யட்சியானவள்
மழை பெய்து ஓய்ந்திருந்த இரவு, அந்த அப்பார்ட்மெண்ட் வழக்கத்தை விட சற்று அதிக இருளையும் அமைதியையும் கொண்டிருந்தது பிரபாவிற்கு பயத்தை ஏற்படுத்தியது. அவசரமாக படியேறியவனின் கால்களை சிதறிக் கிடந்த காலி அட்டைப்பெட்டிகள் இடறியன. பயம் கவ்வ இரண்டு இரண்டு படிகளாக தாவி மாடியேறி வீட்டு வாசலின் முன்பாக ஒரு முறை நிதானித்து மூச்சு விட்டான்.
காலிங்பெல்லை ஒருமுறை அடித்துவிட்டு காத்திருந்தான். நிமிடங்கள் கடந்தன. மொபைலின் கால் லிஸ்டில் கண்மனியின் பெயரை சொடுக்கிவிட்டு காத்திருந்தான். அழைப்பு எடுக்கப்படவில்லை. கதவை பலமாக தட்ட தொடங்கினான். இவ்வளவு சீக்கிரத்தில் அவள் உறங்கிவிட மாட்டாள்.
“கண்மணி.. கண்மணி….”
உள்புற தாழ்பாளை விலக்கும் சத்தம் கேட்டதும் கதவை தட்டுவதை நிறுத்தினான். கொஞ்சம் ஆசுவாசமாகியது. ஈரம் சொட்ட டவலைப் போர்த்திக் கொண்டு ஓரமாய் நின்றிருந்த கண்மணி பிரபாவை உள்ளே வர விட்டு அவசரமாக கதவை சாத்தினாள்.
“ கதவ திறக்க இவ்வளவு நேரமா?”
சிவப்பு படர்ந்திருந்த முகத்துடன் ப்ரபாவின் கோபப் குரலைக் கேட்டதும் கண்மணிக்கு குரல் அடைத்துக் கொண்டது.
“குளிச்சிட்டு இருந்தேன் பா… ஸாரி… சுத்தமா சவுண்ட் கேட்கல” தலையை துவட்டியபடியே கண்மனி சிரித்தாள்.
அவளுக்கு பதிலேதும் கூறாமல் ஷுவை கழற்றி ஓரமாக வீசிவிட்டு பெட்ரூமை நோக்கி சென்றுவிட்டான். ஒரு கணம் அவன் போவதையே பார்த்துக் கொண்டு நின்ற கண்மணி வேகமாக குளியறைக்கு சென்று உடை மாற்றி வந்தாள்.
பிரபாவுக்கும் கோபம் குறைந்திருந்தது. அது கோபம் மட்டுமல்ல பயமும் கூட தான். பெருநகர சந்தடிகள் இல்லாத அந்த தெருவின் கடைசியில் வீடு பார்த்த பொழுதே அவன் யோசித்திருக்க வேண்டும். நெருக்கியடித்துக்கொண்டிருக்கும் அப்பார்ட்மெண்டுகளைக் காட்டிலும் அவனுக்கு தனி வீடு தான் எப்பொழுதும் பிடித்தமானது. அதனால் தான் தனி வீடாக தேடி பிடித்து இந்த வீட்டிற்குக் குடி வந்தான். இரைச்சலும் வீட்டிற்கு வருகிறவர்களை யார் நீ? எதுக்கு வந்திருக்க? என்று கேட்கிற அப்பார்ட்மெண்ட் வாட்ச்மேன்களும் அவனுக்கு எரிச்சலான விசயங்கள்.
இதை தனி வீடென்றும் சொல்ல முடியாது. கீழ் வீட்டில் ஒரு வயதான தம்பதியினர் குடியிருக்கின்றனர். அது ஒரு விதத்தில் துணை போல இருந்தாலும் அவர்கள் ரொம்பவும் பேசுவதில்லை. எதிர்படும்பொழுது சிரிப்பதோடு சரி. அப்புறம் மோட்டார் கரண்டுக்கு பணம் கேட்கும்பொழுது எதாவது பேசுவார்கள். அவ்வளவு தான்.
”சாப்பாடு எடுத்து வை கண்மணி”
“ம்ம். இதோ வரேன்.. “ கண்மணி ஹாட் பாக்ஸையும் தட்டுகளையும் டைனிங் டேபிள் மீது வைத்து விட்டு தண்ணீர் எடுப்பதற்காக சென்றாள்.
