Author Topic: ~ புறநானூறு ~  (Read 114953 times)

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #225 on: February 24, 2014, 05:38:41 PM »
புறநானூறு, 226. (திண்தேர் வளவற் கொண்ட கூற்றே!)
பாடியவர்: மாறோக்கத்து நப்பசலையார்.
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
திணை: பொதுவியல்.
துறை: கையறு நிலை.
==============================

செற்றன்று ஆயினும், செயிர்த்தன்று ஆயினும்,
உற்றன்று ஆயினும், உய்வின்று மாதோ;
பாடுநர் போலக் கைதொழுது ஏத்தி,
இரந்தன்று ஆகல் வேண்டும்; பொலந்தார்
மண்டமர் கடக்கும் தானைத்
திண்தேர் வளவற் கொண்ட கூற்றே!

அருஞ்சொற்பொருள்:-

செற்றம் = நெடுங்காலமாக உள்ள பகை, மனக்கறுவம்
செயிர்த்தல் = சினங்கொள்ளுதல்
உற்றன்று = உற்றது
உறுதல் = மெய்தீண்டல்
உய்வின்று = தப்பும் வழியில்லை
மாதோ – அசைச் சொல்
பொலம் = பொன்
தார் = மாலை
மண்டுதல் = உக்கிரமாதல்
உக்கிரம் = கொடுமை, கோபம்
கூற்று = இயமன்

இதன் பொருள்:-

பொன்மாலையையும், உக்கிரமாகப் போரில் பகைவரை அழிக்கும் படையையும், திண்மையான தேரையும் உடைய கிள்ளிவளவனின் உயிரைக் கொண்ட கூற்றுவனே! பகைமை உணர்வோடோ, சினங்கொண்டோ அல்லது நேரில் வந்து கிள்ளிவளவனிடம் போரிட்டோ அவன் உயிரைக் கொண்டு செல்ல முயன்றிருந்தால் நீ தப்பியிருக்க வழியில்லை. பாடுவோர் போல் வந்து தொழுது வணங்கி அவனை இரந்து கேட்டுத்தான் அவன் உயிரை நீ கொண்டு சென்றிருக்க வேண்டும்.

பாடலின் பின்னணி:-

சோழன் கிள்ளிவளவன் குளமுற்றம் என்னும் இடத்தில் இறந்தான். அவன் இறந்ததைக் கேள்வியுற்ற மாறோக்கத்து நப்பசலையாரால் அவன் இறந்தான் என்பதை நம்ப முடியவில்லை. “கிள்ளிவளவன் ஆண்மையும் வலிமையும் மிகுந்தவனாதலால், கூற்றுவன் கிள்ளிவளவனிடம் பகைமை காரணத்தாலோ, கோபத்தாலோ அல்லது நேரில் வந்தோ அவன் உயிரைக் கொண்டு சென்றிருக்க முடியாது. பாடுவோர் போல் வந்து தொழுது பாராட்டி வஞ்சகமாகத்தான் கிள்ளிவளவனின் உயிரைக் கொண்டு சென்றிருக்க முடியும்.” என்று இப்பாடலில் மாறோக்கத்து நப்பசலையார் கூறுகிறார்.

சிறப்புக் குறிப்பு:-

செற்றும் செயிர்த்தும் உற்றும் கிள்ளிவளவனின் உயிரைக் கூற்றுவன் கொண்டு சென்றிருக்க முடியாது என்பது அவன் ஆண்மை மிகுதியைக் குறிக்கிறது. பாடுநர் போல வந்து கைதொழுது ஏத்தி இரந்துதான் கிள்ளிவளவனின் உயிரைக் கொண்டு சென்றிருக்க முடியும் என்பது அவன் வள்ளல் தன்மையைக் குறிக்கிறது.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #226 on: February 24, 2014, 07:36:44 PM »
புறநானூறு, 227. (நயனில் கூற்றம்!)
பாடியவர்: ஆடுதுறை மாசாத்தனார்.
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
திணை: பொதுவியல்.
துறை: கையறு நிலை.
==============================

நனிபே தையே நயனில் கூற்றம்
விரகுஇன் மையின் வித்துஅட்டு உண்டனை;
இன்னுங் காண்குவை நன்வாய் ஆகுதல்
ஒளிறுவாள் மறவரும் களிறும் மாவும்
குருதியும் குரூஉப்புனற் பொருகளத் தொழிய

நாளும் ஆனான் கடந்துஅட்டு என்றுநின்
வாடுபசி அருந்திய பழிதீர் ஆற்றல்
நின்னோர் அன்ன பொன்னியற் பெரும்பூண்
வளவன் என்னும் வண்டுமூசு கண்ணி
இனையோற் கொண்டனை ஆயின்,
இனியார் மற்றுநின் பசிதீர்ப் போரே?

அருஞ்சொற்பொருள்:-

நனி = மிக
நயன் = நன்மை, நடுவு நிலைமை
விரகு = அறிவு (சாமர்த்தியம்)
அடுதல் = சமைத்தல்
வித்து அட்டு = விதையை உணவாகச் சமைத்து
நன்வாய் = சொல்லிய சொற்கள் நல்ல மெய்யாதல்
குரூஉ = ஒளி, நிறம்
ஆனான் = அளவு இல்லாதவன் (அடங்காதவன்)
கடத்தல் = வெல்லுதல்
நின்னோர் அன்ன = உனக்கு ஒப்பான
மூசல் = மொய்த்தல்
கண்ணி = மாலை
இனையோன் = இத்தன்மையானவன்

இதன் பொருள்:-

நனிபே=====> தொழிய

மிகவும் அறிவற்ற, நடுவு நிலைமையற்ற கூற்றமே! அறிவில்லாததால், நீ விளைச்சளைத் தரும் விதையைச் சமைத்து உண்டாய். இச்சொற்களின் உண்மையை நீ நன்கு அறிவாய். ஓளியுடைய வாளையுடைய வீரர்களும், யானைகளும், குதிரைகளும் போர்க்களத்தில் இரத்த வெள்ளத்தில் இறந்தன. அவ்வாறு இறந்தும்,

நாளும்=====> போரே

அமையாதவனாய், நாள்தோறும் பகைவர்களின் படைகளை வென்று அழித்து, உன்னை வாட்டும் பசியைத் தீர்க்கும் பழியற்ற ஆற்றல் உடையவனாகிய, உன்னைப்போல் பொன்னாலான பெரிய அணிகளை அணிந்த வளவன் என்னும் வண்டுகள் மொய்க்கும் மாலையணிந்த கிள்ளிவளவனின் உயிரைப் பறித்தாய். இனி உன் பசியைத் தீர்ப்பவர் யார்?

பாடலின் பின்னணி:-

கிள்ளிவளவன் இறந்ததை அறிந்த சாத்தனார் மிகவும் வருத்தம் அடைந்தார். ”கூற்றுவனே! நீ உன் அறிவின்மையின் காரணத்தால் கிள்ளிவளவனைக் கொன்றாய். உன் செயல், வறுமையில் வாடும் உழவன் விதைக்காக வைத்திருந்த நெல்லை உணவாக்கி உண்டது போன்ற செயல். நீ அவனைக் கொல்லாது இருந்திருப்பாயாயின், அவன், நாளும் போர்க்களத்தில் பகைவர்கள் பலரைக் கொன்று உன் பசியைத் தீர்த்திருப்பான். இப்பொழுது யார் உன் பசியைத் தீர்ப்பர்?” என்று இப்பாடலில் ஆடுதுறை மாசாத்தனார் நயம்படக் கூற்றுவனைச் சாடுகிறார்.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #227 on: February 24, 2014, 07:39:27 PM »
புறநானூறு, 228. (ஒல்லுமோ நினக்கே!)
பாடியவர்: ஐயூர் முடவனார்.
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்.
திணை: பொதுவியல்.
துறை: ஆனந்தப்பையுள். கணவன் இறந்த போது மனைவி துன்புறுதலைக் கூறுதல் அல்லது இறந்தாரைக் கண்டு சுற்றத்தார் வருந்துதல் ஆகிய இரண்டும் ஆனந்தப்பையுள் என்ற துறையில் அடங்கும்.
==============================

கலஞ்செய் கோவே! கலங்செய் கோவே!
இருள்திணிந் தன்ன குரூஉத்திரள் பரூஉப்புகை
அகல்இரு விசும்பின் ஊன்றுஞ் சூளை
நனந்தலை மூதூர்க் கலஞ்செய் கோவே!
அளியை நீயே; யாங்கா குவைகொல்?

நிலவரை சூட்டிய நீள்நெடுந் தானைப்
புலவர் புகழ்ந்த பொய்யா நல்இசை
விரிகதிர் ஞாயிறு விசும்புஇவர்ந் தன்ன
சேண்விளங்கு சிறப்பின் செம்பியர் மருகன்
கொடிநுடங்கு யானை நெடுமா வளவன்

தேவர் உலகம் எய்தினன்; ஆதலின்,
அன்னோர் கவிக்கும் கண்ணகன் தாழி,
வனைதல் வேட்டனை ஆயின், எனையதூஉம்
இருநிலம் திகிரியாப் பெருமலை
மண்ணா வனைதல் ஒல்லுமோ, நினக்கே?

