓடிப்போய்க் கோவில் மண்டபத்தின் பேரில் ஏறிக்கொண்டார்கள். நான் என் அசட்டுத் தனத்தினால் மண்டபத்தின் பேரில் ஏறத் தவறிவிட்டேன். ஜோதிடர் வீட்டு ஓட்டுக் கூரையைப் பிடித்துக்கொண்டு மிதந்து வந்தேன்..."

"உன்னைக் காப்பாற்றுவதற்காகப் பூங்குழலி படகில் ஏறிக்கொண்டு வந்தாளாக்கும். அழகாய்த்தானிருக்கிறது! உங்கள் இருவரையும் சேர்த்து இந்தக் கஜேந்திரன் காப்பாற்ற வேண்டியதாயிற்று. இந்த யானையின் அறிவே அறிவு! உங்கள் இருவரையும் அதன் துதிக்கையால் பூமாலையை எடுப்பதுபோல் அசங்காமல் கசங்காமல் எடுத்துச் சற்றுமுன் கரையில் விட்டது! இன்று காலையில் இதே யானை கையில் அங்குசத்துடன் நேரங்கழித்து ஓடிவந்த யானைப்பாகனைத் தூக்கிச் சுழற்றி வெகுதூரத்தில் போய் விழும்படி எறிந்தது! அவன் உயிர் பிழைத்திருப்பதே துர்லபம்!"

"ஐயோ! அது என்ன? நானே தங்களிடத்தில் அதைப் பற்றிக் கேட்கவேண்டும் என்றிருந்தேன்..."

"என்னை நீ என்ன கேட்கவேண்டுமென்றிருந்தாய்?"

"யானைப்பாகனாலும், அங்குசத்தினாலும் தங்களுக்கு ஏதாவது தீங்கு நேர்ந்ததோ என்று கேட்க விரும்பினேன்."

"தீங்கு நேர இருந்தது என்பது உண்மைதான்; அது உனக்கு எப்படித் தெரிந்தது? ஜோதிடர் சொன்னாரா, என்ன? அந்தப் பித்து இளையபிராட்டிக்கு இன்னும் போக வில்லையா?"

"ஜோதிடர் சொல்லவில்லை! சொன்னாலும் நாங்கள் நம்பியிருக்க மாட்டோ ம், பெரிய பழுவேட்டரையர் சொன்னார்!"

"என்ன? என்ன? யார் சொன்னார்?"

"ஆம், இளவரசே! தனாதிகாரி பெரிய பழுவேட்டரையர் தான் சொன்னார். நாங்கள் ஜோதிடர் வீட்டில் இருந்தபோது திடும்பிரவேசமாக அவர் உள்ளே நுழைந்து வந்தார். தங்களுக்கு வரக்கூடிய ஆபத்தைப்பற்றிச் சொன்னார். விஷந்தடவிய அங்குசத்தைப் பற்றியும் சொன்னார்...!"

"ஆகா! இது பெரிய அதிசயந்தான்! அவருக்கு எவ்விதம் தெரிந்தது? அவரும் ஜோதிடர் ஆகிவிட்டாரா? அல்லது ஒருவேளை.... எல்லாரும் சொல்லுவதுபோல் அவரே இந்த ஏற்பாடு செய்தாரா?"

"இல்லை இளவரசே! அவர் செய்த ஏற்பாடல்ல. பாண்டிய நாட்டுச் சதிகாரர்கள் இரகசியமாகப் பேசிக் கொண்டிருந்ததை ஒட்டுக் கேட்டதினால் அறிந்து கொண்டாராம்...!"

"ஓகோ! இன்னும் ஏதாவது அவர் சொன்னாரா?"

"நினைப்பதற்கும் சொல்வதற்கும் பயங்கரமாயிருக்கிறது. தங்களையும், தங்கள் தந்தையையும், மூத்த இளவரசரான ஆதித்த கரிகாலரையும் ஒரே நாளில் யமனுலகம் அனுப்ப அந்தச் சதிகாரர்கள் திட்டமிட்டிருப்பதாகச் சொன்னார். அவர் ஆதித்த கரிகாலரைக் காப்பாற்றுவதற்காகக் கடம்பூருக்கும் விரைந்து போய்விட்டார். தங்களுக்கும் சக்கரவர்த்திக்கும் இளையபிராட்டி எச்சரிக்கை செய்ய வேண்டும் என்பதாகச் சொல்லிவிட்டுப் போனார்..."

"ஆகா! அவருடைய எச்சரிக்கை என் ஒருவன் விஷயத்தில் உண்மையாயிருந்தபடியால் மற்றவர்கள் விஷயத்திலும் உண்மையாகத் தானிருக்கவேண்டும்! சமுத்திரகுமாரி! நீ ஏதோ சொல்லவேண்டும் என்றாயே?"

"ஆம், இளவரசே! ஈழத்து ஊமைராணி தங்களை உடனே தஞ்சைக்கு அழைத்து வரும்படி என்னை அனுப்பி வைத்தார்..."

"ஆகா! அதைப்பற்றி உன்னிடம் கேட்க மறந்தே போனேன். ஈழத்து ராணிக்காகவே நான் இவ்வளவு அவசரமாகப் புறப்பட்டு வந்தேன். அவரைத் தஞ்சாவூருக்கு யாரோ பலவந்தமாகக் கட்டி இழுந்து வந்தார்களாமே? அது உண்மையா?"

"உண்மைதான், ஐயா! ஆனால் முதன் மந்திரி அநிருத்தர் நல்ல நோக்கத்துடனேதான் அவ்விதம் செய்தார்..."

"ஓகோ! அநிருத்தர் வேலையா? என் தந்தையிடம் சேர்ப்பிப்பதற்காக அழைத்துச் சென்றிருக்க வேண்டும். பூங்குழலி! முதன் மந்திரியின் நோக்கம் வெற்றி பெற்றதா? அவர்கள் - சக்கரவர்த்தியும் ஈழத்து ராணியும்... சந்தித்தார்களா?"

"ஆம், சந்தித்தார்கள்!"

"என் வாழ்க்கை மனோரதம் நிறைவேறிவிட்டது. இதைக் காட்டிலும் சந்தோஷமான செய்தி எனக்கு வேறு எதும் இல்லை. என் பெரியன்னை அருகில் இருக்கும் வரையில் என் தந்தையின் உயிருக்கு அபாயமும் இல்லை. அந்த மாதரசிக்கு அபூர்வமான வருங்கால திருஷ்டி உண்டு என்பது உனக்குத் தெரியுமே, பூங்குழலி!"

"ஆம், எனக்கு அது தெரியும்! ஈழத்து ராணி இருக்கும் வரையில் சக்கரவர்த்திக்கு அபாயம் இல்லை. ஆனால்...!"

"ஆனால் என்ன? ஏன் தயங்கி நிற்கிறாய் சமுத்திரகுமாரி!"

"சொல்லத் தயக்கமாகவேயிருக்கிறது, நா எழவில்லை. ஈழத்து ராணி தம்முடைய இறுதிக்காலம் நெருங்கிவிட்டதாக எண்ணுகிறார். கடைசியாகக் கண் மூடுவதற்கு முன்னால் தங்களை ஒருமுறை பார்க்க விரும்புகிறார்!" என்றாள்.

"தெய்வமே! இது என்ன சொல்லுகிறாய்? சந்தோஷமான செய்தியைச் சொல்லிவிட்டு, உடனே இந்தப் பேரிடி போன்ற செய்தியையும் சொல்லுகிறாயே! இனி நான் ஒரு கணமும் தாமதிப்பதற்கில்லை, வானதி! இளையபிராட்டியிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதாகச் சொல்லு!" என்றார் இளவரசர் அருள்மொழிவர்மர்.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
தியாக சிகரம் - அத்தியாயம் 23

படைகள் வந்தன!

தஞ்சைமா நகரம் அன்று முழுதும் ஒரே அல்லோல கல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது. புயலையும், மழையையும் அவற்றினால் நேர்ந்த சேதங்களையும் மக்களை அடியோடு மறந்துவிட்டார்கள். "ஈழங்கொண்ட வீராதி வீரரும், சோழ நாட்டு மக்களின் இதயங்கொண்ட இளவரசருமான பொன்னியின் செல்வர் நாகைப்பட்டினத்தில் புயல் அடித்த அன்று வெளிப்பட்டு விட்டார்; பின்னர் தஞ்சையை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்; அவரைச் சிங்காதனத்தில் ஏற்றி வைத்துச் சக்கரவர்த்தியாக முடிசூட்டும் நோக்கத்துடன் பெருந்திரளான மக்கள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறார்கள்" என்னும் செய்திகள் முதலியன வதந்திகளாகக் காற்று வாக்கில் வந்தன. பின்னர், நேரில் இளவரசரை நாகைப்பட்டினத்தில் பார்த்தவர்களே வந்து சொன்னார்கள். இந்தச் செய்தி காரணமாக, இரண்டு தினங்களுக்கு முன் வெளியிலே அடித்த புயலைப் போலவே தஞ்சை நகர மாந்தரின் உள்ளத்தில் உத்வேகப் புயல் அடிக்கத் தொடங்கியது. தஞ்சை நகரம் என்றும் கண்டறியாத அளவில் இளவரசருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என்று மக்கள் தீர்மானம் செய்தார்கள். கோட்டைக்கு வெளியிலேயிருந்த புறநகரத்தின் வீதிகளை அலங்கரிக்கத் தொடங்கினார்கள். கூட்டம் கூட்டமாகத் தெருக்களிலே நின்று பேசலானார்கள். மேளதாளங்கள், தாரை தப்பட்டைகள் முதலிய வாத்தியங்கள் சேகரிக்கப்பட்டன. ஆடல் பாடல்களில் தேர்ந்தவர்கள் இந்த விசேஷ சந்தர்ப்பத்தில் ஆற்றல்களையெல்லாம் காட்டிவிடுவது என்று எண்ணி ஆயத்தம் செய்யலானார்கள். மாந்தர்களும் இளஞ்சிறார்களும் தங்களை அலங்கரித்துக்கொள்ளும் விதங்களைப்பற்றிச் சிந்தித்தார்கள். மற்றும் பல அவசரக்காரர்கள் இளவரசரை வரவேற்பதில் தாங்கள் முந்திக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் தஞ்சையிலிருந்து நாலா திசைகளிலும் சென்ற சாலைகளில் கொஞ்ச தூரம் முன்னதாகச் சென்று காத்திருக்கத் தொடங்கினார்கள். அப்படி முன்னதாகச் புறப்பட்டவர்களை வேறு சிலர் பார்த்துப் பரிகசித்தார்கள்.

புறநகரம் இந்தப் பாடுபட்டதென்றால், கோட்டைக்குள்ளேயும் ஏதோ முக்கியமான சம்பவங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன என்பதற்கு விரைவிலேயே அறிகுறிகள் தென்பட்டன.

காலையில் வழக்கம்போல் கோட்டை வாசல் திறந்தது. கறிகாய், தயிர், மோர் விற்பவர்களும் அரண்மனைகளில் அலுவல்களுக்குச் செல்வோரும் வழக்கம்போல் கோட்டைக்குள் சென்று கொண்டிருந்தார்கள். புயல் - மழையினால் ஏற்பட்ட சேதங்களைப் பற்றி முறையிட்டுக்கொள்ள விரும்பியவர்கள் இன்று ஒருசிலர்தான் வந்தார்கள். அவர்களும் கோட்டைக்குள் சென்றார்கள். வழக்கம் போல வேளக்காரப் படையும் கோட்டைக்குள் பிரவேசித்தது.

பின்னர், கோட்டை வாசற் கதவுகள் எல்லாம் சடசடவென்று சாத்தப்பட்டன. பெரிய பெரிய இரும்புத்தாழ்களைக் கொண்டு கதவுகளை இறுக்கும் சத்தமும் பூட்டுக்களை மாட்டிப் பூட்டும் சத்தமும் கேட்கத் தொடங்கின. பிற்பாடு வந்தவர்கள் காவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார்கள். முற்பகல் நேரத்தில் இம்மாதிரிக் கோட்டைக் கதவுகளைச் சாத்தித் தாழிடும் காரணம் என்னவென்று ஜனங்கள் பேச ஆரம்பித்த சமயத்தில் இன்னொரு அதிசயம் நடந்தது. கோட்டையைச் சுற்றியிருந்த அகழியைக் கடப்பதற்கு ஏற்பட்ட பாலமும் தூக்கப்பட்டது. அதற்குப் பிறகு யாரும் கோட்டை வாசலை நெருங்குவதற்கே முடியாமல் போய்விட்டது.

கோட்டையின் பிரதான வாசலாகிய வடக்கு வாசலுக்குச் சமீபமாக இருந்தவர்கள் மேற்கு வாசலையும் தெற்கு வாசலையும் பற்றி விசாரித்தார்கள். அந்த வாசல்களும் வடக்கு வாசலைப் போலவே சாத்திப் பூட்டப்பட்டன என்றும், பாலங்கள் தூக்கிவிடப்பட்டன என்றும் அறிந்ததும் மிக்க வியப்படைந்தார்கள்.

"இது என்ன? யுத்தம் ஒன்றும் நடக்கவில்லையே? பகைவர்களின் சைன்யங்கள் படை எடுத்து வருவதாகத் தெரியவில்லையே? அப்படிப் படையெடுத்து வருவதற்கு ஆற்றல் வாய்ந்த பகைவர்கள் வடக்கே, தெற்கே, மேற்கே, கிழக்கே, எங்கும் சமீபப் பிரதேசத்தில் இல்லையே? அப்படி ஒருவேளை வடக்கே இரட்டை மண்டலத்திலிருந்து பகைவர்கள் திடீர்ப் பாய்ச்சலில் வந்து விடுவதாக இருந்தாலும் கொள்ளிடத்தையும் காவேரியையும் மற்றுமுள்ள நதிகளையும் தாண்டி இப்போது எப்படி வர முடியும்? அந்த மாநதிகளில் வெள்ளம் பூரணப் பிரவாகமாக அல்லவா போய்க் கொண்டிருக்கிறது?" இவ்விதமெல்லாம் தஞ்சைக் கோட்டையின் புற நகரத்தில் வசித்த ஜனங்கள் பேசிக்கொண்டார்கள். ஒருவேளை பொன்னியின் செல்வரைக் கோட்டைக்குள் பிரவேசியாமல் தடுப்பதற்காகவே இந்த ஏற்பாடுகள் எல்லாம் செய்யப்படுகின்றனவோ என்று சிலர் கேள்விகளைப் போட்டுக்கொண்டு, "அப்படித்தான் இருக்கவேண்டும்" என்று மறுமொழி கூறிக்கொண்டார்கள். இந்த வதந்தி பரவப் பரவ, நகரமாந்தரின் உத்வேகம் அதிகமாயிற்று. "விஜயாலய சோழரின் வம்சத்தில் வழிவழியாக வந்த இளவரசரைக் கோட்டைக்குள்ளே வராமல் தடுப்பதற்கு இந்தப் பழுவேட்டரையர்கள் யார்? அப்படிப் பழுவேட்டரையர்கள் உண்மையில் முயல்வதாயிருந்தால் கோட்டை மதில்களையே இடித்துத் தகர்த்துவிட வேண்டியதுதான்!" என்ற தோரணையில் பேசுவோரும் இருந்தனர்.

வதந்தி என்றும் மாயா பூதம் எப்படிக் கிளம்புகின்றது, எப்படி அவ்வளவு விரைவில் பிரயாணம் செய்கின்றது என்பது யாராலும் கண்டுபிடிக்க முடியாத மர்மமான காரியம்தான். திடீரென்று இன்னொரு பயங்கரமான வதந்தி மக்களிடையே பரவத் தொடங்கியது. வெகு காலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த சுந்தர சோழசக்கரவர்த்தியின் மரணம் நேர்ந்துவிட்டது என்பது தான் அவ்வதந்தி. "சக்கரவர்த்தி காலமாகி விட்டாராமே? அது உண்மையா?" என்று முதலில் கேட்டார்கள். அன்று அதிகாலையில் வால் நட்சத்திரம் ஒரு நிமிடம் ஜோதி மயமாக ஒளி வீசிவிட்டுப் பூமியை நோக்கி விழுந்து மறைந்ததைப் பார்த்தவர்கள் சிலர், அதையே அத்தாட்சியாகக் கொண்டு சுந்தர சோழர் காலமானதை ஊர்ஜிதம் செய்தார்கள். "இது உண்மையாயின், மேலே என்ன நடக்கப் போகிறது?" என்பது பற்றிக் கவலையுடன் விவாதிக்கப்பட்டதும் இயல்பேயல்லவா? இராஜ்ய உரிமை சம்பந்தமாகத் தகராறுகள் ஏற்படுமா? சிற்றரசுகள் இரு கட்சியாகப் பிரிந்து நின்று சண்டையிடுவார்களா? இத்தகைய உள் நாட்டுச் சச்சரவுகள் காரணமாகச் சோழ சாம்ராஜ்யமே சின்னாபின்னமாகி விடுமா? நூறு ஆண்டுகளாகத் தழைத்து ஓங்கி வளர்ந்து வந்த சாம்ராஜ்யத்தில் மீண்டும் பகைவர்களின் படைகள் உட்புகுமா?

இவ்விதமெல்லாம் ஜனங்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே "அதோ படை வருகிறது!" என்று கூக்குரல் ஒன்று எழுந்தது. பலரும் அங்குமிங்கும் ஓடிச் சென்று பார்த்தார்கள். உயர்ந்த கட்டடங்களின் மீதும், உயரமான மரங்களின் மீதும் ஏறிப் பார்த்தார்கள். அவ்வாறு பார்த்தவர்கள் கண்ட காட்சி ஒரேயடியாக வியப்பையும், திகைப்பையும் அளிப்பதாக இருந்தது.

தஞ்சையிலிருந்து மேற்கேயும், தென்மேற்குத் திசையிலேயும் புறப்பட்டுச் சென்ற மூன்று பெரிய சாலைகள் அக்காலத்தில் இருந்தன. ஒன்று கொடும்பாளூர் வழியாக இராமேசுவரம் போகும் சாலை; மற்றொன்று மதுரை வழியாகத் தென்பாண்டிய நாட்டுக்குச் சென்ற சாலை; இன்னொன்று உறையூர் வழியாகக் கரூருக்கும், சேர நாட்டுக்கும் சென்ற நீண்ட அகன்ற சாலை.

அன்று பிற்பகலில் மேற்கூறிய மூன்று சாலைகள் வழியாகவும் படைகள் அணிவகுத்து வந்துகொண்டிருந்தன. அவற்றில் முன்னால் வந்த அணிகள் கண்ணுக்குத் தெரிந்தனவே தவிர, பின்னால் அந்த அணிவரிசைகள் எங்கே முடிகின்றன என்பதே தெரியவில்லை. அவ்வாறு அப்படை வீரர்களின் அணிகள் பின்னால் பின்னால் தொடர்ந்து வந்து கொண்டேயிருந்தன.

நல்ல வேளையாக, அப்படைகளின் முன்னணியில் பெரிய புலிக்கொடிகள் பறந்துகொண்டிருந்தபடியால் பகைவர்களின் படைகள் என்று சந்தேகிக்க இடம் ஏற்படவில்லை. சோழ சாம்ராஜ்யத்துச் சைன்யங்கள்தான் அவை! ஆனால் எதற்காக வருகின்றன? எங்கிருந்து வருகின்றன?

இன்னும் சற்று அருகில் அப்படைகள் நெருங்கி வந்தபோது புலி உருவம் தாங்கிய கொடிகளில் சிறிய அளவில் பதித்திருந்த இலச்சினைகளும் கண்ணில் பட்டன. அவற்றிலிருந்து, கொடும்பாளூர்த் தலைமைக்கு உட்பட்ட பராந்தகச் சோழப் பெரும் படையும், தென்பாண்டிய நாட்டிலிருந்த தெரிந்த கைக்கோளர் பெரும் படையும், ஈழத்துப்போரில் ஈடுபட்டிருந்த அரிஞ்சய சோழப் பெரும் படையும் சேர்ந்து வந்துகொண்டிருந்தனவென்று தெரியவந்தது. இன்னும் சிறிது நேரத்திற்கெல்லாம், தென்திசைச் சேநாதிபதியான பூதி விக்ரம கேசரியே மேற்கூறிய படைகளுடன் வந்து கொண்டிருக்கிறார்கள் என்பது தஞ்சை நகர மாந்தர்களுக்குத் தெரிந்துபோய்விட்டது. இதிலிருந்து, சைன்யங்கள் எதற்காக வருகின்றன என்பதை ஊகித்து உணர்வதும் எளிதாயிற்று. கொடும்பாளூர் பெரிய வேளாரான பூதி விக்கிரம கேசரி, ஈழத்துப்பட்ட சிறிய வேளாரின் திருமகளாகிய வானதியைப் பொன்னியின் செல்வருக்கு மணம் புரிந்து கொடுத்து, அவரையே சோழ நாட்டுச் சிம்மாதனத்தில் ஏற்றிவைக்க விரும்புகிறார் என்பது சோழ நாட்டில் எல்லாருக்கும் தெரிந்திருந்த செய்தியேயாகும். கிழக்கேயிருந்து இளவரசர் அருள்மொழிவர்மர் பொது ஜனங்களின் ஆரவாரத்துடன் அழைத்து வரப்படுவதும், மேற்கேயிருந்து சேநாதிபதி பூதி விக்கிரம கேசரி மாபெரும் சைன்யத்துடன் அதே சமயத்தில் தஞ்சையை நோக்கி வருவதும் ஒன்றுக்கொன்று பொருத்தமாயிருந்தன.

பழுவேட்டரையர்களும், அவர்களுடன் தோழமை பூண்ட சிற்றரசர்களும் மதுராந்தகருக்குப் பட்டம் சூட்டப் பிரயத்தனம் செய்கிறார்கள் என்பதை ஏற்கெனவே மக்கள் அறிந்திருந்தார்கள். ஆதலின் அவர்களுடைய அன்புக்கு உகந்த அருள்மொழிச் செல்வரைச் சிங்காதனம் ஏற்றுவதற்காகவே கொடும்பாளூர்ப் பூதிவிக்கிரம கேசரி தமக்கு உட்பட்ட மாபெரும் தென்திசைப் படைகளுடன் வருகிறார் என்று தஞ்சை நகர மக்கள் ஊகித்துக் கொண்டார்கள். இதனால் அவர்களுடைய உற்சாகம் மேலும் கரைபுரண்டு ஓடத் தொடங்கியது. சமுத்திரம் போல் பொங்கிவந்த படை வீரர்கள் அனைவரையும் வரவேற்று உபசரிக்கவும் விருந்து அளிக்கவும் அவர்கள் சித்தமானார்கள்.

தஞ்சை நகரில் அக்காலத்தில் பல பெரிய வர்த்தகக் குழுவினர் நடத்திய சத்திரங்கள் இருந்தன. கொடும்பாளூர் மணிக்கிராமத்தார், திருப்புறம்பயம் வலஞ்சியர், ஊறையூர்த் தர்ம வணிகர், நானா தேசத்திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர் ஆகிய வர்த்தகக் குழுவினர் நடத்திய சத்திரங்களில் அன்று பிற்பகலிலிருந்தே ஆயிரக்கணக்கானவர்களுக்கு உணவு அளிக்க ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன.

இதை அறிந்ததும் நகர மாந்தர்களின் உல்லாசம் அதிகமாகி விட்டது. அங்குமிங்கும் திரிவதும், கூடிக்கூடிப் பேசுவதுமாக இருந்தார்கள். அவர்களில் நூற்றுக்கு நூறு பேரும் அருள்மொழிவர்மரின் கட்சியைச் சேர்ந்தவர்களாயிருந்தபடியால், வரப் போகும் சம்பவங்களைப் பற்றிப் பேசுவதில் ஒளிவு மறைவு ஒன்றும் அவசியமாகக் கருதவில்லை. படை வீரர்கள் தஞ்சையை அணுகி வந்து ஆங்காங்கே கூடாரம் அடித்து முகாம் போடத் தொடங்கியதும், நகரமாந்தர்கள் அந்த முகாம்களுக்கே சென்று வீரர்களுடன் சல்லாபம் செய்யத் தொடங்கி விட்டார்கள்.

சூரியன் மறைந்து நன்றாக இருட்டுவதற்குள்ளே தஞ்சை நகரின் மூன்று பக்கங்களையும் சேனா வீரர்கள் சூழ்ந்து கொண்டு விட்டார்கள். நாலாவது பக்கத்தில் வடவாறு தஞ்சைக் கோட்டையையொட்டிச் சென்றபடியாலும், வடவாற்றில் பெரு வெள்ளம் போய்க் கொண்டிருந்தபடியாலும், அந்தப் பக்கம் வீரர்கள் போவதற்கு வசதியாக இல்லை. அதற்கு அவசியமுமில்லையென்று கருதி விட்டு விட்டார்கள். தஞ்சைக் கோட்டையின் பிரதான வடக்கு வாசலை முன்னம் நாம் பார்த்திருக்கிறோம் அல்லவா? முதன் முதலாக, நந்தினி தேவியைத் தொடர்ந்து வந்தியத்தேவன் கோட்டைக்குள் பிரவேசித்த வாசல் அதுவன்றோ? அதன் கோட்டை வாசல் கண்ணுக்குத் தெரியும்படியான இடத்தில் சேனாதிபதி பூதி விக்கிரம கேசரியின் ஜாகை அமைக்கப்பட்டது.

இருட்டி ஒரு ஜாமம் ஆனபிறகு சேனாதிபதி கோட்டையைச் சுற்றிப் பார்த்துவிட்டுத் தமது ஜாகைக்கு வந்து சேர்ந்தார். அவருக்கு முன்னாலேயே அங்கே ஏறக்குறைய நூறுபேர் வந்து சேர்ந்திருந்தார்கள். அவர்களில் வேளிர் படைத்தலைவர்களும், கைக்கோளர் படைத்தலைவர்களும், பாண்டிய மண்டலத்தின் தலைவர்களும், கொங்கு நாட்டுத் தலைவர்களும் இருந்தார்கள். ஈழ நாட்டுப்போரில் வெற்றி கண்ட சோழர் படைத் தலைவர்களும் பலர் இருந்தார்கள். இவர்களைத் தவிர பற்பல வர்த்தக மகாசபைகளின் தலைவர்கள் இருந்தார்கள்: முக்கியமாக 'நானா தேசத்திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர்' என்று உலகமெல்லாம் புகழ்பெற்ற வர்த்தக மண்டலத்தின் தலைவர்கள் வந்திருந்தார்கள். இவர்கள் அயல் நாடுகளுடன் கப்பல் வாணிகம் செய்யும் பெரும் தனவந்தர்கள். வர்த்தகப் பொருள்களை ஏற்றிச் செல்லும் கப்பல்களைக் காவல் புரிவதற்காகத் தாங்களே யுத்தக் கப்பல்களை அனுப்பக் கூடிய வசதி வாய்ந்தவர்கள். இவர்களைத் தவிர, தஞ்சாவூர் நகரத்தைச் சேர்ந்த ஐம்பெருங் குழுவினரும், எண்பேர் ஆயத்தின் தலைவர்களும் அழைக்கப்பட்டு அந்தக் கூடாரத்தில் வந்து கூடியிருந்தார்கள்.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
தியாக சிகரம் - அத்தியாயம் 24

மந்திராலோசனை

ஆரம்பத்தில் வழக்கமான யோக க்ஷேம விசாரணைக்குப் பிறகு கொடும்பாளூர் பெரிய வேளார் அங்கே கூடியிருந்தவர்களை பார்த்துக் கூறலுற்றார்:-

"நான் யார் யாருக்குத் தூது அனுப்பினேனோ, அவர்களில் ஏறக்குறைய எல்லாரும் வந்து இங்கே கூடியிருக்கிறீர்கள். திருக்கோவலூர் முதுகிழவரான மலையமான் அரசர் மட்டும் வரவில்லை. அவர் வர முடியாததற்குத் தக்க காரணம் இருக்கும் என்றே நினைக்கிறேன். மிகவும் அபாயகரமான காரியம் என்று பலரும் கருதக்கூடிய காரியத்தைப் பற்றி யோசிக்க நாம் இங்கே வந்திருக்கிறோம். சோழ குலத்தாரிடமும், சுந்தர சோழ சக்கரவர்த்தியிடமும் நாம் எல்லாரும் எவ்வளவு பக்தி கொண்டவர்கள் என்பது உலகம் அறிந்தது. அதை எவ்வளவோ தடவை எவ்வளவோ காரியங்களில் நிரூபித்திருக்கிறோம். ஆனாலும் நாம் சக்கரவர்த்தியின் விருப்பத்துக்கு விரோதமாக இங்கே கூடியிருக்கிறோம் என்று நம் எதிரிகள் குற்றம் சாட்டக்கூடும். சக்கரவர்த்தியை எதிர்த்து யுத்தம் செய்யப் படை திரட்டி வந்திருக்கிறோம் என்றுகூட அவர்கள் சொல்லலாம். ஆனால் சக்கரவர்த்தியை நாம் தனிப்படப் பார்க்க முடிகிறதில்லை. அவருடைய அந்தரங்க விருப்பத்தை அறிய ஒரு நிமிஷங்கூட அவரிடம் தனித்துப் பேச முடிவதில்லை. ஏன் என்பது எல்லாருக்கும் தெரிந்ததே. சக்கரவர்த்தியின் தேக சுகத்தை உத்தேசித்து அவரைத் தஞ்சைக் கோட்டையில் வைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. உண்மையில் பழுவேட்டரையர்கள் அவரைச் சிறைப்படுத்தி வைத்திருக்கிறார்கள் என்றே எனக்குத் தோன்றுகிறது. நீங்கள் எல்லோரும் என்ன கருதுகிறீர்களோ, தெரியவில்லை..."

சேனாதிபதி இந்த இடத்தில் சிறிது நின்றதும், "ஆம், ஆம்," "அதுதான் உண்மை!" "சக்கரவர்த்தியைச் சிறையில்தான் வைத்திருக்கிறார்கள்", என்று அக்கூட்டத்தில் பல குரல்கள் எழுந்தன.

"உங்கள் ஆமோதிப்பிலிருந்து நாம் எல்லாரும் ஒத்த உணர்ச்சியும், ஒரே நோக்கமும் கொண்டவர்கள் என்று ஏற்படுகிறது. விஜயாலய சோழர் காலத்திலிருந்து எத்தனையோ ஆயிரமாயிரம் வீரர்கள் இன்னுயிரைப் போர்க்களத்தில் பலிகொடுத்து இந்தச் சோழ சாம்ராஜ்யம் இந்த மகோந்நத நிலைக்கு வந்திருக்கிறது. சோழ நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளவே நமக்கெல்லாம் பெருமையாயிருக்கிறது. அப்படிப்பட்ட சோழ குலத்துக்கும், சாம்ராஜ்யத்துக்கும் எவ்விதக் குறைவும் ஏற்படாமல் பாதுகாப்பதற்கே நாம் இங்கே கூடியிருக்கிறோம். சக்கரவர்த்திக்கு எதிராகச் சதி செய்வதற்கு அல்ல. சக்கரவர்த்தியின் எதிரிகள் அவரை மூன்று வருஷ காலமாகச் சிறையில் அடைத்து வைத்திருக்கிறார்கள். அவருக்கு உடல் நிலை சரியாக இல்லை என்று காரணம் சொல்லுகிறார்கள். தொண்ணூறும் ஆறும் புண் சுமந்த திருமேனியரான விஜயாலய சோழர், எண்பதாவது பிராயத்தில் திருப்புறம்பயம் போர்க் களத்தில் வந்து இரண்டு கைகளில் இரண்டு கத்திகளை ஏந்திச் சக்கரமாகச் சுழற்றி அவர் புகுந்து சென்றவிடமெல்லாம் எதிரிகளின் தலைகளை மலைமலையாகக் குவித்தார்! அத்தகைய வீரர் வம்சத்தில் பிறந்த சுந்தர சோழர் தேக அசௌக்கியத்தைக் காரணமாகச் சொல்லிக் கொண்டு வெளியில் வரவே மறுக்கிறார் என்றால், அது நம்பக்கூடிய காரியமா? சக்கரவர்த்தியைச் சிறை வைத்திருக்கும் துரோக சிந்தனையாளர், பில்லி சூனிய மாய மந்திர வித்தைகளைக் கொண்டு அவருக்குச் சித்தக் குழப்பத்தையும் உண்டாக்கி விட்டார்கள் என்று தோன்றுகிறது. சக்கரவர்த்தியின் சித்தம் சரியான நிலையில் இருந்தால், தமக்குப் பீமார்ஜுனர்களைப் போன்ற இரண்டு வீராதி வீரப் புதல்வர்கள் இருக்கும்போது, போர்க்களத்தையே கண்ணால் கண்டறியாத மதுராந்தகனுக்குப் பட்டம் கட்ட விரும்புவாரா?..."

இப்போது பலர் ஒரே சமயத்தில், "சக்கரவர்த்தியின் விருப்பம் அதுவென்று நமக்கு எப்படித் தெரியும்?" என்று கேட்டார்கள்.

"நமக்கு நேர்முகமாகத் தெரியாதுதான். பழுவேட்டரையர்கள் கட்டிவிட்ட கதையாக இருக்கலாம். ஆனால் நம் முதன் மந்திரி அநிருத்தப் பிரம்மராயர் கூட அதை நம்புகிறார்..."

"அநிருத்தரும் அவர்களோடு சேர்ந்திருக்கலாம்; யார் கண்டது?" என்றார் கூட்டத்தில் ஒருவர்.

"அப்படியும் இருக்கலாம், அதன் உண்மையை அறிந்து கொள்வது நாம் இங்கே கூடியிருப்பதன் ஒரு முக்கிய நோக்கம். இன்றைய தினம் இத்தஞ்சை மாநகரில் உலவி வரும் வதந்தியை நீங்களும் அறிந்திருப்பீர்கள். நான் அதை நம்பவில்லை. சக்கரவர்த்தியை உயிரோடு தரிசிக்கும் பாக்கியம் நமக்கெல்லாம் கிடைக்கும் என்றே நம்பியிருக்கிறேன். அப்படி அவரைத் தரிசிக்கும்போது பட்டத்தைப்பற்றி அவருடைய விருப்பம் என்னவென்பதை நேரில் கேட்டுத் தெரிந்து கொள்வோம். ஒருவேளை சக்கரவர்த்தியே மதுராந்தகனுக்குப் பட்டம் கட்டும் விருப்பத்தைத் தெரிவித்தார் என்றால், அதை நீங்கள் எல்லாரும் ஒப்புக்கொள்வீர்களா?..."

"மாட்டோ ம்! மாட்டோ ம்!" என்ற பெருங் கோஷம் எழுந்தது.

"நானும் ஒப்புக்கொள்ள மாட்டேன். ஏனென்றால், சக்கரவர்த்தி தெளிவுள்ள சித்தமுடையவராயிருந்தால் அவ்விதம் ஒரு நாளும் தெரிவிக்க மாட்டார். பராந்தகச் சக்கரவர்த்தியின் காலத்திலேயே பட்டத்து உரிமைபற்றி விஷயம் தீர்ந்து முடிவாகிவிட்டது. சுந்தர சோழரும் அவருடைய சந்ததிகளுமே தஞ்சைச் சிங்காதனம் ஏறவேண்டும் என்று அந்த மன்னர் உயிர் விடும் தறுவாயில் கூறியதை நானே என் செவிகளினால் கேட்டேன். கேட்டவர்கள் இன்னும் பலரும் இங்கே இருப்பார்கள். காலஞ் சென்ற மகானாகிய கண்டராதித்தர் தம் குமாரனுக்கு இராஜ்யம் ஆளும் ஆசையே உண்டாகாத விதத்தில் அவனை வளர்க்க முயன்றார். அவருடைய தர்மபத்தினியாகிய பெரிய பிராட்டியார், - சிவபக்தியே உருக்கொண்டவரான செம்பியன் மாதேவடிகள், - மதுராந்தகனுக்குப் பட்டம் கட்டக் கூடாதென்பதில் பிடிவாதமாயிருப்பதை நாம் எல்லாரும் அறிந்திருக்கிறோம். இதற்கெல்லாம் ஏதோ ஒரு முக்கிய காரணம் இருக்கத் தான் வேண்டும். அப்படியிருக்கும்போது, சுந்தர சோழர் ஏன் மதுராந்தகனுக்குப் பட்டம் கட்ட ஆசைப்படுகிறார்? அவர் சித்தம் சரியாயில்லை என்பதற்கு இன்னும் ஓர் உதாரணமும் கூறுகிறேன். வீர பாண்டியனைக் கொன்று பாண்டிய சைன்யத்தை நிர்மூலம் செய்த பிறகு, பாண்டியனுக்கு உதவி செய்ய முன்வந்த ஈழத்து அரசனைத் தண்டிப்பதற்காக என் சகோதரன் படை எடுத்துச் சென்றான். அவனுக்கு உதவியாகப் போதிய சைன்யங்களையும் தளவாடங்களையும் அனுப்பத் தவறிவிட்டோ ம். அதனால் அவன் போர்க்களத்தில் வீர மரணம் எய்த நேர்ந்தது. சோழ நாட்டின் வீரப் புகழுக்கு நேர்ந்த அந்தக் களங்கத்தைத் துடைத்துக்கொள்ளும் பொருட்டு நானும் பொன்னியின் செல்வரும் சென்றோம். ஈழத்துப் படைகளை நிர்மூலமாக்கினோம். அநுராதபுரத்தைக் கைப்பற்றினோம். மகிந்தனை மலை நாட்டுக்குள் ஓடி ஒளிந்து கொள்ளச் செய்தோம். தனாதிகாரி பழுவேட்டரையர் எங்களுடன் ஒத்துழைக்கவில்லை யென்பது உங்களுக்கெல்லாம் தெரியும். உங்களில் இங்கே வந்திருக்கும் வர்த்தக மகா ஜனத்தலைவர்கள் உணவுப் பொருள்களை அனுப்பிப் பேருதவி செய்தீர்கள். ஆனாலும் நம் வீரர்கள் எவ்வளவோ கஷ்டங்களை அநுபவிக்கும்படி நேர்ந்தது. அவ்வளவையும் பொறுத்துக் கொண்டு மகிந்தன் படைகளை நிர்மூலமாக்கியது எதனால்? சோழ குலத்து மா வீரர்களுக்குள்ளே ஈடில்லா மா வீரராகிய பொன்னியின் செல்வர் அளித்த உற்சாகத்தினாலேதான்! அப்படிப்பட்ட வீரப்புதல்வனுக்குத் தந்தையாகிய சக்கரவர்த்தி அளித்த பரிசு என்ன? இராஜத் துரோகம் செய்துவிட்டதாக அபாண்டம் சுமத்தி இளவரசரைச் சிறைப்படுத்திக் கொண்டு வரும்படி கட்டளையிட்டதுதான்! சித்தசுவாதீனம் உடைய ஒருவர் இவ்வாறு கட்டளை பிறப்பித்திருக்க முடியுமா?..."

"சேநாதிபதி! மறுபடியும் சக்கரவர்த்தியின் கட்டளையைப் பற்றியே பேசுகிறீர்கள். சக்கரவர்த்திதான் அக்கட்டளையை அனுப்பினார் என்பதற்கு என்ன அத்தாட்சி?" என்று சபையிலிருந்தவர்களில் ஒருவர் கேட்டார்.