இட்லியை எடுத்து வைத்து சாப்பிட ஆரம்பித்தவன் “ஏன் வாசல்ல அட்டைப் பெட்டியெல்லாம் தூக்கிப் போட்டிருக்க” என்று கேட்டான்.
“இந்த எலி அட்டகாசம் தாங்க முடியல பிரபா. வீடு ஃபுல்லா நாசம் பண்ணுது அதான் எலி பொறி தேடிட்டு இருந்தேன்.”
”….”
”எல்லாம் கலைஞ்சா கிடக்கு.. மெலிசா தான் தட்டி விட்டிருக்கும்”
”ம்ம்ம்… அத நான் வந்ததுக்கு அப்பறம் சொன்னா தேடி எடுத்துத் தரப் போறேன்…”
”ஆமா நீ வர பத்து மணியாகிடுது. அப்புறம் எலிப்பொறிய எப்ப தேடி எப்ப எடுத்து வைக்கிறது. அதான் நானே தேடினேன்…”
ஈஈ என ஈறு தெரிய சிரிக்கும் அவளின் வழக்கமான சிரிப்பை கண்டதும் தான் அவனுக்குக் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.
“பரவாயில்லையே ரொம்ப தைரியமாகிட்ட போல இருக்கே”
“ நான் எப்பவுமே பயந்ததில்ல பிரபா, இப்ப ரொம்ப தனியா இருக்குற மாதிரி இருக்கு. அதான் கொஞ்சம் பயம்”
மெதுவாக அவள் குரல் கமறியதை கண்டவன், ”லூசு, நீ நல்ல தைரியசாலி தான். எப்ப பாரு பேய் படம், பேய் படம். அதனால தான், உனக்கு பயம் வர்ரதே. அமானுஷ்யங்களை சாதாரணமா எடுத்துகுற மனசுக்கும் ஒரு அளவு இருக்கு. அதை தாண்டி போகும்போது யாருக்காயிருந்தாலும் பயம் வர தான் செய்யும்,”
“போதும் போதும்… உடனே உன் ஹிஸ்டரி, ஜியாக்ரபி க்ளாசை எடுக்க ஆரம்பிச்சிடுவ..” என்றபடி இரண்டு பேரின் தட்டுக்களை எடுத்துக் கொண்டு அடுப்படிக்குள் சென்றாள்.
கையைக் கழுவாமல் யோசித்தபடி அமர்ந்திருந்தவனின் முதுகை தொட்டு என்னவென்பதுபோல் புருவத்தை உயர்த்தினாள். ஒன்றுமில்லை என்று தலையாட்டிவிட்டு எழுந்து கொண்டவன் கைகளை கழுவிவிட்டு எலிப்பொறியில் ராட் கில்லை உடைத்து வைத்துவிட்டு அடுப்படி விளக்கை அணைத்தான்.
”என்னப்பா தூங்கலயா?.. “
”இல்லம்மா நீ தூங்கு.. கொஞ்ச நேரம் படம் பார்த்துட்டு வரேன்”
“ம்ம்ச்சு..” உச்சுக் கொட்டியவள் ஒரு நிமிடம் அவனை பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள். பிரபா அவளை கவனிக்காமல் லேப்டாப்பை எடுத்துக் கொண்டு கவுச்சில் சென்று அமர்ந்தான். படுக்கையறை விளக்கை அணைத்துவிட்டு இருட்டினுள் அமர்ந்தவளின் கண்கள் வாட்ரோபின் கண்ணாடியில் தெரிந்த தன் கால்களின் மீது பதிந்தது. கால்களை ஆட்டியபடி அமர்ந்திருந்தவள் அப்படியே படுக்கையில் சாய்ந்து உத்திரத்தை வெறித்துப் பார்த்தபடி யோசித்தாள்.