அருஞ்சொற்பொருள்:-

கலம் = மண்கலம்
கோ = வேட்கோ = குயவன்
குரூ = நிறம் (கருமை நிறம்)
திரள் = உருண்டை
பரூஉ = பருமை
இரு = பெரிய
விசும்பு = ஆகாயம்
சூளை = மண்கலங்கலைச் சுடுமிடம்
நனந்தலை = அகன்ற இடம்
மூதூர் = பழமையான ஊர்
அளியை = இரங்கத் தக்கவன்
இவர்தல் = பரத்தல்
செம்பியர் மருகன் = சோழர்களின் வழித்தோன்றல்
நுடங்குதல் = அசைதல்
கவித்தல் = மூடுதல்
கண்ணகன் தாழி = இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும் பெரிய மண் பாத்திரம்
வேட்டல் = விரும்பல்
எனையதூஉம் = எப்படியும்
திகிரி = சக்கரம்
பெருமலை = இமயமலை
ஒல்லுமோ = முடியுமோ
வனைதல் = செய்தல்

இதன் பொருள்:-

கலஞ்செய்=====> குவைகொல்?

மண்பாத்திரங்களைச் செய்யும் குயவனே! மண்பாத்திரங்களைச் செய்யும் குயவனே! அகன்ற பெரிய ஆகாயத்தில், இருள் திரண்டாற் போல் பெருமளவில் புகை தங்கும் சூளையையுடைய பழைய ஊரில் மண்கலங்கள் செய்யும் குயவனே! கிள்ளிவளவன்

நிலவரை=====> நெடுமா வளவன்

நிலமெல்லாம் பரப்பிய மிகப் பெரிய படையையுடையவன்; புலவர்களால் புகழப்பட்ட பொய்மை இல்லாத நல்ல புகழையுடையவன். விரிந்த கதிர்களையுடைய ஞாயிறு, தொலைதூரத்தில், வானில் விளங்குவதைப்போல் சிறந்த புகழையுடைய சோழர் குலத்தின் வழித்தோன்றலாகிய கிள்ளிவளவன் கொடி அசைந்தாடும் யானைகளையுடையவன்.

தேவர்=====> நினக்கே?

அவன் தேவருலகம் அடைந்தான். அவனை அடக்கம் செய்வதற்கேற்ற பெரிய தாழியைச் செய்ய விரும்பினாய் என்றால் எப்படிச் செய்வாய்? பெரிய நில உலகத்தைச் சக்கரமாகவும், இமயமலையை மண்ணாகவும் கொண்டு உன்னால் அந்தத் தாழியைச் செய்ய முடியுமா? அத்தகைய தாழியைச் செய்வதற்கு நீ என்ன பாடு படுவாயோ? நீ இரங்கத் தக்கவன்.

பாடலின் பின்னணி:-

கிள்ளிவளவன் இறந்ததை அறிந்து வருந்திய சான்றோர்களில் ஐயூர் முடவனாரும் ஒருவர். ”கிள்ளிவளவன் பூத உடலை அடக்கம் செய்வதற்கு உன்னால் தாழி செய்ய முடியும். ஆனால், அவன் புகழுடம்பு மிகப்பெரியது. அதை அடக்கம் செய்வதற்கு ஏற்ற பெரிய தாழியை உன்னால் செய்ய முடியுமா?” என்று குயவன் ஒருவனைப் பார்த்து ஐயூர் முடவனார் கேட்பதுபோல் இப்பாடல் அமைந்துள்ளது.

சிறப்புக் குறிப்பு:-

ஆனந்தம் என்ற சொல்லுக்கு ”சாக்காடு” என்றும் ஒரு பொருள். பையுள் என்ற சொல்லுக்கு “துன்பம்” என்று பொருள். ஆகவே, ஒருவனுடைய இறப்பினால் அவன் சுற்றத்தாரோ அல்லது அவன் மனைவியோ வருந்துவதைப் பற்றிய பாடல்கள் ஆனந்தப்பையுள் என்ற துறையில் அடங்கும் என்பது அறிஞர் கருத்து. இப்பாடலில், கிள்ளிவளவன் இறந்ததால் துன்பமுற்ற புலவர் ஐயூர் முடவனார் தம் வருத்தத்தை கூறுகிறார். அவர், அவனுடைய சுற்றத்தாருள் ஒருவர் என்பதற்கு ஏற்ற ஆதாரம் ஒன்றும் காணப்படாததால், இப்பாடல், கையறு நிலையைச் சார்ந்த மற்ற பாடல்களைப்போல், அரசன் இறந்ததால் புலவர் தம் வருத்தத்தைக் கூறும் ஒருபாடல். ஆகவே, இப்பாடலையும் கையறு நிலையைச் சார்ந்ததாகக் கருதலாம் என்று தோன்றுகிறது.

சங்க காலத்தில், இறந்தவர்களின் உடலைத் தாழியில் வைத்துப் புதைக்கும் வழக்கம் இருந்தது என்பது இப்பாடலிலிருந்து தெரிகிறது.

கிள்ளிவளவனின் பூத உடலை ஒரு தாழியில் வைத்துப் புதைத்தாலும், அவன் பெரும்புகழ் கொண்டவனாகையால், அவனுடைய புகழுடம்பை கொள்ளக்கூடிய அளவுக்குத் தேவையான பெரிய தாழி செய்ய முடியாது என்று கூறி, ஐயூர் முடவனார் கிள்ளிவளவனின் புகழை இப்பாடலில் பாராட்டுகிறார்.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #228 on: February 24, 2014, 07:43:06 PM »
புறநானூறு, 229. (மறந்தனன் கொல்லோ?)
பாடியவர்: கூடலூர் கிழார்.
பாடப்பட்டோன்: கோச்சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை.
திணை: பொதுவியல்.
துறை: கையறு நிலை.
================================

ஆடுஇயல் அழல்குட்டத்து
ஆர்இருள் அரைஇரவில்
முடப்பனையத்து வேர்முதலாக்
கடைக்குளத்துக் கயம்காயப்,
பங்குனிஉயர் அழுவத்துத்

தலைநாள்மீன் நிலைதிரிய,
நிலைநாள்மீன் அதன்எதிர் ஏர்தரத்,
தொல்நாள்மீன் துறைபடியப்,
பாசிச் செல்லாது ஊசி முன்னாது
அளக்கர்த்திணை விளக்காகக்

கனைஎரி பரப்பக் கால்எதிர்பு பொங்கி
ஒருமீன் விழுந்தன்றால் விசும்பினானே
அதுகண்டு, யாமும்,பிறரும் பல்வேறு இரவலர்
பறைஇசை அருவி நன்னாட்டுப் பொருநன்
நோயிலன் ஆயின் நன்றுமற்று இல்லென

அழிந்த நெஞ்சம் மடியுளம் பரப்ப
அஞ்சினம் எழுநாள் வந்தன்று இன்றே;
மைந்துடை யானை கைவைத் துஉறங்கவும்
திண்பிணி முரசும் கண்கிழிந்து உருளவும்
காவல் வெண்குடை கால்பரிந்து உலறவும்

கால்இயல் கலிமாக் கதிஇன்றி வைகவும்,
மேலோர் உலகம் எய்தினன் ஆகலின்
ஒண்தொடி மகளிர்க்கு உறுதுணை ஆகித்
தன்துணை ஆயம் மறந்தனன் கொல்லோ
பகைவர்ப் பிணிக்கும் ஆற்றல் நசைவர்க்கு

அளந்துகொடை அறியா ஈகை
மணிவரை அன்ன மாஅ யோனே?

அருஞ்சொற்பொருள்:-

ஆடு இயல் = ஆடு போன்ற உருவமுடைய மேட இராசி
அழல் = நெருப்பு, தீ
குட்டம் = கூட்டம்
அழல் குட்டம் = நெருப்புப் போன்ற நிறமுடைய ஆறு நட்சத்திரங்களின் கூட்டமாகிய கார்த்திகை என்னும் நட்சத்திரம்
ஆர் = நிறைந்த
அரை = பாதி
அரையிரவு = நடு இரவு
முடம் = நொண்டி
முடப்பனை = வளைந்த பனைமரம் போன்ற தோற்றமுடைய அனுடம் என்னும் நட்சத்திரம் (அனுடம் என்னும் நட்சத்திரம் ஆறு நட்சத்திரங்களின் கூட்டம்; ஒரு தனி நட்சத்திரம் அல்ல.)
முடப்பனையத்து வேர்முதல் = வளைந்த பனைமரம்போல் தோற்றமளிக்கும் அனுடம் என்னும் நட்சத்திரக் கூட்டத்தின் அடிப்பகுதிக்கு முந்திய நட்சத்திரம் (கேட்டை)
கடைக்குளத்துக் கயம் காய = கயம் குளத்து கடை காய = கயமாகிய குளத்தைப்போல் தோற்றமளிக்கும் புனர்பூச நட்சத்திரத்தின் முடிவிலே உள்ள நட்சத்திரமாகிய திருவாதிரை (புனர்பூசம் என்பது ஒரு சில நட்சத்திரங்களின் கூட்டம்) எல்லையாக உள்ள நட்சத்திரங்கள் எல்லாம் (திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம், உத்தரம், அத்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுடம், கேட்டை) விளங்கிக் காய
உயர் அழுவம் = முதல் பதினைந்து நாட்கள்
தலைநாள் மீன் = உத்தரம் என்னும் நட்சத்திரம்
நிலைநாள் மீன் = எட்டாம் மீன் (உத்தரம் என்னும் நட்சத்திரத்திலிருந்து நட்சத்திர வரிசையில் உள்ள எட்டாம் நட்சத்திரமாகிய மூலம்)
ஏர்தல் = எழுதல்
தொல்நாள் = உத்தரத்திற்கு முன்னதாக நட்சத்திர வரிசையில் உள்ள எட்டாம் நட்சத்திரமாகிய மிருகசீரிடம்
பாசி = கிழக்கு
தூசி = வடக்கு
முன்னுதல் = படர்ந்து செல்லுதல்
அளக்கர் = கடல்
திணை = பூமி
கனை = ஒலி
கால் = காற்று
எதிர்பு பொங்கி = கிளர்ந்து எழுந்து
மடிதல் = வாடுதல்
பரத்தல் = அலமருதல் (கலங்குதல்)
பரிதல் = ஒடிதல்
உலறுதல் = சிதைதல் (முறிதல்)
கதி = குதிரை நடை
வைகல் = தங்கல்
ஆயம் = கூட்டம்
பிணிதல் = சாதல்
மணி = நீலமணி
மாயோன் = திருமால்

