Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
Copy rights issue contents will be removed without any notifications/warnings!!.
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ இயற்கை உணவில் எல்லாம் இருக்கு! ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ இயற்கை உணவில் எல்லாம் இருக்கு! ~ (Read 1073 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 227456
Total likes: 29058
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ இயற்கை உணவில் எல்லாம் இருக்கு! ~
«
on:
April 07, 2014, 04:55:53 PM »
இயற்கை உணவில் எல்லாம் இருக்கு!
உணவே மருந்து, மருந்தே உணவு. ஆனால், இந்த 50 ஆண்டுகால இடைவெளியில் உணவே விஷம், விஷமே உணவு என்று நமக்கு நாமே அழிவை தேடிக்கொண்டிருக்கிறோம். இன்றைய அவசர வாழ்க்கைமுறை, நம் வயிற்றை இறுக்கத் தொடங்கிவிட்டது. சாப்பிட நேரமின்றி கண்டதையும் அள்ளிப்போட்டுக் வயிற்றை குப்பையாக்கிக் கொண்டிருக்கிறோம். இன்று மளிகைக்கடை, காய்கறி கடை, பழக்கடைகளில் கிடைக்கும் அனைத்து இயற்கையான பொருட்களும்கூட பேக்டு முறையில் விற்கப்படுவதுதான் வேதனை.
முறையற்ற உணவுப் பழக்கத்தால், உடலில் எதிர்ப்பு சக்தி குறைந்து எளிதில் நோய்களின் பிடியில் அவதிப்படுகின்றோம்.
இயற்கைப் பிரியன் ரத்தின சக்திவேல் தரும் சமைக்காத இயற்கை உணவு வகைகளும், சித்த மருத்துவர் சிவராமன் சொல்லும் உடல் உபாதைகளைப் போக்கும் உன்னத உணவு முறைகளும் இணைந்து தரப்பட்டுள்ள இந்த சத்தான கையேடு, உங்களை ஈடில்லா ஆரோக்கிய வாழ்வுக்கு வழிகாட்டுவதுடன், நிச்சயம் உடலுக்கு வலுவூட்டுபவையாகவும் இருக்கும்.
சமைக்காத இயற்கை உணவுகள்
''சூரிய சக்தி இயற்கையாக சமைத்து தரும் இனிய கனிகள், காய்கறிகள், கீரைகள் மனிதன் மறுபடியும் வேகவைக்காமல் சாப்பிட்டு உயரிய ஆற்றல் மற்றும் மருத்துவ குணங்களைப் பெற்று ஆரோக்கியம் காக்க உயிர் உள்ள இயற்கை உணவுகள் வழிகாட்டுகின்றன.
இந்த இயற்கை உணவுகள் மிகுந்த காரத்தன்மை உடையன. இவை நோய்களை விரட்டும் சஞ்சீவன உணவுகள். வயதானவர்களுக்கும், பெண்களுக்கும், குழந்தைகளுக்கும், நோயாளிகளுக்கும் எளிதில் ஜீரணமாகும் எளிய உணவுகள்.
நமது உடலின் தேவையான உணவின் மூலக்கூறுகள் 80% காரத்தன்மையாகவும், 20% அமிலத்தன்மையாகவும் இருக்க வேண்டும். சமைத்த உணவுகள் முழுவதும் அமில உணவுகளாகவே உள்ளன. சுவைக்காக உண்ணும் சமையல் உணவு மட்டும் நமது உடலின் சத்துக்கள் மற்றும் தேவையைப் பூர்த்தி செய்வது இல்லை. எனவே, இனியும் இயற்கை உணவுக்கு மாற தயங்க வேண்டாம்.'' என்கிற இயற்கைப் பிரியன் இரத்தின சக்திவேல், இயற்கையாகக் கிடைக்கும் உணவுகளை வைத்து சமைக்காமல் சாப்பிடும் முறைகளையும், பலன்களையும் பட்டியலிடுகிறார்.
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 227456
Total likes: 29058
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ இயற்கை உணவில் எல்லாம் இருக்கு! ~
«
Reply #1 on:
April 07, 2014, 04:59:00 PM »
கீர் வகைகள்
முளை கோதுமை தேங்காய்பால்
விதைக் கோதுமையை எட்டு மணி நேரம் ஊறவைத்து ஈரத்துணியால் கட்டி முளைக்கவிடவும். இதைக் காயவைத்து வறுத்து அரைக்கவும். அரைத்த மாவை சலிக்காமல் பாட்டிலில் பத்திரப்படுத்தவும். தேவையானபோது ஒரு டம்ளர் நீரில் ஒரு டீஸ்பூன் அல்லது இரண்டு டீஸ்பூன் மாவு கலந்து, அதனுடன் இனிப்புக்கு வெல்லம், தேன், ஏலக்காய்த்தூள் சேர்க்கலாம். இதனுடன் தேங்காய் பால் சேர்த்தும் பருகலாம். அற்புதமான சுவையுடன் இருக்கும்.
பலன்கள்: புற்றுநோய்க்கு நல்ல மருந்து. உடனடியாக ஜீரணமாகும். எலும்பு உறுதியாகும். உடல் பலம் பெருகும். உயர் ரத்த அழுத்தம் குறையும். உடல் பருமன், தொப்பை, ரத்த சோகை உள்ளவர்கள் தினமும் காலையில் அருந்தலாம்.
பேரீட்சை கீர்
200 கிராம் பேரீட்சைப் பழங்களை ஊறவைத்து கொட்டை நீக்கி மிக்ஸியில் அடித்து சாறு எடுக்கவும். 2 மூடி தேங்காய் துருவலை அரைத்து பால் எடுத்து, தேவையான நீர் கலந்து ஏலக்காய்த்தூள், பேரீட்சைச் சாறை சேர்க்கவும்.