ப்ரபாவுடன் தூங்கி எத்தனை நாட்களாகின்றன. அவளுடன் தான் அவன் தினமும் படுத்துக்கொள்கிறான். ஆனால் அவன் வந்து படுக்கும்பொழுது எப்படியும் இரண்டு மூன்று மணியாகிவிடுகிறது. அதற்குள் கண்மணி தூங்கிவிடுவாள். சலிப்போடு விட்டத்தை பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு அம்மாவின் ஞாபகம் வந்தது. அம்மாவும் இதே போல் தான் வீட்டில் நாள் முழுவதும் தனித்தருப்பாள். ஆனால் ஊரில் இருக்கும் சூழல் வேறு, வெட்கையை தணிக்கும் வம்பளப்புகள் திண்ணைகளில் அன்றாடம் நடந்து கொண்டு தான் இருக்கும். மதிய வேளைகளில் மட்டுமே அம்மா தனியாக இருக்கக்கூடும். அதுவும் வாசல் கதவை முழுக்கத் திறந்து வைத்துவிட்டு காற்றாட அமர்ந்து புத்தகம் படித்துக்கொண்டோ அல்லது அரிசியை புடைத்துக்கொண்டோ இருப்பாள்.
ஆனால் இந்த டபுள் பெட்ரூம் வீட்டில் நாள் முழுதும் தனியாக இருப்பது சாதாரண விசயம் இல்லை. ப்ரபா வேலைக்கு கிளம்பி செல்லும்பொழுதே மணி பத்திற்கு மேல் ஆகிவிடும். அதன் பின்னர் அந்த வெயிலில் எங்கும் வெளியில் போக கண்மணிக்கு அலுப்பாக இருக்கும். ப்ராபாவிடம் சீக்கிரம் வரக்கூடாதா நாள் முழுக்க தனியா தான இருக்கேன் என்று புலம்பும் பொழுதெல்லாம்
“எங்கயாவது வெளிய தான் போயிட்டு வாயேன். டீவி இருக்கு, இவ்வளவு டிவிடி, பத்தாததுக்கு பேஸ்புக் இருக்கு வேற என்ன வேணும் உனக்கு?” என்று அலுத்துக் கொள்வான்.
முதலிலெல்லாம் அப்படியாகத்தான் பொழுதை போக்கிக் கொண்டிருந்தாள் கண்மணி. பேஸ்புக்கில் எக்கசக்கமாக ப்ரண்ட் ரெக்வஸ்ட் வருவதும், நட்பு அழைப்பை ஏற்றதுமே இன்பாக்ஸில் வந்து வயதென்ன? திருமணமாகிவிட்டதா? உங்களுக்கு ஆன்மீகத்தில் விருப்பம் இருக்கிறதா? என விசாரிக்கும் ஆட்களைக் கண்டு வெறுத்துப் போயிருந்தாள். பின்பு சில நாட்கள் யோகா வகுப்பிற்குப் போகலாமென மாலை நேரங்களில் போய் வந்தாள். பாதிக்கும் மேல் ஐம்பது வயதை நெருங்கியவர்களே அங்கு வந்ததால் தன் வயது ஆட்கள் யாரும் பேச்சுத் துணைக்கு இல்லாமல் அதையும் பின்பு நிறுத்திக் கொண்டாள்.
வேலைக்கு சென்று கொண்டிருந்த நாட்கள் வரை இந்த பிரச்சனை இருந்திருக்கவில்லை. வேலைக்கு போக வேண்டாம் என்று முதலில் ப்ரபா சொன்னபொழுது கண்மணிக்கு மகழ்ச்சியாகத் தான் இருந்தது. வீட்டில் ஹாயாக இருக்கலாம் என்று எண்ணியவள் இந்த தனிமையை பற்றி நினைத்துப் பார்க்கவேயில்லை.
ஆரம்ப நாட்கள் கண்மணிக்கு சுமூகமாகவே இருந்தது. புத்தகம் படிப்பது, டீவி பார்ப்பது, நண்பர்களுடன் போனில் அரட்டை அடிப்பது என்று தனிமை அவளை உறுத்தாத வரை எல்லாம் நன்றகாத்தான் சென்றது. மெதுவாக எல்லாம் குறைந்து வந்த நாட்களில் தான் தனியாக இருப்பதை உணரத் துவங்கினாள். அதுவும் அவளுடைய இரு நண்பர்கள் வெளிநாட்டிற்கு சென்றுவிட்ட பின்னர் முற்றிலும் தனிமைபடுத்தப்பட்டதை உணர்ந்து சஞ்சலம் அடைந்தாள். தொலைக்காட்சியில் எல்லா சேனல்களிலும் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் அலைபேசியில் கூப்பிட்டு பாட்டுக் கேட்கிறவர்கள் எல்லாம் தன்னை மாதிரி வீட்டில் தனியாக இருப்பவர்கள் தானோ? என்று தோன்றும். அவளும் ஒருமுறை நேயர் விருப்பப் பாடல் கேட்டாள். பதிலுக்கு தொகுப்பாளினி ”அழகுக் குறிப்பு ஏதாச்சும் சொல்லுங்க கண்மனி?” கேட்டதற்கு என்ன சொல்வதெனத் தெரியாமல் அமைதியாக இணைப்பைத் துண்டித்துவிட்டாள்.