இதன் பொருள்:-

ஆடுஇயல்=====> அழுவத்து

ஒரு பங்குனி மாதத்து முதற் பதினைந்து நாட்களுள், மேட இராசியில் உள்ள கார்த்திகை நட்சத்திரத்தில், இருள் நிறைந்த நடு இரவில், வளைந்த பனைமரம்போல் தோற்றமளிக்கும் அனுடம் என்னும் நட்சத்திரக் கூட்டத்தின் அடிப்பகுதிக்கு முந்திய நட்சத்திரமாகிய கேட்டை முதலாக, கயமாகிய குளத்தைப்போல் தோற்றமளிக்கும் புனர்பூச நட்சத்திரத்தின் முடிவிலே உள்ள நட்சத்திரமாகிய திருவாதிரை நட்சத்திரம் எல்லையாக உள்ள நட்சத்திரங்கள் பதின்மூன்றும் (கேட்டை, அனுடம், விசாகம், சுவாதி, சித்திரை, அத்தம், உத்தரம், பூரம், மகம், ஆயில்யம், பூசம், புனர்பூசம் திருவாதிரை) விளங்கிக் காய்ந்தன.

தலைநாள்மீன்=====> விளக்காக

அப்பொழுது உத்தரம் என்னும் நட்சத்திரம் உச்சத்தில் (வானின் நடுவில்) இருந்தது. அந்த உத்தர நட்சத்திரம் அவ்வுச்சியிலிருந்து சாய்ந்தது. அந்த உத்தர நட்சத்திரத்திற்கு எட்டாம் நட்சத்திரமாகிய மூலம் அதற்கு எதிராக எழுந்தது. அந்த உத்தரத்திற்கு எட்டாம் நட்சத்திரமாகிய மிருகசீரிடம் மேற்கே சாய்ந்து மறையும் நேரத்தில், கடல் சூழந்த உலகுக்கு விளக்குப்போல் வானில் ஒரு நட்சத்திரம் கிழக்கும் போகாமல், வடக்கும் போகாமல், வடகிழக்காக,

கனைஎரி=====> இல்லென

பெருமுழக்கத்தோடு காற்றில் கிளர்ந்து எழுந்து தீப்பரந்து சிதறி வீழ்ந்தது. அதைக் கண்டு, நாம் பலரும் பல்வேறு இரவலரும், “பறை ஓசைபோல் ஒலிக்கும் அருவிகள் நிறைந்த நல்ல மலைநாட்டின் தலைவனாகிய சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை நோயின்றி இருப்பது நல்லது”

அழிந்த=====> உலறவும்

என்று வருந்திய நெஞ்சத்துடன் வாடிக் கலங்கி அஞ்சினோம். அந்த நட்சத்திரம் விழுந்து இன்று ஏழாம் நாள். இன்று, வலிய யானை தன் தும்பிக்கையை நிலத்தில் வைத்து உறங்கியது. வாரால் பிணிக்கப்பட்ட முரசு கிழிந்து உருண்டது. காவலுக்கு அடையாளமாக இருக்கும் கொற்றக்குடையின் காம்பு ஒடிந்து சிதைந்தது.

கால்இயல்=====> மாஅ யோனே?

காற்றைப்போல் விரைந்து செல்லும் குதிரைகள் நிலைகலங்கி நின்றன. இந்நிலையில், பகைவரைக் கொல்லும் வலிமையும், தன்னை நாடி வந்தவர்களுக்கு அளவற்ற பொருட்களை அளித்த கொடைவள்ளலும், நீலநிறமுடைய திருமால் போன்றவனுமாகிய சேரன் விண்ணுலகம் அடைந்தான். தன் மனைவியர்க்கு உறுதுணையாக இருந்தவன் அவர்களை மறந்தனனோ?

பாடலின் பின்னணி:-

சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையின் இறுதி நாட்களில், பங்குனி மாதத்தில் வானிலிருந்து ஒரு விண்மீன் (நட்சத்திரம்) தீப்பிழம்புபோல் ஒளியுடன் எரிந்து விழுந்தது. பங்குனி மாதத்தில் விண்மீன் எரிந்து விழுந்தால் அரசனுக்கு கேடுவரும் என்பதை கூடலூர் கிழார் நன்கு அறிந்திருந்தார். அந்த விண்மீன் எரிந்து விழுந்ததையும், மற்றும் சில விண்மீன்களின் நிலையினையும் ஆராய்ந்த கூடலூர் கிழார், சேரன் இன்னும் ஏழு நாட்களில் இறப்பான் என்பதை உணர்ந்தார். அவர் எண்ணியதுபோல் ஏழாம் நாளில், சேரன் இறந்தான். அன்று, வேறு சில தீய நிமித்தங்களும் நிகழ்ந்தன. விண்மீன் எரிந்து விழுந்ததையும், மற்றும் அப்பொழுது நிகழ்ந்த தீய நிமித்தங்களையும், சேரன் இறந்ததையும் இப்பாடலில் கூடலூர் கிழார் வருத்தத்துடன் கூறுகிறார்.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #229 on: February 24, 2014, 07:45:22 PM »
புறநானூறு, 230. (நீ இழந்தனையே கூற்றம்!)
பாடியவர்: அரிசில் கிழார்.
பாடப்பட்டோன்: அதியமான் தகடூர்ப் பொருது வீழ்ந்த எழினி.
திணை: பொதுவியல்.
துறை: கையறு நிலை.
================================

கன்றுஅமர் ஆயம் கானத்து அல்கவும்
வெங்கால் வம்பலர் வேண்டுபுலத்து உறையவும்
களம்மலி குப்பை காப்பில வைகவும்
விலங்குபகை கடிந்த கலங்காச் செங்கோல்
வையகம் புகழ்ந்த வயங்குவினை ஒள்வாள்

பொய்யா எழினி பொருதுகளம் சேர
ஈன்றோள் நீத்த குழவி போலத்
தன்அமர் சுற்றம் தலைத்தலை இனையக்
கடும்பசி கலக்கிய இடும்பைகூர் நெஞ்சமொடு
நோய்உழந்து வைகிய உலகிலும் மிகநனி

நீஇழந் தனையே அறனில் கூற்றம்!
வாழ்தலின் வரூஉம் வயல்வளன் அறியான்
வீழ்குடி உழவன் வித்துண் டாஅங்கு
ஒருவன் ஆருயிர் உண்ணாய் ஆயின்
நேரார் பல்லுயிர் பருகி
ஆர்குவை மன்னோஅவன் அமர்அடு களத்தே

அருஞ்சொற்பொருள்:-

அமர்தல் = பொருந்துதல்
ஆயம் = கூட்டம்
கானம் = காடு
அல்கல் = தங்குதல்
வம்பலர் = புதியவர்
புலம் =இடம்
மலிதல் = மிகுதல், பெருகல்
குப்பை = குவியல்
வைகல் = தங்கல்
விலங்கு பகை = தடுக்கும் பகை
கடிதல் = தடை செய்தல்
வயங்குதல் = விளங்கல்
அமர் = விருப்பம்
இடும்பை = துன்பம்
வீழ்குடி = வளமில்லாத குடி
நேரார் = பகைவர்
ஆர்கை = தின்னுதல்

இதன் பொருள்:-

கன்றுஅமர்=====> ஒள்வாள்

கன்றுகளுடன் கூடிய பசுக்களின் கூட்டம் காட்டிலே தங்கி இருக்கவும், வெப்பமிக்க வழியில் நடந்து வந்த வழிப்போக்கர்கள் தாம் விரும்பிய இடங்களில் அச்சமின்றித் தங்கவும், களத்தில் பெரிய நெற்குவியல்கள் காவலின்றிக் கிடக்கவும், எதிர்த்து வந்த பகையை அழித்து, நிலைகலங்காத செங்கோல் ஆட்சி புரிந்து, உலகம் புகழும் போரைச் செய்யும் ஒளி பொருந்திய வாளையுடைய,

பொய்யா=====> மிகநனி

பொய் கூறாத எழினி போர்க்களத்தில் இறந்தான். பெற்ற தாயால் கைவிடப்பட்ட குழந்தைபோல் தன்னை விரும்பும் சுற்றத்தார் வேறுவேறு இடங்களில் இருந்து வருந்த, மிக்க பசியால் கலக்கமடைந்த துன்பம் மிகுந்த நெஞ்சத்தோடு, அவனை இழந்து நாடு வருந்தியது.