பலன்கள்: குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். சளி, இருமல் தொல்லையால் அவதிப்படுபவர்கள், இதை காலை டிஃபனாக சாப்பிடலாம். ரத்தம் விருத்தியாகும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும், தெம்பும் கூடும்.
காரட் கீர்
500 கிராம் காரட்டை கழுவிச் சுத்தம் செய்து துருவி மிக்ஸியில் அரைத்து சாறு எடுக்கவும். 2 மூடி தேங்காய் துருவலை மிக்ஸியில் அரைத்து தேங்காய்ப்பால் எடுக்கவும். இந்த இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து தேவையான தண்ணீர் கலந்து, 200 கிராம் வெல்லத்தூள், ஏலக்காய்த்தூள் கலந்து பருகலாம்.
பலன்கள்: கண்ணுக்கு மிகவும் நல்லது. பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு காலையில் கொடுக்கலாம். தொடர்ந்து சாப்பிட, புற்றுநோய் விலகும். குடல் புண் சரியாகும்.
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 227456
Total likes: 29058
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ இயற்கை உணவில் எல்லாம் இருக்கு! ~
«
Reply #2 on:
April 07, 2014, 05:03:37 PM »
முளை தானிய பயிறு வகைகள்!
எட்டு மணி நேரம் ஊறவைத்து, முளைகட்டி ஓரிரு நாட்கள் காத்திருக்க வேண்டியிருப்பதால், பலரும் சோம்பலின் காரணமாக இதைச் சாப்பிடுவதில்லை. ஆனால், சத்தான முளை தானியப் பயறுகளை சாப்பிடுவதால், குறைந்த தானியத்தில் அதிக இயற்கை உணவைப் பெற முடியும். சமைக்காமல் அப்படியே சாப்பிடும் போது ஒரு வேளைக்கு 50 கிராம் அளவே போதுமானது. முளைப்புத் திறனும் சிலசமயம் மாறுபடும். கூடிய வரையில் ஃப்ரிட்ஜில் வைக்காத முளை தானியங்களைப் பயன்படுத்துவது நல்லது.
பச்சைப்பயறு
நல்ல குடிநீரில் எட்டு மணி நேரம் ஊறவைத்து, நன்றாகக் கழுவி, ஈரமான பருத்தித் துணியில் கட்டி முளைக்கவிடவும். காலையில் ஊறவைத்து மாலையில் நீரை வடித்துக் கட்டினால், மறுநாள் அதிகாலை வெள்ளை முளை எட்டிப் பார்க்கும். தினமும் ஒரு நபருக்கு 50 முதல் 100 கிராம் வரை தேவைப்படும்.பல்லால் கடிக்க முடியாதவர்கள், இந்த முளைப் பயறை நீர் சேர்த்து அரைத்து அதில் வெல்லம், தேன், தேங்காய் துருவல், உலர் திராட்சை சேர்த்து காலை டிஃபனுக்கு பதிலாக சாப்பிடலாம்.
பலன்கள்: அதிகப் புரதச்சத்து இருப்பதால், வளரும் குழந்தைகளுக்கு நல்ல ஊட்டத்தைத் தரும். அல்சரைக் கட்டுப்படுத்தும். சருமத்தைப் பளிச்சென வைத்திருக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
முளைக்கட்டிய வெந்தயம்
சிறிது நேரம் ஊறவைத்து, ஈரப் பருத்தித் துணியில் முளைக்கட்டி சாப்பிடலாம்.
பலன்கள்: கடுமையான சர்க்கரை நோயாளிகள் தினமும் கட்டாயம் ஒரு கப் எடுத்துக்கொள்வதன் மூலம் சர்க்கரையின் அளவு கட்டுப்படும். வயிற்றுப்புண், பெண்கள் கர்ப்பப்பை நோய்கள், வெள்ளைப்படுதல் மற்றும் எப்படிப்பட்ட அல்சரையும் குணப்படுத்தும். ஒரு கப் அளவுக்கு எடுத்துக் கொள்ளலாம்.
கொள்ளு முளைப்பயறு
நன்றாக அலசி, நீர் சேர்த்து முளைக்கவிட்டுப் பயன்படுத்தவேண்டும்.
பலன்கள்: அதிக உடல்சூடு, தொப்பை, கெட்ட கொலஸ்ட்ரால், நீரழிவு நோய், உடல்பருமன் போன்ற பிரச்னைகளுக்கு கொள்ளு முளைப்பயறு மிகவும் நல்லது.
முளைவிட்ட எள், வேர்க்கடலை
பலன்கள்: மிகவும் மெலிந்த உடல் இருப்பவர்கள் முளைக்கட்டிய எள், வேர்க்கடலையைத் தினமும் 100 கிராம் அளவுக்கு சாப்பிடலாம். அகோரப் பசியை போக்கி, ஊட்டச்சத்தையும் தரும். கடின உழைப்பாளிகளுக்கும், துள்ளித் திரியும் வளரும் பிள்ளைகளுக்கும் மிக நல்லது.
கம்பு முளைப்பயறு
கம்பை 8 மணி நேரம் ஊறவைத்து ஈரத்துணியில் கட்டி முளைக்கவிடவும். அடிக்கடி ஒரு கைப்பிடி சாப்பிட்டு வரலாம். அரைத்துப் பாலாகவும் அருந்தலாம். கூழாக்கி, கஞ்சியாகவும் சாப்பிடலாம்.
பலன்கள்: பலம் கூடும். ஊட்டச்சத்துக் குறைபாடுள்ளவர்கள், தினமும் சாப்பிட உடல் உறுதிப்படும்.
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 227456
Total likes: 29058
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ இயற்கை உணவில் எல்லாம் இருக்கு! ~
«
Reply #3 on:
April 07, 2014, 07:07:02 PM »
லட்டு வகைகள்
எள்ளு லட்டு
400 கிராம் வறுத்த எள், 300 கிராம் கொட்டை நீக்கிய பேரீட்சை அல்லது வெல்லம், உலர் திராட்சை 100 கிராம், முந்திரி 50 கிராம், ஏலக்காய்த்தூள் சிறிதளவு.