தனிமையை பழக்கப்படுத்திக் கொள்ள முயற்சித்தாள். அது அவ்வளவு இலகுவானதாக இருக்கவில்லை. முரண்டு பிடித்த தனிமையிடம் அடங்கிப் போகத் துவங்கினாள். தனிமையை விரட்ட அவள் கையாண்ட யுக்திகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன.
வீட்டில் இருந்த பெரிய லாஃப்ட் கண்மணியின் தனிமை பயத்திற்கு எதாவதொரு உருவத்தைக் கொடுத்துகொண்டு இருந்தது. ப்ரபாவிடம் அவள் பேய் பயத்தைப் பற்றி சொன்னபொழுது முதலில் கிண்டலடித்தான்
“நீயா இப்படி பயந்து சாகுற?. தனியா உட்கார்ந்து பேய் படம் பாக்குறவளாச்சே நீ” தினமும் அவள் அதே புகார்களைக் கொண்டு வந்தபொழுது எரிச்சலடைந்து கண்மணியை திட்டினான்
”சும்மா நீயா எதையாவது கற்பனை பண்ணிக்காத கண்மணி. ஒரு முறை நீ இப்படி பயப்பட ஆரம்பிச்சின்னா பின்னாடி அது மனசுக்குள்ள ஆழமா பதிஞ்சிரும். அப்புறம் உன்னால அதுல இருந்து வெளிய வரவே முடியாது. ஒரு வேளை அப்படி உண்மையாவே இருந்துச்சுன்னாலும் நீ தான் அதை இக்னோர் பண்ணனும். நெகடிவ் என்ர்ஜீஸ் எல்லா இடத்தலையும் இருக்கும். நீ கம்யூனிக்கேட் பண்ண ஆரம்பிச்சிட்டீனா பிரச்சனை ஆகிடும்” என்று அவளை இன்னும் அதிகமாக பயமுறுத்தி விட்டான்.
அதன் பின் பெரும்பாலும் அந்த அறைக்கு செல்வதை தவிர்த்துவிட்டாள். ப்ரபா வெளியூர் செல்லும் நாட்களில் கண்மணியின் பாடு சொல்லி மாளாதது. எல்லா கதவுகளையும் அடைத்துவிட்டு ஹாலில் கவுச்சில் சுருண்டு கொள்வாள். எல்லா கதவுகளையும் அடைத்துவிடுவதின் மூலம் தனிமையின் பார்வையில் இருந்து தப்பித்துக் கொள்வதாய் நினைத்துக் கொள்வாள். பகலின் தனிமைக்கும் இரவின் தனிமைக்கும் வேறுபாடுகள் இருந்தன. இரவின் தனிமையை அவளால் எளிதில் கடந்து வந்துவிட முடிந்தது. பெரும்பாலும் சீக்கிரம் உறங்க சென்றுவிடுவாள். அல்லது உறங்குவது போல் அவளால் நடிக்க முடிந்தது.
பகலின் வெறுமையோடு கலந்த தனிமை விசேச கொடூரத்தன்மை கொண்டது. அது எப்பொழுதும் நம்மை உற்றுப் பார்த்துக்கொண்டே இருக்கும் கண்களைக் கொண்டது. பகலில் தனித்திருக்கும் பெண்களை யட்சன் வந்து பிடித்துக் கொள்வான் என்று கதைகளில் படித்திருக்கிறாள். அப்படியொரு யட்சன் வந்தால் அவனிடம் நட்பு கொள்ளவே கண்மணி விரும்பினாள். அவனிடம் தீராத தனிமையின் கதைகளை கேட்டறிய அவள் விரும்பினாள். தனித்திருக்கும் பெண்களை அவன் ஏன் பிடித்து செல்கிறான் என்பதை கேட்டறிய விரும்பினாள். பகலெல்லாம் யட்சனை பற்றிய கனவுகளில் மூழ்கித் திளைத்தாள். இரவு தூக்கத்தில் அவனைப் பற்றி அரற்றினாள்.