நீஇழந் தனையே=====> களத்தே

அறமில்லாத கூற்றமே! நீ அதைவிட மிக அதிகமாக இழந்தாய். தன் வருங்கால வளமான வாழ்வுக்குத் தேவையான விளைச்சலைத் தரும் விதைகளைச் சமைத்து உண்ட வறுமையுற்ற குடியில் உள்ள உழவன்போல் இந்த ஒருவனது பெறுதற்கரிய உயிரை உண்ணாமல் இருந்திருப்பாயாயின், அவன் பகைவரைக் கொல்லும் போர்க்களத்தில் பல பகைவர்களுடைய உயிர்களை உண்டு நீ நிறைவடைந்திருப்பாய்.

பாடலின் பின்னணி:-

அரிசில் கிழார் சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறையைப் பாடியவர். அவர் அதியமானிடத்தும் சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறையிடத்தும் மிகுந்த அன்புடையவர். ஆகவே, அதியமான் இறந்ததற்காக, சேரனை இகழாமல், அது கூற்றுவன் செய்த தவறு என்று கூறி இப்பாடலில் தன் வருத்ததைத் தெரிவிக்கிறார்.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #230 on: February 24, 2014, 07:47:21 PM »
புறநானூறு, 231. (புகழ் மாயலவே!)
பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை: பொதுவியல்.
துறை: கையறு நிலை.
================================

எறிபுனக் குறவன் குறையல் அன்ன
கரிபுற விறகின் ஈம ஒள்அழல்,
குறுகினும் குறுகுக; குறுகாது சென்று
விசும்புறு நீளினும் நீள்க; பசுங்கதிர்த்
திங்கள் அன்ன வெண்குடை
ஒண்ஞாயிறு அன்னோன் புகழ்மா யலவே

அருஞ்சொற்பொருள்:-

எறிதல் = வெட்டல்
எறி = வெட்டிய
புனம் = கொல்லை
குறவன் = குறிஞ்சி நிலத்தில் வசிப்பவன்
குறையல் = மரத்துண்டு
ஈமம் = பிணத்தை எரிப்பதற்கு அடுக்கிய விறகுகளின் அடுக்கு
அழல் = தீக்கொழுந்து, நெருப்பு
மாய்தல் = அழிதல்

இதன் பொருள்:-

தினைப்புனத்தில், குறவன் ஒருவனால் வெட்டப்பட்ட அரைகுறையாக எரிந்த மரத்துண்டுகள் போல் கரிய நிறமுள்ள மரத்துண்டுகள் அதியமானின் உடலை எரிப்பதற்காக அடுக்கப்பட்டுத் தீ மூட்டப்பட்டுள்ளன. ஒளிநிறைந்த அந்த ஈமத்தீ அவன் உடலை நெருங்கினாலும் நெருங்கட்டும்; நெருங்காமல், வானளாவ நீண்டு பரவினாலும் பரவட்டும். குளிர்ந்த திங்களைப் போன்ற வெண்கொற்றக்குடையை உடையவனும், ஒளிபொருந்திய ஞாயிறு போன்றவனுமாகிய அதியமானின் புகழ் அழியாது.

பாடலின் பின்னணி:-

அதியமான் நெடுமான் அஞ்சி அவ்வையாரிடத்து மிகுந்த அன்பு கொண்டவனாக இருந்தான். அவனுடைய அவைக்களத்தில் புலவராக இருந்தது மட்டுமல்லாமல், அவ்வையார் அதியமானின் தூதுவராகவும் பணியாற்றினார். இருவரும் மிகுந்த நட்புடன் இருந்ததாகப் புறநானூற்றிலுள்ள பல பாடல்கள் கூறுகின்றன. அதியமான் இறந்த பிறகு அவன் உடலை தீயிலிட்டு எரித்தார்கள். அதைக் கண்ட அவ்வையார் துயரம் தாங்காமல், அதியமான் உடல் அழிந்தாலும் அவன் புகழ் எப்பொழுதும் அழியாது என்று இப்பாடலில் வருத்தத்துடன் கூறுகிறார்.

சிறப்புக் குறிப்பு:-

பாடல் 228 – இல் இறந்தவர்களின் உடலைத் தாழியில் வைத்துப் புதைப்பதை பற்றிக் கூறப்பட்டது. இப்பாடலில், இறந்தவர்களின் உடலை எரிப்பதைப் பற்றிக் கூறபட்டுள்ளது. ஆகவே, சங்க காலத்தில், இறந்தவர்களின் உடலை எரிப்பதும் புதைப்பதும் ஆகிய இரண்டும் வழக்கில் இருந்ததாகத் தெரிகிறது.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #231 on: March 22, 2014, 04:28:55 PM »
புறநானூறு, 232. (கொள்வன் கொல்லோ!)
பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை: பொதுவியல்.
துறை: கையறு நிலை.
================================

இல்லா கியரோ, காலை மாலை
அல்லா கியர்யான் வாழும் நாளே!
நடுகல் பீலி சூட்டி நார்அரி
சிறுகலத்து உகுப்பவும் கொள்வன் கொல்லொ
கோடு உயர் பிறங்குமலை கெழீஇய
நாடுடன் கொடுப்பவும் கொள்ளா தோனே

அருஞ்சொற்பொருள்:-

பீலி = மயில் இறகு
உகுத்தல் = வார்த்தல்
பிறங்குதல் = உயர்தல்

இதன் பொருள்:-

காலைப்பொழுதும் மாலைப்பொழுதும் இல்லாமல் போகட்டும். என் வாழ்நாட்களும் இல்லாமல் போகட்டும். ஓங்கிய சிகரத்தையுடைய உயர்ந்த மலையுடன் கூடிய நாட்டைப் பகைவர் கொடுத்தாலும் அதை ஏற்றுக் கொள்ளாதவன், ஒரு நடுகல்லை நட்டு, அதற்கு மயில் தோகையைச் சூட்டி, ஒருசிறிய கலத்தில் நாரால் வடிக்கப்பட்ட மதுவைக் கொடுத்தால் அதை ஏற்றுக் கொள்வானோ?

பாடலின் பின்னணி:-

அதியமான் இறந்த பிறகு அவன் நினைவாக ஒருநடுகல் நடப்பட்டது. அந்த நடுகல்லில் அதியமான் பெயரைப் பொறித்து, மயில் தோகை சூட்டி, ஒரு சிறிய பாத்திரத்தில் மதுவை வைத்துப் படைத்து அந்த நடுகல்லை வழிபட்டனர். அதைக் கண்ட அவ்வையார், துயரம் மிகுந்தவராய், அவனை நினைவு கூர்ந்து தம் வருத்தத்தை இப்பாடலில் தெரிவிக்கிறார்.

சிறப்புக் குறிப்பு:-

இறந்தவர்களின் நினைவாக நடுகல் வைப்பதும், நடுகல்லுக்கு வழிபாடு நடத்துவதும் சங்கக காலத்தில் வழ்க்கில் இருந்தது என்பது இப்பாடலிலிருந்து தெரிகிறது.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #232 on: March 22, 2014, 04:30:18 PM »
புறநானூறு, 233. (பொய்யாய்ப் போக!)
பாடியவர்: வெள்ளெருக்கிலையார்.
பாடப்பட்டோன்: வேள் எவ்வி.
திணை: பொதுவியல்.
துறை: கையறு நிலை.
================================

பொய்யா கியரோ பொய்யா கியரோ
பாவடி யானை பரிசிலர்க்கு அருகாச்
சீர்கெழு நோன்றாள் அகுதைகண் தோன்றிய
பொன்புனை திகிரியின் பொய்யா கியரோ
இரும்பாண் ஒக்கல் தலைவன், பெரும்பூண்
போர்அடு தானை எவ்வி மார்பின்
எஃகுஉறு விழுப்புண் பலஎன
வைகுறு விடியல் இயம்பிய குரலே

அருஞ்சொற்பொருள்:-

பாவடி = பா + அடி = பரவிய அடி (யானையின் பரந்து அகன்ற பாதம்)
பொன் = இரும்பு
எஃகு = வேல்
வைகுறு = வைகறை (விடியற் காலம்)

இதன் பொருள்:-

பெரிய பாதங்களையுடைய யானைகளைப் பரிசிலருக்குக் குறையாது வழங்கிய சிறந்த, வலிய முயற்சியையுடைய அகுதையிடத்துச் சக்கரப்படை இருந்தது என்ற செய்தி பொய்யாகியதுபோல் , பெரிய பாண் சுற்றத்துக்கு முதல்வனும், மிகுந்த அனிகலன்களை அணிந்து, போரில் பகைவரை அழிக்கும் பெரிய படையையுடயவனுமாகிய வேள் எவ்வி, வேலால் மார்பில் பல விழுப்புண்கள் உற்றான் என்று இன்று அதிகாலையில் வந்த செய்தியும் பொய்யாகட்டும்.

