மறதிக்கு மருந்து…
இங்கே தானே வெச்சேன் எங்கே போச்சு ?” எனும் தினசரி புலம்பல் முதல். ஐயோ கிரெடிட் கார்ட் பில் கட்ட மறந்துட்டேனே என மாதாந்திரப் புலம்பல் வரை எக்கச் சக்க மறதிகள் நமது வாழ்க்கையில். எல்லாவற்றையும் நினைவில் வைத்திருக்க யாராலும் முடியாது. ஆனால் என்ன ? சிலர் இந்த விஷயத்துல கெட்டிக்காரங்களா இருப்பாங்க. குறிப்பா மனைவிகள். கணவனோட விஷயத்தை ஞாபகம் வைத்திருப்பதில் கில்லாடிகள் அவர்கள். சிலர் எல்லாத்தையும் மறந்து தொலைப்பாங்க. கல்யாண நாளையே மறந்துட்டு மனைவி கிட்டே அசடு வழியற கணவன் மாதிரி. இதுக்கெல்லாம் காரணம் நம்மோட NR2B என்கிற ஜீன் தானாம்!.
இந்த ஜீன் மூளையிலுள்ள ஹிப்போகேம்பஸ் எனும் உள் பகுதியில் இருக்கிறது. இந்த ஹிப்போகேம்பஸ் எனும் பகுதி தான் நமது நினைவாற்றலின் பெட்டகம். இந்த இடம் டேமேஜ் ஆனால் நமது நினைவும் அத்தோடு காலியாகிவிடும். அப்படி சேதமாவதால் வருவது தான் அல்சீமர்ஸ் போன்ற கொடிய நோய்கள். அந்த நோய் வந்தால் தனது குடும்பம், பிள்ளைகளைக் கூட மறந்து விடுவார்கள். ஞாபகத் தளம் வெள்ளைப் பேப்பர் போல ஆகிவிடும். இந்த நோயை மையமாய் வைத்து சில ஆண்டுகளுக்கு முன் “தன்மாத்ரா” எனும் மலையாளப் படம் ஒன்று வெளியானது. அது கேரளாவில் இந்த நோய் குறித்த மாபெரும் விழிப்புணர்வையே ஏற்படுத்தியது என்பது தனிக் கதை.
இந்த NR2B ஜீனை எக்ஸ்பிரசிங் செய்யும் போது நினைவாற்றல் அதிகரிக்கும் என கண்டறிந்திருக்கிறார்கள். எக்ஸ்பிரசிங் என்பது ஜீன்களில் மாற்றம் செய்யும் ஒரு அறிவியல் முறை. எலிகளை வைத்து முதலில் இந்த சோதனை நடத்தப்பட்டது. அப்படி ஜீனில் மாற்றம் செய்த எலி நினைவாற்றலில் அசத்தி விட்டதாம். மற்ற எலிகளை விட பல மடங்கு கூர்மையாய் விஷயங்களை நினைவில் வைத்திருந்ததாம். எலிகளிடம் இருப்பதும், மனிதனிடம் இருப்பதும் ஒரே தன்மையிலான NR2B என்பதால் இது மனிதனுடைய நினைவாற்றலையும் நிச்சயம் அதிகரிக்கும் என நம்புகின்றனர் விஞ்ஞானிகள்.
ஷங்காயிலுள்ள கிழக்கு சீனா நார்மல் பல்கலைக்கழகத்தில் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது. இந்த கண்டுபிடிப்பு நினைவாற்றல் சம்பந்தமான நோயில் உழல்பவர்களுக்கு ரொம்பவே பயனளிக்கும். குறிப்பாக அல்சீமர், டெமிண்டியா போன்ற நோயாளிகளின் சிகிச்சைக்கு புதுக் கதவு திறந்திருக்கிறது என்கிறார் ஆராய்ச்சியாளர் க்சியாவோகா. இவர் அந்தப் பல்கலைக்கழகத்தின் மூளை தொடர்பான ஆராய்ச்சிகளில் புகழ்பெற்ற பேராசிரியர்.
இந்த NR2B எனும் ஜீன் எல்லா உயிரிகளிலும் ஒரே போல இயங்கும் என்பது மருத்துவ நம்பிக்கை. இதன் மூலம் உலகையே மிரட்டிக்கொண்டிருக்கும் பல கொடிய நோய்களுக்கு தீர்வு கிடைக்கும் என நம்பப்படுகிறது.