பிரபஞ்சம் முழுவதற்குமான தனிமையை ஒரு பகலால் கொடுத்துவிட முடியும் என்பதை அவள் வெகு சீக்கிரமாகவே உணர்ந்தாள்.
“டே ப்ரபா.. நான் யார் தெரியுமா.. “
“எம்பொண்டாட்டி”
“நாவொரு யட்சி டா”
“யட்சியா அப்படின்னா… “
”யட்சின்னா ரகசியம்”
“ஆமாடீ என் செல்ல பொண்டாட்டி.. நிறைய ரகசியத்த புதைச்சு வச்சிருக்க பெரிய்ய்ய்ய.. ம்ம்ம் .. மண் பானை”
“ச்சீ போடா.. “
பேய் கதைகளின் சுவாரசியம் குறைய தொடங்கிய நாட்களில் கண்மணி புதிதாக ஒரு விசயத்தை ப்ரபாவிடம் ப்ரஸ்தாபித்தாள்.
”ப்ரபா உனக்கொரு விசயம் தெரியுமா, நான் ஒரு பல்லி வளக்குறேன்”
“லூசு”
“நிஜமாதான் தான் ப்ரபா. நல்ல குண்டு பல்லி. தினமும் அதுக்கு சாதம் கூட வைக்கிறேன்”
கண்மணியை முறைத்த ப்ரபா “பல்லி எங்கடி சோறு திங்கும்”
”சத்தியமாடா… என் கண்ணால பார்த்தேன் அது சோறு திங்கிறதை. இப்பல்லாம் நானே அதுக்கு கொஞ்சம் சோறு வைக்கிறேன்.. தினமும்”
“ம்ம்ம்”
“என்ன நம்பலையா.. “
“எப்படி உனக்கு அந்த பல்லி ப்ரண்டாச்சு” சின்ன குழந்தையிடம் கதை கேட்பதை போல் ப்ரபா அவளிடம் கேட்டான் அப்படியாவது அவளை ஆசுவாசப்படுத்தலாம் என்கிற எண்ணத்துடன்.
கண்மணி குதூகலமாக கண்கள் விரிய அவனிடம் கதை சொல்ல ஆரம்பித்தாள். “ஒரு நாள் நம்ம சின்க் உள்ள பாத்திரம் நிறைஞ்சிடுச்சு டா. பாத்திரத்தை எல்லாம் எடுத்து கழுவி முடிச்சப்போ சின்க் முழுக்க தண்ணி நிரம்பிடுச்சு. தண்ணி வெளியே போகவும் இல்ல. திடீர்ன்னு தண்ணிக்குள்ள இருந்து ஒரு பல்லி எம்பி வெளிய குதிக்க பார்த்துச்சு. பயந்தே போயிட்டேன் டா. ரொம்ப நேரம் வெளிய வர ட்ரை பண்ணிக்கிட்டே இருந்துச்சு. பாவமா இருந்துச்சு. என்னாலையும் ஒன்னும் பண்ண முடியல…”
”ம்ம்ம்…”
“முதல்ல லூசு மாதிரி ஒரு பேப்பர் அட்டையை உள்ளக் கொண்டு போய் விட்டேன்”
“அப்புறம் அந்த அட்டை நனைஞ்சு உள்ள முங்கிடுச்சு. அப்புறம் ஒரு கரண்டிய உள்ள சாச்சு வச்சேன். அது ஏற ட்ரை பண்ணிச்சு ஆனா வழுக்கிவிட்டுக்கிட்டே இருந்துச்சு. ப்ப்பா அருவருப்பா இருந்துதுதான். ஆனா பாவம்னு விட்டுட்டேன். அப்படியும் அதால ஏற முடியல. வேற வழியே இல்லன்னு பாத்திரத்தை உள்ள விட்டு தண்ணியோடு அள்ளி வெளியே தூக்கிப் போட்டுட்டேன்”
“அய்யே ச்சீ”
“யேய் அப்புறம் என்ன பண்ண சொல்ற. அப்படியே செத்துடுச்சுன்னா நீயா தூக்கிப் போடுவ”
”வாயக் கிளறாத.. பின்ன அசிங்கமா பேசுறேன்னு சொல்லுவ”
“போ.. போ.. சரி அதெல்லாம் விடு.. அப்புறம் அந்த பல்லிய தினமும் பார்க்க ஆரம்பிச்சிட்டேன் டா. ஒரு நாள் அது சோறு திங்கிறதை பார்த்துட்டு தான் நான் சாதம் வைக்க ஆரம்பிச்சேன். நீ தான் நம்பவே மாட்டேங்குற”
