Author Topic: Dark Mode பயன்படுத்துவது கண்களுக்கு பாதிப்பா? அதன் நன்மைகள், தீமைகள் என்னென்ன?  (Read 44 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226841
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/



டார்க் மோட் (Dark Mode) என்பது மொபைலில் இருக்கும் சாதாரண நாம் பயன்படுத்தும் வெள்ளைத் திரைக்கு மாற்றாக இருக்கும் வடிவமாகும். தற்போது இது விண்டோஸ் 10, ஐ.ஓ.ஸ் 13 மற்றும் அதற்கு அதிகமாக உள்ள மென்பொருள்களிலும் வரத் தொடங்கிவிட்டது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் யூஸர் இன்டர்ஃபேஸில் கறுப்பு நிறத்தில் மொபைலின் எல்லாப் பயன்பாடும் இடம்பெற்றிருக்கும். இந்த டார்க் மோட் வடிவமானது மொபைல் திரையிலிருந்து வெளியேறும் ஒளியைக் குறைக்கிறது. அதே சமயத்தில் படிப்பதற்கு ஏற்ற வகையில் வண்ண வேறுபாட்டுடன் இருக்கிறது.
டார்க் மோட் என்பது 'மில்லினியல்கள்' காலத்தில் தோன்றியதல்ல; கணினி கண்டுபிடித்த காலத்திலிருந்தே இது உள்ளது. ஆரம்பகாலத்தில் பயன்படுத்தப்பட்ட மோனோக்ரோம் சிஆர்டி கணினியில் கருப்புத் திரையில் பச்சை நிறத்தில் எழுத்துகள் தோன்றும். மேலும் முன்பு வேர்ட் ப்ராஸஸருக்கெனத் தனியாகப் பயன்படுத்தப்பட்ட சாதனத்திலும் கறுப்புத் திரையில் வெள்ளை எழுத்துகள் தோன்றும். இதெல்லாம் 80-ஸ்க்குப் பின் ஜெராக்ஸ் மற்றும் சிபிடி கார்ப்பரேஷன் போன்ற நிறுவனங்களின் வருகையால் மாறிவிட்டது. இப்போது பல வருடங்களுக்குப் பின் ஆப்பிள், கூகுள் போன்ற நிறுவனங்கள் டார்க் மோடை மீண்டும் தங்களது சாதனங்கள் மற்றும் செயலிகளில் பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றன. இந்த டார்க் மோடின் சாதக பாதகங்களை இந்தக் கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
1.பேட்டரி சேமிப்பு:
இந்த டார்க் மோடை பயன்படுத்துவதால் ஓலெட் (OLED) மற்றும் அமோலெட் (AMOLED) போன்ற டிஸ்பிளே வடிவங்களில் அதிக சக்தியைச் சேமிக்க முடியும். ஓலெட் பானல் டிஸ்பிளேக்களில் ஒவ்வொரு பிக்சலும் எரிந்துகொண்டுதானிருக்கும். இதனால் பின்னணி வெள்ளை நிறத்தில் இருந்தால் அதிக சக்தி தேவைப்படும். ஆனால் பின்னணி கறுப்பு அல்லது சாம்பல் நிற வடிவத்தில் இருந்தால் குறைந்த சக்தியே தேவைப்படும். இதனால் மொபைல் பேட்டரியை நீண்ட நேரம் பயன்படுத்த முடியும்.
2. நீல நிற ஒளியைத் தடுக்கும்:
நமது மொபைல் திரையிலிருந்து அதிக அளவிலான நீல நிற ஒளி வெளியேறுகிறது. அதிகளவில் நீல நிறம் வெளியேறுவதால் மெலடோனின் என்ற ஹார்மோனுக்குப் பாதிப்பு ஏற்படும். இதனால் இரவில் தூக்கம் வருவது சற்று சிரமமாக இருக்கும். டார்க் மோட் பயன்படுத்தும் போது இந்த நீல நிறம் வெளியேறுவது தடுக்கப்படுகிறது. அதிக மொபைல் பயன்பாட்டினால் தூக்கமில்லாமல் தவிப்பவர்கள் இதைப் பயன்படுத்திப் பார்க்கலாம்.
3. இரவில் பயன்படுத்த சிறந்தது:
இரவு நேரத்தில் நாம் அதிக நேரம் மொபைலில் காணொலியை பார்த்துக்கொண்டிருந்தாலோ அல்லது படித்துக்கொண்டிருந்தாலோ அதிக ஒளி மொபைலிலிருந்து வெளியேறும். இதையே டார்க் மோடைப் பயன்படுத்தினால் குறைந்த அளவு ஒளியே வெளியேறும். இதனால் கண்களுக்கும் அதிக சோர்வு ஏற்படாது. இதைப் பயன்படுத்தி நீண்ட நேரம் மொபைல் திரையை நம்மால் எளிதாகப் பார்க்க முடியும்.