பாடலின் பின்னணி:-

பண்டைக் காலத்தில் அகுதை என்று ஒருமன்னன் கூடல் என்ற கடல் சார்ந்த ஊருக்குத் தலைவனாக இருந்து ஆட்சி புரிந்துவந்தான். அவனிடத்துப் இரும்பினால் செய்யப்பட்ட சக்கரம் போன்ற ஆயுதம் தாங்கிய படை (சக்கரப்படை) ஒன்று இருப்பாதாகவும், அது மிகவும் ஆற்றல் வாய்ந்தது என்றும், அது அவனிடம் இருக்கும்வரை அவனை யாராலும் வெல்ல முடியாது என்றும் அனைவரும் நம்பினர். அந்தச் சக்கரப்படையைப் பற்றிய செய்தி நன்கு பரவி இருந்தது. அதனால் பகைவர் அனைவரும் அவனிடம் அஞ்சினர். முடிவில், ஒரு போரில் அகுதை கொல்லப்பட்டன். அவனிடம் ஆற்றல் மிகுந்த சக்கரப்படை இருந்தது என்ற செய்தி பொய்யாகியது.

போரில் வேள் எவ்வி மார்பில் புண்பட்டான் என்று புலவர் வெள்ளெருக்கிலையார் கேள்விப்பட்டார். அவன் மீது அவருக்கு இருந்த பேரன்பின் காரணத்தால் அவன் புண்பட்டான் என்ற செய்தி அகுதையிடம் சக்கரப்படை இருந்தது என்ற செய்தியைப்போல் பொய்யாகட்டும் என்று விரும்பினார். அவர் தம் கருத்தை இப்பாடலில் வெளிப்படுத்துகிறார்.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #233 on: March 22, 2014, 04:31:36 PM »
புறநானூறு, 234. (உண்டனன் கொல்?)
பாடியவர்: வெள்ளெருக்கிலையார்.
பாடப்பட்டோன்: வேள் எவ்வி.
திணை: பொதுவியல்.
துறை: கையறு நிலை.
================================

நோகோ யானே தேய்கமா காலை
பிடியடி அன்ன சிறுவழி மெழுகித்
தன்அமர் காதலி புன்மேல் வைத்த
இன்சிறு பிண்டம் யாங்குஉண் டனன்கொல்
உலகுபுகத் திறந்த வாயில்
பலரோடு உண்டல் மரீஇ யோனே

அருஞ்சொற்பொருள்:-

நோகோ = வருந்தக்கடவேன்
மா=பெரிய
காலை = வாழ்நாள்
பிடி = பெண் யானை
அமர் = விருப்பம்
புன் = புல்
பிண்டம் = இறந்தவர்களுக்குப் படைக்கப்படும் உணவு
மரீஇ = கூடி

இதன் பொருள்:-

உலகத்து மக்களெல்லம் புகுந்து உண்ணக்கூடிய பெரிய வாயிலை உடைய வேள் எவ்வி பலரோடும் சேர்ந்து உண்ணுபவன். அத்தகையவன், ஒரு பெண் யானையின் கால் அடி அளவே உள்ள சிறிய இடத்தை மெழுகி, அங்கிருந்த புல் மேல், அவனை விரும்பும் அவன் மனைவி படைத்த இனிய, சிறிதளவு உணவை எப்படி உண்பான்? இதைக் கண்டு நான் வருந்துகிறேன்; என் வாழ்நாட்கள் இன்றோடு ஒழியட்டும்.

பாடலின் பின்னணி:-

முந்திய பாடலில், வேள் எவ்வி விழுப்புண் பெற்றான் என்ற செய்தி பொய்யாகட்டும் என்று தாம் விரும்புவதாக வெள்ளெருக்கிலையார் கூறினார். ஆனால், அது உண்மையாகியது; அவன் இறந்தான். ஒரு நாள், வெள்ளெருக்கிலையார் வேள் எவ்வியின் வீட்டிற்குச் சென்றார். அங்கு, வேள் எவ்வியின் மனைவி, அவன் நினைவாக அவனுக்கு உணவு படைப்பதைக் கண்டார். அவர் மிகவும் வருத்தமுற்றார். அவர் புலம்பல் இப்பாடலாக அமைந்துள்ளது.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #234 on: March 22, 2014, 04:33:07 PM »
புறநானூறு, 235. (அருநிறத்து இயங்கிய வேல்!)
பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை: பொதுவியல்.
துறை: கையறு நிலை.
================================

சிறியகட் பெறினே, எமக்கீயும் மன்னே;
பெரியகட் பெறினே
யாம்பாடத் தான்மகிழ்ந்து உண்ணும் மன்னே;
சிறுசோற் றானும் நனிபல கலத்தன் மன்னே;
பெருஞ்சோற்றானும் நனிபல கலத்தன் மன்னே;

என்பொடு தடிபடு வழியெல்லாம் எமக்கீயும் மன்னே;
அம்பொடு வேல்நுழை வழியெல்லாம் தான்நிற்கும் மன்னே;
நரந்தம் நாறும் தன் கையால்
புலவு நாறும் என்தலை தைவரும் மன்னே;
அருந்தலை இரும்பாணர் அகன்மண்டைத் துளையுரீஇ

இரப்போர் கையுளும் போகிப்
புரப்போர் புன்கண் பாவை சோர
அஞ்சொல்நுண் தேர்ச்சிப் புலவர் நாவில்
சென்றுவீழ்ந் தன்றுஅவன்
அருநிறத்து இயங்கிய வேலே;

ஆசாகு எந்தை யாண்டுஉளன் கொல்லோ?
இனிப், பாடுநரும் இல்லை; பாடுநர்க்குஒன்று ஈகுநரும் இல்லை;
பனித்துறைப் பகன்றை நறைக்கொள் மாமலர்
சூடாது வைகியாங்குப் பிறர்க்குஒன்று
ஈயாது வீயும் உயிர்தவப் பலவே

அருஞ்சொற்பொருள்:-

மன் = இரங்கல் பொருளில் - அது போய்விட்டதே என்ற பொருளில் - பலமுறை கூறப்பட்டுள்ளது
நனி = மிக
தடி = தசை
நரந்தம் = நறுமணம்
புலவு = புலால்
தைவரல் = தடவல்
இரும் = பெரிய
மண்டை = இரப்போர் பாத்திரம்
உரீஇ = உருவி
பாவை = கருவிழி
புன்கண் = துன்பம்
நுண் தேர்ச்சி = நுண்ணிய ஆராய்ச்சி
நிறம் = மார்பு
இயங்கிய = துளைத்த
ஆசாகு = ஆசு ஆகு = பற்றுக்கோடு
பகன்றை = ஒரு செடி
பகன்றை மலர் = சூடுவதற்கு பயன்படுத்தாத ஒருமலர்
நறை = தேன்
தவ = மிக

இதன் பொருள்:-

சிறியகட்=====> மன்னே;

சிறிதளவு கள்ளைப் பெற்றால் எமக்குத் தருவான்; பெருமளவு கள்ளைப் பெற்றால் எமக்கு அளித்து நாம் பாட அதைக் கேட்டு மகிழ்ந்து அவனும் உண்பான்; சிறிதளவு சோறாக இருந்தாலும் அதை மிகப் பலரோடும் பகிர்ந்து உண்பான். பெருமளவு சோறு இருந்தால், அதையும் மிகப் பலரோடு கலந்து உண்பான்.

என்பொடு=====> துளையுரீஇ

எலும்போடு கூடிய தசை கிடைத்தால் அதை எமக்கு அளிப்பான். அம்புடன் வேல் தைக்கும் போர்க்களமானால் தானே சென்று நிற்பான். நறுமணமுள்ள தன் கையால் புலால் மணக்கும் என் தலையை அன்போடு தடவுவான். இவையெல்லாம் கழிந்தன. அவன் மார்பைத் துளைத்த வேல் பெரிய பாணர் கூட்டத்தினரின் அகன்ற பாத்திரங்களை ஊடுருவிச் சென்று,

இரப்போர்=====> வேலே;

இரப்போர் கைகளையும் துளைத்து, அவனால் பாதுகாக்கப்படும் சுற்றத்தாரின் துன்பம் மிகுந்த கண்களில் ஒளி மழுங்க, அழகிய சொல்லும் ஆராய்ந்த அறிவும் உடைய புலவர்களின் நாவிலும் சென்று வீழ்ந்தது.

ஆசாகு=====> பலவே

எமக்குப் பற்றுக்கோடாக இருந்தவன் இப்பொழுது எங்குள்ளானோ? இனிப் பாடுவோரும் இல்லை; பாடுவோருக்கு ஒன்று ஈவோரும் இல்லை. குளிர்ந்த நீர்த்துறையில் உள்ள தேனொழுகும் பெரிய பகன்றை மலரைச் சூடுவோர் இல்லாததுபோல் பிறர்க்கு ஒன்றும் கொடுக்காமல் வாழ்ந்து இறப்பவர் மிகப் பலர்.