"அதற்கு அத்தாட்சி ஒன்றுமில்லை. அதன் உண்மையைப் பற்றி நேரில் கேட்டுத் தெரிந்துகொள்ள விரும்பியுந்தான் இங்கே நாம் வந்து சேர்ந்திருக்கிறோம். சக்கரவர்த்தியின் சம்மதமின்றி இத்தகைய கட்டளை பிறந்திருக்கக் கூடுமானால், இந்தச் சோழ சாம்ராஜ்யம் எவ்வளவு பயங்கரமான நிலைமையில் இருக்கிறது என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். பின்னால் நிகழ்ந்தவற்றையும் எண்ணிப் பாருங்கள். சிறைப்படுத்த வந்த வீரர்கள் இளவரசரைச் சிறைப்படுத்த மறுத்துவிட்டார்கள். இளவரசர் தாமாகவே தந்தையின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து பார்த்திபேந்திர பல்லவனுடைய கப்பலில் ஏறி வந்தார். அந்தக் கப்பல் புயலில் சிக்கிக் கொண்டதாம். அப்போது இளவரசர் கடலில் மூழ்கிமாண்டதாக ஒரு வதந்தி புறப்பட்டது. இதை நான் நம்பவேயில்லை. பொன்னியின் செல்வனை சமுத்திரராஜன் அபகரித்திருக்க மாட்டான் என்று உறுதியாக நம்பினேன். அந்தக் கப்பலில் வந்த மற்ற எல்லாரும் உயிர் பிழைத்திருக்கும்போது இளவரசர் மட்டும் எப்படிக் கடலில் மூழ்கி மாண்டிருக்க முடியும்? ஆகையால் இளவரசர் கரை ஏறியதும் அவரைச் சிறைப்படுத்தச் சதி நடந்திருக்கவேண்டும். அந்தச் சூழ்ச்சியை அறிந்துகொண்ட இளவரசர் தப்பிச் சென்று எங்கேயோ பத்திரமாயிருக்கிறார்; சரியான சமயத்தில் வெளிப் புறப்பட்டு வருவார் என்று நம்பியிருந்தேன். உங்களில் பலரும் அப்படி நம்பியதாகத் தெரிவித்தீர்கள். நமது நம்பிக்கை நிறைவேறியது. நாகைப்பட்டினத்தில் புயல் அடித்த அன்று இளவரசர் வெளிப்பட்டார் என்பதாகவும், சோழ நாட்டு மக்கள் அவரை விஜய கோலாகலத்துடன் வரவேற்றுத் தஞ்சைக்கு அழைத்து வருகிறார்கள் என்பதையும் அறிந்தோம். அவர்களுக்குப் பக்க பலமாக இருக்கும் உத்தேசத்துடனேயே நாமும் இவ்விடம் வந்து சேர்ந்தோம். ஆனால் வஞ்சகச் சூழ்ச்சிக்காரர்கள் மறுபடியும் தங்கள் கை வரிசையைக் காட்டிவிட்டார்கள்..."

"என்ன? என்ன?" என்று பலர் கவலைக் குரலில் கேட்டார்கள்.

"நான் இந்தக் கூட்டத்துக்கு வருவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்புதான் அச்செய்தி கிடைத்தது. இன்று காலையில் திருவாரூரிலிருந்து இளவரசர் புறப்படவிருந்த சமயத்தில் அவர் ஏறிவந்த யானைக்கு மதம் பிடித்து, யானைப்பாகனைத் தூக்கி எறிந்துவிட்டதாம். யானை தெறிகெட்டு ஓடி விட்டதாம். அப்போது ஏற்பட்ட குழப்பத்தில் இளவரசரும் காணாமற் போய்விட்டாராம்!..."

"ஐயையோ!", "இது என்ன விபரீதம்?" "தெய்வமும் வஞ்சகர்களின் கட்சியில் இருக்கிறதா?" - என்று இப்படிப் பலர் அங்கலாய்க்கத் தொடங்கினார்கள். அவர்களைச் சேநாதிபதி கையமர்த்தி அமைதியாயிருக்கச் செய்தார்.

"செய்தியை முதலில் கேட்டதும் நானும் கதிகலங்கிப் போனேன். ஒருவாறு சமாளித்துக் கொண்டுதான் இந்தக் கூட்டத்திற்கு வந்து சேர்ந்தேன். இளவரசர் அருள்மொழிவர்மர் போர் முனையில் எத்தகைய நிகரில்லாத வீரம் உடையவரோ, அப்படியே அறிவாற்றலிலும் நிகரற்றவர், வஞ்சகர்களின் சூழ்ச்சி வலையில் அவ்வளவு சுலபமாக அகப்பட்டுக் கொண்டுவிடமாட்டார். சீக்கிரத்தில் அவரைப் பற்றி நல்ல செய்தி ஏதேனும் கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றேன். அதற்கிடையில் நாம் என்ன செய்யவேண்டும், இந்த இக்கட்டான நிலைமையில் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதைப் பற்றி உங்கள் அபிப்பிராயங்களைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்!"

இவ்விதம் சேநாதிபதி தாம் சொல்ல வேண்டியதைச் சொல்லி முடிந்ததும், மற்றவர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தார்கள். அவர்களுடைய கருத்துக்கள் முக்கியமான விஷயங்களில் ஏறக்குறைய ஒரு மாதிரியாகவே இருந்தன. சில்லறை விவரங்களில் மட்டுமே மாறுப்பட்டன. அங்கே உள்ளவர்களின் பிரதிநிதிகள் நாளைய தினம் சக்கரவர்த்தியை நேரில் சந்தித்துப் பேச வசதி கோரவேண்டும் என்றும், அதற்கு வாய்ப்புக் கிடைத்தால் சக்கரவர்த்தியிடம் "மதுராந்தகன் சோழ சிங்காதனம் ஏறுவதை நாங்கள் விரும்பவில்லை" என்று தெளிவாகத் தெரிவித்து விடவேண்டும் என்றும் பலர் கூறினார்கள். "ஒன்று, பழுவேட்டரையர்களுடைய சர்வாதிகாரப் பதவிகளிலிருந்து சக்கரவர்த்தி அவர்களை நீக்கிவிடவேண்டும்; அல்லது சக்கரவர்த்தி தஞ்சாவூரை விட்டுப் பழையாறைக்குப் போய்விடவேண்டும்" என்று இன்னும் சிலர் வற்புறுத்தினார்கள்.

"ஆதித்த கரிகாலருக்கு ஏற்கெனவே யுவராஜ்ய பட்டாபிஷேகம் ஆகியிருப்பதால் அவரே அடுத்து பட்டத்துக்கு உரியவர்; அவராகப் பட்டம் வேண்டாம் என்று மறுதளித்தால் அடுத்தபடி சிங்காதனத்துக்கு உரிமையாளர் அருள்மொழிவர்மர்தான். இதைச் சந்தேகத்துக்கு இடம் வையாமல் சக்கரவர்த்தியிடம் தெரிவித்து அவரையும் ஒப்புக்கொள்ளப் பண்ணவேண்டும்" என்றார்கள், வேறு சிலர், சக்கரவர்த்தியைச் சந்திப்பதற்கே வாய்ப்புக் கிடைக்காவிட்டால், கோட்டைக் கதவுகளைத் திறப்பதற்கு மறுத்தால், கோட்டையை முற்றுகையிட வேண்டியதுதான் என்று சிலர் சொன்னார்கள். "முற்றுகை எதற்காக? உடனடியாகக் கோட்டைக்கதவுகளையும் மதிள்களையும் தகர்க்கும்படி வீரர்களை ஏவ வேண்டியதுதான்!" என்று சிலர் கூறினார்கள். இளவரசரைப் பற்றிச் செய்தி வரும் வரையில் காத்திருப்பது நல்லது என்றும் ஆதித்த கரிகாலருக்கு ஆள் அனுப்பி அவரையும் தருவித்துக்கொள்ள வேண்டும் என்றும் சிலர் கருதினார்கள்.

"அதற்காகவெல்லாம் காத்திருப்பதில் என்ன பயன்? பழுவேட்டரையர்களின் ஆதிக்கத்திலுள்ள சுந்தர சோழப் பெரும்படை கொள்ளிடத்துக்கு அக்கரையில் மழ நாட்டில் இருந்து வருகிறது. தற்சமயம் கொள்ளிடத்திலும் மற்ற நதிகளிலும் பெருவெள்ளம் போவதால் அப்படைகள் இங்கு வர முடியாது. ஆகையால் கோட்டையை தகர்த்துச் சக்கரவர்த்தியைப் பழுவேட்டரையர்களின் சிறையிலிருந்து மீட்பதற்கு இதுவே தக்க சமயம்" என்று வற்புறுத்தினார்கள் வேறு சிலர்.

இவ்வாறு விவாதம் நடந்து கொண்டிருக்கையில், கூடாரத்தின் வாசலில் காவல் புரிந்துகொண்டிருந்த வீரன் ஒருவன் அவசரமாக உள்ளே வந்து சேனாதிபதியின் காதில் ஏதோ கூறினான். அவர் கூட்டத்தினரைப் பார்த்து, "இதோ வந்து விடுகிறேன். சற்றுப் பேசிக்கொண்டிருங்கள்" என்று சொல்லி விட்டு வெளியேறினார்.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
தியாக சிகரம் - அத்தியாயம் 25

கோட்டை வாசலில்

மந்திராலோசனை நடந்த இடத்திலிருந்து வெளிவந்த பூதிவிக்கிரம கேசரி, அங்கேயிருந்த குதிரை மேல் தாவி ஏறினார். தஞ்சைக் கோட்டையின் வடக்கு வாசலை நோக்கி விரைந்து சென்றார். அதே சமயத்தில் யானை ஒன்று வடக்கு வாசலை நெருங்கி வந்து கொண்டிருந்ததைப் பார்த்தார். யானையின் மேல் யானைப்பாகன் ஒருவனும், இரண்டு ஸ்திரீகளும் இருந்தார்கள். யானைப்பாகன் தன் கையில் வைத்திருந்த கொம்பை வாயில் வைத்துச் சிறிது நேரம் முழக்கினான். பின்னர் 'கிறீச்' என்று உச்ச ஸ்தாயியில் ஒலித்த குரலில், கணீர் என்றும் தெளிவாகவும் அவன் கூறியதாவது:- "ஈழத்துப்பட்ட பராந்தகன் சிறிய வேளாரின் செல்வப் புதல்வி, கொடும்பாளூர்ப் பெரிய வேளார் சேநாதிபதி பூதிவிக்கரம கேசரியின் வளர்ப்புக் குமாரி, பழையாறை இளைய பிராட்டி குந்தவை தேவியின் அருமைத் தோழியரான வானதி தேவியார் வருகிறார்! பராக்! பராக்! வழி விடுங்கள்!"

கோட்டை வாசலுக்குச் சமீபத்தில் அகழிக் கரையை அடைந்ததும் அவன் மறுபடியும் ஒரு முறை கொம்பை வாயில் வைத்து ஊதினான். அதன் எதிரொலி நிற்பதற்குள்ளே மறுபடியும் அவன் முன்போன்ற கிறீச்சுக் குரலில் கூறியதாவது:- "கொடும்பாளூர் இளவரசி வானதி தேவியார் இளைய பிராட்டியிடமிருந்து சக்கரவர்த்திக்குச் செய்தி கொண்டு வருகிறார். பெரிய பழுவேட்டரையரிடமிருந்து சின்னப் பழுவேட்டரையருக்கு முக்கியமான செய்தி கொண்டுவருகிறார்! கோட்டைக் கதவைத் திறவுங்கள்! பராக்! பராக்! கொடும்பாளூர் இளவரசிக்கும், அவருடைய தோழி பூங்குழலி அம்மைக்கும் உடனே வழி விடுங்கள்! கோட்டைக் கதவைத் திறந்து விடுங்கள்!"

இவ்வாறு யானைப்பாகன் கூவியதைக் கேட்டுச் சேநாதிபதி பூதிவிக்கிரம கேசரி அடைந்த வியப்பு இவ்வளவு என்று சொல்ல முடியாது. அந்த யானைப்பாகன் குரலை எங்கேயோ, எப்போதோ கேட்டது போலிருக்கிறதே? அவன் யார்? யானைப்பாகன் யாராயிருந்தால் என்ன? யானை மேல் இருப்பது வானதிதானா என்பதையல்லவா முதலில் பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டும்? அவள் கோட்டைக்குள் போகாமல் தடுத்து நிறுத்த வேண்டுமே? வானதியாயிருந்தால் மிக்க நல்லதாய்ப் போயிற்று! இந்தச் சிக்கல்கள் எல்லாம் தீரும் வரையில் குழந்தை நம்மிடத்தில் இருப்பதே நல்லது...! இவ்வாறு எண்ணிக் கொண்டே சேனாதிபதி குதிரையைத் தட்டி விட்டுக்கொண்டு போய் யானையின் சமீபத்தை அடைந்தார். அவர் பின்னொடு விரைந்து வந்த வீரர்களில் ஒரு வீரன் தீவர்த்தி கொண்டு வந்தான். அதன் வெளிச்சத்தில் யானை மீதிருந்தவர்களைப் பார்த்தபோது பெண்கள் இருவரும் சிறிய வேளாரின் புதல்வி வானதியும், பூங்குழலியுந்தான் என்று தெரிய வந்தது.

"குழந்தாய்! வானதி!" என்று அவர் ஏதோ சொல்வதற்குள் யானைப்பாகன் மறுபடியும் கொம்பு ஊதத் தொடங்கினான். அவனை எப்படி நிறுத்தச் செய்வது? நல்ல வேளையாக இதற்குள் யானைமேலிருந்த பெண்கள் தங்களை நெருங்கி வந்த குதிரை மேல் இருப்பவர் யார் என்று உற்றுப் பார்த்தார்கள். உடனே, வானதி, யானைப்பாகனிடம் ஏதோ சொல்லி அவன் கொம்பு முழக்கத்தை நிறுத்திவிட்டு, "பெரியப்பா! தாங்கள்தானா? நான் கேள்விப்பட்டது உண்மைதான்!" என்றாள்.

"ஆம், குழந்தாய்! நான்தான். ஆனால் இது என்ன விசித்திரம்? செய்தி கொண்டு வருவதற்கு நீதானா அகப்பட்டாய்? இளையபிராட்டிக்கு வேறு யாரும் அகப்படாமலா போய் விட்டார்கள்! அதிலும் இப்பேர்ப்பட்ட நிலைமையில்!" என்றார் சேனாதிபதி.

"ஆம், பெரியப்பா! இப்பேர்ப்பட்ட நிலைமையாயிருப்பதினாலேதான் என்னைச் செய்தி கொண்டு போக அனுப்பினார். தாங்கள் சைன்யத்துடன் வந்து தஞ்சைக் கோட்டையைச் சூழ்ந்து கொண்டிருப்பதாகச் செய்தி கிடைத்தது. வேறு யாரையாவது அனுப்பினால் ஒருவேளை தங்கள் படை வீரர்கள் தடுத்து நிறுத்திவிடக்கூடும். தாங்கள் அநுமதித்தாலும், கோட்டைக்குள்ளே இருப்பவர்கள் கதவைத் திறந்துவிட மறுத்துவிடலாம். என்னை அனுப்பி வைத்தால் இரண்டு காரியத்துக்கும் அனுகூலமாயிருக்கலாம் என்று அனுப்பியுள்ளார்கள். துணைக்குப் பூங்குழலியையும் அனுப்பினார்கள்..."

"ஆமாம், ஆமாம்! இந்த ஓடக்காரப் பெண் வெகு கெட்டிக்காரி. அது முன்னமே எனக்குத் தெரிந்த விஷயந்தான். ஆனால் நீ அப்படி என்ன செய்தி கொண்டு வந்தாய்? இரவுக்கிரவே தூது அனுப்ப வேண்டிய அவ்வளவு அவசரமான செய்தி என்ன?"

"அவசரமான செய்திதான், பெரியப்பா! பொன்னியின் செல்வரைப் பற்றிச் சக்கரவர்த்திக்குச் செய்தி கொண்டு வந்திருக்கிறேன்."

"ஆகா! பொன்னியின் செல்வரைப் பற்றியா? அவரைப் பற்றி உனக்கு ஏதாவது தெரியுமா?"

"ஏன்? எவ்வளவோ தெரியும். அவர் வீராதி, வீரர், சூராதி சூரர், காவேரியில் அமுங்காதவர், கடலில் விழுந்தாலும் முழுகாதவர், அண்டினோரைக் கைவிடாதவர், ஆபத்தில் உதவி செய்தவர்களிடம் நன்றி மறவாதவர், அன்னை தந்தையிடம் பக்தி உள்ளவர், தமக்கையார் சொல்லைத் தட்டாதவர், இராஜ்யத்தில் ஆசையில்லாதவர்..."

"போதும்! போதும்! அதையெல்லாம் நான் கேட்கவில்லை. இளவரசர் சௌக்கியமாயிருக்கிறாரா? இப்போது அவர் எங்கேயிருக்கிறார் என்று உனக்குத் தெரியுமா?"

"சௌக்கியமாக இருக்கிறார், பெரியப்பா! இப்போது எங்கேயிருக்கிறார் என்றும் தெரியும். ஆனால் அதைத் தங்களிடம் கூற முடியாது!"

"என்ன? சொல்ல முடியாதா? என்னிடம் கூடவா சொல்ல முடியாது? நீதானா பேசுகிறாய், வானதி?"

"ஆம், பெரியப்பா! நான்தான் பேசுகிறேன். இளவரசர் இருக்குமிடத்தை ஒருவரிடமும் சொல்வதில்லையென்று வாக்களித்திருக்கிறேன்."

சேநாதிபதி பூதிவிக்கிரமகேசரிக்கு ஆக்கிரோஷம் பொங்கி ஆத்திரம் பொத்துக்கொண்டு வந்தது. "பெண்ணே! இளைய பிராட்டியிடம் அனுப்பினால் உன்னை நல்ல முறையில் வளர்ப்பாள் என்று நம்பினேன். இவ்வளவு பிடிவாதக்காரியாக வளர்த்து விட்டாளே? போதும், போதும்! நீ பழையாறையில் இருந்தது போதும். கீழே இறங்கு! உன்னைக் கொடும்பாளூருக்கு அனுப்பிவிட்டு மறுகாரியம் பார்க்கிறேன்" என்றார்.

"பெரியப்பா! எனக்கும் இந்தத் தஞ்சாவூர் மண்ணை மிதிக்கவே இஷ்டமில்லை. ஆகையினால்தான் யானை மேல் ஏறி உட்கார்ந்திருக்கிறேன். இந்த யானைக்கு அடிக்கடி மதம் பிடித்து விடுகிறது. இன்று காலையில் ஒருவனைத் தூக்கி எறிந்துவிட்டது. ஆகையினால், அருகில் ரொம்ப நெருங்கி வராதீர்கள். நான் கொண்டு வந்திருக்கும் செய்திகளைச் சொன்ன பிறகு நானே தங்களிடம் வந்து விடுகிறேன். என்னைக் கொடும்பாளூருக்கு அனுப்பினாலும் அனுப்பி விடுங்கள். இப்போது மட்டும் என்னைத் தடுத்து நிறுத்தாதீர்கள்!" என்றாள் வானதி.

பூதி விக்கிரமகேசரி சிறிது யோசித்துவிட்டு, "சரி, மகளே! நான் உன்னைத் தடுத்து நிறுத்தாமல் விட்டு விடுகிறேன். கோட்டைக் கதவு திறக்காவிட்டால் என்ன செய்வாய்?" என்றார்.

"பெரியப்பா! நீங்கள் இவ்வளவு பெரிய படைகளுடன் வந்திருக்கிறீர்களே? எதற்காக? கோட்டைக் கதவு திறக்காவிட்டால், உங்கள் படைகளை ஏவிக் கதவை உடைத்துத் திறந்து விடச் செய்யுங்கள்!" என்றாள் வானதி.

பூதி விக்கிரமகேசரி இதைக் கேட்டுப் பெருமிதம் அடைந்தார். "மகளே! கொடும்பாளூர்க் கோமகள் பேச வேண்டியவாறு பேசினாய். அவசியம் ஏற்பட்டால் அவ்விதமே செய்வேன். ஆனால் அதற்கு அவசியம் ஏற்படாது. இளைய பிராட்டியிடமிருந்து சக்கரவர்த்திக்குச் செய்தி கொண்டு வந்திருக்கும் உன்னைத் தடுத்து நிறுத்த இந்தச் சின்னப் பழுவேட்டரையன் யார்? அவ்விதம் அவன் ஒருநாளும் செய்ய மாட்டான். ஆனால் எனக்காகவும் சின்னப் பழுவேட்டரையனிடம் ஒரு செய்தியைச் சொல்! நீ கோட்டைக்குள் இருக்கும்போது உனக்கு ஏதாவது சிறிய தீங்கு நேர்ந்தாலும் அவனுடைய குலத்தைப் பூண்டோ டு அழித்து விடுவேன் என்று சொல்! நானும் என்னுடைய துணைவர்களும் சக்கரவர்த்தியை நேரில் பார்த்து அவருடைய விருப்பத்தை அவருடைய வாய்மொழியாகத் தெரிந்து கொள்ள வந்திருக்கிறோம் என்றும் சொல்! நாளைப் பகல் பொழுது போவதற்குள் சக்கரவர்த்தியை நாங்கள் தரிசிக்க அவன் வகை செய்யாவிட்டால், கோட்டையைத் தாக்கத் தொடங்கி விடுவோம் என்று தெரியப்படுத்து!" என்றார்.

"அப்படியே ஆகட்டும், பெரியப்பா!" என்றாள் வானதி.

மறுபடியும் யானைப்பாகன் கொம்பு முழக்கினான். "கொடும்பாளூர் இளவரசிக்கு வழிவிடுங்கள்! கோட்டைக் கதவைத் திறந்து விடுங்கள்!" என்று கூவினான்.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
தியாக சிகரம் - அத்தியாயம் 26

வானதியின் பிரவேசம்

கோட்டைக்குள்ளே சின்னப் பழுவேட்டரையர் பெரும் மனக்கலக்கத்துக்கு உள்ளாகியிருந்தார். வீர தீரங்களில் அவர் யாருக்கும் சளைத்தவர் அல்ல. ஆனால் தமையனாருடைய யோசனையைக் கேட்டே எந்தக் காரியமும் செய்து பழக்கப்பட்டவராதலால் இந்த நெருக்கடியான நிலைமையில் சிறகு இழந்த பறவையைப் போல் தவித்தார். அன்று காலை முதல் ஒன்றன் பின் ஒன்றாக விபரீதமான செய்திகள் அவர் காதுக்கு எட்டிக் கொண்டிருந்தன.

பெரிய பழுவேட்டரையர் கடம்பூர் சம்புவரையர் மாளிகையிலிருந்து தஞ்சைக்குப் புறப்பட்டு இரண்டு தினங்களுக்கு மேலாயின என்று ஒரு செய்தி கிடைத்தது. புயல் அடித்த அன்று கொள்ளிட நதியைக் கடந்து கொண்டிருந்த படகுகள் பல முழுகிப் போயின என்றும் அவருக்குத் தெரிந்திருந்தது. சிறிது நேரத்துக்கெல்லாம் பெரிய பழுவேட்டரையரின் படகில் இருந்த ஒருவனே வந்து சேர்ந்தான். அவர் வந்த படகும் முழுகிப் போயிற்று என்றும், தான் திணறித் திண்டாடிக் கரை ஏறி வந்து சேர்ந்ததாகவும் கூறினான்.

இளவரசர் அருள்மொழிவர்மர் நாகைப்பட்டினம் சூடாமணி விஹாரத்தில் மறைந்திருந்து வெளிப்பட்டார் என்றும் பெரும் ஜனத்திரளுடன் தஞ்சையை நோக்கி வந்து கொண்டிருக்கிறார் என்றும் இன்னொரு ஒற்றன் வந்து கூறினான். இரவு திருவாரூரில் அவர் தங்கியதாகவும், தான் இரவுக்கிரவே பிரயாணம் செய்து வெள்ளக் காடாயிருந்த பிரதேசங்களையெல்லாம் தாண்டி வந்ததாகவும் தெரிவித்தான்.

இன்னும் சற்று நேரத்துக்கெல்லாம் சம்புவரையர் அனுப்பிய ஆள் ஒருவன் வந்து சேர்ந்தான். திருக்கோவலூர் மலையமான் பெரும்படை திரட்டிக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது என்றும் ஆதித்த கரிகாலரின் வெறி அதிகமாகி வருகிறது என்றும், ஆகையால் பெரிய பழுவேட்டரையரை உடனே புறப்பட்டு வரும்படி சம்புவரையர் செய்தி அனுப்பியதாகவும் கூறினான்.

பெரிய பழுவேட்டரையரோ தஞ்சைக்கு இன்னும் வந்து சேரவே இல்லை. அவர் உடனே புறப்பட்டுச் செல்வது எப்படி? யமனும் அருகில் வருவதற்கு அஞ்சக்கூடிய அந்த வீரக் கிழவரை ஒருவேளை கொள்ளிடத்து வெள்ளம் கொள்ளை கொண்டிருக்குமோ? - என்று சின்னப் பழுவேட்டரையர் கலங்கினார்.

இதற்கு அடுத்தபடியாக எல்லாவற்றிலும் பெரிய இடி போன்ற செய்தியைத் தெற்கேயிருந்து ஒற்றர்கள் ஓடிவந்து தெரிவித்தார்கள். தென் திசையிலிருந்து தஞ்சைக்கு வந்த மூன்று பெரிய சாலைகளிலும் சேனா வீரர்கள் சாரிசாரியாக வந்து கொண்டிருப்பதாகவும், கொடும்பாளூர் பூதி விக்கிரம கேசரியும் வருவதாகவும் அவர்கள் கூறினார்கள்.

இதைக் கேட்டவுடனேதான் சின்னப் பழுவேட்டரையர் கோட்டைக் கதவுகளையெல்லாம் சாத்திவிடும்படி உத்தரவு போட்டார். உள்ளிருந்து யாரும் வெளியேறுவதையும், வெளியிலிருந்து உள்ளே வருவதையும் கண்டிப்பாகத் தடை செய்துவிட்டார்.

வழக்கம்போல அன்று கோட்டைக்குள் வந்து வேளக்காரப் படையினரைச் சக்கரவர்த்தியின் அரண்மனையைச் சுற்றிலும் காவலுக்கு அமைத்துவிட்டுத் தம்முடைய சொந்தப் படை வீரர்களைக் கோட்டைக் காவலுக்கு நியமித்தார். இந்த விவரங்களையெல்லாம் சக்கரவர்த்திக்கும் தெரிவித்து விட வேண்டும் என்று எண்ணினார். அதற்கு முன்னால், முதன் மந்திரி அநிருத்தரைக் கலந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினார். அநிருத்தரிடம் அவருக்கு அவ்வளவாக நம்பிக்கை கிடையாதுதான் என்றாலும், அச்சமயம் அவர் கோட்டைக்கு வெளியில் இல்லாமல் உள்ளேயிருப்பது நல்லது. தம்மை அறியாமல் அவர் எதுவும் செய்ய முடியாதல்லவா? அவரிடம் யோசனை கேட்டுக் கொண்டு காரியங்கள் செய்வதாகப் பாவனை பண்ணுவதும் நல்லது. பின்னால் ஏதாவது தவறாகப் போனால் தம்மீது மட்டும் குற்றம் என்று யாரும் பழி சுமத்த முடியாது.

சக்கரவர்த்தியிடம் தாமே நேரில் சொல்வதைக் காட்டிலும் அநிருத்தரையும் அழைத்துக்கொண்டு போய்ச் சொல்வது சுலபமாயிருக்கும். இளவரசன் அருள்மொழிவர்மனும், அவனுக்குப் பெண் கொடுத்துச் சம்பந்தம் செய்துகொள்ள விரும்பிய பூதி விக்கிரம கேசரியும் சேர்ந்து சதியாலோசனை செய்து தஞ்சாவூரைக் கைப்பற்றுவதற்காகவே, இரு பக்கமிருந்தும் வருவதாகச் சின்னப் பழுவேட்டரையர் நம்பினார். இதை பற்றித் தாம் தனிப்படக் கூறினால் சக்கரவர்த்தி நம்புவதுகூடக் கடினமாயிருக்கும். முதன் மந்திரி அநிருத்தரும் சேர்ந்து சொன்னால் நம்பியே தீரவேண்டும் அல்லவா?

முதன் மந்திரி அநிருத்தரும் ஓரளவு கலக்கம் அடைந்துதானிருந்தார். இளைய பிராட்டி குந்தவை அன்று காலை தஞ்சையை விட்டுப் போனதையே அவர் அவ்வளவாக விரும்பவில்லை. ஈழத்து ராணியும், பூங்குழலியும் காலையில் காணாமற் போனது அவருடைய உள்ளத்தின் அமைதியை ஓரளவு குலைத்திருந்தது. "எங்கே போயிருப்பார்கள்? எப்படிப் போயிருப்பார்கள்? எதற்காக?" என்றெல்லாம் எவ்வளவோ சிந்தித்தும் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. பூதி விக்கிரம கேசரி சைன்யத்துடன் வருகிறார் என்னும் செய்தி அவருக்குப் பெருங்கலக்கத்தையே உண்டு பண்ணிவிட்டது.

ஆனாலும் இதையெல்லாம் உடனே சக்கரவர்த்தியிடம் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை என்று சின்னப் பழுவேட்டரையருக்கு அவர் யோசனை சொன்னார்.

"சக்கரவர்த்தியின் மனக் குழப்பம் இன்று அதிகமாகியிருப்பதாகக் கேள்விப்படுகிறேன். மகாராணியின் அந்தரங்கச் சேடி வந்து தெரிவித்துவிட்டுப் போனாள். இந்த நிலையில் பூதி விக்கிரமகேசரியைப் பற்றிச் சொன்னால், சக்கரவர்த்தியின் மூளையிலுள்ள இரத்த நாளம் வெடித்து உயிருக்கே கூட ஒருவேளை ஆபத்து உண்டாகிவிடும். ஏற்கெனவே, தஞ்சை நகரத்தில் சக்கரவர்த்தி காலமாகிவிட்டார் என்ற வதந்தி பரவியிருக்கிறதாம். உண்மையாகவே அப்படி நேர்ந்துவிட்டால் எத்தனை விபரீதம் ஆகும் என்று யோசித்துப் பாருங்கள். சக்கரவர்த்தியை நீங்களே கொன்று விட்டதாக வதந்தி உண்டாகிவிடும். உங்கள் விரோதிகளுக்கு மிகவும் சௌகரியமாகப் போய்விடும். ஆகையால், பொறுத்துப் பார்த்து முடிவு செய்யலாம். பூதிவிக்கிரம கேசரியின் உத்தேசம் இன்னதென்று முதலில் தெரிந்து கொள்ளலாம். பெரிய பழுவேட்டரையரைப் பற்றியும் பொன்னியின் செல்வரைப் பற்றியும் அதற்குள் ஏதேனும் நிச்சயமான செய்தி கிடைக்கக் கூடும். அதுவரையில் பொறுமையாக இருங்கள்" என்று முதன் மந்திரி அநிருத்தர் கூறியது காலாந்தக கண்டருக்கும் உசிதமாகவே தோன்றியது.

"அப்படியானால், சக்கரவர்த்தியிடம் சமயம் பார்த்துச் சொல்லவேண்டிய காரியத்தைத் தங்களிடமே விட்டு விடுகிறேன். கோட்டைப் பாதுகாப்புக் காரியங்களை நான் கவனிக்கிறேன்" என்று சொல்லிவிட்டுச் சின்னப் பழுவேட்டரையர் முதன் மந்திரியிடம் விடை பெற்றுக் கொண்டார்.

அதுமுதல் கோட்டை மதிள் ஓரமாகச் சுற்றி வந்து கோட்டைப் பாதுகாப்புக்கு வேண்டிய முன் ஏற்பாடுகளைச் செய்துவந்தார். பல நாள் முற்றுகைக்கும் கோட்டையை ஆயத்தமாகச் செய்ய வேண்டும். கொடும்பாளூர்ப் படைகள் கோட்டைக் கதவைத் தகர்த்தும், மதிள் மேல் ஏறிக் குதித்தும் கைப்பற்ற முயன்றால், அந்த முயற்சியைத் தோற்கடிக்கவும் சித்தமாயிருக்கவேண்டும், இதன் பொருட்டு அவருக்கு நம்பிக்கையான வீரர்களை அங்கங்கே நிறுத்தி வைக்கவேண்டும். கோட்டை மதிள் எங்கேயாவது பலவீனப்பட்டிருந்தால், அதைச் செப்பனிட்டுப் பலப்படுத்த வேண்டும்.

இந்த ஏற்பாடுகளில் சின்னப் பழுவேட்டரையர் கவனம் செலுத்திக் கொண்டிருந்தபோதே, வெளியில் இருந்து செய்திகள் அறிவதற்கு வழி என்ன என்பது பற்றியும் அவருடைய உள்ளம் சிந்தித்துக் கொண்டிருந்தது.

தஞ்சைக் கோட்டைக்கு இரகசியச் சுரங்க வழிகள் இரண்டுதான் உண்டு. ஒன்று பெரிய பழுவேட்டரையரின் மாளிகையிலிருந்து பொக்கிஷ நிலவறை வழியாக வெளியே சென்றது. இந்த வழியைச் சிலநாள் யாரும் உபயோகிக்க முடியாது. ஏனென்றால், அந்த வழி வெளியே திறக்கவேண்டிய இடத்தில் வடவாற்றின் வெள்ளம் அலை மோதிக்கொண்டு சென்றது. அந்த வழியை அப்போது திறந்தால் வெள்ளம் நிலவறைக்குள்ளேயே புகுந்துவிடும்.

இன்னொரு, சுரங்க வழி முதன் மந்திரி அநிருத்தரின் அரண்மனைக்குள்ளே இருந்து புறப்பட்டது. ஆனால் அதன் வழியாகச் சின்னப் பழுவேட்டரையர் அறியாமல் யாரும் வெளியே போகவோ, உள்ளே வரவோ முடியாது. அந்த வழி கோட்டைச் சுவரைக் கடந்து செல்லும் இடத்தில் சின்னப் பழுவேட்டரையரின் காவல் இருந்தது. இரவு இரண்டாம் ஜாமத்துக்கு மேலே அந்தச் சுரங்க வழியாக வெளியே அந்தரங்கமான ஆட்களை அனுப்ப வேணுமென்று சின்னப் பழுவேட்டரையர் எண்ணமிட்டுக் கொண்டிருந்தார். கடம்பூருக்கும், பழையாறைக்கும் ஆட்களை அனுப்பி பெரிய பழுவேட்டரையரைப் பற்றியும் பொன்னியின் செல்வரைப் பற்றியும் நிச்சயமான தகவல் அறிந்து வரச் செய்யவேண்டும்.

இம்மாதிரி காலாந்த கண்டர் முடிவு செய்திருந்த சமயத்திலேதான் ஒரு வீரன் விரைந்து வந்து, வடக்கு வாசலில் ஒரு யானையின் மேல் இரு பெண்கள் வந்திருப்பதைப் பற்றியும், அவர்களுக்காகக் கதவைத் திறக்கும்படி யானைப்பாகன் கூவுவதைப் பற்றியும் தெரிவித்தான். வந்திருக்கும் பெண்களில் ஒருத்தி வானதி என்று தெரிந்ததும் சின்னப் பழுவேட்டரையர் பெரிதும் ஆச்சரியம் அடைந்தார். வானதியின் பெரியப்பன் சைன்யத்துடன் வந்து கோட்டையைச் சுற்றி முற்றுகையிட்டிருக்கும் போது, அந்தப் பெண் கோட்டைக்குள் தன்னைவிடும்படி கேட்பதற்கு எவ்வளவு துணிச்சல் வேண்டும்? முதலில், "கண்டிப்பாகக் கதவைத் திறக்க முடியாது" என்று சொல்லிவிட வேண்டுமென்றே எண்ணினார். வடக்குக் கோட்டை வாசலுக்குப் போய்ச் சேருவதற்குள் அவருடைய எண்ணம் மாறிவிட்டது.

"கேவலம் ஒரு சிறு பெண்ணுக்குப் பயந்து கோட்டைக் கதவைத் திறக்க மறுப்பதா? இது என் வீரதீரத்துக்கு இழுக்கு ஆகாதா?" என்று எண்ணினார். அப்படி எதற்காகத்தான் அந்தப் பெண் கோட்டைக்குள் வர விரும்புகிறாள் என்பதை அறிந்து கொள்ளவும் அவருக்கு ஆவல் உண்டாயிற்று.

கோட்டை வாசலின் மேல் மாடியில் ஏறி நின்று பார்த்தார். யானைமீது யானைப்பாகனைத் தவிர இரு பெண்கள்தான் இருந்தார்கள் என்பது நன்றாகத் தெரிந்தது. அவர்களில் ஒருத்தி வானதிதான் என்பதையும் தெரிந்து கொண்டார். அச்சமயம் கொடும்பாளூர்ப் பெரிய வேளார் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அந்தச் சம்பாஷணையில் ஒரு பகுதியும் அவர் காதில் விழுந்தது. பெரிய வேளார் வானதியைக் கோட்டைக்குள் போக வேண்டாம் என்று சொல்வதையும், வானதி அதை மறுத்து உள்ளே போவேன் என்று பிடிவாதம் பிடிப்பதையும் அறிந்து கொண்டார். எனவே, வானதிக்குக் கதவைத் திறந்து விடலாம் என்ற எண்ணம் உறுதிப்பட்டது.

பெரிய வேளார் அப்பால் அகன்று சென்றதும், யானை மேலும், சில அடிகள் எடுத்து வைத்து அகழி ஓரத்தில் வந்து நிற்பதைக் கண்டார். யானைப்பாகன் கொம்பை எடுத்து ஊதிவிட்டு முன் போலவே "கொடும்பாளூர் இளவரசிக்குக் கோட்டைக் கதவை திறந்துவிடுங்கள்! பெரிய பழுவேட்டரையரிடமிருந்து சின்னப் பழுவேட்டரையருக்கும், இளைய பிராட்டியிடமிருந்து சக்கரவர்த்திக்கும் செய்தி கொண்டுவரும் வானதிதேவிக்கும் உடனே வழி விடுங்கள்!" என்று கூவினான்.

இதைக் கேட்டதும் சின்னப் பழுவேட்டரையரின் மனதில் கொஞ்ச நஞ்சமிருந்த சந்தேகமும், தயக்கமும் நீங்கி விட்டன. பெரிய பழுவேட்டரையர் வானதியின் மூலமாகத் தமக்குச் செய்தி அனுப்புவது விசித்திரமானதுதான். இதில் ஏதாவது சூழ்ச்சியோ, தந்திரமோ இருக்கக்கூடும். இருந்தால் அதைத் தம்மால் கண்டுபிடிக்க முடியாதா? இந்தச் சிறு பெண் தம்மை ஏமாற்றிவிட்டுத் தப்பிப் பிழைக்க முடியுமா? பார்த்துக் கொள்ளலாம்!

யானைப்பாகன் ஊதிய கொம்பின் முழக்கத்துக்குப் பதில் முழக்கம் கோட்டை வாசல் மேல் மாடியிலிருந்து கேட்டது, தீவர்த்தி வெளிச்சம் தெரிந்தது. அந்த வெளிச்சத்தில் வேல்களின் முனைகள் ஒளி வீசித் திகழ்ந்தன. வளைத்து நாணேற்றப்பட்டிருந்த வில்களில் அம்புகள் பூட்டப்பட்டுப் புறப்படச் சித்தமாயிருந்தன. அவற்றுக்கு மத்தியில் ஒரு மனித உருவம் வெளிப்பட்டு வந்தது.

"கொடும்பாளூர் இளவரசியாருக்குக் கோட்டைக் கதவு திறந்து விடப்படும். யானையையும், யானைமீது உள்ளவர்களையும் தவிர வேறு யாரேனும் பின் தொடர முயன்றால் உடனே யமனுலகம் சேர்வார்கள்!" என்று அந்த மனித உருவம் இடி முழக்கம் போன்ற குரலில் கர்ஜனை செய்தது.

