Author Topic: ~ ஒரு டஜன் யோசனைகள்! ~  (Read 1008 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226539
  • Total likes: 28958
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ ஒரு டஜன் யோசனைகள்! ~
« on: November 04, 2015, 07:22:08 PM »
ஒரு டஜன் யோசனைகள்!

`JEE’ எக்ஸாம்... ஜெயிக்கலாம் ஈஸியா!வாழ்க்கையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் எதிர்கொள்ள வேண்டிய விஷயங்களை அதிக சிரமமின்றி கடக்க உதவும் பகுதி... `ஒரு டஜன் யோசனைகள்’! இந்த இதழில், மத்திய அரசின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்குரிய அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வில்
(JEE-Joint Entrance Examination) உங்கள் வீட்டுப் பிள்ளைகள் வெற்றிக்கொடி நாட்ட உதவும் பயனுள்ளஆலோசனைகள்...



1. JEE நுழைவுத் தேர்வு: இது மெயின் பேப்பர்-I, மெயின் பேப்பர்-II என இரு பிரிவுகளாக நடத்தப்படும். பேப்பர்-I தேர்வில் தேர்ச்சிபெறும் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்கள் 60%க்கும், ப்ளஸ் டூ மதிப்பெண்கள் 40%க்கும் வெயிட்டேஜ் பார்க்கப்பட்டு, தரவரிசையின் அடிப்படையில் நாட்டில் உள்ள 30 NIT கல்லூரிகள், 18 IIT கல்லூரிகள், 18 GFTI கல்லூரிகளிலும் இடம் கிடைக்கப்பெறுவார்கள். தவிர, மத்திய அரசின் கீழ் இயங்கும் 20-க்கும் மேற்பட்ட கல்லூரிகளிலும் B.E., B.Tech பிரிவுகளில் சேரும் வாய்ப்பும் கிட்டும்.



2. JEE அட்வான்ஸ்: டாப் ரேங்க் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள், அட்வான்ஸ் எனப்படும் இரண்டாம் கட்டத் தேர்வு எழுதலாம். மெயின் பேப்பர்-I எழுதியவர்களின் மதிப்பெண் மற்றும் மத்திய அரசால் வகுக்கப்பட்ட இடஒதுக்கீட்டின் அடிப்படையில் தர வரிசையில் முதல் ஒன்றரை லட்சம் இடங்களுக்குள் வரும் மாணவர்கள் மட்டுமே அட்வான்ஸ் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். இந்தத் தேர்வு முடிவின் தரவரிசைப் பட்டியலில் வரும் பதினெட்டாயிரம் மாணவர்களில், முதல் பத்தாயிரம் பேர் IIT, ISM Dhanbad கல்வி நிறுவனங்களிலும், அடுத்து வரும் எட்டாயிரம் மாணவர்கள் IIST, RGIPT, IISTC, ஆறு IISER கல்வி நிறுவனங்களிலும், சேர்க்கை பெற முடியும்.



3. JEE மெயின் பேப்பர்-II: இதில் தேர்ச்சிபெறும் மாணவர்கள் ஸ்கூல் ஆஃப் ஆர்க்கிடெக்சர், NIT-ல் உள்ள ஆர்க்கிடெக்சர் பிரிவு மற்றும் எல்லா மாநிலங்களிலும் உள்ள மத்திய அரசின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் B.Arch, B.Planning பிரிவுகளில் சேர்க்கை பெற முடியும்.
4. கொஸ்டின் பேப்பர்: மெயின் பேப்பர் I, அட்வான்ஸ் பேப்பர்-I, அட்வான்ஸ் பேப்பர்-II இந்தத் தேர்வுகளுக்கெல்லாம் 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பின் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களே சிலபஸ். மெயின் பேப்பர்-II எழுதுபவர்களுக்கு கணிதம், ஆர்க்கிடெக்சர், ஆப்டிட்யூட், படம் வரைதல் தொடர்பான மூன்று மணி நேரத் தேர்வு நடைபெறும்.
எல்லாப் பிரிவு தேர்வுகளுக்கும் தவறான பதில்களுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் உண்டு.
5. விண்ணப்பம்: பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்போதே, அந்தக் கல்வியாண்டின் நவம்பர் மாதம் தொடங்கி ஜனவரி மாதத்துக்குள் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தைச் செலுத்தி இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
6. இணைக்க வேண்டியவை: விண்ணப்பத்துடன் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்து இணைக்க வேண்டியவை...
* மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட சாதிச்சான்று
* 10-ம் வகுப்புத் தேர்ச்சி மதிப்பெண் பட்டியல்
* வெள்ளை நிறப் பின்னணி பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்
* கறுப்பு நிற மையில் மாணவரின் கையொப்பம்
* மாணவரின் கைரேகை
* மாற்றுத்திறனாளிகள், சிறப்புப் பிரிவினருக்குரிய சான்று.



7. தேர்வு முறை: மெயின் பேப்பர்-I தேர்வு, ஆன்லைனிலேயே எழுதலாம். ஏப்ரல்/மே மாதங்களில் மத்திய அரசால் அறிவிக்கப்படும் ஏதேனும் மூன்று தேதிகளில் தேர்வு நடைபெறும். அதில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். மெயின்-II மற்றும் அட்வான்ஸ் தேர்வுகள், தேர்வு மையத்தில்தான் எழுத வேண்டும்.
8. போனஸ் வாய்ப்புகள்: JEE தேர்வு எழுத, மாணவர்களுக்கு மூன்று வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. 12-ம் வகுப்பு முடித்தவுடன் ஒரு வாய்ப்பும், 12-ம் வகுப்பு முடித்த அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் தேர்வு எழுதும் வாய்ப்புகளும் வழங்கப்படுகின்றன. ஆனால், அட்வான்ஸ் தேர்வு எழுதுபவர்களுக்கு 12-ம் வகுப்பு முடித்த வருடம், அதற்கு அடுத்த வருடம் மட்டுமே வாய்ப்பளிக்கப்படும்.
9. தமிழ்வழிக் கல்வி மாணவர்கள் கவனத்துக்கு:  வினாக்கள் அனைத்தும் ஆங்கிலம் மற்றும் இந்தியில் இருக்கும். தமிழ்வழிக் கல்வி மாணவர்களுக்கு மெயின் பேப்பர் I-ஐ விட, பேப்பர்-II  எளிமையாக இருக்கும். முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை என்பதை மனதில் வைக்கவும்.
10. எப்போதில் இருந்து படிக்க வேண்டும்: சிலர் 6-ம் வகுப்பில் இருந்தே தயாராக வேண்டும் என்பார்கள். உண்மையில் தேர்வு முறை மற்றும் மதிப்பெண் வழங்கும் முறையானது ஒவ்வோர் ஆண்டும் மாறிக்கொண்டே இருக்கும் என்பதால், அது பயனற்றது. 11-ம் வகுப்பு, 12-ம் வகுப்புப் பாடங்களைப் புரிந்து படித்தாலே தேர்ச்சி பெற்றுவிடலாம்.
11. கவனிக்க: மாணவர்கள் எந்த மாநிலத்தில் மேல்நிலைக் கல்வி கற்கிறார்களோ, அந்த மாநிலத்தில் மட்டுமே JEE தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.
12. மேலும் விவரங்களுக்கு...
www.jeemain.nic.in, www.indiacollegefinder.org, www.jeeadv.iitk.ac.in என்ற இணையதள முகவரிகளைப் பார்வையிடலாம்.