Author Topic: ~ புறநானூறு ~  (Read 106618 times)

Offline MysteRy

~ புறநானூறு ~
« on: February 08, 2013, 02:26:08 PM »


புறநானூறு, 1. (இறைவனின் திருவுள்ளம்)
பாடியவர்: பாரதம் பாடிய பெருந்தேவனார்.
பாடப்பட்டோன் : சிவபெருமான். (சிவபெருமானைப்பற்றி புறநானூற்றுப் புலவர்கள் பாடி இருப்பதிலிருந்து அக்காலத்து சிவ வழிபாடு இருந்ததாகவும் சிவனுக்குக் கோயில்கள் இருந்ததாகவும் தெரிகிறது).
=====================================

கண்ணி கார்நறுங் கொன்றை; காமர்
வண்ண மார்பின் தாருங் கொன்றை;
ஊர்தி வால்வெள் ளேறே; சிறந்த
சீர்கெழு கொடியும் அவ்வேறு என்ப;
கறைமிடறு அணியலும் அணிந்தன்று; அக்கறை

மறைநவில் அந்தணர் நுவலவும் படுமே;
பெண்ணுரு ஒரு திறன் ஆகின்று; அவ்வுருத்
தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்;
பிறை நுதல் வண்ணம் ஆகின்று; அப்பிறை

பதினெண் கணனும் ஏத்தவும் படுமே;
எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய,
நீரறவு அறியாக் கரகத்துத்,
தாழ்சடைப் பொலிந்த அருந்தவத் தோற்கே.

அருஞ்சொற் பொருள்:-

கண்ணி = தலையில் சூடப்படும் மாலை
கார் = கார் காலம்
நறுமை = மணம்
கொன்றை = கொன்றை மலர்
காமர் = அழகு
தார் = மாலை
ஊர்தி = வாகனம்
வால் = தூய
ஏறு = எருது
சீர் = அழகு
கெழு = பொருந்து
மிடறு = கழுத்து
நவிலுதல் = கற்றல்
நுவலுதல் = போற்றுதல்
திறன் = கூறுபாடு
கரக்கல் = மறைத்தல்
வண்ணம் = அழகு
ஏத்துதல் = புகழ்தல்
ஏமம் = காவல்
அறவு = அழிதல், குறைதல்
கரகம் = கமண்டலம்
பொலிந்த = சிறந்த
அருந்தவத்தோன் = அரிய தவம் செய்பவன் (இறைவன்).

இதன் பொருள்:-

கண்ணி=====> அணிந்தன்று

தலையில் அணிந்திருக்கும் மாலை கார்காலத்து மலரும் மணமுள்ள கொன்றை மலர்களால் புனையப்பட்டது. அவன் தன்னுடைய அழகிய நிறமுள்ள மார்பில் அணிந்திருப்பதும் கொன்றை மலர் மாலையே. அவன் ஏறிச் செல்லும் வாகனம் தூய வெண்ணிறமுள்ள காளை; அவனுடைய கொடியும் காளைக்கொடிதான். நஞ்சினது கருமை நிறம் சிவனது கழுத்தில் கறையாக இருந்து அழகு செய்கிறது.

அக்கறை=====> ஆகின்று

அந்தக் கறை, வேதம் ஓதும் அந்தணர்களால் போற்றப் படுகிறது. சிவனின் ஒருபக்கம் பெண்ணுருவம் உடையது. அப்பெண்ணுருவைத் தன்னுள் அடக்கி மறைத்துக் கொள்வதும் உண்டு. சிவபெருமான் நெற்றியில் அணிந்துள்ள பிறைநிலா அவன் நெற்றிக்கு அழகு செய்கிறது

அப்பிறை=====> அருந்தவத் தோற்கே

அப்பிறை பதினெட்டுக் கணங்களாலும் புகழவும் படும். எல்லா உயிகளுக்கும் பாதுகாப்பான நீர் வற்றாத கமண்டலத்தையும் தாழ்ந்த சடையையும் சிறந்த செய்தற்கரிய தவத்தையுமுடைய சிவபெருமானே!
« Last Edit: September 12, 2020, 08:30:21 PM by MysteRy »

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #1 on: February 08, 2013, 02:43:33 PM »



புறநானூறு, 2. (போரும் சோறும்)
பாடியவர்: முரஞ்சியூர் முடிநாகராயர்.
பாடப்பட்டோன்: சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன்.
திணை: பாடாண்.
துறை: செவியறிவுறூஉ; வாழ்த்தியலும் ஆகும்.

செவியறிவுறூஉ = அரசன் செய்ய வேண்டிய கடமைகளை முறைதவறாமல் செய்யுமாறு அவன் கேட்க அறிவுறுத்தல்.
வாழ்த்தியல் = தலைவனை வாழ்த்துதல்
======================================

மண் திணிந்த நிலனும்
நிலன் ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித் தலைஇய தீயும்

தீ முரணிய நீரும், என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப்
போற்றார்ப் பொறுத்தலும், சூழ்ச்சியது அகலமும்
வலியும், தெறலும், அளியும், உடையோய்!
நின்கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்தும் நின்

வெண்தலைப் புணரிக் குடகடல் குளிக்கும்
யாணர் வைப்பின் நன்னாட்டுப் பொருந!
வான வரம்பனை! நீயோ பெரும!
அலங்குளைப் புரவி ஐவரோடு சினைஇ
நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை

ஈரைம் பதின்மரும் பொருது களத்து ஒழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்!
பாஅல் புளிப்பினும், பகல் இருளினும்
நாஅல் வேத நெறி திரியினும்
திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி

நடுக்கின்றி நிலியரோ அத்தை; அடுக்கத்துச்
சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை
அந்தி அந்தணர் அருங்கடன் இறுக்கும்
முத்தீ விளக்கில் துஞ்சும்
பொற்கோட்டு இமயமும் பொதியமும் போன்றே.

அருஞ்சொற் பொருள்:-

திணிந்த = செறிந்த
விசும்பு = வானம்
தைவரல் = தடவுதல்
வளி = காற்று
முரணிய = மாறுபட்ட
போற்றார் = பகைவர
தெறல் = அழித்தல்
அளி = அருள்
புணரி = பொருந்தி
குட = மேற்கிலுள்ள
யாணர் = புது வருவாய்
வைப்பு = ஊர் நிலப் பகுதி
பொருநன் = அரசன்
பெருமன் = தலைவன்
அலங்கல் = அசைதல்
உளை = பிடரி மயிர்
தலைக்கொள்ளுதல் = கொடுத்தல்
பொலம் = பொன்
பொருதல் = போர் செய்தல்
பதம் = உணவு
வரையாது = குறையாது
சேண் = நெடுங்காலம்
நடுக்கு = சோர்வு
நிலியர் = நிற்பாயாக
அடுக்கம் = மலைச்சரிவு
நவ்வி = மான் கன்று
மா = மான்
பிணை = பெண்மான்
கோடு = மலை, மலைச்சிகரம்.

இதன் பொருள்:-

மண் திணிந்த=====> பெயர்த்தும் நின்

மண் செறிந்தது நிலம்; அந்நிலத்திற்கு மேல் உயர்ந்து இருப்பது வானம்; அவ்வானத்தைத் தடவி வருவது காற்று; அக்காற்றில் வளர்ந்து வருவது தீ; அத்தீயிலிருந்து மாறுபட்டது நீர். மண், வானம், காற்று, தீ, நீர் ஆகிய ஐந்தும் ஐம்பெரும் பூதங்கள் என்று சொல்லப்படுகின்றன. அவற்றுள் நிலத்தைப் போன்ற பொறுமையும், வானத்தைப் போன்ற அகன்ற ஆராய்ச்சியும், காற்றைப் போன்ற வலிமையும், தீயைப் போல் அழிக்கும் ஆற்றலும், நீரைப் போன்ற அருளும் உடையவனே!