எள்ளை மிக்சியில் அரைத்து அதனுடன் உலர் திராட்சையும் பேரீட்சையையும் கழுவி வெல்லம் சேர்த்து அரைக்கவும். விருப்பப்பட்டால், பனங்கற்கண்டு சேர்க்கலாம். ஏலத்தூள், முந்திரி கலந்து சிறுசிறு உருண்டைகளாகப் பிடிக்கவும்.
பலன்கள்: நல்ல சத்தான உணவு. உடல் இளைத்தவர்கள் ஒரு மாதம் தொடர்ந்து சாப்பிட்டு வர, உடல் தேறும். நல்ல தெம்பு கிடைக்கும். பசி தாங்கும் உணவு இது. மலச்சிக்கல் நீங்கும். பெண்களின் தாய்ப்பால் அதிகம் சுரக்க எள்ளு லட்டை சாப்பிடலாம்.
இயற்கை இனிப்பு லட்டு
முந்திரி, பாதாம், பேரீட்சை தலா 100 கிராம், உலர் திராட்சை, வெள்ளரி விதை தலா 50 கிராம், பிஸ்தா 20 கிராம், ஏலக்காய்த்தூள்.
பேரீட்சைப் பழங்களின் கொட்டைகளை நீக்கி சுத்தப்படுத்தி எல்லாவற்றையும் மிக்ஸியில் அரைக்கலாம். லட்டு போல் சின்ன சின்ன உருண்டைகளாக பிடிக்கவும். விருப்பப்பட்டால், தேங்காய் துருவல் சேர்த்துக்கொள்ளலாம்.
பலன்கள்: ஊட்டச்சத்தான லட்டு. நோஞ்சான் குழந்தைகளுக்கு காலை டிஃபனுக்கு பதிலாகத் தரலாம். ரத்த சோகையைப் போக்கும். அதிகத் தூரப் பயணம், வேலைப்பளு அதிகம் உள்ளவர்கள் தினமும் இரண்டு லட்டுகள் சாப்பிடலாம். பசியைப் போக்கும் உன்னத உணவு.
வேர்க்கடலை - பொட்டுக்கடலை லட்டு
300 கிராம் வறுத்த வேர்க்கடலை, 150 கிராம் பொட்டுக்கடலை இரண்டையும் மிக்ஸியில் அரைத்து, பேரீட்சை, உலர் திராட்சை சேர்த்து அரைத்து ஏலக்காய்த்தூள், முந்திரிப்பருப்பைக் கலந்து சிறு உருண்டைகளாகப் பிடிக்கலாம். தேவைப்பட்டால், தேன் அல்லது நெய் சேர்க்கலாம்.
பலன்கள்: பசியைப் போக்கும். உடலுக்கு தெம்பைக்கூட்டும். உரமாய் வைத்திடும். உடல் உழைப்பாளர்கள் அடிக்கடி சாப்பிடலாம். போஷாக்கு நிறைந்த உணவு.
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 227456
Total likes: 29058
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ இயற்கை உணவில் எல்லாம் இருக்கு! ~
«
Reply #4 on:
April 07, 2014, 07:10:21 PM »
துவையல் வகைகள்
பீட்ரூட் துவையல்
250 கிராம் பீட்ரூடைக் கழுவி தோல் சீவி, நைஸாகத் துருவிக்கொள்ளவும். 100 கிராம் இஞ்சியை தோல் சீவி நறுக்கிச் சாறு எடுக்கவும். சிறிது தண்ணீர் சேர்க்கலாம். சுவைக்கேற்ப எலுமிச்சை சாறு பிழிந்துவிட்டு, எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து பத்து நிமிடங்கள் ஊறவிடவும். தேவைப்பட்டால் பிளாக்சால்ட் சேர்க்கலாம்.
பலன்கள்: அனைவரும் சாப்பிடலாம். உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். அமிலத்தன்மை, மலச்சிக்கல், பசியின்மையைப் போக்கும். தொப்பையைக் குறைக்கும். ஜீரணக் கோளாறு, வயிற்றுவலி, வாயுப் பொருமல் மற்றும் கொலஸ்ட்ராலைக் குறைக்கும். கேன்சரைக் குணப்படுத்தும் உணவுகளில் பீட்ரூட் முக்கியப் பங்கு வகிக்கிறது. தயிரில் கலந்தும், சாதத்துடன் பிசைந்துச் சாப்பிடலாம்.
கொத்தமல்லித் துவையல்
500 கிராம் கொத்தமல்லித்தழை, 100 கிராம் கருவேப்பிலை இரண்டையும் கழுவி, பொடியாக நறுக்கி, சிறிது தண்ணீர்விட்டு அரைக்கவும். இதனுடன் 2 மூடி தேங்காய் துருவல், கழுவிய 2 குடமிளகாய் சேர்த்து அரைத்து சிறிது பிளாக் சால்ட், மிளகுத்தூள் சேர்க்கவும்.
பலன்கள்: மூட்டுவலி, வாயுப் பொருமல் சரியாகும். அதிக உடல் எடை இருப்பவர்கள், நீரழிவு நோயாளிகள் தினமும் சாப்பிடலாம். தொப்பை குறையும். தேமல் மறையும். நெஞ்செரிச்சல், வயிற்றுவலி, அஜீரணம், பித்த நோய்கள் குறையும். ரத்தம் விருத்தியடையும்.
நெல்லிக்காய் துவையல்
250 முழு நெல்லிக்காய்களை நறுக்கி கொட்டைகளை நீக்கவும். சிறிது நேரம் நறுக்கிய நெல்லிக்காய்களை தண்ணீரில் ஊறவைத்து, 5 பல் பூண்டின் தோலை நீக்கவும். 20 கிராம் இஞ்சித் தோலை நீக்கி நறுக்கி எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து அரைக்கவும். இதனுடன் மிளகுத்தூள், பிளாக்சால்ட் சிறிதளவு சேர்த்துக் கலக்கவும்.