“சரிடீ செல்லம்.. நம்புறேன்”
அழுத்தமாக கூறியதை போன்று பாவனையை உண்டாக்கி அதை பொய்யென்று அவளுக்கு உணர வைத்தான். “ச்சீ ப்பே” என்று அவனை செல்லமாக அடித்தவள் ஏதோதோ கதைகளை பேசி உறங்கிப் போனாள். ப்ரபாவிற்கு அவளைப் பார்க்க பாவமாக தான் இருந்தது. ஆனால் இருவரும் வேலைக்கு செல்வது அவசியமில்லாதபொழுது கண்மணி வீட்டு வேலைகளையும் செய்து கொண்டு வேலைக்கும் செல்வதை அவன் விரும்பவில்லை. கொஞ்ச நாள் சென்றால் எல்லாம் எளிதில் பழகிவிடும் என்று நம்பினான். அந்த மட்டில் இப்பொழுது அவள் பயம் கொள்ளாமல் சாதாரணமாக இருப்பது நிம்மதியாக தான் இருந்தது. கண்மணிக்கு பகலின் கண்களை பற்றி இப்பொழுது எந்தவொரு குற்றசாட்டும் இருக்கவில்லை. முன்பெல்லாம் பகலில் குளிக்கும்பொழுது தாழ்பாள் போடாமல் கதவை வெறுமனே சாத்தி வைத்துவிட்டு குளிப்பாள், அப்பொழுதெல்லாம் யாரோ கதவிடுக்களின் வழியே தன்னை உற்று பார்த்துக்கொண்டிருப்பது போலவே தோன்றும். இப்பொழுது பகல் வேளைகளில் பாத்ரூம் கதவை திறந்து வைத்துக் கொண்டே அவளால் குளிக்க முடிகின்றது. கண்மணிக்கு இரவை பழக்குவது எளிதாக இருந்தது. இரவுக்கு தேவை சில கதைகள் மட்டுமே. கதைகளை உருவாக்கும் திறமை மட்டும் இருந்தால் போதும் இரவு நம்மை உள்வாங்கிக் கொள்ளும். இரவை பழக்கத் தெரிந்த எவரும் தேர்ந்த கதைசொல்லிகளாக இருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. பகலை பழக்குவது தான் கடினம். ஆனால் உரையாடுவது எளிதானது. இரவு மட்டுமே கதைகளை ஆராயக் கூடியது. கதைகளில் இருக்கும் பொய்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் பகலுக்கு உண்டு. பகலுடன் உரையாட அவளுக்கு புதிது புதிதாக கதைகள் கிடைத்துக் கொண்டிருந்தது. கண்மணியின் பகலை நிரப்ப யட்சன் இருந்தான்.
யட்சிகளுக்கு பகலில் உலாவுமா என்று அவளுக்கு தெரியவில்லை. ஆனால் தன்னை ஒரு யட்சியாக உருவகம் செய்து கொள்வது அவளுக்கு பிடித்தமானதாக இருந்தது. ஒரு நாள் யட்சனுக்கு கதை சொல்லுவாள். ஒரு நாள் எதுவமற்று இருப்பது அவளுக்கொரு தவம் போல இருப்பதாக ஞானியின் முகம் கொண்டு அவனுடன் பேசுவாள். மற்றொரு நாள் அவனிடம் முடிவில்லாத மௌனத்தை கொண்டிருப்பாள். பிறிதொரு நாள் யட்சனுடன் யட்சியாக மாறி ஊர்த்துவ தாண்டம் ஆடிக் களிப்பாள். அவள் காதில் எப்பொழுதும் ஒலிக்கும் பறவையின் சிறகடிப்புகள் யட்சனின் இருப்பை உணர்த்திக் கொண்டே இருந்தது.