வெண்தலை=====> விளங்கி

உன்னுடைய கிழக்குக் கடலில் எழுந்த கதிரவன் வெண்ணிற நுரையையுடைய உன்னுடைய மேற்குக் கடலில் மூழ்கும் புதுவருவாயோடு கூடிய நிலப்பகுதிகளுடைய நல்ல நாட்டுக்குத் தலைவனே! அரசே! நீ வானத்தை எல்லையாகக் கொண்டவன். அசைந்து ஆடும் பிடரி மயிரோடு கூடிய குதிரைகளையுடைய ஐவரோடு (பாண்டவர்களோடு) சினந்து அவர்களின் நிலத்தைத் தாம் கவர்ந்து கொண்ட, பொன்னாலான தும்பைப் பூவை அணிந்த நூற்றுவரும் (கௌவரவர்களும்) போர்க்களத்தில் இறக்கும் வரை பெருமளவில் அவர்களுக்குச் சோற்றை அளவில்லாமல் நீ கொடுத்தாய். பால் புளித்தாலும், பகல் இருண்டாலும், நான்கு வேதங்களில் கூறப்படும் ஒழுக்க நெறிகள் மாறினாலும் மாறாத சுற்றத்தாரோடு

நடுக்கின்றி=====> பொதியமும் போன்றே

மலைச்சரிவில் சிறிய தலையையுடைய மான் குட்டிகளோடு கூடிய பெரிய கண்களையுடைய பெண்மான்கள் மாலைநேரத்தில் அந்தணர்கள் தங்கள் கடமையாகக் கருதிச் செய்யும் அரிய வேள்விக்காக மூட்டிய முத்தீயில் உறங்கும் பொற்சிகரங்களையுடைய இமயமமும் பொதியமும் போல் நீண்ட நாள் புகழோடு விளங்கிச் சோர்வின்றி நிலைத்து வாழ்வாயாக
« Last Edit: September 12, 2020, 08:32:27 PM by MysteRy »

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #2 on: February 08, 2013, 03:57:14 PM »



புறநானூறு, 3 (வன்மையும் வண்மையும்).
பாடியவர் : இரும்பிடர்த் தலையார்.
பாடப்பட்டோன் : பாண்டியன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி.
திணை : பாடாண்.
துறை: செவியறிவுறூஉ; வாழ்த்தியலும் ஆகும்.
=========================================

உவவுமதி உருவின் ஓங்கல் வெண்குடை
நிலவுக்கடல் வரைப்பின் மண்ணகம் நிழற்ற
ஏம முரசம் இழுமென முழங்க
நேமி உய்த்த நேஎ நெஞ்சின்
தவிரா ஈகைக், கவுரியர் மருக!

செயிர்தீர் கற்பின் சேயிழை கணவ!
பொன் னோடைப் புகர் அணிநுதல்
துன்னருந்திறல் கமழ்கடா அத்து
எயிறு படையாக எயிற்கதவு இடாஅக்
கயிறுபிணிக் கொண்ட கவிழ்மணி மருங்கின்

பெருங்கை யானை இரும்பிடர்த் தலையிருந்து
மருந்தில் கூற்றத்து அருந்தொழில் சாயாக்
கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி!
நிலம் பெயரினும், நின்சொற் பெயரல்;
பொலங் கழற்காற் புலர்சாந்தின்

விலங்ககன்ற வியன்மார்ப!
ஊர்இல்ல, உயவுஅரிய,
நீர்இல்ல, நீள்இடைய,
பார்வல் இருக்கைக் கவிகண் நோக்கிற்
செந்தொடை பிழையா வன்கண் ஆடவர்

அம்புவிட வீழ்ந்தோர் வம்பப் பதுக்கைத்
திருந்துசிறை வளைவாய்ப் பருந்திருந்து உயவும்
உன்ன மரத்த துன்னருங் கவலை
நின்நசை வேட்கையின் இரவலர் வருவர்அது
முன்னம் முகத்தின் உணர்ந்தவர்
இன்மை தீர்த்தல் வன்மை யானே.

அருஞ்சொற்பொருள்:-
(எண்கள் வரிகளின் கணக்கை குறிக்கும்)

1. உவவு = முழு நிலா; ஓங்கல் = உயர்ந்த.
2. நிலவுதல் = நிலைத்திருத்தல்; வரைப்பு = எல்லை; நிழற்றுதல் = கருணை காட்டுதல்.
3. ஏமம் = காவல்; இழும் = ஓசை.
4. நேமி = ஆட்சிச் சக்கரம்; உய்த்தல் = செலுத்தல்; நேஎ நெஞ்சு = கருணையுள்ள மனம்.
5. கவுரியர் = பாண்டியன்; மருகன் = வழித்தோன்றல்.
6. செயிர் = குற்றம்; சேயிழை = சிறந்த ஆபரணங்களை அணிந்த பெண்.
7. ஓடை = நெற்றிப் பட்டம்; புகர் = புள்ளி; நுதல் = நெற்றி.
8. துன் = நெருங்கு; திறல் = வலிமை; கமழ்தல் = மணத்தல்; கடாஅம் = மதம்; கடாஅத்த = மதத்தையுடைய.
9. எயிறு = தந்தம்; எயில் = மதில்; இடுதல் = குத்துதல்.
10. மருங்கு = பக்கம்.
11. இரு = பெரிய; பிடர் = கழுத்தின் பின்புறம்.
12. மருந்து இல் = பரிகாரமில்லாத; சாயா = சளைக்காத.
13. கருங்கை = வலிய கை; வழுதி = பாண்டியன்.
15. பொலம் = பொன்; புலர்தல் = உலர்தல்.
16. விலங்குதல் = விலகல்; வியல் = பரந்த.
17. உயவு = வருத்தம்.
18. இடை = வழி.
19. பார்வல் = பகைவர் வரவைப் பார்த்திருக்கும் அரணுச்சி; கவிதல் = வளைதல்.
20. செம்மை = நன்மை, பெருமை, வளைவின்மை; தொடை = அம்பெய்தல்; வன்கண் = கொடுமை.
21. வம்பு = புதுமை; பதுக்கை = கற்குவியல்.
22. திருந்துதல் = அழகு படுதல் (அழகிய); சிறை = சிறகு; உயவும் = வருத்தும்.
23. உன்ன மரம் = இலவ மரம்; கவலை = பல தெருக்கள் கூடுமிடம், இரண்டாகப் பிரியும் பாதை.
24. நசை = ஆசை; வேட்கை = விருப்பம், அன்பு.
26. வன்மை = வல்ல தன்மை

இதன் பொருள்:-

உவவுமதி=====> மருக!

நிலைத்து நிற்கும் கடலை எல்லையாகக் கொண்ட நிலத்திற்கு நிழல் தரும் முழு மதி வடிவில் உள்ள உயர்ந்த வெண்கொற்றக் குடையோடும், பாதுகாப்பான முரசின் முழக்கத்தோடும் ஆட்சிச் சக்கரத்தைச் செலுத்திய, கருணையுள்ள மனமும் நீங்காத கொடையும் கொண்ட பாண்டியரின் வழித்தோன்றலே!


செயிர்தீர்=====> புலர்சாந்தின்

குற்றமற்ற கற்பும் சிறந்த அணிகலன்களும் உடையவளின் கணவனே! பொன்னாலாகிய பட்டத்தை அணிந்த புள்ளிகளுடைய நெற்றியும் எவரும் அணுகுதற்கரிய வலிமையும் மணம் கமழும் மதநீரும் கொண்டது உன் யானை. அந்த யானை தன் கொம்புகளைப் படைகருவிகளாகக் கொண்டு பகைவர் மதிலின் கதவுகளைக் குத்தி வீழ்த்தும். கயிற்றால் கட்டப்பட்ட கவிழ்ந்த மணிகள் உள்ள பக்கங்களையும் பெரிய தும்பிக்கையையும் உடைய அந்த யானையின் பெரிய கழுத்தின் மேலிருந்து, தனக்கு மாற்றில்லாத கூற்றுவனைப் போல் பொறுத்தற்கரிய கொலைத் தொழிலில் சளைக்காத, உன் வலிய கையில் ஒளி பொருந்திய வாளையுடைய பெரும்புகழ் வாய்ந்த பாண்டியனே! கால்களில் பொன்னாலான கழல்களும், உலர்ந்த சந்தனம் பூசிய பரந்து அகன்ற மார்பும் உடையவனே!

விலங்ககன்ற=====> வன்மை யானே.