இதைக் கேட்டதும் பூதிவிக்கிரம கேசரியும் அவருடன் வந்த ஆட்களும் இன்னும் சிறிது அப்பால் சென்றார்கள். கோட்டைக் கதவுகள் திறப்பட்டன. அகழியின் பாலம் இறக்கப்பட்டது. யானை, பாலத்தின் மேல் நடந்து சென்றபோது, பாலம் அதிர்ந்தது. வானதிக்குச் சிறிது அச்சம் உண்டாயிற்று. ஆனால் ஆபத்து ஒன்றும் ஏற்படவில்லை. யானை அகழியின் அக்கரையை அடைந்தது. திறந்திருந்த கதவுகளின் வழியாகக் கோட்டைக்குள் பிரவேசித்தது. மறுநிமிடமே பாலம் மறுபடியும் தூக்கப்பட்டது. கோட்டை வாசற் கதவுகளும் சாத்தப்பட்டன.

வானதி ஏறியிருந்த யானைக்கு அருகில் சின்னப் பழுவேட்டரையரின் யானை வந்து நின்றது. "இளவரசி! வரவேண்டும்! வரவேண்டும்! தங்கள் பெரிய தந்தை தடுத்தும் கேளாமல் தாங்கள் என் விருந்தாளியாக வர இசைந்தது பற்றி மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்! தங்களுக்கு இங்கே எந்த விதமான தீங்கேனும் நேருமோ என்று அஞ்ச வேண்டாம்!" என்று சின்னப் பழுவேட்டரையர் கம்பீரமான குரலில் கூறினார்.

"ஐயா! எனக்கு அத்தகைய அச்சம் சிறிதும் இல்லை. நான் சொல்ல வந்த செய்திகளைச் சொன்ன பிறகு என்னைத் தாங்கள் பாதாளச் சிறையிலே அடைத்தாலும் கவலையில்லை!" என்றாள் வானதி.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
தியாக சிகரம் - அத்தியாயம் 27

"நில் இங்கே!"

பாதாளச் சிறையைப் பற்றிக் கூறியதும் சின்னப் பழுவேட்டரையருக்குப் பழைய நினைவுகள் வந்தன. சம்பிரதாய மரியாதைப் பேச்சை மறந்துவிட்டுக் கூறினார்!- "ஆமாம்; நீ ஒரு தடவை பாதாளச் சிறைக்குப் போயிருக்கிறாய். இளைய பிராட்டியுடன் சென்றாய். உளவு அறிய வந்து தப்பி ஓடிவிட்ட ஒற்றன் ஒருவனைப் பற்றித் தகவல் தெரிந்து கொள்ளப் போனீர்கள் இல்லையா?"

"இல்லை, ஐயா! தாங்கள் சொல்வது சரியல்ல. நாங்கள் அன்று பாதாளச் சிறைக்குப் போனது ஒற்றனைப்பற்றி அறிந்து கொள்வதற்காக அல்ல. பட்டத்து இளவரசர் ஆதித்த கரிகாலர் ஓலையுடன் அனுப்பியிருந்த தூதரைப் பற்றித் தெரிந்து கொள்ளப் போனோம்."

"அப்படி நீங்கள் எண்ணிக்கொண்டு போனீர்கள். அவன் ஒற்றனா, தூதனா என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்? நீ ஏதும் அறியாத சிறு பெண். உன்னோடு அதைப்பற்றி விவாதித்துப் பயனில்லை. நீங்கள் போனதுதான் போனீர்களே! அவனைப்பற்றி ஏதாவது தெரிந்து கொண்டீர்களா!"

"இல்லை, நாங்கள் எவனைப் பார்க்கப் போனோமோ, அவன் உங்களுக்குக் கூடத் தெரியாமல் விடுதலையாகிப் போய் விட்டான். பழுவூர் இளைய ராணி நந்தினி தேவியின் கட்டளை எங்களை முந்திக் கொண்டு விட்டது. பாவம்! நீங்கள்தான் என்ன செய்வீர்கள்?"

சின்னப் பழுவேட்டரையர் உதடுகளைக் கடித்துக்கொண்டார். தமது எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் தம் தமையனார் இளைய ராணிக்கு அதிக இடம் கொடுத்து வந்தது இத்தகைய இளம் பெண்களுக்குக்கூட அல்லவா ஏச்சாகப் போய்விட்டது? இவ்விதம் தமது உள்ளத்தில் தோன்றிய அவமான உணர்ச்சியை வெளியில் காட்டிக் கொள்ளாமல், "உங்கள் பங்குக்கு நீங்களும் ஓர் அரைப் பைத்தியக்காரனை விடுதலை செய்தீர்கள்!" என்றார்.

"ஐயா! அரைப் பைத்தியம் என்று புஷ்ப சேவை செய்து வரும் சேந்தன் அமுதனைத் தானே சொல்கிறீர்கள்? அவரை அன்று விடுதலை செய்ததினால் இந்தச் சோழ நாடு எவ்வளவு பெரிய நன்மை அடைந்தது என்பதை அறிந்தால் ஆச்சரியப்பட்டுப் போவீர்கள்!"

"பெண்ணே! எனக்கு ஆச்சரியம் இனி ஒன்றிலுமே ஏற்படப் போவதில்லை. இந்தச் சோழ ராஜ்யம் யார் யாருக்கெல்லாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறது என்பதை நினைத்து ஆச்சரியப்பட்டு எனக்கு அலுத்துப் போய்விட்டது. நீ கூட இப்போது ஏதோ ஒரு முக்கியமான நன்மையைச் சோழ நாட்டுக்குச் செய்வதற்காகத்தான் வந்திருக்கிறாய் அல்லவா?"

"ஆம், ஐயா! முக்கியமான காரியம் இல்லாவிட்டால் தங்கள் தமையனார் அனுப்பியிருப்பாரா? அதிலும் ஒன்றும் அறியாத அபலைப் பெண்ணாகிய என்னை அனுப்பியிருப்பாரா?"

"என் தமையனாருக்குப் புத்திசாலித்தனம் அதிகரித்துக் கொண்டுதான் வருகிறது. உன்னை அனுப்பியதிலிருந்தே அது தெரிகிறது. நீ கொண்டு வந்த செய்தியைச் சீக்கிரம் சொல்லி விடு!"

"பாண்டிய நாட்டுச் சதிகாரர்களைப் பற்றி அலட்சியமாயிருந்தது தவறு என்று தங்களிடம் கூறும்படி சொன்னார். வீர பாண்டியனுடைய ஆபத்துதவிகள் சிலர் உண்மையாகவே பயங்கரச் சதி செய்து வருகிறார்கள்; சோழ குலத்தைப் பழிவாங்க இன்று கெடு வைத்திருக்கிறார்கள். சக்கரவர்த்தியைப் பத்திரமாய்ப் பாதுகாக்கவேண்டும் என்று எச்சரிக்கும்படி கூறினார்..."

இதைக் கேட்ட காலாந்தக கண்டார் நகைத்தார். "இந்தப் பிரமாதமான செய்தியைத்தானா சொல்லி அனுப்பினார்? ஒருவேளை உன் பெரிய தகப்பனார் படை எடுத்து வரப்போவதைப் பற்றித்தான் தகவல் தெரிந்து சொல்லி அனுப்பினாரோ என்று பார்த்தேன். அவர் வெளியிலிருந்து கொடும்பாளூர் சைன்யத்தைப் பார்த்துக் கொண்டால், நான் கோட்டைக்குள்ளே சக்கரவர்த்திக்கு ஏதும் நேராமல் பார்த்துக் கொள்கிறேன். அதைப்பற்றி அவரும், நீயும், இளையபிராட்டியும் கூடக் கவலைப்பட வேண்டியதில்லை!" என்றார்.

"ஐயா! தாங்கள் இப்படி அலட்சியமாகக் கருதுவீர்கள் என்று தெரிந்து, மேலும் ஒரு விஷயம் சொல்லி அனுப்பியிருக்கிறார். பழுவூர் இளைய ராணியின் அரண்மனைக்கு அடிக்கடி யாரோ மந்திரவாதி ஒருவன் வந்து போனது பற்றித் தாங்கள் எச்சரிக்கை செய்தீர்களாம். அதற்கு அவர் செவி கொடாமல், தங்களைக் கோபித்துக் கொண்டாராம். 'தம்பி! பெருங்குற்றம் செய்துவிட்டேன். அந்த மந்திரவாதி ரவிதாஸன் என்பவன்தான் பாண்டியச் சதிகாரன். வீர பாண்டியனுடைய ஆபத்துதவிகளின் தலைவன். சோழ குலத்தை வேரோடு கருவறுக்கக் கங்கணம் கட்டிக் கொண்டிருப்பவன். அவனுடைய ஆள் ஒருவன் இன்றைக்குச் சக்கரவர்த்தியின் மீது பழிவாங்க முயலுவான்; அலட்சியம் வேண்டாம். சர்வ ஜாக்கிரதையுடனிருக்கவும் - இதுவே பெரிய பழுவேட்டரையர் தங்களுக்கு அனுப்பிய செய்தி! என் கடமையை நான் செய்துவிட்டேன்..."

காலாந்தக கண்டர் சிறிது திகைத்துத்தான் போய்விட்டார். இம்மாதிரி செய்தியைப் பெரியவரைத் தவிர வேறு யாரும் அனுப்பியிருக்க முடியாது.

"பெண்ணே! இது உண்மையானால் அவர் ஏன் இங்கு உடனே வரவில்லை? உன்னை எதற்காக அனுப்பினார்...?"

"என்னை அவர் அனுப்பவில்லை. அவர் இளையபிராட்டியிடம் கூறினார். இளைய பிராட்டி என்னை அனுப்பி வைத்தார். ஆதித்த கரிகாலருக்கும் இன்றைக்கே ஆபத்து வர இருக்கிறது. ஆகையால் அவரைக் காப்பாற்ற அவர் திரும்பிப் போயிருக்கிறார்."

"எங்கேயிருந்து? அவர் உங்களை எங்கே பார்த்தார்?"

"குடந்தையில் ஜோதிடர் வீட்டில் பார்த்தார். இன்னும் தங்களுக்குச் சந்தேகம் தெளியவில்லையானால் இதையும் கேளுங்கள். தங்கள் அண்ணன் படகில் கொள்ளிடத்தைத் தாண்டி வந்தபோது புயல் அடித்துப் படகு கவிழ்ந்து விட்டது. தப்பிப் பிழைத்துக் கரையேறிப் பள்ளிப்படையில் படுத்திருந்த போது சதிகாரர்கள் பேசியதைக் கேட்டுத் தெரிந்து கொண்டார். ஐயா! இன்னும் இங்கேயே நின்று பேசிக் கொண்டிருக்க வேண்டுமா? அல்லது அரண்மனைக்குப் போகலாமா?"

"பெண்ணே! நீ சொன்னதெல்லாம் உண்மையாகவே இருக்கட்டும். எப்பேர்ப்பட்ட சதிகாரனாயிருந்தாலும் கோட்டைக் காவலைக் கடந்து வரமுடியாது. நீ பெண்ணாயிருப்பதனால்தான் உள்ளே வரவிட்டேன்..."

"வெளியேயிருந்து வரவேண்டும் என்பது என்ன? சதிகாரர்கள் கோட்டைக்குள்ளேயே இருந்துவிட்டால்...?"

"ஒரு நாளும் முடியாத காரியம்...."

"சரி; அது தங்கள் பொறுப்பு. என் கடமையை..."

"நிறைவேற்றி விட்டாய். இனி நீ திரும்பிப் போகலாம்."

"இல்லை, ஐயா! என் கடமையில் ஒரு பாதியைத்தான் நிறைவேற்றியிருக்கிறேன் சக்கரவர்த்தியைப் பார்த்து இளைய பிராட்டியின் செய்தியைச் சொல்லிவிட்டால் முழுவதும் நிறைவேற்றியதாகும்..."

"அந்தச் செய்தியையும் என்னிடமே சொல்லிவிடலாம்."

"முடியாத காரியம், சக்கரவர்த்தியிடம் நேரில் தெரிவிக்கும்படி இளைபிராட்டியின் ஆக்ஞை. இதோ இளைய பிராட்டியின் முத்திரை மோதிரம்!..."

"ஆ! முத்திரை மோதிரம் யார் யாரிடமோ வந்துவிடுகிறது. இளைய பிராட்டிதான் கொடுத்தாள் என்பது என்ன நிச்சயம்? உன் பெரிய தந்தை இந்தக் கோட்டையை முற்றுகையிட்டிருக்கிறார். உன்னை எப்படி நம்புவது?...."

"ஓர் அபலைப் பெண்ணால் என்ன அபாயம் நேர்ந்துவிடும் என்று பயப்படுகிறீர்கள்?"

"பெண்ணே! பழுவூர் வம்சத்தினர் பயம் என்பது இன்னதென்று அறியமாட்டார்கள்..."

"அப்படியானால் என்னை அரண்மனை வரையில் போக விடுங்கள், தாங்களும் கூட வாருங்கள்...."

"இன்றைக்கெல்லாம் சக்கரவர்த்தியின் மனக் கலக்கம் மிகவும் அதிகமாயிருக்கிறது..."

"அந்தக் கலக்கத்தைக் தீர்ப்பதற்குரிய செய்தியுடன் நான் வந்திருக்கிறேன், ஐயா! விஷயம் இன்னதென்று அறிந்தால் என்னைத் தடுத்துத் தாமதப்படுத்தியதற்காகத் தாங்களே பச்சாத்தாபப் படுவீர்கள்..."

சின்னப் பழுவேட்டரையர் சிறிது வியப்புக் குறி காட்டி, "பெண்ணே! ஒருவேளை சின்ன இளவரசர் - பொன்னியின் செல்வரைப் பற்றிச் செய்திகொண்டு வந்திருக்கிறாயா?" என்றார்.

"ஆம், தளபதி!"

"ஆகா! சின்ன இளவரசர் சுகமாயிருக்கிறாரா? இப்போது எங்கே வந்துகொண்டிருக்கிறார்? அவருக்கு - சதிகாரர்களால் அவருக்கு..."

"ஆம்; பாண்டிய நாட்டுச் சதிகாரர்களால் அவருடைய உயிருக்கும் அபாயம் நேர இருந்தது. ஆனால் கடவுள் அருளால் விபத்து ஒன்றும் ஏற்படவில்லை சௌக்கியமாயிருக்கிறார். இது தங்களுக்குச் சந்தோஷமளிக்கும் அல்லவா?"

"நல்ல கேள்வி! சின்ன இளவரசர் சௌக்கியமாயிருப்பது பற்றிச் சந்தோஷப்படாமல் துக்கப்படுவார்களா? வா, வா! உன்னோடு வீண் பொழுது போக்க விரும்பவில்லை. அரண்மனைக்கு வந்து சக்கரவர்த்தியிடம் நேரில் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிடு!"

இவ்விதம் கூறிச் சின்னப் பழுவேட்டரையர் தம் யானையை மேலே செலுத்தினார். இளவரசரைப் பற்றி அறிந்து கொள்ள அவருக்கும் பெரும் ஆவல் உண்டாயிற்று. அவருடைய மாப்பிள்ளை மதுராந்தகன் தஞ்சை சிம்மாசனம் ஏறுவதற்கு அருள்மொழிவர்மன் ஒரு போட்டி என்பதாக அவர் என்றும் கருதியதில்லை. சக்கரவர்த்திக்கு அந்த எண்ணமே இல்லை என்பதை அவர் அறிவார். அருள்மொழி தந்தை சொல்லைத் தட்டக் கூடியவனும் இல்லை. குந்தவை தலையிட்டு ஏதேனும் குளறல் செய்யாமலிருக்க வேண்டுமென்பது கவலை. அவள் இப்போது ஏதேனும் சூழ்ச்சி தொடங்கியிருக்கிறாளா, என்ன? அருள்மொழியைத் தன் வசத்தில் வைத்துக்கொண்டு ஏதேனும் தந்தைக்குத் தாறுமாறான செய்தி அனுப்பியிருப்பாளா? இளவரசரைப் பற்றி இந்தக் கொடும்பாளூர்ப் பெண் உண்மையாகவே செய்தி கொண்டு வந்திருந்து சக்கரவர்த்தியிடம் கூறினால், அதை அவர் தம்மிடம் சொல்லாமல் இருக்கமாட்டார். அருள்மொழிவர்மரின் உத்தேசம் இன்னதுதான் என்று தெரிந்து கொண்டால், அதற்கேற்பத் தாம் செய்ய வேண்டியது பற்றித் தீர்மானித்துக்கொள்ளலாம் அல்லவா? அச்சமயத்தில் பூதி விக்கிரம கேசரி தஞ்சைக் கோட்டை மீது படை எடுத்து வந்திருக்கும் சதிகாரச் செயலைப் பற்றியும் சக்கரவர்த்தியிடம் தெரிவித்துவிடலாம் அல்லவா?...

இரண்டு யானைகளும் அரண்மனை வாசலில் வந்து நின்றன. சின்னப் பழுவேட்டரையர் இலகுவாக யானை மீதிருந்து கீழே குதித்தார். இன்னொரு யானை மலை அசைவதுபோல் அசைந்து மண்டியிட்டுப் படுத்தது. இரண்டு பெண்களும் யானைப்பாகனும் கீழே இறங்கினார்கள். வாசற் காவலனை அழைத்துச் சின்னப் பழுவேட்டரையர் ஏதோ கூறினார். அவன் அரண்மனையின் முன் வாசலைத் திறந்து விட்டான்.

காலாந்தக கண்டருடைய மனதில் அவருடைய தமையனார் சொல்லி அனுப்பியதாக வானதி கூறிய செய்தி உறுத்திக் கொண்டிருந்தது. அதை அவர் அலட்சியம் செய்யப் பார்த்தும் முடியவில்லை. முக்கியமாக, மந்திரவாதி ரவிதாஸனைப் பற்றி அறிந்தது. அவருடைய மன அமைதியை மிகக் குலைத்தது. வீர பாண்டியரின் ஆபத்துதவிகளைப் பற்றி அவர் முன்னமே அறிந்திருந்தார். ஆனால் அவர்களுக்குத் தஞ்சாவூர்க் கோட்டைக்குள்ளேயே இடம் கிடைத்திருந்தது என்று அறியவில்லை. பழுவூர் இளைய ராணி மந்திரவாதியை அழைத்துப் பேசுவதெல்லாம் பெரிய பழுவேட்டரையரை மேலும் மேலும் தன் வசப்படுத்துவதற்காகவே என்று அவர் நம்பிக் கொண்டிருந்தார். அண்ணன் தம்பிகளுக்குள்ளே விரோதத்தை வளர்ப்பதும், அவளுடைய நோக்கமாயிருக்கலாம் என்று நினைத்தார். இப்போது இந்தப் பெண் சொல்வது சிறிது பீதிகரமான செய்தியாகத்தான் இருக்கிறது. ஆயினும், எந்த மந்திரவாதி அல்லது சதிகாரன் என்ன செய்துவிட முடியும்? தம்முடைய அநுமதியின்றிச் சக்கரவர்த்தியின் அரண்மனைக்குள் ஓர் ஈயும் நுழைய முடியாது. சக்கரவர்த்தி வெளியில் வருவதும் கிடையாது. இருந்தாலும் அரண்மனையைச் சுற்றிலும் இன்னும் கொஞ்சம் பாதுகாப்பைப் பலப்படுத்தி வைப்பது நல்லது. புயல் - வெள்ளம் என்று சொல்லிக் கொண்டும், முதல் மந்திரியைப் பார்ப்பதற்காக என்று சொல்லிக் கொண்டும் அதிகம் பேர் இரண்டு நாளாகக் கோட்டைக்குள் வந்திருந்தார்கள். அவர்கள் எல்லாரும் வெளியில் போய்விட்டார்களா என்று தெரியாது. இன்று பகலில் திடீரென்று கோட்டைக் கதவைச் சாத்தியதும் நல்லதாய்ப் போயிற்று. துர்நோக்கம் கொண்டவர்கள், - சந்தேகாஸ்பதமான மனிதர்கள், - யாராவது இந்தக் கோட்டைக்குள் வந்திருக்கிறார்களா என்று நன்றாகப் பரிசோதனை செய்து பார்த்து விடலாம்...

இவ்விதம், யானை மேல் அரண்மனையை நோக்கி வரும் போதே எண்ணமிட்டுக் கொண்டு வந்தார். அரண்மனை வாசலில் ஒரு பக்கத்தில் எப்போதும் ஆயத்தமாயிருந்த தம் ஆட்களைச் சமிக்ஞையால் அழைத்தார். அவர்களிடம் கோட்டையின் உட்பக்கம் முழுவதும் நன்றாய்த் தேடிச் சந்தேகாஸ்பதமாக யார் தென்பட்டாலும் பிடித்துக் கொண்டு வரும்படி கட்டளையிட்டார்.

பிறகு, வேளக்காரப் படையாரிடம் அன்றிரவு முழுவதும் தூங்காமலே அரண்மனையையும் சுற்றுப்புறங்களையும் காவல் புரியவேண்டுமென்று சொல்ல எண்ணி, அவர்களுடைய தலைவனை அனுப்பும்படி ஆக்ஞாபித்தார். இந்த நிலையில், யானையின் மேல் வந்த பெண்கள் என்ன ஆனார்கள் என்று திரும்பிப் பார்த்தார். அவர்கள் அப்போது அரண்மனை முன்புறத்து நிலா முற்றத்தைத் தாண்டி முதல் வாசற்படிக்கு அருகிலே போய்க் கொண்டிருந்தார்கள். ஆனால்,... ஆனால்... இவன் யார்? அவர்களைத் தொடர்ந்து போகும் அந்த மூன்றாவது உருவம்? தலைப்பாகையைப் பார்த்தால், யானைப்பாகன் மாதிரி தோன்றியது! ஆகா! யானைப்பாகன் ஏன் தொடர்ந்து போகிறான்? அரண்மனைக்குள் அவனுக்கு என்ன வேலை? சக்கரவர்த்தியிடந்தான் அவனுக்கு என்ன காரியம்?

மிகப் பயங்கரமான ஓர் எண்ணம் அவர் மனத்தில் மின்னலைப் போல் தோன்றிச் சொல்ல முடியாத வேதனையை உண்டாக்கியது. கோபக்கனலை எழுப்பியது. ஒருவேளை இதில் ஏதேனும் சூழ்ச்சி இருக்குமோ? இவன்தான் சதிகாரனோ? இந்தப் பெண்களை ஏமாற்றிவிட்டு, யானைப்பாகனைப் போல் வந்திருக்கிறானோ? நாமும் ஏமாந்து விட்டோ மோ? தம் கண் முன்னால் சக்கரவர்த்தியைக் கொல்ல வந்த வீர பாண்டியரின் ஆபத்துதவி அரண்மனைக்குள்ளே போகிறதாவது? காலாந்தக கண்டனுக்கு அவ்வளவு பெரிய அசட்டுப் பட்டமா? அல்லது பூதிவிக்கிரம கேசரியின் சூழ்ச்சியில் சேர்ந்ததா? எதுவாயிருந்தாலும் சரி, இதோ மறு கணத்தில் எல்லாம் தெரிந்து போய்விடுகிறது!

நாலே எட்டில் நிலா முற்றத்தைக் காலாந்தக கண்டர் கடந்து சென்று யானைப்பாகன் சமீபம் அடைந்தார். "அடே! நில் இங்கே!" என்று ஒரு கர்ஜனை செய்தார்.

"நீ ஏன் உள்ளே போகிறாய்? யானைப்பாகனுக்கு அரண்மனைக்குள் என்ன வேலை?" என்று கூறிக்கொண்டே, அவனுடைய ஒரு கரத்தைத் தமது வஜ்ராயுதம் போன்ற கை முஷ்டியினால் பிடித்துக் கொண்டார்.

அவருடைய கோப கர்ஜனைக் குரலைக் கேட்டுவிட்டு முன்னால் சென்ற இரு பெண்களும் திரும்பிப் பார்த்தார்கள். அவர்களுடைய முகங்கள் சிறிது பயம், வியப்பு, ஆர்வம் முதலிய உணர்ச்சிகளைப் பிரதிபலித்தன. அதே சமயத்தில் புன்னகை மலர்ந்தது. வானதி "ஐயா!... அவர்... அவர்..." என்று ஏதோ சொல்ல ஆரம்பித்துச் சிறிது தயங்கினாள்.

குரோதத்தின் சிகரத்தை அடைந்திருந்த சின்னப் பழுவேட்டரையர் அவளைத் திரும்பிப் பார்க்கவும் இல்லை; அவள் வார்த்தையைப் பொருட்படுத்திக் கேட்கவும் விரும்பவில்லை. யானைப்பாகனுடைய தடுமாற்றத்திலிருந்து அவருடைய சந்தேகம் மேலும் மேலும் உறுதிப்பட்டது. முன்னொரு தடவை தம்மை ஏமாற்றிவிட்டுத் தப்பி ஓடிப்போன வாணர்குலத்து வாலிபனோ என்ற விபரீத எண்ணம் அந்தக் கணத்தில் தோன்றியது. மறுபடியும் தம்மை ஏமாற்றிவிட்டுப் போகலாம் என்று இவ்வளவு துணிச்சலுடன் வந்திருக்கிறானோ?...

பிடித்த பிடியை இன்னும் சிறிது கெட்டியாக்கிக் கொண்டு சின்னப் பழுவேட்டரையர் "அடா!" உண்மையைச் சொல்! நீ யார்? யானைப்பாகன்தானா? அல்லது சதிகாரனா? முன்னொரு தடவை என்னிடமிருந்து தப்பிச் சென்ற ஒற்றனா? இம்முறை தப்ப முடியாது!" என்று சொல்லிக் கொண்டே, பிடித்த பிடியை விடாமல் 'யானைப்பாகன்' முகத்தைத் தம்மை நோக்கித் திருப்பினார்.

அரண்மனையின் முன் மண்டபத்தில் எரிந்த தீபங்களின் வெளிச்சம் லேசாக அந்த 'யானைப்பாகனின்' கம்பீரமான முகத்தில் விழுந்தது.

"தளபதி! நான் யானைப்பாகன் கூடத்தான். தங்களிடமிருந்து என்றும் தப்பிச் சென்றதில்லை. தங்களிடம் என்னை ஒப்புக் கொடுக்கவே வந்திருக்கிறேன்!" என்றான் யானைப்பாகன்.

காலாந்தக கண்டர் அந்த முகத்தைப் பார்த்தார். அந்தக் குரலைக் கேட்டார். மேல் உலகம் ஏழும் இடிந்து அவர் தலை மேல் ஒருமிக்க விழுந்து விட்டது போலிருந்தது. அவ்விதமாகத் திகைத்துச் சித்திரப் பதுமைபோல் நின்று விட்டார். கைப்பிடியை விடுவதற்குக் கூட அவருக்குத் தோன்றவில்லை. கைப்பிடி அதுவாகத் தளர்ந்து இளவரசர் அருள்மொழிவர்மரை விடுதலை செய்தது.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
தியாக சிகரம் - அத்தியாயம் 28

கோஷம் எழுந்தது!

இளவரசர் அருள்மொழிவர்மரின் அந்த இளம் பொன் முகத்தில் என்ன மாய மந்திர சக்திதான் இருந்ததோ, தெரியாது. இத்தனைக்கும் இளவரசர் அச்சமயம் முகத்தைச் சுளுக்கிக் கொள்ளவும் இல்லை. கோபத்தின் அறிகுறியும் சிறிது கூடக் காட்டவில்லை. வெண்ணெய் திருடி அகப்பட்டுக் கொண்ட கண்ணனைப் போல் குற்றத்தை ஒப்புக் கொள்ளும் பாவனை முகத்தில் தோன்றும்படி நின்றார். சின்னப் பழுவேட்டரையரிடம் குற்றம் கண்டுபிடித்துக் கடிந்து கொள்ளும் அறிகுறியோ, அவரை எதிர்த்துப் போராடும் நோக்கமோ அணுவளவும் அவர் முகத்தில் காணப்படவில்லை.

ஆயினும், அஞ்சா நெஞ்சமும், அளவிலா மனோதிடமும் வாய்ந்தவரான காலாந்தக கண்டரின் கை கால்கள் அந்தக் கணத்தில் வெடவெடத்து விட்டன. முகத்தில் வியர்வை அரும்பியது. இன்னது செய்கிறோம் என்றுகூட அறியாமல் இரு கைகளையும் கூப்பி வணக்கம் செலுத்தியவாறு, "பொன்னியின் செல்வா! ஈழங்கொண்ட வீரா! சோழ நாட்டின் தவப்புதல்வா! இது என்ன கோலம்? இது என்ன காரியம்? இவ்விதம் தண்டிப்பதற்கு என்ன குற்றம் செய்தேன் நான்?... சற்றுமுன் நான் செய்த பிழையைப் பொறுத்துக் கருணை புரிய வேண்டும். 'மன்னித்தேன்' என்று அருள்வாக்குத் தரவேண்டும். கண்ணிருந்து பாராத குருடனாகி விட்டேன்..." என்று நாத் தழுதழுக்கக் குரல் நடுங்கக் கூறினார்.

மேலும் இதே முறையில் பேசப் போனவரை இளவரசர் தடுத்து, "தளபதி! இது என்ன? தாங்களாவது, குற்றம் செய்யவாவது? ஒன்றும் அறியாது இந்தச் சிறுவன் தங்களை மன்னிப்பதாவது?" என்றார்.

"தங்களைப் பிடித்து நிறுத்திய இந்தக் கையை வெட்டினாலும் போதிய தண்டனை ஆகாது. 'அடா' என்று அழைத்த என் நாவை அறுத்துப் போட்டாலும் போதாது...."

"தங்கள் வார்த்தைகள் என் காதில் நாராசமாக விழுகின்றன. போதும், நிறுத்துங்கள்! தங்கள் பொறுப்பை நிறைவேற்றுவதற்காகத் தங்கள் கடமையைச் செய்தீர்கள். அதில் குற்றம் என்ன? தவறு என்னுடையது. நான் இந்த வேடத்தில் யானைப்பாகனாக வருவேன் என்று..."

"நான் எதிர்பார்க்கவே இல்லைதான். இப்படித் தாங்கள் செய்யலாமா? எதற்காக? சோழ நாட்டின் மகா வீரரை இப்படியா நான் வரவேற்றிருக்க வேண்டும்? ஆசார உபசாரங்களுடன் முன் வாசலில் வந்து காத்திருந்து, வெற்றி முரசுகள் எட்டுத் திக்கும் அதிரும்படி முழங்க வரவேற்றிருக்க மாட்டேனா?..."

"தாங்கள் அப்படிச் செய்வீர்கள் என்று அறிந்துதான் நான் இந்த வேஷத்தில் வந்தேன். அதற்கெல்லாம் இது சரியான நேரமல்ல. தங்களுக்குத் தெரியாதா? சதிகாரர்களின் தீய முயற்சிகளைப் பற்றிச் சற்றுமுன் கொடும்பாளூர் இளவரசி கூறினாள் அல்லவா? அது உண்மையாக இருக்கலாமென்றே எனக்குத் தோன்றுகிறது..."

"இளவரசே! என்னையும் அந்தப் பாண்டியச் சதிகாரர்களுடன் சேர்த்து விட்டீர்களா?..."

"கடவுளே! என் தந்தை சக்கரவர்த்தியைப் பாதுகாப்பதற்குத் தாங்கள் செய்திருக்கும் ஏற்பாடுகளைப் பார்த்து மனதிற்குள் மகிழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறேன். முதலில் என் தந்தையைப் பார்த்து விட்டு, பிறகு..."

"ஐயா சக்கரவர்த்தியைத் தாங்கள் பார்க்கக் கூடாதென்று நான் தடுத்து விடுவேன் என்று நினைத்தீர்களா? அத்தகைய பாவி நான் என்று யாரேனும் தங்களுக்குச் சொல்லியிருந்தால்...."

"ஒருநாளும் நான் நம்பியிருக்க மாட்டேன், தளபதி!"

"பின் ஏன் இந்த வேஷம்?"

"வேறு முறையில் நான் கோட்டைக்குள் வந்திருக்க முடியுமா, யோசியுங்கள்! கோட்டையைச் சுற்றி தென்திசைச் சேனைகள் வந்து சூழ்ந்திருக்கின்றன. பெரிய வேளாரும் வந்திருக்கிறார் எதற்காக வந்திருக்கிறார் என்று தங்களுக்குத் தெரிந்திருக்கும்...."

"கோட்டைக் கதவுகளை நான் மூடச் செய்தது நியாயமே அல்லவா? அதில் ஏதேனும் குற்றம் உண்டா?"

"ரொம்ப நியாயம், பெரிய வேளாரின் புத்தி கெட்டுப் போயிருக்கிறது. அவரால் நான் கோட்டைக்குள் வருவது தடைப்படும் என்றுதான் இந்த வேடத்தில் வந்தேன். அவர் மகளையும் அழைத்துக் கொண்டுவந்தேன். நல்ல வேளையாக அவர் என்னைக் கவனிக்கவில்லை. தங்களுடைய கூர்மையான கண்கள் கண்டுபிடித்துவிட்டன..."

"என் கண்கள் மூடிப் போயிருந்தன. அதனால்தான் பார்த்தவுடன் தெரிந்துகொள்ளவில்லை. தங்களை யானைப்பாகன் என்று கூறிய வார்த்தைகளைத் தாங்கள் கருணை கூர்ந்து மன்னித்துவிடுங்கள்..."

"அவ்விதம் சொல்லவேண்டாம். தாங்கள் வேறு, என் தந்தை வேறு என்றே நான் எண்ணவில்லை. என்னைச் சிறைப்படுத்திக் கையோடு கொண்டு வருவதற்காகத் தாங்கள் ஆள்களை அனுப்பியிருந்தீர்கள்..."

"கடவுளே! இது என்ன வார்த்தை? நானா சிறைப்படுத்த ஆட்களை அனுப்பினேன்? தங்களை உடனே பார்க்கவேண்டும் என்பதற்காகத் தங்கள் தந்தை - சக்கரவர்த்தி - அனுப்பினார்..."

"அது எனக்குத் தெரியாதா, தளபதி! இலங்கையில் நான் இருந்தபோது அவர்கள் வந்தார்கள். 'சக்கரவர்த்தியின் கட்டளை அல்ல; பழுவேட்டரையர்களின் கட்டளை" என்று என் அருகில் இருந்தவர்கள் சொன்னார்கள்..."

"எங்கள் விரோதிகள் அப்படிச் சொல்லியிருப்பார்கள்..."

"நான் அவர்களுக்கு 'என் தந்தையின் கட்டளை எப்படியோ, அப்படியே பழுவேட்டரையர்களின் கட்டளையும் என் சிரமேல் கொள்ளத்தக்கது' என்று கூறினேன். கடலையும் புயலையும், மழையையும் வெள்ளத்தையும் தாண்டி வந்தேன். அரண்மனையின் முன் வாசலைத் தாண்டி உள்ளே போனதும் தங்கள் விருப்பத்தைத் தெரிந்து கொள்ளலாம் என்று எண்ணினேன் தங்கள் கட்டளையின்றி தந்தையைப் பார்க்கவும் நான் விரும்பவில்லை..."

"இளவரசே! இன்னும் என்னைச் சோதிக்கிறீர்களா? தங்கள் தந்தையைத் தாங்கள் சந்திப்பதற்கு நான் என்ன கட்டளையிடுவது? தங்களுடன் வரச் சொன்னால் வருகிறேன். இங்கேயே நிற்கச் சொன்னால் நின்று விடுகிறேன்? இளவரசரின் விருப்பமே என் சிரசின்மேல் சூடும் கட்டளை" என்று பணிவுடன் கூறினார் சின்னப் பழுவேட்டரையர்.

"தளபதி தாங்கள் இங்கேயே நிற்க வேண்டித்தான் நேரும் போலிருக்கிறது. அதிக நேரம் நாம் இங்கு நின்று பேசிக்கொண்டிருந்து விட்டோ ம். அதோ பாருங்கள்!" என்றார் இளவரசர்.

சின்னப் பழுவேட்டரையர் திரும்பிப் பார்த்தார். சற்று முன், தூரத்தில் நின்ற அவருடைய ஆட்கள் எல்லாம் நெருங்கி வந்திருப்பதைக் கண்டார். 'அவர்கள் மட்டுமல்ல; அரண்மனை வாசற் காவலர்களும் வந்துவிட்டார்கள். இன்னும் தூரத்திலே நின்ற வேளக்காரப் படையினரிலும் சிலர் பிரிந்து வந்து கொண்டிருந்தார்கள்.

அருகில் வந்துவிட்டவர்கள் அனைவரும் பொன்னியின் செல்வரைக் கண்கொட்டாத ஆரவாரத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சின்னப் பழுவேட்டரையர் திரும்பிப் பார்த்த நேரத்தில் இளவரசரின் திருமுகத்தில் விளக்கு வெளிச்சம் நன்றாக விழுந்து மிகப் பிரகாசமாகத் தெரிந்தது.

வீரர்களில் ஒருவன் "வாழ்க இளவரசர்!" என்றான். "வாழ்க பொன்னியின் செல்வர்!" என்றான் இன்னொருவன். "மகிந்தனைப் புறங்கண்டு ஈழம்கொண்ட வீராதி வீரர் வாழ்க!" என்றான் மற்றொருவன்.

இந்தக் குரல்களைக் கேட்டவுடன் வேளக்காரப் படையினர் அனைவரும் அங்கு விரைந்து வரத் தொடங்கினார்கள். பற்பல குரல்களிலிருந்து "வாழ்க பொன்னியின் செல்வர்!" என்ற வாழ்த்தொலிகள் எழுந்தன.

அரண்மனை வாசலான படியாலும், சின்னப் பழுவேட்டரையர் அங்கிருந்தபடியாலும் அந்த ஒலி மிக மெல்லியதாகத் தான் அப்போது எழுந்தது. இளந்தென்றல் காற்று புதிதாகத் தளிர்த்த அரசமரத்தின் மீது அடிக்குங்கால் ஏற்படும் 'சல சலப்பு'ச் சத்தத்தைப் போலத்தான் கேட்டது. நேரமாக ஆக, நாள் ஆக ஆக, அந்த மெல்லிய ஒலி எப்படி வளர்ந்து வளர்ந்து பெரிதாகி மகா சமுத்திரத்தின் ஆயிரமாயிரம் அலைகளின் ஆரவாரத்தையும் மிஞ்சிய மாபெரும் கோஷமாயிற்று என்பதைப் பின்வரும் அத்தியாயங்களில் பார்ப்போம்.

"தளபதி! நாம் இங்கே நின்று பேசியது தவறாகப் போயிற்று. அரண்மனைக்குள்ளே பிரவேசிக்கும் வரையில் நான் என்னைத் தெரியப்படுத்திக்கொள்ள விரும்பாததின் காரணம் இப்போது தெரிகிறது அல்லவா?" என்று இளவரசர் கேட்டார்.

"தெரிகிறது, அரசே! நான் இவர்களுக்குச் சமாதானம் சொல்லிவிட்டு வருகிறேன். தாங்கள் தயவு செய்து விரைந்து உள்ளே செல்லுங்கள்!" என்றார் காலாந்தக கண்டர்.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
தியாக சிகரம் - அத்தியாயம் 29

சந்தேக விபரீதம்

பொன்னியின் செல்வர் அரண்மனைக்கு உள்ளே சென்ற பிறகு, காலாந்தக கண்டர் அரண்மனை வாசலில் வந்து சேர்ந்து கொண்டிருந்த வேளக்காரப்படை வீரர்களை நெருங்கினார்.

"இது என்ன கூச்சல்? அரண்மனைக்குள்ளே சக்கரவர்த்தி நோயுடன் படுத்திருப்பது உங்களுக்குத் தெரியாதா? கோட்டையைச் சுற்றிப் பகைவர் படை சூழ்ந்திருப்பது தெரியாதா?" என்று கடுமை தொனிக்கும் குரலில் கேட்டார்.