பலன்கள்: ஊறுகாய்க்கு பதில் பயன்படுத்தலாம். சகல நோய்களையும் தீர்க்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. நன்றாகப் பசியெடுக்கும். அஜீரணக் கோளாறு விலகும். இளமையைத் தக்கவைக்கும். உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்.
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 227456
Total likes: 29058
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ இயற்கை உணவில் எல்லாம் இருக்கு! ~
«
Reply #5 on:
April 07, 2014, 07:15:12 PM »
சாலட் வகைகள்
காய்கறி சாலட்
காரட், தக்காளி, வெள்ளரி, வெங்காயம், கோஸ், வெண்பூசணி, புடலை, பீர்க்கை, சௌசௌ, முள்ளங்கி, சுரை இவற்றை தீக்குச்சி வடிவில் சிறியதாக நீட்டமாக நறுக்கவும். இந்தக் கலவை 200 கிராம் இருக்கட்டும். கொத்தமல்லி, கறிவேப்பிலை இரண்டையும் பொடியாக நறுக்கி, எலுமிச்சை சாறு பிழிந்து நறுக்கிய காய்கறிகளுடன் கலக்கவும். இதனுடன் மிளகுத்தூள், சீரகத்தூள், எலுமிச்சைசாறு, பிளாக் சால்ட், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, தேங்காய் துருவல் கலந்தால், அருமையான சாலட் தயார். பல் இல்லாதவர்கள் மிக்ஸியில் அரைத்தும் சாப்பிடலாம். இதனுடன் முளை தானியங்களும் சிறிது சேர்க்கலாம். இனிப்புக் காய்கறி கலவைத் தேவைப்படுபவர்கள், வெல்லம் சிறிது கலந்து கொள்ளலாம்.
பலன்கள்: சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், தொப்பை உள்ளவர்கள் தினமும் அவசியம் 50 கிராம் முதல் 100 கிராம் வரை உணவுடன் சேர்த்து சாப்பிட வேண்டும். உடல் சூடு, மூல நோய் மறையும். பெண்களின் மாதவிடாய் பிரச்னைகள், கர்ப்பப்பை கோளாறுகள் குறையும். அஜீரணக் கோளாறு இரண்டே நாட்களில் சரியாகும். மூட்டுவலி குறையும். நரம்புகள் வலுப்பெறும்.
ஃப்ரூட் சாலட்
ஆப்பிள், வாழைப்பழம், திராட்சை, பேரீட்சை, மாம்பழம், பாப்பாளி, சப்போட்டா, ஆரஞ்சு, மாதுளை, கொய்யா இவை கலந்த கலவை தலா 500 கிராம் எடுத்து நன்றாகக் கழுவவும். தோல் நீக்கி சிறு துண்டுகளாக வெட்டி கொட்டைகளை நீக்கவும். மாதுளை முத்துக்களை உதிர்த்துக் கொள்ளவும். எல்லாப் பழங்களையும் கலந்து அத்துடன் தேன் அல்லது வெல்லம் தூள், முந்திரி, ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல் கலந்து சாப்பிடலாம். இதை உணவுக்கு முன் சாப்பிடலாம்.
பலன்கள்: மலச்சிக்கல், குடல்புண், பசியின்மை விலகும். உடலுக்கு உடனடி சக்தி தரும். சிறுநீர் எரிச்சல், நீர் பிரியாமை உடலின் மூலச்சூடு குறையும்.
வெள்ளரிப் பச்சடி
வெள்ளரி, காரட்டை நீளவாக்கில் நறுக்கி, கொத்தமல்லி, கறிவேப்பிலையைப் பொடியாக நறுக்கிக் சேர்க்கவும். இதனுடன் தயிர், பிளாக் சால்ட், மிளகுத்தூள் சேர்த்துக் கலக்கவும். இதேபோல், வெங்காயம், வெண்பூசணி, சுரைக்காய், சௌசௌ போன்ற பல வகைப் பச்சடிகளை தினம் ஒன்றாகச் செய்து சாப்பிடலாம்.
பலன்கள்: அதிக அமிலங்களால் அவதிப்படும் உடலுக்கு வெள்ளரியே மாமருந்து. குடல் புண் சரியாகும். ஒபிசிட்டி பிரச்னை இருப்பவர்கள், சிறுநீரகக் கல்அடைப்பு, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தொடர்ந்துசாப்பிடலாம். கொலஸ்ட்ராலைக் குறைக்கும். உடலுக்குக் குளிர்ச்சியைத் தருவதால், மூல நோய் இருப்பவர்கள் சாப்பிடலாம். தோல் நோய் பிரச்னையும் தீரும்.
கருந்துளசி சாறு
கருந்துளசியை 150 கிராம் எடுத்து இலைகளைக் கிள்ளி நீரில் கழுவி நீர் சேர்த்து, மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். இதனுடன் நாட்டு வெல்லம் அல்லது தேன் சேர்த்து, கலந்து, தினமும் ஒரு நபர் 5 கிராம் முதல் 10 கிராம் வரை அருந்தலாம்.
பலன்கள்: அமிலத்தன்மை நீக்கும். சளி, இருமல், தோல் பிரச்னை, பிரைமரி காம்ளெக்ஸ், மூக்கடைப்பு, ஆஸ்துமா போன்றவை சரியாகும். குரல் வளம் பெருகும். காய்ச்சலைப் போக்கும் அரிய சாறு இது.
வெஜிடபிள் அவல் மிக்ஸ்
அவலை சுத்தம் செய்து நீரில் கழுவி வடித்து பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும். வெங்காயம், காரட், தக்காளி, கோஸ், குடமிளகாய், கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை அனைத்தையும் பொடியாக நறுக்கவும். இஞ்சியை தோல் சீவி நறுக்கவும். எலுமிச்சம்பழத்தை சாறு எடுக்கவும்.
