Author Topic: கவிஞர் காசி ஆனந்தன் கவிதை தொகுப்பு  (Read 10500 times)

Offline Global Angel


கால முனிவன் கூற்று

எனது பெயர் காலமுனி
நானின்றேல் உலகினிலோர்
இயக்க மில்லை!

மனித உயிர் படும் பாடும்
மாநிலத்தில் உருவாகும்
மயக்கம் யாவும்

எனதிறைவன் அறிவதுபோல்
இன்னொருவன் அறிவதெனில்
அவன் யானன்றோ?

பனி மலையும் காடுகளும்
அலைந்து வரும் படைநிலையும்
அறிவேன் மக்காள்!

தோளுயர்த்தி உலகாண்ட
தமிழ்ச்சாதி துடிதுடித்து
மாற்றார் தம்மின்

தாளடிக்கீழ் மடிகின்ற
பேரவலம் தாங்காமல்
முழக்கமிட்டு

மாளடித்தால் அடிக்கட்டும்
எனச் சொல்லி விடுதலைக்கு
மார்பு காட்டி

வாளெடுத்துத் தலை தூக்கி
வந்துள்ளீர் நுந்துணிவை
வாழ்த்துகின்றேன்!

செருக்களத்தில் முன்னொருநாள்
மோரியரைச் சிதறடித்தான்
இளஞ்சேட் சென்னி!

பொருப்பெடுத்த தோளுடையான்
குட்டுவனோ வட நாட்டுப்
போரில் வென்றான்!

உருக்கமிலா மாற்றாரைச்
சுந்தர பாண்டியன் ஒருநாள்
அடக்கி ஓய்ந்தான்!

நெருப்பெழுந்த விழியோடு
தமிழ்மறவர் பொருத கதை
நிறைய உண்டே!

முத்தமிழர் வரலாற்றில்
நேற்றுவரை மூண்டெழுந்த
கொடிய போர்கள்

அத்தனையும் யானறிவேன்
தமிழ் மக்காள்... ஆனாலும்
ஒரு சொற் கேளீர்...

பத்தல்ல நூறல்ல
கோடிமுறை போர்க்களங்கள்
பார்த்தேன்... ஆனால்

இத்தகைய படையொன்றை
மாநிலத்தில் இற்றைவரை
கண்டேனில்லை!

வீட்டினிலே பசித்திருந்து
மனையாட்டி வற்றிவிட்ட
வெறும் முலைக்கு

நீட்டுகின்ற பிள்ளையின் கை
தடுத்தழுவாள் என்பதையும்
நினைந்திடாமல்

வாட்டுகின்ற கொடிய பிணி
வறுமையிலுந் தன்மானம்
பெரிதாமென்று

பூட்டுடைத்து விடுதலை நாள்
கொண்டுவரப் புறப்பட்டீர்...
பூரிக்கின்றேன்!

இறப்பதற்கும் சொத்தெல்லாம்
இழப்பதற்கும் அடியுதைகள்
ஏற்பதற்கும்

மறப்போரில் உடற்குருதி
கொடுப்பதற்கும் மலைத்தோளின்
கீழே தொங்கும்

சிறப்புமிகு தடக்கைகள்
அறுந்துபட முழுக்கமிட்டுச்
சிரிப்பதற்கும்

புறப்பட்டீர்... அடடாவோ!
தமிழினத்தின் போர்த்திறத்தை
வாழ்த்துகின்றேன்!

முன்பொருநாள் அரசோச்சி
நானிலத்தின் முறைகாத்த
தமிழர் பண்பை

நன்கறிவேன்! அந்நாளில்
உளம் வருந்தி நலிவுற்றார்
எவருமில்லை!

அன்புடையார் தமிழ்மக்கள்
அவர்மாட்டே நிலைத்திருக்கும்
சிறந்த கொற்றம்

என்பதனால் தமிழாட்சி
வையகத்தில் எழுவதை நான்
அவாவுகின்றேன்...

இப்புவியில் தமிழினத்தார்
பகைவிரட்டி அரசமைப்பார்
எனிலிவ் வையம்

அப்பொழுதே நல்லறத்தின்
வழிநடக்கும்... குறள் படித்தோர்
அமைச்சராவார்!