வேளக்காரப் படையின் தலைவன், "ஐயா! கோட்டையைச் சூழ்ந்திருப்பவர்கள் பகைவர்கள் தானா? கொடும்பாளூர்ப் பெரிய வேளார் நமக்குப் பகைவர் ஆனது எப்படி?" என்று கேட்டான்.

சின்னப் பழுவேட்டரையர் பொங்கி வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு, "அதை அவரிடந்தான் கேட்க வேண்டும்; பகைவர் இல்லையென்றால், எதற்காகச் சைன்யத்துடன் வந்து கோட்டையை முற்றுகையிட்டிருக்கிறார்?" என்று கேட்டார்.

"சின்ன இளவரசரைச் சிம்மாசனத்தில் ஏற்றி முடிசூட்டுவதற்காக என்று கேள்விப்படுகிறோம்" என்றான் வேளக்காரப் படைத்தலைவன்.

"அது உங்களுக்கெல்லாம் சம்மதமா?" என்று சின்னப் பழுவேட்டரையர் கேட்டார்.

வேளக்காரப் படைத்தலைவன் தன் வீரர்களைத் திரும்பிப் பார்த்து, "நீங்களே சொல்லுங்கள்!" என்றான்.

வீரர்கள் உடனே "சம்மதம்! சம்மதம்! பொன்னியின் செல்வர் வாழ்க! ஈழங்கொண்ட இளவரசர் வாழ்க!" என்று கோஷித்தார்கள்.

இம்முறை அந்தக் கோஷம் முன்னைவிட அதிக வலுவுடையதாயிருந்தது.

சின்னப் பழுவேட்டரையரின் முகம் சிவந்தது; மீசை துடித்தது. ஆயினும் பல்லைக் கடித்துக் கொண்டு, "முடி சூட்டுவது பெரிய வேளாரின் இஷ்டத்தைப் பொறுத்ததா? அல்லது உங்கள் விருப்பத்தைப் பொறுத்ததா? சக்கரவர்த்தியின் விருப்பத்துக்கு மதிப்பு ஒன்றும் இல்லையா?" என்று கேட்டார்.

வீரர்களில் ஒருவன், "தளபதி! சக்கரவர்த்தி சௌக்கியமாயிருக்கிறாரா! நிச்சயந்தானா!" என்று கேட்டான்.

"இது என்ன கேள்வி?" என்று காலாந்தகர் சீறினார்.

"சக்கரவர்த்தியைப் பற்றி ஊரில் ஏதேதோ வதந்தி பரவியிருக்கிறது. நாங்களும் அவரை இன்று பார்க்க முடியவில்லை! அதனால் அவருடைய சுகத்தைப் பற்றி எல்லாரும் மிக்க கவலை அடைந்திருக்கிறோம்!" என்று வேளக்காரப்படை வீரர்களின் தலைவன் கூறினான்.

"சக்கரவர்த்தியை நீங்கள் பார்க்க முடியாத காரணம் முன்னமே நான் சொல்லவில்லையா? சக்கரவர்த்தியின் மனக்குழப்பம் இன்று அதிகமாயிருந்தது. யாரையும் பார்ப்பதற்கு அவர் விரும்பவில்லை. சபாமண்டபத்திற்கு வருவதற்கும் மறுத்துவிட்டார்..."

"சக்கரவர்த்தியின் மனக்குழப்பத்திற்குக் காரணம் என்ன? ஏன் எங்களுக்குத் தரிசனம் அளிப்பதற்கு மறுக்க வேண்டும்? நாங்கள் அதையாவது தெரிந்து கொள்ளலாம் அல்லவா?"

"நல்லது; சொல்லுகிறேன்; ஈழத்துக்குச் சென்றிருந்த இளவரசரைப் பற்றி ஒன்றும் தெரியாமலிருந்ததுதான் சக்கரவர்த்தியின் கவலை அதிகமானதற்குக் காரணம். இப்போது இளவரசரே வந்து விட்டபடியால்..."

"இளவரசரை நாங்கள் பார்க்கவேண்டும். நன்றாக வெளிச்சத்தில் பார்க்கவேண்டும்!" என்று அந்தப் படையினரில் ஒரு வீரன் கூறினான்.

"ஆமாம்; பார்க்க வேண்டும்! ஈழங்கொண்ட இளவரசர் வாழ்க!" என்று எல்லாரும் சேர்ந்து கூவினார்கள்.

"இளவரசர் முதலில் சக்கரவர்த்தியைத் தரிசிக்க வேண்டும். அல்லவா? பிறகு இஷ்டப்பட்டால் உங்களையும் வந்து பார்ப்பார்!"

"நிச்சயந்தானா? ஒருவேளை பாதாளச் சிறைக்கு அனுப்பப்படுவாரா?"

வேறொரு நாளாக, வேறொரு சந்தர்ப்பமாக இருந்தால், வேளக்காரப் படையினர் இவ்வளவு துடுக்காகப் பேசியதற்குச் சின்னப் பழுவேட்டரையரின் வீரர்கள் அவர்கள் மீது போர் தொடுத்திருப்பார்கள். பெரிய ரகளையாகப் போயிருக்கும். ஆனால் இளவரசரின் திருமுகத்தைச் சற்றுமுன் பார்த்த காரணத்தினாலோ, என்னமோ, காலாந்தக கண்டரின் வீரர்களும் மௌனமாக நின்று கொண்டிருந்தார்கள். சின்னப் பழுவேட்டரையருடைய கை அவருடைய உடைவாளை நாடியது. மேற்கண்டவாறு கேட்ட வீரனை ஒரே வெட்டில் வெட்டிக் கொன்றுவிட வேண்டுமென்று ஒரு கணம் எண்ணினார். உடனே அந்தக் கோபத்தைச் சமாளித்துக் கொண்டு உரத்துச் சிரித்தார்.

"இவன் கேட்ட கேள்வி உங்கள் காதிலெல்லாம் விழுந்ததல்லவா? இளவரசர் பாதாளச் சிறைக்கு அனுப்பப்படுவாரா என்று கேட்கிறான். நல்லது; இளவரசரைச் சிங்காதனத்தில் ஏற்றி முடிசூட்டுவதோ, பாதாளச் சிறைக்கு அனுப்புவதோ என்னுடைய அதிகாரத்தில் இல்லை, சக்கரவர்த்தியின் விருப்பத்தின்படி நடக்கும். இளவரசரைப் பாதாளச் சிறைக்குக் கொண்டு போவதாயிருந்தாலும், இந்த வழியே தான் கொண்டு போக வேண்டும். அப்போது நீங்கள் அவரைப் பார்த்துக் கொள்ளலாம்!" என்று காலாந்த கண்டர் கண்களில் கனல் பறக்கக் கூறிவிட்டு, அரண்மனைப் பக்கம் திரும்பினார். வீரர்கள் மீண்டும் கோஷமிட்டதையும் பொருட்படுத்தாமல் அரண்மனை முன் வாசலை நோக்கிச் சென்றார்.

அங்கே வாசற்படிக்கு அருகில் பூங்குழலி தன்னந்தனியாக நின்று கொண்டிருப்பதைக் கண்டார். "பெண்ணே! நீ ஏன் இங்கே நின்று கொண்டிருக்கிறாய்? உன்னை உள்ளே வர வேண்டாம் என்று தடுத்து விட்டார்களா?" என்று கேட்டார்.

"என்னை யாரும் தடுக்கவில்லை. நானாகவே நின்று விட்டேன் ஐயா!" என்றாள் பூங்குழலி.

"ஏன்?"

"வெகுநாட்களாகப் பிரிந்திருந்த தந்தையும் மகனும் சந்திக்கும் வேளையில் எனக்கு என்ன அங்கே வேலை?"

"போகட்டும்; நீயாவது சக்கரவர்த்தி உயிரோடு இருக்கிறார் என்று நம்புகிறாயே? அந்த மட்டில் சந்தோஷம்!"

"நம்புவது மட்டுமில்லை, சக்கரவர்த்தி சௌக்கியமாயிருப்பதைக் கண்ணாலேயே பார்த்துவிட்டுத் தான் திரும்பி வந்தேன்."

"அதோ நிற்கிறார்களே, அந்த வேளக்காரப் படையினரிடம் நீ பார்த்ததைச் சொல்! அவர்கள் சந்தேகப்படுவதாகத் தோன்றுகிறது!" என்றார்.

"அவர்களுடைய சந்தேகத்துக்கு இந்த நிமிஷம் வரையில் ஆதாரம் இல்லை. அடுத்த நிமிஷம் அது உண்மையாகாது என்று யார் சொல்ல முடியும்?"

"பெண்ணே! நீயும் சேர்ந்து என்னைக் கலவரப்படுத்தப் பார்க்கிறாயா? உங்கள் எல்லாருக்கும் பைத்தியம் பிடித்து விட்டதா?" என்று கேட்டார்.

"தளபதி! என்னைப் பலர் 'பைத்தியம்' என்று சொல்லுவதுண்டு. நானே என்னைப் 'பைத்தியம்' என்று சொல்லிக் கொள்வதுமுண்டு. ஆனால் இந்தப் பைத்தியத்தின் யோசனையைக் கேட்டபடியினால்தான் இன்று இளவரசர் இந்தக் கோட்டைக்குள் அபாயம் இன்றிப் புக முடிந்தது. சக்கரவர்த்தி உயிரோடிருக்கும்போதே அவரைச் சந்திக்கவும் முடிந்தது..."

"ஆகா! இது என்ன? சக்கரவர்த்தியின் உயிருக்கு நீயும் கெடு வைக்கிறாய் போலிருக்கிறதே! மூட ஜனங்களும் முட்டாள் ஜோசியர்களும் உளறுவதைக் கேட்டு நீயும் பிதற்றுகிறாயா? அல்லது உனக்கு வேறு ஏதேனும் தெரியுமா?"

"ஜனங்களும் ஜோதிடர்களும் மட்டுந்தானா கெடு வைக்கிறார்கள்? தங்கள் தமையனார் சொல்லி அனுப்பிய செய்தியைச் சற்று முன் கேட்டீர்களே?"

"அது உண்மை என்பது என்ன நிச்சயம்?" என்றார் காலாந்தக கண்டர்.

"தளபதி! கொடும்பாளூர் இளவரசி எதற்காகப் பொய் சொல்ல வேண்டும்?"

"யார் கண்டது? அடுத்தாற்போல் சிங்காதனம் ஏறிப் பட்டமகிஷியாகும் ஆசையிருக்கலாம்.."

"தளபதி! நானும் அப்படித்தான் எண்ணியிருந்தேன். இளவரசி இன்று காலையில் செய்த சபதத்தைக் கேட்ட பிறகு என் எண்ணத்தை மாற்றிக் கொண்டேன்" என்றாள் பூங்குழலி.

"பெண்ணே! ஒருவேளை உனக்கே அத்தகைய ஆசை இருக்கிறதா, என்ன?" என்று கேட்டுவிட்டுச் சின்னப் பழுவேட்டரையர் இலேசாக நகைத்தார்.

"தளபதி! உண்மையில் நான் பைத்தியக்காரிதான்! தங்களிடம் பேச நின்றேன் அல்லவா?" என்று கூறிவிட்டுப் பூங்குழலி திரும்பிப் போக யத்தனித்தாள்.

காலாந்தக கண்டரிடம் உடனே ஒரு மாறுதல் காணப்பட்டது. "பெண்ணே, கோபித்துக் கொள்ளாதே! நீ சொல்ல வந்ததைச் சொல்லிவிட்டுப் போ!" என்றார்.

பூங்குழலி மறுபடியும் திரும்பி, "ஆம், சொல்லத்தான் வேண்டும். இல்லாவிடில் பின்னால் நானும் வருத்தப்படுவேன்; தாங்களும் வருந்தும்படி நேரிடும். ஐயா! சக்கரவர்த்தியின் உயிருக்கு ஏதாவது அபாயம் நேர்ந்தால், நாடு நகரமெல்லாம் தங்கள் பேரிலேதான் பழி சொல்லும். தங்களுடைய வீரர்களே கூடச் சொல்லுவார்கள்!" என்றாள்.

சின்னப் பழுவேட்டரையரின் முகம் சுருங்கிற்று. "அப்படி ஏதாவது நேர்ந்துவிட்டால் மற்றவர்கள் பழி சொல்லும் வரையில் காத்திருக்க மாட்டேன். பழிச்சொல் காதில் விழுவதற்குள்ளே என் உயிர் பிரிந்துவிடும்! இந்த வேளக்காரப் படையினர் துர்க்கா பரமேசுவரி கோவிலில் சத்தியம் செய்தபோது, எல்லாருக்கும் முதலில் சத்தியம் செய்து வழிகாட்டியவன் நான்!" என்றார்.

"அதில் என்ன பயன்? சோழ ராஜ்யம் சக்கரவர்த்தியையும் இழந்து, ஒரு மகா வீரரையும் இழந்து விடும்! அதைக் காட்டிலும் முன் ஜாக்கிரதையாக இருப்பது நல்லதல்லவா?"

"பெண்ணே! நான் முன் ஜாக்கிரதையாக இல்லை என்றா சொல்லுகிறாய்? இதோ இந்த அரண்மனையைச் சுற்றி இவ்வளவு வீரர்கள் கண் கொட்டாமல் நின்று காத்து வருகிறார்களே! எதற்காக? முதன் மந்திரி அநிருத்தர்கூட நான் அறியாமல் அரண்மனைக்குள்ளே போகமுடியாது! தெரியுமா?"

"தெரியும், தளபதி! ஆனால் அரண்மனைக்குள்ளேயிருந்தும், அபாயம் வரலாம் அல்லவா?"

"என்ன பிதற்றல்? அரண்மனைப் பெண்கள் சக்கரவர்த்திக்கு விஷங்கொடுத்துக் கொன்றுவிடுவார்கள் என்று சொல்லுகிறாயா?... அல்லது ஒருவேளை இப்போது இளவரசருடன் உள்ளே போனாளே, அந்தக் கொடும்பாளூர்ப் பெண்ணின் பேரில் சந்தேகப்படுகிறாயா?" என்றார்.

"தெய்வமே! அந்தச் சாதுப் பெண்ணின் பேரில் சந்தேகப்படுகிறவர்களுக்கு நல்ல கதி கிடைக்காது. அவளுக்கு அவ்வளவு சாமர்த்தியமும் இல்லை. ஐயா! இந்த அரண்மனைக்குள் வருவதற்குச் சுரங்கபாதை ஒன்று இருக்கிறதல்லவா?..."

சின்னப் பழுவேட்டரையர் திடுக்கிட்டு, "பெண்ணே! அதைப் பற்றி உனக்கு என்ன தெரியும்? எப்படித் தெரியும்? மூன்று நாலு பேரைத் தவிர அந்தப் பாதையைப் பற்றி யாருக்கும் தெரியாதே! தெரிந்தவர்கள் உயிரோடு திரும்பிப் போக முடியாதே?" என்று பரபரப்புடன் கேட்டார்.

"தளபதி! அதைப்பற்றி இன்று அதிகாலையிலேதான் நான் தெரிந்துகொண்டேன். அங்கே கையில் கூரிய எறிவேலுடன் பாண்டிய நாட்டுச் சதிகாரன் ஒருவன் ஒளிந்து கொண்டிருப்பதையும் பார்த்தேன்..."

"கடவுளே! இது என்ன பயங்கரமான வார்த்தை சொல்லுகிறாய்?... அந்த பாதை... அந்தப் பாதை... எங்கே போய் முடிகிறது என்று தெரியுமா?"

"பொக்கிஷ நிலவறை வழியாகப் போகிறது!" என்றாள் பூங்குழலி. "ஆகா! நீ சொல்லுவது உண்மையாக இருக்கலாம். மனிதப் பெண் உருக்கொண்ட அந்த மாய மோகினியின் வேலைதான் இது! என் தமையனை அடிமை கொண்ட பெண் பேயின் வேலைதான் இது. ஐயோ! எத்தனை தடவை நான் எச்சரித்தேன்? பெண்ணே! நீ சொல்லுவது சத்தியமா? நீயே பார்த்தாயா? அந்தப் பாதை இருக்குமிடம் உனக்கு எப்படித் தெரிந்தது?...

"என் அத்தை இன்று காலையில் அழைத்துப் போனபோது தெரிந்தது..."

"அவள் யார் உன் அத்தை?"

"முதன் மந்திரியின் கட்டளையின் பேரில் தாங்கள் அனுப்பிய பல்லக்கில் கோடிக்கரையிலிருந்து கொண்டுவரப் பட்டவள்தான், ஐயா! நாம் இதைப்பற்றி மேலும் இங்கே பேசிக் கொண்டேயிருக்கும்போது..."

"உண்மைதான்! நான் உடனே பெரிய பழுவூர் அரண்மனைக்குப் போய் வேண்டிய ஏற்பாடு செய்துவிட்டு வருகிறேன். அதற்குள் நீ..."

"நான் இந்தப் பக்கத்து முனையில் நின்று பார்த்துக் கொள்கிறேன்..."

"ஆகா! உன்னை நான் எப்படி நம்புவது? நீ அந்தப் பாண்டிய நாட்டுத் சதிகாரர்களுக்கு உடந்தையானவள் இல்லை என்பது என்ன நிச்சயம்? என்னைப் போக்குக் காட்டி ஏமாற்றி விட்டு..."

"தளபதி, அப்படியானால் என்னுடன் தாங்களும் வாருங்கள்! ஒரு தீவர்த்தி எடுத்துக்கொண்டு வாருங்கள்! இரண்டு பேருமாகப் போய்ப் பார்ப்போம்! போகும்போது எனக்குத் தெரிந்த மற்ற விவரங்களையும் சொல்கிறேன்..."

சின்னப் பழுவேட்டரையர் உடனே வாசற்பக்கம் சென்ற தமது வீரர்களில் சிலரை அழைத்து அவர்களிடம் ஏதோ சொன்னார். அவர்கள் பழுவூர் அரண்மனைக்குப் போகிறார்கள் என்று பூங்குழலி ஊகித்துக் கொண்டாள். வீரர்களில் ஒருவன் கையில் பிடித்திருந்த தீவர்த்தியைக் கோட்டைத் தளபதி வாங்கிக் கொண்டு வந்தார்.

"பெண்ணே! வழிகாட்டிச் செல்! நீ சொன்னதெல்லாம் உண்மைதானா என்று பார்த்து விடுகிறேன்" என்றார் காலாந்தககண்டர்.

அப்போதும் அவர் மனத்தில் பூங்குழலியைப் பற்றிச் சந்தேகம் தீரவில்லை. இந்தப் பெண் பொய்யும் புனைசுருட்டும் சொல்லித் தன்னை ஏமாற்றப் பார்க்கிறாளோ, என்னமோ! சுரங்கப் பாதையைப் பற்றித் தன் மூலமாக அறிந்துகொள்ள விரும்புகிறாளோ, என்னமோ? அதன் வழியாகக் கொடும்பாளூர் ஆட்களைக் கோட்டைக்குள் விடுவதற்கு இது ஒரு சூழ்ச்சியோ என்னமோ!... அப்படியெல்லாம் தன்னை எளிதில் ஏமாற்றிவிட முடியாது இவள் அத்தகைய உத்தேசத்துடன் தன்னை அழைத்துப் போனால் இவளுக்குச் சரியான தண்டனை விதிக்க வேண்டும். பெரிய பழுவேட்டரையரைப்போல் நான்கூட ஏமாந்து விடுவேனா, என்ன? எல்லாவற்றுக்கும் இவள் முன்னால் போகட்டும், சுரங்கப்பாதை இவளுக்குத் தெரியும் என்பது உண்மைதானா என்று முதலில் தெரிந்து கொள்ளலாம். பிறகு அங்கே சதிகாரர்கள் ஒளிந்திருப்பது உண்மைதானா என்று அறியலாம். அது உண்மையாயிருந்தால், கடவுளே! எத்தகைய ஆபத்து! நல்ல வேளையாக அதைத் தடுப்பதில் கஷ்டம் ஒன்றுமில்லை. பொந்தில் ஒளிந்திருக்கும் நரியைப் பிடிப்பதுபோல் பிடித்துக் கொன்று விடலாம்!..

இவ்வாறு எண்ணமிட்டுக் கொண்டு சின்னப் பழுவேட்டரையர் பூங்குழலிக்குப் பின்னால் நடந்தார். அவளுடைய நடையில் இருந்த வேகத்தைக் குறித்து அதிசயப்பட்டார்.

ஆம்; பூங்குழலியின் உள்ளப் பரபரப்பு அப்போது உச்ச நிலையை அடைந்திருந்தது. அதற்குத் தகுந்தாற்போல் அவளுடைய நடையும் துரிதமாயிருந்தது.

பூங்குழலியின் வாழ்க்கையில் சில காலமாகவே அபூர்வமான சம்பவங்கள் நடந்து கொண்டிருந்தன. ஆனால் அன்றைக்கு நிகழ்ந்தவை போல் அதற்கு முன் என்றும் நடந்ததில்லை. அதிகாலையில் அவளைத் தூக்கத்திலிருந்து அத்தை தொட்டு எழுப்பினாள். அவர்கள் படுத்திருந்த அந்தப்புரத்தின் மேல் மச்சுப் பலகணியில் கோரமான முகம் ஒன்று தெரிந்தது; உடனே அது மறைந்தது. மந்தாகினி சத்தம் செய்யாமல் எழுந்து பூங்குழலியையும் அழைத்துக்கொண்டு மூடிக்கிடந்த சிற்ப மண்டபத்துக்குள்ளே சென்றாள். மேல் மச்சுப் பலகணியில் பார்த்த அதே பயங்கரமான முகம் இராவணனுடைய தலைகளுக்கும், அவன் கைகளினால் தாங்கிக்கொண்டிருந்த கைலையங்கிரிக்கும் நடுவில் ஒரு கணம் தெரிந்து மறைந்தது. இருவரும் அச்சிலையின் அருகில் சென்று பார்த்தார்கள். இராவணன் தலைகளுக்கு இடையே சுரங்க வழி ஒன்று ஆரம்பமாகிச் செல்கிறது என்று பூங்குழலி அறிந்தாள். மந்தாகினி முதலிலும், பூங்குழலி அவளைத் தொடர்ந்தும் அச்சுரங்கப் பாதையில் இறங்கிச் சென்றார்கள். பூங்குழலிக்கு முதலில் கண்ணே தெரியவில்லை. அத்தகைய அந்தகாரம் சுரங்கப் பாதையில் குடிகொண்டிருந்தது. அத்தையின் கையைப் பிடித்துக் கொண்டு தட்டுத் தடுமாறித்தான் போனாள். பாதையிலிருந்து சில படிகள் ஏறியதும் ஒரு மண்டபத்துக்குள் இருவரும் வந்து விட்டதாகத் தோன்றியது. அங்கேயும் இருளடர்ந்து தானிருந்தது. கையினால் தடவிப் பார்த்துக் கொண்டு தூண்களிலும், சுவர்களிலும் முட்டிக்கொள்ளாமல் போவதே கஷ்டமாயிருந்தது. சிறிது நேரத்துக்கெல்லாம் மேலே எங்கிருந்தோ சிறிய பலகணிகளின் வழியாகச் சொற்ப வெளிச்சம் வரத் தொடங்கியதும், பொழுது நன்றாய்ப் புலர்ந்திருக்கவேண்டும் என்று பூங்குழலி ஊகித்தாள். அத்துடன் அவர்கள் சுற்றி அலைந்து கொண்டிருப்பது பொக்கிஷ நிலவறை என்பதையும் தெரிந்து கொண்டாள். ஆனால் மந்தாகினி அத்தை எந்த மனிதனைத் தேடிக்கொண்டு வந்தாளோ, அவன் அகப்படுவான் என்று தோன்றவில்லை. இருள் சூழ்ந்த அந்த நிலவறையில் ஒளிந்து கொள்வதற்கு எத்தனையோ இடங்கள். அவன் எங்கே ஒளிந்திருக்கிறானோ, என்னமோ? நாம் அவனைக் கண்டுபிடிப்பதற்கு முன்னால், அவன் நம்மைக் கண்டுபிடித்துப் பின்புறமாக வந்து குத்திக் கொன்றாலும் கொன்றுவிடலாம்; இந்த நிலவறையில் கேள்வி முறை ஒன்றும் இராது.

பூங்குழலி இப்படி எண்ணமிட்டுக் கொண்டிருந்தபோது மந்தாகினி அவளுடைய அபூர்வமான குரலில், - மானிடக்குரல் என்றோ, பிராணியின் குரல் என்றோ கண்டுபிடிக்க முடியாத குரலில், - கூச்சலிட்டாள். அதைத் தொடர்ந்து பீதி நிறைந்த ஒரு மனிதக் குரல் ஓலமிட்டது. நிழல் போன்ற உருவம் ஒன்று தடதடவென்று ஓடியது. பலகணியில் முகத்தைக் காட்டிய மனிதனாகத்தான இருக்கவேண்டும் என்று பூங்குழலி தீர்மானித்துக்கொண்டாள். அத்தையின் குரலைக் கேட்டு அவன் பேயோ, பிசாசோ என்று பயந்து ஓடுகிறான் என்று பூங்குழலி அறிந்தாள். இந்த எண்ணம் அவளுக்குச் சிரிப்பை உண்டாக்கியது. சிறிது நேரத்துக்கு ஒரு முறை மீண்டும் மந்தாகினி அத்தை அந்த மாதிரி குரல் கொடுத்து அம்மனிதனை அங்குமிங்கும் தெறிகெட்டு ஓடி அலையும்படி செய்தாள். கடைசியாக அவள் ஓடிப்போய் மரக்கதவு ஒன்றில் மோதிக் கொண்டான். பிறகு, அக்கதவை தடதடவென்று தட்டினான். விட்டுவிட்டு நாலைந்து தடவை தட்டினான். பின்னர் கதவு திறந்தது. திறந்த இடத்தில் பெண் ஒருத்தி நிற்பது தெரிந்தது. அவளிடம் அம்மனிதன் ஏதோ கூறினான். அந்தப் பெண் சிறிது தயங்கியதாகவும், அம்மனிதன் அவளை பயமுறுத்தியதாகவும் தோன்றியது. பிறகு அவள் திரும்பிப் போனாள். மனிதன் கதவினருகிலேயே நின்று எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தான். சற்று நேரத்துக்கெல்லாம் அந்தப் பெண் கையில் ஒரு விளக்குடன் வந்து சேர்ந்தாள். இருவரும் நிலவறைக்குள் நுழைந்தார்கள். மந்தாகினி, பூங்குழலியின் கையைப்பிடித்து அழைத்துச் சென்று ஒரு பெரிய தூணின் மறைவில் நின்று கொண்டாள். விளக்கு வெளிச்சத்தில் அந்த மனிதனுடைய முகத்தோற்றத்தை அவர்கள் நன்றாகப் பார்த்துக் கொண்டார்கள்.

அந்த மனிதனும் விளக்குக்கொண்டு வந்த பெண்ணும் நிலவறையின் உட்பகுதிக்குச் சென்றார்கள். "பேயாவது? பிசாசாவது? நன்றாகப் பீதி அடைந்து போயிருக்கிறாய்! இவ்வளவு பயந்தவன் இந்தமாதிரி காரியத்துக்கு ஏன் வரவேண்டும்?" என்று அந்தப் பெண் கேட்டது பூங்குழலியின் காதில் நன்றாக விழுந்தது. 'எந்த மாதிரி காரியம்' என்பது அவ்வளவு நன்றாகப் பூங்குழலிக்கு விளங்கவில்லை.

நிலவறைக்குள்ளே விளக்குடன் அவர்கள் மறைந்ததும் மந்தாகினி பூங்குழலியைக் கையைப் பிடித்துக் கரகரவென்று இழுத்துக் கொண்டு போய்த் திறந்திருந்த கதவின் வழியாக வெளியேறினாள். நடை பாதையைக் குறுக்கே நடந்து கடந்து ஒரு பெரிய தோட்டத்துக்குள் அவர்கள் பிரவேசித்தார்கள். அங்கே ஏகாந்தமான ஓரிடத்தில் மந்தாகினி பூங்குழலியிடம்தான் சொல்ல வேண்டியதைச் சமிக்ஞை பாஷையினால் தெரிவித்தாள். "என்னுடைய அந்தியகாலம் நெருங்கிவிட்டது. நான் கடைசியாகக் கண்ணை மூடுவதற்குள்ளே இளவரசனை ஒருமுறை பார்க்கவேண்டும். நீ போய் இச்செய்தியைச் சொல்லி அவனைக் கையோடு அழைத்து வர வேண்டும்" என்பதுதான் அச்செய்தி.

பூங்குழலி அவளுடைய அத்தையிடம் கொண்டிருந்த அன்பு நாம் நன்கு அறிந்ததே, அம்மாதிரி சமயத்தில் அவளை விட்டு விட்டுப்போகவும் பூங்குழலிக்கு மனம் வரவில்லை; அவள் வார்த்தையைத் தட்டவும் இயலவில்லை. எனினும், அதே சமயத்தில் பொன்னியின் செல்வரைப் பார்ப்பதற்கு இது ஒரு சந்தர்ப்பம் என்னும் எண்ணம் அவளை உடனே முடிவுக்கு வரும்படி செய்தது. அத்தையிடம் விடை பெற்றுக் கொண்டு சென்றாள். தோட்டத்தின் மதிள் ஏறிக் குதித்து அப்பால் சென்று தஞ்சை நகரின் கோட்டை வாசலையும் கடந்தாள். அங்கே ஆழ்வார்க்கடியானைச் சந்தித்தாள். அவனும் முதன் மந்திரியின் ஆக்ஞையினால் பொன்னியின் செல்வரைப் பார்ப்பதற்கே போவதாக அறிந்தாள். அந்த வீர வைஷ்ணவனுடைய உதவியினால் அவளுடைய பிரயாணமும் சௌகரியமாக நடந்தது.

அன்றைக்கு அதிர்ஷ்டம் நெடுகிலும் அவள் பக்கம் இருந்தது. குடந்தை ஜோதிடர் வீட்டின் வாசலில் இளைய பிராட்டியின் ரதத்தை அவர்கள் கண்டார்கள். இளவரசரைப் பற்றிக் குந்தவை தேவிக்கு ஏதேனும் செய்தி தெரிந்திருக்கலாம் என்று எண்ணி விசாரிப்பதற்காக ஜோதிடர் வீட்டில் நுழைந்தார்கள். அங்கே பெரிய பழுவேட்டரையரின் வாய் மொழியினால் பாண்டிய நாட்டுச் சதிகாரர்களைப்பற்றி அறிய நேர்ந்தது. பொக்கிஷ நிலவறையில், ஒளிந்திருந்தவன் அந்தச் சதிகாரர்களில் ஒருவன்தான் என்பதைப் பூங்குழலி நிச்சயித்துக் கொண்டாள். அதே சமயத்தில், இளவரசருக்கும் சதிகாரர்களினால் அபாயம் ஏற்படலாம் என்று அந்த வேதனைக்கு ஒரு பரிகாரமாயிருந்தது. இளவரசி வானதியைக் காப்பாற்றப்போன இடத்தில் இளவரசரையும் சந்திக்கலாயிற்று.

எல்லாவற்றையும்விட அவளுக்குத் திருப்தி அளித்த காரியம். தஞ்சாவூருக்குப் போவது பற்றி அவளுடைய யோசனையை இளவரசர் ஏற்றுக் கொண்டது தான். இலங்கையில் தம்மைத் தெரியப்படுத்திக் கொள்ளாமல் யானைப்பாகனைப் போல் அவர் யாத்திரை செய்வதுண்டு என்பதை அவள் அறிந்திருந்தாள், அங்கே சேநாதிபதியையும் படைவீரர்களையும் அவர் பிரிந்து தன்னை மட்டும் யானை மேல் ஏற்றிக்கொண்டு கடற்கரைக்கு விரைந்து வந்ததையும் அவள் மறந்துவிடவில்லை. எனவே இச்சமயமும், இளவரசர் அதே முறையைக் கடைப்பிடித்தால் நல்லது என்றும், அவர் தனியாகப் போனால் தஞ்சைக் கோட்டைக்குள் போக இயலாது என்றும், தன்னையும் வானதியையும் அழைத்துப் போனால் யானைப்பாகன் என்று எண்ணி விட்டுவிடுவார்கள் என்றும் சொன்னாள்.

"சமுத்திர குமாரி! நல்ல யோசனை சொன்னாய். ஒரு பெரிய ராஜ்யத்துக்கு முதன் மந்திரியாக இருக்க நீ தகுந்தவள்!" என்று இளவரசர் கூறிய மொழிகளை நினைத்து நினைத்து அவள் உள்ளம் பூரித்தது.

ஆனால், இவ்விதம் அந்த நிமிஷம் வரையில் அவள் நினைத்தபடியே எல்லாம் நடந்திருந்தும் என்ன உபயோகம்? அவள் எதிர்பார்த்தபடி மந்தாகினி அத்தை சக்கரவர்த்தி படுத்திருந்த அறையில் இல்லை! அவளைப் பற்றி அங்கே யாரிடமும் விசாரிக்கவும் கூடவில்லை. "என்னுடைய இறுதிக் காலம் நெருங்கி விட்டது" என்று அத்தை சமிக்ஞையினால் அறிவித்ததை எண்ணிய போதெல்லாம் பூங்குழலியின் நெஞ்சு 'பகீர்' என்றது. 'இவ்வளவு சிரமம் எடுத்துச் சாதுர்யமாகப் பேசி இளவரசரை இங்கே அழைத்து வந்திருந்து என்ன பயன்? அத்தையைக் காணவில்லையே' அவள் நெஞ்சு துடிதுடித்தது. நிலவறையிலேயே இன்னும் இருக்கிறாளோ என்று தோன்றியது. ஒருவேளை அந்தப் பாதகச் சதிகாரனால் அங்கேயே கொல்லப்பட்டிருப்பாளோ என்று எண்ணியபோது அவள் நெஞ்சு பிளந்தே போயிற்று.

சுரங்கப்பாதை வழியாக நிலவறைக்குள் போய்ப் பார்க்க விரும்பினாள். ஆனால் அரண்மனையில் அப்போது இளவரசரின் வரவு காரணமாக ஒரே கோலாகலமாயிருந்தது. குறுக்கும் நெடுக்குமாகப் பெண்கள் போவதும் வருவதுமாயிருந்தார்கள். கூட்டம் கூட்டமாக வந்து சக்கரவர்த்தி படுத்திருந்த அறையை எட்டிப் பார்த்து விட்டுப்போன வண்ணமிருந்தார்கள். இதற்கிடையில் தான் மட்டும் அந்தப் பழைய சிற்ப மண்டபத்துக்குத் தனியாகப் போவதை யாராவது பார்த்தால் என்ன நினைத்துக் கொள்வார்கள்? அந்தச் சதிகாரன் ஒருவேளை இன்னமும் அங்கே இருந்தால், தான் அவனிடம் தனியாகப் போய் அகப்பட்டுக் கொள்வதும் உசிதமல்ல. எத்தனையோ நெஞ்சத்துணிவுள்ள பூங்குழலிக்கும் அந்த இருளடர்ந்த பொக்கிஷ நிலவறை சிறிது பயத்தை அளித்தது.

ஆகையினாலேயே சின்னப் பழுவேட்டரையரிடம் சொல்லி, அவரையும் அழைத்துக் கொண்டு போய் நிலவறையில் தேடிப் பார்க்கத் தீர்மானித்தாள். காலாந்தக கண்டரோடு வாதம் செய்து அவர் மனத்தைத் திருப்பி அழைத்துப் போவதற்குச் சிறிது அவகாசம் ஆகிவிட்டது. அதை நினைத்துத்தான் அவள் இப்போது மிக விரைவாக நடந்தாள். விரைவில் ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது என்று அவளுடைய உள்ளுணர்ச்சி கூறியது. அதனால் தனக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் பாதகமில்லை. அத்தைக்கு ஒன்றும் நேரக்கூடாதென்று மனப்பூர்வமாக விரும்பினாள்.

சிற்ப மண்டபத்துக்குள் பிரவேசிக்கும் சமயத்தில், அரண்மனை மாடத்திலிருந்து ஏதோ கரிய நிழல் விழுவது போலிருந்தது. சுவர் ஓரமாக ஓர் உருவம் போவது போலவுமிருந்தது. அவை உண்மையா அல்லது பிரமையா என்று பார்த்துத் தெளிவதற்காகச் சற்று நின்றாள்.

"பெண்ணே! ஏன் நிற்கிறாய்? பொய் வெளிப்பட்டு விடுமே என்று பயப்படுகிறாயா?" என்று சின்னப் பழுவேட்டரையர் கூறியது காதில் விழுந்ததும், மேலே விரைந்து நடந்தாள்.

சிற்ப மண்டபத்துக்குள் சென்றதும் இராவணன் தலைகளுக்கும், கைலையங்கிரிக்கும் நடுவில் இருந்த துவார வாசலைப் பூங்குழலி சின்னப் பழுவேட்டரையருக்குச் சுட்டிக் காட்டினாள்.

"சரிதான்! இறங்கு முதலில்!" என்றார் கோட்டைத் தளபதி.

ஏனோ பூங்குழலிக்குத் தயக்கம் உண்டாயிற்று. அவள் உடம்பு நடுங்கிற்று.

அதே சமயத்தில் 'கிறீச்' என்று அமானுஷியமான குரல் ஒன்று ஓலமிடும் சத்தம் கேட்டது. அது தன்னுடைய அத்தை மந்தாகினியின் குரல் என்பதை உடனே உணர்ந்து கொண்டாள். அந்த ஓலக்குரல் அரண்மனைக்குள்ளே சக்கரவர்த்தி படுத்திருக்கும் அறையிலிருந்து வருகிறது என்பதையும் அறிந்தாள். உடனே அவளுடைய தயக்கம் தீர்ந்துவிட்டது.

சின்னப் பழுவேட்டரையரைச் சிறிதும் பொருட்படுத்தாமல் அரண்மனை அந்தப்புரத்தை நோக்கி விரைந்து ஓடினாள். மீண்டும் அந்தப் பயங்கர ஓலக்குரல் கேட்டுக் கொண்டேயிருந்தது. சக்கரவர்த்தி படுத்திருந்த அறைக்குள் அவள் பிரவேசித்த போது, அங்கே தோன்றிய காட்சி அவள் உள்ளத்தில் ஒரு பெரிய சித்திரக் காட்சியைப் போல் பதிந்தது.

சக்கரவர்த்தி சாய்ந்து படுத்த வண்ணம் தமது அருமைக் குமாரன் அருள்மொழியின் கைகளைத் தமது கைகளால் பிடித்துக் கொண்டிருந்தார். அவர்கள் இருவருக்கும் முன்னால் மந்தாகினி அத்தை நின்று ஓலமிட்டாள். ஒரு பக்கத்தில் வானதியும், அவளை மருமகளாகப் பெறுவதற்கிருந்த மலையமான் மகளும் நின்று கொண்டிருந்தார்கள். எல்லாரும், வெறி கொண்டவள்போல் கூச்சலிட்ட மந்தாகினியைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

மேல் மண்டபத்தின் முகப்பிலிருந்து பாய்ந்து வந்த கூரிய வேலை அவர்களில் யாரும் கவனிக்கவில்லை.

பூங்குழலி தன் அத்தையை நோக்கி ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து சென்றாள்.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
தியாக சிகரம் - அத்தியாயம் 30

தெய்வம் ஆயினாள்!