உன்னைக் காண்பதற்கு வரும் வழியில் ஊர்கள் இல்லை; அது பொறுத்தற்கரிய வருத்ததைத் தரும் நீரில்லாத நீண்ட வழி; அவ்வழியே வருவோரை அரண்களின் உச்சியிலிருந்து கையை நெற்றியில் வளைத்து வைத்துக் கண்களால் பார்த்துக் குறி தவறாது அம்பு எய்யும் கள்வரின் அம்புகளால் அடிபட்டு இறந்தோரின் உடல்களை மூடியிருக்கும் கற்குவியல்கள் உள்ளன. அழகிய சிறகுகளும் வளைந்த வாயும் உடைய பருந்துகள் இறந்தோர் உடலைத் தின்ன முடியாமல் இலவ மரத்தில் இருந்து வருந்துகின்றன. இலவ மரங்கள் நிறைந்த கடத்தற்கரிய பல பிரிவுகளுடைய பாதைகள் வழியாக உன்னைக் காண்பதற்கு இரவலர் வருகின்றனர். இரவலர்களின் உள்ளக் குறிப்பை அவர்கள் முகத்தால் உணர்ந்து அவர்களின் வறுமையைத் தீர்க்கும் வல்லமை உனக்கு இருப்பதால்தான் அவர்கள் பல இன்னல்களையும் கடந்து உன்னைக் காண வருகிறார்கள். ஆகவே, நிலம் பெயர்ந்தாலும், நீ உன் சொல்லிலிருந்து மாறாமல் இருப்பாயாக.
« Last Edit: September 12, 2020, 08:33:53 PM by MysteRy »

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #3 on: February 08, 2013, 04:24:42 PM »



புறநானூறு, 4 (தாயற்ற குழந்தை).
பாடியவர் : பரணர்.
பாடப்பட்டோன் : சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி.
திணை : வஞ்சி.
துறை: கொற்ற வள்ளை.
=========================================

வாள்வலந்தர மறுப் பட்டன
செவ் வானத்து வனப்புப் போன்றன!
தாள் களங்கொளக் கழல் பறைந்தன
கொல் ஏற்றின் மருப்புப் போன்றன;

தோல் துவைத்து அம்பின் துளைதோன்றுவ
நிலைக்கு ஒராஅ இலக்கம் போன்றன;
மாவே எறிபதத்தான் இடம் காட்டக்
கறுழ் பொருத செவ்வாயான்
எருத்து வவ்விய புலி போன்றன;

களிறே கதவு எறியாச் சிவந்து உராஅய்
நுதி மழுங்கிய வெண் கோட்டான்
உயிர் உண்ணும் கூற்றுப் போன்றன;
நீயே, அலங்கு உளைப் பரீஇ இவுளிப்
பொலந் தேர்மிசைப் பொலிவு தோன்றி

மாக் கடல் நிவந் தெழுதரும்
செஞ் ஞாயிற்றுக் கவினை மாதோ!
அனையை ஆகன் மாறே
தாய்இல் தூவாக் குழவி போல
ஓவாது கூஉம் நின் உடற்றியோர் நாடே.

அருஞ்சொற்பொருள்:-

1. வலம் = வெற்றி; மறு = கரை.
2. வனப்பு = நிறம் அழகு.
3. களங்கொள்ளல் = இருப்பிடமாக்கிக் கொள்ளுதல், வெல்லுதல்; பறைந்தன = தேய்ந்தன.
4. மருப்பு = கொம்பு.
5. தோல் = தோலால் செய்யப்பட்ட கேடகம்; துவைத்தல் = குத்துதல், ஒலித்தல்.
6. நிலைக்கு = நிலையில்; ஒராஅ = தப்பாத; இலக்கம் = குறி.
7. மா = குதிரை; எறிதல் = வெல்லுதல்; பதம் = பொழுது.
9. கறுழ் = கடிவாளம்; பொருதல் = தாக்குதல்.
10. எறியா = எறிந்து = வீசியடித்து; சிவந்து = கோபித்து; உராவல் = உலாவல்.
11. நுதி = நுனி; கோடு = கொம்பு.
13. அலங்குதல் = அசைதல்; உளை = பிடரி மயிர்; பரீஇ = விரைந்து; இவுளி = குதிரை.
14. பொலம் = பொன்; பொலிவு = அழகு.
15. மா = பெரிய; நிவத்தல் = உயர்தல் தோன்றுதல்.
16. கவின் = அழகு; மாது - ஒருஅசைச் சொல்.
17. ஆகன் மாறு = ஆகையால்.
18. தூவா = உண்ணாத; குழவி = குழந்தை.
19. ஓவாது = ஒழியாது; உடற்றல் = பகைத்தல்; கூ = கூப்பிடு.

இதன் பொருள்:-

வாள்வலந்தர=====> மருப்புப் போன்றன

போரில் வெற்றியைத் தரும் வகையில் பயன்படுத்தப்பட்டதால் வீரர்களின் வாள்கள் குருதிக்கறை படிந்து சிவந்த வானத்தைப் போல் அழகாக உள்ளன. வீரர்களின் கால்கள் போர்க்களத்தைத் தமது இருப்பிடமாகக் கொண்டதால் அவர்கள் கால்களில் அணிந்த கழல்கள் தேய்ந்து, கொல்லும் காளைகளின் கொம்புகள் போல் உள்ளன

தோல் துவைத்து=====> புலி போன்றன

கேடயங்கள் அம்புகளால் குத்தப்பட்டதால் அவற்றில் துளைகள் தோன்றி உள்ளன. அத்துளைகள், தவறாமல் அம்பு எய்வதற்கு ஏற்ற இலக்குகள் போல் காட்சி அளிக்கின்றன. குதிரைகள், பகைவரைப் போரில் வெல்லும் பொழுது, வாயின் இடப்புறமும் வலப்புறமும் கடிவாளத்தால் இழுக்கப்பட்டதால் சிவந்த வாய் உடையனவாய் உள்ளன. அக்குதிரைகளின் வாய்கள், மான் முதலிய விலங்குகளைக் கடித்துக் கவ்வியதால் குருதிக்கறை படிந்த புலியின் வாய் போல் உள்ளன.

களிறே கதவு=====> பொலிவு தோன்றி

யானைகள், மதிற்கதவுகளை வெகுண்டு மோதியதால் அவற்றின் வெண்ணிறமான தந்தங்கள் மழுங்கின. அந்த யானைகள் உயிரைக் கொல்லும் இயமனைப் போல் காட்சி அளிக்கின்றன. நீ அசையும் பிடரியுடன் விரைந்து ஓடும் குதிரைகள் பூட்டிய, பொன்னாலான தேர் மீது வருவது,

மாக் கடல்=====> உடற்றியோர் நாடே

பெரிய கடலிலிருந்து செஞ்ஞாயிறு எழுவதைப்போல் தோன்றுகிறது. நீ இத்தகைய வலிமையுடையவனாதலால், உன் பகைவர்கள் நாட்டு மக்கள் தாயில்லாத குழந்தைகள் போல் ஓயாது கூவி வருந்துகின்றனர்.
« Last Edit: September 12, 2020, 08:35:17 PM by MysteRy »

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #4 on: February 08, 2013, 04:31:03 PM »



புறநானூறு, 5. (அருளும் அருமையும்)
பாடியவர்: நரிவெரூஉத் தலையார்.
பாடப்பட்டோன்: சேரமான் கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ் சேரல்.
திணை: பாடாண்.
துறை: செவியறிவுறூஉ: பொருண் மொழிக் காஞ்சியும் ஆகும்.
====================================

எருமை அன்ன கருங்கல் இடைதோறு
ஆனிற் பரக்கும் யானைய முன்பின்
கானக நாடனை நீயோ பெரும!
நீயோர் ஆகலின் நின்ஒன்று மொழிவல்;
அருளும் அன்பும் நீக்கி நீங்கா
நிரயங் கொள்பவரொடு ஒன்றாது காவல்
குழவி கொள்பவரின் ஓம்புமதி;
அளிதோ தானேஅது பெறல்அருங் குரைத்தே.

அருஞ்சொற் பொருள்:-

இடை = இடம்
பரத்தல் = பரவுதல்
ஓர் = ஒப்பற்ற
நிரயம் = நரகம்
ஓம்பு = காப்பாற்றுவாயாக
மதி - அசைச் சொல்
அளிது = செய்யத் தக்கது

இதன் பொருள்:-

எருமை=====> மொழிவல்

எருமை போன்ற கருங்கற்கள் உள்ள இடங்களில் திரியும் பசுக்கூட்டம் போல யானைகள் திரியும் காடுகளுடைய நாட்டுக்குத் தலைவனே! நீயோ பெருமகன், நீ ஒப்பற்றவனாகையால் உனக்கு ஒன்று சொல்வேன்.

