கத்தரி புலாவ்
கத்தரிக்காய் - 4
உருளை - 2
வெங்காயம் - 2
பச்சை பட்டாணி - கால் கப்
அரிசி - 1 1/2 கப்
மிளகாய் - 5
சீரகம் - ஒரு தேக்கரண்டி
சோம்பு - அரை தேக்கரண்டி
தனியா - ஒரு தேக்கரண்டி
வேர்க்கடலை - 2 மேசைக்கரண்டி
கொத்தமல்லி தழை - அரை கட்டு
பெருங்காயம் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
பட்டை, மராட்டி மொக்கு, பிரிஞ்சி இலை, முந்திரி - தாளிக்க
நல்லெண்ணெய் - 3 மேசைக்கரண்டி
எண்ணெயில்லாமல் மிளகாய், சீரகம், சோம்பு, தனியா, வேர்க்கடலை (தோல் நீக்கியது) ஆகியவற்றை தனித்தனியாக வறுத்தெடுக்கவும். ஆறியதும் மல்லி இலை, பெருங்காயம் சேர்த்து அரைத்து வைக்கவும். அரிசியை முக்கால் பாகமாக உப்பு சேர்த்து வேக வைத்து சிறிதளவு எண்ணெய் சேர்த்து ஆற வைக்கவும்.
வெங்காயம், உருளை, கத்தரிக்காயை சதுர துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
எண்ணெய் காய்ந்ததும் தாளிக்க கொடுத்துள்ள வாசனை பொருட்களை சேர்த்து தாளிக்கவும்.
காய்கறிகளை சேர்த்து வதக்கவும். காய்கறிகள் ரொம்பவும் வதங்க விடாமல் அதற்கு தேவையான உப்பு சேர்த்து வதக்கவும். (காய்கறிகள் ரொம்பவும் வெந்து குழையாமல் பார்த்துக் கொள்ளவும்).
காய்கறிகள் ஓரளவுக்கு வெந்ததும் அரைத்து வைத்துள்ள பொடியிலிருந்து நான்கு மேசைக்கரண்டி சேர்த்து கிளறவும். இப்பொழுது தீயை நன்கு குறைத்து வைக்கவும்.
பொடி காய்கறிகளில் நன்கு பரவியதும் வடித்து ஆறிய சாதத்தை சேர்த்து கிளறவும். பொடி பற்றவில்லை என்றால் சேர்த்துக் கொள்ளவும். கிளறிய பின் தீயை சிம்மில் வைத்து மூடி போடவும்.
ஐந்து நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து கொத்தமல்லி தூவி ரைத்தாவுடன் பரிமாறவும். சுவையான கத்தரி புலாவ் ரெடி.
கலந்த சாதத்திற்கு அரிசியை வடித்தால் நன்கு குழையாமல் இருக்கும். வடித்தவுடன் அந்த பாத்திரத்திலிருந்து மாற்றி ஒரு வாயகன்ற பாத்திரமோ அல்லது தட்டிலோ கொட்டி மேலே எண்ணெய் விட்டு ஆற விடவும். எண்ணெய் சேர்ப்பதால் காய்ந்து போகாமலும் இருக்கும். இந்த பொடியை அதிக அளவில் செய்து வைத்து விட்டால் தேவையான போது உபயோகித்தும் கொள்ளலாம். லஞ்ச் பாக்ஸுக்கு ஏற்ற உணவு. காரம் விரும்பிகள் காரத்தை கூட்டிக் கொள்ளலாம். காரட், பீன்ஸ் கூட சேர்த்தும் செய்யலாம்.