பூங்குழலி எவ்வளவு விரைவாக ஓடக் கூடியவளானாலும், மேலிருந்து எறியப்பட்ட வேலுடன் போட்டியிட முடியாதல்லவா? அவள் மந்தாகினி அத்தையின் அருகில் பாய்ந்து செல்வதற்குள் வேல் அத்தையின் விலாவில் பாய்ந்துவிட்டது. 'வீல்' என்று மற்றொரு முறை பயங்கரமாக ஓலமிட்டு விட்டு மந்தாகினி கீழே விழுந்தாள். அதே சமயத்தில் அந்த அறையிலிருந்த அத்தனை பேருடைய குரல்களிலிருந்தும் பரிதாப ஒலிகள் கிளம்பின.

பூங்குழலியைப் போலவே மற்றவர்களும் தரையில் விழுந்த மாதரசியை நோக்கி ஓடிவர ஆயத்தமானார்கள். அச்சமயம் மேல் மாடத்திலிருந்து தடதடவென்று சத்தம் கேட்டது. சில மண் பாண்டங்கள் கீழ் நோக்கிப் பல திசைகளிலும் எறியப்பட்டன.

அவற்றில் ஒன்று சக்கரவர்த்தியின் அருகில் சுடர்விட்டுப் பிரகாசமாக எரிந்துகொண்டிருந்த தீபத்தின் பேரில் விழுந்தது; தீபம் அணைந்தது. அறையில் உடனே இருள் சூழ்ந்தது. பிறகு சிறிது நேரம் அந்த அந்தப்புர அறையிலும் அதைச் சுற்றியுள்ள நீண்ட தாழ்வாரங்களிலும் ஒரே குழப்பமாயிருந்தது. திடுதிடுவென்று மனிதர்கள் அங்குமிங்கும் வேகமாக ஓடும் காலடிச் சத்தங்கள் கேட்டன.

"விளக்கு! விளக்கு!" என்று சின்னப் பழுவேட்டரையர் கர்ஜனைக் குரல் அலறியது.

"ஆகா! ஐயோ!" என்று ஒரு பெண் குரல் அலறும் சத்தம் கேட்டது. அது மகாராணியின் குரல் போலிருக்கவே எல்லாருடைய நெஞ்சங்களும் திடுக்கிட்டு, உடல்கள் பதறின. இத்தனை குழப்பத்துக்கிடையே பூங்குழலி அவளுடைய அத்தை மந்தாகினி விழுந்த இடத்தைக் குறி வைத்து ஓடி அடைந்தாள். அத்தையை அவளுக்கு முன் யாரோ தூக்கி மடியின் மேல் போட்டுக் கொண்டிருப்பதை உணர்ந்தாள்.

இதயத்தைப் பிளக்கும்படியான சோகத் தொனியில் விம்மும் குரலும், அழுகைக் குரலும் சேர்ந்து அவள் காதில் விழுந்தன.

வாசற்படிக்கருகில் "யாரடா அவன்? ஓடாதே! நில்!" என்று சின்னப் பழுவேட்டரையர் கூச்சலிட்டார்.

ஓடியவன் யாராயிருக்குமென்று பூங்குழலி ஊகித்துக் கொண்டாள். அச்சமயம் இரண்டு தாதிப் பெண்கள் தீபங்களுடன் வந்து அந்த அறையில் பிரவேசித்தார்கள்.

தீப வெளிச்சத்தில் தோன்றிய காட்சி யாருமே எதிர்பார்க்க முடியாத அதிசயக் காட்சியாயிருந்தது. மூன்று வருஷங்களாகக் காலை ஊன்றி நடந்தறியாமலிருந்த சக்கரவர்த்தி, - கால்களின் சக்தியை அடியோடு இழந்து விட்டிருந்த சுந்தரசோழ மன்னன், - தாம் படுத்திருந்த கட்டிலிலிருந்து இறங்கி நடந்து வந்து, மந்தாகினியின் அருகில் உட்கார்ந்திருந்தார். அவர் அருகில் இளவரசரும் இருந்தார். மந்தாகினியின் விலாவில் ஒரு பக்கத்தில் பாய்ந்து இன்னொரு பக்கம் வெளி வந்திருந்த வேலின் முனையிலிருந்து இரத்தம் கசிந்து கொண்டிருந்தது. சக்கரவர்த்தி படுத்திருந்த கட்டிலின் அருகில் மலையமான் மகள் வானமாதேவி காணப்பட்டாள். அவளுக்கு அருகில் சக்கரவர்த்தி தலை வைத்துச் சாய்ந்திருந்த தலையணையில் ஒரு கூரிய கத்தி செருகப்பட்டிருந்தது.

விளக்கு வந்ததும் மகாராணி கட்டிலை வெறிக்கப் பார்த்துவிட்டு, கரை காணாத அதிசயம் ததும்பிய கண்களினால் சக்கரவர்த்தி கீழே உட்கார்ந்திருந்ததைப் பார்த்தாள். அப்போது பொன்னியின் செல்வர் மந்தாகினியின் தலையை மெள்ளத் தூக்கிச் சக்கரவர்த்தியின் மடியில் வைத்தார். இளவரசர் அருள்மொழிவர்மரின் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்து கொண்டிருந்தது. சக்கரவர்த்தியோ விம்மி விம்மி அழுது கொண்டிருந்தார்.

இவ்வளவையும் பூங்குழலி ஒரு கணநேரப் பார்வையில் பார்த்தாள். மறுகணத்திலேயே அங்கு நடந்த சம்பவங்களையெல்லாம் ஒருவாறு ஊகித்துத் தெரிந்து கொண்டாள். மேலேயிருந்து வேலை எறிந்தவன், அதை ஊமை ராணி தடைசெய்து விட்டதைக் கவனித்திருக்கிறான். உடனே மேலேயிருந்த தட்டு முட்டுச் சாமான்களை எடுத்தெறிந்து விளக்கை அணைத்து விட்டிருக்கிறான்.

அப்போது ஏற்பட்ட இருட்டில் கீழே குதித்து இறங்கிக் கட்டிலில் சக்கரவர்த்தி படுத்திருப்பதாக எண்ணிக் கத்தியினால் குத்திவிட்டு ஓடியிருக்கிறான். சக்கரவர்த்திக்கு ஆபத்து என்று அறிந்து கட்டிலின் அருகில் ஓடிய மகாராணியைத் தள்ளி விட்டுப் போயிருக்கிறான். அப்போதுதான் மகாராணி "ஐயோ" என்று கதறியிருக்கிறாள். பின்னர் அச்சதிகாரன் வாசற்படியின் பக்கம் ஓடி அங்கே அச்சமயம் பிரவேசித்துக் கொண்டிருந்த சின்னப் பழுவேட்டரையரையும் தள்ளி விட்டு ஓடிப்போயிருக்க வேண்டும். இவ்வளவையும் பூங்குழலி ஊகித்துத் தெரிந்து கொண்டாள். இந்தப் பாதகச் செயலைச் செய்து தப்பி ஓடியவனைத் தொடர்ந்து போய்ப் பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் அவள் மனத்தில் ஒரு பக்கத்தில் உதயமாயிற்று. அதைக் காட்டிலும் தன் அத்தையின் இறுதி நெருங்கி விட்டது என்ற நினைவு அவள் உள்ளத்தில் பெருங் கொந்தளிப்பை உண்டாக்கியது. ஆகையால் மந்தாகினி சக்கரவர்த்தியின் மடியில் தலை வைத்துப் படுத்திருப்பதையும் பொருட்படுத்தாமல் அவள் அருகில் சென்று மண்டியிட்டு உட்கார்ந்து "அத்தை! அத்தை!" என்று கதறினான்.

"ஐயோ! நீ சொன்னது உண்மையாகிவிட்டதே! பாவி நான் உன்னைத் தனியாக விட்டு விட்டுப் போனேனே!" என்று அழுது புலம்பினாள். ஆனால் மந்தாகினியோ அவள் இருந்த பக்கம் திரும்பிப் பார்க்கவே இல்லை. அவளுடைய கண்கள் சக்கரவர்த்தியின் திருமுகத்தை ஆவலுடன் அண்ணாந்து பார்த்த வண்ணமிருந்தன.

ஏன், அவளுடைய கரத்தைப் பிடித்துக்கொண்டு கண்ணீர் உகுத்த இளவரசர் மீதே அவளுடைய கவனம் செல்லவில்லை. பூங்குழலியைக் கவனிப்பது எப்படி?

பூங்குழலி மேலும் புலம்பத் தொடங்கியபோது இளவரசர் தமது விம்மலை அடக்கிக் கொண்டு, "சமுத்திர குமாரி! இது என்ன? உன்னை நீ மறந்துவிட்டாயா? நீ இருக்குமிடத்தை மறந்து விட்டாயா?" என்று சொல்லிக் கொண்டே எழுந்தார்.

பூங்குழலியும் சிறிது வெட்கமடைந்தவளாய்த் துயரத்தை அடக்கிக் கொண்டு எழுந்து நின்றாள். "அரசே! எனக்கு என் அத்தையைத் தவிர இவ்வுலகில் யாரும் கதி இல்லை!" என்று விம்மினாள்.

இளவரசர் தமது கண்ணில் பொங்கி வந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டே, "பூங்குழலி! அவள் உனக்கு அத்தை! ஆனால் எனக்கு என் பெற்ற தாயைக் காட்டிலும் பதின் மடங்கு மேலான தாய்! என்னை அழைத்து வரச் சொல்லி உன்னை அனுப்பி வைத்தாள்! ஆயினும் என் முகத்தை அவள் ஏறிட்டுக்கூடப் பார்க்கவில்லை. இதன் காரணத்தை அறிந்தாயா? முப்பது வருஷங்களுக்கு முன்னால் பிரிந்த என் தந்தையும் தாயும் இன்று சேர்ந்திருக்கிறார்கள். அவர்களுக்கு மத்தியில் தடையாக நிற்பதற்கு நாம் யார்?..." என்று கூறிவிட்டு, மகாராணி உள்பட எல்லாரையும் ஒரு தடவை இளவரசர் கூர்ந்து பார்த்தார்.

மீண்டும் பூங்குழலியை நோக்கி, "பெண்ணே! முன்னேயும் சில முறை எனக்கு நீ உதவி செய்திருக்கிறாய்! அந்த உதவியெல்லாம் அவ்வளவு முக்கியமானவையல்ல. இன்றைக்கு, என் தாயும் தந்தையும் ஒன்று சேரும் காட்சியைப் பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைக்கும்படி செய்தாய்! இதை நான் என்றும் மறக்கமாட்டேன்! சமுத்திர குமாரி! உன் அத்தை இன்று எவ்வளவு மகத்தான புண்ணியத்தைக் கட்டிக் கொண்டாள் என்பதை எண்ணிப் பார்! சதிகாரனுடைய கொலை வேல் என் தந்தையின் மேல் படாமல் காப்பாற்றினாள்! அந்த வேலைத் தன் உடம்பில் பாயும்படியும் செய்து கொண்டாள்! தன் உயிரைக் கொடுத்துச் சக்கரவர்த்தியின் உயிரைக் காப்பாற்றினாள்! ஒருமுறையல்ல. இருமுறை அவரைக் காப்பாற்றினாள்! உன் அத்தையின் மீது வேல் பாய்ந்ததைக் கண்டதும் மூன்று வருஷமாகச் சக்தி இழந்திருந்த என் தந்தையின் கால்களில் மீண்டும் சக்தி வந்தது. அவர் கட்டிலிருந்து எழுந்து வந்தார். அதனால் மறுபடியும் அவர் உயிர் தப்பியது. சதிகாரன் அவனுடைய குறி தப்பிவிட்டதாக எண்ணி விளக்கை அணைத்து விட்டுக் கீழே குதித்து வந்து மீண்டும் அவனுடைய பாதகத் தொழிலைச் செய்யப் பார்த்தான். ஆனால் சக்கரவர்த்தி எழுந்து வந்துவிட்டதால் அவனுடைய நோக்கம் நிறைவேறவில்லை. அதோ, என்னைப் பெற்ற தாய், மலையமான் குமாரி, கரைகாணா வியப்புடன் நிற்பதைப் பார்! உன் அத்தையின் மீது வேல் பாய்ந்ததை என்னைப் பெற்ற தாய் பார்த்தாள். மறுபடியும் அந்தக் கொலைகாரன் தன் சதித்தொழிலைச் செய்யலாம் என்று எண்ணி அவள் ஓடிவந்தாள். அத்தை செய்த உயிர்த் தியாகத்தைத் தானும் செய்ய வேண்டுமென்று எண்ணினாள். என் தந்தையைத் தன் உடலினால் மறைத்து அவர் மீது விழும் அடுத்த ஆயுதத்தைத் தான் தாங்கிக் கொள்ளவேண்டும் என்று நினைத்தாள். கட்டிலில் என் தந்தையைக் காணாதிருக்கவேதான் "ஐயோ" என்று அலறினாள். சக்கரவர்த்தி அங்கேயே இருந்திருந்தால், என் தந்தை, தாய் இருவரில் ஒருவர் இன்று இறந்திருப்பார்கள். சமுத்திரகுமாரி! உன் அத்தை இந்தச் சோழ குலத்துக்கும், சோழ நாட்டுக்கும் எவ்வளவு பெரிய சேவை செய்திருக்கிறாள் என்பதை இப்போது உணர்ந்தாயா? சதிகாரனுடைய ஆயுதத்தினால் சக்கரவர்த்தி மாண்டிருந்தால், சோழ சாம்ராஜ்யம் சின்னா பின்னப்பட்டுப் போய்விடும். பழுவேட்டரையர் குலத்துக்கு என்றென்றும் மாறாத பழிச் சொல் ஏற்படும் தன் தந்தையின் உயிரையும், தாயின் உயிரையும் மட்டும் உன் அத்தை காப்பாற்றவில்லை. பழுவேட்டரையரின் குலப் பெயரையும் காப்பாற்றினாள். சோழ நாட்டுக்கே பெரும் விபத்து நேராமல் காப்பாற்றினாள். சோழ வம்சத்துக்கே குல தெய்வம் ஆனாள். பூங்குழலி! உன் அத்தைக்காக இனி நான் ஒரு சொட்டுக் கண்ணீர் கூட விடப்போவதில்லை. அவளுக்காக நீயும் அழ வேண்டியதில்லை. வேறு யாரும் துக்கப்படவேண்டியதில்லை! இத்தகைய தெய்வ மரணம் யாருக்குக் கிடைக்கும்? முப்பது வருஷங்களாகப் பிரிந்திருந்த பதிக்காக உயிரைக் கொடுக்கும் பாக்கியம் யாருக்குக் கிடைக்கும்? அவருடைய மடியிலே தலையை வைத்துக்கொண்டு நிம்மதியாக உயிரைவிடும் பேறு யாருக்குக் கிடைக்கும்?" என்று கூறிவிட்டு இளவரசர் மீண்டும் ஒரு முறை சுற்று முற்றும் பார்த்தார்.

அந்த அறையிலும், வாசற்படி அருகிலும் நின்றவர்கள் அனைவரும் தம்முடைய வார்த்தைகளைக் கேட்டு கொண்டிருந்தார்கள் என்பதைப் பார்த்துக் கொண்டார். மேலும் கூறினார்:

"பூங்குழலி! உன் அத்தை இறந்து விட்டால் நீ அனாதை ஆகிவிடுவாய் என்று அஞ்ச வேண்டாம். நீ இன்று செய்த உதவியை நான் என்றும் மறக்கமாட்டேன். உன்னிடம் என்றென்றும் நன்றியுள்ளவனாயிருப்பேன். நான் ஒரு வேளை மறந்து விட்டாலும், சின்னப் பழுவேட்டரையர் மறக்க மாட்டார். உன் அத்தையும், நீயும் இன்று அவருக்கு எத்தகைய உதவிகள் செய்தீர்கள்! சக்கரவர்த்தியின் மீது வேலோ, கத்தியோ பாய்ந்திருந்தால் உலகம் என்ன சொல்லியிருக்கும்? தஞ்சைக் கோட்டைத் தளபதியான பழுவேட்டரையரையும் அந்தப் பாதகச் செயலுக்கு உடந்தை என்றுதான் ஊரார், உலகத்தார் சொல்லுவார்கள். கோட்டை வாசலில் கொடும்பாளூர் வேளார் வேறு காத்திருக்கிறார். பழுவூர்க் குலத்தை அடியோடு ஒழித்துக் கட்டுவதற்கு அவருக்கு வேண்டிய காரணம் கிடைத்திருக்கும். அவ்வளவு ஏன்? இன்றைக்கு நான் உன் உதவியினால் கோட்டைக்குள் வராதிருந்தால், கோட்டைத் தளபதியின் மேல் எனக்குக் கூடத்தான் சந்தேகம் உதித்திருக்கும். ஆகையால் சின்னப் பழுவேட்டரையர் மற்ற எல்லோரையும்விட உன்னிடம் அதிக நன்றி செலுத்த வேண்டும். அவரிடம் நீ என்ன பரிசு கேட்டாலும் கொடுப்பார். அவருடைய சொத்திலே பாதியைக் கேட்டாலும் கொடுத்து விடுவார்!"

இவ்வாறு இளவரசர் கூறியபோது சின்னப் பழுவேட்டரையரைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவருடைய கடமையை அவர் சரியாக நிறைவேற்றவில்லையென்பதை அவருக்கு உணர்த்த விரும்பியே மேற்கண்டவாறு பேசினார். அதைச் சின்னப் பழுவேட்டரையர் அறிந்து கொண்டார் என்பதை அவருடைய முகத்தில் தோன்றிய வேதனை நன்கு எடுத்துக் காட்டியது. அவருடைய முகத்தில் சாதாரணமாகக் குடி கொண்டிருந்த கம்பீரத் தோற்றம் போய்விட்டது. யாரையும் இலட்சியம் செய்யாத, எதற்கும் அஞ்சாத, வீரப் பெருமிதத்தின் அறிகுறி இப்போது அந்த முகத்தில் இல்லவே இல்லை.

போர்க்களத்திலிருந்து புறமுதுகிட்டு ஓடிவந்த வீரன் ஒருவன், பலர் ஏசும்படியாக இந்த உயிரைக் காப்பாற்றிக் கொண்டு வந்ததில் என்ன பயன் என்று வெட்கி மாழ்கும் பாவனை அவருடைய முகத்தில் இப்போது காணப்பட்டது.

இளவரசர் முதலில் கூறியதையெல்லாம் கேட்டு உள்ளமும் உடலும் உருகி நெகிழ்ந்து கொண்டிருந்த பூங்குழலி அவர் பரிசைப் பற்றிச் சொன்னதும் பழைய ஆக்ரோஷங்கொண்ட சமுத்திர குமாரியாகி விட்டாள்.

"இளவரசே! எனக்கு யாருடைய நன்றியும் தேவையில்லை; பரிசும் வேண்டியதில்லை. எனக்குத் தஞ்சம் அளிக்க சமுத்திர ராஜா இருக்கிறார். என் படகும் கால்வாய் முனையில் பத்திரமாயிருக்கிறது. இதோ நான் புறப்படுகிறேன். ஒருவேளை என் அத்தை உயிர் பிழைத்தால்? ...இல்லை, அது வீண் ஆசை! காலையிலே என் அத்தை சொல்லிவிட்டாள். வரப்போவதை உணர்ந்துதான் சொன்னாள். இனி அவள் பிழைக்கப் போவதில்லை. எனக்கு இங்கே வேலையும் இல்லை என்றாவது ஒருநாள் தாங்களும் கொடும்பாளூர் இளவரசியும் கோடிக்கரைக்கு வந்தால்..." என்று கூறிப் பூங்குழலி வானதி இருந்த இடத்தை நோக்கினாள். அந்தப் பெண் அகல விரிந்த கண்களினால் தன்னையும் இளவரசையும் பார்த்துக் கொண்டிருப்பதைக் கவனித்தாள். "சீச்சீ! இது என்ன ஆசை? நான் போகிறேன்" என்று கூறிவிட்டு, வாசற்படியை நோக்கி விரைந்து நடந்தாள்.

இதுவரையில் திக்பிரமை கொண்டவளைப் போல் நின்றிருந்த வானதிக்கு அப்போதுதான் சிறிது தன்னுணர்வு வந்தது. அவள் பூங்குழலியின் அருகில் வந்து, "என் அருமைத் தோழி நீ எங்கே போகிறாய்? நானும் உன்னைப்போல் அநாதைதான்!..." என்று மேலும் பேசுவதற்குள், பூங்குழலி குறுக்கிட்டாள்: "தேவி நான் தங்கள் அருமைத் தோழியும் அல்ல. தாங்கள் என்னைப்போல் அநாதையும் அல்ல; சீக்கிரத்தில் பழையாறை இளையபிராட்டி வந்து விடுவார்!" என்றாள்.

வானதிக்கு அப்போதுதான் உண்மையில் இளைய பிராட்டியின் நினைவு வந்தது. "ஐயோ! அக்காவுக்கு இங்கு நடந்ததெல்லாம் ஒன்றும் தெரியாதே! செய்தி சொல்லி அனுப்ப வேண்டுமே?" என்றாள்.

"அதற்கும் ஒரு கவலையா? கோட்டை வாசலில் தங்கள் பெரிய தகப்பனார் இருக்கிறாரே? அவரிடம் சொன்னால் செய்தி அனுப்புகிறார்" என்று கூறிவிட்டுப் பூங்குழலி வழிமறிப்பவள்போல் நின்ற வானதியைக் கையினால் சிறிது நகர்த்தி விட்டு மேலே சென்றாள். வாசற்படிக்கு அருகில் சின்னப் பழுவேட்டரையர் மறுபடியும் அவளை வழிமறித்து நிறுத்தினார்.

"பெண்ணே! பொன்னியின் செல்வர் கூறியதையெல்லாம் நான் கேட்டுக்கொண்டிருந்தேன். அவர் கூறியது முற்றும் உண்மை. பழுவூர்க் குலத்துக்கு அழியாத அபகீர்த்தி உண்டாகாமல் நீ காப்பாற்றினாய், உனக்கு நான் அளவில்லாத நன்றிக் கடன்பட்டிருக்கிறேன். நீ என்ன பரிசு வேண்டுமென்று கேட்டாலும் தருகிறேன்" என்றார்.

பூங்குழலி துயரப் புன்னகையுடன், "தளபதி! இங்குள்ளவர்களில் சிலருக்குச் சக்கரவர்த்தி உயிர் பிழைத்ததில் சந்தோஷம். சிலருக்கு அவர் நடமாடும் சக்தி பெற்றதில் சந்தோஷம். இன்னும் சிலருக்குப் பழுவேட்டரையர் குலம் அபகீர்த்திக்கு உள்ளாகாததில் மகிழ்ச்சி. என் அத்தைக்கு நேர்ந்த துர்மரணத்தைப் பற்றி யாருக்கும் கவலையிருப்பதாகத் தெரியவில்லை. நானாவது அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டாமா! என் அத்தையைக் கொன்றவன் எங்கே போனான் என்று தேடிக் கண்டுபிடிக்கப் பார்க்கிறேன். தயவு செய்து எனக்கு வழியை விடுங்கள்!" என்றாள்.

பூங்குழலியின் இந்த வார்த்தைகள் கோட்டைத் தளபதி காலாந்தக கண்டரைத் தூக்கி வாரிப் போட்டன.

"பெண்ணே! உன்னிடம் நான் தோற்றேன். கொலைகாரனை விட்டுவிட்டுச் சும்மா நின்று கொண்டிருக்கிறேன். அவனைக் கண்டுபிடிக்காவிட்டால், சக்கரவர்த்தி பிழைத்ததினால் மட்டும் என் பழி தீர்ந்துவிடாது. உன் வார்த்தைகளில் நான் அவநம்பிக்கை கொண்டதே தவறு! கொலைகாரன் எங்கே போயிருப்பான்? என்னைத் தள்ளிவிட்டு ஓடினான். ஆம்! ஆம்! சுரங்க வழிக்குத்தான் போயிருப்பான். வா! எனக்கு உதவியாக வா! வேறு யாரையும் அழைத்துப் போக விருப்பம் இல்லை! அவன் மட்டும் என்னிடம் அகப்படட்டும்! என்ன செய்கிறேன், பார்!"

இவ்விதம் சொல்லிக்கொண்டே சின்னப் பழுவேட்டரையர் தம் இரும்புக் கையினால் பூங்குழலியையும் பிடித்து இழுத்துக் கொண்டு சிற்ப மண்டபத்தை நோக்கி விரைந்து சென்றார்.

அந்த அறையில் இருந்த மற்ற எல்லாரும் அப்படி அப்படியே நின்றார்கள். இளவரசர் விருப்பதை அறிந்து கொண்டு சக்கரவர்த்தியின் அருகில் போகாமல் தூரத்தில் ஒதுங்கி நின்றார்கள். எல்லாருடைய கண்கள் மட்டும் சக்கரவர்த்தியின் பேரிலும், அவர் மடியில் தலை வைத்துப் படுத்திருந்த மாதரசியின் பேரிலும் இருந்தன.

ஆனால் சுந்தர சோழரும், மந்தாகினியும் ஒருவரோடொருவர் பரிபூரணமாய்க் கலந்து போயிருந்தார்கள். மற்றவர்களைப் பற்றிய எண்ணமே அவர்களுடைய நெஞ்சில் புகுவதற்கு இடமிருக்கவில்லை. முப்பது வருஷத்து வாழ்க்கையைச் சில நிமிஷ நேரத்தில் நடத்த முடியுமா என்பது பற்றி மனோதத்துவ விற்பன்னர்கள் பொது முறையில் என்ன சொல்லுவார்களோ, தெரியாது. ஆனால் சுந்தர சோழரும் மந்தாகினியும் அந்தச் சில நிமிஷ நேரத்தில் பன்னெடுங்கால வாழ்க்கையை நடத்தினார்கள் என்பதில் சந்தேகம் சிறிதுமில்லை. முப்பது வருஷத்தில் ஒருவரோடொருவர் பேசக் கூடியதையெல்லாம் அவர்கள் பேசிக் கொண்டார்கள். மந்தாகினி தனக்குரிய நயன பாஷை மூலமாகவே பேசினாள். சுந்தர சோழர் பெரும்பாலும் அந்த பாஷையை அறிந்து கொண்டார். இளம்பிராயத்தில் பூதத்தீவிலே அவர் சில மாதகாலம் மந்தாகினியுடன் சொர்க்க வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்த காலத்தில் அவளுடைய சமிக்ஞை பாஷையையும் நன்கு தெரிந்து கொண்டிருந்தார். அவற்றை அவர் இன்றளவும் மறந்து விடவில்லை. ஆகையால் மந்தாகினி இப்போது கண்களால் மட்டுமே பேசியபோதிலும் அவருடைய உள்ளம் அவள் மனத்தில் உதித்த எண்ணங்களை அக்கணமே தெரிந்துகொண்டது. அப்படி அதிகமாக மந்தாகினி விஷயம் எதுவும் சொல்லிவிடவும் இல்லை. "தங்கள் பேரில் எனக்கு ஒரு வருத்தமும் இல்லை. உலகையாளும் சக்கரவர்த்தியாகிய தாங்கள் எங்கே? கரையர் மகளும் ஊமையும் செவிடுமான நான் எங்கே? தங்கள் முன் வராமல் நான்தான் இத்தனை காலமும் மறைந்து திரிந்து கொண்டிருந்தேன். அவ்வப்போது தூரத்தில் நின்று தரிசித்து மனத்தைத் திருப்தி செய்து கொண்டிருந்தேன். உயிரை விடும் தருணத்தில் தங்கள் மடியில் படுத்து உயிரை விடும் பாக்கியம் எனக்குக் கிடைத்ததே? இதைக் காட்டிலும் எனக்கு வேறு என்ன வேண்டும்?" - இவ்வளவுதான் மந்தாகினி கூறியது. இதையே திருப்பித் திருப்பி அவளுடைய உள்ளமும் கண்களும் சொல்லிக் கொண்டிருந்தன. அவளுடைய முகத்திலோ எல்லையற்ற ஆனந்தம் ததும்பிக் கொண்டிருந்தது. விலாப் புறத்தில் வேல் குத்தி வெளியிலும் வந்திருந்ததினால் அவள் சிறிதும் வேதனைப் பட்டதாக அவள் முகக் குறியிலிருந்து தெரியவில்லை. அவள் அடியோடு தன் தேகத்தைப் பற்றிய நினைவை இழந்து விட்டிருந்ததாகக் காணப்பட்டது. பறவை, கூண்டிலிருந்து கிளம்பும் தருணம் நெருங்கிவிட்டது. இனி, கூண்டைப் பற்றி அந்தப் பறவைக்கு என்ன கவலை இருக்கப் போகிறது?

சுந்தர சோழரும் தமது உடம்பைப் பற்றிய நினைவை மறந்து விட்டிருந்தார். அதனால்தானே அவர் தமது கால்கள் பலவீனமடைந்திருந்ததைக் கூட மறந்து கட்டிலிலிருந்து இறங்கி மந்தாகினியிடம் ஓடிவர முடிந்தது!

ஆனால் சுந்தர சோழர் மந்தாகினியைப் போல் சில வார்த்தைகள் சொல்வதோடு திருப்தி அடையவில்லை. எத்தனை எத்தனையோ விஷயங்களை அவர் சொல்லிக் கொண்டேயிருந்தார். அவருடைய கண்கள் சொல்லிய விஷயங்களை அவருடைய உதடுகள் வார்த்தைகளாக முணு முணுத்துக்கொண்டேயிருந்தன. அந்த அறையிலிருந்த மற்றவர்களுக்கு அவர் பேசிய வார்த்தை ஒன்றுகூடப் புரியவில்லை. ஆனால் மந்தாகினிக்கு எல்லாம் விளங்கிக் கொண்டு வந்தது. ஆமோதிக்க வேண்டிய இடத்தில் தலையை ஆட்டி ஆமோதித்தாள்; மறுக்கவேண்டிய இடத்தில் தலையை ஆட்டி மறுத்தாள். ஆனந்தமடைய வேண்டிய இடத்தில் ஆனந்தப் பட்டாள்; ஆறுதல் கூறவேண்டிய இடத்தில் ஆறுதலும் தெரிவித்தாள்.

"என் உயிருக்கு உயிரானவளே! நீ இன்று எனக்காக உன் உயிரை விடுகிறாய்! என் உயிர் மட்டும் எத்தனை நாள் இருக்கும் என்று எண்ணுகிறாய்? நான் கல் நெஞ்சமுள்ள பாவிதான்; ஒத்துக்கொள்கிறேன். இராஜ்யம் ஆளும் விதிக்குப் பிறந்தவர்கள் இவ்விதம் நெஞ்சைக் கல்லாகச் செய்துகொள்ள வேண்டியிருக்கிறது. இல்லாவிடில் இராஜ்ய நிர்வாகம் எப்படி நடக்கும்? பூதத்தீவில் நான் உன்னை விட்டு விட்டு வந்தது முதலில் நான் செய்த பெருங்குற்றம். அதன் விளைவாக இன்னும் பல குற்றங்களைச் செய்யவேண்டியதாயிற்று. அந்தச் சொர்க்கத்துக்கு இணையான தீவில் நாம் எவ்வளவு ஆனந்தமாக வாழ்ந்தோம்? அது நீடித்திருக்கக் கொடுத்து வைக்கவில்லையே? கடவுளே சதி செய்து விட்டாரே! என்னைச் சேர்ந்தவர்கள் எல்லாரும் சதி செய்து விட்டார்களே! யுவராஜ்ய பட்டாபிஷேகம் ஆனதும் உன்னைத் தேடி வரவேண்டுமென்றிருந்தேன். உன்னைத் தேடிக் கோடிக்கரை வரையில் ஓடிவந்தேன். பாவிகள் நீ கடலில் குதித்துச் செத்து விட்டாய் என்று சொன்னார்கள். என் பிராண சிநேகிதன் என்று எண்ணியிருந்த அநிருத்தனே ஏமாற்றிவிட்டான்... ஆமாம், ஆமாம்! நீ சொல்வது தெரிகிறது. நீ கடலில் குதித்தது உண்மைதான் என்றும் பிறகு யாரோ உன்னைக் காப்பாற்றியதாகவும் சொல்லுகிறாய். ஆனால் இது அநிருத்தனுக்குத் தெரிந்திருந்தும் அவன் சொல்லவில்லை. அதனால் வந்த விபரீதத்தைப் பார்! உன்னைப் பார்க்க நேர்ந்த போதெல்லாம் உன் ஆவியைப் பார்ப்பதாக எண்ணிக் கொண்டேன். என்னைப் பழி வாங்குவதற்காக வந்து சுற்றுகிறாய் என்று நினைத்துக் கொண்டேன். என் அருமைக் குமாரனை நீ காவேரி வெள்ளத்திலிருந்து எடுத்துக் காப்பாற்றியிருக்க, நீதான் அவனைக் காவேரியில் தள்ளிவிட்டாய் என்று எண்ணிக் கொண்டேன். ஆகா! நீ மட்டும் உயிரோடிருக்கிறாய் என்று அறிந்திருந்தால், என் வாழ்க்கை எப்படியெல்லாம் இருந்திருக்கும்? இந்தப் பெரிய சாம்ராஜ்யத்துக்காக உன்னை நான் கைவிட்டிருப்பேன் என்று நினைக்கிறாயா? ஒரு நாளும் இல்லை!...

இவ்விதம் சுந்தர சோழர் தம் உள்ளத்தில் பொங்கித் ததும்பிய எண்ணங்களையெல்லாம் வாய் வார்தைகளினால் முணு முணுத்துக் கொண்டே வந்தார். கடைசியாக அவர் கூறினார், "இரண்டு நாளைக்கு முன் நீ என் முன் வந்தபோது உன் மேல் விளக்கை விட்டெறிந்தேன். உன்னை மறுபடியும் பார்த்த போதெல்லாம் அருவருப்புக் காட்டினேன். அதற்காகவெல்லாம் நீ என்னை மன்னிக்கவேண்டும். பல வருஷ காலமாக நீ ஆவியாக வந்து என்னைத் துன்புறுத்துகிறாய் என்ற எண்ணத்தில் இருந்தேன். நள்ளிரவில் நீ இதே அறையில் என் முன் தோன்றி ஏதேதோ கூறினாய். என் மக்களை நீ சபிக்கிறாய் என்று எண்ணிக்கொண்டேன். அப்போது ஏற்பட்ட வெறுப்பு உன்னை நேரில் பார்த்தபோதும் தீரவில்லை. உண்மையில், நீ எங்கள் குலதெய்வமாக வந்தாய்! எனக்கும் என் மக்களுக்கும் தீங்கு நேராமல் தடுப்பதற்காக வந்தாய்! அதையெல்லாம் நான் தெரிந்துகொள்ளவில்லை. என் மகள் குந்தவை எடுத்துக் கூறிய பிறகுதான் தெரிந்தது. ஐயோ! எப்பேர்ப்பட்ட தவறு செய்தேன்! அதற்காகவெல்லாம் என்னை மன்னித்துவிடு. உன்னிடம் எனக்குள்ள அன்பை இனி எப்படிக் காட்டுவேன்? அதற்கு வழியில்லாமல் செய்து விட்டாயே! என் குமாரர்களுக்குப் பட்டம் கட்ட வேண்டாமென்று சொன்னாய். அதன் நியாயம் எனக்கே தெரிந்திருக்கிறது. ஏன் தலையை அசைக்கிறாய்? என் நன்மைக்காகவும், என் குலத்தின் நன்மைக்காகவுமே சொன்னாய்! அதில் தவறு ஒன்றுமில்லை. ஆனால் இங்குள்ளவர்கள் ஏதேதோ சொல்லி என்னைப் பைத்தியமாக அடிக்கப் பார்க்கிறார்கள். உனக்குக் குழந்தை பிறந்ததாகச் சொல்கிறார்கள். அது உண்மையானால் சொல்லிவிடு! உன் மகன் இருந்தால் சொல்லிவிடு. அவனுக்கு என்னாலியன்றதைச் செய்து உனக்குச் செய்த துரோகத்துக்குப் பரிகாரம் தேடுகிறேன்..."

இவ்விதம் சுந்தரசோழர் கூறியபோது மந்தாகினி பரக்கப் பரக்க அவரைப் பார்த்துவிட்டுப் பிறகு சுற்றுமுற்றும் பார்த்தாள். வாசற்படியின் அருகில் நின்ற பொன்னியின் செல்வர் மீது அவளுடைய பார்வை தங்கி நின்றது. உடனே இளவரசர் தந்தையும் தாயும் இருந்த இடத்தை நெருங்கி வந்தார். தாயின் அருகில் உட்கார்ந்தார்.

மந்தாகினி இளவரசரைத் தன் கையினால் தொட்டுக் கொண்டு சக்கரவர்த்தியின் திருமுகத்தைப் பார்த்தாள். "இவன் தான் என் புதல்வன்!" என்னும் பொருள் அந்தப் பார்வையிலிருந்து மிகத் தெளிவாக வெளியாயிற்று.

இவ்வாறு இரண்டு மூன்று தடவை மந்தாகினி சக்கரவர்த்தியையும் பொன்னியின் செல்வரையும் மாறி மாறிப் பார்த்தாள். பின்னர் கண்களை மூடிக் கொண்டாள். சிறிது நிமிர்ந்திருந்த அவளுடைய தலை, - சக்கரவர்த்தியின் மடியில், - நன்றாகச் சாய்ந்தது.

மந்தாகினியின் உயிர் அவளுடைய உடலை விட்டுப் பிரிந்தது. சுந்தர சோழ சக்கரவர்த்தி விம்மி அழுததை இன்றுவரை யாரும் பார்த்ததுமில்லை; கேட்டதுமில்லை. இன்றைக்கு அவர் 'ஓ' வென்று கதறி அழுததைப் பார்த்தும் கேட்டும் எல்லாரும் திகைத்துப் போனார்கள்.

இளவரசர் அருள்மொழிவர்மர் மட்டுமே மனத்தெளிவுடன் இருந்தார்.

அவர் சக்கரவர்த்தியைப் பார்த்துக் கூறினார்:- "தந்தையே! என் அன்னையின் மரணத்துக்காகத் தாங்கள் வருந்த வேண்டியதில்லை. அவர் மரணமடையவேயில்லை. தெய்வமாக அல்லவோ மாறியிருக்கிறார்? என்றென்றைக்கும் நம் சோழ வம்சத்துக்கு அவர் குல தெய்வமாக விளங்கி வருவார்!" என்றார்.

ஆயினும், சுந்தர சோழர் விம்மி அழுவது நின்ற பாடில்லை. மந்தாகினியின் மரணத்துக்காகத்தான் அழுதாரா? அல்லது அதே சமயத்தில் வெகு தூரத்தில் நடந்த இன்னொரு துயர சம்பவத்தின் அதிர்ச்சி அவர் உள்ளத்தில் தோன்றியதனால் அழுதாரா என்று சொல்ல முடியுமா?

இளவரசர் அருள்மொழிவர்மர் கூறிய தேறுதல் மொழி மட்டும் உண்மையாயிற்று. பொன்னியின் செல்வர் பிற்காலத்தில் இராஜராஜ சோழர் என்ற பெயருடன் சிங்காதனம் ஏறியபோது 'ஈழத்து ராணி' என்று அவர் அழைத்த மந்தாகினி தேவிக்காகத் தஞ்சையில் ஒரு கோயில் எடுப்பித்தார். அது சில காலம் 'சிங்கள நாச்சியார் கோவில்' என்ற பெயருடன் பிரபலமாக விளங்கி வந்தது. நாளடைவில் அதன் பெயர் திரிந்து 'சிங்காச்சியார் கோவில்' என்று ஆயிற்று. இன்றைக்கும் தஞ்சை நகரின் ஒரு பகுதியில் 'சிங்காச்சியார் கோவில்' என்ற பெயருடன் ஒரு சிறிய சிதிலமான கோவில் இருந்து வருவதைத் தஞ்சை செல்லுகிறவர்கள் விசாரித்துத் தெரிந்து கொள்ளலாம்.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
தியாக சிகரம் - அத்தியாயம் 31

"வேளை வந்து விட்டது!"