பாடலின் பின்னணி:-

அதியமானின் வள்ளல் தன்மையை நன்கு அறிந்தவர் அவ்வையார். ”அதியமானின் நெஞ்சில் பாய்ந்த வேல் அவனைக் கொன்றது மட்டுமல்லாமல், இரவலர்களின் பாத்திரங்களைத் துளைத்து, அவர்களின் கைகளைத் துளைத்து, பாடும் பாணர்களின் நாவையும் துளைத்தது. இனி, நாட்டில் பாடுவோரும் இல்லை; பாடுவோர்க்கு ஈவோரும் இல்லை” என்று கூறி, அதியமான் இறந்ததால் தான் அடைந்த அளவற்ற துயரத்தை இப்பாடலில் அவ்வையார் வெளிப்படுத்துகிறார்.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #235 on: March 22, 2014, 04:34:46 PM »
புறநானூறு, 236. (கலந்த கேண்மைக்கு ஒவ்வாய்!)
பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன்: பொதுவாக பாடியது.
திணை: பொதுவியல்.
துறை: கையறு நிலை.
================================

கலைஉணக் கிழிந்த முழவுமருள் பெரும்பழம்
சிலைகெழு குறவர்க்கு அல்குமிசை ஆகும்
மலைகெழு நாட! மாவண் பாரி!
கலந்த கேண்மைக்கு ஒவ்வாய்; நீஎற்
புலந்தனை யாகுவை புரந்த யாண்டே;
பெருந்தகு சிறப்பின் நட்பிற்கு ஒல்லாது

ஒருங்குவரல் விடாஅது ஒழிகெனக் கூறி
இனையை ஆதலின் நினக்கு மற்றுயான்
மேயினேன் அன்மை யானே; ஆயினும்
இம்மை போலக் காட்டி உம்மை
இடையில் காட்சி நின்னோடு
உடன்உறைவு ஆக்குக உயர்ந்த பாலே!

அருஞ்சொற்பொருள்:-

கலை = ஆண் குரங்கு
முழவு = முரசு
மருள் – உவமை உருபு
பெரும்பழம் = பலாப்பழம்
சிலை = வில்
கெழு = பொருந்திய
அல்குதல் = தங்குதல்
மிசை = உணவு
புலந்தனை = வெறுத்தாய்
புரத்தல் = பாதுகாத்தல்
ஒல்லாது = பொருந்தாமல்
இனையை = வருந்தச் செய்தாய்
மற்று = அசைச் சொல்
மேயினேன் = கூடினேன், பொருந்தினேன்
உம்மை = மறுபிறவி
பால் = வினை, விதி

இதன் பொருள்:-

கலை=====> ஒல்லாது

குரங்கு கிழித்து உண்ட, முரசுபோல காட்சி அளிக்கும் பெரிய பலாப்பழம் வில்லுடன் கூடிய குறவர்கள் சில நாட்கள் வைத்து உண்ணக்கூடிய உணவாகும். மலைகள் பொருந்திய நாட்டையுடைய, பெரிய வள்ளல் தன்மை வாய்ந்த பாரி! நீயும் நானும் கூடியிருந்த நட்பிற்குப் பொருத்தமில்லாத முறையில் நீ நடந்துகொண்டாய். பல ஆண்டுகள் நீ என்னைப் பாதுகாத்திருந்தாலும், நீ என்னை வெறுத்தாய் போலும். பெருமைக்குரிய, சிறந்த நட்பிற்குப் பொருத்தமில்லாத முறையில்,

ஒருங்குவரல்=====> பாலே

“இங்கே இருந்து வருக” எனக் கூறி என்னைவிட்டுப் பிரிந்து சென்று என்னை வருத்தினாய். ஆகவே, உனக்கு நான் ஏற்றவனாக இல்லாமல் போய்விட்டேன் என்று நினைக்கிறேன். ஆயினும், இப்பிறவிபோல் மறுபிறவிலும் நாம் இடைவிடாமல் சேர்ந்து இருப்பதற்கு வழி செய்யுமாறு உயர்ந்த நல்வினையை வேண்டுகிறேன்.

பாடலின் பின்னணி:-

பாரி இறந்த பிறகு, பாரி மகளிர் இருவரையும் தகுந்தவர்களுக்கு மணம் முடிப்பாதற்காகக் கபிலர் அரும்பாடு பட்டார். கபிலர், பாரியின் மகளிரைத் திருமணம் செய்துகொள்ளுமாறு விச்சிக்கோ, இருங்கோவேள் என்னும் இரு குறுநிலமன்னர்களை வேண்டினார். அவர்கள் இருவரும் பாரியின் மகளிரை மணந்துகொள்ள சம்மதிக்கவில்லை. அந்நிலையில், கபிலர், பாரி மகளிரை தனக்கு நன்கு தெரிந்த அந்தணர் குடும்பத்தில் ஒப்படைத்துவிட்டு தான் வடக்கிருந்து உயிர் துறந்ததாகக் கூறப்படுகிறது. கபிலர், பாரி மகளிரை அந்தணர் குடும்பத்தில் ஒப்படைக்காமல், அவ்வையாரிடம் ஒப்படைத்ததாகவும் கூறப்படுகிறது. எவ்வாறாயினும், பாரி இறந்த பொழுது தானும் இறக்கவில்லையே என்று கபிலர் வருந்துகிறார். பாரி இறந்த பொழுது அவனுடன் தன்னையும் அழைத்து செல்லாததால் தான் அடைந்த வருத்தத்தை இப்பாடலில் வெளிப்படுத்துகிறார். மற்றும், இப்பிறவியில், பாரியும் தானும் உடலும் உயிரும் போல் நெருங்கிய நண்பர்களாக இருந்ததுபோல், அடுத்த பிறவியிலும் நண்பர்களாக இருக்க வேண்டும் என்று விதியை வேண்டுகிறார்.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #236 on: March 22, 2014, 04:37:10 PM »
புறநானூறு, 237. (சோற்றுப் பானையிலே தீ!)
பாடியவர்: பெருஞ்சித்திரனார்.
பாடப்பட்டோன்: இளவெளிமான்.
திணை: பொதுவியல்.
துறை: கையறு நிலை.
================================

நீடுவாழ்க என்றுயான் நெடுங்கடை குறுகிப்
பாடி நின்ற பசிநாள் கண்ணே
கோடைக் காலத்துக் கொழுநிழல் ஆகிப்
பொய்த்தல் அறியா உரவோன் செவிமுதல்
வித்திய பனுவல் விளைந்தன்று நன்றுஎன

நச்சி இருந்த நசைபழுது ஆக
அட்ட குழிசி அழற்பயந் தாஅங்கு
அளியர் தாமே ஆர்க என்னா
அறன்இல் கூற்றம் திறனின்று துணிய
ஊழின் உருப்ப எருக்கிய மகளிர்

வாழைப் பூவின் வளைமுறி சிதற
முதுவாய் ஒக்கல் பரிசிலர் இரங்கக்
கள்ளி போகிய களரியம் பறந்தலை
வெள்வேல் விடலை சென்றுமாய்ந் தனனே;
ஆங்குஅது நோயின் றாக ஓங்குவரைப்

புலிபார்த்து ஒற்றிய களிற்றுஇரை பிழைப்பின்
எலிபார்த்து ஒற்றா தாகும் மலிதிரைக்
கடல்மண்டு புனலின் இழுமெனச் சென்று
நனியுடைப் பரிசில் தருகம்
எழுமதி நெஞ்சே ! துணிபுமுந் துறுத்தே

அருஞ்சொற்பொருள்:-

நெடுங்கடை = நெடிய வாயில் (தலைவாயில்)
உரவு = அறிவு
பனுவல் = நூல்
நச்சி = விரும்பி
நசை = விருப்பம்
குழிசி = பானை
பயத்தல் = உண்டாதல், கிடைத்தல்
அளியர் = இரங்கத் தக்கவர்
ஆர்தல் = உண்ணுதல்
திறன் = காரணம், கூறுபாடு, வழி
உருப்ப = வெப்பமுண்டாக
எருக்குதல் = வருத்துதல்
முதுவாய் = முதிய வாக்கினையுடைய
ஒக்கல் = சுற்றம்
களரி = களர் நிலம்
பறந்தலை = பாழிடம்
அம் = (சார்ந்து வரும் இடைச் சொல்)
விடலை = வீரன்
ஒற்றுதல் = வீழ்த்துதல்
மண்டுதல் = விரைந்து செல்லுதல்
இழும் = (ஒலிக்குறிப்பு)
நனி = மிக
தருகம் = கொண்டு வருவோம்
மதி = (முன்னிலை அசைச் சொல்)
துணிபு = தெளிவு
முந்துறுத்துதல் = முதலாதல்
முன்னிட்டுக் கொள்ளுதல்

இதன் பொருள்:-

நீடுவாழ்க=====> நன்றுஎன

நீ நெடுங்காலம் வாழ்க என்று வெளிமானின் நெடிய வாயிலை அணுகிப் பசியுடன் பாடிய காலத்தில், வெளிமான் கோடைக்காலத்துக்கேற்ற குளிர்நிழல் போன்றவனாக இருந்தான். அவன் யாரிடத்தும் பொய் கூறாத அறிவுடையவன். அவன் செவிகளில் நல்லோர் விதைத்த கேள்வியாகிய பயிர் நன்கு விளைந்தது என்று நினைத்துப்,

வித்திய=====> மகளிர்

பரிசிலை விரும்பியிருந்த என் விருப்பம் பயனில்லாமல் போயிற்று. அது, சோற்றுப் பானையில் சோற்றை எதிர்பார்த்துக் கைவிட்ட பொழுது, அங்கு சோற்றுக்குப் பதிலாக நெருப்பு இருந்தது போல் ஆகியது. இரங்கத்தக்க இரவலர்கள் உண்ணட்டும் என்று எண்ணாத அறமற்ற கூற்றுவன், கொள்ளத்தகாத வெளிமானின் உயிரைக் காரணமின்றிக் கொல்லத் துணிந்தான். அதனால் வருந்திய அவன் மகளிர், முறைப்படி தம் மார்பில் வெப்பமுண்டாகுமாறு அடித்துக் கொண்டனர்.