ப்ரபாவுடன் பேசுவதை அவளாக குறைத்துக் கொண்டாள். தூங்க போகலையா? என்று அவனே கேட்கும் முன்பு படுக்கையறைக்குள் நுழைந்துவிடுவாள். இதெல்லாம் ஒரு பெரு மாற்றமாக அவனுக்கு தெரியவேயில்லை. எல்லாம் சாதரணமாக சென்று கொண்டிருப்பதாகவே அவனுக்கு தோன்றியது அவள் புதிதாக ஒரு பூனை கதையை கொண்டுவரும் வரை.
கடந்த ஒரு வாரமாக தான் மெலிசா வீட்டிற்கு வந்து கொண்டிருப்பதாய் அவள் கூறினாள். மெலிசா ஒரு பூனை. அடர் சாம்பல் நிற பூனை. இந்த பகுதியில் அவள் எந்தவொரு பூனையையும் இதுவரை பார்த்திருக்கவில்லை. அவளுக்கு பூனைகள் என்றால் பெரும் பிரியம். அவளுடைய ஊரில் வீட்டைச் சுற்றி எப்பொழுதும் ஒரு பூனைக் கூட்டம் இருக்கும். பூனைகள் எப்பொழுதும் ஒரு நெடுங்கால சோகத்தை முகத்தில் கொண்டிருப்பதாக நினைத்துக் கொள்வாள். பூனைகள் தங்களுடைய தனிமையை பற்றி வருத்தப்பட்டுக் கொள்ளுமா என்று அவள் அடிக்கடி யோசித்துப் பார்ப்பதுண்டு. சிலசமயம் அவ்வாறு யோசிப்பது அபத்தமாக தெரிந்தாலும் அவளுக்கு அது தேவையாக இருந்தது. சம்பந்தமில்லாத எதைப் பற்றியாவது யோசனையில் ஆழ்ந்திருப்பது அவளுக்குள் ஒரு போதை போல உருவாகிக் கொண்டிருந்தது.
“யார்ட்ட பேசிக்கிட்டு இருக்க”
“இதோ மெலிசா கிட்ட”
ப்ரபா அடுப்படியில் சுற்றி முற்றி பார்த்துவிட்டு கலவரத்துடன் கண்மணியைப் பார்த்தான். “ஏய் என்னடி ஆச்சு” என்றபடி அவளை உலுக்கினான். சின்க் அருகில் அவளை கூட்டிச் சென்று முகத்தை அலம்பிவிட்டான்.
“வா.. பேசாம படுத்து ரெஸ்ட் எடு” என்றபடி அவளை படுக்கையில் படுக்க வைத்துவிட்டு அருகில் அமர்ந்து தலையை கோதிக் கொடுத்தான். உள்ளூர அவனுக்கு பயமாக இருந்தது. முன்பொரு நாள் இப்படித்தான் நள்ளிரவில் அவன் தூங்குவதற்காக பெட்ரூமினுள் சென்றபொழுது இருட்டினுள் துணிகளை மடித்து வைத்துக் கொண்டே எதிரில் யாருடனோ பேசுவது போன்ற பாவனையில் சைகை செய்து கொண்டிருந்தாள். எதோ கனவு கண்டிருப்பாள் என்று அவளை படுக்க வைத்துவிட்டான்.
அலுவலகத்துக்கு விடுப்பு எடுத்துவிட்டு கண்மணியுடனே இருந்தான். முதல் இரண்டு நாட்களில் கண்மணி எடுத்ததற்கெல்லாம் எரிந்து விழவும் கடுப்புடன் மூன்றாம் நாள் அலுவலகத்துக்கு கிளம்பி சென்றுவிட்டான். சமயம் பார்த்து அவனுக்கு ஒரு வாரம் வெளியூரில் ட்ரெயினிங் என்று அலுவலகத்தில் சொல்லிவிட்டதால் மனதிற்குள் இனம்புரியா கலவரம் வந்து தொற்றிக்கொண்டது.
”கண்மணி பத்திரமா இருந்துப்பியாடி.”