சென்ற அத்தியாயத்தில் கூறிய நிகழ்ச்சிகளோடு இந்தக் கதையை முடித்துவிடக் கூடுமானால், எவ்வளவோ நன்றாயிருக்கும். நேயர்களில் சிலர் ஒருவேளை அவ்விதம் எதிர் பார்க்கவுங்கூடும். ஆனால் அது இயலாத காரியமாயிருக்கிறது. அதே தினத்தில் ஏறக்குறைய அதே நேரத்தில் கடம்பூர் சம்புவரையரின் மாளிகையில் நடந்த பயங்கர நிகழ்ச்சியைப் பற்றி நாம் இனிச் சொல்ல வேண்டியிருக்கிறது.

நந்தினி அவளுடைய அந்தப்புர அறையில் தனியாக அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தாள். அவளுடைய உள்ளத்தில் குடிகொண்டிருந்த பரபரப்பை அவளுடைய முகத்தோற்றம் காட்டியது. அவளுடைய கண்ணில் ஓர் அபூர்வமான மின்னொளி சுடர்விட்டுத் தோன்றி மறைந்தது. அந்த அறைக்குள்ளே வருவதற்கு அமைந்திருந்த பல வழிகளையும் அவள் அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தாள். அந்த வழிகளில் ஏதாவது காலடிச் சத்தம் கேட்கிறதா என்று அவளுடைய செவிகள் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தன. "வேளை நெருங்கி விட்டது!" என்று அவளுடைய உதடுகள் அடிக்கடி முணுமுணுத்துக் கொண்டிருந்தன. சில சமயம் அவ்விதம் முணுமுணுத்த அவளுடைய உதடுகள் துடித்தன. இன்னும் சில சமயம் அவளுடைய கண்ணிமைகளும், புருவங்களும் துடித்தன. ஒவ்வொரு தடவை அவள் உடம்பு முழுவதுமே ஆவேசக்காரனுடைய தேகம் துடிப்பதுபோல் பதறித் துடிதுடித்தது.

நந்தினி படுப்பதற்காக அமைந்திருந்த பஞ்சணை மெத்தை விரித்த கட்டிலில் நாலு பக்கமும் திரைச்சீலைகள் தொங்கின. அவை கட்டிலை அடியோடு மறைத்துக் கொண்டிருந்தன. நந்தினி ஒரு பக்கத்துத் திரைச் சீலையை மெதுவாகத் தூக்கினாள். படுக்கையில் நீளவாட்டில் வைத்திருந்த கொலை வாளைப் பார்த்தாள் கொல்லன் உலைக்களத்தில் ஜொலிக்கும் தீயினாலேயே செய்த வாளைப் போல் அது மின்னிட்டுத் திகழ்ந்தது. அத்தீயினால் மெத்தையும் கட்டிலும் திரைச் சீலைகளும் எரிந்து போகவில்லை என்பது ஆச்சரியத்துக் கிடமாயிருந்தது. இதை நினைத்துப் பார்த்துத்தான், அது செந்தழலினால் செய்த வாள் அல்லவென்றும், இரும்பினால் செய்த வாள்தான் என்றும் தெரிந்துகொள்ள வேண்டியிருந்தது.

நந்தினி அந்த வாளைக் கையில் எடுத்தாள். தூக்கிப் பிடித்தாள். தீபத்தின் ஒளியில் அதை இன்னும் நன்றாக மின்னிடும்படி செய்து பார்த்து உவந்தாள். பிறகு, அதைத் தன் மார்புடன் அணைத்துக் கொண்டாள் கன்னத்தோடு சேர்த்து வைத்துக் கொண்டு முத்தமிட்டாள். அந்த வாளுடன் உறையாடவும் செய்தாள். "தெய்வ வாளே! நீ உன்னுடைய வேலையைச் செய்யவேண்டிய வேளை நெருங்கிவிட்டது! என்னை நீ கைவிடமாட்டாய் அல்லவா? இல்லை, நீ என்னைக் கைவிட மாட்டாய்! என்னுடைய கைகளேதான் என்னைக் கைவிட்டால் விடும்!" என்று கூறினாள்.

பிறகு, தன் கரங்களைப் பார்த்து, "கரங்களே! நீங்கள் உறுதியாக இருப்பீர்களா? சீச்சீ! இப்போதே இப்படி நடுங்குகிறீர்களே? சமயம் வரும்போது என்ன செய்வீர்கள்? ஆம், ஆம்! உங்களை நம்புவதில் பயனில்லை. வேறு இரண்டு கரங்களைத்தான் இன்றைக்கு நான் சம்பாதித்துக் கொள்ள வேண்டும்!" என்றாள்.

திடீரென்று நந்தியின் உடம்பு முழுவதும் ஒரு தடவை சிலிர்த்தது. வெறிக்கனல் பாய்ந்த கண்களினால் மேல் நோக்காகப் பார்த்தாள். "ஆகா! நீ வந்துவிட்டாயா? வா! வா! சரியான சமயத்திலேதான் வந்தாய்! என் அன்பே! என் அரசே! வா! வீர பாண்டியன் தலையே! ஏன் கூரை ஓரத்திலேயே இருக்கிறாய்? இறங்கி வா! இங்கே யாரும் இல்லை! உன் அடியாளைத் தவிர வேறு யாரும் இல்லை! ஏன் இப்படி விழித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறாய்? வாயைத் திறந்து ஒரு வார்த்தை சொல்! 'இந்தக் கண்டத்துக்குத் தப்பி உயிர் பிழைத்தால் உன்னைப் பாண்டிய சிங்காசனத்தில் ஏற்றி வைப்பேன் என்று சொன்னாயே! அதை நான் மறக்கவில்லை. உனக்கு நான் கொடுத்த வாக்குறுதியையும் மறக்கவில்லை. அதை நினைவேற்றும் வேளை நெருங்கிவிட்டது. அதற்காக நான் எத்தனைக் காலம் பொறுமையாகக் காத்திருந்தேன்! என்னென்ன வேஷங்கள் போட்டேன்? - எல்லாம் நீ பார்த்துக் கொண்டுதானிருந்தாய்! இப்போது பார்த்துக் கொண்டிரு! கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிரு. நீதான் கண் கொட்டுவதே கிடையாதே! நானும் கண்ணை மூடித் தூங்க முடியாமல் செய்து வருகிறாய்! இன்று இரவு உனக்குப் பழி வாங்கி விட்டேனானால், அப்புறமாவது என்னைத் தூங்கவிடுவாய் அல்லவா?... மாட்டாயா? பாண்டிய சிங்காசனத்தில் நான் ஏறி அமர்வதைப் பார்த்த பிறகுதான் போவாயா? என்னுடைய வாக்குறுதியை நான் நிறைவேற்றினால், உன்னுடைய வாக்குறுதியை நீ நிறைவேற்றுவதாகச் சொல்கிறாய்?... இல்லை, இல்லை! எனக்கு சிங்காசனமும் வேண்டாம், மணி மகுடமும் வேண்டாம். உன் மகன் என்று யாரோ ஒரு சிறுவனை கொண்டு வந்தார்கள். அவனைச் சிங்காசனத்தில் ஏற்றி மணி மகுடம் சூட்டியாயிற்று. உனக்குப் பழிக்குப் பழி வாங்கி விட்டேனானால், அதைக் கொண்டு நீ திருப்தியடைவாய்! பின்னராவது, என்னை விட்டுச் செல்வாய்! போரில் இறந்தவர்கள் எல்லாரும் எந்த வீர சொர்க்கத்துக்குப் போகிறார்களோ, அந்த வீர சொர்க்கத்துக்கு நீயும் போவாய்! அங்கே என்னைப் போல் எத்தனையோ பெண்கள் இருப்பார்கள்! அவர்களில் ஒருத்தியை... என்ன? மாட்டேன் என்கிறாயா?... சரி, சரி! அதைப் பற்றிப் பிறகு பேசிக் கொள்வோம்! என் அன்பே! யாரோ வருகிறார்கள் போலிருக்கிறது. நீ மறைந்துவிடு!...நானும் இந்தப் பழிவாங்கும் வாளை மறைத்து வைக்கிறேன்..."

அச்சமயம் வாசற்படிக்கு அருகில் உண்மையாகவே காலடிச் சத்தம் கேட்டது. நந்தினி வாளைக் கட்டிலில் வைத்துக் கொண்டிருக்கும்போதே மணிமேகலை உள்ளே வந்தாள்.

சற்று முன் வெறி பிடித்துப் புலம்பிய நந்தினி ஒரு கணநேரத்தில் முற்றும் மாறுதல் அடைந்தவளாய் "நீதானா, மணிமேகலை? வா!" என்றாள். அவள் குரலில் அமைதி நிலவியது.

"அக்கா! இது என்ன? எப்போதும் வாளும் கையுமாகவே இருக்கிறீர்களே?" என்றாள் மணிமேகலை.

"பின், என்ன செய்வது? ஆண் பிள்ளைகள் இவ்வளவு தூர்த்தர்களாயிருந்தால், நாம் வாளைத் துணைகொள்ள வேண்டியது தானே?"

"தேவி! நான் ஒருத்தி துணை இருக்கிறேனே? என்னிடம் தங்களுக்கு நம்பிக்கை இல்லையா?"

"உன்னிடம் நம்பிக்கை இல்லாமலா என்னுடைய அந்தரங்கத்தையெல்லாம் உன்னிடம் சொன்னேன், மணிமேகலை! இந்த உலகிலேயே நான் நம்பிக்கை வைத்திருப்பவள் நீ ஒருத்திதான். ஆனாலும், உன் கூடப் பிறந்த சகோதரனுக்கு எதிராக உன்னால் ஒன்றும் செய்ய முடியாதல்லவா?"

"அக்கா! எனக்குக் கூடப் பிறந்த சகோதரன் இல்லை, என்று முடிவு செய்து கொண்டு விட்டேன்..."

"ஏன் இவ்விதம் சொல்கிறாய்? எப்படியும் அவன் உன் சகோதரன்..."

"சகோதரனாவது சகோதரியாவது? அந்த உறவெல்லாம் வெறும் பிரமை என்று தெரிந்து கொண்டேன். கந்தமாறன் என்னுடைய விருப்பத்துக்கு எதிராக, - தன்னுடைய சௌகரியத்துக்காக, - என்னை வற்புறுத்திக் கட்டிக் கொடுக்கப் பார்க்கிறான்! உண்மையான சகோதர பாசம் இருந்தால், இப்படிச் செய்வானா?..."

"தங்காய்! உன்னுடைய நன்மைக்காகவே அவன் உன்னை இளவரசருக்கு மணம் செய்து கொடுக்க விரும்பலாம் அல்லவா?"

"ஆமாம்; என்னுடைய நன்மை தீமையை இவன் கண்டுவிட்டானாக்கும்! உண்மையில், என்னுடைய நன்மையை அவன் கருதவேயில்லை, அக்கா!"

"ஈழம் முதல் வட பெண்ணை வரையில் பரந்த சோழ ராஜ்யத்தின் சிங்காசனத்தில் நீ பட்ட மகிஷியாக வீற்றிருக்க வேண்டும் என்று உன் தமையன் விரும்புவது உன்னுடைய நன்மைக்கு அல்லவா?"

"இல்லவே இல்லை! நான் தஞ்சாவூர் ராணியானால், இவன் முதன் மந்திரியாகலாம் அல்லது பெரிய பழுவேட்டரையரைப் போல் தனாதிகாரியாகலாம் என்ற ஆசைதான் காரணம் அக்கா! அக்கா...!" என்று மணிமேகலை மேலே சொல்லத் தயங்கினாள்.

"சொல், மணிமேகலை! உன் மனதில் உள்ளது எதுவானாலும் தாராளமாய்ச் சொல்லலாம். என்னிடம் உனக்குள்ள அன்பைக் குறித்து நீ சொன்னதெல்லாம் உண்மைதானே!"

"அக்கா! அதைப் பற்றிச் சந்தேகிக்க வேண்டாம். இந்த உலகத்திலேயே நான் அன்பு வைத்திருப்பது இரண்டு பேரிடந்தான். ஒருவர் நாங்கள்..."

"இன்னொருவர் யார்?"

"உங்கள் மனதுக்கு அது தெரியும். என்னை ஏன் கேட்கிறீர்கள்...?"

"தங்காய்! உனக்கு அது சந்தோஷமாயிருக்கும் என்று நினைத்தேன். கதைகளும் காவியங்களும் நீ கேட்டதில்லையா? ஒரு பெண்ணின் உள்ளத்தில் காதல் உதயமானால் அதைப் பற்றி அவள் யாரிடமாவது பேச விரும்புவது இயல்பு அல்லவா? அந்தரங்கத் தோழி என்பது பின் எதற்காக...?"

"அது உண்மைதான், அக்கா! என் அந்தரங்கத்தையும், தங்களிடம் தெரியப்படுத்தியிருக்கிறேன். ஆனால் இப்போது நான் தங்களிடம் அவசரமாக வந்தது வேறு ஒரு செய்தி சொல்வதற்காக. மிக்க கவலை தரும் செய்தி, அக்கா!"

நந்தினி திடுக்கிட்டு, "என்ன? என்ன?" என்று கேட்டாள்.

எத்தனையோ காலமாகத் திட்டமிட்டுக் கொண்டிருந்தது என்று நிறைவேறலாம் என்று எண்ணியிருந்த காரியத்துக்கு ஏதாவது தடங்கல் ஏற்படுமோ என்ற பீதி அவள் மனத்தில் குடி கொண்டது. அதன் அறிகுறி அவள் முகத்திலும் தோன்றியது.

"அக்கா! தனாதிகாரி பழுவேட்டரையர் இன்னும் தஞ்சாவூருக்குப் போய்ச் சேரவில்லையாம். வழியில்..."

"வழியில் என்ன நேர்ந்தது? ஒருவேளை மனத்தை மாற்றிக் கொண்டு திரும்பி விட்டாரா?" என்று நந்தினி கேட்ட கேள்வியில் பீதி குறைந்திருக்கவில்லை.

"அப்படி அவர் திரும்பியிருந்தால் நன்றாயிருக்கும், அக்கா! அன்றைக்கு நாம் ஏரித் தீவில் இருந்தபோது புயல் அடித்ததல்லவா? அந்தப் புயல் கொள்ளிடத்திலும் அப்பாலும் ரொம்பக் கடுமையாக அடித்ததாம். பழுவேட்டரையர் கொள்ளிடத்தில் படகில் சென்றபோது புயல் பலமாக இருந்ததாம்..."

"அப்புறம்" என்று நந்தினி பரபரப்புடனேதான் கேட்டாள். ஆயினும் கவலைத் தொனி சிறிது குறைந்திருந்தது.

"அக்கரை சேரும் சமயத்தில் படகு கவிழ்ந்து விட்டதாம்!"

"ஐயோ!"

"தப்பிக் கரை ஏறியவர்கள் கொள்ளிடக் கரையில் எங்கும் தேடிப் பார்த்தார்கள். தங்கள் கணவர் மட்டும் அகப்படவில்லை!" என்றாள் மணிமேகலை.

இந்தச் செய்தியைக் கேட்டதும் நந்தினி விம்மி அழுவாள் என்று மணிமேகலை எதிர்பார்த்து, அவளுக்கு ஆறுதல் சொல்லத் தயாராயிருந்தாள். ஆனால் நந்தினியோ அப்படியொன்றும் செய்யவில்லை. சிறிதும் படபடப்புக் காட்டாமல், அவநம்பிக்கை தொனித்த குரலில், "இந்தச் செய்தி உனக்கு எப்படித் தெரிந்தது?" என்றாள்.

"பழுவேட்டரையரோடு போன ஆட்களில் ஒருவன் திரும்பி வந்திருக்கிறான். அவன் என் தமையனிடம் சொல்லிக் கொண்டிருந்தான். நானே என் காதினால் கேட்டேன், அக்கா! தங்களிடம் இந்தச் செய்தியை எப்படித் தெரிவிப்பது என்று என் தமையன் தயங்கி, இளவரசரிடம் யோசனை கேட்டுக் கொண்டிருந்தான். நான் எப்படியாவது தங்களிடம் சொல்லி விடுவது என்று ஓடி வந்தேன்..."

இவ்விதம் கூறிய மணிமேகலை துயரம் தாங்காமல் விம்மத் தொடங்கினாள். நந்தினி அவளைக் கட்டி அணைத்துக்கொண்டு, "என் கண்ணே! என்னிடம் நீ எவ்வளவு அன்பு வைத்திருக்கிறாய் என்று தெரிந்து கொண்டேன். ஆனால், நீ வருத்தப்பட வேண்டாம்!" என்றாள்.

மணிமேகலை சிறிது வியப்புடனேயே நந்தினியை நிமிர்ந்து பார்த்தாள். 'இவளுடைய நெஞ்சு எவ்வளவு கல் நெஞ்சு?' என்று அவள் மனத்தில் தோன்றிய எண்ணத்தை நந்தினி தெரிந்து கொண்டாள்.

"தங்காய்! துக்கச் செய்தியைக் கூறி எனக்கு ஆறுதல் சொல்லுவதற்காக நீ ஓடிவந்தாய். ஆனால் உனக்கு நான் தேறுதல் கூற வேண்டியிருக்கிறது. நீ வருத்தப்பட வேண்டாம். என் கணவருடைய உயிருக்கு ஆபத்து ஒன்றும் வரவில்லை என்பது நிச்சயம். அப்படி ஏதாவது நேர்ந்திருந்தால் என் நெஞ்சே எனக்கு உணர்த்தியிருக்கும். அதனாலேதான் நான் கவலைப்படவில்லை. ஆனால் நீ கேள்விப்பட்டதை இன்னும் விவரமாய்ச் சொல்! என் மனத்தில் வேறொரு சந்தேகம் உதித்திருக்கிறது..."

"என்ன சந்தேகம், அக்கா?"

"உன் தமையனும், அந்தப் பல்லவ பார்த்திபேந்திரனும் சேர்ந்து என் கணவருக்கு ஏதேனும் கெடுதல் செய்யத் திட்டமிட்டிருக்கிறார்களோ என்று எண்ணுகிறேன். அதற்கு, முன் ஜாக்கிரதையாக இம்மாதிரி ஒரு செய்தியை அவர்களே தயாரித்திருக்கலாமல்லவா?"

"எனக்கு விளங்கவில்லை, அக்கா! அவர்கள் ஏன் பழுவேட்டரையருக்குத் தீங்கு செய்ய வேண்டும்?"

"நீ பச்சைக் குழந்தையாகவே இருக்கிறாய், மணிமேகலை! உன் தமையனும் பார்த்திபேந்திரனும் என் மீது துர் எண்ணம் கொண்டிருக்கிறார்கள் என்று நான் சொல்லவில்லையா? அதற்காகத்தான் இந்த வாளை எப்போதும் அருகிலேயே வைத்துக் கொண்டிருக்கிறேன் என்றும் சொல்லவில்லையா?..."

"சொன்னீர்கள்; அதனால் கந்தமாறனை இனிமேல் என் தமையன் என்று சொல்லவேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டேன். அந்தப் பாதகனை என் உடன் பிறந்தவனாக நான் இனிக் கருதமாட்டேன். இருந்தாலும் அவர்கள் பழுவேட்டரையருக்கு ஏன் தீங்கு செய்ய வேண்டும்?"

"தங்காய்! இதுகூடவா நீ தெரிந்து கொள்ள முடியவில்லை? கிழவரைக் கலியாணம் செய்துகொண்டு தவிக்கும் நான், அவர் போய்விட்டால் மனத்திற்குள் சந்தோஷப்படுவேன். பிறகு அவர்களுடைய துர்நோக்கத்துக்கும் இணங்குவேன் என்றுதான். உன் தமையன் இப்படிப்பட்டவன் என்று தெரிந்திருந்தால் அவனை என் வீட்டில் வைத்திருந்து சகோதரனைப் போல் கருதி பணிவிடை செய்திருக்க மாட்டேன். யமலோகத்தின் வாசல் வரை சென்றவனைக் காப்பாற்றியிருக்க மாட்டேன்..."

"அக்கா! இனி நான் தங்களை விட்டு ஒரு கணமும் பிரிய மாட்டேன். அந்த இருவரில் ஒருவர் இங்கு வந்தால், என்னுடைய கையாலேயே அவர்களைக் கொன்று விடுவேன்!"

"மணிமேகலை? அந்தக் கவலை உனக்கு வேண்டாம். என்னை நானே காப்பாற்றிக் கொள்வேன். கந்தமாறனும், பார்த்திபேந்திரனும் என் அருகில் நெருங்கினால், என்றும் மறக்காதபடி அவர்களுக்குப் புத்தி கற்பித்து அனுப்புவேன். அவர்களிடம் எனக்குச் சிறிதும் பயமில்லை. முரட்டு இளவரசரைப் பற்றி மட்டுந்தான் கொஞ்சம் பயம் இருந்தது. நல்லவேளையாக அந்த அபாயத்தினின்று என்னை நீயே காப்பாற்றிவிட்டாய்!"

"நான் தங்களைக் காப்பாற்றினேனா? அது எப்படி?"

"இளவரசரின் உள்ளத்தை நீ கவர்ந்து விட்டாய் என்பதை அறியவில்லையா, மணிமேகலை! வாணர் குலத்து வீரரைக் கையைப் பிடித்து இழுத்து அப்பால் தள்ளிவிட்டு உன்னை அவர் ஏரித் தண்ணீரிலிருந்து எடுத்துக் காப்பாற்றியதன் காரணம் என்ன? அதற்குப் பிறகும் அவரை நான் கவனித்துக் கொண்டுதான் வருகிறேன். உன் மனதிற்கு அது தெரியவில்லையா, மணிமேகலை?"

"தெரியாமல் என்ன? தெரிந்துதானிருக்கிறது. இளவரசரை நினைத்தாலே எனக்குப் பயமாயிருக்கிறது. அவர் அருகில் வந்தால் என் உடம்பு நடுங்குகிறது. என் தமையன் என்று சொல்லிக் கொள்ளும் கிராதகன் இருக்கிறான் அல்லவா? அவன் வேறு ஓயாமல் என் பிராணனை வாங்கிக் கொண்டிருக்கிறான்.."

"இளவரசரை நீ மணந்து கொள்ளவேண்டும் என்று தானே?"

"ஆம்; தனியாக என்னை ஒரு கணம் பார்த்தால் போதும், உடனே எனக்கு அவன் உபதேசம் செய்ய ஆரம்பித்து விடுகிறான். அவனுடைய தொந்தரவுக்காகவே..."

"அவனுடைய தொந்தரவுக்காக இளவரசரை மணந்து கொண்டு விடலாம் என்று முடிவு செய்து விட்டாயா?"

"தாங்கள்கூட இவ்விதம் சொல்லுகிறீர்களே?" என்று மணிமேகலை விம்மி அழத் தொடங்கினாள். அவளுடைய கண்களில் கண்ணீர் அருவி பெருகிற்று.

நந்தினி அவளை சமாதானப்படுத்தினாள். "ஏதோ விளையாட்டுக்காகச் சொன்னேன். அதற்காக இப்படி அழ ஆரம்பித்துவிட்டாயே?" என்று சொல்லிக் கண்ணீரைத் துடைத்தாள்.

மணிமேகலை சிறிது சமாதானம் அடைந்ததும் "என் கண்ணே! உன் மனத்தை நன்றாகச் சோதித்துப் பார்த்துப் பதில் சொல். உண்மையாகவே நீ இளவரசர் கரிகாலரை விரும்பவில்லையா? அவரை மணந்து கொண்டு சோழ சாம்ராஜ்யத்தின் பட்டமகிஷியாக இருக்க ஆசைப்படவில்லையா?" என்றாள் நந்தினி.

"ஒரு தடவை கேட்டாலும் நூறு தடவை கேட்டாலும் என் பதில் ஒன்றுதான். அக்கா! அந்த ஆசை எனக்குக் கிடையவே கிடையாது."

"வாணர் குலத்து வந்தியத்தேவரிடம் உன் மனத்தைப் பறிக்கொடுத்திருக்கிறாய் என்பதும் உண்மை தானே?"

"ஆம், அக்கா! ஆனால் அவருடைய மனது எப்படியிருக்கிறதோ?"

"அவருடைய மனது எப்படியிருந்தால் என்ன? அவர் உயிரோடிருந்தால் அல்லவா அவர் மனத்தைப் பற்றிக் கேட்க வேண்டும்?"

மணிமேகலை திடுக்கிட்டு, "என்ன சொல்கிறீர்கள், அக்கா!" என்றாள்.

"மணிமேகலை! நீ இன்னும் உண்மையைத் தெரிந்து கொள்ளவில்லை. உன்னுடைய நிலைமையையும், உன் அன்புக்குரியவனுடைய நிலைமையையும் உணரவில்லை. என்னைப் பற்றி நீ கவலைப்படுகிறாய்; என் கணவரைப் பற்றிக் கவலைப்படுகிறாய். எங்களைப் பற்றி உண்மையில் கவலைப்படவேண்டியதேயில்லை. என் கணவர் எப்பேர்ப்பட்டவர் என்பது உனக்குத் தெரியும். அவர் வாயசைந்தால் இந்த நாடே அசையும். சுந்தரச் சோழ சக்கரவர்த்தி அவர் இட்ட கோட்டைத் தாண்ட மாட்டார். என் கணவர் வார்த்தைக்கு மாறாக முதன் மந்திரி வார்த்தையையும் கேட்க மாட்டார். அவருடைய சொந்தப் பெண்டு பிள்ளைகளின் பேச்சுக்கும் செவி கொடுக்கமாட்டார். பழுவேட்டரையரை வயதான கிழவர் என்று உன் தமையனைப் போன்ற மூடர்கள் எண்ணிப் பரிகாசமும் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர் ஒரு மூச்சு விட்டால், உன் தமையனையும், பார்த்திபேந்திரனையும் போன்ற நூறு வாலிபர்கள் மல்லாந்து விழுவார்கள். ஆகையால் பழுவேட்டரையருக்கு யாரும் தீங்கு செய்துவிட முடியாது. என் கண்ணே! என்னைக் காப்பாற்றிக் கொள்ளவும் எனக்குத் தெரியும். இதைக் காட்டிலும் எத்தனையோ இக்கட்டான நிலைமைகளில் என்னை நான் காப்பாற்றிக் கொண்டிருக்கிறேன். உண்மையாகவே இப்போது நான் கவலைப்படுவதெல்லாம் உன்னைப் பற்றித்தான். 'இந்தப் பெண் நம்மிடம் இவ்வளவு அன்பு வைத்திருக்கிறாளே? இவளுக்கு ஒன்றும் நேராமலிருக்க வேண்டுமே?' என்று கவலைப்படுகிறேன். நீ இந்த அறைக்குள் சற்றுமுன் வந்தபோது கூட உன்னைப் பற்றித்தான் சிந்தித்துக் கொண்டிருந்தேன்..."

"தாங்கள் சொல்வது ஒன்றும் புரியவில்லை, அக்கா! எனக்கு அப்படி என்ன அபாயம் வந்து விடும்?"

"பேதைப் பெண்ணே! வேண்டாத புருஷனுக்கு வாழ்க்கைப்படுவதைக் காட்டிலும் பெண்களுக்கு நேரக்கூடிய அபாயம் வேறு என்ன இருக்க முடியும்?"

"அது ஒரு நாளும் நடவாத காரியம்."

"உன் தமையன் உன்னை இளவரசருக்கு மணம் செய்விப்பது என்று தீர்மானம் செய்து விட்டான்; உன் தந்தையும் சம்மதித்து விட்டார்."

"அவர்களுடைய தீர்மானமும் சம்மதமும் என்னை என்ன செய்யும்? நான் சம்மதித்தால்தானே?"

"இப்படிக் குழந்தைபோல் பேசுகிறாய்! சிற்றரசர் குலத்துப் பெண்களைக் கலியாணம் செய்து கொடுப்பது, அந்தப் பெண்களின் சம்மதத்தைக் கேட்டுக் கொண்டுதான் உலகத்தில் நடைபெறுகிறதா? அதிலும், மூவுலகையும் ஆளும் சக்கரவர்த்தியின் மூத்தகுமாரர், - பட்டத்துக்கு இளவரசர், - உன்னை மணந்து கொள்ள விரும்பினால், அதற்கு யார் தடை சொல்ல முடியும்?"

"ஏன்? என்னால் முடியும். இளவரசரிடம் நேரே சொல்லி விடுவேன்."

"என்ன சொல்லுவாய்?"

"அவரை மணந்துகொள்ள எனக்கு இஷ்டம் இல்லை என்று சொல்வேன்."

"காரணம் கேட்டால்?"

"உண்மையான காரணத்தைத்தான் சொல்வேன். என் மனம் அவருடைய சிநேகிதர் வல்லவரையரிடம் ஈடுபட்டு விட்டது என்று சொல்வேன்."

"பேதைப் பெண்ணே! இதை நீ சொல்லவே வேண்டாம். அவர்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கிறது."

"தெரிந்திருந்தால் என்னை ஏன் வற்புறுத்துகிறார்கள்? அப்படி அதிகமாக வற்புறுத்தினால் இதோ நானும் ஒரு கத்தி வைத்திருக்கிறேன் அக்கா!" என்று சொல்லி மணிமேகலை தன் இடுப்பில் செருகியிருந்த சிறிய கத்தி ஒன்றை எடுத்துக் காட்டினாள்.

"என் அருமைத் தங்கையே! உன் அறியாமையைக் கண்டு ஒரு பக்கம் எனக்கு அழுகை வருகிறது. இன்னொரு பக்கம் சிரிப்பும் வருகிறது."

"அப்படி என்ன நான் உளறி விட்டேன் அக்கா!"

"உன்னை யாரோ வற்புறுத்தப் போவதாக எண்ணியிருக்கிறாய். உன்னுடைய சம்மதத்தைக் கேட்பார்கள் என்றும் நினைத்திருக்கிறாய். அவ்விதம் ஒன்றும் அவர்கள் செய்யப் போவதில்லை. நீ இளவரசரை மணந்து கொள்ளத் தடையாயிருக்கிற காரணத்தை நீக்கிவிடப் போகிறார்கள்!"

"என்ன சொல்லுகிறீர்கள்!"

"நீ யாரிடம் உன் மனத்தைப் பறி கொடுத்திருக்கிறாயோ, அவருடைய உயிருக்கு அபாயம் நெருங்கியிருக்கிறது என்று சொல்லுகிறேன்...!"

"ஐயையோ"

"உன் தமையன் ஏற்கெனவே அவருடைய பழைய சிநேகிதன் மீது துவேஷம் கொண்டிருக்கிறான். இந்த அரண்மனையில் சில மாதங்களுக்கு முன்னால் சிற்றரசர்கள் கூடிச் செய்த சதியாலோசனையைப் பற்றி இளவரசரிடம் சொல்லிக் கொடுத்துவிட்டான் என்று அவனுக்குக் கோபம். தன் முதுகிலே குத்திக் கொல்ல முயற்சித்ததாக வேறு குற்றம்சாட்டிக் கொண்டிருக்கிறான். வேறொரு காரணத்தினால் பார்த்திபேந்திரனுக்கும் உன் காதலன் பேரில் அளவில்லாத கோபம்..."

"இவர்களுடைய கோபம் அவரை என்ன செய்துவிடும். அக்கா! அவர் சுத்த வீரர் அல்லவா!"

"சுத்த வீரராயிருந்தால் என்ன? திடீரென்று சூழ்ந்து கொள்ளும் பல கொலைகாரர்களுக்கு மத்தியில் கையில் ஆயுதம் ஒன்றும் இல்லாத ஒரு சுத்த வீரன் என்ன செய்ய முடியும்?..."

"ஐயோ! அவரைக் கொன்று விடுவார்கள் என்றா சொல்லுகிறீர்கள்?"

"கொல்லமாட்டார்கள். கண்டதுண்டமாக வெட்டி நரிகளுக்கும் நாய்களுக்கும் போட்டு விடுவார்கள்..."

"ஐயோ! என்ன கர்ண கடூரம்!"

"கேட்பதற்கே உனக்குக் கடூரமாயிருக்கிறதே? உண்மையில் நடந்து விட்டால், என்ன பாடுபடுவாய்?"

"அக்கா! இப்போதே என் உயிரும் உள்ளமும் துடிக்கின்றன. நிஜமாக, அப்படியும் செய்து விடுவார்களா? அவர் இளவரசருடைய அத்தியந்த சிநேகிதர் ஆயிற்றே?"

"அத்தியந்த சிநேகிதர்கள் கொடிய பகைவர்களாக மாறுவதைப் பற்றி நீ கேட்டதில்லையா, தங்காய்! உன் தமையனும் பார்த்திபேந்திரனும் அப்படியெல்லாம் இளவரசரிடம் தூபம் போட்டு விட்டிருக்கிறார்கள்..."

"சண்டாளர்கள்! இதெல்லாம் தங்களுக்கு..."

"எனக்கு எப்படித் தெரிந்தது என்றுதானே கேட்கிறாய்? இன்று பகலில் பார்த்திபேந்திரன் என்னிடம் விடைபெற்று செல்லும் வியாஜ்யத்தை வைத்துக்கொண்டு வந்திருந்தான்..."

"அந்தப் பாதகன் எங்கே போகிறான்?"

"அதிக தூரம் போகவில்லை. திருக்கோவலூர்க் கிழவன் மலையமான் ஒரு பெரிய சைன்யத்தைத் திரட்டிக்கொண்டு இந்த ஊரை நோக்கி வந்து கொண்டிருக்கிறான் என்று நீ கேள்விப்பட்டாய் அல்லவா?"

"கேள்விப்பட்டேன், அது என்னத்திற்காக என்று ஆச்சரியப்பட்டேன்."

"அதுவும் உன் நிமித்தமாகத்தானாம்! இன்று மத்தியானம் இளவரசர் அதைப் பற்றிப் பிரஸ்தாபித்தாராம். 'மணிமேலையை எனக்கு மணம் செய்து கொடுக்காவிட்டால், மலையமான் சைன்யம் வந்தவுடன் இந்தக் கோட்டை - அரண்மனை எல்லாவற்றையும் தகர்த்துத் தரைமட்டமாக்கி விடப் போகிறேன்!' என்றானாம். அப்போதுதான் உன் தமையன் 'அதற்குத் தடையாயிருப்பது நாங்கள் அல்ல; உங்கள் சிநேகிதன் வந்தியத்தேவன்தான்' என்றாராம். 'அந்தத் தடையை நீக்க உங்களால் முடியாதா?' என்று இளவரசர் கேட்டாராம். 'கட்டளை அளித்தால் முடியும்' என்றானாம் உன் அண்ணன். என் அருமைச் சகோதரி! பார்த்திபேந்திரனிடம் மேலும் பேச்சுக் கொடுத்துச் சில விவரங்களை அறிந்தேன். உன் ஆருயிர்க் காதலனுடைய உயிருக்கு ஆபத்து நெருங்கியிருப்பது நிச்சயம். நீ உடனே முயற்சி எடுக்காவிட்டால், கலியாணம் ஆவதற்கு முன்பே கணவனை இழந்து விடுவாய்!" என்றாள் நந்தினி.

இதைக் கேட்ட மணிமேகலையின் உடலும் உள்ளமும் துடிதுடித்ததில் வியப்பு ஒன்றும் இல்லை அல்லவா?

"ஐயோ! அவருக்கு எப்படியாவது உடனே எச்சரிக்கை செய்ய வேண்டுமே!" என்று தட்டுத் தடுமாறிக் கொண்டே கூறினாள்.

"எச்சரிக்கை செய்யலாம் ஆனால், உன் காதலன் சுத்த வீரன் என்று நீ தானே சற்றுமுன் கூறினாய்? அவனுடைய உயிருக்கு அபாயம் என்று கேட்டுப் பயந்து ஓடி விடுவானா? மாட்டான்! இன்னும் அவனுடைய பிடிவாதம் அதிகமாகும்" என்றாள் நந்தினி.

"தாங்கள் தான் யோசனை சொல்லவேண்டும். என் தலை சுற்றுகிறது. என்ன செய்கிறது என்று தெரியவில்லை" என்றாள் மணிமேகலை.

"நீ இங்கே வரும்போது அதைப் பற்றித்தான் யோசித்துக் கொண்டிருந்தேன். எனக்கும் ஒன்றும் புரியவில்லை. நல்ல வேளையாக நீ ஒரு செய்தி கொண்டு வந்தாய். அதிலிருந்து, வல்லவரையரைக் காப்பாற்ற ஒரு யோசனை தோன்றியது."

"நான் கொண்டு வந்த செய்தியிலிருந்தா? அது என்ன செய்தி?"

"பழுவேட்டரையருடைய படகு கவிழ்ந்ததென்றும் பிறகு அவரைப் பற்றித் தகவல் தெரியவில்லை என்றும் சொன்னாய் அல்லவா?"

"ஆமாம்!"

"வந்தியத்தேவரிடம் நான் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். எனக்காக அவர் போய் என் கணவரைப் பற்றிய உண்மை தெரிந்து வரவேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். நீயும் எனக்காகப் பரிந்து பேசு. இரண்டு பேதைப் பெண்களின் வேண்டுகோளை அந்த வீரர் புறக்கணிக்க மாட்டார். அவரை உடனே இந்த இடத்திலிருந்து வெளியே அனுப்புவதுதான் அவர் உயிரைக் காப்பாற்றும் வழி. வேறு உபாயம் ஒன்றுமில்லை. அவர் போன பிறகு நீ உன் தமையனாரிடமும் தந்தையிடமும் இளவரசரிடமும் தைரியமாக உன் மனத்தை வெளியிட்டுப் பேசலாம். நானும் உனக்காகப் பேசுகிறேன். 'இஷ்டமில்லாத பெண்ணை வற்புறுத்துவது சோழ குலத்தில் பிறந்தவர்களுக்கு அழகு அல்ல' என்று சொல்லுகிறேன்."

"தங்கள் பேச்சையும் அவர்கள் கேட்காவிட்டால், என் கையில் கத்தி இருக்கிறது!"

"சரி, சரி! இப்போது முதலில் உன் காதலரை வெளியேற்றிக் காப்பாற்ற முயல்வோம். அவர் இருக்குமிடம் உனக்குத் தெரியும் அல்லவா? நீ நேரில் அவரைப் பார்க்க முடியாவிட்டால், உன் தோழி சந்திரமதியை அனுப்பு. இல்லாவிடில், இடும்பன்காரியை அனுப்பு, எப்படியாவது அவரை இங்கே அழைத்துக்கொண்டு வா!"

"அவர் போகச் சம்மதித்தாலும் இங்கேயிருந்து எப்படி வெளியில் போவார், அக்கா! என் அண்ணன் தடுத்து நிறுத்தி விட்டால்...?"

"உன் அண்ணனுக்கு ஏன் தெரிய வேண்டும், மணிமேகலை, முதன் முதலில் அவர் இந்த அறைக்குள் வந்து உன்னைத் திடுக்கிடச் செய்தாரே? அந்தச் சுரங்க வழியிலேயே அனுப்பி விட்டால் போகிறது! சீக்கிரம் போ, தங்காய்! வந்தியத்தேவர் இனி இந்தக் கோட்டையில் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் அவருடைய உயிருக்கு அபாயம் அதிகமாகும். உன் தமையன் ஏவும் கொலைகாரர்கள் எப்போது அவரைத் தாக்குவார்கள் என்று நமக்கு என்ன தெரியும்?"

"இதோ போகிறேன், அக்கா! எப்படியாவது அவரை அழைத்துக் கொண்டுதான் திரும்பி வருவேன்" என்று சொல்லி விட்டு மணிமேகலை சென்றாள்.