அருளும்=====> அருங் குரைத்தே

அருளையும் அன்பையும் நீக்கி, எப்பொழுதும் நரகத்தைத் தங்கள் இருப்பிடமாகக் கொள்ள விரும்புபவர்களோடு சேராமல், தாய் தன் குழந்தையைக் காப்பது போல் (அருளோடும் அன்போடும்) நீ உன் நாட்டைப் பாதுகாப்பாயாக. அதுவே செய்யத்தக்க செயல்; அத்தகைய செயல் செய்வதற்கான வாய்ப்பைப் பெறுவது அரிது.
« Last Edit: September 12, 2020, 08:37:10 PM by MysteRy »

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #5 on: February 08, 2013, 06:28:34 PM »
புறநானூறு, 6. (தண்ணிலவும் வெங்கதிரும்)
பாடியவர்: காரிகிழார்.
பாடப்பட்டோன்: பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி.
திணை: பாடாண்.
துறை: செவியறிவுறூஉ: வாழ்த்தியலும் ஆகும்.
=======================================

வாடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்
தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்
குணாஅது கரைபொரு தொடுகடல் குணக்கும்
குடாஅது தொன்றுமுதிர் பொளவத்தின் குடக்கும்
கீழது முப்புணர் அடுக்கிய முறைமுதற் கட்டின்

நீர்நிலை நிவப்பின் கீழும் மேலது
ஆனிலை உலகத் தானும், ஆனாது
உருவும் புகழும் ஆகி விரிசீர்த்
தெரிகோல் ஞமன்ன் போல, ஒரு திறம்
பற்றல் இலியரோ நின்திறம் சிறக்க

செய்வினைக்கு எதிர்ந்த தெவ்வர் தேஎத்துக்
கடற்படை குளிப்ப மண்டி, அடர்ப் புகர்ச்
சிறுகண் யானை செவ்விதின் ஏவிப்
பாசவற் படப்பை ஆர்எயில் பலதந்து
அவ்வெயில் கொண்ட செய்வுறு நன்கலம்

பரிசில் மாக்கட்கு வரிசையின் நல்கிப்
பணியியர் அத்தை நின் குடையே, முனிவர்
முக்கண் செல்வர் நகர்வலஞ் செயற்கே;
இறைஞ்சுக, பெருமநின் சென்னி, சிறந்த
நான்மறை முனிவர் ஏந்துகை எதிரே;

வாடுக, இறைவ நின் கண்ணி, ஒன்னார்
நாடுசுடு கமழ்புகை எறித்த லானே;
செலீஇயர் அத்தை, நின் வெகுளி, வால்இழை
மங்கையர் துனித்த வாள்முகத்து எதிரே;

ஆங்க, வென்றி எல்லாம் வென்றுஅகத்து அடக்கிய
தண்டா ஈகைத் தகைமாண் குடுமி!
தண்கதிர் மதியம் போலவும் தெறுசுடர்
ஒண்கதிர் ஞாயிறு போலவும்
மன்னிய, பெரும! நீ நிலமிசை யானே

அருஞ்சொற் பொருள்:-

வடாஅது = வடக்கின் கண்ணது
தெனாஅது = தெற்கின் கண்ணது
உரு = அச்சம்
கெழு = பொருந்திய
குணாஅது = கிழக்கின் கண்ணது
குடாஅது = மேற்கின் கண்ணது
தொன்று = பழமை
முதிர் = முதிர்ச்சி
பெளவம் = கடல்
குடக்கு = மேற்கு
புணர் = சேர்க்கை
முறை = ஒழுங்கு
கட்டு = வகுப்பு
நிவத்தல் = உயர்தல்
ஆனிலை உலகம் = பசுக்களின் உலகம் (சொர்கம்)
ஆனாது = அமையாது.
கோல் = துலாக்கோல்
ஞமன் = துலாக்கோலின் முள்முனை
திறம் = பக்கம், கூறுபாடு, வலிமை, குலம்
உறுதல் = நன்மையாதல், பயன்படல்
பணியியர் = தாழ்க
சென்னி = தலை
கண்ணி = தலையில் அணியும் மாலை
ஒன்னார் = பகைவர்
கமழ் = மணக்கும்
செலீஇயர் = செல்வதாக (தணிவதாக)
துனித்த = ஊடிய
வாள் = ஒளி
தண்டா = தணியாத (நீங்காத)
தகை = தகுதி
மாண் = மாட்சிமை பெற்ற
தண் = குளிர்ந்த
தெறு = சுடுகை
மன்னுதல் = நிலைபெறுதல்
மிசை = மேல்பக்கம்

இதன் பொருள்:-

வாடாஅது=====> சிறக்க

வடக்கே பனி நிலைபெற்றிருக்கும் நெடிய மலைக்கு (இமய மலைக்கு) வடக்கிலும், தெற்கே அச்சம் பொருந்திய குமரி ஆற்றுக்குத் தெற்கிலும், கிழக்கே கரையை முட்டும் ஆழமான (தோண்டப்பட்ட) கடலுக்கு கிழக்கிலும், மேற்கே மிகப் பழமையான கடலுக்கு மேற்கிலும், நிலம், ஆகாயம், சுவர்க்கம் என்று சேர்ந்துள்ள மூன்றில், நிலத்திற்குக் கீழும், சுவர்க்கத்திற்கு மேலேயும் அடங்காது உன்னைப்பற்றிய அச்சமும் உன் புகழும் பெருகி, பெரிய பொருள்களைச் சமமாக ஆராயும் துலாக்கோல் (தராசு) போல் ஒரு பக்கம் சாயாது இருப்பாயாக. உன் படை, குடி முதலியன சிறப்பதாக.

செய்வினைக்கு=====> வாள்முகத்து எதிரே

உன் செயலை எதிர்த்த உன் பகைவர் நாட்டில் கடல் புகுந்தது போல் பெருமளவில் உன் படையையும், சிறிய கண்களையுடைய யானைகளையும் செலுத்தி, அடர்ந்த பசுமையான விளைநிலம் மற்றும் ஊர்ப்புறங்களையும், பாதுகாக்கும் கடத்தற்கரிய அரண்களையும் அழித்து, அவற்றுள் அடங்கிய அழகுடன் செய்யப்பட்ட அணிகலன்களைப் பரிசிலர்க்கு அவர்கள் தகுதிக்கேற்ப அளிப்பாயாக. சடைமுடி தரித்த, மூன்று கண்களையுடைய சிவபெருமான் கோயிலை வலம்வரும் பொழுது மட்டும் உன் கொற்றக்குடை தாழட்டும். சிறந்த நான்கு வேதங்களைக் கற்ற அந்தணர்கள் தங்கள் கைகளை உயர்த்தி உன்னை வாழ்த்தும் பொழுது மட்டும் உன் தலை வணங்கட்டும். பகைவர்களின் நாட்டில் (உன்னால் போரில்) மூட்டப்பட்ட தீயினால் மட்டும் உன் தலையில் உள்ள மாலை வாடட்டும். தூய வேலைப்பாடுகள் நிறைந்த அணிகலன்கள் அணிந்த மகளிர் உன்னோடு ஊடும் பொழுது மட்டும் அவர்கள் எதிரில் உன் கோபம் தணியட்டும்.

ஆங்க, வென்றி=====> நிலமிசை யானே

அடையவேண்டிய வெற்றிகளை எல்லாம் அடைந்தும் மனத்தில் அடக்கத்தோடும் குறையாத ஈகைக் குணத்தோடும் உள்ள மாட்சிமை பொருந்திய குடுமி!தலைவா!, நீ குளிர்ந்த சுடருடைய திங்களைப் போலவும், வெப்பமான சுடருடைய கதிரவனைப் போலவும் இந்நிலத்தில் நிலைபெற்று வாழ்வாயாக

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #6 on: February 08, 2013, 06:30:13 PM »
புறநானூறு, 7.
பாடியவர் : கருங்குழல் ஆதனார்.
பாடப்பட்டோன் : சோழன் கரிகாற் பெருவளத்தான்.
திணை : வஞ்சி.
துறை: கொற்ற
வள்ளை: மழபுல வஞ்சியும் ஆம்.
=======================================

களிறு கடைஇய தாள்,
கழல் உரீஇய திருந்துஅடிக்,
கணை பொருது கவிவண் கையால்,
கண் ஒளிர்வரூஉம் கவின் சாபத்து

மா மறுத்த மலர் மார்பின்,
தோல் பெயரிய எறுழ் முன்பின்,
எல்லையும் இரவும் எண்ணாய், பகைவர்
ஊர்சுடு விளக்கத்து அழுவிளிக் கம்பலைக்

கொள்ளை மேவலை; ஆகலின், நல்ல
இல்ல ஆகுபவால் இயல்தேர் வளவ!
தண்புனல் பரந்த பூசல் மண் மறுத்து
மீனின் செறுக்கும் யாணர்ப்
பயன்திகழ் வைப்பின், பிறர் அகன்றலை நாடே.

அருஞ்சொற்பொருள்:-

கடைஇ = செலுத்தி
கடைஇய = செலுத்திய
தாள் = கால்
உரீஇ = உருவி
திருந்துதல் = ஒழுங்குபடுதல், அழகுபடுதல்
பொருதல் = பொருந்தல்
பொருது = போர்செய்து
கவிதல் = வளைதல்
வண்மை = வள்ளல் தன்மை
கவின் = அழகிய
சாபம் = வில்.
மா = திருமகள், பெரிய, பரந்த
மறுத்த = நீக்கிய
தோல் = யானை
பெயர்த்தல் = நிலை மாறச் செய்தல்
எறுழ் = வலிமை
முன்பு = வலிமை
எல்லை = பகற்பொழுது
விளக்கம் = ஒளி
விளி = கூப்பிடு
கம்பலை = ஒலி
மேவல் = ஆசை
இயல் = இலக்கணம்
பூசல் = பெரிதொலித்தல், பலரறிய வெளிப்படுதல்
செறுத்தல் = அடக்குதல்
யாணர் = புது வருவாய்
வைப்பு = ஊர்
அகலல் = விரிதல்
தலை = இடம்.