தப்புமுறை அடக்குமுறை
தறுக்கர்களின் கொடுமையெலாம்
சாய்ந்து போகும்!*

ஒப்பரிய தமிழ்ச்சாதி
எண்டிசையும் உலகினுக்கே
தலைமை தாங்கும்!

கதவு திறந் திருப்பதனைக்
காண்கின்றேன்.... தமிழ்மக்காள்
எனினும் நீவிர்

புதுமனையுள் விடுதலையின்
மாளிகையில் புகுவதெனில்
தடையொன் றுண்டாம்...!

விதியெனுமோர் கொடுங்கிழவி
இடர் புரிவாள்... தமிழினத்தை
விழவும் வைப்பாள்....

எதுவரினும் அஞ்சாதீர்!
எனமொழிந்து காலமுனி
இன்னும் சொல்வான்...
                    

Offline Global Angel


வீரம்

அழிவுற எழுதமிழ்
மாந்தர் களத்தினிலே

சுறவுகள் கடல் மிசை
வெறியொடு சுழல்வன
போலும் சுழல்கின்றார்...

நறநற வென எயி
றொலிசெய மறவர்கள்
ஆட்டம் நடக்குதடா!

புறமெனு மழகிய
தமிழ்க்குல வீரரின்
வாழ்க்கை வீண்போமோ?

மாமலை யொத்தன
தமிழரின் ஓங்கிய
தோள்கள்! சினங்கொண்டு

தாமரை யொத்தன
செந்நிற அழகொடு
விழிகள்! ஓவென்னும்

தீமலை நெருப்பினை
யொத்தன சுழன்றன
வீரர் மூச்சுக்கள்!

தேமதுரத் தமிழ்
உயிரெனக் கொண்டவர்
திரண்டார்! போர் செய்தார்!

தடியடி தலைமிசை
படவிழும் அரவென
வீழ்ந்தார் பகை வீரர்!

இடிபட வேரொடு
விழுமரம் என உடல்
சாய்ந்தார் சிலரங்கே!

அடிபுய லிடைநிலை
கெடுமொரு புவியென
ஆனார்... அம்மம்மா

பொடிபடு தசையுடல்
சுமந்தவர் அழிவுறு
போரை என்னென்பேன்?

தாவிடு வேங்கைகள்
குகையிடை ஒளிந்தன
போலுந் தமிழ்வீரர்

காவிய மார்பிடை
ஒளிந்தன குண்டுகள்!
களத்தே செவ்வானின்

ஓவியம் வரைந்தது
தமிழரின் குங்குமக்
குருதி நீரோட்டம்!

சாவிலும் விடுதலை
பெறுவது மெய்யென
வீழ்ந்தார் தமிழ்நெஞ்சர்!

பறவையின் நிரையென
வானிடை யெழுந்தன
பகைவர் ஊர்திகளே!

சிறகுகள் துகள்பட
அவைமிசை பறந்தன
தமிழர் கருவிகளே!

திறலுடை தமிழரின்
பொறிபல கணைகளை
அள்ளிச் சிதறினவே!

விறகுகள் எனமதில்
வீடுக ளெரிந்தன!
ஊர்கள் வீழ்ந்தனவே!

ஆவியில் இனியது
தமிழென உணர்ந்தவர்
அழகின் வடிவுடையார்...

தேவியர் மான்குலத்
திரளென அமர்க்களம்
ஆடிச் சிவக்கின்றார்!

தாவிடு வேல்விழி
தமிழ்வழி கொண்டவர்
கற்பின் தழல்முன்னே

சாவிடை கொழுநரை
அனுப்பிய பகைவரின்
தானை எரியாதோ?

கொடும்பொறிக் குண்டுகள்
வெடித்தெழ வானகம்
கூந்தல் விரித்தாற்போல்

நெடும்புகை எழுந்தது!
பகைவரின் கொடிகளும்
நெருப்பி லாடினவே!

கடும்புயல் அடித்ததை
நிகர்த்தது களத்திலே
தமிழர் போராட்டம்!

திடும் திடுமென ஒலி
செய்தது பகைவரின்
ஓட்டம் செவியெல்லாம்!

ஆடின கழுகுகள்...
வான்மிசை! அழுகின
பிணத்தின் இரைதேடி

ஓடின நரிகளும்
தெருப்புற நாய்களும்!
ஊரே காடாகி

மூடின பிணங்களின்
விழிகளைக் கரடிகள்
மோந்து களந்தோறும்

தேடின! பூமியின்
திசைகளும் நாறின!
புழுக்கள் திரண்டனவே!
                    

