Author Topic: ~ காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க ~  (Read 435 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227427
  • Total likes: 29056
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க




சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காளான், பேல் பூரி, பானி பூரி விற்கும் தள்ளுவண்டிக் கடைகள் சாலையோரங்களில் ஆயிரக்கணக்கில் முளைத்திருக்கின்றன. ஒரு பிளேட் ரூ. 10 என்பதால் மாலை நேரத்தில் இக்கடைகளில் வாடிக்கையாளர் கூட்டம் மொய்க்கிறது. மாணவர்கள், தொழிலாளர்கள் என பல தரப்பினரும் தினமும் விரும்பி காளான் உட்கொள்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.

சிலர், மனைவி, குழந்தைகளுடன் கூட கடைகளின் முன் நின்று ருசிக்கின்றனர். அவற்றை உண்பதால் ஆரோக்கியத்துக்கு கேடு ஏற்படும் என்பதை பற்றி, பலரும் அறியாதவர்களாகவே உள்ளனர். பெரும்பாலான கடைகளில் ‘காளான்’ என்ற பெயரில் விற்கப்படும் ‘அயிட்டம்‘ காளான் இல்லை என்பதே உண்மை. முட்டைக்கோஸ், மைதாமாவுடன் உப்பு சேர்த்து பிசைந்து எண்ணையில் வடை போல பொறித்து வைத்துக்கொள்கின்றனர்.

பின்னர் சிவப்பு நிறமேற்றுவதற்காக ஜிலேபிபவுடர், காரத்துக்கு மிளகாய்த் தூளை தண்ணீரில் கரைத்து, வாணலியில் ஊற்றி, அவற்றுடன் ஏற்கனவே பொறித்த முட்டைக்கோஸ் மைதாமாவு கலவை ‘வடை‘களை போட்டு வேக வைத்து வாடிக்கையாளருக்கு பிளேட்டில் பரிமாறுகின்றனர். இவற்றில் காரமும், உப்பும் அதிகம் சேர்த்திருப்பதால் சுவை கூடி நாவை சுண்டியிழுக்கிறது; இதுவே, காளான் என்ற பெயரில் விற்கப்படுகிறது.

இதையறியாத பலரும் ‘காளான்‘ சுவையை மனதில் நினைத்தபடி, போலி காளான் ‘அயிட்டத்தை‘ விரும்பி சுவைக்கின்றனர். இவ்வகையான காரம், ஜிலேபி பவுடர், அதிக உப்பு கலந்த முட்டைக்கோஸ், மைதாமாவு கலவை தீனியை தொடர்ச்சியாக தினமும் வாங்கி உட்கொள்வது, உடல் ஆரோக்கியத்துக்கு வேட்டு வைக்கும் என்கின்றனர் சுகாதாரத் துறையினர்.

மேலும், ஒருமுறை உணவை வேகவைக்க பயன்படுத்திய எண்ணையை மீண்டும், மீண்டும் பயன்படுத்துவதால் அவற்றில் நச்சுதன்மை கலந்து, ஆரோக்கியத்துக்கு ஆபத்தை விளைவிக்கிறது. எனினும், வாடிக்கையாளர் மத்தியில் இதுகுறித்து விழிப்புணர்வு இல்லாததால், தள்ளு வண்டிக்காரர்களின் வியாபாரம் சூடு பிடித்துள்ளது.

உடல் ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்கும் இதுபோன்ற போலி ‘காளான்‘ விற்பனை தள்ளுவண்டிக் கடைகள் மற்றும் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட இட்லி, தோசை விற்கும் தள்ளுவண்டி கடைகள், சிறு ஒட்டல்களை சுகாதாரத்துறையினர் கண்டுகொள்வதில்லை. இந்த துறையின் அலட்சிய போக்கு, மக்களின் ஆரோக்கியம் மற்றும் பொதுசுகாதாரத்தின் மீது அக்கறை காட்டாததையே காட்டுகிறது.

மாரடைப்பு ஆபத்து

அரசு மருத்துவமனை டாக்டர்கள் கூறியதாவது : சுகாதாரமற்ற, அதிக காரத்தன்மையுள்ள உணவுப்பண்டங்களை தவிர்ப்பது நல்லது. வயிற்று வலி, வயிற்றுப் போக்கு உள்ளிட்ட வயிறு, குடல் சம்பந்தப்பட்ட உபாதைகளுக்காக சிகிச்சை பெற வருவோரிடம், அவர்களது அன்றாட உணவு முறைகள் குறித்து விசாரிப்பது வழக்கம். அப்போது, பலரும் சாலையோரத்தில் விற்கப்படும் அதிக காரத்தன்மையுடைய ‘காளான்’ ‘பானிபூரி’ ‘பேல் பூரி’யை தினமும் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருப்பதாக தெரிவித்தனர்.

இது போன்ற, உடல்நலத்துக்கு எதிரான உணவு வகைகளை தவிர்த்தால், ஆரோக்கியம் மேம்பாடும். இல்லாவிடில் அல்சர், ஜீரணக்கோளாறு போன்ற பாதிப்புகள் ஏற்படும். மாசலா, ஜிலேபி பவுடர் போன்றவற்றை அதிகம் பயன்படுத்தி சமைக்கப்படும் உணவை தொடர்ச்சியாக உட்கொள்வோருக்கு, ‘கேன்சர்‘ பாதிக்கக்கூடிய வாய்ப்புகளும் அதிகம் உள்ளன.

ஏற்கனவே பயன்படுத்திய எண்ணையை மீண்டும், மீண்டும் கொதிநிலைக்கு கொண்டு சென்று அதில் உணவுப்பொருட்களை வேக வைக்கும் போது, ‘ஹைட்ரோ கார்பன்‘ அளவு அதிகமாகிறது. இதில், சமைக்கப்படும் உணவை தொடர்ச்சியாக உட்கொள்வோருக்கு கொழுப்புச் சத்து கூடி ரத்தக்குழாய் அடைப்பு, மாரடைப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். இவ்வாறு எச்சரிக்கின்றனர்.