இதன் பொருள்:-

களிறு=====> சாபத்து

யானையைச் செலுத்திய கால்களும் வீரக்கழல்கள் உராய்ந்த அடிகளும், அம்பு தொடுத்துக் குவிந்த கையும், கண்ணைக் கவரும் ஒளியுடன் கூடிய வில்லும்

மா மறுத்த=====> கம்பலைக்

திருமகள் விரும்பும் அகன்ற மார்பும், யானையை வெல்லும் வலிமையும் உடையவனே! இரவு பகல் என்று கருதாமல் பகவரின் ஊரைச் சுடும் தீயின் ஒளியில், அங்குள்ளவர்கள் கதறி அழுது ஒலி யெழுப்பமாறு

கொள்ளை=====> நாடே

அவர்கள் நாட்டைக் கொள்ளை அடிப்பதில் நீ விருப்பமுடையவன். ஆகவே, குளிர்ந்த நீர் பெருகியோடும் உடைப்புகளை மண்ணால் அடைக்காமல் மீனால் அடைக்கும் புதிய வருவாயினையுடைய பயனுள்ள ஊர்களையுடைய அகன்ற இடங்களுடன் கூடிய உன் பகவர்களின் நாட்டில் நல்ல பொருள்கள் இல்லாமல் போயின. நன்கு செய்யப்பட்ட தேர்களையுடைய வளவனே!

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #7 on: February 08, 2013, 06:31:58 PM »


புறநானூறு, 8.(கதிர்நிகர் ஆகாக் காவலன்)
பாடியவர் : கபிலர்.
பாடப்பட்டோன் : சேரமான் கடுங்கோ வாழியாதன்
திணை : பாடாண்.
துறை: இயன் மொழி; பூவை நிலையும் ஆகும்.
======================================

வையம் காவலர் வழிமொழிந்து ஒழுகப்
போகம் வேண்டிப் பொதுச்சொல் பொறாஅது
இடம் சிறிது என்னும் ஊக்கம் துரப்ப
ஒடுங்கா உள்ளத்து ஓம்பா ஈகைக்
கடந்து அடு தானைச் சேரலாதனை
யாங்கனம் ஒத்தியோ, வீங்குசெலல் மண்டிலம்!
பொழுதுஎன வரைதி; புறக்கொடுத்து இறத்தி;
மாறி வருதி; மலைமறைந்து ஒளித்தி;
அகல்இரு விசும்பி னானும்
பகல்விளங் குதியால் பல்கதிர் விரித்தே.

அருஞ்சொற்பொருள்:-

காவலர் = அரசர்
வழிமொழிதல் = வழிபாடு கூறுதல்
போகம் = இன்பம்
துரப்புதல் = துரத்துதல், முடுக்குதல்
ஒடுங்கா = சுருங்காத
ஓம்புதல் = பாதுகாத்தல்
கடத்தல் = போர் செய்தல்
அடுதல் = கொல்லுதல்
வீங்கு = மிக்க
செலவு = பயணம்
மண்டிலம் = வட்டம்
வரைதல் = நிர்ணயித்தல்
இறத்தல் = நீங்குதல், கடத்தல்
அகல் = அகன்ற

இதன் பொருள்:-

பெரிய வட்டவடிவமான பாதையில் செல்லும் கதிரவனே! உலகைக் காக்கும் மன்னர்கள் பலரும் வழிபட்டு நடக்க, இன்பத்தை விரும்பி, இவ்வுலகு அனைவருக்கும் பொது என்ற சொல் பொறுக்காமல், தன் நாடு சிறியது என்ற எண்ணத்தால் துரத்தப்பட்டு, ஊக்கமுடைய உள்ளத்தையும், குறையாத ஈகையையும் பகைவரை வெல்லும் படையையும் உடையவன் சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன். உனக்குப் பகல் இரவு என்ற எல்லை உண்டு; பகல் முடிந்ததும் புறமுதுகிட்டு ஓடுவாய்; மாறி மாறி வருவாய்; மலைகளில் மறைந்து விடுவாய்; அகன்ற, பெரிய ஆகாயத்தில் பகலில் மட்டும் பல கதிர்களை விரித்து விளங்கும் நீ, எவ்வாறு சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதனுக்கு நிகராவாய்?

பாடலின் பின்னணி

கதிரவனோடு சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதனை ஒப்பிட்டு, கதிரவன் சேரமானுக்கு இணையானவன் இல்லை என்று இப்பாடலில் கபிலர் கூறுகிறார்.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #8 on: February 08, 2013, 06:33:24 PM »
புறநானூறு, 9.
பாடியவர் : நெட்டிமையார்.
பாடப்பட்டோன் : பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி.
திணை : பாடாண்.
துறை: இயன் மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.
=========================================

ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்
தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்

எம்அம்பு கடிவிடுதும் நும்அரண் சேர்மின்என
அறத்துஆறு நுவலும் பூட்கை மறத்தின்
கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும்
எங்கோ வாழிய குடுமி; தங்கோச்
செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த
முந்நீர் விழவின் நெடியோன்
நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே.

அருஞ்சொற்பொருள்:-

ஆன் = பசு
இயல் = தன்மை
ஆனியல் (ஆன்+இயல்) = பசு போன்ற தன்மை.
பேணுதல் = பாதுகாத்தல்.
இறுத்தல் = செலுத்தல்.
கடி = விரைவு
அரண் = காவல்.
நுவல் = சொல்
பூட்கை = கொள்கை, மேற்கோள்.
மீ = மேலிடம், உயர்ச்சி
மீமிசை = மேலே.
செந்நீர் = சிவந்த தன்மையுடைய (சிவந்த)
பசும்பொன் = உயர்ந்த பொன்
வயிரியர் = கூத்தர்.
முந்நீர் = கடல்
விழவு = விழா
நெடியோன் = உயர்ந்தவன் (பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியின் முன்னோர்களில் ஒருவன்)
பஃறுளி = பழந்தமிழ் நாட்டிலிருந்த ஓர் ஆற்றின் பெயர்

இதன் பொருள்:-

ஆவும்=====> தீரும்

பசுக்களும், பசுபோன்ற இயல்புடைய பார்ப்பன மக்களும், பெண்டிரும், பிணியுடையோரும், இறந்தவர்களுக்கு இறுதிக் கடன் செய்வதற்கு நல்ல புதல்வர்கள் இல்லாத ஆண்களும்.

எம்அம்பு=====> மணலினும் பலவே

பாதுகாவலான இடத்தைச் சென்றடையுங்கள். விரைவில் எங்கள் அம்புகளை ஏவப் போகிறோம்” என்று அறநெறி கூறும் கொள்கை உடையவனே! கொல்கின்ற வலிய யானையின் மேல் உள்ள உன் கொடி வானில் நிழல் பரவச் செய்கிறது. எங்கள் அரசே! குடுமி! நீ வாழ்க! செம்மையான உயர்ந்த பொன்னைக் கூத்தர்க்கு அளித்துக் கடல் விழா எடுத்த உன் முன்னோன் நெடியோனால் உண்டாக்கப்பட்ட பஃறுளி ஆற்று மணலினும் பல காலம் நீ வாழ்க!

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #9 on: February 08, 2013, 06:34:45 PM »


புறநானூறு, 10.(குற்றமும் தண்டனையும்)
பாடியவர் : ஊன்பொதி பசுங்குடையார்.
பாடப்பட்டோன் : சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி.
திணை : பாடாண்.
துறை: இயன் மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.
=========================================

வழிபடு வோரை வல்லறி தீயே;
பிறர்பழி கூறுவோர் மொழிதே றலையே;
நீமெய் கண்ட தீமை காணின்
ஒப்ப நாடி அத்தக ஒறுத்தி;
வந்து, அடி பொருந்தி முந்தை நிற்பின்
தண்டமும் தணிதிநீ பண்டையிற் பெரிதே;
அமிழ்துஅட்டு ஆனாக் கமழ்குய் அடிசில்
வருநர்க்கு வரையா வசையில் வாழ்க்கை
மகளிர் மலைத்தல் அல்லது மள்ளர்
மலைத்தல் போகிய சிலைத்தார் மார்ப;
செய்து இரங்காவினைச் சேண்விளங் கும்புகழ்
நெய்தலங் கானல் நெடியோய்!
எய்த வந்தனம்யாம் ஏத்துகம் பலவே.