Offline Global Angel


போர்

தெய்வ மாவீரர் தமிழ் வீரர்
திரண்டு களத்தின் கண்ணே

செய்யும் அறப்போரை என்னென்று
தமிழில் செப்புவேனோ?

பெய்யும் மழைத் துளிகளென்னப்
பெருகிக் கொட்டும் மாற்றார்

கையின் குண்டுகளிடையிலே
தமிழர் களித்தாரம்மா!

குண்டின் அடிபட்டார் சில தோழர்
கூட்டஞ் சிறையாடிற்று!

தொண்டர் பலரங்கே தடியாலும்
தூள் தூளானார்! தமிழன்

மண்டையுடைந்ததே கதையெங்கும்!
எனினும் மாற்றார் தானை

கண்டக ‘ட்சியோ சிறிதேனும்
கலங்காத் தமிழர் படையே!

கொள்கை உயிரென நினைக்கின்ற
கூட்டம் உரிமைக் கோயில்

உள்ளே விடுதலை இறையோனை
அடைய ஓடுங் கூட்டம்

வெள்ளை நெஞ்சமும் அறநோக்கும்
அன்பும் கருவிகளாக்கித்

துள்ளுமொரு கூட்டம் பகைவர்க்கு
நடுங்கித் தூங்குமோடா?
                    

Offline Global Angel


தமிழச்சி!

இலங்கை மலைதனிலே... தமிழச்சி!
என்ன துயரெலாம் காணுகின்றாயடி!
முழங்கை வலித்திடவே தேயிலை
முளைகள் பறித்து முகம் சிவப்பாயம்மா!
விலங்கும் உறங்கிநிற்கும் சாமத்தில்
விழித்து நெடுமலை ஏறி இறங்குவாய்!
பழங்கள் பழுத்திடாதோ உன் காலில்?
பச்சைக் குருதிநீர் பாயாதோ கண்மணி?

காலைப் பனிநனைவாய்! என்னம்மா...
காய்ந்து நடுவெயில் தனிலே கருகுவாய்;
பாலை நினைந்தழுவான் உன் பிள்ளை...
பாவி வெறும் முலை நினைந்தழுவாயடி!
ஏழை அடிமையடி தமிழச்சி!
இங்கோர் தமிழுடல் ஏனெடுத்தாயம்மா?
ஊழை நினைந்தழவோ? தமிழனின்
உரிமை இலாநிலை எண்ணி அழவோடி?

காட்டு மலைதனிலே... தமிழச்சி!
காலம் முழுவதும் நீ உழைத்தென்னடி?
ஓட்டைக் குடிசையொன்றும் வாழ்விலே
ஓயா வறுமையும் நோயும் இவையன்றி
தேட்டம் எதுபடைத்தாய்? அடி ஒரு
செம்புப் பணமேனும் தேறியதுண்டோடி?
நாட்டின் முதுகெலும்பே தமிழச்சி!
நானிலம் வாழநீ மாள்வதோ அம்மா?
                    

Offline Global Angel


விடுதலைப் பொன்னாள்

காலங்கனிந்திடும் அழகுதானோ?
படைத்தவன் அருளோ? தமிழ்க்கன்னி
ஞாலம் மகிழ்ந்திட அரசுகொண்டு
வாழும் நாள் அடடா... மலர்ந்தாச்சோ?
கோலம் இதுபெருங் கோலமென்பேன்!
கொடுமைகள் பொடியாயின கண்டீர்!
நீல வான்மிசை தமிழ்நாட்டினர்தம்
கொடிகளும் எழுந்து நிறைந்தனவே!

கூனல் விதிக்கிழவியுடல் தேய்ந்தாள்
நிலைகாணீர்... குடுகுடென ஓடிப்
போன நரிபோலவே போகின்றாள்....
தமிழ் மண்ணின் மனைகள் தெருப்புறங்கள்
ஆன திசைக ளெங்கணுங் கொண்டாட்டம்!
ஒளிப் பந்தல்! அழகின் சிரிப்பம்மா!
மான விடுதலை மலர்ந்த கோலம்
உளங்கண்டு மகிழும் திருநாளோ?