வாழை=====> ஓங்குவரை

அவர்கள் கையில் அணிந்திருந்த வளையல்கள் வாழைப் பூப்போல் சிதறின. முதிய சுற்றத்தாரும் பரிசிலரும் வருந்தினர். கள்ளிச் செடிகள் விளையும் பாழிடங்களிலுள்ள சுடுகாட்டில், ஒளியுடைய வேலையுடைய வீரன் இறந்தான். கூற்றுவன் நோயின்றி இருப்பானாக!

புலிபார்த்து=====> துறுத்தே

உயர்ந்த மலையில், புலி தாக்கிய யானை தப்பிப் போனால், தனக்கு இரையாக புலி எலியைப் பிடிக்க விரும்பாது. அலைகள் மிகுந்த கடலில் விரைந்து சென்று சேரும் ஆற்று நீர்போல், நாமும் விரைந்து சென்று மிகுந்த பரிசிலைப் பெற்று வருவோம். நெஞ்சே! துணிவை முன்வைத்து சோர்வடையாமல் எழுவாயாக.

பாடலின் பின்னணி:-

பெருஞ்சித்திரனார், வெளிமான் என்னும் வள்ளலிடம் பரிசுபெறச் சென்றார். அச்சமயம், வெளிமான் இறக்கும் தறுவாயில் இருந்தான். அந்நிலையிலும், அவன் பெருஞ்சித்திரனாருக்குப் பரிசு அளிக்குமாறு தன் தம்பியாகிய இளவெளிமானிடம் கூறி இறந்தான். இளவெளிமான், பெருஞ்சித்திரனாரின் தகுதிக்கேற்ப பரிசளிக்கவில்லை. வெளிமானை நம்பித் தான் வந்ததையும், அவன் இறந்ததால் அவர் அடைந்த ஏமாற்றத்தையும், இளவெளிமான் தகுந்த பரிசளிக்காததால் அவர் கொண்ட சினத்தையும் இப்பாடலில் புலவர் பெருஞ்சித்திரனார் வெளிப்படுத்துகிறார்.

சிறப்புக் குறிப்பு:-

”பனுவல்” என்ற சொல் நல்லோர் கூறிய நல்லுரை என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

விடலை என்ற சொல்லுக்கு “வீரன்” என்று பொருள் கொள்ளலாம். ; அல்லது, ”பதினாறு வயதிலிருந்து முப்பது வயதிற்கு உட்பட்டவன்” என்றும் பொருள் கொள்ளலாம். ஆகவே, வெளிமான், முதுமை அடைவதற்கு முன்பே இறந்ததைச் சுட்டிக்காட்டுவதற்காகப் புலவர் பெருஞ்சித்திரனார் “வெள்வேல் விடலை” என்று கூறியதாகவும் பொருள் கொள்ளலாம்.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #237 on: March 22, 2014, 04:39:32 PM »
புறநானூறு, 238. (தகுதியும் அதுவே!)
பாடியவர்: பெருஞ்சித்திரனார்.
பாடப்பட்டோன்: இளவெளிமான்.
திணை: பொதுவியல்.
துறை: கையறு நிலை.
================================

கவிசெந் தாழிக் குவிபுறத்து இருந்த
செவிசெஞ் சேவலும் பொகுவலும் வெருவா
வாய்வன் காக்கையும் கூகையும் கூடிப்
பேஎய் ஆயமொடு பெட்டாங்கு வழங்கும்
காடுமுன் னினனே கட்கா முறுநன்;

தொடிகழி மகளிரின் தொல்கவின் வாடிப்
பாடுநர் கடும்பும் பையென் றனவே;
தோடுகொள் முரசும் கிழிந்தன கண்ணே;
ஆளில், வரைபோல் யானையும் மருப்பிழந் தனவே;
வெந்திறல் கூற்றம் பெரும்பேது உறுப்ப

எந்தை ஆகுதல் அதற்படல் அறியேன்;
அந்தோ! அளியேன் வந்தனென் மன்ற;
என்னா குவர்கொல் என்துன்னி யோரே?
மாரி இரவின் மரங்கவிழ் பொழுதின்
ஆரஞர் உற்ற நெஞ்சமொடு ஓராங்குக்
கண்இல் ஊமன் கடற்பட் டாங்கு

வரையளந்து அறியாத் திரையரு நீத்தத்து
அவல மறுசுழி மறுகலின்
தவலே நன்றுமன் தகுதியும் அதுவே

அருஞ்சொற்பொருள்:-

சேவல் = ஆண் கழுகு
பொகுவல் = பெண்கழுகு
வெரு = அச்சம்
கூகை = கோட்டான்
பெட்டாங்கு = விரும்பியவாறு
ஆயம் = கூட்டம்
முன்னுதல் = அடைதல்
தொடி = வளையல்
கவின் = அழகு
கடும்பு = சுற்றம்
பையெனல் - மந்தக் குறிப்பு
தோடு = தொகுதி
மருப்பு = கொம்பு
பேது = வருத்தம்
உறுப்ப = செய்ய
படல் = இரத்தல்
மன்ற – அசைச் சொல்
துன்னியோர் = நெருங்கியவர்கள் (சுற்ரத்தார்)
மாரி = மழை
மரம் = மரக்கலம்
ஆர் = நிறைவு
அஞர் = துன்பம்
ஆரஞர் = பெருந்துன்பம்
ஊமன் = ஊமை
நீத்தம் = கடல்
அவலம் = துன்பம்
மறு = தீமை
மறுகல் = சுழலல்
தவல் = இறப்பு

இதன் பொருள்:-

கவி=====> முறுநன்

பிணமிட்டுக் கவிழ்த்துப் புதைக்கப்பட்ட தாழியின் குவிந்த மேற்புறத்தில், சிவந்த காதுகளையுடைய ஆண்கழுகுகளும், பெண்கழுகுகளும், அச்சமில்லாத, வலிய வாயையுடைய காக்கையும், கோட்டானும் கூடி இருக்கின்றன. பேய்கள் விருப்பத்தோடு திரிகின்றன. கள்ளை விரும்பும் வெளிமான் அத்தகைய இடுகாட்டை அடைந்தான்.

தொடிகழி=====> உறுப்ப

அவனை இழந்த, வளையல்களை நீக்கிய அவன் மனைவியர் போல் முன்பிருந்த அழகு அழிந்து, பாணர்களின் சுற்றத்தினரும் கண்களில் ஒளி மழுங்க வருந்தினர். தொகுதியாக இருந்த முரசுகள் கிழிந்தன. பாகர்கள் இல்லாத, மலைபோன்ற யானைகள் தம் தந்தங்களை இழந்தன.

எந்தை=====> கடற்பட்டாங்கு

சினத்துடன் கூடிய, வலிய கூற்றுவனின் கொடிய செயலால் என் தலைவன் இறந்தான். ஐயகோ! அதை அறியாமல் நான் அவனைக் காண வந்தேன். என் சுற்றத்தார் என்ன ஆவர்? மழைபொழியும் இரவில், கவிழ்ந்த மரக்கலத்திலிருந்து கடலில் விழுந்த கண்ணில்லாத ஊமையன் பெருந்துயரம் அடைந்தது போல் ஆனேன்.

வரையளந்து=====> அதுவே

எல்லையைக் காணமுடியாததும் பெரிய அலைகளுடையதும் ஆகிய அக்கடலினும் கொடிய துன்பமாகிய சுழலில் சுழலுவதைவிட இறப்பதே நமக்குத் தகுந்த செயலாகும்.

பாடலின் பின்னணி:-

வெளிமானிடம் பரிசில் பெறுவதற்காகப் பெருஞ்சித்திரனார் வந்த நேரத்தில் வெளிமான் இறந்தான். அவருடைய ஏமாற்றத்தையும் இரங்கத்தக்க நிலையையும், கண்ணில்லாத ஊமை ஒருவன் மழைபெய்து கொண்டிருக்கும் பொழுது அவன் சென்ற மரக்கலம் கவிழ்ந்து கடலில் விழுந்ததற்கு இப்பாடலில் ஒப்பிடுகிறார்.

சிறப்புக் குறிப்பு:-

கண்ணில்லாத ஊமன் கடலில் விழுந்ததோடு தன் நிலையை ஒப்பிடும் உவமை மிகவும் நயமுடையதாக உள்ளது.