ஊறிய அவலுடன் எல்லாவற்றையும் சேர்த்து தேங்காய் துருவல், மிளகுத்தூள், சீரகத்தூள், பிளாக் சால்ட் சேர்த்து எலுமிச்சை சாறு விட்டு கலக்கவும்.
பலன்கள்: சர்க்கரை நோயாளிகள் மதிய உணவாக சாப்பிடலாம். உயர் ரத்த அழுத்தம், மலக்கட்டு, ஒபிசிட்டி, குடல் புண், வயிற்றுவலி, மூட்டுவலி, அதிக உடல் எடை இருப்பவர்கள் தினமும் சாப்பிட்டு வர, நல்ல பலன் கிடைக்கும்.
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 227456
Total likes: 29058
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ இயற்கை உணவில் எல்லாம் இருக்கு! ~
«
Reply #6 on:
April 07, 2014, 07:25:05 PM »
நோய்களைப் போக்கும் உணவுகள்
''நாம் உண்ணும் உணவின் மூலம் நோய் வராமல் காக்கவும், வந்த நோயை விரைவில் போக்கவும் இயலும். உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள், உடலுக்கு நலம் பயக்கும் உணவுகளை தேர்ந்தெடுத்து அதை சரியாக உண்ணும்போது, இருந்த வியாதிகூட இடம் தெரியாமல் ஓடிவிடும்'' என்கிற சித்தமருத்துவர் சிவராமன், நோய்களுக்கேற்ற உணவுமுறைகளையும் விளக்குகிறார்.
வாதம்/பித்தம்/கபம்
வாதம்: ஒருவருக்கு மூட்டு வலி, கழுத்துவலி இருந்தால், வாதம் சீர் கெட்டுள்ளது என்று பொருள். இவர்கள் வாதத்தைக் குறைக்கும் உணவுகளைச் சாப்பிட வேண்டும். செரிமானத்திற்கு சிரமம் தரும் மாவுப் பண்டங்கள் வாயுவைத் தரும்.
சேர்க்கவேண்டியவை: வாயுவை வெளியேற்றும் இலவங்கப்பட்டை, மிளகு, புதினா, பூண்டு, சீரகம், முடக்கத்தான் கீரை, வாய்விடங்கம் ஆகியவற்றை உணவில் சேர்ப்பது வாதத்தை குறைத்திட உதவும்.
தவிர்க்கவேண்டியவை: புளி, உருளைக்கிழங்கு, கொத்தவரை, கொண்டக்கடலை, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, வாழைக்காய், காராமணி, குளிர்பானங்கள்.
பித்தம்:
பல நோய்க்கு பித்தம் ஒரு முக்கிய காரணம். பித்தம் அதிகரித்தால், அஜீரணம் முதல் டிப்ரஷன் வரை பல பிரச்னைகள் வரக்கூடும். அல்சர், உயர் ரத்த அழுத்தம், ஆரம்பநிலை மதுமேகம் என நோய் பட்டியல் பெரிசு.
சேர்க்கவேண்டியவை: கைக்குத்தல் அரிசி நல்லது. கரிசலாங்கண்ணிக் கீரை, கறிவேப்பிலை, சீரகம், தனியா, எலுமிச்சை, மஞ்சள் இஞ்சி என இவையெல்லாம் பித்தத்தைத் தணிக்கும். இதையெல்லாம் தாண்டி மனதையும் குதூகலமாய் வைத்திருக்கவேண்டியது அவசியம்.
தவிர்க்கவேண்டியவை: உணவில் காரம், எண்ணெயைக் குறைக்கவேண்டும். கோழிக்கறி கூடவே கூடாது. கோதுமைகூட அதிகம் சேர்க்கக் கூடாது.
கபம்:
சளி, இருமல், ஆஸ்துமா, மூக்கடைப்பில் இருந்து கபத்தால் வரும் நோய்கள் அதிகம்.
சேர்க்கவேண்டியவை: மிளகு, சுக்கு, திப்பிலி, ஆடாதொடை, துளசி, கற்பூரவல்லி, தூதுவளை இவை எல்லாம் கபத்தைப் போக்க உதவும். கற்பூரவல்லி பஜ்ஜியும், சுக்குக்காபியும்... விடாமல் தும்முபவர்களுக்கு மிகவும் நல்லது.
தவிர்க்கவேண்டியவை: பால், இனிப்புகள், நீர்க்காய்கறிகளான தர்பூசணி, மஞ்சள்பூசணி, சுரைக்காய், பீர்க்கங்காய், வெள்ளரி, குளிர்பானம், மில்க் ஸ்வீட், சாக்லேட்
சளி / இருமல்:
ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தபட்சம் ஒருவருக்காவது சளி, இருமல் இருக்கும். இவற்றுக்கு பயனளிக்கும் இந்த அஞ்சரைப்பெட்டி அறிவியலையும் கொஞ்சம் அலசுவோம்.
சேர்க்கவேண்டியவை: இரவில் தூங்கும்போது, நான்கு மிளகைத் தூளாக்கி ஒரு ஸ்பூன் தேன் கலந்து லேசாக சூடாக்கி கால் டம்ளர் தண்ணீரில் கலந்து பருகலாம். இருமல் நீங்கி இதமான தூக்கம் வரும். மதிய உணவில் தூதுவளை ரசம், மிளகு ரசம் சேர்ப்பது அவசியம். மோர் பித்தம் நீக்கி, கபத்தைக் குறைக்க உதவும்.
தவிர்க்கவேண்டியவை: சுரைக்காய், வெண்பூசணி, மஞ்சள் பூசணி, பீர்க்கங்காய் போன்ற நீர்ச்சத்துள்ள காய்கறிகளை சில காலம் தவிர்க்கலாம். ஒருவேளை அதை சாப்பிடவேண்டும் என்றால், மிளகுத்தூள் தூவி சாப்பிடலாம்.
