சிறுநீரக கோளாறை நீக்கும் காலிபிளவர்
உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் பணியை செய்வது சிறுநீரகம். அதனை செய்ய முடியவில்லை என்றால், உடலில் அதிக நீர்மம் சேர்ந்து கை, கால்கள், முகம் போன்ற இடங்களில் வீக்கம் ஏற்படும். எனவே சிறுநீரை குறிப்பிட்ட நேர இடைவெளியில் கழிக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் சிறுநீரக கல் உள்ளிட்ட பல்வேறு உபாதைகள் ஏற்படும். உடலில் உள்ள கழிவுகள் மற்றும் அதிகளவில் உள்ள நீர்மத்தை அகற்றுவதே சிறுநீரகத்தின் வேலை.சிலருக்கு சிறுநீர் கழிக்கும்போது சிரமமாக இருக்கும். சிலருக்கு வலி, எரிச்சல் ஏற்படலாம். சிறுநீரக பாதையில் தொற்று காரணமாக இந்த பாதிப்புகள் ஏற்படும். இந்த தொற்று சிறுநீரகங்களுக்கு பரவினால் காய்ச்சல் உண்டாகி, பின்பக்கம் வலியும் உண்டாகும்.
சிறுநீரக நோயின் முதல் அறிகுறியே சிறுநீர் வெளியேறும் அளவும், அதனை எத்தனை முறை கழிக்கிறோம் என்பதே ஆகும். முக்கியமாக இரவு நேரத்தில் இந்த மாற்றங்களை உணரலாம். அதில் சிறுநீரின் நிறம் அடர்ந்த நிறத்தில் இருக்கலாம் (அ) அவசரமாக சிறுநீர் கழிக்க வேண்டும் என தோன்றும், ஆனால் சிறுநீர் வராது.
சிறுநீரக நோய் ஏற்பட்டால் உடலில் எரித்ரோபோய்டின் சுரப்பது குறைந்து விடும். இதனால் உடலில் உள்ள ரத்த சிவப்பணுக்களும் குறைந்து விடும். இதன் மூலம் ரத்த சோகை ஏற்படும். இதன் காரணமாக அனைத்து சிவப்பணுக்களுக்கும் செல்லும் ஆக்சிஜன் அளவு குறையும். மேலும் நோயாளிகளுக்கு சோர்வும் ஏற்படும்.
சிறுநீரக நோய் இருந்தால் வெதுவெதுப்பான சூழல் இருந்தாலும், ரத்த சோகை இருப்பதால், எப்போதுமே குளிராகவே இருக்கும். குறிப்பாக சிறுநீரக தொற்று (பிளோன்ஃபிரிடிஸ்) இருந்தால் குளிர் காய்ச்சல் ஏற்படும்.சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ரத்தத்தில் உள்ள யூரியாவின் (யூரேமியா) அளவு அதிகரித்து விடும். இதனால் மூச்சு காற்று விடும்போது அது சிறுநீர் போன்ற வாடையாக மாறும். இதுவே அமோனியா மூச்சு எனப்படும்.
ரத்தத்தில் உள்ள கழிவுப்பொருட்கள் குவிந்து கொண்டே போகும். இதனால் குமட்டலும் வாந்தியும் ஏற்படும்.
*முளைக்கட்டிய பயறு வகைகளை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் சிறுநீரகத்தை சுத்தமாக வைத்து, சிறுநீரக கற்கள் வராமலும் தடுக்கும்.
*ஆப்பிள் சாப்பிட்டால், ரத்த ஓட்டம் சீராகும். சிறுநீரகமும் சுத்தமாக இருக்கும். எனவே தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வருவது நல்லது.
*சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைப்பதில் திராட்சை சிறந்த பழங்களில் ஒன்றாகும். சிவப்பு திராட்சையில் உள்ள சத்து இதயத்திற்கும், சிறுநீரகத்திற்கும் மிகவும் சிறந்தது.
*செர்ரி பழத்தில் வைட்டமின்கள் அதிகமாகவும், புரோட்டீன்கள் குறைவாகவும் உள்ளது. மேலும் இவை உடலில் உள்ள பொட்டாசியத்தின் அளவை குறைத்து, சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது.
*முட்டையின் வெள்ளைக் கருவில் அமினோ ஆசிட்டுகள் அதிகமாகவும், பாஸ்பரஸ் குறைவாகவும் உள்ளது. இது சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும் உணவுப் பொருட்களுள் ஒன்று.
*காலிபிளவரில் வைட்டமின் சி, ஃபோலேட் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், உடலில் உள்ள டாக்சின்களை வெளியேற்றி, சிறுநீரகத்தை சீராக இயங்க வைக்கும்.
*உணவில் சோடியம் நிறைந்த உப்பை குறைவாக சேர்த்து வருவதால் சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கலாம்.
*சிறுநீரக கற்கள் இருப்பவர்கள், ஒரு வாரம் தொடர்ந்து தினமும் காலையில் வாழைத்தண்டு ஜூஸ் குடித்து வந்தால், சிறுநீரகக்கற்கள் கரைந்துவிடும்.
*சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு போன்றவற்றால் தயாரிக்கப்பட்ட ஜூஸ் குடித்து வருவது நல்லது. இவை சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுக்கும்
சாப்பிடக்கூடாதவை
*சிறுநீரக கல் பிரச்னை உள்ளவர்கள் சில உணவுகளை தவிர்க்க வேண்டும்.உப்பு பிஸ்கட், சிப்ஸ், கடலை, பாப்கான், அப்பளம், வற்றல், ஊறுகாய், கருவாடு, முந்திரி, பாதாம், பிஸ்தா, கேசரி பருப்பு, கொள்ளு, துவரம் பருப்பு, ஸ்ட்ராங் காபி, டீ, சமையல் சோடா, சீஸ், சாஸ் ஆகியவைகளை தவிர்க்க வேண்டும். முக்கியமாக சாக்லேட், குளிர்பானங்கள், மது மற்றும் புகையிலையை தவிர்க்க வேண்டும்.