Author Topic: ~ உளவாளியின் மொழி 'கிரிப்டோகிராப்பி' !!! ~  (Read 732 times)

Online MysteRy

உளவாளியின் மொழி 'கிரிப்டோகிராப்பி' !!!




உயிர் போகும் ஆபத்தான வேலை தான். ஆனால், இதில் இருக்கும் த்ரில் எதிலும் இல்லை. சேஸிங், டபிள் க்ராஸ், கொலை என்று நீண்டு கொண்டே போகும் பட்டியல்

உளவாளியாக எதிரியின் இடத்துக்கோ, அல்லது நாட்டுக்கோ சென்று உளவறிவதைவிட, ரகசியமாக தெரிந்த தகவலை பத்திரமாக கொண்டு சேர்ப்பது தான் மிகவும் கடினமான வேலை. இடையில் யாராவது ஒட்டுக் கேட்டாலும், செய்தி வேறு ஒருவர் கையில் கிடைத்துவிட்டாலும் என்ன தகவல் என்று தெரிந்து கொள்ள முடியாத மொழியில் அது இருக்கும். தகவல் தருபவர், தகவல் பெறுபவர் மட்டுமே புரிந்து கொள்ளக்கூடிய மொழி. இத்தகைய மொழிக்குத்தான் 'கிரிப்டோகிராப்பி' என்று பெயர்.

இந்த மொழி கி.மு. 1900 ம் ஆண்டில் இருந்தே நடைமுறையில் இருந்திருக்கிறது. எகிப்தில் உள்ள பிரமிடுகள் ஒன்றில் செதுக்கப்பட்டிருந்த ஒரு வாக்கியம்தான் கிரிப்டோகிராப்பியின் ஆரம்பம். முன்பெல்லாம் எழுதப்படிக்க தெரிந்தவர்கள் மிகமிக குறைவு. அதனால் ரகசிய தகவல்களை கூட எல்லோரும் புரிந்து கொள்ளும் விதத்தில் நேரடியாகவே எழுதி அனுப்பினர்.

படித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபின் விடுகதைகள், கவிதைகள் போன்றவற்றின் மூலம் தகவல்கள் பரிமாறப்பட்டன. அதன்பின் எழுத்துக்களை முன் -பின்னுமாக மாற்றி அமைத்து தகவல் அனுப்பினார்கள். உதாரணமாக DE-VI என்ற பெயரை EF-WJ என்று அனுப்புவார்கள். இது வேறு யாருக்கும் தெரியாது. ஆனால் தகவல் பெறுபவர்களுக்கு தெரியும். எல்லா எழுத்துகளுக்கும் முந்தைய எழுத்துகளை எழுதிக் கொண்டே வந்தால் அவர்கள் சொல்லும் தகவல் விளங்கிவிடும்.

ஜூலியஸ் சீசர் அந்த காலத்திலேயே ஒரு முறையை வைத்திருந்தார். அதற்கு 'சீசர் சைபர்' என்று பெயர். போர்க்களத்தில் இருக்கும் தளபதிகளுக்கு வார்த்தைகளை களைத்துப் போட்டு கடிதம் அனுப்புவார். இன்னொரு காவலாளி மூலம் அதை எப்படி படிக்க வேண்டும் என்ற குறிப்பை கொடுத்து அனுப்புவார். இரண்டு பேரும் எதிரிகள் கையில் ஒரே நேரத்தில் சிக்கினால் மட்டுமே எதிரியால் சீசர் என்ன செய்தி கொடுத்து அனுப்பினார் என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

ஹெரோ டோட்டஸ் என்பவர் வேறு ஒரு முறையை பயன்படுத்தினார். இவர் சொல்ல விரும்பும் செய்தியை ஓர் அடிமையின் தலையில் பச்சை குத்திவிடுவார். முடி வளர்ந்தபின்தான் அந்த செய்தியை சொல்லக் கிளம்புவான். தகவலை பெறுபவர் அடிமையை மொட்டை அடித்து தகவலை படித்துக் கொள்ள வேண்டும்.

நவீன காலத்தில் கம்ப்யூட்டர் வந்தபின் தகவல்களை மறைப்பதும், கடத்துவதும் டிஜிட்டல் மயமாகிவிட்டது. சரியான பாஸ்வேர்ட், அல்லது கீ வேர்ட் இருந்தால்தான் தகவலை திறக்கவே முடியும். இப்போதெல்லாம் டிஜிட்டல் கையெழுத்து, கண்ணுக்கு தெரியாத இன்விசிபில் இங்க் என்று எவ்வளவோ வந்துவிட்டன.

இதே கிரிப்டோகிராபி முறையில்தான் ஏ.டி.எம். மெஷின்கள், இ-மெயில் பாஸ்வேர்டுகள் நிர்வகிக்கப்படுகின்றன. ஒரு ஏ.டி.எம். கார்டோ, இ-மெயில் அக்கவுண்டோ வைத்திருந்தால் நாமும் ஓர் உளவாளிதான். நமது ரகசியங்களை பாதுகாக்கும் உளவாளி. அவ்வளவுதான்.