அவளுடைய காலடிச் சத்தம் மறைந்ததும், பக்கத்திலிருந்த வேட்டை மண்டபத்தின் இரகசியக் கதவை யாரோ தட்டுவது போன்ற சத்தம் கேட்டது.

நந்தினி இரகசியக் கதவின் அருகில் சென்று, அதன் உட்கதவைத் திறந்தாள்.

இருட்டில் ஒரு கோரமான முகம் இலேசாகத் தெரிந்தது.

"மந்திரவாதி! வந்துவிட்டாயா?" என்றாள் நந்தினி.

"வந்துவிட்டேன், ராணி! வேளையும் வந்துவிட்டது" என்றான் ரவிதாஸன்.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
தியாக சிகரம் - அத்தியாயம் 32

இறுதிக் கட்டம்

நந்தினி திரும்பிச் சென்று தனது அறைக்குள் வருவதற்காக ஏற்பட்ட பிரதான வாசலின் கதவைச் சாத்தித் தாளிட்டு வந்தாள். பின்னர், கையில் தீபத்துடன் வேட்டை மண்டபத்தின் இரகசியக் கதவைத் திறந்துகொண்டு உள்ளே பிரவேசித்தாள்.

மந்திரவாதி ரவிதாஸன் முன்னமே கோரமான முகமுடையவன். முகத்திலும் தலையிலும் புதிதாக ஏற்பட்டிருந்த காயங்களினால் அவனுடைய தோற்றம் மேலும் கோரமடைந்திருந்தது.

நந்தினி அதைப் பார்த்துவிட்டு, "மந்திரவாதி இது என்ன? உன் உடம்பெல்லாம் புதுக் காயங்கள்?" என்றாள்.

"ராணி! இதிலே தங்களுக்கு வியப்பு என்ன? தங்களைப் போல் நாங்கள் அறுசுவை உண்டி அருந்தி பஞ்சணை மெத்தையில் சொகுசாய்ப் படுத்துக் காலங் கழிப்பதாக எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா? நானும் பரமேசுவரனும் இன்று பிழைத்து வந்திருப்பதே பெரிய காரியம், இறந்துபோன பாண்டிய சக்கரவர்த்தியின் ஆவிதான் எங்களை இன்று உயிரோடிருக்கும்படி காப்பாற்றியது..."

"இல்லை, ரவிதாஸா! இல்லை! அவருடைய ஆவி என்னுடனேயே சதா சர்வ காலமும் இருக்கிறது. ஒரு நாழிகைக்கு முந்திக் கூட என் முன்னால் தோன்றிச் சபதத்தை நிறைவேற்றப் போகிறாயா, இல்லையா? என்று கேட்டது."

"ராணி! அதற்குத் தாங்கள் என்ன பதில் சொன்னீர்கள்?"

"'சபதத்தை இன்று நிறைவேற்றுவேன்; இல்லாவிடில் உயிரை மாய்த்துக் கொள்வேன்' என்று சொன்னேன்."

"அப்படியானால் நாங்கள் ஓடோ டி வந்ததே நல்லதாய்ப் போயிற்று. இத்தனை காலங்கழித்து நீங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளுவதில் யாருக்கு என்ன லாபம்? எடுத்த காரியம் அல்லவோ முடிவு பெற வேண்டும்? தங்களால் முடியாது என்றால்..."

"முடியாது என்று யார் சொன்னார்கள்? சபதத்தை நிறைவேற்றுவேன். அதற்குப் பிறகு என்னுடைய உயிரை மாய்த்துக் கொள்வேன்..."

"வேண்டாம், வேண்டாம். சபதத்தை நிறைவேற்றிய பிறகு தாங்கள் செய்யக்கூடிய காரியங்கள் எவ்வளவோ இருக்கின்றன. மதுரையில் வீரபாண்டியனுடைய திருக்குமாரனுக்கு உலகமறியப் பட்டாபிஷேகம் செய்தாக வேண்டும்..."

"அதையெல்லாம் நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். இன்று இரவு என் வேலை முடிந்துவிடும். என் வாழ்வும் முடிந்துவிடும்..."

"ராணி! பழுவேட்டரையருடைய பொக்கிஷத்தில் உள்ள திரவியங்கள் எல்லாம் மலைநாட்டுக்குப் போய்ச் சேர வேண்டும். அதற்குத் தங்கள் உதவி தேவையாயிருக்கிறது!"

"சபதம் முடிந்த பின்னரும், என் கணவரை ஏமாற்றிக் கொண்டு உயிர் வாழச் சொல்கிறாயா, மந்திரவாதி!"

"அம்மணி! தங்கள் கணவர் யார்?"

"உலகறிய என்னை, மணந்து, நாடு நகரங்களில் உள்ளவர்களின் பரிகாசங்களையெல்லாம் பொருட்படுத்தாமல், என் ஒவ்வொரு சபதத்தையும் நிறைவேற்றிக் கொண்டு வருகிற உத்தமரைத்தான் சொல்கிறேன்."

"ராணி! பழுவேட்டரையர் தங்கள் கணவர் அல்ல. ஒவ்வொரு நாள் இரவும் வீரபாண்டியர் என் கனவில் வந்து தங்களை அவருடைய பட்டமகிஷியாக நடத்தும்படி கட்டளையிடுகிறார்..."

"மந்திரவாதி! அவர் பேச்சு வேண்டாம். இந்தக் காயங்களெல்லாம் உனக்கு எப்படி ஏற்பட்டன என்று சொல்லவில்லையே?"

"நேற்றிரவு கொள்ளிடக் கரைக் காட்டில் எங்களை ஒரு கிழப் புலி தாக்கியது. கிழப் புலியானாலும் பற்களும் நகங்களும் மிக்க கூராயிருந்தன..."

"எப்படித் தம்பி வந்தீர்கள்?"

"பாண்டிய குமாரருக்குப் பட்டாபிஷேகம் நடத்தினோமே? அந்தப் பள்ளிப்படை கோபுரத்தில் இடிந்திருந்த பகுதியை அந்தப் புலியின் பேரில் தள்ளிவிட்டுத் தப்புவித்து வந்தோம்..."

"ஐயோ! பாவம்! கிழப் புலியைக் கூட நீங்கள் நேர் நின்று சண்டையிட்டு ஜயிக்க முடியவில்லை...!"

"ஆம், ராணி! ஒப்புக்கொள்கிறோம். அப்படியிருக்கும் போது இளம் புலியாகிய ஆதித்த கரிகாலனை நேருக்கு நேர் எதிர்ப்பது எப்படி? அதனாலேதான் தந்திர மந்திரங்களைக் கையாள வேண்டியிருக்கிறது. தேவி! இன்றிரவு தப்பினால் அப்புறம் நமக்குச் சந்தர்ப்பம் கிட்டப் போவதில்லை. சுந்தர சோழனையும் அருள்மொழிவர்மனையும் பற்றிச் செய்தி வந்துவிட்டால், பிறகு ஆதித்த கரிகாலன் நம்மிடம் அகப்படப் போவதில்லை..." என்றான் ரவிதாஸன்.

"மந்திரவாதி! அவர்களைப் பற்றி என்ன? ஏதாவது நிச்சயமாகத் தெரியுமா?" என்று கேட்டாள் நந்தினி.

"இத்தனை நேரம் அவர்களுடைய ஆயுள் முடிந்திருக்கும், சந்தேகமில்லை..."

"நீயும் தேவராளனும் ஈழத்துக்குப் போனபோது இப்படிச் சொல்லிவிட்டுத்தான் போனீர்கள்."

"அங்கே அந்த ஊமைப் பைத்தியம் ஓயாமல் எங்களைப் பின் தொடர்ந்து வந்து தொல்லை கொடுத்தது. அதனால்தான் முடியவில்லை..."

"வாணர் குலத்து வீரன் கடலில் மூழ்கி இறந்து விட்டதாகச் சொன்னீர்கள். அவனும் தப்பிப் பிழைத்து வந்து விட்டான்..."

"பள்ளிப்படைக் காட்டில் அவனை வேலை தீர்க்கச் சந்தர்ப்பம் கிடைத்தது. தாங்கள் தடுத்துவிட்டீர்கள்."

"அதற்கு முக்கிய காரணம் இருப்பதாகச் சொன்னேன்..."

"அது என்ன முக்கிய காரணமோ தெரியாது. அவன் இங்கே வந்து ஆதித்த கரிகாலனை இரும்புக் கவசம்போல் பாதுகாத்து வருகிறான்."

"அதைப் பற்றி நீ சிறிதும் கவலைப்பட வேண்டாம்."

"கவலைப்பட்டே தீரவேண்டியிருக்கிறது. இன்று இல்லாவிட்டால் என்றைக்கும் இல்லை. தேவி! என்ன ஏற்பாடு செய்திருக்கிறீர்கள்? நாங்கள் என்ன செய்ய வேண்டும்?"

"இந்தச் சமயத்தில் நீங்கள் ஒருவரும் இங்கு வராதிருந்தாலே எனக்குப் பெரிய உதவியாயிருக்கும்..."

"அது ஒருநாளும் முடியாத காரியம்."

"என்னிடம் உங்களுக்கு அவ்வளவு நம்பிக்கை இல்லை..."

"நம்பிக்கை இருப்பதினால்தான் வந்திருக்கிறோம். சபதம் முடிந்த பிறகு தங்களைப் பத்திரமாக அழைத்துக் கொண்டு போவதற்காக வந்திருக்கிறோம். எதிர்பாராத தடங்கல் ஏதாவது ஏற்பட்டால் அதற்கும் தயாராயிருப்போம். எந்த நிமிஷமும் தாங்கள் எங்களை உதவிக்கு அழைக்கலாம்."

"நான் போட்டிருக்கும் திட்டத்தில் தடங்கல் எதுவும் ஏற்படாது. சபதம் முடிந்த பிறகு நான் உயிரோடிருக்கவும் விரும்பவில்லை."

"கூடவே கூடாது! தாங்கள் எங்களுடன் வந்தே தீர வேண்டும். இல்லையென்றால்..."

"மந்திரவாதி! சபதம் முடிந்த பிறகு ஒரு நிமிஷமும் நான் பெரிய பழுவேட்டரையர் வீட்டில் இருக்க மாட்டேன்..."

"அப்படியானால் நீங்கள் எங்களுடன் வந்து விடுங்கள்!"

"என்னை எப்படி அழைத்துக் கொண்டு போவீர்கள்?"

"இந்தச் சுரங்கப் பாதையின் முடிவில் ஐயனார் கோவில் இருக்கிறது. அதன் அருகில் உள்ள காட்டில் பழுவூர் ராணியின் பல்லக்கைத் தயாராக வைத்திருக்கிறோம். இடும்பன்காரி பல்லக்கைச் செப்பனிடுவதற்கென்று முன்னமே வெளியிலே கொண்டு வந்து விட்டான். வீர பாண்டியனின் தலையைக் கொய்தவனைப் பழிவாங்கிய தேவியை நாங்களே பல்லக்கில் வைத்துத் தூக்கிச் செல்வோம். பொழுது விடிவதற்குள் கொல்லிமலைக்குப் போய் விடுவோம்."

"நீங்கள் எத்தனை பேர் இந்த இடத்தில் இருக்கிறீர்கள்?"

"இங்கே நாலு பேர் இருக்கிறோம்!" என்று கூறிவிட்டு ரவிதாஸன் மெதுவாகக் கையைத் தட்டினான்.

அந்த மண்டபத்தில் இருந்த பயங்கரமான செத்த மிருகங்களுக்குப் பின்னால் ஒளிந்திருந்தவர்கள் சிறிது வெளிப்பட்டு முகத்தைக் காட்டினார்கள்.

"பரமேசுவரன் எங்கே?" என்று நந்தினி கேட்டாள்.

"அவனை வெளியில் நிறுத்தியிருக்கிறேன். ஐயனார் கோவிலில் காளாமுகன் ஒருவன் நிஷ்டை செய்து கொண்டிருந்தான். அவனை அங்கிருந்து போகச் சொல்வது பெரிய தொல்லையாய்ப் போய் விட்டது. மறுபடியும் அவன் அங்கு வந்து விடாமல் பார்த்துக் கொள்ளும்படி தேவராளனைக் கோவில் வாசலில் நிறுத்திவிட்டு வந்திருக்கிறேன்..."

"காளாமுகனைப் பற்றி நமக்கு என்ன கவலை? மந்திரவாதி! பெரிய பழுவேட்டரையரைப் பற்றிய செய்தி தெரியுமா?" என்று நந்தினி கேட்டாள்.

ரவிதாஸன் சிறிது திடுக்கிட்டு, "என்ன செய்தி?" என்றான்.

"அவர் தஞ்சாவூருக்குப் பிரயாணப்பட்டுப் போனார் அல்லவா? வழியில் கொள்ளிடத்தைப் படகில் கடக்கும்போது புயல் அடித்துப் படகு கவிழ்ந்துவிட்டதாம். பழுவேட்டரையர் கரையேறவில்லையென்றும், தண்ணீரில் மூழ்கிப் போய்விட்டதாகவும் சம்புவரையனுக்கு இன்று சாயங்காலம் செய்தி வந்திருக்கிறதாம்!"

"தெய்வமே? அவர் கதி அப்படியா ஆயிற்று? இத்தனை நேரம் தாங்கள் இந்த முக்கிய விவரத்தைப் பற்றிச் சொல்லவில்லையே?"

"அதை நான் நம்பவில்லை, மந்திரவாதி! பழுவேட்டரையர் கொள்ளிடத்தில் முழுகி இறந்திருப்பார் என்று எனக்குத் தோன்றவில்லை."

"எனக்கும் அந்தச் செய்தியில் நம்பிக்கை இல்லை, ராணி!"

"அவர் கொள்ளிடத்தின் இக்கரைக்கு நீந்தி வந்திருந்தால் என்ன செய்கிறது? ஒருவேளை இன்றிரவு இங்கு வந்து விட்டால்?... இதைப் பற்றித்தான் சிறிது கவலைப்படுகிறேன்..."

"ராணி! அதைப் பற்றித் தங்களுக்குக் கவலை வேண்டாம். இப்போதுதான் எனக்கும் நினைவு வருகிறது. கொள்ளிடத்துக்கு அக்கரையில் தஞ்சாவூர்ச் சாலையில் ஆஜானுபாகுவான மனிதர் ஒருவரை நேற்றிரவு பார்த்தேன். ஆடை ஆபரணம் ஒன்றும் அவர் அணிந்திருக்கவில்லை. இருட்டாகவும் இருந்தபடியால் அடையாளம் தெரியவில்லை. இப்போது யோசித்தால், அந்த வழிப்போக்கர் ஒருவேளை பெரிய பழுவேட்டரையராகத்தான் இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது!"

"அப்படியானால், நிச்சயமாக இன்றிரவு அவர் இங்கே வந்து விடமாட்டார் அல்லவா?"

"மாட்டவே மாட்டார்! அதைப் பற்றித் தாங்கள் தைரியமாக இருக்கலாம். இப்பொழுது எங்களுக்கு என்ன கட்டளையிடுகிறீர்கள்?"

"மந்திரவாதி! நீங்கள் இங்கேயே பொறுமையுடன் காத்திருக்க வேண்டும். என்னுடைய அறையில் என்ன நடப்பதாகத் தோன்றினாலும், எத்தனை பேருடைய பேச்சுக் குரல் கேட்டாலும் அவசரப்பட்டு உள்ளே வரவேண்டாம். வந்தால் காரியம் கெட்டுப் போகும். நான் குரல் கொடுத்த பிறகு நீங்கள் வந்து சேருங்கள்!"

"ராணி! தாங்கள் எப்படிக் குரல், கொடுப்பீர்கள்?"

"மந்திரவாதி! நான் கலகலவென்று சிரித்துப் பல வருஷம் ஆயிற்று என்று தெரியும் அல்லவா? நான் சிரித்து நீ கேட்டேயிருக்க மாட்டாய்!"

"தேவி! ஒரே ஒரு சமயம் அந்தத் துஷ்ட வாலிபன் வந்தியத்தேவனுடன் பேசிக் கொண்டிருந்தபோது நீங்கள் சிரிக்கக் கேட்டேன்..."

"ஆகா! அதைக்கூட ஞாபகம் வைத்துக்கொண்டிருக்கிறாயா? நல்லது! இன்றைக்கு நான் கலகலவென்று உரத்துச் சிரிக்கும் சத்தம் கேட்டால் நீங்கள் இரகசியக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வாருங்கள். காரியம் முடிந்துவிட்டதற்கு அது அடையாளம். இப்போதும் வந்தியத்தேவனைப் பார்த்தே நான் சிரித்துக் கொண்டிருந்தாலும் இருப்பேன். அதைப் பற்றி நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்..."

"தேவி! தங்களுடைய உத்தேசம் என்னவென்பது ஒருவாறு இப்போது எனக்குத் துலங்குகிறது..."

"கொஞ்சம் பொறுத்திருந்தால், எல்லாம் துலாம்பரமாகிவிடும். எதிர்பாராத தடங்கல் ஏதாவது ஏற்பட்டுவிட்டால், அப்போது என் அழுகைக் குரல் கேட்கும். உடனே வந்து சேருங்கள்..."

"அப்படியே செய்வோம், ராணி! ஆனால் தங்கள் அழுகைக் குரலைக் கேட்க நான் விரும்பவில்லை. சிரிப்புக் குரலைக் கேட்கத்தான் விரும்புகிறேன்" என்றான் மந்திரவாதி ரவிதாஸன்.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
தியாக சிகரம் - அத்தியாயம் 33

"ஐயோ! பிசாசு!"

அதே சமயத்தில் வந்தியத்தேவன் மிக்க மனச் சோர்வுடன் மாளிகையைச் சேர்ந்த நந்தவனத்தில் உலாவிக் கொண்டிருந்தான். அந்த நந்தவனம் மாளிகையில் வெளி மதில் சுவர் ஓரமாக அமைந்திருந்தது. இரவில் மலரும் புஷ்பங்கள் அப்போதுதான் மடல் அவிழ்ந்து கொண்டிருந்தன. பன்னீர், பாரிஜாதம், மல்லிகை, முல்லை முதலிய மலர்களின் நறுமணத்தை ஐப்பசி மாதத்தின் வாடைக் காற்று அவன் பக்கமாகக் கொண்டு வந்து வீசியது. "ஆகா! இந்த நேரத்தில் பழையாறை அரண்மனை நந்தவனத்தில் நாம் இருக்கக் கூடாதா? அப்படியிருக்கும்போது திடீரென்று குந்தவை தேவியின் பாதச் சிலம்பு ஒலிக்கக் கூடாதா?" என்று அவன் மனம் எண்ணமிட்டது. "இங்கே வந்து கடம்பூர் அரண்மனையில் அகப்பட்டுக் கிடக்கிறோமே? வெறி பிடித்த இளவரசரிடம் அகப்பட்டுக் கொண்டு விழிக்கிறோமே?" என்று நினைத்தான். ஆதித்த கரிகாலர் என்றுமில்லாத வண்ணம் அன்று மாலை அவன்மீது சீறி எரிந்து விழுந்ததும், "இனி என்றைக்கும் என் முகத்தில் விழிக்காதே! நாளைப்பொழுது விடிந்தபிறகு உன்னைப் பற்றி என் முடிவைத் தெரிவிக்கிறேன்" என்று கூறியதும் அவன் மனத்தைப் புண்படுத்தியிருந்தன. ஒரு நாளுமில்லாத விதமாக அவர் இன்று கோபித்துக் கொண்டு விட்டார். பாவம்! அவர்மீது குறைப்பட்டு என்ன பயன்? அவர் உள்ளம் அவ்விதமாக குழம்பிவிட்டிருக்கிறது. அவர் நிலையை நினைத்துப் பார்க்கும் போது வந்தியத்தேவனுக்கு அவர் மீது பரிதாபமே உண்டாயிற்று.

அன்றெல்லாம் ஆதித்த கரிகாலரின் உன்மத்தம் உச்ச நிலையை அடைந்திருந்தது. உற்சாகமும் சோர்வும், கோபமும், குதூகலமும், சிநேகப் பான்மையும், கொடூரப் பகைமையும், மாறிமாறி அவரைப் பிடித்து ஆட்டி வைத்தன. அவரும் தம்மைச் சுற்றியிருந்தவர்களை அம்மாதிரி ஆட்டி வைத்துக் கொண்டிருந்தார். அடுத்த நிமிஷம் அவருடைய போக்கு எப்படியிருக்குமோ, என்ன செய்வாரோ என்று அருகிலிருந்தவர்கள் கதி கலங்கிக் கொண்டிருந்தார்கள்.

அன்றைக்குச் சூரியன் உதயமானதிலிருந்து வந்து கொண்டிருந்த செய்திகள் அவருடைய உன்மத்தத்தை அதிகமாக்க உதவி செய்து கொண்டிருந்தன. சம்புவரையர் முதன் முதலாக அவரிடம் வந்து, திருக்கோவலூர் மலையமான் படை திரட்டிக் கொண்டு வருகிற செய்தியைத் தெரிவித்தார். அதைப்பற்றித் தமது ஆட்சேபத்தையும், கண்டனத்தையும் தெரிவித்துக் கொண்டார்.

"மலையமான் தொண்டு கிழவர். வயது எண்பதுக்கு மேலாகிறது. அவர் வருவதைக் குறித்து உங்களுக்கு என்ன பயம்?" என்றார் இளவரசர்.

"ஐயா! கொல்லிமலைத் தலைவன் வல்வில் ஓரியின் வம்சத்தில் வந்தவர்கள் நாங்கள். பயம் என்றால் இன்னதென்று அறியாதவர்கள். தாங்கள் இங்கு விஜயம் செய்திருப்பதை முன்னிட்டே தயங்குகிறேன். தாங்கள் மட்டும் அனுமதி கொடுத்தால்..."

"கிழவரோடு போர் புரிவதற்கு உடனே புறப்பட ஆயத்தமாயிருக்கிறீர்கள். அவ்வளவுதான்! சம்புவரையரே! என் பாட்டனைப் படையுடன் புறப்பட்டு வரும்படி நான்தான் செய்தி அனுப்பினேன்!"

"எதற்காக, இளவரசே?"

"நான் இங்கே உங்களிடம் தனியாக அகப்பட்டுக் கொண்டிருக்கிறேன் அல்லவா? இங்கே இருக்கும்போது எனக்கு ஏதாவது நேர்ந்தால்..."

"கோமகனே! அப்படிப்பட்ட சந்தேகம் அணுவளவும் தங்கள் மனத்தில் இருந்தால், இந்தக் கணமே..."

"இங்கிருந்து என்னைக் கிளம்பிவிடச் சொல்கிறீர்களாக்கும்!"

"ஐயா! இது தங்களுடைய இராஜ்யம். இது தங்களுடைய அரண்மனை. இதன் உச்சியில் புலிக்கொடி பறக்கிறது. இங்கிருந்து தங்களைப் போகச் சொல்வதற்கு நான் யார்? தாங்கள் அனுமதி கொடுத்தால் நானும் என் குடும்பத்தாரும் இங்கிருந்து போய் விடுகிறோம். மிலாடுடையார் மலையமானை வரவழைத்து வைத்துக் கொண்டு தாங்கள் நிர்ப்பயமாக இங்கே இருக்கலாம்."

"ஓகோ! வல்வில் ஓரியின் வம்சத்தில் பிறந்த நீங்கள் பயமறியாதவர்கள் என்றும், விஜயாலய சோழரின் குலத்தில் பிறந்த நான் பயங்கொள்ளி என்றும் சொல்லிக் காட்டுகிறீரா?"

"இளவரசரின் வைர நெஞ்சமும், வீர தீரமும் உலகம் அறிந்தவை. பன்னிரண்டாம் பிராயத்தில் தாங்கள் சேவூர்ப் போர்க்களத்தில் புகுந்து பகைவர்களைச் சின்னா பின்னம் செய்து வீராதி வீரன் என்று பெயர் பெற்றீர்கள். பதினெட்டாம் பிராயத்தில் மறுபடி போருக்கு வந்த வீரபாண்டியனைத் தொடர்ந்து துரத்திச் சென்று ஒளிந்திருந்த இடத்தில் அவனைக் கண்டுபிடித்து அவன் சிரத்தைத் துண்டித்துக் கொண்டு வந்தீர்கள்..."

இதைக்கேட்ட ஆதித்த கரிகாலன், "தெரியும், ஐயா! தெரியும்! ஓடியவனைத் துரத்திய வீரப்புலி நான் என்றும், செத்துப் போன வீர பாண்டியனுடைய தலையை வெட்டிக் கொண்டு வந்தவனென்றும் நீங்கள் எல்லோரும் என்னைப் பரிகசித்துப் பேசுவது எனக்குத் தெரியும்; அந்தப் பழுவூர் மோகினிப் பேய் அத்தகைய வதந்திகளைக் கிளப்பி விட்டிருக்கிறாள் என்பதும் எனக்குத் தெரியும்!" என்று கூறிவிட்டுப் பயங்கரத் தொனியில் சிரித்தார்.

சம்புவரையருக்கு ஏன் இந்த வெறிகொண்ட இளவரசரிடம் பேச்சுக் கொடுத்தோம் என்று ஆகிவிட்டது.

"கோமகனே! நான் எது சொன்னாலும் தவறாகப் போய் விடுகிறது. தங்கள் உசிதம் எப்படியோ அப்படிச் செய்யுங்கள். நான் போய் வருகிறேன்."

"போய் வருவது சரிதான்; ஆனால் இந்தக் கோட்டையை விட்டுப் போகும் எண்ணத்தை மட்டும் விட்டு விடுங்கள். இந்த அரண்மனையில் நான்கு மாதங்களுக்கு முன்னால் நடந்த சதியாலோசனையைப் பற்றிய உண்மையை அறிந்து கொள்ளும் வரையில் நானும் இந்த இடத்தை விட்டுப் போகப் போவதில்லை; நீங்கள் போவதற்கும் விடப்போவதில்லை!" என்றார் ஆதித்த கரிகாலர்.

சம்புவரையரின் உதடுகள் துடித்தன. உடம்பு நடுங்கியது. அவருடைய கண்களில் கண்ணீர் ததும்பியது.

இந்த நிலையைப் பக்கத்தில் இருந்த பார்த்திபேந்திரன் பார்த்தான். "கோமகனே! சோழக் குலத்தவர் வீரத்திற்குப் புகழ் பெற்றது போலவே நீதிக்கும் பெயர் பெற்றவர்கள். இந்தப் பெரியவருக்குத் தாங்கள் நீதி செய்யவில்லை. தங்கள் வார்த்தைகளினால் அவருடைய மனத்தைப் புண்படுத்துகிறீர்கள். இங்கு நடந்த சிற்றரசர் கூட்டத்தைப் பற்றிச் சம்புவரையர் முன்னமே தக்க சமாதானம் சொல்லித் தாங்களும் ஒப்புக் கொண்டிருக்கிறீர்கள். தாங்கள் இராஜ்யம் வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருப்பதாலும், தஞ்சாவூருக்குப் போகவே மறுப்பதாலும், சிற்றரசர்கள் சோழ ராஜ்யத்தின் நன்மையைக் கருதி அடுத்த பட்டத்துக்கு யார் என்பதைப் பற்றி யோசித்தார்கள். தாங்கள் ராஜ்ய பாரத்தை வகிக்க இசைந்தால், அவர்கள் ஏன் வேறு யோசனை செய்ய வேண்டும்? உலகமெல்லாம் வீரப் புகழ் பரப்பிய ஆதித்த கரிகாலர் இருக்கும்போது, போர்க்களத்தையே பார்த்தறியாத மதுராந்தகத்தேவனைப் பற்றி இவர்கள் கனவிலும் கருதுவார்களா?..."

ஆதித்த கரிகாலர் குறுக்கிட்டு, "ஆமாம், ஆமாம்! நான் உயிரோடிருக்கும்போது இன்னொருவன் சோழ சிங்காதனம் ஏறுவது இயலாத காரியந்தான். அதற்காகத்தான் என்னை வேலை தீர்த்துவிடப் பார்க்கிறார்கள்!" என்று கூறிவிட்டு மறுபடியும் ஹா ஹா ஹாவென்று உரத்துச் சிரித்தார்.

"பார்த்திபேந்திரா! நீயும் இவர்களுடன் சேர்ந்து கொண்டதை நான் அறியவில்லையென்றா நினைத்தாய்? கந்தமாறனும் நீயும் அன்று நாம் வேட்டைக்குப் போனபோது என் பின்னாலேயே வேலைக் குறி பார்த்துக்கொண்டு வந்தது எனக்குத் தெரியாது என்றா நினைத்தாய்? என் உண்மை நண்பனாகிய இந்த வந்தியத்தேவன் மட்டும் தெய்வாதீனமாக இங்கு வந்து சேர்ந்திராவிட்டால் இதற்குள் என்னை யமனுலகத்துக்கு அனுப்பியிருக்க மாட்டீர்களா?" என்று சொன்னார்.

பார்த்திபேந்திரன் வந்தியத்தேவனைக் கண்ணாலேயே கொன்று விடுகிறவனைப்போல் பார்த்துவிட்டு, "ஐயா! இந்தப் பாதகன் ஏதேதோ சொல்லித் தங்கள் மனத்தைக் கெடுத்து விட்டான். தங்களுக்கு நான் மனத்தினாலும் துரோகம் எண்ணியதாக இவன் நிரூபித்துவிட்டால், இந்தக் கணமே..." என்றான்.

"அப்பனே! உன் மனத்தில் எண்ணிய துரோகத்தை யார் எப்படி நிரூபிக்க முடியும்? நான் கேட்கும் கேள்விக்குப் பதில் பேச்சைக் கேட்டு மயங்கித்தானே என்னை இங்கே அழைத்து வர இவ்வளவு பிரயத்தனம் செய்தீர்கள்? இதை இல்லையென்று நீ மறுக்க முடியுமா?"

"அதை மறுக்கவில்லை, இளவரசே! மறுக்க வேண்டிய அவசியமும் இல்லை. பழுவூர் ராணி மிக நல்ல நோக்கத்துடனே இந்தக் காரியத்தில் தலையிட்டிருக்கிறார் என்பதை நான் நிச்சயமாய் அறிவேன். தங்களை இங்கு தருவித்துக் கந்தமாறனுடைய சகோதரியைத் தங்களுக்கு மணம் புரிவித்துச் சோழ நாட்டில் எவ்வித உட்கலகமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதே அவருடைய நோக்கம். தங்களுடைய சிரஸில் சோழகுலத்து மணி மகுடத்தை அணிந்து பார்ப்பதைக் காட்டிலும் எங்களுக்கெல்லாம் மகிழ்ச்சி தரக்கூடியது வேறு ஒன்றுமில்லை. என்னை யாராவது குறை கூறினாலும் பொறுத்துக்கொள்வேன். பழுவூர் ராணியைப் பற்றி நிந்தை சொன்னால், அவனை அக்கணமே இந்த வாளுக்கிரை யாக்குவேன்!" என்று பார்த்திபேந்திரன் வந்தியதேவனைப் பார்த்துக்கொண்டே கூறி, அதே சமயத்தில் வாளையும் உறையிலிருந்து உருவினான்.

"ஆகா என் வீர நண்பா! வாளை உறையிலே போட்டு வை! நல்ல சமயம் வரும்போது சொல்கிறேன். அப்போது வெளியில் எடுக்கலாம். வந்தியத்தேவன் பழுவூர் ராணியைப் பற்றி ஒன்றும் குறை கூறவில்லை. அவனும் உங்களைப் போலத்தான் மதி மயங்கி நிற்கிறான். உண்மையில், பழுவூர் இளையராணி என் உடன்பிறந்த சகோதரி என்று சத்தியம் செய்து கொண்டிருக்கிறான். அதைச் சொல்வதற்காகவே ஓடோ டியும் வந்தான். உன் பேரில் அவன் வேறு குற்றம் சாட்டுகிறான். என் சகோதரனை நீ ஈழ நாட்டிலிருந்து உன் கப்பலில் அழைத்துக் கொண்டு வந்து வழியில் கடலில் தள்ளி மூழ்க அடித்துவிட்டாய் என்று அவன் சொல்கிறானே? அதற்கு உன் பதில் என்ன?" என்றார் ஆதித்த கரிகாலர்.

அந்தச் சமயத்தில், "நான் அதற்குப் பதில் சொல்கிறேன்!" என்று கூறிக் கொண்டே கந்தமாறன் அங்கு வந்தான்.

"கோமகனே! மிகச் சந்தோஷமான செய்தி கொண்டு வந்திருக்கிறேன். சின்ன இளவரசர் கடலில் முழுகிச் சாகவில்லை. பொன்னியின் செல்வர் நாகைப்பட்டினம் சூடாமணி விஹாரத்தில் இத்தனை நாளும் மறைந்து இருந்து வந்தாராம். புயல் அடித்துக் கடல் பொங்கி நாகைப்பட்டினம் நகரில் புகுந்த போது அவர் வெளிப்பட நேர்ந்ததாம். லட்சக்கணக்கான ஜனங்கள் புடை சூழ இப்போது தஞ்சாவூரை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறாராம்!" என்று கந்தமாறன் குதூகலத்துடன் கூறினான்.

இந்தச் செய்தியினால் கரிகாலர் உற்சாகமடைவார் என்று, எதிர்பார்த்ததில் அவன் பெரும் ஏமாற்றமடைந்தான்.

கரிகாலருடைய குரோதம் இப்போது வேறு திசையில் திரும்பியது. "என்ன? என்ன? அருள்மொழி தஞ்சாவூரை நோக்கிப் போகிறானா? லட்சக்கணக்கான ஜனங்கள் புடை சூழப் போகிறானா? எதற்காக? வல்லவரையா? நீ என்ன சொன்னாய்? இப்போது நடப்பதென்ன? என்னுடைய கருத்தை அறிந்து கொள்ளும் வரையில் அருள்மொழி நாகைப்பட்டினத்திலேயே இருப்பான் என்று சொன்னாய் அல்லவா? இப்போது ஏன் தஞ்சாவூரை நோக்கிப் போகிறான்?..."

வந்தியத்தேவன் குறுக்கிட்டுப் பேசினான்:- "ஐயா! இளைய பிராட்டி அவ்வாறுதான் உறுதியாகக் கூறினார். அதற்குப் பின்னர் என்ன காரணம் நேர்ந்ததோ தெரியவில்லை. நான் வேணுமானால் போய்..."

"ஆகா! நீயும் போய்விடுகிறேன் என்கிறாயே? நல்லது நல்லது! எல்லாருமே என் விரோதிகள் ஆகிவிட்டீர்கள். உங்கள் சூழ்ச்சியெல்லாம் எனக்குத் தெரிகிறது. அருள்மொழி ஏன் தஞ்சாவூரை நோக்கிப் போகிறான் என்று எனக்குத் தெரியும். அது அந்தக் கொடும்பாளூர்ப் பெரிய வேளானின் சூழ்ச்சி. அவனுடைய தம்பி மகளை என் சகோதரன் கழுத்தில் கட்டி அவர்களைச் சோழ சிங்காதனத்தில் ஏற்றி வைக்க வேண்டுமென்பது அக்கிழவனுடைய விருப்பம். கொடும்பாளூர் வேளானும் தென்திசைப் படையுடன் தஞ்சையை நோக்கி வருவதாகக் கேள்விப்பட்டேன். என் சகோதரி இளையபிராட்டியும் இந்தச் சூழ்ச்சியில் ஈடுபட்டிருக்கிறாள். ஆமாம்; நீயும் கூடத்தான்..."

வந்தியத்தேவன், "இளவரசே! மன்னியுங்கள்! பொன்னியின் செல்வருக்காவது, இளையபிராட்டிக்காவது அத்தகைய எண்ணம் சிறிதும் கிடையாது. இது சத்தியம், நான் வேணுமானால், போய் உண்மையை அறிந்து வருகிறேன்!" என்றான்.

"ஆமாம், நீயும் போய் அவர்களுடைய சூழ்ச்சியில் கலந்து கொள்கிறேன் என்கிறாய்! கந்தமாறா! இவனை உடனே பிடித்து இந்த அரண்மனையில் சுரங்கச் சிறை ஏதாவது இருந்தால் அதில் அடைத்துவிடு!" என்றதும் கந்தமாறன் வெகு குதூகலத்துடன் வந்தியத்தேவனை அணுகினான்.

உடனே கரிகாலர் தமது கட்டளையை மாற்றிக்கொண்டு, "வேண்டாம்! வேண்டாம்! சோழர் குலத்தவர்கள் நீதி தவறாதவர்கள். குற்றம் நிச்சயமாகிறவரையில் தண்டிக்க மாட்டார்கள். வல்லவரையா! இனிமேல் இன்று முழுவதும் என் முகத்தில் விழிக்காதே! அதுதான் உனக்குத் தண்டனை! உன்னைத் தஞ்சைக்கு அனுப்புகிறேனா, சிறைக்கு அனுப்புகிறேனா? என்பதைப் பற்றி நாளைக்குச் சொல்கிறேன் போ! போ! இனி ஒரு கணமும் இங்கே நில்லாதே! போய்விடு" என்றார்.

கரிகாலருடைய முகத்தை அப்போது வந்தியத்தேவன் பார்த்தான். அவருடைய கடைக் கண்ணின் சமிக்ஞை "இதெல்லாம் விளையாட்டு!" என்று குறிப்பிடுவதுபோல் தோன்றியது. ஆயினும் உன்மத்தம் கொண்டிருந்த இளவரசர் பக்கத்தில் இல்லாமலிருப்பதே நல்லது என்று ஒரு நொடியில் தீர்மானித்துக்கொண்டு வந்தியத்தேவன், "ஐயா, தங்கள் சித்தம் என் பாக்கியம்!" என்று சொல்லிவிட்டு வெளியேறினான்.

பின்னர் அன்று பிற்பகலில் இளவரசரின் கட்டளையின் பேரில் சம்புவரையரும், பார்த்திபேந்திரனும் திருக்கோவலூர்க் கிழாரை எதிர்கொண்டு அழைத்து வருவதற்காகப் போனார்கள் என்று வல்லவரையன் வந்தியத்தேவன் தெரிந்து கொண்டான்.

இளவரசரும், கந்தமாறனும் நெடுநேரம் அந்தரங்கமாக வார்த்தையாடிக் கொண்டிருந்ததையும் அறிந்தான்.

இந்தச் சம்பவங்களெல்லாம் வந்தியத்தேவனுக்கு மிக்க மனச்சோர்வை உண்டாக்கியிருந்தன. மறுநாள் காலையில் இளவரசர் தனக்கு என்ன கட்டளை பிறப்பிப்பார்? தஞ்சாவூருக்குப் போகும்படி பணிப்பாரா? வழியில் பழையாறைக்குப் போகும்படியும் சொல்வாரா? சொன்னால் எவ்வளவு நன்றாயிருக்கும்? இந்தக் கடம்பூர் மாளிகை வாழ்வு அவனுக்குப் பிடிக்கவே இல்லை. இங்கே யாரும் உற்சாகமாக இருப்பதில்லை. இங்கே உள்ளவர்கள் எல்லாரும் எப்போதும் எதையோ பறி கொடுத்தவர்களைப் போலிருக்கிறார்கள். அஸ்தமித்து விட்டால் இந்த மாளிகை, மனிதர்கள் வாழும் மாளிகையாகவே தோன்றவில்லை. பேய் பிசாசுகள் குடி கொண்டிருக்கும் பாழடைந்த மாளிகையாகத் தோன்றுகிறது. இங்கேயிருந்து எப்போது, எப்படிக் கிளம்பப் போகிறோம்?...

இப்படி வந்தியத்தேவன் எண்ணமிட்டபோது ஒரு பெண்ணின் குரல், "ஐயோ பிசாசு!" என்று அலறியது அவன் காதில் விழுந்தது.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
தியாக சிகரம் - அத்தியாயம் 34

"போய் விடுங்கள்!"