அருஞ்சொற் பொருள்:-

வல் = விரைவு
தேறல் = தெளிதல்.
ஒறுத்தல் = தண்டித்தல்.
அடுதல் = சமைத்தல்
ஆனாமை = தணியாமை
கமழ்தல் = மணத்தல்
குய் = தாளிதம்
அடிசில் = சோறு, உணவு.
வரை = அளவு
வரையா = குறையாத, அளவில்லாத
வசை = பழி.
மலைத்தல் = போர்செய்தல்
விரோதித்தல்
மள்ளர் = வலிமையுடையவர்.
சிலை = வானவில்
தார் = மாலை.
இரங்கல் = உள்ளம் உருகுதல் (வருந்துதல்)
சேண் = தூரம்.
நெடியோன் = பெரியோன்.
எய்துதல் = அணுகுதல், அடைதல்
ஏத்துதல் = புகழ்தல்.

இதன் பொருள்:-

உன்னை வழிபடுவோரை நீ விரைவில் அறிவாய். பிறர்மீது குற்றம் கூறுவோர் சொல்லை நீ ஏற்றுக் கொள்ள மாட்டாய். உண்மையிலே ஒருவன் செய்தது தவறு (தீமை) என்று நீ கண்டால் நீதி நூலுக்கு ஏற்ப ஆராய்ந்து தகுந்த முறையில் அவனைத் தண்டிப்பாய். தவறு செய்தவர்கள், உன் முன்னர் வந்து அடிபணிந்து நின்றால் நீ முன்பு அளித்த தண்டனையைப் பெரிதும் குறைப்பாய். அமிழ்தத்தைச் சேர்த்துச் சமைத்தது போல் உண்ணத் தெவிட்டாத மணம் கமழும் தாளிதத்தோடு கூடிய உணவை வருவோர்க்கு குறைவின்றி வழங்கும் பழியற்ற இல்வாழ்க்கை நடத்தும் உன் மகளிர் ஊடல் செய்வதன்றி, பகை வேந்தர் உன்னோடு போர் செய்வதில்லை. வானவில் போன்ற மாலையை அணிந்த மார்பையுடையவனே! வருந்தத்தக்க செயலைச் செய்யாத தன்மையும், பரந்த புகழும் உடையவனே! நெய்தலங்கானம் என்னும் ஊரைச் சார்ந்த பெரியோனே! யாம் உன்னை அணுகி வந்தோம். உன்னைப் பலவாறாகப் புகழ்கிறோம்.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #10 on: February 08, 2013, 06:36:19 PM »


புறநானூறு, 11.(பெற்றனர்! பெற்றிலேன்!)
பாடியவர் : பேய்மகள் இளவெயினியார்.
பாடப்பட்டோன் : சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ.
திணை : பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: பரிசில் கடாநிலை. பரிசில் விரும்பிப் புரவலரிடம் சென்று தன் விருப்பத்தைக் கூறுதல்.
=========================================

அரி மயிர்த் திரள் முன்கை
வால் இழை, மட மங்கையர்
வரி மணற் புனைபாவைக்குக்
குலவுச் சினைப் பூக் கொய்து
தண் பொருநைப் புனல் பாயும்

விண் பொருபுகழ், விறல் வஞ்சிப்
பாடல் சான்ற விறல்வேந் தனும்மே
வெப் புடைய அரண் கடந்து
துப்புறுவர் புறம்பெற் றிசினே;
புறம் பெற்ற வய வேந்தன்,

மறம் பாடிய பாடினி யும்மே
ஏர் உடைய விழுக் கழஞ்சின்
சீர் உடைய இழை பெற்றிசினே;
இழை பெற்ற பாடி னிக்குக்
குரல் புணர்சீர்க் கொளைவல்பாண் மகனும்மே

என ஆங்கு,
ஒள்அழல் புரிந்த தாமரை
வெள்ளி நாரால் பூப்பெற் றிசினே.

அருஞ்சொற் பொருள்:-

அரி = மென்மை
திரள் = திரண்ட
வால் = தூய
இழை = அணிகலன்கள்
புனை = அலங்காரம்
குலவு = வளைவு
சினை = மரக்கிளை
பொருதல் = முட்டுதல்
விறல் = வெற்றி
வஞ்சி = கரூர், சேர நாடு
சான்ற = அமைந்த
வெப்பு = வெம்மை
கடந்து = அழித்து
துப்பு = பகை
உறுதல் = பொருந்துதல்
வயம் = வலிமை
ஏர் = தோற்றப் பொலிவு
விழு = சிறந்த
கழஞ்சு = பன்னிரண்டு பணவெடை அளவு
சீர் = அழகு
இழை = அணிகலன்கள்
குரல் = ஒலி, முதல் இடம்
சீர் = ஓழுங்கு
கொளை = இசை, தாளம் போடுதல்
வல் = திறமை
ஒள் = ஒளி
அழல் = நெருப்பு, வெப்பம்.

இதன் பொருள்:-

அரி மயிர்=====> புனல் பாயும்

மென்மையான மயிர்களுடைய திரண்ட முன்கையையும் தூய அணிகலன்களையும் உடைய இளம்பெண்கள் ஆற்றங்கரையில் இருந்த மணலால் செய்த பாவைக்கு வளைந்த கிளைகளிலிருந்து கொய்த மலர்களைச் சூடுகிறார்கள். குளிர்ந்த ஆன் பொருநை ஆற்றில் பாய்ந்து விளையாடுகிறார்கள்

விண் பொருபுகழ்=====> வேந்தன்

அத்தகைய, வானளாவிய புகழும் வெற்றியும் பொருந்திய வஞ்சி நகரத்தில், புலவர்களால் புகழ்ந்து பாடும், வெற்றியுடைய வேந்தன் சேரமான் பெருங்கடுங்கோ. அவன், பகைவர்களின் வலிய அரண்களை அழித்து அவர்களைப் புறங்காட்டி ஒடவைத்த வலிமை பொருந்திய வேந்தன்

மறம் பாடிய=====> பூப்பெற் றிசினே

அவன் வீரத்தைப் புகழ்ந்து பாடிய பெண், தோற்றப் பொலிவமைந்த சிறந்த பொன் அணிகலன்களைப் பரிசாகப் பெற்றாள். அவ்வணிகலன்களைப் பெற்ற பெண்ணின் பாடலுக்கு ஏற்ப இசையோடும் தாளத்தோடும் இணைந்து பாடிய பாணன் வெள்ளி நாரால் தொடுத்த ஒளி மிகுந்த பொன்னாலான தாமரை மலர்களைப் பரிசாகப் பெற்றான்.

சிறப்புக் குறிப்பு: பாடினியும் பாணனும் பரிசு பெற்றார்கள்; ஆனால் தனக்குப் பரிசுகள் ஏதும் கிடைக்கவில்லையே என்று இளவெயினியார் கூறாமல் கூறுவதுபோல் இப்பாடல் அமைந்துள்ளது.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #11 on: February 08, 2013, 06:37:44 PM »


புறநானூறு, 12.(அறம் இதுதானோ?)
பாடியவர் : நெட்டிமையார்.
பாடப்பட்டோன் : பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி.
திணை : பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன்மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.
=========================================

பாணர் தாமரை மலையவும், புலவர்
பூநுதல் யானையோடு புனைதேர் பண்ணவும்
அறனோ மற்றிது விறல்மாண் குடுமி?
இன்னா ஆகப் பிறர் மண் கொண்டு
இனிய செய்தி நின் ஆர்வலர் முகத்தே.

அருஞ்சொற்பொருள்:-

மலைதல் = அணிதல்
பூ = பட்டம்
புனை = அலங்காரம்
பண்ணல் = செய்தல், அலங்கரித்தல்
விறல் = வெற்றி
மாண் = மாட்சி
இன்னா = துயருண்டாகுமாறு
ஆர்வலர் = பரிசிலர்
முகம் = இடம்

இதன் பொருள்:-

வெற்றியில் சிறந்த குடுமி! பகைவர்களுக்குக் கொடியவனாக இருந்து, அவர் நாட்டை வென்று, உன்னை விரும்புபர்களுக்கு இன்முகத்தோடு இனியன செய்கிறாயே! பாணர்களுக்குப் பொன்னாலான தாமரை மலர்களையும் புலவர்களுக்குப் பட்டம் சூட்டிய யானைகளையும் அலங்கரிக்கப்பட்ட தேர்களையும் வழங்குகிறாயே! இது அறமாகுமோ?

சிறப்புக் குறிப்பு: இப்பாடலில், நெட்டிமையார் பாண்டியனைப் பழிப்பதுபோல் புகழ்கிறார். அவன் அறத்தை இகழ்வது போல, அவன் வீரத்தையும், வள்ளன்மையும் புகழ்ந்தது.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #12 on: February 08, 2013, 06:39:00 PM »
புறநானூறு, 13.(நோயின்றிச் செல்க)
பாடியவர் : உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
பாடப்பட்டோன் : சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி.
திணை : பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: வாழ்த்தியல். தலைவனை வாழ்த்துதல்
=========================================

தமிழர்களின் அறத்தை சிறப்பாகப் பாடும் ஒரு செய்யுள் இது.