பால், தயிர், இனிப்பு இந்த மூன்றும் நுரையீரலில் சளியை சேர்க்கக்கூடியன என்பதால், தவிர்க்கவும். எலுமிச்சை, கமலா ஆரஞ்சு மற்றும் திராட்சை மற்றும் ஐஸ்கிரீம், சாக்லேட் தவிர்ப்பது நல்லது. இரவில் பாசிப்பயறைத் தவிர்க்கவும்.
காய்ச்சல்
காய்ச்சல் - எந்த ஒர் இரும்பு மனிதரையும் வருடத்திற்கு இரண்டு மூன்று முறையேனும் பதம் பார்க்கும். எனக்குக் காய்ச்சலே வந்ததில்லை என எவரும் சொல்ல முடியாது. ஆனால், இந்தக் காய்ச்சல் ஒரு தனிநோய் இல்லை. வேறு ஏதேனும் நோய்க்கான ஒரு வெளிப்பாடு அல்லது அறிகுறிதான். 'லங்கணம் பரம ஒவுஷதம்’ என்று ஒரு மருத்துவ மொழி உண்டு. அதன் பொருள், 'காய்ச்சலுக்கு மருந்து பட்டினி’ என்பதுதான்.
சேர்க்கவேண்டியவை: எளிய உணவுகளான இட்லி, இடியாப்பம், புழுங்கல் அரிசி கஞ்சி மட்டும் குறைவாக எடுப்பது நல்லது. வெதுவெதுப்பான நீர் அருந்துவதும், புளிப்பில்லாத பழச்சாறு குடிப்பதும் மிக அவசியம்.
நிலவேம்புக் கஷாயம் மட்டும் மூன்று நாட்கள் தவறாமல் எடுத்துக்கொண்டாலே போதும்.
குழந்தைகளுக்கு துளசி, மிளகு, கற்பூரவல்லி, வெற்றிலை, மாசிக்காய்த்தூள் இவற்றை கஷாயமாக்கி 30 - 60 மில்லி இரண்டு வேளை நான்கு நாட்கள் கொடுக்கலாம். அஜீரணத்தைத் தொடர்ந்து வரும் காய்ச்சல் எனில், சீரகக் கஷாயம் இரு வேளை கொடுங்கள்.
வீட்டில் வாரம் மூன்று நாள் நெல்லிக்காய்ப் பச்சடி, மிளகு ரசம் கண்டிப்பாக இருக்கவேண்டும். வேப்பம்பூ ரசம் நல்ல பலன் தரும். நிலவேம்புக் குடிநீரை வாங்கி வீட்டில் அனைவரும் தினசரி காலை, மாலை வெறும் வயிற்றில் 60- 90 மிலி கஷாயம் வைத்து ஒரு வாரம் தொடர்ந்து சாப்பிடலாம்.
தவிர்க்கவேண்டியவை: உணவில் கூடியவரை இனிப்பைத் தவிர்த்துவிடுங்கள்.
சிறுநீரக பாதிப்பு
சர்க்கரை நோயை எப்போதும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கத் தவறும்போது, அது சிறுநீரகத்தைப் பாதிக்கும் வாய்ப்பு மிக அதிகம். மற்ற எந்த நோய்க்கும் இல்லாதபடி, சிறுநீரக நோய்க்கு உணவில் தனிக் கவனம் தேவை.
சேர்க்கவேண்டியவை: தினசரி மூன்று முதல் மூன்றரை லிட்டர் தண்ணீர் அருந்துவது மிகவும் அவசியம். பலரும் பணி அவசரத்தில் தவறவிடுவது இதனைத்தான். சிறுநீரை நன்கு வெளியேற்ற உதவிடும் உணவுகளான வாழைத்தண்டு, வாழைப்பூ, முள்ளங்கி, பார்லி, வெள்ளரி போன்ற காய்கறிகளைத் தவறாது வாரம் மூன்று, நான்கு நாட்களாவது சாப்பிடுவது அவசியம். பாசிப்பயறின் புரதம் சிறுநீரக நோயினருக்கு ஏற்றது. காய்கறி, கீரைகளை நிறைய நீர்விட்டு நன்கு வேகவைத்து, நீரை வடித்துவிட்டு சாப்பிடுவது அதிக அளவு உப்புகள் உணவில் தங்காமல் பார்த்துக்கொள்ளும்.
தவிர்க்கவேண்டியவை: அதிக உப்பு, சிறுநீரகத்தின் பணிக்கு சிரமம் கொடுக்கும். வாழை, எலுமிச்சை, ஆரஞ்சு, நெல்லிக்கனியைத் தவிர்ப்பது நல்லது. கேரட், காலிஃப்ளவர், பீட்ரூட், நூல்கோல், பருப்புக் கீரை இவற்றில் சோடியம் அதிகம் உள்ளதால் தவிர்க்கவும்.
ஆஸ்துமா அலர்ஜி
நுரையீரல் அலர்ஜி, தொற்று மற்றும் சுற்றுச்சூழலால் ஆஸ்துமா அலர்ஜி ஏற்படுகிறது.
சேர்க்கவேண்டியவை: காலையில் பல் துலக்கியதும் 2 முதல் 3 டம்ளர் வெதுவெதுப்பான நீர் அருந்தவேண்டும். பால் கலக்காத தேநீர். இரவில் நல்ல வீசிங் இருந்து சிரமப்படும்போது, கற்பூரவல்லி, துளசி, கரிசலாங்கண்ணி என இந்த இலைகளை கொஞ்சம் எடுத்து கஷாயமாக வைத்து இனிப்பிற்குத் தேன் சேர்த்து குடிக்கலாம். நெஞ்சில் சளி இலகுவாக வெளியேறி சுவாசப் புத்துணர்ச்சி கிடைக்கும். மாலையில் தேநீரோ / சுக்குக் கஷாயமோ எடுப்பது, இரவு சிரமத்தைக் குறைக்கும். மலை வாழைப்பழம் தினசரி மாலை வேளையில் சாப்பிடலாம்.
