Author Topic: கதையில் ஒரு விதை 1  (Read 1412 times)

Offline thamilan

கதையில் ஒரு விதை 1
« on: February 12, 2016, 09:40:58 PM »
                    செல்லாத காசிலும் செப்பிருக்கும்   

கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் சண்டை. வாக்குவாதம் முற்றியது.

       " நீயெல்லாம் இருந்து என்ன ஆகப்போகிறது?வீட்டில் என்ன தான் வெட்டி முறிக்கிறியோ.  ஒரு வேலைக்கும் லாயக்கில்லாமல் இருப்பதை விட ஒழிந்து தொலை" என்று ஆவேசமாக திட்டி விட்டு கணவன் வேலைக்கு போய் விட்டார்.

         இத்தனைக்கும் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்லக் கூடியவர்கள்  தான். கணவனின் கோபம் அப்படி பேச வைத்து விட்டது. வீட்டில் நடக்க இருக்கும் விபரீதம் தெரியாமல் அவர் வேலையில் ஆழ்ந்து விட்டார்.

        மாலையில் வீடு திரும்பிய போது, தெருவில் இருக்கும் சிறுவர்கள் வீட்டுவாசலில் அமர்ந்து மண்ணை கொட்டி விளையாடிக் கொண்டிருந்தார்கள். வீட்டுக் கதவு ஆவென திறந்து கிடந்தது. வீட்டில் இருக்கும் நாய்க் கூண்டு திறந்து கிடந்தது. நாயை காணவில்லை.
திகைப்போடு  வீட்டுக்குள் நுழைந்தால், அங்கே களேபரம் நடந்தற்கான  அறிகுறிகள் தென்பட்டன, தொலைக்காட்சி யில் காட்டுன் படம் சத்தமாக ஓடிக் கொண்டிருந்தது. விளக்கு  ஒன்று கீழே விழுந்து கிடந்தது. அறை  முழுவதும் பொம்மைகளும் உடைகளுமாக சிதறிக் கிடந்தன. சமையலறைக்குள் மெதுவாக எட்டிப் பார்த்தார். பாத்திரங்கள் கழுவும் தொட்டி பாத்திரங்களால் நிரம்பி வழிந்தது. மேசையில் காலை சிற்றுண்டி கொட்டி கிடந்தது. குளிரூட்டும் பெட்டின் கதவு அகலமாக திறந்து கிடந்தது. மேசையின்  அடியில் ஒரு கண்ணாடி டம்ளர் உடைந்து கிடந்தது.
      ஏதோ நடந்திருக்கிறது  மதிய உணவு வேளைக்கு முன்பே தன் மனைவிக்கு எதோ நடந்திருக்கிறது. என்று உள்மனம் சொன்னது. கணவருக்கு படபடப்பு அதிகம் ஆனது. ஹோலை ஒட்டி இருந்த குளியல் அறையில் தண்ணீர் கொட்டிகொண்டிருந்தது, கதவை தாண்டி வந்து தண்ணீர் குட்டையாகத் தேங்கிக் கிடந்தது. சோப்புக் கட்டிகளும் மேலும் பல விளையாட்டுப் பொருட்களும் குளியல் அறை எங்கும் சிதறிக் கிடந்தன. கண்ணாடி மீதும் சுவர்களின் மீதும் பற்பசை பூசப் பட்டிருந்தது. "டாடி" என்ற குரல் கேட்டு திடுக்கிட்டுப் பார்த்த கணவர் அங்கே ஒன்றரை வயது மகன் பேஸ்டை பிதுக்கி விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டார். அவனை அவசரமாகத் தூக்கி ஆழ்ந்த முத்தம் கொடுத்து அணைத்துக் கொண்டார். கண்களில் நீர் பொங்கியது. மனைவிக்கு ஏதாவது ஆபத்துநேர்ந்திருக்குமோ? என்ற பீதியுடன் அவளைத் தேடினார்.   

             படுக்கையறை நோக்கி பார்வை திரும்ப. அவசரமாக அதன் கதவைத் திறந்தார். உள்ளே

         முதுக்குக்கு தலையணை கொடுத்து ஒய்யாரமாக சாய்ந்திருந்த அவரது மனைவி ஏதோ புத்தகம் படித்துக் கொண்டிருந்தாள். ஸ்வீடி என்றார் குரல் கம்ம,

            அவரைப்பார்த்த மனைவி புன்முறுவலுடன் 'எப்போது வந்தீங்க' என்று  கேட்டாள்.

              அதிர்ச்சியில் இருந்து மீளாத கணவர், "இன்று வீட்டில் என்ன தான் நடந்தது"? என்று கேட்டார்.

                மறுபடி சிரித்த மனைவி, " வீட்டில் என்ன தான் வெட்டி முறிக்கிறியோ? என்று தினமும் கேட்பீர்களே.இன்னைக்கு ஒன்னும்  வெட்டி  முறிக்கல. அது தான் நடந்தது." என்று கூறினாள்.


            செல்லாத காசிலும் செப்பு இருக்கும். யாரையும் குறைத்து மதிப்பிடக் கூடாது. இயல்பாகவே சில விஷயங்கள் நடந்து கொண்டிருப்பதனாலேயே  அவற்றை கணக்கில் எடுத்துக் கொள்ளாத குணத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.