முத்து வளைவுகள்! மணிகள்! பச்சை
மாவிலைப் பந்தல்! முகங்குனியும்
பத்தினிபோல் குலைசரித்த வாழை
தெருப்புறத்தே! கோலம் தரையெல்லாம்!
குத்து விளக்குகள்! மலர்கள்! காற்றில்
எழுந்தாடும் வண்ணக் கொடிக் கூட்டம்!
பத்துத் திசைகளும் அழகுக்காட்சி!
கவிஞன்கண் பார்த்துக் களிப்பதற்கே!

நீள நெடுநாள் அலைந்து களத்தே
போராடி நின்ற தமிழ்மறவர்
ஆள ஒரு நாள் கிடைத்த தென்றே
அணி சேர்ந்து பாடி அகமகிழ்வார்!
பாளையென எழில் முறுவல் விரிப்பர்
இளம் பெண்கள்! அவர் வாய்ப்பனிமுத்தம்
வேளைதொறும் அருந்தி விடுதலை நாள்
களிக்கின்றார் கொழுநர்! விழாவன்றோ?
                    

Offline Global Angel


பெருமூச்சு


வலிபடைத்து முறமெடுத்துப்
புலியடித்த தமிழகம்
கிலிபிடித்த நிலைபடைத்து
வெலவெலத்து வாழ்வதோ?

பகையொ துங்கப் பறைமுழங்கிப்
புகழடைந்த தமிழகம்
கதிகலங்கி விழி பிதுங்கி
நடுநடுங்கி வாழ்வதோ?

படைநடத்தி மலைமுகத்தில்
கொடிபொறித்த தமிழகம்
துடிதுடித்து அடிபிடித்து
குடிகெடுத்து வாழ்வதோ?

கடல் கடந்த நிலமடைந்து
கதையளந்த தமிழகம்
உடல் வளைந்து நிலைதளர்ந்து
ஒளியிழந்து வாழ்வதோ?

மகனிறக்க முலையறுக்க
முடிவெடுத்த தமிழகம்
புகழிறக்க மொழியிறக்க
வெளிநகைக்க வாழ்வதோ?
                    

Offline Global Angel


வீரத்தாய்!

தாலாட்டெனும் தமிழைத்
தவிர்ந்த பிற தமிழனைத்தும்
தமிழே அம்மா!

காலாட்டித் தமிழினத்தார்
கண்மூடி உறங்குதற்கோ
இஃது காலம்?

ஏன் பாட்டி பாடுகிறாய்?
இப்போதே போ! எனது
பிள்ளை கையில்

கூர்ஈட்டி ஒன்றெடுத்துக்
கொடு! களத்தே பாயட்டும்
குருதி வெள்ளம்!

தாயா நான்? யார் சொன்னார்?
தசை கொடுத்தேன்.... அவ்வளவே!
தமிழ்த்தாய் அன்றோ

சேயவனின் உடல் தாங்கும்
செங்குருதி மணி நீரின்
சொந்தக்காரி!

தீயோர் தம் கொடுஞ்சிறையில்
வாடுகிறாள் தமிழன்னை!
சிச்சி... இங்கே

வாய்மூடிக் கண்மூடி
உறங்குதற்கோ வளர்க்கின்றேன்
உதவாப்பிள்ளை!

ஓவென்று வீசுகின்ற
புயல்வெளியே மின்வெளியே
உடைந்து வீழ்ந்து

போமென்று வெடிக்கின்ற
வான்வெளியே இவ்வேளை
புதல்வன் உள்ளே

யாமின்று பாடுகின்ற
தாலாட்டில் உறங்குதற்கு
நீதி யாதோ?

சாவொன்று பாய்ந்து தமிழ்
தனையழிக்க வரும்போதோ
தமிழா தூக்கம்?

தேன்கட்டி தோற்றுப்போம்
இன்தமிழைப் பெற்றெடுத்த
தமிழ்த்தேன் நாடே!

ஏன் தொட்டில் ஆட்டுகிறாய்?
கயிறுகளை அறுத்துவிடு!
பிள்ளை தூங்கும்

பூந்தட்டைச் சிறு பாயை
தலைணையைத் தூக்கி எறி!
இப்போதே போ..

நீந்தட்டும் செந்நீரில்
உன்பிள்ளை! நிகழட்டும்
ஒருபோர் இன்றே!
                    

