அவ்வளவு எளிதில் சிக்காதவர்களையும், புரிந்து கொள்ள முடியாதவர்களையும் "சரியான எம்டன்' என அடைமொழி இட்டு அழைப்பது வழக்கம். அது என்ன "எம்டன்' என, யோசித்திருக்கிறீர்களா? இதன் பின்னணியில் சுவாரசியமான சம்பவம் உண்டு.
முதல் உலகப்போரில் இந்தியா நேரடிப் பங்கு பெறவில்லை. ஆனால், பிரிட்டிஷ் காலனி ஆதிக்க நாடு என்பதால், ஜெர்மானியர்கள் இந்தியாவையும் தாக்கினர். தீவிர தாக்குதல் இல்லை எனினும், சிறிய அளவிலான தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.
ஜெர்மனியின் "பாக்கெட் பேட்டில்ஷிப்' ரகத்தைச் சேர்ந்த ஒரு நீர்மூழ்கிக் கப்பல் இந்தியப் பெருங்கடல் பகுதியில் சுற்றித் திரிந்தது. அதை பிரிட்டிஷாரால் பின்தொடரவோ, கண்காணிக்கவே இயலவில்லை. எப்பொழுது எங்கு இருக்கும் என கணிக்க முடியாத அளவுக்கு அதன் செயல்பாடு இருந்தது.
1914ம் ஆண்டு செப்., 22ம் தேதி இக்கப்பல் மதராசப்பட்டினத்துக் கரையோரத்துக்கு வந்து குண்டு வீசியது. ஏன், எதற்கு என யாருக்கும் காரணம் புரியவில்லை.
இக்குண்டு வீச்சால், மூன்று பேர் மட்டுமே இறந்ததாக "இந்து' நாளிதழ் செய்தி வெளியிட்டது; 30 பேர் இறந்ததாக வெளியான தகவல் வதந்தி எனவும் கூறியது. ஆனால், மக்கள் பீதியடைந்து நகரத்தை விட்டு வெளியேறத்துவங்கினர்.
இத்தாக்குதலில் அப்போதைய உயர்நீதிமன்றத்தின் சுவர் கொஞ்சமாக சேதமடைந்தது. அந்தச் சுவரில் பதிக்கப்பட்ட நினைவுக்கல் உடைந்து போனது. சம்பந்தப்பட்ட இடத்தில் கிடைத்த குண்டின் பகுதிகள், தற்போது கோட்டை அருங்காட்சியகத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.
எம்டன் கப்பலில் தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் செண்பகராமன் பிள்ளை என்பவரும் பணியாற்றிருக்கிறார். சப்தம் செய்யாமல் திடீர் தாக்குதலை நிகழ்த்தி விட்டு, வந்த சுவடே தெரியாமல் சென்றதால், "எம்டன்' தமிழர்களால் மறக்க முடியாத ஒன்றாகி விட்டது.
முதலில் எம்டனைக் கண்காணிக்க முடியாத பிரிட்டிஷார் பின்னர் அதன் வழித்தடங்கள், எந்த நாட்களில் எங்கு நின்றது, எப்படித் தப்பியது என்பன போன்ற தகவல்களை ஒரு "மேப்'பாக வரைந்து வைத்துள்ளனர். 1914ல் வரையப்பட்ட இந்த மேப், நுங்கம்பாக்கம் டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள "மெட்ராஸ் லிட்ரரி சொசைட்டி'யில் இன்றும் நல்ல நிலையில் பாதுகாக்கப்படுகிறது.