சந்திரனின் கால ஓட்டம்

நம்முடைய மூதாதையர் உட்பட ஆயுர்வேத சித்த வர்ம மருத்துவத்தைக் கையாண்ட அகத்தியர், சுஸ்ருதர் போன்ற பிதாமகன்களும் சந்திரனின் கால ஓட்டத்தை வைத்தே நமது மருத்துவ பிரயோக காலத்தை வரையறுத்துள்ளார்கள். இன்றும் இதனையே அனைத்து மருத்துவ முறைகளும் பின்பற்றுகின்றன என்பதற்கு பல எடுத்துக்காட்டுகள் உள்ளன.
உதாரணமாக அமாவாசை, பௌர்ணமி போன்ற நாட்களில் உயிரினங்கள் உணர்ச்சி வசப்பட்டு அதன் விளைவாக இரத்த ஓட்டத்தின் தன்மை மாறுபட்டிருப்பதும் அதனால் பல நோய்களுக்கும், இரண சிகிச்சைகளுக்கும் உகந்த நாட்கள் அல்ல என்பது கற்றறிந்த மற்றும் அனுபவம் மிக்க மருத்துவர்கள் கடைப்பிடிக்கும் ஒரு அம்சம் ஆகும். இந்த நாட்களில் அறுவை சிகிச்சை செய்தால் இரத்தப் போக்கு அதிகரிக்கும் சாத்தியக் கூறுகள் அதிகமாக உள்ளது.
மேலும் மருந்துகளை உடல் ஏற்கும் தன்மைக்கு மாறாக வெளியேற்றும் (Rejection) தன்மை அதிகரிக்கிறது. இதுவே பயனற்ற சிகிச்சையாக மாறுகிறது.
பொதுவாக சமநிலையற்ற உணர்ச்சிகளுக்கும், உணர்வுகளுக்கும் ஆட்பட்ட ஒரு நோயாளிக்கு இந்த நாட்களில் இவ்விதமான சிகிச்சையளிக்கும் போது சிகிச்சை பயனற்று விரக்தியே மிஞ்சும்.
சந்திரனின் கால ஓட்டம் அமாவாசை முதல் பௌர்ணமி வரை வளர்பிறையாகவும், பௌர்ணமி முதல் அமாவாசை வரை தேய்பிறையாகவும் கொண்ட ஒரு ஓட்டமே சந்திரனின் கால ஓட்டம்.
அன்றாட தேவைகளை கணக்கிட்டு மிக கவனமாக செலவு செய்து வாழ்க்கை நடத்தும், ஒரு அறிவார்ந்த மனிதன், தன்னுடைய முகச் சவரத்திற்கு பயன்படுத்தும் நவீன பிளேடு, அதன் பயன்பாட்டு அளவை வைத்தே கணக்கிடலாம். அதாவது வளர்பிறை காலங்களில் முகத்தில் வேகமாகவும் அதிகமாகவும் முடி வளரும். முடியின் உறுதிப்பாடும் வித்தியாசப் படும். இந்த நாட்களில் பிளேடு பயன்பாட்டின் கால அளவைக் குறைக்கிறது.
மாறாக தேய்பிறை காலங்களில் (கிருஷ்ணபட்சம்) மேற்சொன்ன நிலை மாறுபட்டு பிளேடின் பயன்பாடு அதிகப்படுகிறது.
பொதுவாக வளர்பிறை காலங்களில் எல்லா ஜீவராசிகளின் அணுக்களும் வளர்ச்சிப் பாதையை நோக்கியே இருக்கும். அணுக்களின் உயிரோட்டமும் முழுமையாக இருக்கும். முழு பௌர்ணமி அன்று அணுக்களின் வளர்ச்சி முழுமை பெற்று முதிர்ச்சியாகும். அதன் பிறகு பகலுக்குப் பிறகு இரவு வருவது போல், அணுக்களின் செயல்பாடுகள் குறைந்துகொண்டே இருக்கும். இதுதான் காலத்தின் ஓட்டம். மரங்களை வளர்ப்பதற்கும், அதனை பயன்படுத்துவதற்கும் வளர்பிறைக் காலங்களே சிறந்தது என்கின்றனர். வளர்பிறைக் காலங்களில் மரங்கள் வீரியமுள்ளதாக இருக்கும். தேய்பிறைக் காலத்தில் வீரியம் குறைந்து காணப்படுவதால் வண்டுகள் உள்ளே நுழைந்து உளுத்து (கெட்டு) போவதற்கு ஏதுவாகிறது. இதுபோன்ற நிகழ்வுகளைக் கொண்டுதான்“ மனிதன் வளர்பிறைக் காலங்களில் சுபகாரியங்களை நடத்துகின்றனர். மருத்துவர்களும் மூலிகை வளர்ப்பதற்கும், பறிப்பதற்கும், பயன் படுத்துவதற்கும் வளர்பிறைக் காலத்தையே தேர்ந்தெடுக்கின்றனர். வளர்பிறைக் காலங்களில் கிரகங்களின் செயல்பாடுகள் வலிமை பொருந்தியதாகவும் , பிரபஞ்ச சக்தி முழுமை பெற்றதாகவும் இருக்கும். ஆகையால்தான் சித்தர்கள் வளர்பிறைக் காலங்களில் சுபச் செயல்களைச் செய்ய அறிவுறுத்துகின்றனர்.