“லூசு ஏன்டா பயப்படுற. அதெல்லாம் பத்திரமா இருந்துப்பேன். ரொம்ப பயமா இருந்துச்சுன்னா ப்ரண்ட்ஸ் யார் வீட்டுக்காவது போய் இருந்துட்டு வரேன் போதுமா.”
“ம்ம்ம்.. எதுனா வேணும்னா கீழ்விட்டு அங்க்கிள் கிட்ட கேளு. நான் சொல்லிட்டுப் போறேன்”
“அதெல்லாம் வேணாம் ப்ரபா. நான் பார்த்துக்கிறேன். நீ பத்திரமா போய்ட்டு வா”
ஒரு வார காலத்தில் அவன் போன் செய்யும்பொழுதெல்லாம் உற்சாகமாகவே கண்மணி பேசினாள். அவனுக்கு நிம்மதியாக இருந்தது. ஊருக்கு திரும்பும் நாளில் வேலை சற்று குறைந்திருந்ததால் கடைவீதிக்கு சென்று கண்மணிக்கும் அவனுக்கும் சில உடைகளும் அவனுக்கு தேவையான சில பொருட்களையும் வாங்கினான். ஒரு பெட்ஷாப் கண்ணில் பட்டது. உள்ளே சென்று பூனைக்கு உணவு வாங்கலாமா என்று யோசித்தான். அப்படியொரு பூனை உண்மையாக இருக்கிறதா என்ற சந்தேகம் வந்து அந்த யோசனையை கைவிட்டான். ப்ரபாவுக்கு பேருந்து ஒன்பது மணிக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.அப்படி கிளம்பினால் நள்ளிரவில் தான் வீடு போய் சேர முடியும். எல்லா வேலைகளும் முடிந்தவிட்டபடியால் மதியமே அங்கிருந்து கிளம்பி விட்டான். இரவு எட்டு மணிக்கெல்லாம் ஊர் வந்து சேர்ந்துவிட்டான். பேருந்தில் இருந்து இறங்கி வீடு நோக்கி உற்சாக துள்ளல் நடை போட்டான்.
வழக்கத்தை விட வீடு சற்று அதிக இருளையும் அமைதியையும் கூட்டிக் கொண்டு நின்றிருந்தது ப்ரபாவிற்கு பயத்தை ஏற்படுத்தியது. அவசரமாக படியேறியவனின் கால்களை சிதறிக் கிடந்த காலி அட்டைப்பெட்டிகள் இடறியது. பயம் கவ்வ இரண்டிரண்டு படிகளாக தாவி மாடியேறி வீட்டுக் கதவை அடைந்து ஒரு முறை நிதானித்து மூச்சு விட்டுக் கொண்டான்.
காலிங்பெல்லை ஒருமுறை அழுந்த அடித்துவிட்டு காத்திருந்தான். நிமிடங்கள் கடந்தன. மொபைலின் கால் லிஸ்டில் பெயரை சொடுக்கிவிட்டு காத்திருந்தான். அழைப்பு எடுக்கப்படவில்லை. கதவில் தட்டுவதற்காக கைவைத்தவுடன் கதவு திறந்து கொண்டது. கால்கள் நடுங்க மெல்ல அடியெடுத்து வைத்தவன் விளக்கை போட்டான். ப்ரபாவிற்கு உள்ளூர எதோ ஒன்று அடித்துக்கொண்டே இருந்தது. படுக்கையறை நோக்கி தன்னிச்சையாக நடந்து சென்றவன் கண்மணி உறங்குவதைப் போல படுத்திருப்பதை கண்டான். சாதரண உறக்கமாக அது தெரியவில்லை. நெடுங்காலமாக தூக்கத்தை தொலைத்த யட்சி ஆழ்ந்த உறக்கத்திலிருப்பது போல் தெரிந்தது.
அமைதியாக கவுச்சில் வந்து அமர்ந்தவன் அடுப்படியில் இருந்து வெளிவந்த பூனையைக் கண்டு திடுக்கிட்டான். அடர் சாம்பல் நிற பூனை. அதன் வாயில் பல்லி ஒன்றை கவ்விக் கொண்டிருந்தது. அமைதியாக அவனை உற்று நோக்கிவிட்டு கதவிடுக்கின் வழியே வெளியேறி மறைந்தது. ப்ரபா முகத்தை கைகளால் மூடிக்கொண்டு பெருங்குரலெடுத்து அழத் தொடங்கினான்.