[கருவூர் வேண்மாடத்திலிருந்து காலத்து, ஊர்ந்து வந்த யானை மதம் பட்டதினால் கருவூரிள் வந்தடைந்த சோழனைக் காட்டி, "இவன் யார்" எனச் சேரமான் கேட்பப், புலவர் கூறியது இச் செய்யுள்.]

"இவன்யார்" என்குவை ஆயின், இவனே
புலிநிறக் கவசம் பூம்பொறி சிதைய
எய்கணை கிழித்த பகட்டுஎழில் மார்பின்
மறலி அன்ன களிற்றுமிசை யோனே;
களிறே, முந்நீர் வழங்கு நாவாய் போலவும்
பன்மீன் நாப்பண் திங்கள் போலவும்
சுறவுஇனத்து அன்ன வாளோர் மொய்ப்ப
மரீஇயோர் அறியாது மைந்துபட் டன்றே;
நோயிலன் ஆகிப் பெயர்கதில் அம்ம,
பழன மஞ்ஞை உகுத்த பீலி
கழனி உழவர் சூட்டொடு தொகுக்கும்
கொழுமீன் விளைந்த கள்ளின்
விழுநீர் வேலி நாடுகிழ வோனே.

அருஞ்சொற்பொருள்:-

நிறம் = தோல்
கவசம் = போர் வீரன் அணியும் இரும்புச் சட்டை; பூம்பொறி = அழகிய தோலின் இணைப்பு
சிதைத்தல் = அழித்தல்
பகடு = வலிமை
எழில் = அழகு
மறலி = எமன்
மிசை = மேலே
முந்நீர் = கடல்
வழங்குதல் = செல்லுதல்
நாவாய் = மரக்கலம்
நாப்பண் = நடு (இடையே).
சுறவு = சுறா மீன்
மொய்த்தல் = சூழ்தல்
மரியவர் = பின்பற்றி நடப்பவர் (பாகர்)
மைந்து = பித்து (மதம்)
பெயர்தல் = திரும்புதல்
தில் = விழைவை உணர்த்தும் அசைச்சொல்
பழனம் = வயல்
மஞ்ஞை = மயில்
பீலி = மயிலிறகு
சூடு = நெற்கதிற்
கொழுமீன் = ஒருவகை மீன், கொழுத்த மீன்
விளைந்த = முதிர்ந்த
விழு = சிறந்த (மிகுந்த)
கிழவோன் = உரிமையுடையவன்

இதன் பொருள்:-

இவன்யார்=====> நாவாய் போலவும்

”இவன் யார்” என்று கேட்கிறாயா? இவன் அம்புகளால் துளைக்கப்பட்ட புள்ளிகளுடன் சிதைந்து காணப்படும் புலித்தோலாலாகிய கவசத்தைத் தன் வலிய அழகிய மார்பில் அணிந்து கூற்றுவன் போல் யானைமீது வருகிறான். அந்த யானை வருவது கடலில் ஒருமரக்கலம் வருவதைப்போலவும்

பன்மீன்=====> பெயர்கதில் அம்ம

பல விண்மீன்களுக்கு நடுவே விளங்கும் திங்களைப்போலவும் காட்சி அளிக்கிறது. அந்த யானையைச் சுற்றிலும் சுறாமீன்களின் கூட்டம் போல் வாளேந்திய வீரர்கள் சூழ்ந்துள்ளனர். அவர்களிடையே உள்ள பாகர்கள் அறியாமலேயே அந்த யானை மதம் கொண்டது.

பழன மஞ்ஞை=====> நாடுகிழ வோனே

இவன் நாட்டில் வயல்களில் மயில்கள் உதிர்த்த தோகையை உழவர்கள் நெற்கதிர்களோடு சேர்த்து அள்ளிச் செல்வார்கள். இவன் கொழுத்த மீனையும் முதிர்ந்த கள்ளையும், நீரை வேலியாகவும் உள்ள வளமான நாட்டுக்குத் தலைவன். இவன் இன்னலின்றித் திரும்பிச் செல்வானாக. (பகைவன் எனினும், அந் நிலையில் அவனைத் துன்பமின்றிச் செல்ல விடுமாறு, அறநெறியைக் கூறுகிறார் புலவர்)

சிறப்புக் குறிப்பு : தமிழர்கள் மரக்கலம்(கப்பல்) அமைத்து கடலில் பயணம் செய்துதுள்ளனர் என்பது பலப் புறநானூறு பாடல்களில் அறியலாம். அவற்றில் இந்தப் பாடலும் ஒன்று. வணிகம் மற்றும் போர் கப்பல் அன்றே தமிழர்கள் வைத்திருப்பது பெருமைக்குறியது.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #13 on: February 08, 2013, 06:40:21 PM »
புறநானூறு, 14.(மென்மையும்! வன்மையும்!)
பாடியவர் : கபிலர்.
பாடப்பட்டோன் : சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன்.
திணை : பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன்மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.
=========================================

[ஒருசமயம், சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன் கபிலரின் கையைப் பிடித்தான். அவர் கை மிகவும் மென்மையாக இருப்பதைக் கண்ட அவன் மிகவும் வியப்படைந்தான். அவன் கபிலரைப் பார்த்து, “தங்கள் கைகள் ஏன் இவ்வளவு மென்மையாக இருக்கின்றன?” என்று கேட்டான். இப்பாடல் மூலம் சேரனின் கேள்விக்குக் கபிலர் விடை அளிக்கிறார்]

கடுங் கண்ண கொல் களிற்றான்
காப் புடைய எழு முருக்கிப்
பொன்இயல் புனை தோட்டியான்
முன்பு துரந்து, சமந் தாங்கவும்
பார் உடைத்த குண்டு அகழி

நீர் அழுவம் நிவப்புக் குறித்து
நிமிர் பரிய மா தாங்கவும்
ஆவம் சேர்ந்த புறத்தை தேர்மிசைச்
சாப நோன்ஞாண் வடுக்கொள வழங்கவும்
பரிசிலர்க்கு அருங்கலம் நல்கவும், குரிசில்!

வலிய ஆகும் நின் தாள்தோய் தடக்கை;
புலவு நாற்றத்த பைந்தடி
பூ நாற்றத்த புகை கொளீஇ ஊன்துவை
கறிசோறு உண்டு வருந்துதொழில் அல்லது
பிறிதுதொழில் அறியா ஆகலின் நன்றும்

மெல்லிய பெரும தாமே! நல்லவர்க்கு
ஆரணங்கு ஆகிய மார்பின் பொருநர்க்கு
இருநிலத்து அன்ன நோன்மைச்
செருமிகு சேஎய் நின் பாடுநர் கையே!

அருஞ்சொற்பொருள்:-

கடுங்கண்ண = கடும்+கண்ண = கொடிய கண்ணையுடைய
காப்பு = காவலான இடம்
எழு = தூண், கணைய மரம்
பொன் = இரும்பு
புனை = அழகு
தோட்டி = அங்குசம்
முன்பு = வலிமை
துரந்து = குத்தி
சமந்தாங்குதல் = வேண்டுமளவில் பிடித்து இழுத்தி நிறுத்துதல்
பார் = நிலம், பூமி
குண்டு = ஆழம்
அழுவம் = பரப்பு
நிவப்பு = உயர்ச்சி
நிமிர்தல் = ஓடல்
பரிதல் = ஓடுதல்
மா = குதிரை
ஆவம் = அம்புறாத்தூணி
சாவம் = வில்
நோன் = வலி
ஞாண் = கயிறு
வடு = தழும்பு
வழங்குதல் = செலுத்துதல்
குரிசில் = தலைவன்
தோய்ந்த = பொருந்திய
தட = பெரிய
புலவு = ஊன்
பை = வலிமை (கொழுத்த)
தடி = தசை
கொளீஇ = கொளுத்தி
துவை = துவையல்
நன்றும் = மிக
ஆரணங்கு = ஆற்றுதற்கு அரிய வருத்தம்
நல்லவர் = பெண்கள்
பொருநர் = பகைவர்
இரு = பெரிய
நோன்மை = வலிமை
செரு = போர்
சேய் = முருகன்

இதன் பொருள்:-

கடுங் கண்ண=====> குரிசில்!