Offline Global Angel


காலையும் களமும்

கண்விழித்த படையினைப் போல்
கதிர் விழித்த வானகத்தில்
பண்ணிசைத்த குருகினங்கள்
பறந்து வரும்.. விடுதலையின்
பொன்னினைவு பாய்ந்து வரும்!
புலம்பலிலே தமிழரசி
முன்னிரவில் சொன்னதெலாம்
முகஞ்சிவக்க வெறிபடைக்கும்!

நீலநெடு வரைப்புறத்தில்
நெஞ்சினிக்க வாய் திறந்து
காலமுனி யுரைத்தகளம்
கண்டுவர மனந்துடிக்கும்!
ஓலமிட்ட சங்கொலியால்
உணர்ச்சிகொண்டு நின்றபடை
வேலெடுத்து நின்றதுபோல்
விழியிரண்டும் துடிதுடிக்கும்!

அன்னையிடம் குடித்தமுலை
அமுதத்தின் தமிழ்மானம்
என்னுயிரில் இரத்தத்தில்
இணைந்துநின்ற காரணத்தால்
கன்னிமகள் தமிழணங்கின்
கறைதுடைத்து நொடிப்பொழுதில்
பொன் முடியைக் கொண்டுவரப்
போர்நெஞ்சம் வழிபார்க்கும்!

இவ்வணமாய் நினைவலைகள்
எழுந்தடித்த நெஞ்சத்தில்
வெவ்வேறு திட்டமெலாம்
வேர்விட்டும் போர்க்களத்தில்
கொவ்வைநிறச் செங்குருதி
கொட்டுதற்குக் கண்ணெதிரே
எவ்வழியுந் தோன்றாமல்
இளமேனி பதைபதைக்கும்!

எத்தனைநாள் எடுத்தகொடி
எத்தனைநாள் அமைத்தபடை
இத்தனைக்கும் களமெங்கே...?
எனப்புலம்பி நின்றவனை
குத்துபடை மறவர்களில்
குன்றமிசை யிருந்தொருவன்
தித்திக்கும் பாவலரே...
செருக்களமா? அதோ என்றான்!
                    

Offline Global Angel

தமிழ்மேல் ஆணை!

தங்கத் தமிழ்மிசை ஆணை! - என்றன்
தாய்நிகர் தமிழக மண்மிசை ஆணை!
சிங்க மறத்தமிழ் வீரர் - எங்கள்
செந்தமிழ்த் தோழர்தம் தோள்மிசை ஆணை!
சங்கு முழக்கி யுரைப்பேன் - நாளைச்
சண்டைக் களத்திலே சாக வந்தாலும்
மங்கிக் கிடக்குந் தமிழை - மீண்டும்
மாளிகை ஏற்றி வணங்கியே சாவேன்!

கன்னித் தமிழ்மகள் தெய்வம்! - அவள்
காதல் அருள்விழி காட்டிவிட் டாளடா!
என்ன சுகமினித் தேவை? - இந்த
எலும்புந் தசையு மெதுக்கடா தோழா?
மின்னி முழங்குது வானம் - இடி
மேகத்தி லேறிவலம் வர வேண்டும்!
தின்னப் பிறந்து விட்டோமா? - அட
செங்களம் ஆடப் புறப்பட்டுவாடா!

நேற்று மதிப்புடன் வாழ்ந்தோம்! - இந்த
நிலத்தின் திசைகளனைத்தையும் ஆண்டோம்!
ஆற்றல் மிகுந்த தமிழை - அரி
அணையில் இருத்தி அழகு சுவைத்தோம்!
சோற்றுப் பிறவிகளானோம்! - இன்று
சொந்தப் பெருமை யிழந்து சுருண்டோம்!
கூற்ற மெதிர்த்து வந்தாலும் - இனிக்
கூனமாட்டோ மென்று கூவடா சங்கம்!

தென்றல் தவழ்ந்திடும் மண்ணில் - நாங்கள்
தீயும் புயலும் வலம்வரச் செய்வோம்!
குன்றும் மலையும் நொறுக்கி - இந்தக்
கொடிய உலகம் பொடிபடச் செய்வோம்!
என்றும் இனிய தமிழை - அட
இன்னுயிர் மூச்சை அமுதக் குழம்பை
மன்றம் மதித்திடவில்லை - என்றால்
மக்கள் உலகம் எதுக்கடா தேவை?