சித்தர்கள் கூறிய ஒவ்வொரு செயல்பாடுகளிலும் காரண காரியங்கள் அடங்கியிருக்கின்றன.
மனித இனப்பெருக்கத்திற்கு அடிப்படையான கருமுட்டையின் உயிர்ப்பு காலமே ஒருபட்சம் (14 நாட்களே) இதனால்தான் குழந்தை பிறந்து ஒரு பட்சம் காலம் முழுமையாக முடிந்து பின் இரண்டாவது பட்ச காலம் முடிவடையும் சமயமாகிய 28ம் நாள் விழா,தொன்றுதொட்டே (இடுப்பில் அரைஞாண் கட்டு நாள்) இன்றும் ஒரு சிறப்பு அம்சமாக நம்மிடையே நிலவி வருகிறது.
அதோடு மட்டுமில்லாமல், சிசுவிற்கு சிவப்பு நோய் என்று கூறக் கேட்டிருப்போம். இந்த சிவப்பு நோய் என்பது சிசுவின் இரத்த நாளங்கள் சரியாக விரிவடைந்து இரத்த ஓட்டம் சீர்படாத நிலையில் இந்நோய் வெளிப்படுகிறது. இதற்கு நம் முன்னோர்கள் சிசு பிறந்த 13 தினங்கள் கழித்தே மருத்துவரை அணுக வேண்டும் என்பார்கள். அங்கும் பட்ச காலகட்டம். ஆம் இரத்த நாளங்கள் 13 நாட்களுக்குள் தானாக சீர் செய்யப்படும் என்ற இயற்கையின் விதி இங்கு வெளிப்படுகிறது என்றால் அது மிகையாகாது.
சித்த பிரம்மை என்று சொல்லப்படுகின்ற புத்தி சுவாதினமின்மை (பைத்தியம்) என்ற ஒரு நோய்க்கு சரியான ஆங்கில வார்த்தை கூட (ஃதணச்ஞிதூ) லுனார் என்றால் சந்திரன். அந்த லுனார் என்ற சந்திரனை அடிப்படையாக வைத்தே சமநிலையற்ற தன்மையாக இந்நோய் அழைக்கப் படுகிறது போலும்.
ஒன்றை கூர்ந்து கவனிப்போமானால் வெவ்வேறு நிலைகளிலும், காலங்களிலும் சந்திரனை நாம் பார்ப்பதிலிருந்தே சமநிலையில் கோளாறு (மனச் சமநிலையில்) சந்திரனுடைய நிலைப்பாட்டிற்கு ஒத்தலும், அதன் தாக்கத்திற்கு ஒத்ததுமாக உள்ளதென்பது உணரப்படுகிறது.
அமாவாசை, பிரதமை, துதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரியோதசி, சதுர்த்தசி, பௌர்ணமி போன்ற திதிகளின் காலங்கள் கூட சந்திரனின் செயல்பாட்டை வைத்தே கணிக்கப் பட்டுள்ளது.
மேற்கண்ட திதிகளில், குறிப்பிட்ட திதியில்தான் குறிப்பிட்ட நோய்களுக்கு மருத்துவ சிகிச்சை ஆரம்பிக்க வேண்டும் என்று வர்ம சாஸ்திரம் உள்ளிட்ட மருத்துவ சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன.
இன்னும் சொல்லப்போனால், விஷக்கடி அல்லது விஷ உபாதை அல்லது விஷத்தினால் ஏற்படும் ஒவ்வாமை இவைகளின் வெளிப்பாடு தான் சருமத்தில் தடிப்பு, அரிப்பு, புண், சொறி, தோலின் நிறமாற்றம், வீக்கம் இவைகள் ஏற்படுகின்றன. இந்தவிதமான விஷ விளைவுகளால் ஏற்படும் நோய்களுக்குக் கூட சந்திரனின் ஓட்டக் கால கட்டத்தை வைத்தே சிகிச்சையளிக்கப்படுகிறது.
விஷ சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும், சூரிய, சந்திரர்களின் அமைப்பு அல்லது நிலைப்பாடு இவைகளின் நிலையினால் கணக்கிடப்படும் திதியின் அடிப்படையில் மருந்து கொடுக்கப் படுமாயின் நிவாரணம் துரிதமாகவும், நிச்சயமாகவும் கிடைக்கிறது என்பது வர்ம சிகிச்சையின் ஆதாரமாக விளக்கும் சித்த மருத்துவத்தின் சிறப்பு அம்சமாகும்.