4. புதிய அனுபவமாக இருக்கும்:
டார்க் மோடைப் பயன்படுத்தி ஃபேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவது என்பது சுவாரஸ்யமான ஒன்றாக இருக்கும். இதில் எப்போதும் போல் இல்லாமல் நாம் பயன்படுத்தும் செயலிகள் எல்லாம் அடர்ந்த நிறத்தில் இருக்கும். இதனால் படங்கள், கிராஃப் போன்றவை பார்ப்பதற்குக் கண்களைக் கவரும் வகையில் இடம்பெற்றிருக்கும். சாதாரண மோடை விட இதில் சமூகவலைதளங்களைப் பயன்படுத்துவது ஒரு மாறுதலாக இருக்கும்.
1. டார்க் மோட் பயன்பாட்டால் 'அஸ்டிக்மாடிஸம்' ஏற்படலாம்:
சிலருக்கு டார்க் மோடைப் பயன்படுத்துவதனால் அஸ்டிக்மாடிஸம் என்ற கண் குறைபாடு ஏற்படலாம். இது ஏற்பட்டால் கண்களுக்குப் பொருள்கள் எல்லாம் மங்களாகத் தோன்றும். மேலும் ஒரு கண்ணின் வடிவத்திலிருந்து மற்றொரு கண் மாறுபட்டு காணப்படும். இந்தக் குறைபாடு இருப்பவர்களால் ஒளி குறைந்த எழுத்துகளை டார்க் மோடில் படிப்பது என்பது சிரமமான ஒன்றாக இருக்கும். இப்படிப்பட்டவர்கள் டார்க் மோட் பயன்பாட்டைத் தவிர்த்து விடுவது நல்லது. இதனால் கண்களுக்கு சிரமம் ஏற்படுவதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.
2.கண் பார்வைக்குச் சிரமமான ஒன்று:
டார்க் மோடைப் பயன்படுத்தி மொபைல் திரையைப் பார்க்கும் போது அதிக சிரமம் ஏற்படலாம். ஏனெனில் கண்களில் உள்ள ஐரிஸ் கறுப்பு பின்னணியில் உள்ள வெள்ளை எழுத்துகளைப் படிக்க அதிக ஒளியை உள்வாங்க வேண்டியதாக இருக்கும். ஆனால் பொதுவாக நமது கண்கள் வெள்ளை நிறப் பின்னணியில் இருக்கும் கறுப்பு எழுத்துகளுக்கே பழக்கப்பட்ட ஒன்று. வெள்ளை எழுத்துகளைக் கறுப்புத் திரையில் படிக்கும் போது அந்த எழுத்துகளின் ஓரம் ஓடுவது போன்று இருக்கும். இதற்குப் பெயர் ஹாலேட்சன் விளைவு. இதனால் படிப்பதில் சிரமம் ஏற்படலாம்.
3.அளவாகப் பயன்படுத்துதல் நல்லது:
நீங்கள் பல மாதங்களாகத் தொடர்ந்து டார்க் மோடைப் பயன்படுத்துபவராக இருந்தால் உங்கள் கண்கள் அதற்குப் பழகிவிடும். இதனால் எப்போதாவது வெளிச்சம் மிகுந்த வெள்ளைத் திரையைப் பார்க்க நேரிடும் போது கண்கள் கூசத் தொடங்கும். இதற்குக் காரணம் உங்கள் கண்களால் உடனே அதிக ஒளியைக் காண முடியாது. எனவே, இரண்டையும் சம அளவில் பயன்படுத்துதல் நல்லது.
4.வெளிச்சத்தில் பயன்படுத்த ஏற்புடையது அல்ல:
டார்க் மோடை எல்லா நேரத்திலும் இடங்களிலும் எளிதாகப் பயன்படுத்த முடியாது. நீங்கள் வெளிச்சமாக இருக்கும் அறையிலே அல்லது சூரிய ஒளியிலோ டார்க் மோடைப் பயன்படுத்தினால் உங்களால் எழுத்துகளை எளிதாகப் படிக்க முடியாது. இதற்கு சூரிய மறைவிற்குப் பின் டார்க் மோடைப் பயன்படுத்தும்படி உங்கள் மொபைலின் செட்டிங்கை மாற்றியமைத்து விட்டால் சிறப்பானதாக இருக்கும்.
இவ்வாறு எல்லாவற்றையும் போல டார்க் மோடிற்கும் அதற்கென சாதக பாதகங்கள் உள்ளன. தற்போது கூகுள், யூடியூப், வாட்ஸ் அப் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்பாடிஃவை, ஜியோ சாவ்ன், பிரைம் என எல்லா சமூக வலைதளங்களிலும் டார்க் மோட் வசதி வந்து விட்டது. உங்களுக்கும் டார்க் மோட் பயன்பாடு உகந்தது எனில் நிச்சயம் டார்க் மோடைப் பயன்படுத்தலாம்