கூவும் அலைகடல் மீதும் - பொங்கிக்
குமுறி வெடிக்கும் எரிமலை மீதும்
தாவும் வரிப்புலி மீதும் - எங்கள்
தடந்தோள் மீதுமோர் ஆணையுரைப்பேன்...
நாவும் இதழு மினிக்கும் - இன்ப
நற்றமிழ் மொழிக்கோர் நாடுங் கொற்றமும்
யாவும் உடனிங்கு செய்வோம்! - இந்த
யாக்கை பெரிதோ? தமிழ் பெரிதோடா?

கொட்டு தமிழா முரசம்! - அட
குறட்டைத் தூக்கம் நிறுத்தடா" என்று
வெட்ட வெளியிடைக் கூவி - என்றன்
விழிக ளெதிரே தமிழ் மகள் வாயின்
பட்டு முறுவல் சுவைத்தேன்! - அவள்
பார்வை எதிரே மறைந்தனள் கண்டீர்!
சட்டென் றுலகில் விழுந்தேன்! - என்றன்
சங்கொலி கேட்டு விழித்தது தானை
                    

Offline Global Angel


எழுச்சி


தெய்வம் வாழ்த்திப் புறப்பட்டேன்!
தேசம் அமைக்கப் புறப்பட்டேன்!
கைகள் வீசிப் புறப்பட்டேன்!
களத்தில் ஆடப் புறப்பட்டேன்!

வீணைக் கொடியோன் தமிழ்மறவன்
வெற்பை அசைத்த (இ)ராவணனின்
ஆணைக் குள்ளே வாழ்ந்ததுபோல்
ஆட்சி நடத்தப் புறப்பட்டேன்!

எட்டுத் திசையும் தமிழ்ச்சாதி
எருமைச் சாதி போலாகிக்
கெட்டுக் கிடந்த நிலைகண்டு
கேடு தொலைக்கப் புறப்பட்டேன்!

வீசு குண்டால் எறிந்தாலும்
வெட்டி உடலும் பிளந்தாலும்
ஆசைக் கொருநாள் போராடி
ஆவி துறக்கப் புறப்பட்டேன்!

வெந்த நெஞ்சில் எழுந்தகனல்
விழியில் சிவப்பு நிறந்தீட்ட
சிந்து பாடி வெங்கொடுமைச்
செருவில் ஆடப் புறப்பட்டேன்!

மானம் இழந்து தலைசாய்ந்து
மாற்றார்க் கடிமைத் தொழில்செய்து
கூனல் விழுந்த தமிழ்வாழ்வின்
கொடுமை தீர்க்கப் புறப்பட்டேன்!

கட்டு நொறுங்கக் கை வீசிக்
களத்தில் ஆடும் வேகத்தில்
கொட்டும் வியர்வைத் துளியோடு
குருதி கொடுக்கப் புறப்பட்டேன்!

வானை இடிக்கும் போர்ப்பறையின்
வைர முழக்கம் வழிகாட்ட
தானை எடுத்துப் புறப்பட்டேன்!
தமிழர் வாழப் புறப்பட்டேன்!
                    

Offline Global Angel


பயணம்

நீல மலைக் குறிஞ்சி நிலம்.... முல்லைக்காடு
நெல் விளைந்த மருதம் அதை அடுத்தநெய்தல்

கோலிழந்த தமிழன்போல் இருந்த பாலை
கொண்டிருந்த வையத்தின் திசைகளெட்டும்

காலமுனி சொன்னதுபோல் அலைந்தலைந்து
கவிஞன் யான் பட்டதுயர் கொஞ்சமில்லை!

வேலெறிந்து விளையாடும் மறவர் கூட்டம்
விழி சிவந்த கதை தவிர வேறொன்றில்லை!
                    

Offline Global Angel


பூத்தது விடுதலை!



புவிமாந்தர் அதிர்ச்சி!
களத்தே புறத்தோடும்
பகைவர் வீழ்ச்சி!

இவைகண்டு சிரித்தாள்
இனியாள் தமிழச்சி!
மக்களெல்லாம்

குவிமகிழ் கொண்டார்!
ஊர்கள் திசைகளெலாம்
கொள்ளை மகிழ்ச்சி!

சுவைகாண் விடுதலை
எனுஞ்சொல்! பூத்ததடா
தமிழன் ஆட்சி!
                    

Offline Global Angel


மடிந்து போ!


