இந்தியா- கலாச்சார பண்பாடு மிக்க நாடு என நாம் பெருமை பேசுகிறோம். வெளி நாட்டவரை கவரும் கலாச்சாரம் நமது.
NASA மற்றும் பல பெரிய நிறுவனங்களில் பணிபுரிவோரில் பெரும்பான்மையோர் நம் நாட்டவர்.
பல வல்லரசு நாடுகள் கூட நம்முடன் நட்பு பாராட்ட விரும்பும்..
பல வீரமிக்க மன்னர்கள் ஆண்ட வீரம் விளைந்த மண் இது.
பலரும் மதிக்கும் மகாத்மா பிறந்த மண்.
அமெரிக்க அதிபர் கூட புகழும் அளவுக்கு நல்ல கல்வி தரம் கொண்ட நாடு.
நமக்கு தொல்லை கொடுத்தாலும் அண்டை நாடுடன் சமாதனம் விரும்பும் நாடு. இப்படி இன்னும் பல பெருமைகள் கொண்ட தேசம் நம் தேசம்
- ஆனால் மேற்கண்ட அனைத்தும் வெறும் ஏட்டுச் சுரைக்காய் தான்.
மற்றவர் வியந்து பாராட்டும் நம் கலாச்சாரத்தை இன்று Google ல் தேடினால் கூட கிடைப்பது அரிதுதான். மேற்கத்திய கலாச்சாரம் தான் இன்று இந்திய கலாச்சாரம் ஆனது.
குளிர் தேசத்தில் குளிருக்காக அவர்கள் அணியும் ஆடையும், குளிருக்காக அவர்கள் அருந்தும் பானத்தையும், வெயிலில் காயும் நாம் பின்பற்றவேண்டிய அவசியம் ஏன் ??
விண்வெளி சென்ற கல்பனா சாவ்லா, நோபல் பெற்ற ராமகிருஷ்ணன் இவர்கள் கூட இந்தியா வேண்டாம் என்று சென்றவர்கள் தானே, அவர்கள் இந்தியர்கள் என பெருமை பேசுவது நமக்கு சிறுமை அல்லவா. நமது அறிவை இங்கு பயன்படுத்த முடியாமல் இருப்பது இழிவல்லவா.
ஒரு மாநிலத்தின் அளவு மட்டுமே கொண்ட நாடுகள் எல்லையில் நமக்கு தொல்லை கொடுக்கும் அளவு தானே இருக்கிறோம் நாம்..
வெறும் இரண்டு பேர் துப்பாக்கியை கொண்டு பல நூறு மக்கள் நடமாடும் ரயில் நிலையத்தில் கொலைகள் செய்த போது, தன் உயிருக்கு பயந்து ஓடி ஒழிந்த வீரர்கள் வாழும் இடம் அல்லவா இது.
பல கொலைகள் செய்த எதிரிக்கு கூட பல கோடி செலவழித்து பாதுகாத்து அவனுக்கு விடுதலையும் வாங்கி தர உதவும் நல்லவர்கள் வாழும் தேசம் இது.
ஆங்கிலேயர்கள் காப்பாற்றிய காந்தியின் உயிரை சில காலம் கூட காப்பாற்ற முடியாத நாம் கசாபின் உயிரை பல கோடி செலவு செய்து காப்பாற்ற வேண்டியதன் அவசியம் என்ன??
74 வயது தாத்தா வந்து சொல்லும் வரை நாட்டில் ஊழலை அறியாத அறிவுஜீவிகள் தானே நாம்.
ஊழலை எதிர்க்க அன்னாவுக்கு ஆதரவு என பல இளைஞர்கள் facebook ல் ஆதரவு தெரிவித்தனர், அதுவும் தனது அலுவலக இணையத்தை திருட்டுத்தனமாய் பயன்படுத்தி, அது ஊழலில் சேராதல்லவா.
“ஜாதிகள் இல்லையடி பாப்பா”, “ஜாதிகள் இரண்டொழிய வேறில்லை” என்பதை படிக்க ஜாதிச் சான்றிதல் தேவை இங்கு.
அதை வாங்கவும் லஞ்சம் கொடுக்கவேண்டும், இல்லையென்றால் ஒரு வருடம் ஆனாலும் நமக்கு கிடைக்காது.
பணம் கொடுத்தால் நமது குடியரசு தலைவரை கைது செய்ய கூட அனுமதி வழங்கும் நீதிமான்கள் உள்ளனர் இங்கு.
ஆடு, மாடுகளை கொன்றாலோ, துன்புறுத்தினாலோ கொடி பிடித்து போராடும் நாம், பக்கத்து தேசத்தில் நம் சகோதரர்களை துன்புறுத்தினாலோ இல்லை கொன்றாலோ அதை பத்தி பேச மாட்டோம் காரணம் நாட்டின் இறையாண்மை. மற்ற நாட்டு விஷயங்களில் நாம் தலையிட கூடாது என மதிப்பளிக்கும் மாந்தர்கள் நாமல்லவா.
இவ்வளவு ஏன் நம் மீனவர்கள் நம் நாட்டு எல்லையில் மீன் பிடிக்கும் போது அண்டை நாட்டு ராணுவம் அத்துமீறி நம் எல்லையில் நம் நாட்டவரை சுட்டு கொன்றால் கூட அதை தட்டி கேட்காமல் இனி அங்கு மீன் பிடிக்க தடை போட நினைக்கும் தைரியசாலிகள் நாம்.
இப்படி இன்னும் பல பல பெருமைகளுக்கு சொந்தகாரர்கள் நாம். ஏன் இப்படி என்று கேட்டால், அனைவரும் கூறும் காரணம் நல்ல அரசியல்வாதி இல்லை, நல்ல தலைவர்கள் இல்லை என்பது தான். தலைவர்கள் என்ன வானத்திலிருந்தா வந்தார்கள், அவர்களும் நம்மில் ஒருவர் தானே. மக்களாகிய நாம் திருந்தினால் மட்டும் தான் உண்டு.
பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும், பன்றியோடு சேர்ந்த பசுவும் ........ தின்னும்,
மக்களாகிய நம்மை போலத்தான் தலைவர்களும் இருப்பார்கள். நாம் மாறுவது மட்டும் தான் ஒரே வழி..
மாற்றம் தேவை
( இது கூட வெறும் ஏட்டுச் சுரைக்காய் தான், எழுதிய நான் கூட மாறமாட்டேன் ஏனென்றால் நானும் இந்தியனல்லவா)