எளிதில் செரிக்கக்கூடிய புழுங்கல் அரிசிக் கஞ்சி, சிவப்பரிசி அவல், மிளகுரச சாதம், இட்லி என ஏதாவது ஒன்றை சாப்பிடுவது நல்லது. மதிய உணவுக்குப் பிறகு வெற்றிலை போடுவது நல்லது.
தவிர்க்கவேண்டியவை: மதிய உணவில் நீர்ச்சத்துள்ள சுரை, புடலை, சௌசௌ, தயிர் இவற்றைத் தவிர்க்கவேண்டும். படுக்கைக்குப் போகும்போது காலி வயிறு ஆஸ்துமாவை நன்கு கட்டுப்படுத்தும். இனிப்புப் பண்டங்கள், எலுமிச்சை, கமலா ஆரஞ்சு, திராட்சைப் பழங்களை மருந்து எடுத்து வரும் காலத்தில் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
மலச்சிக்கல்
மலச்சிக்கல் பல நோய்களுக்கான நுழைவாயில். காலையில், எவ்வித மருந்துகளின் உதவியில்லாமல் எவ்வித சிரமுமின்றி மலம் கழித்தல், நல்ல ஆரோக்கியமான உடலின் அடையாளம்.
சேர்க்கவேண்டியவை: நார்ச்சத்து நிறைந்த பழங்களை சாப்பிடவேண்டும். மாலை வேளையில் 12 காய்ந்த திராட்சை கொடுப்பது நல்லது. இரவு உணவில் ஒரு வாழைப்பழம் அல்லது சில துண்டுகள் பப்பாளி சாப்பிடலாம். வாழைத்தண்டு பச்சடி, பாசிப்பயறு சேர்த்து சமைத்த கீரை தினசரி உணவில் இடம்பெற வேண்டும். வெந்தயம், கைக்குத்தல் அரிசி, பட்டை தீட்டாத முழுக் கோதுமை, கேழ்வரகு போன்ற தானியங்கள் சேர்த்துக்கொள்ளலாம்.
தவிர்க்கவேண்டியவை: பீட்சா, பர்கர் மற்றும் பரோட்டா போன்ற கடின உணவுகளை சாப்பிடக் கூடாது.
சர்க்கரை நோய்
இனிப்பு மற்றும் பாலிஷ் தானியங்களின் அதிகப்படியான உபயோகம், உணவுப் பண்பாட்டில் நடக்கும் ஒழுங்கின்மை, மன அழுத்தம், உடல் உழைப்பு குறைவு போன்றவையே சர்க்கரை நோய் வருவதற்கான முக்கியக் காரணங்கள்.
சேர்க்கவேண்டியவை: கத்தரிக்காய், கோவைக்காய், அவரைப்பிஞ்சு, வெண்டை, கொத்தவரை, டபுள் பீன்ஸ், வாழைத்தண்டு, வாழைப்பூ, சுண்டை வற்றல், முருங்கைக் கீரை, கொத்துமல்லி, புதினா நல்லன் பலன் அளிக்கக்கூடியவை. சர்க்கரை அளவைக் குறைப்பதில் பலன் தரும் பாகற்காய். இனிப்பு குறைந்த நாருள்ள, துவர்ப்பு அதிகம் உள்ள பழங்கள் தினமும் சாப்பிடுவது அவசியம். கிரீன் டீ நல்லது. தினசரி பாலுக்குப் பதில் மோர் சேர்க்கலாம். காலையில் முருங்கைக்கீரை, வெங்காயம் சேர்த்த சூப் அல்லது கொத்துமல்லி, வெந்தயம் சேர்த்த குடிநீர் சாப்பிடலாம். சீரகத் தண்ணீர் ரொம்பவே நல்லது.
வாரம் இரண்டு நாள் அரிசிச் சோறு, இரண்டு நாள் தினை அரிசிச் சோறு, இரண்டு நாள் வரகரிசிச் சோறு, ஒருநாள் மாப்பிள்ளைச்சம்பா அவல் என மதிய உணவும், இரவில் தினை ரவா உப்புமா/கேழ்வரகு அடை பாசிப்பயறுக் கூட்டுடன் சாப்பிடலாம். காலை உணவிற்கு கம்பு அடை, கைக்குத்தலரிசிப் பொங்கல், சிவப்பரிசி அவல் என அளவாக சாப்பிடுவது நல்லது. நவதானியக் கஞ்சி காலை உணவாகச் சாப்பிடுவது நல்ல பலனளிக்கும்.
தவிர்க்கவேண்டியவை: பூமிக்கு அடியில் விளையும் கிழங்குகள், குறிப்பாக உருளை மற்றும் பீட்ரூட், கேரட் தவிர்க்கவேண்டும். மாம்பழம், சப்போட்டா, ஹைபிரிட் வாழைப்பழம் தவிர்ப்பது நல்லது.
உயர் ரத்த அழுத்தம்
பொதுவாக ஒருவருக்கு 120/80 என இருக்கவேண்டிய ரத்த அழுத்தம், வயதாகும்போது கொடுக்கப்படும் அதிகபட்ச சலுகை 140/90. 140 என்பது இதயம் சுருங்கும்போது உள்ள ரத்த அழுத்தம். 90 என்பது இதயம் விரிவடையும்போது வரும் ரத்த அழுத்தம். இதயம் விரியும்போது ரத்த அழுத்தம் உயர்ந்தால் அதாவது 90-ஐ தாண்டி 100-110 என அறிவித்தால் ஆபத்து என்பதை உணரலாம். மேல் கணக்கு 140-ஐ தாண்டும் போது அதற்கான உணவும் மருந்தும் மிக அவசியம்.