தேனைப் பொழிந்தும் கணிகள் சொரிந்தும்
செங்கரும்பைப் பிழிந்தும்

ஆநெய் கறுவாஏலம் கலந்தும்
அமுதாய்த் தமிழ்ப் புலவன்

ஊனை உயிரை உருக்கும் தமிழை
உன்றனுக்கே தந்தான்...

சோணைப் பயலே! தமிழை இழந்தும்
தூங்கி நின்றாயோடா?

முத்துக் குறளும் காப்பிய மைந்தும்
முதுகாப்பியன் தமிழும்

பத்துப் பாட்டும் எட்டுத் தொகையும்
பதிகமும் உலாநூலும்

தித்திக்கும் கம்பன் புகழேந்தி
தேன் தமிழும் வீழ்ந்தே

செத்துத் தொலையப் பகை பொங்கியது!
சிரம் தாழ்ந்தனையோடா?

காள மேகக் கவிதை மழையும்
கவி பாரதி தமிழும்

கோலத் தேம்பா வணியும் அழகு
கொஞ்சு நற்சிறாவும்

தாளம் போட்டு வாழாப் பாரதி
தாசன் வெறித் தமிழும்

ஏலம் போட்டார் பகைவர்! அடநீ
எங்குற்றாயோடா?

முன்னைத் தமிழன் அன்னைத் தமிழை
முக்கூடல் நிறுவி

கண்ணாய் உயிராய் ஓம்பிய காலம்
கனிந்த புகழெல்லாம்

உன்னை ஒருதாய் உருவாக்கியதால்
உடைந்து துகள்படவே

மண்ணானது மானம் என் வாழ்ந்தாய்!
மடிந்துபோ தமிழா!
                    

Offline Global Angel


தமிழை கல்விமொழி ஆக்கு


தமிழை கல்விமொழி ஆக்கு
தமிழ்மொழி பேசட்டும்
உன் பிள்ளை நாக்கு

வெள்ளைக்காரன் மொழியை
கற்றுக்கொடாதே - என்
பிள்ளை வாயில் கொடிய
நஞ்சை இடாதே!

மணிப்புறா ஒரு நாளும்
குயில் மொழி ஏற்காது!
மான் நரி மொழியைத்தன்
நாக்கிலே தூக்காது!
அணிற்பிள்ளை கிளிமொழி
பேசவே பேசாது!
ஆங்கிலத்தை நீயேன்
சுமக்கின்றாய் கூசாது?

பிள்ளையே தன் தாயை
கண்முன் வதைப்பதா?
பேசும் தாய்மொழியின்
உயிரை நாம் சிதைப்பதா?
பள்ளியே தமிழுக்கு
கொள்ளியாய் ஆவதா?
பாராண்ட தமிழ்மொழி
சாவதா? சாவதா?

வள்ளுவன் ஆங்கிலம்
படித்தானா? இல்லையே!
வந்தான் வெள்ளையன் இங்கு
வந்தது தொல்லையே!
வெள்ளைக்காரன் போயும்
விலங்கு அறல்லையே!
வேண்டாத தமிங்கிலம்
உடைக்குது பல்லையே!
                    

Offline Global Angel


எத்தனை பெரிய மனம் உனக்கு?

எத்தனை பெரிய மனம் உனக்கு
தமிழா!
எத்தனை பெரிய மனம் உனக்கு
எல்லோரும் மனிதரே
என்பது உன் கணக்கு

ஏறி மிதித்தாலும் அவன் மனிதன்! - உன்னை
எட்டி உதைத்தாலும் அவன் மனிதன்!
காறி உமிழ்ந்தாலும் அவன் மனிதன்! - உன்
கதையை முடித்தாலும் அவன் மனிதன்!

அடக்கி ஆண்டாலும் அவன் மனிதன்! - உன்னை
அடிமை கொண்டாலும் அவன் மனிதன்!
ஒடுக்கி வதைத்தாலும் அவன் மனிதன் - உன்
உரிமை பறித்தாலும் அவன் மனிதன்!

தாக்க வந்தாலும் அவன் மனிதன் - உன்
தமிழைக் கெடுத்தாலும் அவன் மனிதன்!
ஏய்க்க வந்தாலும் அவன் மனிதன் - தமிழ்
இனத்தை அழித்தாலும் அவன் மனிதன்!