“பாகர்கள் இல்லாததால் யானைகள் தந்தங்களை இழந்தன” என்பது யானைகளைக் கட்டுப்படுத்தி, அவற்றைப் பயிற்றுவிக்கும் பாகர்கள் இல்லாததால், யானைகள் பயனில்லாமல் போயின என்ற பொருளில் கூறப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #238 on: March 22, 2014, 04:41:17 PM »
புறநானூறு, 239. (இடுக சுடுக எதுவும் செய்க!)
பாடியவர்: பேரெயில் முறுவலார்.
பாடப்பட்டோன்: நம்பி நெடுஞ்செழியன்.
திணை: பொதுவியல்.
துறை: கையறு நிலை.
================================

தொடியுடைய தோள்மணந்தனன்;
கடிகாவிற் பூச்சூடினன் ;
தண்கமழுஞ் சாந்துநீவினன் ;
செற்றோரை வழிதபுத்தனன் ;
நட்டோரை உயர்புகூறினன் ;

வலியரென வழிமொழியலன் ;
மெலியரென மீக்கூறலன்;
பிறரைத்தான் இரப்பறியலன் ;
இரந்தோர்க்கு மறுப்பறியலன் ;
வேந்துடை அவையத்து ஓங்குபுகழ் தோற்றினன்;

வருபடை எதிர்தாங்கினன் ;
பெயர்படை புறங்கண்டனன் ;
கடும்பரிய மாக்கடவினன் ;
நெடுந்தெருவில் தேர்வழங்கினன் ;
ஓங்குஇயற் களிறுஊர்ந்தனன்;

தீஞ்செறிதசும்பு தொலைச்சினன்;
பாண்உவப்பப் பசிதீர்த்தனன்;
மயக்குடைய மொழிவிடுத்தனன்; ஆங்குச்
செய்ப எல்லாம் செய்தனன்; ஆகலின்
இடுக ஒன்றோ, சுடுக ஒன்றோ,
படுவழிப் படுகஇப் புகழ்வெய்யோன் தலையே

அருஞ்சொற்பொருள்:-

தொடி = வளையல்
கடி = காவல்
கா = சோலை
நீவுதல் = தடவுதல்
செற்றோர் = பகைவர்
வழி = கிளை, சந்ததி
தபுத்தல் = அழித்தல்
நட்டோர் = நண்பர்
வழிமொழிதல் = பணிந்து கூறுதல், சொல்லியவற்றை ஏற்றுக் கொள்ளுதல்
மீக்கூறல் = புகழ்தல்
கடு = விரைவு
மா = குதிரை
பரிதல் = ஓடுதல்
கடவுதல் = செலுத்துதல்
தசும்பு = கள் உள்ள குடம்
தொலைத்தல் = முற்றுப்பெறச் செய்தல்
மயக்குதல் = ஏமாற்றுதல்
ஒன்றோ – அதிசய இரக்கச் சொல்
படுதல் = உண்டாதல், சம்மதித்தல்
வெய்யோன் = விரும்பத்தக்கவன்

இதன் பொருள்:-

தொடியுடைய=====> கூறினன்

நம்பி நெடுஞ்செழியன் வளையல்கள் அணிந்த மகளிரின் தோளைத் தழுவினான்; காவலுடைய சோலையிலுள்ள மரங்களிலுள்ள பூக்களைச் சூடினான்; குளிர்ந்த சந்தனம் பூசினான்; பகைவரைக் கிளையோடு அழித்தான்; நண்பர்களைப் புகழ்ந்து கூறினான்;

வலியரென=====> தோற்றினன்

வலிமையுடையவர்கள் என்பதால் ஒருவரிடம் பணிந்து பேசமாட்டான்; தம்மைவிட வலிமை குறைந்தவர்களிடம் தன்னைப் புகழ்ந்து பேசமாட்டான்; பிறரிடம் ஒன்றை ஈயென்று இரப்பதை அறியாதவன்; தன்னிடம் இரப்பவர்களுக்கு இல்லையென்று கொடுக்க மறுப்பதை அறியாதவன்; வேந்தர்களின் அவையில் தனது உயர்ந்த புகழ் தோன்றுமாறு செய்தான்;

வருபடை=====> ஊர்ந்தனன்

தன்னை எதிர்த்துவரும் படையை முன்நின்று தடுத்தான்; புறங்காட்டி ஓடும் படையைத் தொடர்ந்து பின் செல்லாமல் நின்றான்; விரைந்து செல்லும் குதிரையைச் செலுத்தினான்; நெடிய தெருக்களில் தேரில் சென்றான்; உயர்ந்த இயல்புடைய யானையைச் செலுத்தினான்;

தீஞ்செறிதசும்பு=====> தலையே

இனிமையான கள் நிரம்பிய குடங்களைப் பலரோடு பகிர்ந்து குடித்து முடித்தான்; பாணர்கள் மகிழுமாறு அவர்கள் பசியைத் தீர்த்தான்; பிறரை மயக்கும் சொற்களைக் கூறுவதைத் தவிர்த்தான்; இவ்வாறு, அவன் செய்ய வேண்டிய எல்லாவற்றையும் செய்தான். ஆகவே, இப்புகழை விரும்புவோனது தலையைப் புதைத்தாலும் சரி; அல்லது எரித்தாலும் சரி. எது எப்படி நடக்க வேண்டுமோ அப்படி நடக்கட்டும்.

பாடலின் பின்னணி:-

சங்க காலத்தில், வாழ்க்கையின் உறுதிப் பொருட்களாகக் கருதப்பட்ட அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றிலும் நம்பி நெடுஞ்செழியன் சிறப்புற்று விளங்கிப் புகழுடன் வாழ்ந்து இறந்தான். அவன் இறந்த செய்தி கேட்டு பலரும் அவன் அரண்மனையில் கூடினர். அவன் போரில் இறக்காததால், அவன் உடலை வாளால் பிளந்து, புதைக்க வேண்டும் என்று சிலர் கருதினர். வேறு சிலர், அவன் உடலை எரிப்பதுதான் முறையான செயல் என்று கருதினர். அப்பொழுது, பேரெயில் முறுவலார், ”நம்பி நெடுஞ்செழியன் பலதுறைகளிலும் சிறப்புற்று வாழ்ந்தவன். அவன் செய்யத் தக்கவற்றை எல்லாம் சிறப்பாகச் செய்தவன். ஆகவே, அவனைப் புதைத்தாலும் சரி, அல்லது எரித்தாலும் சரி; இரண்டுமே தவறில்லை.” என்று இப்பாடலில் கூறுகிறார்.

சிறப்புக் குறிப்பு:-

“வேந்துடை அவையத்து ஓங்கு புகழ் தோற்றினான்” என்று புலவர் பேரெயில் முறுவலார் கூறுவதிலிருந்து, நம்பி நெடுஞ்செழியன் முடிசூடிய மூவேந்தர்களில் ஒருவன் அல்லன் என்பது தெரியவருகிறது.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #239 on: March 22, 2014, 04:43:57 PM »
புறநானூறு, 240. (பிறர் நாடுபடு செலவினர்!)
பாடியவர்: குட்டுவன் கீரனார்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்.
திணை: பொதுவியல்.
துறை: கையறு நிலை.
================================

ஆடுநடைப் புரவியும் களிறும் தேரும்
வாடா யாணர் நாடும் ஊரும்
பாடுநர்க்கு அருகா ஆஅய் அண்டிரன்,
கோடுஏந்து அல்குல் குறுந்தொடி மகளிரொடு
காலன் என்னும் கண்ணிலி உய்ப்ப

மேலோர் உலகம் எய்தினன்; எனாஅப்
பொத்த அறையுள் போழ்வாய்க் கூகை
‘சுட்டுக் குவி’எனச் செத்தோர்ப் பயிரும்
கள்ளியம் பறந்தலை ஒருசிறை அல்கி
ஒள்ளெரி நைப்ப உடம்பு மாய்ந்தது;

புல்லென் கண்ணர் புரவலர்க் காணாது,
கல்லென் சுற்றமொடு கையழிந்து புலவர்
வாடிய பசியர் ஆகிப்பிறர்
நாடுபடு செலவினர் ஆயினர் இனியே

அருஞ்சொற்பொருள்:-

ஆடு = வெற்றி
புரவி = குதிரை
வாடா = அழியாத
யாணர் = புது வருவாய்
அருகா = குறையாத
கோடு = பக்கம்
அல்குல் = இடை
தொடி = வளையல்
உய்ப்ப = கொண்டு போக
பொத்த = பொந்துள்ள
போழ் = பிளவு
கூகை = ஆந்தை
பயிர்தல் = அழைத்தல்
பறந்தலை = பாழிடம்
அல்கி = தங்கி
நைத்தல் = வருத்தல்
கல்லென் சுற்றம் = ஆரவாரமான சுற்றம்
கையழிந்து = செயலிழந்து
படு = புகு

இதன் பொருள்:-

ஆடுநடை=====> உய்ப்ப

வெற்றி நடைபோடும் குதிரையும், யானையும், தேரும், குறையாத வருவாய் உள்ள நாடும் ஊரும், பாடுபவர்களுக்குக் குறையாது வழங்குபவன் ஆய் அண்டிரன். பக்கங்கள் அகன்று, குறுகிய இடையையுடைய, சிறிய வளையல்களை அணிந்த மனைவியரோடு ஆய் அண்டிரன் காலன் என்று சொல்லப்படும் கருணை இல்லாத கூற்றுவனின் கொடிய செயலால்

மேலோர்=====> மாய்ந்தது;

விண்ணுலகம் அடைந்தான். பொந்தில் வாழும் பிளந்த வாயையுடைய ஆந்தை, “சுட்டுக் குவி” என்று செத்தவர்களை அழைப்பது போலக் கூவும் கள்ளியையுடைய பாழிடமாகிய காட்டில் ஒருபக்கத்தில் வைத்து அவனுடைய உடல் தீயால் எரிக்கப்பட்டது.

புல்லென்=====> இனியே

பொலிவிழந்த கண்களையுடையவர்களாய், தம்மைப் பாதுகாப்போனைக் காணாது, ஆரவாரிக்கும் சுற்றத்துடன் செயலிழந்து நிற்கும் புலவர்கள் இப்பொழுது தம் உடலை வாட்டும் பசியுடன் வேறு நாடுகளுக்குச் செல்கின்றனர்.

பாடலின் பின்னணி:-

ஆய் அண்டிரன் இறந்ததால் வருந்திய குட்டுவன் கீரனார், தம் வருத்தத்தை இப்பாடலில் வெளிப்படுத்துகிறார்.