கொடிய கண்களையுடைய, கொல்லும் யானைகளால், பாதுகாப்பிற்காகப் பகைவர்கள் வைத்திருந்த கணையமரங்களை முறித்து, இரும்பால் செய்யப்பட்ட அழகிய அங்குசத்தால் வலிமையாகக் குத்தி யானைகளைப் பிடித்து இழுத்து நிறுத்துகிறாய். நிலத்தைத் தோண்டி உருவாக்கப்பட்ட அகழிகளின் நீர்ப்பரப்புகளின் ஆழம் கருதி அவைகளின் மீது செல்லாமல் விரைவாக ஓடும் குதிரைகளைக் கடிவாளத்தைப் பிடித்து இழுத்து நிறுத்துகிறாய். அம்புறாத்தூணியை முதுகில் பொருத்தித் தேர் மேலிருந்து வில்லின் நாணால் கையில் வடு உண்டாகுமாறு அம்பைச் செலுத்துகிறாய். மற்றும், பரிசிலர்க்குப் பெறுதற்கரிய அணிகலன்களை அளிக்கிறாய், அரசே!

வலிய ஆகும்=====> பாடுநர் கையே!

இத்தகைய செயல்களால் உன் முழங்கால் வரை நீண்ட பெரிய கைகள் வலிமையாக உள்ளன. புலால் மணக்கும் கொழுத்த தசையைப் பூ மணமுள்ள புகையுடன் கூடிய தீயினால் கொளுத்திச் சமைத்த புலாலும், துவையலும், கறியும் சோறும் உண்ணுவதைத் தவிர, உன்னைப் பாடுபவர்கள் வேறு வலிய செயல்களைத் தங்கள் கைகளால் செய்யாததால், அவர்களின் கைகள் மிகவும் மென்மையானதாக உள்ளன. அரசே! பெண்டிர்க்கு வருத்ததைத் தரும் மார்பும், பகைவருடன் வலிய நிலம் போன்ற திண்மையோடு போர்புரியும் முருகனைப் போன்ற ஆற்றலும் உடையவனே!

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #14 on: February 08, 2013, 06:41:59 PM »


புறநானூறு, 15.(எதனிற் சிறந்தாய்?)
பாடியவர் : நெட்டிமையார்.
பாடப்பட்டோன் : பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி.
திணை : பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன்மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.
=========================================

கடுந்தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண்
வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டிப்
பாழ்செய் தனை, அவர் நனந்தலை நல்லெயில்;
புள்ளினம் இமிழும் புகழ்சால் விளைவயல்
வெள்ளுளைக் கலிமான் கவிகுளம்பு உகளத்

தேர்வழங் கினைநின் தெவ்வர் தேஎத்துத்;
துளங்கு இயலாற், பணை எருத்தின்
பா வடியாற்,செறல் நோக்கின்
ஒளிறு மருப்பின் களிறு அவர
காப் புடைய கயம் படியினை;

அன்ன சீற்றத்து அனையை ஆகலின்
விளங்குபொன் எறிந்த நலங்கிளர் பலகையடு
நிழல்படு நெடுவேல் ஏந்தி ஒன்னார்
ஒண்படைக் கடுந்தார் முன்புதலைக் கொண்மார்
நசைதர வந்தோர் நசைபிறக்கு ஒழிய

வசைபட வாழ்ந்தோர் பலர்கொல்? புரையில்
நற்பனுவல் நால்வேதத்து
அருஞ்சீர்த்திப் பெருங்கண்ணுறை
நெய்ம் மலி ஆவுதி பொங்கப் பன்மாண்
வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி

யூபம் நட்ட வியன்களம் பலகொல்?
யாபல கொல்லோ? பெரும! வார் உற்று
விசிபிணிக் கொண்ட மண்கனை முழவின்
பாடினி பாடும் வஞ்சிக்கு
நாடல் சான்ற மைந்தினோய்! நினக்கே.

அருஞ்சொற்பொருள்:-

கடு = விரைவு
குழித்த = குழியாக்கிய
ஞெள்ளல் = தெரு
வெள் = வெளுத்த
புல்லினம் = புல்+இனம் = இழிந்த கூட்டம்
நனம் = அகற்சி (அகலம்)
தலை = இடம்
எயில் = அரண்
புள்ளினம் = பறவைகள்
இமிழும் = ஒலிக்கும்
உளை = பிடரிமயிர்
கலிமான் = குதிரை
உகளல் = தாவுதல்
தெவ்வர் = பகைவர்
துளங்கல் = அசைதல்
இயல் = தன்மை
பணை = பெருமை
எருத்து = கழுத்து
பா = பரந்த
செறுதல் = கோபித்தல்
மருப்பு = கொம்பு(தந்தம்)
கயம் = வற்றாத குளம்
கிளர் = மேலெழும்பு
எறிதல் = அடித்தல்
ஒன்னார் = பகைவர்
கடுந்தார் = விரைவாக செல்லும் படை
முன்பு = வலிமை
தலைக்கொள்ளுதல் = கெடுத்தல்
நசை = ஆசை
தருதல் = அழைத்தல்
பிறக்கு = முதுகு, பின்புறம்
பனுவல் = நூல்
சீர்த்தி = மிகுபுகழ்
கண்ணுறை = மேலே தூவுவது
மலிதல் = மிகுதல், நிறைதல்
ஆவுதி = ஆகுதி = ஓமத்தீயில் நெய்யிடுதல்
வீதல் = குறைதல்
யூபம் = தூண்
வியன் = அகன்ற
மிகுந்த
உற்று = பொருந்தி
விசி = கட்டு
கனை = நெருக்கம்
மண்கனை = ஒருவகை மண்ணால் ஆகிய சாந்து
முழவு = முரசு, பறை
வஞ்சி = பகைவர் மீது படையெடுப்பு
நாடல் = நாட்டம் (நோக்கம்)
மைந்து = வலிமை

இதன் பொருள்:-

விரைவாகச் செல்லும் தேர்களால் குழிகள் தோண்டப்பட்ட தெருக்களில், வெண்மையான வாயுள்ள கழுதைகளை ஏரில் பூட்டி, உன் பகைவர்களின் நல்ல அரண்கள் சூழ்ந்த அகன்ற இடங்களைப் பாழ் செய்தாய். பறவைகள் ஒலிக்கும் புகழ் மிகுந்த விளைவயல்களில் வெள்ளைப் பிடரி மயிருடைய குதிரைகளின் குவிந்த குளம்புகள் தாவுமாறு செய்து உன் பகைவர்களின் நாட்டில் தேர்களைச் செலுத்தினாய். பருத்த, அசையும் கழுத்தும், பெரிய காலடிகளும், சினத்துடன் கூடிய பார்வையும், ஒளிரும் தந்தங்களுமுடைய யானைகளை ஏவிப் பகைவர்களின் குளங்களைப் பாழ்செய்தாய். நீ அத்தகைய சீற்றம் உடையாய். ஆதலால், வலிய இரும்பால் செய்யப்பட்ட ஆணியும் பட்டமும் அறையப்பட்ட அழகிய பலகையோடு நிழல் உண்டாக்கும் நெடிய வேலை எடுத்து, உன் பகைவர், ஒளிரும் படைக்கலங்களுடன் கூடிய உன்னுடைய விரைந்து செல்லும் தூசிப்படையின் வலிமையை அழிக்க விரும்பி ஆசையோடு போருக்கு வந்தனர். பின்னர், அந்த ஆசை ஒழிந்து பழியுடன் வாழ்ந்தவர் பலரா? அல்லது குற்றமற்ற நல்ல நூலாகிய வேதத்தில் சொல்லியவாறு அரிய புகழுடைய சுள்ளியும், பொரியும், நெய்யும் இட்டுப் பலவிதமான மாட்சிமைகளும், கேடற்ற சிறப்பும் உடைய யாகங்கள் செய்து, நீ நிறுவிய தூண்கள் நடப்பட்ட அகன்ற வேள்விச்சாலைகளின் எண்ணிக்கை அதிகமா? வாரால் இறுகக் கட்டி, மார்ச்சுனை தடவிய முழவுடன் உன் படையெடுப்புகளைப் புகழ்ந்து பாடும் பாடினியின் பாட்டுக்கேற்ப ஆராய்ந்து அமைந்த வலிமை உடையோய்! இவற்றுள் எதன் எண்ணிக்கை அதிகம்?

சிறப்புக் குறிப்பு: போரில் முன்னணியில் செல்லும் படை தூசிப்படை. பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியின் முன்னணிப்படையிடம் பலரும் தோல்வியுற்றார்கள் என்று இப்பாடலில் நெட்டிமையார் கூறுவதிலிருந்து அவனுடைய முழுப்படையின் வலிமையை எதிர்த்துப் போரிடுவது மிகவும் கடினம்; அவனை எதிர்த்துப் போரில் வெற்றி பெறுபவர்கள் யாரும் இல்லை என்ற கருத்துகளும் இப்பாடலில் மறைந்திருப்பதைக் காணலாம்.