தாய் தந்தைக்கு உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் இருந்தால், மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை, சரியாகத் தூக்கமின்மை மற்றும் சிறுநீரக இயக்கம் சரியில்லாமல் இருந்தால், உயர் ரத்த அழுத்தம் ஏற்படலாம்.
சேர்க்கவேண்டியவை: தினமும் காலையில் முருங்கைக்கீரையும், சிறிய வெங்காயமும் சேர்த்து சூப் சாப்பிடலாம். மதிய உணவில் 5 - 10 பூண்டுப்பற்கள், 50 கிராமுக்குக் குறையாமல் சிறிய வெங்காயம் சேர்த்துக்கொள்ளலாம். வாழைத்தண்டு, வாழைப்பூ, சுரைக்காய், பீர்க்கங்காய், பார்லி ஆகியவற்றை அடிக்கடி உணவில் சேர்ப்பது அவசியம். எண்ணெய் உணவில் குறைவாக சேர்க்கலாம்.
சீரகத்தை லேசாக வறுத்து அதை மூன்று நாட்கள் இஞ்சிச் சாறிலும், மூன்று நாட்கள் எலுமிச்சைச் சாறிலும் இன்னும் மூன்று நாட்கள் கரும்புச்சாறிலும் ஊறவைத்து உலர்த்திப் பொடித்துக்கொள்ளுங்கள். இந்த பொடியை காலை மாலை ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வரலாம். கடைகளில் சீரக சூரணமாகவும் கிடைக்கும். வெந்தயத்தை தினமும் பொடித்து சப்பிடலாம்.
தவிர்க்கவேண்டியவை: பல காய்கறிகளில் நமக்கு தேவையான உப்புச் சத்து அதிகம் உள்ளது. அதனால், மிகச் சிறிதளவே உப்பு சேர்த்தால் போதுமானது. ரத்தக் கொதிப்பு இருப்பவர்கள் உப்பை மறந்தே தீரவேண்டும். புலால் உணவைத் தவிர்ப்பது நல்லது. ஊறுகாய், இட்லி மிளகாய்ப் பொடி, அப்பளம்,
மூட்டுவலி
வயதானால் வரும் வலி மூட்டுவலி என்ற நிலை மாறிப்போய், துள்ளிக் குதிக்க வேண்டிய பருவத்தில் இடுப்பு வலி, கால் மூட்டில் வலி, தோள் மூட்டில் வலி, கழுத்து வலி என இளமையில் விரட்டும் மூட்டு வலிகள் இன்று ஏராளம். இளம் வயதிலேயே சரியான அளவில் கால்சியம், இரும்பு, துணைக் கனிமங்கள் சேர்ந்த ஆரோக்கிய உணவுகளை தினமும் சேர்த்துக்கொள்வதன் மூலம் மூட்டு வலி மற்றும் எந்த வலிகளும் வராமல் பாதுகாக்கலாம்.
சேர்க்கவேண்டியவை: தினசரி 40 நிமிட நடை. 15 நிமிட ஓய்வு. 30 நிமிடம் மூச்சுப்பயிற்சியுடன் கூடிய சூரிய நமஸ்காரம், 4-5 யோகாசனங்கள் செய்யவேண்டும். கால்சியம் - கீரை நிறைந்த உணவுகள். ஒரு கப் பழத்துண்டுகள், ஒரு கப் மோர் சாப்பிடுவது நல்லது.
தவிர்க்கவேண்டியவை: அதிகப் புளிப்பு, மூட்டுகளுக்கு நல்லதல்ல. புளிக்குழம்பு, காரக்குழம்பு, புளியோதரை இவற்றை மூட்டுவலியால் அவதிப்படுபவர்கள் விலக்குவது நல்லது. வாயுவைத் தரும் வாழைக்காய் பொரியல், உருளைக்கிழங்கு பொடிமாஸ், ஃப்ரென்ச் ஃப்ரை போன்ற மெனுக்களை விலக்கவேண்டும்.
ரத்த சோகை.
வெளிறிய முகம், நாக்கு, நகம், உள்ளங்கை வெளுத்து இருத்தல், படபடப்புடன் இதயம் துடித்தல், மூச்சிறைப்பு, சோர்வு, எதிலும் பிடிப்பில்லாமை இவையே ரத்த சோகையின் குணங்கள். இவை எல்லாமே ரத்தத்தில் இரும்புச் சத்து மற்றும் சிவப்பு அணுக்கள் அதிக அளவு குறைந்த பிறகுதான் தெரியவரும்.
சேர்க்கவேண்டியவை: சிறுகீரை, முருங்கை, அகத்தி, பசலை, தண்டுக்கீரை, பொன்னாங்கண்ணி என எல்லாக் கீரைகளிலும் இரும்புச் சத்து அதிகம் உண்டு.
எள்ளும் பனைவெல்லமும் கலந்த உருண்டை. கம்பு, வரகு இரண்டிலும் இரும்புச் சத்து அதிகம். கம்பஞ்சோறு, வரகரிசியில் கிச்சடி, பிரியாணி, புலாவ் செய்து சாப்பிடலாம். கஞ்சியாகவும் குடிக்கலாம். பாசிப்பயறு, சிகப்புக் கொண்டை கடலை, முளைக்கட்டிய தானியங்கள் இதிலிருந்து கிடைக்கும் சத்துக்கள் இரும்பைச் சீரணிக்க உதவிடும்.
தவிர்க்கவேண்டியவை: சாதாரணமாக இரும்புச் சத்து மருந்துகள் வயிற்று எரிச்சல், குடல் புண்கள் மற்றும் மலச்சிக்கலை ஏற்படுத்தும். ரத்த சோகைக்கு அளிக்கப்படும் சித்த மூலிகை மருந்துகளின் சிறப்பு, அவை மலத்தையும் எளிதாகக் கழிக்கவைத்து, குடல் புண்ணையும் ஆற்றக்கூடியது.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ இயற்கை உணவில் எல்லாம் இருக்கு! ~