"ஐயோ! பிசாசு!" என்ற பீதி நிறைந்த குரல் வந்த திசையை நோக்கி வந்தியத்தேவன் விரைந்து ஓடினான். ஓடும்போதே அவன் உள்ளத்தில், "இது மணிமேகலையின் குரல் அல்லவா? இவள் எதற்காக இந்நேரத்தில் இங்கு வந்தாள்? எதைப் பார்த்துவிட்டு இப்படி அலறினாள்? பிசாசு என்பது ஒன்று இருக்க முடியாது. பின் என்னவாயிருக்கும்? குரலில் உண்மையான பயம் தொனித்ததே? அவளை இப்போது நாம் அணுகிச் செல்வதிலிருந்து ஏதாவது தொல்லை ஏற்படுமோ? அவளுடைய தமையனோ நம்மைக் கடித்துத் தின்று விட வேண்டுமென்றிருக்கிறான். ஆதித்த கரிகாலர் வெறி கொண்டிருக்கிறார். பழுவூர் ராணி மனத்தில் என்ன வஞ்சம் வைத்திருக்கிறாளோ, ஒன்றும் தெரியவில்லை!... என்ற எண்ணங்கள் துரிதமாகத் தோன்றி மறைந்தன. இப்படி உள்ளத்தில் கலக்கம் இருந்தபடியால் அவன் கவனக் குறைவு அடைந்திருந்தான். திடீரென்று ஒரு பன்னீர் மரத்தின் வேர் தடுக்கித் தரையில் விழுந்தான். மேல் துணியின் தலைப்பு, பக்கத்திலிருந்த பூம்புதரில் சிக்கிக் கொண்டது. விழுந்தவன் சமாளித்து எழுந்து உட்கார்ந்து அங்கவஸ்திரத்தை மெள்ள எடுக்க முயன்றான். எத்தனையோ பகைவர்களும் சதிகாரர்களும் செய்ய முடியாத காரியத்தை இந்தச் சிறிய மரத்தின் வேர் செய்துவிட்டதே! நம்மைக் கீழே தள்ளி விட்டதே! இது ஏதேனும் அபசகுனத்துக்கு அறிகுறியோ? அல்லது நம்மை ஆபத்துக்கு உள்ளாக்காமல் இந்த மரவேர் தடுத்து ஆட்கொள்கிறதோ என்று எண்ணி வந்தியத்தேவன் தனக்குத்தானே புன்னகை புரிந்து கொண்டான்.

அச்சமயம், "அம்மா! அம்மா! எங்கே இருக்கிறீர்கள்?" என்ற குரல் கேட்டது. அது சந்திரமதியின் குரல்.

"இங்கேதானடி இருக்கிறேன். அல்லிக் குளத்தின் அருகில் இருக்கிறேன்! சீக்கிரம் வா!" என்றது மணிமேகலையின் குரல்.

காலடிச் சத்தங்கள் கேட்டன. காலில் அணியும் நூபுரங்களின் இனிய ஒலிகளும் கேட்டன.

அல்லிக் குளம் என்று மணிமேகலை கூறியது அந்தப் பூங்காவனத்தின் மத்தியில் செய்குன்றத்தின் அருகில் இருந்த சிறிய பளிங்குக்கல் தடாகத்தைத்தான். அந்தக் குளம் அல்லிப் பூவின் வடிவத்தில் அமைக்கப்பட்டிருந்தது. அதில் சில அல்லிக் கொடிகளும் செங்கழுநீர்க் கொடிகளும் இருந்தன. அச்சமயம் சில மலர்களும் இருந்தன. இந்த அல்லிக் குளத்தை முன்னமே வந்தியத்தேவன் பார்த்திருந்தான். அதன் அருகிலே தான் அவனும் விழுந்திருக்க வேண்டும்! நல்லவேளையாக, அப்பெண்கள் இருவரும் அவனைக் கவனிக்கவில்லை. பகல்வேளையாக இருந்து அவர்கள் அவன் விழுந்ததைப் பார்த்திருந்தால் கலகலவென்று சிரித்து அவனுடைய மானம் போகும்படி செய்திருப்பார்கள். இப்போது மணிமேகலையின் துணைக்குச் சந்திரமதி வந்து விட்டபடியால், அந்தப் பெண்களுக்குத் தெரியாமலேயே அவன் அங்கிருந்து நழுவிப் போய் விடலாம்.

இதற்கிடையில் அந்தப் பெண்களின் பேச்சு அவன் காதில் விழுந்தது.

"அம்மா! எதைக் கண்டு பயந்தீர்கள்? ஏன் அப்படிக் கூச்சலிட்டீர்கள்?" என்றாள் சந்திரமதி.

"அடியே! அந்த மதில் சுவரைப் பாரடி! அதன் மேலே ஏதோ தெரிந்தது. தலையில் சடையும், முகத்தில் தாடியும் மீசையுமாக ஓர் உருவம் தெரிந்தது. அதன் கழுத்தில் - சொல்லப் பயமாயிருக்கிறதடி!- மண்டை ஓட்டு மாலை ஒன்று அணிந்திருந்தது! நான் கூச்சலிட்டதும் அது மறைந்து விட்டது!" என்றாள் மணிமேகலை.

"நன்றாயிருக்கிறது, இளவரசி! தங்களுடைய மனப் பிராந்திதான் அது! பேயும் இல்லை, பிசாசும் இல்லை! இவ்வளவு உயரமான மதில் சுவரின் மேல் யாரும் வந்து உட்கார்ந்திருக்கவும் முடியாது" என்றாள் சந்திரமதி.

"இல்லையடி! என் மனப் பிராந்தியில் அப்படிப் பேய் பிசாசு ஒன்றும் தோன்றுவது வழக்கமில்லை..."

"ஆமாம்! மனிதனை யொத்த வடிவழகரின் முகந்தான் உங்கள் கனவிலும் நனவிலும் தோன்றுவது வழக்கம்!"

"சீச்சீ! இப்போதுகூட உனக்கு விளையாட்டா?"

"பின் எப்போது விளையாடுவது? முன்மாலை நேரத்தில் பூங்காவனத்தில் அல்லிக் குளத்தினருகே வந்து காத்திருக்கிறீர்கள். முல்லை மலர்களின் மணம் கம்மென்று வீசுகிறது... ஆனால், பாவம், என்ன செய்கிறது? தாங்கள் வல்லத்து இளவரசரை எதிர்பார்த்துக் கொண்டிருக்க, மீசையும் தாடியும் உள்ள பிசாசு வந்து சேருகிறது!"

"போதும் போதாதற்கு நீயும் வந்து சேருகிறாய்!"

"என்னைப் பார்த்துவிட்டுத்தான் அந்தப் பிசாசு பயந்து ஓடிவிட்டதோ, என்னமோ? கடம்பூர் அரண்மனைப் பணிப் பெண் சந்திரமதியைக் கண்டால் பேய் பிசாசுகள், பூதங்கள், வேதாளங்கள் எல்லாம் பயந்து ஓடும் என்பது உலகப் பிரசித்தியாயிற்றே!"

"சந்திரமதி உன் வேடிக்கைப் பேச்செல்லாம் இப்போது வேண்டாம். உண்மையாகவே நான் மதில் சுவரின் மேல் கோரமான ஓர் உருவத்தைப் பார்த்தேன். நீ நம்பாவிட்டால் வேண்டாம்! நீ போன காரியம் என்ன ஆயிற்று என்று சொல்லு!"

"போன காரியம் பலிக்கவில்லை, இளவரசி!"

"ஏன்? ஏன்?"

"காஞ்சி இளவரசரும், கடம்பூர் இளவரசருந்தான் அங்கே கூடிக் கூடிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். வல்லத்து இளவரசரைக் காணவே காணோம்."

"ஒரு வேளை அவரையும் எங்கேயாவது அனுப்பி வைத்து விட்டார்களா, என்ன?"

"அப்படியும் தெரியவில்லை. தங்கள் தந்தையும் பல்லவருந்தான் மலையமான் அரசரை எதிர்கொள்ளப் போயிருக்கிறார்கள். இடும்பன்காரியைக் கேட்டேன். இன்று சாயங்காலம் கரிகாலர், வல்லத்தரசர் மீது ஏதோ எரிந்து விழுந்தாராம்!..."

"அவருக்குப் பைத்தியந்தான் பிடித்திருக்கிறது, எல்லார் பேரிலும் எரிந்து விழுகிறார், பிறகு?..."

"'இன்றைக்கு இனிமேல் என் முகத்தில் விழிக்காதே! நாளைப் பொழுது விடிந்த பிறகு வா!' என்று சொல்லி அனுப்பி விட்டாராம்!"

"பின்னர் அவர் எங்கே போயிருப்பார்?" என்றாள் மணிமேகலை.

"இந்த மாளிகை மதில் சுவருக்குள்ளேதான் எங்கேயாவது அலைந்து கொண்டிருக்க வேண்டும். அதனால்தான் சொன்னேன்; ஒருவேளை அவரே பிசாசு போல் வேஷம் போட்டுக் கொண்டு தங்களைப் பயமுறுத்தினாரோ என்று."

"இல்லை; இந்த அரண்மனையில் வேஷக்காரர்கள் பலர் இருப்பது எனக்குத் தெரியும். ஆனால் அவர் வேஷம் போட்டு ஏமாற்றுகிறவர் அல்ல..."

"இப்படித்தான் நம்மைப் போன்ற அபலைப் பெண்கள் புருஷர்களை நம்பி ஏமாந்து போவது வழக்கம்."

"அப்படியேயிருக்கட்டும். நீ மறுபடியும் போய்த் தேடிப் பார்! அரண்மனை மதிளுக்குள்ளேதானே எங்கேயாவது இருக்க வேண்டும்? இடும்பன் காரியையும் தேடிப் பார்க்கச் சொல்லு!"

"இளவரசி! அந்த இடும்பன் காரியைக் கண்டால் எனக்குப் பிடிக்கவேயில்லை, விழித்து விழித்துப் பார்க்கிறான். அவனிடம் எனக்குப் பயமாகக்கூட இருக்கிறது..."

"பேய் பிசாசுக்குப் பயப்படாதவள் இடும்பன்காரிக்குப் பயப்படுகிறாயே? போனால் போகட்டும். அவனிடம் ஒன்றும் சொல்லமலிருப்பதே நல்லது. நீயே இன்னொரு தடவை போய்த் தேடிப் பார்த்துவிட்டு வா!"

"அதுவரையில்..."

"நான் இங்கேயே இருக்கிறேன்..."

"மறுபடியும் அந்தப் பிசாசு இங்கு வந்தால்?..."

"உன் பெயரைச் சொல்லி விரட்டியடித்து விடுகிறேன்!"

சந்திரமதி அங்கிருந்து போவதற்கு அறிகுறியான நூபுரத்தின் மெல்லிய ஒலி கேட்டது.

மேற்கூறிய சம்பாஷணையைக் கேட்டுக் கொண்டிருந்த வந்தியத்தேவனுடைய மனத்தில் பற்பல எண்ணங்கள் தோன்றின. சுவரின் மேலிருந்து எட்டிப் பார்த்த 'பிசாசு' யாராயிருக்கும் என்று யோசித்தான். ஆழ்வார்க்கடியான் காளாமுகனுடைய வேடம் தரித்து வந்து தன்னைக் காப்பாற்றியது அவன் நினைவுக்கு வந்தது. ஒரு வேளை அந்த வீர வைஷ்ணவனாகவே இருக்குமோ? தஞ்சாவூரிலிருந்து தனக்கு ஏதேனும் முக்கியமான செய்தியுடன் வந்திருக்கிறானோ? இங்குள்ளவர்களுக்கு அடையாளம் தெரியாமலிருக்க அப்படி வேஷம் தரித்து வந்திருக்கிறானோ?

மணிமேகலை தன்னைப் பார்க்க இவ்வளவு ஆவல் கொண்டிருப்பதின் காரணம் என்ன? எதற்காகத் தோழியை அனுப்பித் தேடி அழைத்துக்கொண்டு வரச் சொல்கிறாள்? அவன் விஷயத்தில் மணிமேகலையின் மனோ நிலை அவனுக்கு ஒருவாறு தெரிந்திருந்தது. அதனாலேயே அவள் அருகில் அதிகமாக நெருங்காமலிருந்து வந்தான். கந்தமாறனுடைய பகைமையை இன்னும் தூண்டிவிடாமலிருக்கவும் விரும்பினான். ஆயினும், இப்போது நந்தவனத்தில் வந்து தனிமையாக உட்கார்ந்துகொண்டு அவனை அழைத்து வரச் சொல்லியிருக்கிறாள். ஏதோ முக்கியமான காரியம் இல்லாவிட்டால் இவ்வளவு துணிச்சலான காரியத்தில் இறங்கியிருக்க மாட்டாள். பாவம்! அவளுக்கும் ஏதாவது சங்கடம் நேர்ந்திருக்கிறதோ, என்னமோ? அல்லது நந்தினி அவளிடம் ஏதாவது செய்தி சொல்லி அனுப்பியிருக்கலாம். கடவுளே! இங்கே, இந்தக் கடம்பூர் அரண்மனையில் உள்ளவர்கள் ஒவ்வொருவரும் மனத்தில் ஏதோ ஒன்றை மறைத்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். சற்று முன்னால் மணிமேகலை கூறியது ரொம்ப உண்மை. எல்லாருமே வஞ்சக வேஷதாரிகள். இவர்களுக்கு மத்தியில் இந்தப் பேதைப் பெண் அகப்பட்டுக் கொண்டு திண்டாடுகிறாள். பழுவூர் ராணி இந்தப் பெண்ணை எந்தத் தீய காரியத்துக்குப் பயன்படுத்தத் திட்டமிட்டிருக்கிறார்களோ, தெரியவில்லை. ஆம்; மணிமேகலையின் மனத்தில் ஏதோ சந்தேகம் தோன்றியிருக்கவேண்டும். ஏதோ ஓர் அபாயத்தை அவள் எதிர்பார்த்திருக்கவேண்டும். ஆகையினாலேயே அவள் தன்னுடைய உதவியை நாடுகிறாள்.

அந்தக் கள்ளங் கபடமற்ற பேதைப் பெண் முன்னொரு சமயம் தனக்குச் செய்த உதவியை வந்தியத்தேவன் நினைத்துப் பார்த்துக்கொண்டான். அவளுக்கு உண்மையாகவே ஏதேனும் துன்பம் நேர்ந்திருந்து தன்னுடைய உதவியைக் கோருவதாயிருந்தால், அதை மறுப்பது நன்றி கொன்ற பாதகம். எப்படியிருந்தாலும் உண்மையைத் தெரிந்து கொள்ளுவதற்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம். சந்திரமதி போய்விட்டாள்; மணிமேகலை தனியாக இருக்கிறாள். யார் கண்டது? அவளுடைய உதவி அவனுக்கு மறுபடியும் தேவையாயிருக்கக் கூடும். அவளுடைய சகாயத்தினால் இந்தச் சூழ்ச்சி குடிகொண்ட அரண்மனையை விட்டுப்போக முடிந்தால்கூட நல்லதுதான். எதற்கும் அவளிடம் இச்சமயம் போய்க் கேட்டு உண்மையைத் தெரிந்து கொள்ளலாம்.

அல்லிக் குளத்தின் கரையிலிருந்த பளிங்குக்கல் மேடையில் மணிமேகலை உட்கார்ந்திருந்தாள். மேகங்கள் சூழ்ந்திருந்த வானத்தில் ஆங்காங்கு சில நட்சத்திரங்கள் சுடர் விட்டு ஒளிர்ந்தது போல் அல்லிக் குளத்திலும் அடர்த்தியாகப் படர்ந்திருந்த இலைகளுக்கு மத்தியில் மலர்கள் தலை தூக்கி நின்றன. சுற்றிலும் சூழ்ந்திருந்த இருளில், இரவில் பூக்கும் அம்மலர்களின் வெண்மை நிறம் நன்கு எடுத்துக் காட்டப்பட்டது. அல்லிக் குளத்துக்கு அப்பால் முல்லைப் புதர்களில் பாதி மலர்ந்த பூக்களும் மொட்டுக்களும் நீல நிற விதானத்தில் முத்துக்களைப் பதித்ததுபோல் காட்சி தந்தன.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த மணிமேகலை தனக்குப் பின்னால் காலடிச் சத்தம் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள். மிகச் சமீபத்தில் வந்திருந்த உருவத்தைக் கண்டு அவசரமாக எழுந்தபோது கால் தடுமாறிப் பின்னாலிருந்த குளத்தில் விழப் போனாள்.

"ராஜகுமாரி! நான்தான்!" என்று கூறிக் கொண்டே வந்தியத்தேவன் மணிமேகலையைத் தாங்கிப் பிடித்துக் கொண்டான்.

மணிமேகலையின் உடல் சிலிர்த்தது. இயற்கையாக ஏற்பட்ட கூச்சத்தினால் அவனுடைய கரங்களைப் பற்றி அப்பால் தள்ளிவிட்டுத் தன்னை விடுவித்துக் கொள்ளப் பார்த்தாள். ஆனால் அதற்கு வேண்டிய பலம் அப்போது அவளுடைய கரங்களில் இல்லை! அந்த முயற்சியில் மறுபடியும் பின்னாலேதான் சாயும்படி நேர்ந்தது.

வந்தியத்தேவன் இன்னும் கெட்டியாக அவளைப் பிடித்துத் தாங்கி முன் பக்கமாகக் கொண்டு வந்தான்.

மணிமேகலை ஒரு பெருமுயற்சி செய்து தன்னைச் சுதாரித்துக் கொண்டு, "விடுங்கள்! என்னைத் தொடாதீர்கள்!" என்று கோபக்குரலில் கூறினாள்.

வந்தியத்தேவன் அவளை விட்டு விட்டு, "ராஜகுமாரி! மன்னிக்க வேண்டும்!" என்றான்.

மணிமேகலை இன்னமும் பட படப்பு நீங்காத தழுதழுத்த குரலில், "தங்களை நான் எதற்காக மன்னிக்க வேண்டும்?" என்று கேட்டாள்.

"திடீரென்று வந்து தங்களைத் திடுக்கிடச் செய்ததற்காகத்தான்!"

"வந்ததுதான் வந்தீர்கள்! எதற்காக என்னைத் தொட்டுப் பிடித்துக்கொள்ளவேண்டும்?" என்று மணிமேகலை கேட்ட குரலில், அவள் தன்னை நன்றாகச் சுதாரித்துக் கொண்டு விட்டாள் என்பது வெளியாயிற்று.

"தாங்கள் குளத்தில் விழாமல் பிடித்துக் கொண்டேன்!"

"அழகாயிருக்கிறது! அன்று ஏரியில் விழுந்து நான் முழுகித் தத்தளித்தபோது இவ்வளவு பரிவு காட்டவில்லையே? இந்த முழங்கால் அளவு தண்ணீர் உள்ள குளத்தில் நான் விழாமல் காப்பாற்றுவதற்கு வந்து விட்டீர்களே?"

"அது என் குற்றந்தான்!"

"நீங்கள் ஒரு குற்றமும் செய்யவில்லை; குற்றமெல்லாம் என்னுடையது."

"அது எப்படி? தாங்கள் குற்றம் எதுவும் செய்யவில்லை. என் பேரில் ஏதோ கோபத்தினால் இவ்விதமாகச் சொல்லுகிறீர்கள்!"

"முன்னொரு நாள் தாங்கள் வேட்டை மண்டபத்துக்குள்ளிருந்து திடீரென்று நான் இருந்த அறையில் புகுந்தீர்கள். அன்றைக்கும் என்னைத் திடுக்கிட வைத்தீர்கள். அப்போதே நான் கூக்குரலிட்டுத் தங்களை என் தந்தையிடம் பிடித்துக் கொடுத்திருக்க வேண்டும்!"

"அன்றைக்கு என்னைப் பெரும் அபாயத்திலிருந்து காப்பாற்றினீர்கள். அதை என்றைக்கும் நான் மறக்க மாட்டேன்."

"அதற்குப் பதில் தாங்கள் நன்றி செலுத்திய விதத்தை நானும் மறக்கமாட்டேன். நன்றிகெட்டவர்களிலே தங்களைப் போல நான் பார்த்ததே இல்லை..."

"இளவரசி! இது பெரிய அபாண்டம்! எந்த விதத்தில் நான் நன்றி கெட்டவன்? சொல்லுங்கள்!"

"தங்களை யாரோ கொலைகாரர்கள் துரத்தி வருவதாகப் பொய் சொன்னீர்கள். நான் வேட்டை மண்டபத்துக்குப் போய்ப் பார்த்துவிட்டு வருவதற்குள் என்னிடம் சொல்லிக் கொள்ளாமலே திருடனைப் போல் ஓடி விட்டீர்கள்!"

"திருடனைப் போல் ஓடி விட்டேன் என்றா சொன்னீர்கள்?"

"திருடனைப் போல் என்று கூறியது தவறு; திருடனே தான்!"

"இளவரசி அன்று நான் எவ்வளவு இக்கட்டான நிலைமையிலிருந்தேன் என்பது தங்களுக்குத் தெரியாது..."

"தெரியாதவர்களுக்குத் தாங்கள் தெரியப்படுத்தியிருக்கலாமே? யார் வேண்டாம் என்று தடுத்தார்கள்?"

"தங்கள் தோழி சந்திரமதிதான். தாங்கள் வேட்டை மண்டபத்துக்குள் சென்றதும் சந்திரமதி இன்னொரு வாசல் வழியாக வந்துவிட்டாள். அவள் கண்களில் படாமல் இருப்பதற்காக யாழ்க் களஞ்சியத்தில் மறைந்து கொண்டேன்."

"பிறகு அங்கிருந்து மாயமாய் மறைந்து போய் விட்டீர்கள்!"

"இல்லை; மச்சுப்படி ஏறி, மாடங்களை யெல்லாம் தாண்டி, மதில் சுவர் மேலும் ஏறிக் குதித்துத்தான் போனேன். இளவரசி! அன்று என்னை யாராவது கண்டுபிடித்திருந்தால், நான் ஏற்றுக் கொண்டிருந்த காரியமும் கெட்டிருக்கும்; தங்களுக்கும் வசைச் சொல் ஏற்பட்டிருக்கும்..."

"இந்தப் பேதைப் பெண்ணைப் பற்றித் தங்களுக்கு எவ்வளவு கவலை?"

"உண்மையாகவே கவலைதான்!"

"அப்படியானால், இங்கே தாங்கள் திரும்பி வந்து இத்தனை நாள் ஆயிற்றே? சொல்லாமல் ஓடிப்போன காரணத்தைச் சொல்லியிருக்கலாமே?..."

"அதற்குச் சந்தர்ப்பத்தைதான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்..."

"ஏன் ஐயா, வெறும் வார்த்தை? நான் இருக்கும் திக்கையே தாங்கள் திரும்பிப் பார்ப்பது கிடையாதே?"

"சகோதரி!..."

"நான் தங்கள் சகோதரி அல்ல!"

"தாங்கள் என் சிநேகிதன் கந்தமாறனுடைய சகோதரி; ஆகையால் எனக்கும் சகோதரி."

"கந்தமாறன் என்னுடைய சகோதரன் அல்ல; தங்களுக்கு அவன் சிநேகிதனும் அல்ல. நம் இருவருக்கும் அவன் கொடிய பகைவன்..."

"இளவரசி! அதுதான் தங்களுக்குத் தெரிந்திருக்கிறதே! சில நாள் முன் வரையில் கந்தமாறன் என் உயிருக்குயிரான நண்பனாக இருந்தான். இப்போது அடியோடு மாறிப் போயிருக்கிறான். பார்த்திபேந்திரன் எப்போது என் தலைக்கு உலை வைக்கலாம் என்று பார்த்துக் கொண்டிருக்கிறான். ஆதித்த கரிகாலரோ நிமிஷத்துக்கு நிமிஷம் மாறுகிறார். இந்த நிமிஷம் அன்பாகப் பேசுகிறார்; அடுத்த நிமிஷம் எரிந்து விழுகிறார். எப்போது என்ன ஆபத்து வருமோ என்று எதிர்பார்த்துக் காலங் கழிக்கிறேன். இந்த நிலைமையில் என்னுடைய நன்றியைச் செலுத்துவதற்காகத் தங்களை நான் தேடிவந்தால்.."

"ஐயா! தங்களைக் காப்பாற்றிக் கொள்வதில் தாங்கள் இவ்வளவு ஊக்கமாயிருப்பது பற்றி நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்...!"

"இளவரசி என்னைப் பற்றி நான் கவலைப்படவில்லை. என் உயிரைப் பற்றியும் கவலைப்படவில்லை. தங்களுக்கு என்னால் தீங்கு எதுவும் நேராமலிருக்க வேண்டும் என்று தான் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறேன்."

"கவலைப்பட்டு உருகிக் கொண்டே இருக்கிறீர்கள். ஆண் மக்கள் எல்லாருமே வஞ்சகர்கள் என்று சந்திரமதி சொல்லுவாள். அது உண்மை என்று இப்போதுதான் நிச்சயமாகிறது."

"யார் என்ன சொன்னாலும் சரிதான். என் உயிர் உள்ள வரையில் தங்களை நான் மறக்கமாட்டேன்! தாங்கள் எனக்குச் செய்த உதவியையும் மறக்கமாட்டேன்!"

மணிமேகலை சிறிது சிந்தனையில் ஆழ்ந்திருந்து விட்டு, "ஐயா இப்போது தாங்கள் சொன்னதை இன்னொரு தடவை சொல்லுங்கள்?" என்றாள்.

"ஆயிரம் தடவை வேண்டுமானாலும் சொல்கிறேன். என் உயிர் உள்ளவரையில் தாங்கள் செய்த உதவியை மறக்கமாட்டேன்!" என்று வந்தியத்தேவன் உறுதியுடன் கூறினான்.

"ஆயிரம் தடவை சொன்னால் மட்டும் என்ன பயன்? அதை நிறைவேற்ற முயற்சி எடுக்க வேண்டும் அல்லவா?"

"எந்த விதத்தில் முயற்சி எடுப்பது? சொல்லுங்கள் இளவரசி!"

"தங்கள் உயிர் உள்ள வரையிலேதான் எனக்கு நன்றி செலுத்துவீர்கள்? ஆகையால் தங்கள் உயிரை முதலில் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். தங்களுக்காக இல்லாவிட்டாலும், எனக்காகக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்!"

"இளவரசி! இது என்ன?..."

"ஐயா! உண்மையைச் சொல்லுங்கள்! சற்று முன்னால் நானும் என் தோழியும் பேசிக் கொண்டிருந்ததைத் தாங்கள் கேட்டுக் கொண்டிருந்தீர்களா?"

"மன்னிக்க வேண்டும், இளவரசி! 'ஐயோ பிசாசு!' என்று தாங்கள் கூவியதைக் கேட்டு ஓடிவந்தேன். அதற்குள் தங்கள் தோழி சந்திரமதி வந்துவிட்டாள். உங்களுடைய பேச்சைக் கேட்கும்படி நேர்ந்துவிட்டது."

"தங்களை எப்படியாவது தேடிப்பிடித்து அழைத்து வரும்படி அவளை நான் அனுப்பியது தெரியும் அல்லவா?"

"காதில் விழுந்தது. அதனாலேதான் தங்களை அணுகி வந்தேன்..."

"இல்லாவிடில் என் அருகிலும் வந்திருக்க மாட்டீர்கள். அடடா என்ன கரிசனம்? போனால் போகட்டும். தாங்கள் எவ்வளவு கல் நெஞ்சராயிருந்தாலும் என் மனம் கேட்கவில்லை. தங்களுக்கு ஆபத்து என்றால் நான் பொறுத்துக் கொண்டிருக்க முடியவில்லை."

"இளவரசி! என்னுடைய ஆபத்தான நிலைமை எனக்குத் தெரிந்தேயிருக்கிறது. எனக்குத் தெரியாத புதிய ஆபத்து ஏதேனும் வரப்போகிறதா?"

"ஐயா! இந்த அரண்மனையை விட்டுத் தாங்கள் உடனே போய்விடுங்கள்!"

"என்னைப் புறங்காட்டி ஓடச் சொல்கிறீர்களா?"

"போர்க்களத்தில் புறங்காட்டி ஓடக் கூடாது. சதிகாரர்களிடமிருந்து தப்பிச் செல்வதில் குற்றம் என்ன?"

"யார் சதிகாரர்கள்?"

"வேறு யார்? கந்தமாறனும் பார்த்திபேந்திரனுந்தான்."

"அவர்களுக்குப் பயந்து நான் இந்த அரண்மனையை விட்டு ஓட முடியாது."

"என் தமையனால் தங்களுக்குத் தீங்கு நேர்வதை அறிந்து, நான் அதைச் சகித்துக் கொண்டிருக்க முடியாது."

"இளவரசி! கந்தமாறனுடைய காரியங்களுக்குத் தாங்கள் எப்படிப் பொறுப்பு ஆவீர்கள்?"

"என் காரணமாகவே அவனும் பார்த்திபேந்திரனும் தங்களுக்குத் தீங்கு இழைக்கப் பார்க்கிறார்கள்."

"தங்களுக்காக நான் துன்பம் அடைந்தால் அது என் பாக்கியம். தாங்கள் செய்த உதவிக்குப் பிரதி செய்ததாக எண்ணிக் கொள்வேன்..."

"நந்தனி தேவி கூறியது சரிதான்!"

"ஆகா! பழுவூர் ராணி தங்களிடம் என்ன கூறினாள்!"

"உங்களிடம் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும்படிச் சொன்னால், கேட்கமாட்டீர்கள். வேறு யுக்தி செய்ய வேண்டும் என்றார். ஐயா! தயவுசெய்து தாங்கள் என்னுடன் வாருங்கள். பழுவூர் ராணி தங்களை ஏதோ ஓர் அவசர காரியமாகப் பார்க்க வேண்டுமாம்."

"அந்த அவசரமான காரியம் என்னவென்பது தங்களுக்குத் தெரியும் அல்லவா?"

"தெரியும்; பழுவேட்டரையர் கொள்ளிடத்தைத் தாண்டும் போது படகு கவிழ்ந்து போய்விட்டதாக ஒரு செய்தி வந்திருக்கிறது..."

"நானும் கேள்விப்பட்டேன்!"

"தாங்கள் உடனே போய் அதைப்பற்றியே உண்மையைத் தெரிந்துகொண்டு வரவேண்டுமாம். அவ்விதம் தங்களிடம் பழுவூர் ராணி நேரில் கேட்டுக் கொள்ளப் போகிறார்."

வந்தியத்தேவன் சிறிது யோசித்துவிட்டு, "இதையெல்லாம் என்னிடம் முன்னால் கூற வேண்டாம் என்று பழுவூர் ராணி எச்சரிக்கவில்லையா?" என்றான்.

"ஆமாம்!"

"பின் ஏன் இதைப்பற்றி என்னிடம் சொன்னீர்கள்?"

"என் மனம் குழம்பியிருப்பதுதான் காரணம். ஐயா! சில நாளைக்கு முன்னால் வரையில் நான் கள்ளங் கபடமறியாத பெண்ணாயிருந்தேன். யாரைப் பற்றியும் எந்தவிதமான சந்தேகமும் கொண்டதில்லை. யாரைப் பற்றியேனும் என் தோழிகள் குறை சொன்னாலும் நம்புவதில்லை. இப்போது எல்லாரையும் சந்தேகிக்கிறேன்; எல்லாவற்றையும் சந்தேகிக்கிறேன்."

"என் முகத்தில் விழித்த நேரத்தினால் ஏற்பட்ட விபரீதம் போலிருக்கிறது."

"ஒரு விதத்தில் அது உண்மைதான்! பழுவூர் இளையராணி தங்களை அழைத்து வரும்படி எனக்குச் சொல்லி அனுப்பினார். அவருடன் பேசும்போது ஒரு சந்தேகமும் தோன்றவில்லை. எல்லாம் சரியென்று தோன்றியது.... இப்பால் வந்ததும் அவர் பேரிலேயே சந்தேகம் ஏற்படுகிறது."

"என்ன சந்தேகம், இளவரசி? நந்தினிதேவியின் பேரில் தங்களுக்கு என்ன சந்தேகம்?"

"அவரும் சேர்ந்து தங்களுக்குத் தீங்கு செய்ய எண்ணுகிறாரோ என்றுதான்."

"இந்தச் சந்தேகம் ஏன் வந்தது? அவர் எனக்கு என்ன தீங்கு செய்யமுடியும்?"

"அதுவும் என்னால் சொல்ல முடியாது. ஆனால் அவருடைய பேச்சும் நடவடிக்கைகளும் யோசித்துப் பார்த்தால் சந்தேகம் உண்டாக்குகின்றன. அடிக்கடி ஒரு நீண்ட வாளைக் கையில் வைத்துக்கொண்டு ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறார்."

"ஒரு பெண்ணின் கையில் உள்ள வாளைக் கண்டு நான் அஞ்சுவதில்லை. அதைக்காட்டிலும்..."

"முகத்திலுள்ள கண்களாகிற வாள்களுக்கு அஞ்சுவீர்கள். எல்லாரும் சொல்லும் கதைதான் இது. ஐயா! நந்தினி தேவியின் வாளுக்கு மட்டும் தங்களை நான் பயப்படச் சொல்லவில்லை. முதன் முதலில் தாங்கள் வேட்டை மண்டபத்திலிருந்து நான் இருந்த அறைக்குள் வந்ததை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்..."

"நன்றாக ஞாபகம் இருக்கிறது..."

"கொலைகாரர்கள் சிலர் தங்களைத் தொடர்ந்து வந்ததாகச் சொன்னீர்கள். முதலில் அதை நான் நம்பவில்லை. பிறகு வேட்டை மண்டபத்துக்குள் போய்ப் பார்த்தேன். அங்குள்ள மிருகங்களுக்குப் பின்னால் சிலர் மறைந்திருப்பதாகத் தோன்றியது. அவர்கள் தங்களைக் கொல்ல வந்தவர்களா, அல்லது தங்களுடனேயே வந்தவர்களா என்று அப்போது என்னால் நிச்சயிக்க முடியவில்லை. அவர்களைப் பற்றிச் சொன்னால், தங்களைப் பற்றியும் சொல்ல வேண்டியதாகும் அல்லவா?"

"எனக்குத் தாங்கள் செய்த பேருதவி எவ்வளவு என்பதை இப்போதுதான் நன்கு உணர்ந்துகொள்கிறேன்."

"அதற்காக நான் அந்த விஷயத்தை இப்போது சொல்லவில்லை. சற்று முன்னால் நந்தினி தேவி தங்களை அழைத்து வரும்படி என்னை அனுப்பினார். உடனே, ஏதோ அவரிடம் கேட்பதற்காகத் திரும்பிப் போனேன். கதவைத் தாளிட்டுக் கொண்டிருந்தார். உள்ளே, வேட்டை மண்டபத்திலிருந்து பேச்சுக் குரல்கள் இலேசாகக் கேட்டன. ஐயா! என் சந்தேகத்தைத் தங்களுக்கு இப்போது சொல்லி விடுகிறேன். வேட்டை மண்டபத்தில் யாரோ ஆள்கள் வந்து ஒளிந்திருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. அவர்களுக்கும் பழுவூர் ராணிக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கவேண்டும் என்றும் சந்தேகிக்கிறேன்."

வந்தியத்தேவன் இப்போதுதான் நிலைமையின் முக்கியத்தை நன்கு உணர்ந்தான். இன்று ஏதோ விபரீத சம்பவம் நிகழப்போகிறது என்பதாக அவன் உள்ளுணர்ச்சி அவனுக்குச் சொல்லிக் கொண்டேயிருந்தது. மணிமேகலை கூறிய செய்திகள் அவன் உள்ளுணர்ச்சியை உறுதிப்படுத்தின.

"இளவரசி! எனக்குத் தாங்கள் ஓர் உதவி அவசியம் செய்யவேண்டும்!"

"என்னவென்று சொல்லுங்கள்!"

"வேட்டை மண்டபத்துக்கு வெளியிலிருந்து சுரங்கப் பாதை மூலமாக வரும் வழி ஒன்றிருக்கிறது. இப்போது நந்தினி தேவி இருக்கும் அறை வழியாகப் போவதற்கும் ஒரு வாசல் இருக்கிறது. இவற்றைத் தவிர மூன்றாவது வழி ஒன்று இருக்கிறதல்லவா?"

"ஆமாம்; வேலைக்காரர்கள் போவதற்கென்று ஒரு வழி இருக்கிறது. அரண்மனைக்குப் புதிதாக வரும் விருந்தாளிகளை அந்த வழியாகத்தான் என் தந்தை அழைத்துப் போவது வழக்கம்..."

"இளவரசி! அந்த வழியாக என்னை இப்போதே வேட்டை மண்டபத்துக்கு அழைத்துப் போங்கள்!"

"எதற்காக?"

"அங்கே வந்து ஒளிந்திருப்பவர்கள் யார்? அவர்கள் என்ன நோக்கத்துடனே வந்திருக்கிறார்கள் என்று கண்டுபிடிப்பதற்குத் தான்..."

"தங்களை அபாயத்திலிருந்து தப்புவிக்க வந்தேன். அபாயத்துக்கே இட்டுச் செல்லும்படி கேட்கிறீர்கள்."

"என் இடையில் எப்போதும் கத்தி இருக்கிறது. இளவரசி! தெரியாமல் வரும் அபாயத்தைக் காட்டிலும் தெரிந்த அபாயத்தை எதிர்ப்பது எளிது. அபாயத்தை நாமே எதிர் கொண்டு போவது இன்னும் மேலானது."

"ஒரு நிபந்தனைக்குச் சம்மதித்தால் தங்களை வேட்டை மண்டபத்துக்கு அழைத்துப் போவேன்."

"அது என்ன?"

"நானும் தங்களுடன் வருவேன்; என் இடையிலும் ஒரு சிறிய கத்தி வைத்துக் கொண்டிருக்கிறேன்!" என்று மணிமேகலை தன்னுடைய கத்தியை எடுத்துக் காட்டினாள்.

வந்தியத்தேவன் அதற்குச் சம்மதம் கொடுத்தான்.

"அப்படியானால் சீக்கிரம் என்னைப் பின்தொடர்ந்து வாருங்கள். சந்திரமதி இங்கே என்னைத் தேடி வருவதற்குள் போய்விட வேண்டும்" என்றாள்.

நந்தவனத்தைக் கடந்து வந்தியத்தேவனை மணிமேகலை அழைத்துச் சென்றாள். பிறகு, மாளிகையின் ஓரமாகச் சுவர்களின் கரிய நிழல் அடர்ந்திருந்த இடங்களின் வழியாக அழைத்துச் சென்றாள். பிறகு மாளிகையில் புகுந்து ஜன சஞ்சாரம் இல்லாத தாழ்வாரங்கள், நடைபாதைகள் வழியாக அழைத்துச் சென்றாள். பின்னர், கதவு சாத்தப்பட்டிருந்த ஒரு வாசற்படியின் அருகில் வந்தாள். அங்கேயே வந்தியத்தேவனை நிற்கச் செய்துவிட்டு விரைந்து சென்று ஒரு கை விளக்கை எடுத்து வந்தாள். கதவைத் திறந்து உள்ளே விளக்கைத் தூக்கிக் காட்டியபோது வரிசையாகப் படிக்கட்டுக்கள் அமைந்த குறுகிய நடைபாதை காணப்பட்டது. இருவரும் அப்படிகளில் இறங்கிச் சென்றார்கள். சிறிது நேரம் சென்ற பிறகு முன்னால், சென்ற மணிமேகலை சட்டென்று நின்று, மெல்லிய குரலில், "நில்லுங்கள்! ஏதோ காலடிச் சத்தம் போலிருக்கிறது, தங்களுக்குக் கேட்கிறதா?" என்றாள்.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்